வியாழன், 21 மார்ச், 2024

நண்பர்கள்தான் செய்கிறார்கள் துரோகம்

 துரோகம் பற்றி 100 வார்த்தையில் ஒரு வியாசம் கேட்டால் செயற்கை நுண்ணறிவு வகைதொகையின்றி நிறுத்தாமல் எழுதிக் கொண்டே போனது.  அதற்கு என்ன கஷ்டமோ..  பாவம்.

அதை நிறுத்தி விட்டு சொந்தக் கதைக்கு வருகிறேன்.

துரோகங்களை மறக்க முடியாமல் இருந்தாலும் சில சமயம் துரோகிகளை மன்னித்துவிட முடிகிறது.  நாம் எதிர்பாராததை நமக்கு யாராவது செய்தால் அது நமக்கு துரோகம்.  நாம் யாருக்கும் அப்படி செய்யாமல் இருப்போமா?  தெரிந்தோ, தெரியாமலோ, சிறிதாகவோ, பெரிதாகவோ...  நாமும்தான் செய்திருப்போம்.

பெரிய பெரிய துரோகங்களை அரசியல்வாதிகள் மக்களுக்கு செய்கிறார்கள்.  ஆனால் மக்களும் அவற்றை மறந்து சந்தோஷமாக தேர்தல் விளையாட்டில் அவர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்.  கேள்வியே கேட்பதில்லை.

நிச்சயம் குற்றம் செய்தவர்கள் என்று பாமரனுக்கு கூட தெரிந்தவர்களை ஆதாரமில்லை, நிரூபிக்கப்படவில்லை என்றெல்லாம் சொல்லி நீதிமன்றம் விடுதலை செய்வது மக்களுக்கு செய்யபப்டும் பெரிய துரோகம்.

மக்கள் கவலைப்படுவதில்லை..  அவர்களுக்கு எவ்வளவோ வேறு பிரச்னைகள் இருக்கின்றன சமாளிக்க...  வார இறுதியில் மால்களில் கூடவேண்டும்..  மஞ்சுமெல் பாய்ஸ் பார்க்க வேண்டும்..  திமுகவா, பிஜேபியா என்று பார்க்க வேண்டும்.  

எதிரிகள் செய்வது துரோகம் இல்லை.  அவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று தெரிந்துதான் நடப்போம், இருப்போம்.  நண்பர்கள்தான் செய்கிறார்கள் துரோகங்களை!

நேற்று கடைத்தெருவில் அலைந்தபோது கடையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட அழகழகான மாங்காய்கள் கண்ணில் பட்டன.  காசு கொடுத்து வாங்கி சாப்பிடும் மாங்காயில் ஒரு மாற்று சுவை குறைவுதான் தெரியுமோ....

நானும் கண்ணனும் வாண்டையார் வீட்டு மாமரங்களை ரொம்ப நாள் குறி வைத்திருந்தோம்.  சீசனுக்கு சீசன் அந்தந்த வீட்டிலிருந்து மாங்காய் திருடி தின்னா விட்டால் கண்ணுறங்காது.  கைகள் நடுங்கும்!  எப்படி திருட வேண்டும் என்பது எங்களுக்கு பாடம்.  கைவந்த கலை.  அவர்கள் வீட்டில் உயர உயரமாக நாய்கள் உண்டு.  பார்க்க பயங்கரமாகத்தான் இருக்கும்.  காவல் இல்லாத வீட்டிலா திருடுவது?  அப்படிச் செய்தால் அதற்குப் பெயர் திருட்டு மாங்காய் இல்லை, நாம் பாட்டுக்கு அனாதை காய்க்கு ஆதரவு கொடுப்பது.  அதில் என்ன சுவை!

வாண்டையார் வீட்டைப் பொறுத்தவரை அந்தத் வருடம் எப்படி புழக்கம் என்பதை பார்க்க வேண்டும்.  புதிய ஆட்களா, பழைய ஆட்கள்தானா என்று துப்பறிய வேண்டும்.  அவர்கள் நாய்க்கு தண்ணீர் வைக்க, சாப்பாடு போட அந்தாண்டை நகரும் சமயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  சடாரென உட்புகுந்து மறைந்து கொள்ள வேண்டும்.  மாங்காய்களை பறித்து சுவருக்கு அப்பால் வீச வேண்டும்.  மறுபடியும் நேரம் பார்த்து வெளி வந்துவிட வேண்டும்.  கொஞ்சம் ரிஸ்க்கான திருட்டு.  இந்த சாகசச் செயலை எப்போதும் கண்ணன்தான் செய்வான்.  நான் தொடைநடுங்கி.  அந்த நாய்களை பார்த்தாலே தொடையில் கூசும்.   எனவே என் ரோல் வெளியில் நின்று காவல் காப்பது.  அங்கிருக்கும் ஆட்களும் 'சிறுவர்கள்தானே' என்று இரக்கம் எல்லாம் காட்ட மாட்டார்கள்.

