வியாழன், 2 மார்ச், 2023

கடையில் கண்ணில் பட்ட 'அது'

 அந்தக் கடையைப் பார்த்ததும் த்ரில்லாகிப் போனேன்!  ஆ..  இது பிப்ரவரி மாதமா?

அட..  ஆமாம்.  அதுதான் இது கண்ணில் படுகிறது.  

எப்போதும் இதற்காக மாம்பலத்துக்கு படை எடுக்க வேண்டி இருக்கும்.  அல்லது யாராவது தெரிந்தவர்களிடம் உறவுகளிடம் கூட சொல்லி வாங்கி இருக்கிறேன்.

இன்று என் கண் முன்னே கடை.  

இடம் நங்கநல்லூர்.  கடையில் இரண்டே பொருட்கள்.  ஒன்று இது.  இரண்டாவது மணத்தக்காளி  காய் குவியல்.

இது அது என்றே சொல்கிறேனே...  என்ன அது?

தஞ்சாவூர்க் குடைமிளகாய்!  நானும் வருஷத்துக்கு ஒரு போஸ்ட் இதை வைத்து போட்டு விடுகிறேன் இல்லை?!  இதோ இந்த வருட போஸ்ட்..


இன்னும் சற்று நாட்களில் முடிவுக்கு வந்து விடும் இதன் சீஸன்.  ஆனால் இதன் நினைவே இல்லாமல் ஜனவரி முதல் அன்று வரை நாளை ஒட்டி இருக்கிறேன்.

சில சமயங்களில் நாம் அடிக்கடி பேசும் நண்பன் நடுவில் சில நாள் பேசாத நிலையில்  "என்னடா....  சத்தத்தையே காணோம்?"  என்று ஃபோன் செய்வான் தெரியுமா..   அது போல இது என் கண்முன்னே தோன்றி "என்னை மறந்துட்டே பார்த்தியா" என்று காத்திருப்பது போல தோன்றியது!  என் அப்பா சொல்வாரே..  "நல்ல ஃபர்ஸ்ட் க்ளாஸ் மிளகாய்..   அதன் பேரைச் சொல்லி கூப்பிட்டு பாரு 'ஓவ்'ன்னு குரல் கொடுக்கும்"  அந்த டைப் மிளகாய்.

ஏற்கெனவே சீஸன் முடிவுக்கு வரும் சமயம் என்பதால் விலை கன்னாபின்னா என்று சொல்வார்கள்.  சாதாரணமாகவே அப்படிதான். பெரும்பாலும் படி நூறு ரூபாய் என்றும் சில சமயங்களில் படி 80 ரூபாய் என்றும் வாங்கி இருக்கிறேன்.  அதன் மதிப்பு நமக்கு தெரிவது போலவே அவர்களுக்கும் நன்றாய்த் தெரியுமே..  ஆளை பார்த்ததும் விலை ஏற்றி விடுவார்கள்.  நாம் குறைத்துப் பேசினாலும் அவர்கள் குறைப்பது அவர்கள் லாபத்தில்தான்.  உண்மையான விலையில் அல்ல. கணநேரத்தில் ஓடிய இந்த சிந்தனையின் விளைவாக அதே அரை கணத்தில் தோன்றிய யோசனையின்பேரில் கடைக்காரரிடம் கேட்டேன்..

"சுண்டைக்காய் என்ன விலை?  என்ன ஒரு மாதிரி சுருங்கி நல்லாவே இல்லை?"

கடைக்கார கட்டுமஸ்தானர் என்னைப் பார்த்தார்.  என் பாஸும்தான்..  அவர் பார்வை 'அட..  அறியாப் பயலே..' என்றது.  பாஸின் பார்வை "என்ன கயண்டுடுச்சா" என்றது.

"சுண்டைக்காய் இல்லை..  இது மிளகாய் சார்.."

"மிளகாயா?!!"  வியந்துபோய் அதைக் கைகளில் எடுத்துப் பார்த்தேன்.  இதை எப்படி சாம்பாரில் ரசத்தில் சேர்ப்பார்கள்?" கடைக்காரரை நிமிர்ந்து பார்க்காமலே மிளகாயை ஆராய்ந்தேன்.  பாஸை நினைத்து பயமாகவும் இருந்தது..  எதாவது கேட்டு மாட்டி விட்டு விடுவாரோ...  கட்டுமஸ்தானர் அருகிலேதான் இருந்தார்.  அவருடன் பேசிக் கொண்டிருந்தனர் இரண்டு மூன்று ஆட்டோக்காரர்கள்.

"அந்த மாதிரி மிளகாய் இல்லீங்க இது..  ஊறுகாய் மிளகாய்..."

"ஊறுகாயா?  இதுவே காரம்..  இன்னும் காரம் சேர்த்து?"...   எனக்கே என் நடிப்பு சற்று ஓவராக பட, சட்டென்று மாற்றினேன்.  "ஓ..   உப்பு போட்டு வத்தல் வைப்பார்களோ.."

"ஆமாம்..  வேண்டுமா?"

கொஞ்சம் தயங்கினேன்.  இதை வாங்க வேண்டுமா என்று யோசிப்பது போல நின்றேன்.  போட்டியாளர்கள் யாரும் வந்து விடக்கூடாது என்கிற கவலையும் இருந்தது.  "நூறு என்ன விலை?  கால் கிலோன்னா எவ்வளவுக்கு கொடுப்பீங்க?"  நான் சாம்பார் மிளகாய் நடிப்பிலேயே தொடர்ந்தேன்.  ரியலாக இருக்க வேண்டும் அல்லவா?!

"படிக் கணக்குதான் சார்..  படி நாற்பது ரூபாய்..  (ஆ..  இதுவரை நான் கேட்டேயிராத விலை!)  மூன்று படி நூறு ரூபாய்ன்னு தர்றேன்"  படியைக் காட்டினார்.

