புதன், 20 மார்ச், 2024

தேர்தலும், அணிகளும் !

 

நெல்லைத்தமிழன் : 

ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு 50 சதம் இட ஒதுக்கீடு, இந்த ஜாதிக்கு இதைச் செய்வோம் என்றெல்லாம் சொல்றவங்க, முதலில் தங்கள் கட்சியில் அதனைச் செய்து அவங்களோட உண்மைத் தன்மையை நிரூபிக்கலாமே. நீங்க என்ன நினைக்கறீங்க?

# அரசியல்வாதிகளின் பேச்சை அறிவு பூர்வமாக ப் பார்க்கக்கூடாது. எல்லாம் ஒரு உள்நோக்கம் கொண்டதாக இருக்கும்.

& கட்சியில் இருப்பவர்கள் எப்படியும் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள். பொதுஜனங்களின் ஓட்டுகளைக் கவர்வதற்குத்தான் ஏதாவது ஜிகினா வேலைகள்! 

ஒரு கட்சி தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறது, அந்தக் கட்சி தோத்துப் போச்சுன்னா, மக்கள் அந்த வாக்குறுதியை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம்? உதாரணமா நாம் தமிழர்  அல்லது பாஜக, கள்ளுக்கடைகள் அமைப்போம், டாஸ்மாக் மூடப்படும் என்று வாக்குறுதி கொடுத்துத் தோற்றால், மக்கள் அவைகளை விரும்பவில்லை என்றுதானே அர்த்தம்?

$ டாஸ்மாக் மூடுவதும், கள்ளுக்கடைகள் திறக்கப்படுவதும் ஒருவேளை தமிழ்க் குடி மக்களுக்குப் பிடிக்கவில்லையோ? 

# மக்கள் வோட் போடாததற்கு வேறு பல காரணங்களும் இருக்கும்  முக்கியமாக, தேர்தல் வாக்குறுதியை மறுத்து வாக்களிக்காமல் இருப்பது அநேகமாக நடப்பதில்லை.

& தேர்தல் அறிக்கை, தேர்தல் வாக்குறுதி இதற்கெல்லாம் அர்த்தமே கிடையாது. தேர்தல் நேரத்தில் நடக்கும் சம்பிரதாயங்கள் - அவ்வளவுதான். 

பாஜகவிற்கு வாக்களிக்காத தமிழக மக்கள், மத்திய அரசு சிலிண்டர் விலையைக் குறைக்கவில்லை, பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை என்று புலம்புவது அபத்தமாக உள்ளதே? பாஜகவிற்கு வாக்களிக்காதவர்கள், அல்லது திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள், அந்தக் கட்சிக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று சொன்னால் அர்த்தம் இருக்கும், இதைச் செய்தால் வாக்களிப்பேன் என்று சொன்னால் அர்த்தம் உண்டு. அது இல்லாமல், திமுக இதைச் செய்யவில்லை என்று திமுகவிற்கு வாக்களிக்காதவர்களும், பாஜக இதைச் செய்யவில்லை என்று பாஜகவிற்கு வாக்களிக்காதவர்களும் புலம்புவதில் அர்த்தம் இருக்கிறதா?

# வாக்களிக்காத மக்கள் ஆட்சியைக் குறை சொல்லக் கூடாது என்பது விபரீதமான கோட்பாடு.

= = = = = = =

KGG பக்கம் : 

நான் முதன்முதலில் வோட்டுப் போட்ட தேர்தல் ஞாபகம் வருகிறது. 

வேட்பாளர்களில் இரண்டுபேர் என்னுடைய நண்பர்கள். அதில் ஒருவருக்காக நானும் வோட்டு கேட்டு சில ரவுண்ட் வந்தேன். 

ஒரு பொதுச் செயலாளர், துணை செயலாளர், இணை செயலாளர் ஆகியோருக்கான தேர்தல். 

நான் பாலிடெக்னிக் முதல் ஆண்டு படித்தபோது நடந்த அந்தத் தேர்தல்தான் நான் வோட்டுப்போட்ட முதல் தேர்தல்.  

