ஞாயிறு, 26 மார்ச், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை– பகுதி 8

காலை உணவுக்குப் பிறகு 8 ½ க்குக் கிளம்பி நாங்கள் முதலில் சென்று சேர்ந்தது காரஞ்ச நரசிம்மர் ஆலயம். மேல் அஹோபிலம் நோக்கிச் செல்லும் காட்டுப் பாதையில் (ஆனால் தார்ச்சாலை) முதலில் வருவது காரஞ்ச நரசிம்மர் ஆலயம். இதன் அருகில் உள்ள இடங்களில்தான் பேருந்து மற்றும் தனியார் வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர்.

இந்த இடத்தில்தான், ஆஞ்சநேயர் வேண்டுகோளுக்கு இணங்கி, நரசிம்மர், ராமரைப் போன்று வில்லுடன் காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்கு மண்டபத்தின் இடது புறத்தில் சன்னிதி உண்டு.


80களில் அனைத்து சந்நிதிகளையும் (கோயில்களையும்) சீரமைத்து மண்டபம் கட்டி, சுற்றுச் சுவர் எழுப்பி தூய்மையாக வைத்திருக்கின்றனர். இந்தக் கோவிலுக்கு வெளியே நிறைய அழகிய, சிதிலமடைந்த, பாதி உயரமே உள்ள தூண்கள் இருக்கின்றன.

 


தரிசனம் முடிந்த தும், சாலையில் சிறிது தூரம் நடந்தால் செக்போஸ்ட் வரும். அதற்கு அப்பால், இலவச பேருந்து நம்மை சுமார் 1 கிமீ தூரத்தில் இருக்கும் அஹோபில நரசிம்மர் கோவிலுக்கு அழைத்துச் செல்லும்.  இலவச பேருந்து நிற்கும் இடத்திற்கு அப்பால் காட்டுப்பகுதிதான். தார்ச்சாலை கிடையாது. கல், மண் போன்றவையுடன் கூடிய பாதை, அல்லது கருங்கல் படிகளுடன் கூடிய பாதைதான்.


பேருந்தைவிட்டு இறங்கியதும் அருகிலேயே ஒரு திருக்குளம் அமைந்துள்ளது.  இந்தக் குளக்கரையில்தான் அன்னதான சத்திரம் உள்ளது. மூன்று நரசிம்மர் சந்நிதிகள் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், நடந்து செல்ல முடியாத வயதானவர்கள் இங்குதான் டோலி எனப்படும் உதவியைப் பெறுகின்றனர். டோலி என்பது, சாய்ந்து உட்கார்ந்துகொள்ளும்படியான ஈஸி சேர் போன்ற அமைப்பு, இரண்டு நீண்ட கம்புகளின் மேல் அமைக்கப்பட்டுள்ளதாக உள்ளது. அதில் உட்கார்ந்துகொண்டால் (சாய்ந்து படுத்துக்கொண்டால்), நான்குபேர்கள் அதனை மலைப்பாதையில் தூக்கிச் செல்வர். ஒரு பிரயாணிக்கு (டோலி சர்வீஸ்) 3500 ரூபாய் வாங்குகிறார்கள். அதுதவிர அதில் பயணம் செய்தவர் இறங்கும்போது ஏதாவது டிப்ஸ் தருவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.



20-30 படிகள் ஏறியபிறகு சமவெளி வருகிறது. அதில் சிறிது தூரம் நடந்துசென்றால் அஹோபில நரசிம்மர் ஆலயம் இருக்கிறது.  இங்குதான் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்யதேச நரசிம்மர் நமக்கு தரிசனம் தருகிறார். சிறிய குகை போன்ற அமைப்பில் உக்ர நரசிம்மரின் திருவுருவம் இருக்கிறது. அதைத் தொட்டடுத்து இன்னொரு சிறிய குகை போன்ற அமைப்பில் செஞ்சுலட்சுமி தாயார் சன்னிதி உள்ளது. ஆதிசங்கரரின் கைகள் காபாலிகர்களால் வெட்டுப்பட்டபோது இந்த நரசிம்மரால்தான் கைகள் மீண்டும் வளர்ந்தன என்கிறார்கள். அதற்குச் சாட்சியாக அவரால் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் உக்ர நரசிம்மரின் உக்ரத்தைக் குறைக்க யந்திரம் ஆகியவை அங்கேயே இன்னொரு சிறிய குகை போன்ற அமைப்பில் உள்ளது.