மாமரங்கள் காம்பவுண்டு சுவரை ஒட்டி இல்லாமல் உள்ளே தள்ளி இருந்தால் இப்படிதான் சிரமம்.  இரண்டு இடங்களில் இப்படியான சிரமங்களை நாங்கள் அனுபவித்திருக்கிறோம்!

காம்பவுண்டு சுவரின் பக்கவாட்டில் மரங்கள் அடர்ந்த ஒரு மறைவில் நான் நேரம் பார்த்து ஏறி அமர்ந்து கொள்ள வேண்டும்.  அங்கிருந்து உள்ளே நடப்பவை தெரியும்.  வெளியே சாலையும் எனக்கு தெரியும்.  சாலையிலிருந்து பார்ப்பவர்களுக்கு என்னைத் தெரியாது.

கண்ணன் மின்னலைப்போல உள்ளே சென்று விட்டான்.  உள்ளே செல்ல காம்பவுண்டு சுவர் ஏறியும் குதிக்கலாம், வாசல் வழியேயும் பயங்கர ரிஸ்க்காக உள்ளே நுழையலாம்.  கண்ணன் வாசல் வழியாகத்தான் உள்ளே சென்றிருந்தான். ஒரு நாயின் குரைப்பு சத்தம் கேட்டு அது அடக்கப்பட்டது.  நானும் ஏறி மறைவில் அமர்ந்து கொண்டேன்.  நேரம் சென்று கொண்டிருந்தது.  

நேரம் சென்று கொண்டிருந்தது.

சாலையில் பார்த்தபோது அதிர்ச்சி.  அந்த நேரத்துக்கு என் அப்பா நடந்து வந்து கொண்டிருந்தார்.  நேரமும் தப்பு, நடையும் தப்பு.  சாதாரணமாக பஸ்ஸில் வருபவர்.  வர இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருக்கிறது.  இப்போது என்ன?  அதிர்ச்சியில் சட்டென குதித்து விட்டேன்.  என்னை அங்கு பார்த்தவர், அவரும் அதிர்ந்து 'என்னடா' என்றவர் நான் ஏதோ சமாளித்ததும்,  கூட அழைத்துக் கொண்டு நடந்து விட்டார்.  லீவு நாட்களில் வீட்டில் இருந்து வழக்கமிலையே...  தெருத்தெருவாக பொறுக்குபவன் என்று தெரியுமே...  வீடு வந்து விட்டோம்.  ஓரிரு மணிநேரம் சென்று தெருவில் களேபரமான சத்தம் கேட்டது.  கண்ணனின் அண்ணன் என்னைத் தேடி வந்தான்.  "எங்கேடா கண்ணன்?"  

நான் பதில் சொல்வதற்குள்ளாகவே இனொரு நண்பன் "சங்கரண்ணே..  கண்ணனை வாண்டையார் வீட்டுல கட்டி வச்சிருக்காங்க" என்றான்.

கட்டி வைத்திருக்கிறார்களா?  ஆ....  கண்ணா...

சங்கர் வேகமாக கீழே இறங்க, அங்கு சேர்ந்திருந்த சிறு கூட்டத்துடன் நானும் போனேன்.  கொஞ்ச தூரம்....  சைக்கிளில் செல்ல வேண்டும்.  சைக்கிளிலும் நடந்தும் அந்த இடத்தை அடைந்தோம்.  பின்னால் நின்று கொண்டேன்.  கண்ணன் நான் வருவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் பார்வையைத் தவிர்த்தேன்.  நிஜமாகவே அவனை கயிறு கொண்டு கட்டி இருந்தார்கள்.  நழுவி, உருவி வெளியில் வந்து விடலாம்.  ஆனால் அவன் தாண்டி வரும் வழியில் அந்த நாய்கள் பாதி படுத்த நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.  எங்களைக் கண்டதும் விடாது குரைக்கத் தொடங்கின.

காரசாரமான பேச்சுவார்த்தை சென்றது.  ஏகப்பட்ட எச்சரிக்கைகளோடு கண்ணன் 'விடுதலை'யானான்.  மெதுவாக வந்தான்.  நான் நடுங்கியபடி நின்றேன்.  என்ன சொல்வானோ...   அவனைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது.  ஆனாலும் நல்லவனாய் நடித்துக் கொண்டிருந்தேன்.