அது எங்கள் பாலிடெக்னிக் மாணவர் தலைவர் தேர்தல்! இணை செயலாளர் பதவிக்கு மொத்தம் 3 பேர் போட்டியிட்டனர். பாலிடெக்னிக் முதல் ஆண்டு மூன்று பிரிவு ( A, B, and C batch) என்னுடைய A பிரிவு சார்பில் நண்பர் இன்ப ஒளி என்பவர் போட்டியிட்டார். அவருக்காக வோட்டு கேட்டு நான் வகுப்புகளில் சில சுற்றுகள் வந்தேன். 

பொதுச் செயலாளர், துணை செயலாளர் பதவிக்கும் மெக்கானிக்கல் பிரிவிலிருந்து ஒவ்வொருவர், எலக்டிரிக்கல் பிரிவிலிருந்து ஒவ்வொருவர், சிவில் பிரிவிலிருந்து ஒவ்வொருவர் என்று போட்டியிட்டார்கள். 

மொத்தம் உள்ள மூன்று பதவிகளுக்கு ஒவ்வொரு பதவிக்கும் மூன்று பேர் போட்டியிட்டனர். 

இதில் மெக்கானிக்கல் பிரிவிலும், எலக்டிரிக்கல் பிரிவிலும் அதிக மாணவர்கள். சிவில் பிரிவில் அதிகம் மாணவர்கள் கிடையாது. 

மெக்கானிக்கல் பிரிவில் இருப்பவர்கள் எல்லோரும் மெக்கானிக்கல் பிரிவு சார்பாக போட்டியிடுபவருக்கும், எலக்டிரிக்கல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எலக்டிரிக்கல் ரிவு சார்பாக போட்டியிடுபவருக்கும், சிவில் மாணவர்கள் சிவில் சார்பில் போட்டியிடுபவர்களுக்கும் வோட்டுப் போடுவது வழக்கம். 

மூன்று பிரிவினரும் குறி வைப்பது, எந்தப் பிரிவையும் சேராத முதலாம் ஆண்டு மாணவர்களைத்தான். அதனால், மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், சிவில் பிரிவை சேர்ந்த மாணவர்கள், தங்கள் அணி சார்பில் இணை செயலாளர் பதவிக்காக முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை ( அவர் நிச்சயம் இரண்டாம் ஆண்டு ஆரம்பத்தில் தங்கள் பிரிவைத் தேர்ந்தெடுப்பார் என்று தெரிந்த மாணவரை ) சேர்த்துக்கொள்வார்கள். 

அந்தத் தேர்தலில் மெக்கானிக்கல் பிரிவின் சார்பாக மூன்றாம் ஆண்டு மாணவர் ஆறுமுகம், இரண்டாம் ஆண்டு மாணவர் நீலமேகராஜன் இவர்களோடு என் நண்பர் இன்ப ஒளி ஆகியோர் ஒரு பிரிவில் போட்டியிட்டனர். 

நான் ஆதரித்த அணியைச் சேர்ந்த மூன்று பேரும் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியாக நம்பினேன். 

தேர்தலுக்கு முதல் நாள் மாலை தேர்தல் கூட்டம். பாலிடெக்னிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஒவ்வொரு வேட்பாளரும் வாக்காளர்களாகிய மாணவர்களுக்கு முன்பு தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னென்ன செய்வார்கள் என்று கூறுவார்கள் 

வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் மாணவர் கவிதை நடையில் அறிமுகம் செய்து பேசி கைதட்டல் விசில் பறக்க பேசுவார். 

உதாரணமாக :

"ஆறுமுகம் - மாணவர்களே நீங்கள் ஏறுமுகம் காண ஆதரிப்பீர் ஆறுமுகம். உதவி கேட்டு வந்தால் மாறுமுகம் காட்டாமல் இன்முகம் காட்டுபவர் நம் ஆறுமுகம். 

சூழ்ந்திருப்பது நீலமேகம். எங்கு காணினும் நீலமேகம் - அதில் ராஜாவாக வீற்றிருக்கும் நீலமேகராஜன். 

நீலமேகத்தின் நடுவே தோன்றுகிறது ஒரு நிலவொளி - எதிர்கால அன்பு ஒளி அதுதான் உங்கள் இன்ப ஒளி. " 

இப்படி எல்லாம் வார்த்தை ஜாலங்கள். 