"அவ்வளவு வாங்கி என்ன செய்யப் போகிறேன்..."  இழுத்தேன்.

"கொஞ்சம்தான் இருக்கு..  வாங்கிட்டு போங்க..  நல்லா கழுவி கீறி விட்டு உப்பு போட்டு மோர்ல ஊறவைங்க..  அப்புறம் காய வெச்சுடுங்க.."

திரும்பி பாஸைப் பார்த்தேன்.  யோசிக்கிறேனாம்...   அவர் புதிராய் இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  அவரும் 40 ரூபாய் நூறு ரூபாயில் கவரப்பட்டிருந்தார் என்பது பின்னர் தெரிந்தது.  'அப்படியே வாங்கிடுவீங்கன்னு நினைச்சேன்.  அப்புறமும் கண்டின்யு பண்ணினீங்க..  கொஞ்சம் கவலையாவும் இருந்தது' என்றார் பின்னர்.

நான் இன்னும் கொஞ்சம் யோசித்து விட்டு நாலு படி நூறு ரூபாய்னு கொடுங்க....  இதை வாங்கிட்டு போய்..  எப்படி வருமோ.."

சட்டென எடுத்து அளக்கத்தொடங்கி விட்டார் கடைக்காரர்.  அப்படியானால் நான் இதுவரை வாங்கியதெல்லாம் அநியாய விலைதான் போல..

பக்கத்தில் நின்றிருந்த  ஆட்டோக்காரர்களில் ஒருவர் "நம்பி வாங்கிட்டு போங்க..  நிறைய பேர் வந்து வாங்கிட்டு போவாங்க... " என்றார்.  இன்னொருவர் அந்தக் குவியலிலிருந்து ஒரு மிளகாயை எடுத்து வாயில் வைத்து கடித்தார்!

வாங்கி பையில் வைத்துக் கொண்டு உள்ளூர ஒரு துள்ளலுடன் நகர்ந்தபோது இறுதி ஷாட்டாக அந்த ஆட்டோக்காரர் காதில் விழுமாறு பாஸிடம் ரகசியமாக சொன்னேன்.  "இவ்வளவு காசு கொடுத்து மிளகாயை வாங்குவாங்களா?  வாங்கிட்டோம்..  சரியா வரலைன்னா எல்லாம் வீண்"

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அலம்பி, துடைத்து மிளகாயில் ஓட்டை போட்டு கல் உப்பு போட்டு ஊற வைத்து விட்டுதான் மறுவேலை!








அஞ்சு படி நூறு ரூபாய்ன்னு கேட்டிருக்கலாமோ?!!

=================================================================================================================

பரம முருக பக்தரான கி.வா.ஜ., ஒருமுறை பெரியவரைச் சந்திக்க நேர்ந்தது. நல்ல சொற்பொழிவாளரான அவரிடம் பெரியவர் மிக விஸ்ராந்தியாகவே பேசுவார். அப்படித்தான் அன்றும் பேசினார்:‘திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா?’ என்பதுதான் அன்று பெரியவர் கி.வா.ஜ.விடம் கேட்ட கேள்வி.‘இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு’ என்றார் கி.வா.ஜ.’‘எப்படி?’ என்று கேட்டார் பெரியவர்.‘வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். பாலனாக இருப்பவன் முருகன் தான். அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும் வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது. மேலும், மலைகளுக்கெல்லாம் தலைவன் முருகன்தான் என்பது வழக்கு. அவன் குறிஞ்சி நிலக் கடவுளல்லவா?’என்றார் கி.வா.ஜ.‘சரி! இதில் உன்னுடைய கருத்து என்ன?’ – என்று கேட்டார் பெரியவர். ‘பழங்காலத்தில் அங்கே முருகன் கோயிலும், திருமால் கோயிலும் இருந்திருக்க வேண்டும். திருமால் கோயிலுக்கு சிறப்பு வரவர, முருகன் கோயில் மறைந்திருக்க வேண்டும். இதுதான் என் கருத்து’ என்றார் கி.வா.ஜ.

ஆனால், பெரியவர் தன் கருத்தாகச் சொன்னது என்ன தெரியுமா?

‘ஏதோ ஒரு புராணத்தில் அங்கே இரண்டு சக்திகள் இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஒன்று கௌமாரி; இன்னொன்று வைஷ்ணவி.அதனால்தான் அந்த கோயில் மதில்சுவரில் சிங்க வாகனம் உள்ளது!திருமால் ஆலயம்தான் என்றால் கருட வாகனம் இருக்கும். முருகன் கோயிலாக இருந்தால் மயில் வாகனம் இருக்கும். ஆனால், சக்திக்கு வாகனமான சிம்மம்தான் அங்கே உள்ளது. தொண்டை மண்டலத்தில், சக்தி க்ஷேத்திரத்தில் சிம்மம்தான் இருக்கும்.  

ஒரு காலத்தில் திருப்பதி, தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தோடுதான் சேர்ந்திருந்தது. பின், அரசியல் காரணங்களால் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில் ஆந்திராவோடு சேர்ந்து விட்டது. இரண்டு சக்திகளுக்கான கோயிலாக அது இருப்பதனால் – முருகன் கோயில் என்றும், திருமால் கோயில் என்றும் சொல்வது பொருந்துகிறது’ என்றார்.

பிறகு அங்கு இருக்கும் மடத்துச் சிப்பந்தியிடம் ‘எனக்கு திருப்பதியில் கொடுத்த பரிவட்டம் உள்ளே இருக்கிறது. அதைக் கொண்டுவா’ என்று பணித்தார். அவரும் அந்த பரிவட்ட ஆடையைக் கொண்டு வந்தார். அதை கி.வா.ஜ.விடம் கொடுத்து அளக்கச் சொன்னார்.