வந்தவன் என்னுடைய தோளில் கைபோட்டு இறுக்கிக் கொண்டு நடந்தான்.  அவன் கைகள் என் கழுத்தை வலி ஏற்படும் வண்ணம் இறுக்கின.  எல்லோரும் கிளம்பினாலும் அந்த ஏரியாவை விட்டு அவன் கிளம்பவில்லை.  என்னையும் உட்கார்த்தி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.  கொஞ்சம் பாதுகாப்பான தூரத்தில் இருந்தோம்.  வாண்டையார் வீட்டுக்காரர்கள் விரோதத்ததுடன் காம்பவுண்டு கதவை மூடிக் கொண்டு சென்றனர். எல்லோரும் சென்ற பின்னரும் பொடியன்கள் நாங்கள் கிளம்பிச் செல்லவில்லை என்பது அவர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தது.  ஆனாலும் சாலை என்பதால் ஒன்றும் சொல்லவும் முடியவில்லை.   சாதாரணமாக அது திறந்தே இருக்கும்.  அவனிடம் அப்பா வந்து விட்ட அதிர்ச்சியைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.  "அப்பா வந்தா...    அப்படியே போயிடுவியா?   திரும்பி வரமாட்டியா?" என்றான் விரோதத்ததுடன்.  கொஞ்ச நேரம் மௌனமாகவே சென்றது.  சீக்கிரம் காலனிப்பக்கம் சென்று மற்ற நண்பர்களுடன் சேர என் மனம் தவித்துக் கொண்டிருந்தது.

கொஞ்ச நேரம் கழித்துதான் அவன் ஏன் அங்கேயே காத்திருந்தான் என்று தெரிந்தது.  அந்த நிலையிலும் நான்கு மாங்காய்கள் செம காய்களை உஷார் பண்ணி வெளியே புதருக்குள் வீசி இருந்திருக்கிறான்.  கொஞ்ச நேரம் கழித்து, மெல்ல எழுந்து, பேசிக்கொண்டே இங்கும் அங்குமாய் கொஞ்சம் கொஞ்சமாய் நடந்து, அந்த இடத்தை அடைந்து பேசிக் கொண்டிருப்பது போல எல்லாம் பாவ்லா காட்டி (யாருமே பார்க்கவில்லை)  மெல்ல புதருக்குள் சென்று மாங்காய்களை தேடி எடுத்தான்.  அவன் இரண்டு ட்ரவுசர் பாக்கெட், என் இரண்டு ட்ரவுசர் பாக்கெட்களில் மாங்காய்களை வைத்துக் கொண்டு வந்தோம்.  மாலை நண்பர்களுடன் சுவையாக கழிந்தது.  நான் செய்த வேலையைப் பற்றி நண்பர்களிடம் சொன்னான் கண்ணன்.  மாங்காய் திருட ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு செட் மாறும்.  பரீட்சை லீவு என்றால் கொண்டாட்டம்தான்.

அவனுடைய கோபம் அந்த நேரத்தோடு போனது ஆச்சர்யம்.  இனி பேச மாட்டான் என்றெல்லாம் நினைத்திருந்தேன்.  அவ்வப்போது ஏதாவது சிறு சண்டையில் சொல்லிக் காண்பிப்பான்.

என்னுடைய துரோகம் மன்னிக்கப்பட்டது, அல்லது பெரிதாக மதிக்கப்படாமல் மறக்கப்பட்டது!  வயதும் காரணம்!  அவன் அதை பெரிதாக நினைக்கவில்லை.  நினைக்கவில்லை என்றும் சொல்ல முடியாது........

===================================================================================================

ஏகாந்தமாய் 

மொகதிஷு இந்தியர்களில் பழுத்த பழமாக ஒருவர்

மொகதிஷுவில் வசித்த பல இந்தியக் குடும்பங்களில் சிலவற்றோடு
எனக்கு ஒரு நெருக்கம் நிகழ்ந்திருந்தது, நான் சோமாலியாவில் மூன்றாண்டு காலம் வாழ்ந்திருந்தபோது. அவர்களில் தென்னிந்தியக் குடும்பங்களே அதிகம் எனினும், சில பஞ்சாப், பீஹாரைச் சேர்ந்தவை.