இப்போது (70-80 களில்) கோவில் அழகாகக் கட்டப்பட்டிருந்தாலும், முன்பு சிறிய குகைப் பகுதிகளாக மட்டுமே கோவில் இருந்தது. இதில் மூலவர் சந்நிதிக்கு முன்புறம், கீழே செல்வதுபோல குகைப்பாதை இருந்தாகவும், பாதாளத்தில் ஒரு சிறிய ஆலயம் இருந்ததாகவும், பதினாறாம் நூற்றாண்டில், அஹோபில மடம் ஆறாம் ஜீயர் குகைக்குள் இறங்கியவர் திரும்ப வராததால், பிற்காலத்தில் அந்த இடத்தை மூடி, யாருடைய காலும் படாமல் தடுப்பு போட்டு வைத்துள்ளதாகவும் அறிந்தேன்.  



கோவிலில் தரிசனம் முடிந்த தும் வெளியில் வந்து, மலைப் பாதையில் சுலபமாக நடப்பதற்கு ஒரு மூங்கில் கழி வாங்கிக்கொண்டோம். (10 ரூ. சோளிங்கர் கோவிலுக்கு படிகளில் ஏற மற்றும் குரங்குகளை விரட்ட சாதா கழி ஒன்று கொடுப்பார்கள்). மெதுவாக நடந்து காட்டுப்பாதைக்குள் அடியெடுத்துவைத்தோம். அடுத்தது நாங்கள் சென்றது மாலோல நரசிம்மர் கோவிலுக்கு.

அதை அடுத்த வாரம் பார்ப்போம்.


45 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

      நீக்கு
  2. காரஞ்ச நரசிம்மர் ஆலயம் சுத்தமாக பசுமையாக பார்க்க அழகாய் இருக்கிறது. படங்கள், விவரங்கள் எல்லாம் நன்றாக அடுத்து போகிறவர்களுக்கு பயனுள்ளது.

    இன்று காரஞ்ச நரசிம்மரை வழி பட்டுக் கொண்டேன். அடுத்து மாலோல நரசிம்மரை தரிசனம் செய்ய தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா நரசிம்மர் ஆலயங்களும் நன்றாகவே பராமரிக்கப்படுகிறது. தொடர்ந்து வாருங்கள்.

      நான் வாரணாசி, கயா பயணங்களை முடித்துக்கொண்டு பெங்களூர் திரும்பிவிட்டேன்.

      நீக்கு
  3. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரார்த்தனைகள் உண்டு. இன்னும் அதற்கான நேரம் வரவில்லையோ என என் மனதில் கலக்கம்.

      நீக்கு
  4. ஸ்ரீ நரசிம்மா
    ஜெய நரசிமமா
    ஜெயஜெய நரசிம்மா

    பதிலளிநீக்கு
  5. தங்களுடன் சேர்ந்து நானும் தரிசிக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. எனக்குமே பயணத்தைத் திரும்ப நினைவூட்டுகிறது

      நீக்கு
  6. எவ்வளவு தூரம், அதிகமா, கொஞ்சமா என்று சரியாக அறியா விட்டாலும் மூவாயிரத்தைநூறு ரூபாய் அதிகம் என்று தோன்றும்போதே, இறக்கியுடன் டிப்ஸும் எதிர்பார்க்கிறார்கள் என்ற வரி!  அட நரசிம்மா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய அபிப்ராயத்தில் நாலு பேர் கடின மலைப்பாதையில் ஆளுக்கு 850 என்பது குறைவு. அதில் அவர்களுக்கு எவ்வளவு கிடைக்குமோ. கால்களில் பலமிழந்தவர்களுக்கு வேறு வழி?