கி.வா.ஜ.வுக்கோ ஒரே பரவசம்.ஏனென்றால், அந்த பரிவட்டம் திருப்பதி பெருமாளுக்கு சாத்தியபின் பெரியவருக்கும் சாத்தப்பட்டது. இப்படி இருவர் திருமேனியைத் தழுவியதை அவர் தழுவும்போது சிலிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்?

கி.வா.ஜ.வும் அதை அளந்து பார்த்தார். சரியாக முப்பத்தி ஆறு முழங்கள் இருந்தது. இதுபோன்ற பரிவட்ட ஆடைகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கென்றே பிரத்யேகமாக தறிபோட்டு நெய்வது வழக்கம். இதற்கென்றே நெசவாள கிராமம் ஒன்று உள்ளது.

அவர்களுக்கும் காலம் காலமாக முப்பத்தாறு முழம்தான் கணக்கு. கி.வா.ஜ.வும் முப்பத்தாறு முழம் இருப்பதைக் கூறினார்.உடனேயே பெரியவர், ‘நம்மவர்களில் பெண்கள் பதினெட்டு முழம் கட்டுகிறார்கள். இரண்டு பெண்களுக்கு என்றால் முப்பத்தி ஆறு தானே?’ என்று கேட்டார். அதாவது வைஷ்ணவி, கௌமாரி என்னும் கணக்கில்… சமத்காரமான அந்த கருத்தும் கேள்வியும் கி.வா.ஜ.வுக்கு பிறகே புரிந்தது. அதேசமயம் திருமலை எப்படி திருமாலின் கோயிலாக பெரும்புகழை அடைந்தது, ஏன் சக்தி தலமாக தொடரவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. பெரியவர் அதற்கும் பதிலைச் சொன்னார்:

‘இன்றும் இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் அங்கே அனுக்கிரகமாக மாறி வெளிப்பட்டபடிதான் உள்ளது. கௌமார சக்திக்கு முருகனையும், வைஷ்ண விக்கு திருமாலையும் அடிப்படையாகச் சொல்வார்கள். இதில் இருவருக்கும் மாமன் மருமகன் உறவு முறை உண்டு. அவ்வகையில் மாமனே பெரியவர் என்பதால், மருமகன் மாமனுக்குள் ஐக்கியமாகி விட்டார் எனலாம். இது ஒரு கோணம்.அடுத்து, காத்து ரட்சிப்பதில் திருமாலே முன் நிற்பவர். ‘சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்பது வழக்கு. சித்தாந்தப்படி அவனே எல்லாமுமானவன். அவனுக்குள் எல்லாமே அடக்கம். அடுத்து, அது ஏழாவதாக உள்ள மலைமேல் உள்ள ஆலயம்! அதில் ஆறு சுடர்களில் மலர்ந்த ஆறுமுகன் அடங்கிவிடுகிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
==================================================================================================

மாப் வயலன்ஸ்!

ஆற்று வழியில் குழப்பம் 
ஆகாயத்திருந்து மழை
அளவற்றுப் பொழிந்ததில் 
ஆங்காங்கு சேர்ந்த வெள்ளம் 
அகதிகளாய் வந்து 
அடுக்கடுக்காய் சேர்கின்றன 
அமைதியான ஆற்றுடன் 

தங்கள் வழி சென்ற 
ஆறுகளுக்கு 
பாதை அமைத்து, 
பாதுகாப்பாய் நின்ற 
கரைகளை உடைத்து 
பள்ளம் கண்ட இடங்களிலெல்லாம் 
பாய்கிறது 
அளவற்றுப் போனதால் 
ஆறு என்கிற நிலையிலிருந்து 
பெயர்மாற்றம் பெற்று 
கண்ணியமிழந்த வெள்ளம் 

ஊருக்கு நடுவில் 
உதவியாய் 
ஓடிக்கொண்டிருந்த ஆறு 
உருமாற்றம் பெற்று 
தனக்கு நடுவில் ஊரை 
அமிழ்த்தி 
உத்வேக ஊழிக் கோலம் 
கொள்கிறது 

===============================================================================================

பார்த்ததில் மனதில் நின்றது...

ஆட்சியாளர்களின் அடிமைகள் நாங்கள்.  சம்பளம் வாங்கும் வேலைக்காரர்கள்.  அதற்காகவே அவர்கள் சொல்கேட்டு போர் செய்கிறோம்.  ஆனால் எங்களுக்கும் உணர்வுண்டு, நட்புண்டு, இதயமுண்டு, அன்புண்டு, இழப்புண்டு..  சோகமும் உண்டு...


நன்றி இணையம்.

=================================================================================================


படித்ததில் சுவாரஸ்யம். 


================================================================================================================

சமீபத்தில் பாலகுமாரன் வார்த்தைகள் படிக்க நேர்ந்தது..


ஸ்கூட்டர்ல போகும்போது 'டம்மு டும்'முனு விழுந்து இடதும் வலதும் அலைஞ்சு விழுந்திடுவோமோ அப்படிங்கிற ஒரு உயிர்பயம் ஏற்படும், அந்த உயிர்ப்பயம் ஏற்படுறபோது ஒரு கோபம் வரும்.

எந்த சண்டாளன் இந்த குழி தோண்டினான். இப்படி சரியா மூடாது போறானே ஒரு ஆத்திரம் வரும்.

எவன் ஏமாத்தினானோ எவன் திருடினானோ மக்கள் இப்படி கொள்ளையடிக்கிறானோ இவன் வீடு நல்லாயிருக்குமா.இவன் மனைவி நல்லாயிருப்பாளா இவங்க குழந்தைகள் ஆரோக்யமா வளருமா.

அது திருடாதா திரிசமம் பண்ணாதா.இவன் பொண்டாட்டி ஏமாத்திட்டு வேற பக்கம் போகமாட்டாளா அந்த வேதனை இவன தவிக்க வைக்காதா அப்படின்னு ஒரு கோவம் வரும் .