தேர்தல் நாள் அன்று வெளியிலிருந்து வந்த சில ஆட்கள் மற்றும் பாலிடெக்னிக் தோட்டக்காரர், அதிடெண்டர் வரை எல்லோருமே வாக்குச் சாவடி (ஹைடிராலிக்ஸ் லாப்)க்கு அருகில் நின்றுகொண்டு வோட்டுப் போட வந்த முதலாம் ஆண்டு மாணவர்களிடம், " தம்பீ - ஆறுமுகம், நீலமேகராஜன் - மறந்துடாதீங்க " என்று சொல்லிக்கொண்டிருந்தனர். 

எல்லாம் நன்றாகப் போனது - ஆனால் பாருங்க - ஆறுமுகம், நீலமேகராஜன் இருவரும் ஜெயித்தனர். அந்தக் குழுவில் போட்டியிட்ட என்  நண்பர் இன்ப ஒளி மட்டும் சில வோட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போய்விட்டார். அவருக்கு பதிலாக எலக்டிரிக்கல் பிரிவு அணியில்  போட்டியிட்ட முதலாம் ஆண்டு மாணவர் வெற்றி பெற்றார். 

நண்பரின் தோல்வி, அவரைவிட என்னை மிகவும் பாதித்தது! எல்லாம் ஒரு வார காலம் மட்டுமே! அப்புறம் சகஜ நிலைக்குத் திரும்பினேன்! 

= = == = = =


28 கருத்துகள்:

  1. நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆரம்பித்துவிட்டதால் தேர்தல் சம்பந்தமான பதிவு.

    அது சரி.. வாக்களிக்காத கட்சியைப்பற்றி எப்படி குறை சொல்லலாம்? நீயோ பாஜகவிற்கு வாக்களிக்கலை. அப்புறம் ஏன் அவங்க அதைச் செய்யலை இதைச் செய்யலைனு புலம்பணும்? என்ற கேள்வி மனதில் எழும்

    பதிலளிநீக்கு
  2. 8ம் வகுப்பு லீடர் தேர்தலில் நான் தகிடுதத்தத்தில் வெற்றிபெற்றேன். முதல் சாய்ஸ் இரண்டாம் சாய்ஸ் என்பதைப் பலர் புரிந்துகொள்ளாத போது என் நண்பி உதவியால் பெண்கள் பகுதி இரண்டாம் சாய்ஸ் வாக்குகள் வாங்கி லீடரானேன். பெண்கள் சார்பா நின்றவர் இரண்டாமிடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க அரசியலுக்கு வந்திருந்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கலாம்!

      நீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. நெல்லை கூறுவது சரியில்லை. கடவுளிடம் நாம் அதைக்கொடு இதைக்கொடு என்று கேட்கிறோம். கிடைக்காத போது கடவுளை கும்பிடுவதை நிறுத்துகிறோமா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கடவுளைக் குறை சொல்லலாமா? பாஜகவுக்கு வாக்களிக்காமல் அதைச்செய் இதைச்செய்னு கேட்கும் உரிமை கிடையாது. யாருக்கு வாக்களித்தார்களோ அவங்கட்ட கேட்டு வாங்கிக்க வேண்டியதுதான்

      நீக்கு
    2. வோட்டு போடுவதற்கும் உரிமையை கேட்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று நான் கருதுகிறேன். அரசு வேறு கட்சி வேறு. ஆளும் கட்சிக்கு வோட்டுப்போடாதவர்களும் வரி கொடுக்கிறார்கள். கொடுக்கும் வரியில் சட்டப்படி கிடைக்க வேண்டிய பங்கை வோட்டு போடாதவர்களும் கேட்பதில் தவறில்லை என்று நான் கருதுகிறேன்.

      Jayakumar

      நீக்கு
    3. அரசு வோட்டு போடாதவர்களிடம் வரி வசூல் செய்வது இல்லை என்றால் வோட்டு போடாதவர்கள் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கமாட்டார்கள்.

      நீக்கு
  5. அரசியல் வாதிகளின் பேச்சை அறிவு பூர்வமாகப் பார்க்கக்கூடாது..