      நீக்கு
  7. ஆறாம் ஜீயர் பற்றிய தகவல் சுவாரஸ்ய மர்மம்.  அப்புறம் யாரும் இறங்கிப் பார்க்க துணியவே இல்லையா?  அப்படி எங்கே சென்றிருக்க முடியும்?  உள்ளே போனவர் எங்கேயாவது கால் சறுக்கி விழுந்து யாராவது உதவிக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தால் எவ்வளவு பாவம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அதலபாதாளமாகவோ இல்லை சறுக்கி எங்கேயோ மாட்டிக்கொண்டிருக்கலாம். இருந்தாலும் தலைமைப் பீடத்திற்கு இறை அருளில்லாமல் வரமுடியாது என்பதால் இப்படியெல்லாம் யோசிப்பதில்லை. இறைவன் கொண்டுசென்றுவிட்டான் என்றே நினைக்கத் தோன்றும்.

      நீக்கு
    2. அது எப்படிங்க ஜீயர் தனியே இறங்கினார். ஜீயர் என்றால் முன்னும் பின்னும் சீடர்கள் கட்டாயம் இருப்பார்களே!. ஜீவ சமாதியாக இருக்குமோ?

      நீக்கு
    3. ஜீயர்கள் அல்லது மடாதிபதிகள் தனி ஆளுமை பெற்றவர்கள். சீடர்கள் இல்லாமலும் (நிச்சயமாக முன்னே செல்லமாட்டார்கள்) அவர்கள் மனதில் தோன்றியபடி கிளம்புவார்கள் (அங்கிருக்கும் கோவிலுக்கோ இல்லை மற்ற இடங்களுக்கோ). அந்தக் குகை, நரசிம்மர் அவதாரம் செய்த இடம். அஹோபிலம் என்பதன் அர்த்தமே மிகப் பெரிய குகை. அதனால் அந்தக் குகையின் ஒரு பகுதியில் கீழிறங்கியிருக்கிறார்.

      நீக்கு
  8. நெல்லி, படங்கள் எல்லாம் செம.....ரசித்துப் பார்த்தேன். குறிப்பாக சிற்பங்கள், ஆஞ்சு சன்னதியில் இருக்கும் அந்தத் தூண்களின் வடிவங்கள், அமைப்புகள் எல்லாம் அழகோ அழகு!

    படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. நல்லா எடுத்திருக்கீங்க....

    வரேன் இன்னும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை ன்னு அடிச்சது நெல்லின்னு வந்திருக்கு...ஸாரி நெல்லை...

      கீதா

      நீக்கு
    2. நன்றி கீதா ரங்கன். இந்தப் பயணத்திலும், வாரனாசியில் பலப் பல ஆஞ்சிகளையும் கணபதிகளையும் தரிசித்தேன். அவர்கள் இல்லாத இடமில்லை

      நீக்கு
    3. ஆஞ்சு, தோஸ்த் கணபதி படங்கள் எல்லாம் எடுத்திருந்தீங்கன்னா பகிருங்க நெல்லை. ஞாயிறு படங்கள் இங்க...ஆமாம் வட இந்தியாவில் இவங்க இல்லாத இடமே இல்லை. ஏன் இங்கயும் தான்....வீட்டின் பின்னாடி இருக்கும் ஆஞ்சு கோயில்ல தோஸ்தும் இருக்கார்...இவங்க ரெண்டு பேர் மட்டும்தான்

      கீதா

      நீக்கு
    4. நான் வாரணாசியில் சேதுமாதவன் கோவிலில் (பெரிய ஆஞ்சநேயர் கோவில் என்றே அது அழைக்கப்படுகிறது) கோவிலைப் பார்த்துக்கொள்ளும் பெரியவரைச் சந்தித்தேன். அவர் நிறைய விவரங்கள் கொடுத்தார் (ஆனால் எதையுமே எழுதிக்கொள்ளவில்லை). வாரணாசியில் இத்தனை விநாயகர்கள், ஆஞ்சநேயர்கள் இருக்கிறார்கள் என்று விவரங்கள் சொன்னார். (20+). அதுபோல 'மாதவன்' பெருமாளுக்கும் எவ்வளவு கோவில்கள் இந்தியாவில் உள்ளன என்றார்.