ஆனா நான் இதையும் ஆழமா யோசன பண்ணிப் பார்த்தேன். தனக்கு என்ன யோக்யதையோ அந்த அரசாங்கம் கிடைச்சுருக்கு.

அந்த அரசாங்கத்துக்கு என்ன யோக்கியதையோ அதுக்குண்டான அதிகாரிங்க கிடைச்சிருக்காங்க. அந்த அதிகாரிக்கு என்ன யோக்கியதையோ அதுதான் வேலையா நடக்குது.

ஆக இந்தமாதிரி தெருதான் நமது யோக்கியதை. அரசாங்கத்தப்பு இல்ல. நம்ம தப்பு. ஜனங்க தப்பு.என் தப்பு.

யாரை கொண்டாடணும்னு தெரியல. யாருக்கு கொடி பிடிக்கணும்னு தெரியல. ஸோ என் யோக்கியதைக்கு இப்படித்தான் கிடைக்கும்.

நூறு ரூபா காசு கொடுத்தா உனக்கே ஓட்டுப் போடுறேன்ற ஜனத்துக்கு ரோடே அதிகம்.

நூத்தம்பது ரூபா மூக்குத்திக்கு தன்னுடைய வாக்குரிமைய அடமானம் வைக்கிற பொம்பளைக்கு குழாய் ல எப்டி தண்ணி வரும். குடத்த எடுத்துக்கிட்டு தெருத்தெருவா அலையதான் செய்வா.


இணையத்திலிருந்து...
===========================================================================================

பொக்கிஷம்..

எப்படியோ மருந்து உள்ளே போகணும்...  அவ்வளவுதானே மருத்துவரே...!!

இதற்கு எறும்புக்கடியே பரவாயில்லை!

கணக்கு போடுவீர்களா?  கஷ்டத்தைப் புரிந்து கொள்வீர்களா?

அம்மா..  அம்மா..  அம்மா...


அடுத்த இரண்டு படங்களையும் பாருங்கள்.  ஓவியர் தன் பெயரையே போடவில்லை.  அவருக்கும் அவ்வளவு நம்பிக்கையா, இல்லை மறந்து விட்டாரா, தெரியவில்லை.  தொடர்கதை கூட இல்லை.  சிறுகதைதான்.  சொல்லப்போனால் நெடுங்கதை!  எனது யூகம் வர்ணம்.  இல்லை ஆரம்ப கால ராமு.  

இன்னொன்று நானெல்லாம் (!) இரண்டு படம் போட்டால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முகம் தெரியும்,  ஓவியர்கள் எப்படி ஒரு கேரக்டருக்கு வரைந்த முகத்தை அடுத்தடுத்த படங்களிலும் மாறாமல் மெயின்டெயின் செய்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யம்.  மாடல் யாராவது வைத்திருப்பார்களோ என்னவோ..  மாயா வின் ஓவியங்களில் நான் கவனித்த வரை பெண் கேரக்டருக்கு ஒன்று விஜயகுமாரி சாயல் இருக்கும் அல்லது சரோஜாதேவி சாயல் இருக்கும்!


90 கருத்துகள்:

  1. நேரம் பற்றி நல்லா எழுதியிருக்கீங்க. எழுத நினைக்கிறேன். நேரமில்லை. நான் இன்னும் சில டெக்னிக் உபயோகிப்பதன். நான் வேணாமான்னு கேட்டால் வேணாம்னு சொல்லணும்னு அவங்களுக்கு இன்ஸ்ட.ரக்ஷன். மறந்து எப்பவாவது வேணும்னுட்டா கர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் பாருங்க..  நமக்குதான் இதெல்லாம் புதுசு.   நிறைய வியாபாரிகள் அனைத்தையும் பார்த்து அனுபவப்பட்டவர்கள்!

      நீக்கு
    2. பேரத்தை "நேரம்" ஆக்கிட்டீங்க நெல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முதல்லே எனக்குப் புரியலை. பதிவு பூராத் தேடி எங்கேயும் நேரம் பத்தி எழுதலையேனு யோசிச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தேவையா இது எனக்கு? :))))))))

      நீக்கு
    3. :))) அவசரம்...   அவரே கீழே திருத்தம் தந்திருக்கார் பாருங்க... 

      நீக்கு
  2. நல்ல அலசல். வேங்கடசுப்ரமணியன் பெயர் common. நல்லவேளை வள்ளி தெய்வானைக்காக 36 முழம் எனத் தோன்றவில்லை. கோவிலின் முதல் தூண்
    நரசிம்மர் சன்னிதி பக்கம், ஆஞ்சநேயருடன் கூடியது

    பதிலளிநீக்கு
  3. பேரம்..... ரசித்தேன். மோர் மிளகாய் ? கோவில் குறித்த சம்பாஷனைகள் நன்று. மற்ற துணுக்குகளை ரசிக்க முடிந்தது. வியட்நாம் போர் குறித்த படம் வேதனை.

    பதிலளிநீக்கு
  4. தப்பா நினைக்காதீங்க. எல்லோரும் ஏன் விவசாயி கிட்டே மட்டும்  பேரம் பேசுறாங்க என்று புரியவில்லை

    இந்த மிளகாய் reliance fresh கடையில் அலங்காரமாக இருந்தால் பேரம் பேசாமல் போட்டிருக்கும் விலையை கொடுத்து வாங்குவீர்களா மாட்டீர்களா? 

    கடுகு போகும் இடத்தை பார்ப்பவர்கள் பூசணிக்காய் போகும் இடத்தை பார்க்கமாட்டார்கள்.  (பாஸ் பக்கத்தில் இருந்தால்).
    திருப்பதி சர்ச்சை இன்னுமா நீடிக்கிறது? 

    போர் இல்லாத உலகம் இல்லை. ஆசைக்கு அளவில்லை 

    எறும்புகள் சாரி சாரியாக செல்வது மரியாதையால் மாத்திரமல்ல. சாரி வாங்கவும் தான்! 