நாலைந்து குஜராத்திக் குடும்பங்களே அப்போது மொகதிஷுவில் வாழ்ந்துவந்தன. அவர்கள் தங்களின் பாரம்பர்ய, கலாச்சாரப் பின்புலத்தோடு அவர்களின் வட்டத்துக்குள்ளேயே பெரும்பாலும் இயங்கிவந்ததால், தனிப்பட்ட வகையில் பழக்கங்கள், நெருக்கத்திற்கு வாய்ப்பில்லாது போனது. அவ்வப்போது எம்பஸியில், மார்க்கெட்டில் சந்திக்க நேர்ந்தால்.. ‘’நமஸ்தே! ஆப்.. கைஸே ஹை(ன்)? மொகதிஷு ஆப் கோ கைஸா லக் ரஹா ஹை..!” (எப்படி இருக்கிறீர்கள்? மொகதிஷு (வாழ்க்கை) எப்படிப்போகிறது உங்களுக்கு) - பொதுவாக இப்படிச் செல்லும் சம்பாஷணை.

சோமாலியாவிலேயே 40 வருடங்களுக்கு மேலாகக் காலத்தைக்
கழித்துக்கொண்டிருந்த ஒரு இந்தியக் குடும்பத்தை சந்திக்க நேர்ந்ததை,
மறக்க முடியுமா என்ன? பிரகாசமாக நினைவிலிருக்கிறது. குடும்பத்
தலைவரின் பெயர் ப்ரீத்தம் சிங். சர்தார்ஜி. ஒரு தச்சராக 
இந்தியாவிலிருந்து ஆஃபிரிக்காவின் வடபகுதிக்கு, 50-களிலேயே வேலை
தேடிவந்து, சோமாலி ஜனங்கள், லோக்கல் அதிகாரிகள், அலுவலர்களுடன்
பழகி எப்படி எப்படியெல்லாமோ பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு,
எத்தனையோ இடைஞ்சல்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
மொகதிஷுவில் குடும்பத்தை நிறுவியிருந்தார் அவர். முன்பு அங்கு 
ஆட்சியிலிருந்த அரசு ஒன்றில், ஜனாதிபதி குடும்பம் வரை அவருக்கு
நெருக்கம் இருந்ததாகக் கேள்விப்பட்டிருந்தேன். முதன்முதலில் அவரை
சந்தித்தபோது ‘வயது எழுபதுக்கு மேலிருக்கும்’ எனத் தோன்றியது.
ப்ரீத்தம் சிங்ஜியின் குடும்பம் என்பது வயதான மனைவி, இரண்டு
வயதுக்கு வந்த மகள்கள், வாலிப வயதில் ஒரு மகன் 
ஆகியோரைக்கொண்டது. குடும்பத்தினர் அனைவரும் சரளமாக சோமாலி மொழி பேசுவார்கள். கஷ்டப்பட்டு அங்கு கட்டியிருந்த பங்களா ஒன்றில் குடியிருந்தார் அவர். அவரது குழந்தைகள் யாருக்கும் திருமணம்
நடந்திருக்கவில்லை. மொகதிஷுவில் இந்திய தூதரகத்தின் ஆதரவுடன்
இயங்கிவந்த ‘இண்டியன் ஸ்கூல்’-இல் மெட்ரிக் வரை படித்தவர்கள்.
வயதில் சிறியவன் பப்பூ (Babboo) என்று குடும்பத்தினரால் செல்லமாக
அழைக்கப்பட்ட அவரது மகன் பல்பீர் சிங். எம்பஸிப்பக்கம் அவ்வப்போது
தன் வெள்ளை நிற ஃபியட் காரில் வருவான். கலகலப்பானவன். இந்திய 
தூதரகத்தினரிடம் மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்வான். யாருக்கும்
உதவிடும் எளிய மனம் அவனுடையது.