      நீக்கு
  9. படங்கள் வழக்கம் போல அருமை.
    தல விபரங்கள் சிறப்பு

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் அருள் இருந்தாலே இதெல்லாம் கூடி வரும்..

    ஜெய் நரசிம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் தரிசனங்களுக்கு அவனருள் இருந்தாலே சாத்தியம். என் வாரணாசி பயணத்தில் ஒரு ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். (பெரிய ஆஞ்சநேயர்). ஆனால் அங்கு எனக்குக் கிடைத்த அனுபவம் வித்தியாசமானது. அதுபற்றி எழுதுகிறேன்.

      நீக்கு
  11. இங்கே தஞ்சை திவ்ய தேசத்தில் ஸ்ரீ தஞ்சை யாளி,

    கீழவாசலில் யோக நரசிம்மர்.

    அருகே (9 கி.மீ) வல்லத்திலும்

    நரசிம்மர் கோயில்..

    தரிசனத்துக்கு குறைவு இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு அவனுடைய தரிசனம் கிடைக்க ப்ராப்தம் இருக்கிறது. கும்பகோணத்தைச் சுற்றி, யோக நரசிம்மர் இல்லாத கோவிலே இல்லை என்பதாக இருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா? செவ்வாய் அன்று நரசிம்மரை வழிபட பலர் அந்தச் சந்நிதிகளுக்குச் செல்கின்றனர்.

      நீக்கு
  12. சிற்பங்களின் நுணுக்கங்கள் வாவ்!

    நுழைவாயில் சிற்பங்களில் மஞ்சள் குங்குமம்....கர்ர்ர்ர்ர்ர்ர்....

    அப்ப இப்படித் தார் ரோடு வழியா போனோமா? நினைவில்லை. ஆனால் கம்பு பிடித்துக் கொண்டு கொஞ்சம் படிகள், கொஞ்சம் கரடுமுரடான மலை ஏறினோம்...மூன்று கோயில்களுக்கு...உங்க படங்கள்ல இருந்து கொஞ்சம் மாறியிருப்பது போலவும் இருக்கு ...இல்லைனா எனக்கு நினைவு அவ்வளவுதான் போல...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சென்றிருந்த கோவில்கள் இன்னும் வரவில்லை. சிற்பங்களில் மஞ்சள் குங்குமம் தடவுவது எனக்குப் பிடிப்பதில்லை. காரணம், எல்லாச் சிற்பங்களிலும் இறைச் சக்தியை பிரதிஷ்டை செய்வதில்லை. அதனால் சிற்பங்களை, அதனை ஆகமப்படி பிரதிஷ்டை செய்யாமல் வணங்குவது ஏற்புடையதல்ல (ஆனால் எல்லாக் கோவில்களிலும் தூண்களில் உள்ள ஆஞ்சநேயர், வெண்ணெயுண்ணும் கிருஷ்ணர், நரசிம்மர் போன்ற பல தெய்வ உருவங்களை வழிபடுகின்றனர். உதாரணம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்)

      நீக்கு
  13. சிதிலமடைந்த தூண்கள் நினைவிருக்கு. இருப்பதில் உள்ள சிற்பங்கள் என்ன அழகு இல்லையா? ...அப்ப ஃபோட்டோ எடுக்க எங்கிட்ட எதுவும் இல்லையே. இருந்திருந்தா எடுத்துத் தள்ளி இப்ப இன்னும் நினைவில் இருந்திருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எடுப்பதால், பிறகு அவற்றைப் பார்க்கும்போது நாம் பயணம் செய்தது நினைவுக்கு வரும். நேரம் இருந்ததால் என்னால் பல சிதிலமடைந்த தூண்களில் உள்ள சிற்பத்தை உற்று நோக்கிப் படங்கள் எடுக்க முடிந்தது.

