சனி, 9 மார்ச், 2024

ராம்நகர் ராஜபோஜனம் மற்றும் நான் படிச்ச கதை 

 


===========================================================================================



==================================================================================================


16 வயதான பிரஞ்சலி அவஸ்தி தனது ஏஐ ஸ்டார்ட்-அப் Delv.AI மூலம் தொழில்நுட்ப உலகில் புயலைக் கிளப்பியுள்ளார். மியாமி டெக் வீக் நிகழ்வின்போது, அவஸ்தி தனது நிறுவனத்தை ஜனவரி 2022-இல் நிறுவியதாகவும், வெற்றிகரமாக சுமார் ரூ.3.7 கோடி நிதியுதவியைத் தருவித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். 



================================================================================================


 

நான் படிச்ச கதை (JKC)

காலத்தின் விளிம்பில்

கதையாசிரியர்: பாவண்ணன்


முன்னுரை.

 

‘எங்கள் ப்ளாக்’ என்ற இணைய இதழில் வாரம் ஒருமுறை நான் எழுதும் கட்டுரைகளுக்கு எந்த வரவேற்பும் இல்லை… அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை. …..  புரிகிறதா?  

காலத்தின் விளிம்பில் என்ற இந்த கதையின் துவக்க வரிகளை பாருங்கள்..

//“பூந்தோட்டம்” என்னும் இணைய வார இதழில் நான் எழுதத் தொடங்கிய கட்டுரைகளுக்கு முதலில் எந்த வரவேற்பும் இல்லை. அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை//…. இப்படி துவங்குகிறது கதை. தற்போது முதல் வரிக்கு சென்று பாருங்கள். நான் கூறியது என் கேஸ் என்பதும் புரியும். 

கதை ஒரு முதியவரைப் பற்றியும், அவரது எண்ணச்சிதறல்களையும் பற்றியது. ஆனால் தலைப்பு ‘காலத்தின் விளிம்பில் (at the edge of time) என்பதைக்காட்டிலும் ‘வாழ்வின் இறுதிப் பயணம் (life’s last journey)’   என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. 

 ‘’ஆல்சைமர் நோய் (Alzheimer disease) நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும், மெதுவாக ஆரம்பித்து, நாட்கள் செல்கையில் மோசமான நிலைமைக்கு நகரும் ஒரு நாட்பட்ட நோயாகும்.”  இந்த நோய் உள்ள ஒருவரின் கதை தான் இது. 

கதை பெரிது. 17 பக்கங்கள்.  கதையை இரு பகுதிகளாக பிரிக்கலாம். முதல் பகுதி கதையைப் புரிந்துகொள்ள அறிய வேண்டிய விவரங்களைத் தருகிறது. இரண்டாம் பகுதியில் தான் தலைப்புக்கு ஏற்ற கதை வருகிறது.


கதைச்சுருக்கம் முதற்பகுதி. 

பூந்தோட்டம்” என்னும் இணைய வார இதழில் நான் எழுதத் தொடங்கிய கட்டுரைகளுக்கு முதலில் எந்த வரவேற்பும் இல்லை. அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை//…. இப்படி துவங்குகிறது கதை. 

பதினோராவது வாரத்துக்கான கட்டுரையை எழுதி முடித்ததும் அனுப்புவதற்காக மின் அஞ்சல் பக்கத்தைத்

திருப்பியபோது எனக்கொரு மடல் வந்திருக்கும் செய்தியை அறிந்தேன். ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்தது அக்கடிதம்.அவர் பெயர் சந்திரன். எங்கள் நட்பு இப்படித்தான் தொடங்கியது. 