ராஹத் கான் ஷெர்வானி என்றொரு செக்யூரிட்டி கார்ட், எல்லைக்காவல்
படையிலிருந்து எங்களது அமைச்சகம் மூலமாக டெப்யூடேஷனில்
அப்போது பணிக்கு வந்துசேர்ந்திருந்தான். இருபதுகளின் இறுதியில்
ஒல்லியாய், உயரமாய் இருந்தான். உத்திரப்பிரதேசத்துக்காரன்.
செக்யூரிட்டிகளுக்கு வெளிநாட்டு போஸ்ட்டிங்குகளில், தங்கள்
குடும்பத்தை அழைத்துவர அரசின் அனுமதியில்லை. கொஞ்ச நாட்களில்
அவனுக்கு ஊரும், அதன் வாசமும் பிடித்துவிட்டது என்பது அவனது
முகமலர்ச்சியில் தெரிந்தது! வார விடுமுறை தினங்களில் என்ன
செய்வது, எப்படிப் பொழுதைப் போக்குவது என்பதே ஷெர்வானியின்
பெரும் பிரச்னை. மாலை நேரங்களில், விடுமுறை தினங்களில் என
எம்பஸியின் வெஸ்பா ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கடை கண்ணிக்குப்
போவதாகச் சொல்லிக்கொண்டு நகர்வலம் வருவான். சில நண்பர்கள்
அவனுக்கேற்றபடி கிடைத்தார்கள். சர்தார் ப்ரீத்தம் சிங்கின் குடும்பம்
அவனுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்தது. சமவயதினனான பப்பூவின்
தோஸ்த் ஆனான். தனியாக வசித்த ஷெர்வானிக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தான் பப்பூ. ஷெர்வானியை சர்தார்ஜியின் குடும்பத்தினர் அடிக்கடி லஞ்சுக்குக் கூப்பிட்டிருக்கிறார்கள். அவனும் போய்வருவான். பப்பூவும் அவனது குடும்பமும் மொகதிஷுவில் இருப்பது தனக்கு மனதளவில் மிகவும் இதம், உற்சாகம் தருகிறது என்று என்னிடம் உணர்ச்சிவசப்பட்டு சொல்லியிருக்கிறா\ன் ஷெர்வானி.

ரு முறை ப்ரீத்தம் சிங்ஜி எம்பஸி குடும்பத்தினரை அழைத்திருந்தார்
தன் வீட்டுக்கு. தீபாவளிக்குப் பின்னான ஒரு லஞ்ச் என்று நினைவு.
அருமையான விருந்தொன்று கிடைத்தது அன்று. மிஸஸ்.சிங்கும் அவரது
மகள்களும் விதவிதமான வட இந்திய உணவு ஐட்டங்களை செய்து
டைனிங் டேபிளை அலங்கரித்திருந்தார்கள். சர்தார்ஜியோடு லஞ்சுக்குப்
பின் கொஞ்சம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். இந்திய
சுதந்திரத்துக்குப் பின்னான பஞ்சாபின் வறுமையில் வாடிய குடும்பம்
ஒன்றிலிருந்து வந்தவர் சிங். பிழைப்பு தேடி, வாழ்வாதாரம் தேடி,
இந்தியர்களே தென்படாத ஒரு அந்நிய தேசத்துக்கு, அதுவும் நிஜமாகவே
இருண்ட ஒரு கண்டத்துக்கு கப்பல் மூலம் வந்து சேர்ந்தது; தனக்கென்று
ஒரு குடும்பத்தையும் அமைத்துக்கொண்டது, வாழ்வின் பெரும்பகுதியை
அங்கேயே செலவிட நேர்ந்தது என்றெல்லாம் மெல்ல, மெல்லச்
சொல்லிக்கொண்டிருந்தார் அன்று ப்ரீத்தம் சிங்ஜி. சோமாலியாவிலேயே
கிட்டத்தட்ட 40 வருடங்களைக் கழித்திருந்த அந்தப் பெரிய மனிதரைப்
பார்ப்பதிலேயே ஒரு பிரமிப்பை அனுபவித்தது மனது. இப்படி உலகின் 
எந்தெந்த மூலை முடுக்குகளில், எப்படிப்பட்ட இந்தியர்கள், எவ்வாறெல்லாம் வாழ்ந்துவருகிறார்களோ என்னவோ…


================================================================================================

நியூஸ் ரூம் 



பானுமதி வெங்கடேஸ்வரன் : 

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்(National commission for Protection of Child Rights) ஆரோக்ய பானம் என்ற பெயரில் போர்ன்விடா மற்றும் அதைப் போன்ற எந்தவிதமான பானங்களும் விற்பனை செய்யப்படக் கூடாது என்று நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் 2023ஆம் ஆண்டு புதிதாக மணம் முடித்தவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 12.4%  அதிகரித்துள்ளது. 

கூகுளின் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் செயலியான ஜெமினியை தங்கள் ஐஃபோனில் ஏற்றுக்கொள்வதைக் குறித்து ஆப்பிள் நிறுவனம் கூகுள் நிறுவனத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. 

இந்தியாவில் மீன் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

உடல் எடையை குறைப்பதற்காக இண்டர்மிடன்ட் ஃபாஸ்டிங்  அனுசரிப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கு  வாய்ப்புகள் அதிகம் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்(AHA) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் பட்டய கணக்காளர்களில்(Charted Accountants)மூவரில் ஒருவர் பெண்ணாம். இந்த துறையில் 2000த்தில் 8% ஆக இருந்த பெண்கள் 2023ல் 30% சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. - நல்ல முன்னேற்றம்தான். 