      நீக்கு
  14. விவரமான விளக்கங்கள். வழிகாட்டுதல்கள். தேர்ந்தெடுத்த டூர் கைடு போல் சொல்லும் விவரங்கள் நாம் நேரில் அங்கெ இருக்கும்  உணர்வை ஏற்படுத்துகிறது. பாராட்டுகள். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெயக்குமார் சார். எனக்கே இப்படி எழுதுவது பிடித்திருக்கிறது (ஒரு ஆவணம் போன்று இருக்கும் என்பதால்)

      நீக்கு
  15. கடைசி ரெண்டு சிற்பங்கள்ல இடப்பக்கம் அது ராமர்னு மஞ்சள் குங்குமம் அப்பிட்டாங்க போல....அது ராமர் தானோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்குக் காரணம் வேறு. கோவில்களில் குங்குமம் கையில் தருவாங்க. இது தவறான மெதட் என்று நினைக்கிறேன். ஒரு bowlல் குங்குமம் வைத்து பக்தர்கள் விரலில் எடுத்து இட்டுக்கொள்ளணும். அந்த மாதிரி இருந்தால்தான் கையில் உள்ள குங்குமத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தூண்களில், சிற்பங்களில் அப்புவது நிற்கும். யாருக்கேனும் வீட்டில் உள்ளவர்களுக்குக் குங்குமம் கொண்டு செல்லவேண்டும் என்று நினைத்தால் பேப்பரில் சிறிது எடுத்துச் செல்வார்கள். கையில் குங்குமம் தருவதால் நிறைய குங்குமம் (அல்லது மஞ்சள்) வீணாகிறது, நம் டிரெஸ்ஸைப் பாழாக்கக்கூடாது என்று உதற வேண்டியிருக்கு இல்லைனா தூண்கள்.

      நீக்கு
  16. நெல்லை,
    அஹோபிலம் நரசிம்மர் கோயில் நுழைவாயில் படத்தினை எடுத்திருந்த கோணமும் தோற்ற வெளிப்பாடும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.
    அடுத்து சந்நிதிக்குப்
    போகும் வாயில். குகை போலத் தெரியாத அழகானத் தோற்றம். நீங்கள் படமெடுத்திருந்த கோணம் அந்த அழகுக்கு அழகு சேர்த்தது.
    வில்லேந்திய ராமபிரான் சந்நிதி ஜனக்கூட்டத்தின் அடைசலில் மறைக்கப்பட்டாலும்
    பிற்காலத்தில் செப்பனிடப்பட்ட புல் தோற்றப் பின்னணி அழகாக இருந்தது.
    நீங்கள் அவற்றை படமெடுத்த நேர்த்தியும் அழகு.

    பதிலளிநீக்கு
  17. படங்கள் அவற்றிக்கான உங்கள் விவரிப்புகள்
    இரண்டும் கைகோர்த்து அமைந்திருக்கின்றன. இந்த பாணியை தொடர்ந்து காப்பாற்றுங்கள். கட்டுரை அமைப்புக்கு அது முக்கியம். கவனத்தில் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் தொடர்கிறேன். கொஞ்சம் வளவளன்னு இருக்கிறது என்பது என் அபிப்ராயம்.

      இப்போதுகூட வாரணாசி பயணத்தின் முக்கிய நிகழ்வைப் படங்களாகத் தொகுக்கலாம் என ஆரம்பித்து, ஔரங்கசீப் அந்த நகரத்துக்குச் செய்த அட்டூழியங்களை எழுத்தில் கொண்டுவந்தது மூன்று பக்கங்களுக்கு வந்துவிட்டது. இன்னும் படங்களும் கோர்த்தால் ஒரு முழுப் பதிவாகவே ஆகிவிடும் போலிருக்கிறது.

      நீக்கு
  18. மலை ஏறி நாமும் நரசிம்ஹர் தரிசித்துக் கொண்டோம்.

    படங்களும் பகிர்வும் நன்று.

    அடுத்து காண வருகிறோம்.

    பதிலளிநீக்கு
  19. படங்களும் பகிர்வும் மிக நன்று. சிற்பங்கள் வெகு அழகு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!