“பெங்களூர் நகரைவிட்டு வெகுதொலைவு தள்ளியிருக்கும் ஹுடி என்னும் கிராமத்தில் “ஆஷ்ரயா” என்கிற பெயரில் இயங்கும் முதியோர் இல்லத்தைத் தெரியுமா?” என்று ஒரு முறை கேட்டிருந்தார் சந்திரன். அச்சமயத்தில் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. பிற உள்ளூர் நண்பர்களை விசாரிக்கத் தொடங்கினேன். பலருக்கு அதைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. ஒருவர் மட்டும் அது ஒரு முதியோர் இல்லமென்றும் சேவை மனப்பான்மை கொண்ட சிலரால் நடத்தப்பட்டு வருகிறது என்றும் சொன்னார்

ஒருநாள் திடீரென்று தன் பெரியம்மா அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தன் சார்பில் அவரைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்றும் கேட்டிருந்தார். என் ஓய்வு நாளுக்காகக் காத்திருந்த இடைவெளியில் அவரிடமிருந்து விரிவான மடலொன்று வந்தது.

சந்திரன் 20 வருடங்களுக்கு முன்பே வேலை நிமித்தம் ஆப்பிரிக்காவுக்கு சென்று விட்டார். அவ்ருக்கு தாயாரை தவிர வேறு யாரும் இல்லை. தற்போது தாயாரும் இல்லை. ஆப்பிரிக்க பெண் ஒருத்தியை மனம் செய்து குடும்பத்துடன் ஆப்பிரிக்காவில் வாழ்கிறார். தாயாருக்கு ஒரு அக்கா உண்டு. சந்திரனுக்கு பெரியம்மா. பெரியம்மா குடும்பம் ஏழை. பெரியம்மாவின் கணவர் இறந்து விட்டார். பெரியம்மாவிற்கு 6 பிள்ளைகள்.. யாரும் அவரைப் பார்த்துக்கொள்ள முடியாது என்று கை விரித்து விட்டனர். பெரியம்மா தெரிந்தவர் மூலமாக சாந்திரனுக்கு கடிதம் எழுதினார். சந்திரனும் தெரிந்தவர் மூலமாக ஹூதியில் உள்ள ‘ஆஷ்ரயா’ முதியோர் இல்லத்தில் அவரைச் சேர்த்து பராமரிப்பு செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். 

தற்போது சில துர் கனவுகள் வ்ருவதாகவும், அதனால் பெரியம்மாவின் நலன் பற்றி அறிய விரும்புவதாகவும் மின்மடல் அனுப்பியுள்ளார். 

அடுத்த ஞாயிறு அன்று பேருந்துத்தடம் விசாரித்து அந்த இல்லத்துக்குக் கிளம்பினேன். மூன்று பேருந்துகள் மாற வேண்டியிருந்தது. இறுதியாக இறங்கிய நிறுத்தத்தின் அருகே ஓர் ஓலைக்குடிசை டீக்கடை மட்டும் காணப்பட்டது. ஒரே ஒரு சிகரெட் மட்டும் வாங்கிப் பற்றவைத்தபடி ஆசிரமத்தைப்பற்றி விசாரித்தேன். டீக்கடைக்காரப்பெண் குடிசைக்கு வெளியே வந்து தொலைவில் தோப்பைப் போலக் காணப்பட்ட ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி “அதுதான் இல்லம்” என்றாள்.

“அதுவரிக்கும் பஸ் போகாதா?”

“இல்லத்துக்கு இதுதான் ஸ்டாப். எல்லாரும் இங்க எறங்கித்தான் நடந்துபோவாங்க. நீங்க வெளியூரா?”

நான் வேடிக்கைக்காக “ஆமாம்” என்றேன்.

“வயசானவங்கள இங்க கொண்டாந்து உட்டுட்டு ஆளுக்கொரு பக்கமா போயிடறாங்க சார். கூழோ கஞ்சியோ ஒன்னா சேர்ந்து லட்சணமா குடிக்கறத உட்டுட்டு பணம்பணம்னு எதுக்குத்தான் சார் மக்கள் அலையறாங்களோ? காலம் ரொம்ப மாறிப்போச்சி சார்”.