    வெள்ளம்
    வேண்டும்போது கிடைக்காது 
    கிடைக்கும்போது தேவையற்றது.
    அளவாய் இருந்தால் 
    அமுதம் ஆகும். 

    ஆண்டவனே 
    அளந்து தருக நீரையும்.
    அவ்வாறே 
    மாப் செயல்களையும் 
    நல்வழிப் படுத்தலாம். 



    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் விவசாயி அல்ல.  தஞ்சையிலிருந்து வாங்கி சென்னையில் விற்கும் வியாபாரி!  முன் அனுபவங்கள்.   அதிக விலைக்கு மட்டுமே இதுவரை வாங்கி இருக்கிறேன்.

      இது ரிலையன்ஸ் கடையில் விற்கப்படமாட்டாது.  மேலும் அவர் கட்டுப்படியானால் மட்டுமே கொடுக்கப் போகிறார்.  இல்லா விட்டால் 'போடா ஜாட்டான்னு' விட்டுடுவார்!

      //திருப்பதி சர்ச்சை இன்னுமா நீடிக்கிறது? //

      யார் பேசி இருக்கிறீர்கள் என்று கவனித்தேர்களா?  இருவருமே இப்போது இல்லை!

        மாப் செயல்களில் மனிதனுக்குள் உறங்கி கிடக்கும் மிருகம் விழிக்கிறது!

      நீக்கு
    2. இங்கே இருக்கும் ரிலயன்ஸ் ஸ்மார்ட் பாயின்டில் விலை குறைவு தான். கடைத்தெருவை விடக் குறைவா இருக்கேனு பச்சைப்பட்டாணி வாங்கினால் ஏனோ அது ருசி நன்றாகவும் இல்லை. பருப்பும் ஒரு கிலோவுக்குக் கொஞ்சமாய்த் தான் கண்டது.

      நீக்கு
    3. ரிலையன்ஸில் விலை கடைத்தெருவை விட விலை குறைவாய் இருப்பது ஆச்சர்யம்.

      நீக்கு
  5. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமே வாழ இறைவன் துணை புரிவார்.

    இன்றைய வியாழன் கதம்பத்தில் முதல் பகுதியான பேரம் இயல்பாக இருந்தது. இப்படியெல்லாம் பேசவும் தெரிந்திருக்க வேண்டுமே..! பாராட்டுக்கள்.

    முன்பு அம்மா வீட்டில் இருக்கும் போது இந்த ஊறுகாய் வகைகள், வத்தல் இதெல்லாம் வீடு தேடி கொண்டு வந்து விற்பார்கள். பாட்டி அம்மா, மற்றும் அக்கம்பக்கம் என பேரம் பேசி வாங்கும் போது கவனித்திருக்கிறேன். ஏதேதோ பேசி இறுதியில் அவர்களுக்குள் கோபதாபங்கள் மேலிட்டு ஒரு சண்டையாக வந்து விட கூடாதேன்னு எனக்கு கலக்கமாக இருக்கும். ஆனால் அவர்கள் (விற்க வந்த வியாபாரிகள்) போகும் போது எல்லா கூடைகளும் காலியாகி நிறைவான மனதுடன்தான் செல்வார்கள். இவர்களும் நிறைவான மனதுடன் ஊறுகாய், வத்தல் வேலைகளை செய்ய கிளம்புவார்கள். உங்கள் பேரம் எனக்கு இந்த பழைய நினைவுகளை கொண்டு வந்தது. அது ஒரு காலம்.

    தங்கள் பேரம் பற்றிய எழுத்தும் சுவாரஸ்யமாக இருந்தது. படங்களும் அருமை. சென்னை வெயிலுக்கு சட்டென காயத்தொடங்கி விடும்.

    /அஞ்சு படி நூறு ரூபாய்ன்னு கேட்டிருக்கலாமோ?!!/

    ஹா ஹா ஹா. ஆசைதான்... ஆனால், சமயத்தில் அப்படி கேட்டிருந்தாலும் கிடைத்து விடும். பேரத்திற்கும் ஒரு நேரம் இருக்கிறதல்லவா? பகிர்வுக்கு மிக்க நன்றி. மற்ற பகுதிகளை படித்து விட்டு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..  வணக்கம்.

      பயத்துடனேதான் பேர உரையாடல் தொடர்ந்தது!  வாசலில் வரும் காய்கறிக காரர்களிடம் என் அம்மாவும் பேரம் பேசுவார்!  ஒரு கை நொண்டியாக ஒருவர் வருவார்.  அவரிடம் பேரம் பேசாமலிருந்தார்.  அவர் எங்கள் வீட்டில் மட்டும் அநியாய விலைக்கு விற்பது மாலை நேரத்து தெருப்பெண்கள் கூட்டத்தில் தெரியவர, மறுநாள் அம்மா பிடி பிடி என்று பிடித்து விட்டார்!

      // சென்னை வெயிலுக்கு சட்டென காயத்தொடங்கி விடும்.//

      காய்ந்து எடுத்து வச்சாச்சு!

      //  ஆசைதான்... ஆனால், சமயத்தில் அப்படி கேட்டிருந்தாலும் கிடைத்து விடும்.  //

      தமிழ் நண்டு கதைதான்.  ரிதம் படம் பார்த்திருக்கிறீர்களா?!!

      நீக்கு
    2. இப்போ திருமூழிக்களத்தில் லிட்டர் தே எண்ணெய் 170க்கு வாங்கினேன். MRP 210. பேரத்தின்போது நாம் கேட்ட விலைக்கே கொடுத்தால் நமக்கு பேரம் பேசிய திருப்தி இருக்காது.இன்னும் குறைவா கேட்டிருக்கணும் என் சந்தேகமாகவே இருக்கும்.