பிரேசிலில் கொளுத்தும் கோடையை சமாளிக்க கடற்கரை மற்றும் நீர் நிலைகளில் குவியும் மக்கள். கோடை வெப்பம் எவ்வளவு தெரியுமா? 62°C - நாம் 40° யை கத்திரி வெய்யில் என்போம். இது கோடாரி வெய்யிலா?

கரூரில் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் செந்தில்குமார் என்பவர் தன் வீட்டின் முன் பக்கமும், பின் பக்கமும் 'எங்கள் ஓட்டு விற்பனைக்கல்ல' என்று எழுதப்பட்ட டிஜிட்டல் போர்டில் தங்கள் வீட்டில் இருக்கும் வாக்காளர்களின் பெயர், தொழில் இவற்றை குறிப்பிட்டிருக்கிறார். இவர் தந்தையார் காலத்திலிருந்தே இப்படி செய்வது பழக்கமாம்.


================================================================================================

அரிய...




=========================================================================================

கடந்த காற்றில்
கலந்து வந்த
வாசங்கள்
காற்று
தழுவி வந்த
சுவடுகளைச்
சொல்லிச் செல்கின்றன. (செப் 28, 2013)


யாருடைய பாடல்களுக்குத்
தலையாட்டுகின்றன
மரங்கள்? (செப் 29, 2013)

===================================================================================================





==========================================================================================

இணையத்திலிருந்து....


சமையல் பொருள் மட்டுமல்ல பூண்டு
நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.
பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.
பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.
தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.
அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.
தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.
பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.

=====================================================================================

பொக்கிஷம்  :-













37 கருத்துகள்:

  1. இன்றைய கதம்பம் சுவை. ஆனால் மறுமொழி யார் தருவார்னு யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இவற்றையெல்லாம் துரோக்க் கணக்கில் சேர்க்கமுடியுமா? உங்க அப்பாதானே உங்களைக் கட்டியிருத்துக்கொண்டு சென்றவர். ஆபீசில், மேனேஜ்மென்டுக்காக நாம் சிலரைக் கழற்றிவிடுவது, நமக்காகச் சிலரைக் கழற்றிவிடுவது துரோகத்தில் சேருமான்னு தெரியலை. ஆனால் நான் ஊரில் இல்லாதபோது, என் பாஸ் சொன்னவற்றை என்னிடம் அனுமதி பெறாமல் செய்மு, எனக்கும் முழுமையாகத் தெரிவிக்காமல் இருந்ததை, நான் துரோகம் என்ற கேட்டகரியில் வைத்து, அவனைக் கழற்றிவிட்டேன். துரோகங்கள் ஆபீசில்தான் அதிகமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா நெல்லை, இன்னுமா புரியலை இதெல்லாம் வாசகர்களைக் கவரும் வகையில் தலைப்பு!!!

      ஏன் magazines, youtubers செய்தித்தாளகள் மட்டும்தான் அப்படி தலைப்பு வைச்சு உள்ள காரசாரமா இல்லாம எழுதணுமா, பேசணுமா என்ன?!! நம்ம ஸ்ரீராமும் அப்படி இந்த வாரம் எழுதியிருக்கார் அம்புட்டுதேன்!

      கீதா

      நீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யமான கதம்பம். An apple a day keeps the doctor away, a garlic a day keeps everyone away.

    பதிலளிநீக்கு
  5. கண்ணன் வெண்ணை திருடினால் கொண்டாடுவோம். இந்த கண்ணன் மாங்காய் திருடினால் கட்டி வைப்போம்!!!

    நான் படித்த செயின்ட் ஜோசப் பள்ளி ஒரு பெரிய மாந்தோப்பின் (கர்னல் தோட்டம்) நடுவே இருந்தது. மத்திய இடைவேளையில் யாரும் இல்லாத நேரத்தில் கல் வீசி மாங்காய் அடித்து சாப்பிடுவோம்.

    காற்று கவிதைக்கும், மரங்கள் தலையாட்டும் கவிதைக்கும் பாராட்டுகள்.

    காற்று வந்ததால்
    மரம் அசைந்ததா?
    மரம் அசைந்ததால்
    காற்று வந்ததா?
    காற்றில் வந்தது

    வாசமா, அல்லது
    பாசமா?

    ஜோக்குகள் திருப்தியில்லை.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணன் வெண்ணை திருடினால் கொண்டாடுவோம். இந்த கண்ணன் மாங்காய் திருடினால் கட்டி வைப்போம்!!!//

      !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.....ஜெ கே அண்ணா!!!! சிரித்துவிட்டேன்.