    உண்மை..
    உண்மை..

    பதிலளிநீக்கு
  6. //அரசியல்வாதிகள் பேச்சை அறிவுப்பூர்வமாக பார்க்க கூடாது//

    ஹா.. ஹா.. ஹா..

    பதிலளிநீக்கு
  7. தேர்தல் வாக்குறுதிகளும் அரசியல் வாதிகளும் நல்ல அலசல்.

    Kgg மாணவர் தேர்தல் வாக்குக் கேட்டதை நன்றாக கூறியுள்ளார்.

    சிலநாட்களாக ப்ளாக் பக்கம் வரமுடியவில்லை. எனது கணவரின் சகோதரியின் மரண சம்பவம்தான் . சிலகாலமாக நோய்வாய்பட்டு இருந்ததில் மனம் ஆறுதல் அடைகிறோம். சாப்பாடு ஊட்டிவிடவேண்டும் சிறு குழந்தையை பார்ப்பது போல அவரின் கணவர் மற்றையவர்கள் மெச்சும்படி பார்த்து வந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் மாதேவி அவர்கள் விவரித்துள்ள சோக நிகழ்வில் மனதிற்கு மிகவும் வருத்தம்..

      காலம் துயரத்தை மாற்றும்..

      ஓம் சாந்தி..

      நீக்கு
    2. காலம் துயரத்தை மாற்றும்..

      ஓம் சாந்தி.

      நீக்கு
    3. மாதேவி அவர்களுக்கு எங்கள் அனுதாபங்கள்

      நீக்கு
    4. வணக்கம் மாதேவி சகோதரி.

      தங்களை சில தினங்களாக பதிவுகளில் காணவில்லையே என நானும் நினைத்தேன். தங்கள் வீட்டின் துயரமான சம்பவம் அறிந்து மனதிற்கு கஸ்டமாக இருந்தது. தங்கள் நாத்தனாரின் கணவர் செயல் பாராட்டுக்குரியது இருப்பினும், உங்கள் நாத்தனாரின் இழப்பை தாங்கும் வலிமையை அவருக்கும், மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் தரவேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. திருமதி மாதேவி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

      நீக்கு
    6. எங்கள் குடும்பத் துயரத்தில் கலந்து அனுதாபங்கள்,ஆறுதல் வார்த்தைகள் ,பிரார்த்தனைகள் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

      நீக்கு
    7. மாதேவி உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் ஆறுதலை தர பிரார்த்திக்கிறேன்.

      நானும் தங்கை கணவர்(64 வயது) 16 ம் தேதி இறைவனடி சென்று விட்டதால் வலை பக்கம் வர முடியவில்லை.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய அரசியல் கேள்வி பதில்கள் அனைத்தும் அருமை. அதைக்குறித்த வந்த கருத்துகளையும் படித்தேன். ரசித்தேன்.

    /ஆறுமுகம் - மாணவர்களே நீங்கள் ஏறுமுகம் காண ஆதரிப்பீர் ஆறுமுகம். உதவி கேட்டு வந்தால் மாறுமுகம் காட்டாமல் இன்முகம் காட்டுபவர் நம் ஆறுமுகம்.

    சூழ்ந்திருப்பது நீலமேகம். எங்கு காணினும் நீலமேகம் - அதில் ராஜாவாக வீற்றிருக்கும் நீலமேகராஜன்.

    நீலமேகத்தின் நடுவே தோன்றுகிறது ஒரு நிலவொளி - எதிர்கால அன்பு ஒளி அதுதான் உங்கள் இன்ப ஒளி. /

    நல்ல வார்த்தை ஜாலங்கள்தான்.
    உங்கள் கல்லூரி தேர்தல் பற்றிய விபரங்களும் அருமை. எல்லாவற்றையும் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. தேர்தல் இங்கேயும் வந்து விட்டது! :)

    கேஜிஜி அவர்களின் தேர்தல் அனுபவங்கள் - நன்று.

    பதிலளிநீக்கு
  10. சாரின் தேர்தல் அனுபவங்கள் படித்தேன்.
    தேர்தல் நேரத்தில் பதிவு பொருத்தம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!