      நீக்கு
    3. தீபாவளி நேரத்தில் பட்டாசு பாக்கெட்டுகளின்மேல் போட்டிருக்கும் MRP விலைகளை பார்த்திருக்கிறீர்களா?  அவர்கள் கொடுக்கும் விலை வேறு!  நாம் வாங்கும் விலை வேறு!!

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. தஞ்சாவூர் குடை மிளகாய் போல கார சாரமான பதிவு..

    கதம்ப மாலை போல அனைத்தும் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கார சாரமான பதிவு.. //


      ஹா ஹா ஹா.. சுவையான பதிவு இல்லையா?



      // கதம்ப மாலை போல அனைத்தும் அருமை.. //


      நன்றி.

      நீக்கு
  9. நீங்கள் பேரம் பேசிய விதம் சிரிப்பை வரவழைத்து விட்டது.
    //சட்டென எடுத்து அளக்கத்தொடங்கி விட்டார் கடைக்காரர். அப்படியானால் நான் இதுவரை வாங்கியதெல்லாம் அநியாய விலைதான் போல..//
    இப்போது வாங்கியதில் மனநிறைவு ஏற்படவில்லை, இவ்வள்வு நாள் அநியாய் விலையில் வாங்கியதை நினைத்து வருத்தப்படுகிறோம்.
    அது மனித இயல்பு.
    மோர்மிளகாய் படங்கள் நன்றாக இருக்கிறது.
    வெயில் வந்து விட்டதா? இங்கு மாலையிலிருந்து நல்ல மழை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போது வாங்கியதில் மனநிறைவு ஏற்படவில்லை, //

      இலை அக்கா.  மனநிறைவுதான்.  அது நினைவுக்கு வந்து, இப்போது குறைவான விலையில்வாங்கியது அதனாலேயே திருப்தி தந்தது!  வெயில் இங்கு கொளுத்துகிறது.

      நீக்கு
  10. அஞ்சு படி நூறு ரூபாய்ன்னு கேட்டிருக்கலாமோ?!!//

    ஆசைதான்!

    பதிலளிநீக்கு
  11. // ஒரு கை நொண்டியாக ஒருவர் வருவார். அவரிடம் பேரம் பேசாமலிருந்தார். //

    இப்படி இரக்கம் காட்டப் போய் ஏமாளியான கதைகள் ஏராளம்..

    இப்படிக்கு
    இ.,வாயன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனைக்கும் தனது கொள்கையை விட்டுக்கொடுத்து அவரிடம்  வாங்குவார் அம்மா!!  வாரத்தில் இரண்டு நாட்கள் அவர் கருவாடு விற்க கொண்டு வருவார்!

      நீக்கு
  12. உத்வேக ஊழிக் கோலம்
    கொள்கிறது //

    வேண்டாம் ஊழிக் கோலம்.

    போர் வீரர்கள் சொல்வது மனதை கனக்க வைக்கிறது.
    பெங்களூரை சேர்ந்த டாக்டர் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டி கொண்டு சிரிக்க வைத்து ஊசி போடுகிறார். அது வாட்ஸ் அப்பில் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊழிக்கோலம் - அப்படி அடிக்கடி வருவதில்லை.  2015 நினைவில் இருக்கிறதா?  

      பாகிஸ்தான்-இந்தியா போர் வீரர்களுக்கு நடுவிலும் இப்படி தோன்றலாம்!

      நீக்கு
  13. மோர் மிளகாய் வாங்க ஸ்ரீராமின் நடிப்புப் பிரமாதம். இந்த மிளகாயில் புளி மிளகாயும் போடலாமே! நான் சொல்வது புளியில் ஊற வைத்து இல்லை.கடுகு, வெந்தயம் தாளிப்பில் (நல்லெண்ணெயில்) மிளகாய்களையும் நுனியில் கீறி நறுக்கிச் சேர்த்து வதக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துப் புளியைக் கரைத்து ஊற்றிக் கொண்டு கொதிக்கவிட்டுக் கெட்டியானதும் (பிடிச்சால் கொஞ்சமாக வெல்லம் சேர்த்து) எடுத்து வைத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு வெளியில் வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டி எனில் 20/25 நாட்களுக்குத் தேவையைப் பொறுத்துப் பயன்படுத்தலாம். அன்றே அரைத்து அன்றே வார்க்கும் தோசைகளுக்கு நல்ல துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  போடலாம்.  அப்பாவுக்கும் அது ரொம்பப் பிடிக்கும்.  ஆனால் உங்கள் புளிமிளகாய் போடுவதில்லை.

      நீக்கு
    2. நீங்க போடும் புளி மிளகாய் நானும் ஒரு வருஷம் போட்டேன். இப்போ 3 ,4 வருடங்களாக எந்த வத்தல், வடாமும் போடுவதில்லை.

      நீக்கு
    3. இங்கே மாவடுவும் வர ஆரம்பிச்சாச்சு. விலை என்னனு தெரியலை. இந்த வருஷம் போட முடியுமானும் தெரியலை. பார்க்கலாம். நான் மாவடு போட்ட புதுசில் கொஞ்சம் கொஞ்சம் தொட்டுப்பேன். அப்புறமா அவ்வளவாப் பிடிக்கிறதில்லை.

      நீக்கு
    4. புளி மிளகாயில் ஏதாவது ஒரு குறை வந்து விடுகிறது.  எனவே நான் புளியில் ஊறவைத்தது காய வைப்பதை நிறுத்தி விட்டேன்!  ஆ..  மாவடு வந்தாச்சா?  மதுரையில் இருந்தால் சூப்பர் சூப்பராய் சென்னை விலைக்கு மலிவாய் வடு வாங்கலாம்.  அழகர்கோவில் வடு ஸ்பெஷல்.