      கீதா

      நீக்கு
  6. உண்மை வாழ்க்கையில் துரோகிகள் மன்னிக்கப்படுகிறார்கள் ஆனால் துரோகங்கள் மறக்கப்படுவதில்லை - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கையில் துரோகிகள் மன்னிக்கப் படுகிறார்கள் ஆனால் துரோகங்கள் மறக்கப்படுவது இல்லை..

    இது நியாயமில்லை..

    எல்லாவற்றையும் கடந்தாக வேண்டும்..

    இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்தவோ சால்பு..

    - ஐயன் திருவள்ளுவர்..

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இன்றைய கதம்பம் நன்று.

    பதிலளிநீக்கு
  10. நீண்ட பதிவாக இருக்கின்றதோ..

    கைத்தலபேசியில் உருட்டி உருட்டிப் படிப்பது சிரமமாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதல் பகுதியாக தங்கள் எண்ணங்களை சொல்லியிருப்பதும். அருமை.

    /நாம் எதிர்பாராததை நமக்கு யாராவது செய்தால் அது நமக்கு துரோகம். நாம் யாருக்கும் அப்படி செய்யாமல் இருப்போமா? தெரிந்தோ, தெரியாமலோ, சிறிதாகவோ, பெரிதாகவோ... நாமும்தான் செய்திருப்போம்./

    உண்மையான வரிகள்.
    சிறு வயதில் மாங்காய் திருட்டு சம்பவத்தை நினைவு கூர்ந்து நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். அந்த நிமிடங்கள் அப்போதைய வயதில், ஒரு விதமான படபடப்பை உண்டாக்குவதுதான். மேலும், மறுப்பதும் மன்னிப்பும் அந்த வயதின் இயல்பு.

    கவிதை நன்றாக உள்ளது. மரமும் காற்றும் எப்போதும் இணைபிரியாத நண்பர்களாயிற்றே..! முதல் பகுதிகேற்ற கவிதை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. சின்ன வயசு விஷமங்கள், ஒரு சுவாரசியம். அந்த வயசில் மனம் பக்குவப்பிட்டிராத சிறுபிள்ளைத்தனமான விஷயங்கள் இதெல்லாம் துரோகம்னு மனசுல இருக்காது ஆனா இப்பவும் சொல்லிச் சிரிக்கலாம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. சாவி!! - பாராட்டுவது என்பது மிகச் சிறந்த குணம். உயர்ந்த குணம். நல்ல மனதுள்ளவர் சாவி அவர்கள்! நாம் கத்துக்க வேண்டிய ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கரூர் ஆசிரியர் "அட!" போட வைக்கிறார் நல்லாருக்குல்ல!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. ஏகாந்தன் அண்ணா சொல்லியிருப்பது போல் பல நாடுகளிலும் நம் நாட்டு மக்கள் இந்த சிங்க் கி யை போல குறிப்பாக ஆஃப்ரிக்க நாடுகளில் இருக்கிறார்கள். மொரிஷியசிலும் இப்படிப் பிழைப்பு தேடிச் சென்றவர்கள். அதுவும் தமிழர்கள். அவர்களது தமிழுமே வித்தியாசமாக இருக்கும்.

    சுவாரசியமான விஷயங்கள் அனுபவங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. புகைப்படங்கள் பொக்கிஷங்கள்.

    பூண்டு கண்டிப்பாக நம் வீட்டுச் சமையலில் உண்டு.

    பொக்கிஷத்தில், கடைசி ஜோக் ஹாஹாஹா அப்போவே "அப்பா"

    குடை ஜோக்கும் புன்சிர்ப்பு -

    நாடகத்துள் நாடகம் - புலிவருது கதையாகுதேன்னு பார்த்தா அங்கும் அதேதான் சொல்லியிருக்காங்க.

    ஸ்ரீராம் கவிதை நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  17. நாளை முதல் கொஞ்ச நாள் வலைப்பத்திலிருந்து நான் அப்பீட்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ஆமாம் துரோகத்தைத் துருவிப் பாராத வயதும் ஒரு காரணமாக இருக்கும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  19. சார்ட்டட் அக்கவுன்ட்களின் எண்ணைக்கை உயர்வு மகிழ்வான விஷயம்.

    சின்ன சிறுத்தையுடன் நடக்கும் நடிகையர் திலகம், அதற்கு அடுத்த படமும் அருமையான அரிதான படங்கள்தான்.

    ஆமாம் சாவி அவர்களின் குணம் மிக நல்ல குணம். பாராட்டு என்பது ஒரு டானிக். எனவே அதை நாம் உடனுக்குடன் உண்மையாக ஆத்மார்த்தமாகச் சொல்லிவிட வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. ஏகாந்தன் சாரின் சோமாலிய அனுபவங்கள் சுவாரசியம்.