      நீக்கு
  14. வாரம் ஒரு படம் மனதைக் கலங்க அடிக்கிறதே! ஊழிக்கோலம் வேண்டாம். நல்லதுக்காகவே மழை பொழிந்து ஆற்றில் வெள்ளம் வரட்டும்.
    நேற்றுத் தான் காஞ்சிப் பெரியவாள் ஃபோரத்தில் இந்தக்க் கட்டுரை வந்திருந்தது. பாலகுமாரன் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் எனப் படிச்சிருக்கேன். அவரா இப்படி எழுதி இருக்கார்? ஆச்சரியம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ கதையில் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  15. ஜோக்கில் முதல் படம் அந்தக்காலத்து ஜெயராஜ் வரைந்திருப்பது. அவர் கையெழுத்துத் தெரியுதே? கதையின் நாயகரை வரைந்திருப்பது வர்ணமாகத் தான் இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  16. முருகன்...? திருமால்...? - பல சர்ச்சைகள் உண்டு...

    பதிலளிநீக்கு
  17. வேறுபட்ட பல செய்திகளை கதம்பமாகத்
    தொடுப்பது தான் வியாழனின் சிறப்பு. தொடுக்கும் அந்தக் காரியத்தைச் சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  வியாழன் வரா விரதத்தை இந்த வாரம் உடைத்து விட்டீர்கள் போல!

      நீக்கு
  18. (பஞ்ச) வர்ணத்தின் கைவண்ணமே அவை.

    பதிலளிநீக்கு
  19. மாவடுவோ என்று மலைத்தேன். கட்டுரையை வாசிப்பதற்கு முன்.

    பதிலளிநீக்கு
  20. இந்த ஊறுகாய் நல்ல சுவையாக இருக்கும்.

    //அஞ்சு படி நூறு ரூபாய்ன்னு கேட்டிருக்கலாமோ ?//
    ஹா.. ஹா.. இதுதான் நம்ம....

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீராம், இன்னா நடிப்புப்பா....ஹாஹாஹாஹா....

    விற்பவர் நினைச்சிருப்பார், நாங்க பாக்காத நடிப்பா...எவ்வளவுதான் நடிக்கறீங்கன்னு பாப்பம்.....விலையே இம்புட்டுத்தானப்பா....நான் என்னவோ பேரத்துக்குப் படிஞ்சாப்ல!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அப்படி நினைக்கவில்லை என்பதை அவர் பாவங்கள் சொல்லின!!

      நீக்கு
  22. தஞ்சாவூர் குடை மிளகாய் பார்க்க நல்ல ஃப்ரெஷா இருக்கு....ஊறுகாய் போட்டு வைச்சிருக்கறதும் சூப்பர்...

    அஞ்சு படி நூறு ரூபாய்ன்னு கேட்டிருக்கலாமோ?!!//

    ஹாஹாஹாஹா.....

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஆறு தடம் புரண்டால் ஊரு கொள்ளாது!!!

    //அகதிகளாய் வந்து
    அடுக்கடுக்காய் சேர்கின்றன
    அமைதியான ஆற்றுடன்

    தங்கள் வழி சென்ற
    ஆறுகளுக்கு
    பாதை அமைத்து,
    பாதுகாப்பாய் நின்ற
    கரைகளை உடைத்து
    பள்ளம் கண்ட இடங்களிலெல்லாம்
    பாய்கிறது
    அளவற்றுப் போனதால்
    ஆறு என்கிற நிலையிலிருந்து
    பெயர்மாற்றம் பெற்று
    கண்ணியமிழந்த வெள்ளம் //

    ரசித்த வரிகள்!!

    தண்ணீர் தண்ணீர் என்று ஒரு புறம் குடம் தூக்குவோம், ஹையோ தண்ணீர் தண்ணீர் வெள்ளம் என்று பதறுவோம்....மனிதன் யோசிக்க வேண்டியவை நிறைய. தண்ணீர் இருக்கறப்ப சேமித்து வைக்க மாட்டோம்....அப்புறம் குடம் தூக்கும் பிரச்சனை. தண்ணீரும் நம் பைசா போலத்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்று வறட்சி;இல்லை வெள்ளம் என்றால் மக்களும் என்ன செய்வார்ஜ்கள்!

      நீக்கு
  24. திருப்பதி பிரச்சனை – அப்பலருந்தே இருக்கா....?

    ஆனால் விளக்கங்களை மிகவும் ரசித்து வாசித்தேன். இது வரை அறிந்திராத விளக்கம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. பூமி சூரியனிலிருந்து வெகு தூரம் தள்ளி வந்திருப்பதாயும் அதன் காரணமாக இன்றிலிருந்து 30 ஆம் தேதி வரைக்கும் குளிரின் தாக்கம் இருக்கும் என்பதாகவும் ஒரு செய்தி வாட்சப்பில் வலம் வருகிறதே!அதை நம்புகிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அடுத்த வாரக் கேள்விக்குனு சொல்லி இருக்கணுமோ? புதன் பதிவிலும் நிறையக் கேள்விகள் கேட்டிருக்கேன். கௌதமன் சார் கவனிக்கலை.

      நீக்கு
  26. வியட்நாம் போர் படம் வேதனை.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. அரிட்டாபட்டி- ஆஹா போட வைக்கிறது. அந்த ஊர்ல போய் இருக்கலாமான்னும் ஆசை வருகிறது!!!! மலை சூழ் ஊராச்சே!!! ஊரைப் பற்றிய நல்ல சுவாரசியமான தகவல்கள்!

    இப்படி ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் சில தனி விஷயங்களுக்காக பாரம்பரியத்திற்காக ஊரையோ சுற்றுப்பட்டுக் கிராமங்களையும் ஒருங்கிணைத்து அறிவிக்கலாம். பாதுகாக்கப்படுமே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் அங்கு சென்று இருப்பதற்கு நாம் இருக்கும் இடத்தை அப்படி மாற்ற யோசிக்கலாம்!

      நீக்கு
  28. பாலகுமாரன் பகுதியில் கடைசி வரிகள் உண்மை...

    ஊசி மருந்து - ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்!!!