    பொகிஷப் பகுதியில் புலிவருது கதையான நிகழ்வு ஆமாம் சஸ்பென்ஸ் என்று வித்தியாசமாக நாம் செய்யப் போக அது இப்படி ஆவதுண்டே.

    ஜோக்ஸ் நன்று.

    உங்கள் கவிதையும் நன்று ஸ்ரீராம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. மதிப்புக்குரிய கோமதி அரசு அவர்கள் சில நாட்களாக வருவதில்லையே...
    உறவினர் இல்லங்களுக்குப் பயணம் என்று நினைக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் குடும்பத்தில் ஒரு நிகழ்வு. அவரே சொல்வார் என்று நினைக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    2. இப்போது தான் பேசினேன்..

      மிகவும் வருத்தமான செய்தி.. என்ன செய்ய முடியும் நம்மால்..

      மனம் அமைதி பெறுவதற்கு வேண்டிக் கொள்வோம்..

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      இரண்டொரு நாட்களாக கோமதி அரசு சகோதரி அவர்கள் இங்கு வர முடியாதபடிக்கு ஏற்பட்ட காரணம் ஏதும் தெரியவில்லை. அந்த காரணம் தெரியாமலே என் மனமும் வருத்தமுறுகிறது. அவர்கள் மனம் அமைதி பெறுவதற்கு நானும் வேண்டிக் கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    சகோதரர் ஏகாந்தன் அவர்களது பக்கம் சுவாரஸ்யமாக இருந்தது. நம் இந்திய குடும்பங்கள் வாழ்க்கை வசதிக்காகவும், வாழ்வின் ஆதாரங்களுக்காகவும் எப்படியெல்லாம் வெளிநாடுகளில் அனுசரித்துப் போகிறார்கள் என்பதை படித்துணர்ந்தேன்.

    சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் செய்தி அறை பக்கங்கள் அனைத்தும் படித்து தெரிந்து கொண்டேன்.

    பூண்டின் நன்மைபயக்கும் செய்திகள் பயனுள்ளவை.

    அனுஷ்கா பழையபடி ஒல்லியாக விட்டாரா.? சந்தோஷம்.

    மற்றைய குறுஞ்செய்திகள் நாடக பகுதிகள், நகைச்சுவை பகுதிகள் என இன்றைய கதம்ப மாலை அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. சிறுவயது திருட்டு மாங்காய் சுவைதான். நண்பன் அகப்பட்டதுதான் திக்...

    நாற்பது வருடங்களாக சோமாலியாவில் வாழ்ந்த ப்ரீத்தம்சிங் குடும்பத்தவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.

    நியூஸ்ரைம் சிறப்பு.

    கவிதை நன்றாக இருக்கிறது.

    பொக்கிசம், பழைய படங்கள், பலதையும் நினைவூட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  24. மாங்காய் திருடி தின்பதில் தான் மகிழ்ச்சி சிறு வயதில் பையன்களுக்கு. என் அண்ணன் தன் நண்பர்களுடன் பக்கத்து வீட்டு மாமரத்தில் கல்லால் அடித்து எடுத்து வருவான். அப்பா, அம்மாவிடம் அடி விழும்.

    இங்கு உங்கள் நண்பர் பிடிபட்டு இருக்கிறார். அப்பா வந்து விட அப்பாவிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து விட்டீர்கள்.
    உங்கள் நண்பரும் நீங்கள் காவல் காக்காமல் ஓடி போனதை மறந்து மன்னித்து விட்டார். சிறு குழந்தைகளுக்கு மனதில் வைத்து கொள்ள தெரியாது, மறந்து விடுவார்கள். பெரியவர்கள் என்றால் மனதில் வைத்து கொண்டு இருப்பார்கள்.


    உங்கள் கவிதை, பொக்கிஷ பகிர்வு மற்றும் அனைத்து பகுதிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  25. இணையம் வர முடியவில்லை, தங்கை கணவர் (வயது 64) இறைவனடி சேர்ந்து விட்டார் 16 ம் தேதி அதனால் வலை பக்கம் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  26. அறியாத வயதில் செய்தவை. துரோகம் எனும் வார்த்தை பெரியது. அந்த வயதில் நண்பரும் அதை பெரிது படுத்தாமல் [புதருக்குள் எறிந்த நான்கு :)) ] மாங்காய்களை மீண்டும் பங்கு போட்டுக் கொண்டாரே.

    பதிலளிநீக்கு
  27. பூண்டின் நன்மைகள், துணுக்குகள் உட்படத் தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!