    எறும்பு - ஹிஹிஹி வித்தியாசமான ஒன்று..ஆனா நாம மிதிச்சா அது எங்க இருக்கப் போகிறது...

    பிறந்த வீடும் வெங்காயமும் - ரசித்த வரி

    கீதா

    பதிலளிநீக்கு
  29. ஐந்து படி நூறு ரூபாய் என்று கேட்டிருக்கலாமோ:)) ரசித்தேன்.

    அரிட்டாபட்டி கிராமம் அரிய உயிரினங்கள் பலவும் வாழும் கிராமம் காப்பாற்ற வேண்டியது மக்கள் கைகளில்.
    ஜோக்ஸ் ரசனை.

    பதிலளிநீக்கு
  30. மாப் வயலன்ஸ்//

    தலைப்பு முதலில் புரியவில்லை ஸ்ரீராம்....மனித குலம் செய்யும் அட்டூழியங்களைச் சொல்கிறீர்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவராய், இருவராய் இருக்கும்போது துணியாத மனித மனம் கூட்டத்தில் சகல வக்ரங்களுக்கும் தயாராகும்.  அதுதான் அது.

      நீக்கு
  31. மோர் மிளகாய்.. மிகவும் பிடிக்கும். பாலகாட்டுக்காரர்கள் தயிர் மிளகாய் என்பார்கள். அதை வறுத்து அப்படியே சாப்பிட பிடிக்கும். ஆனால் நமக்கு மட்டும் பிடித்த விஷயதிற்காக மெனக்கெட வேண்டுமா? என்று தோன்றுகிறது. மாவுடுவுக்காக காதிருக்கிறேன். இன்று கூட மகனிடம் மல்லேஸ்வரம் போக வேண்டும் என்றேன்.
    //அஞ்சு படி நூறு ரூபாய்னு கேட்டிருக்கலாமோ?//- ஹா ஹா! இதுதான் நாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாகாளிக்கிழங்கு போட்டாச்சா?  எனக்கு ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலில் கிடைத்தது!

      நீக்கு
  32. வர வர ஸ்ரீராமுக்கு கவிதை எழுதுவது மறந்து விட்டது என்று கடந்த சில வாரங்களில் தோன்றியது. மறக்கவில்லை, என்று நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்துக்கள்!
    திருப்பதி மட்டுமல்ல, குருவாயூர் கூட ஒரு காலத்தில் அம்பாள்(பாலா திருபுரசுந்தரி) கோவிலாகத்தான் இருந்தது என்று ஒரு கட்டுரை படித்திருக்கிறேன். கேரளாவில் இருக்கும் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களில் குருவாயூர் கிடையாது என்பது ஒரு ஆச்சர்யம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாஜ்மஹாலைக் கூட சொல்வார்கள்.  எல்லா இடங்களுக்கும் ஒரு முன் கட்டிடம் உண்டு போலும்!   கவிதை பாராட்டுக்கு நன்றி!

      நீக்கு
  33. இரண்டு ஓவியங்களில் முதலாவது ஜெயராஜ் வரைந்தது போலத் தோன்றுகிறது. சுவையான கதம்பம்!

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    திருப்பதி சர்ச்சை எந்த நாளும் தொடரும் போலிருக்கிறது. "நீ என்னவாக நினைக்கிறாயோ அதே உருவத்தில்தான் உனக்கு காட்சி தருவேன் என்கிறார் கீதையில் கண்ணன்." மாமன், மருகன் ஆனாலும், ஆக மொத்தம் பிரார்த்தனைகள் ஒன்றுதான்.

    கவிதை அருமை. உத்வேகம் மிகுந்த ஊழித் தாண்டவம் முடிந்த பின், ஆறும் இருந்த இடம் தெரியாமல் மக்கள் மனதிலிருந்து மறைந்து விடும்.

    நகைச்சுவைகள் அருமை. சாரி சாரியாக செல்லும் எறும்புகள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாத ஒரு தியாகப் பிறவிகள். அதனால்தான் அவைகள் தன் பாதையில் தொடர்ந்து பயணிக்க முடிகிறது எனத் தோன்றுகிறது.

    ஓவியங்கள் அருமை. ஒரே மாதிரியான முக அமைப்பை கொண்டு தொடர்ந்து வரைவது சிரமம்தான். அப்படியும் தன் திறமை மீது நம்பிக்கை வைத்திருக்கும் இந்த ஓவியர்களின் ஓவியங்களை நானும் பிரமிப்புடன் ரசிப்பேன். இரண்டாவது படம் வர்ணம் அவர்கள் வரைந்தது என்றுதான் நினைக்கிறேன். சுவையான கதம்ப பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் கண்ணன்.  அழைத்தவர் குரலுக்கு வருவான்.

      கவிதைப் பாராட்டுக்கு நன்றி.  ஜோக்ஸை ரசித்ததற்கு நன்றி.

      ஓவியங்களையும் ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  35. அரிட்டாபட்டி போக ஆசையாக இருக்கிறது. நிறைய பறவைகளை பார்க்கலாம் என்பதால்.

    பதிலளிநீக்கு
  36. வியாழன் கவர்ச்சி - தஞ்சாவூர் குடமிளகாய்-பார்த்தால் போதுமா.. பழகவேண்டாமா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் எப்போது தஞ்சாவூர் குடைமிளகாய் சுவைத்தீர்கள்?

      நீக்கு
  37. நார்த் இண்டியன் சிம்லா மிர்ச்சியை சப்ஜியாக பல காம்பினேஷன்களில் ரொட்டியோடு/ஃபுல்காவோடு சேர்த்துத் தின்று தின்று, நம்மூர் குடமிளகாய் மறந்தே போச்சு போங்க!

    பதிலளிநீக்கு
  38. கவிதை நன்று. வியட்நாம் காட்சி உருக்கம். தொகுப்பு சிறப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!