”நல்லா கவனிச்சிக்கிடறாங்களா இங்க?”

“கவனிப்புக்கெல்லாம் எந்தக் கொறையுமில்ல சார். நூறுபேரு கவனிச்சிக்கிட்டாலும் பக்கத்துல பெத்த புள்ள இருந்து பாக்கற மாதிரி ஆவுமா, சொல்லுங்க.”

அந்தப் பாதை முடியுமிடத்தில் “ஆஷ்ரயா” என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகை கண்ணில் பட்டது.வாசலில் இருந்தகாவலரிடம் விவரம் சொல்லி உள்ளே நுழைந்தேன். பெஞ்சுகள். அழகான சுற்றுச்சுவர். சிலைகளுடன் எளியமுறையில் அமர்ந்திருந்த கோவில். தேவாலயம். தொழுகைக்கூடம்.

 பின்னால் விரிந்த வெளியில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுசிறு இல்லங்கள். எல்லாமே ஓட்டு வீடுகளுக்கு உரிய அமைப்பில் கட்டப்பட்டவை. மறுபுறம் மருத்துவமனை, வேறொரு புறத்தில் உடல் எரிமையம். அதன் புகைப்போக்கி மேகத்தைத் தொடுவதைப் போல மிக உயரமாக எழுப்பப்பட்டிருந்தது. அங்கங்கே வாகன நிறுத்தங்கள், பக்கவாட்டில் நடப்பதற்குத் தோதான கிளைப்பாதைகள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாக நடந்தேன். தாமதமாகத்தான் கட்டிட அமைப்புகளைக் கவனித்தேன். எல்லாமே தரையோடு ஒட்டியவை. படிக்கட்டுகளோ, மாடிப்பகுதியோ எங்கேயும் காணப்படவில்லை. .

நீரூற்றுக்கு இடதுபுறமாக இருந்த விசாரணை மையத்துக்குள் நுழைந்தேன். அந்த அறையின் உள்சுவர் முழுக்க அழகான புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. சிறுசிறு வாக்கியங்களைக் கொண்ட அட்டைகள் செருகப்பட்டிருந்தன. தயக்கத்துடன் பார்வையை அங்குமிங்கும் படரவைத்தபடி திரும்பியபோதுஒரு மேசையின் பக்கம் கணிப்பொறியின் முன்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் புன்னகையைப் பார்க்க நேர்ந்தது. ஒருகணம் அப்புன்னகையை ஒரு சிற்பத்தின் புன்னகையாக நினைத்துப் பார்த்து மனத்துக்குள் சிரித்துக் கொண்டேன். பிறகு மெல்ல அவளை நெருங்கி என்னிடம் இருந்த குறிப்புகளைக் கொடுத்தேன்.

இரண்டாம் பகுதி கதைச்சுருக்கம். 

“தையல்நாயகி, எஸ் ஸெவன்”

என் குறிப்பை வாய்விட்டுப் படித்தபடி அவள் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தாள். குடில்கள் தொடங்கும் பகுதிவரைக்கும் கூடவே வந்து நான் செல்ல வேண்டிய திசையையும் திரும்ப வேண்டிய இடத்தையும் சுட்டிக் காட்டிவிட்டுச் சென்றாள். அவள் காட்டிய திசையில் நடக்கத் தொடங்கினேன் நான். எல்லா இல்லங்களும் ஒரே விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இல்லத்துக்கு முன்னால் மொசைக் கற்கள் பதிக்கப்பெற்ற சிறு முற்றம். ஒரு சிறு நிழற்குடை. அதன்கீழ் ஒரு சாய்வு நாற்காலி. அதைச்சுற்றிச் சின்னத் தோட்டம். தோட்டத்தில் சூரியகாந்திப் பூக்களின் மஞ்சள் இளவெயிலில் மின்னிக்கொண்டிருந்தது.

தற்செயலாகத்தான் ஒரு இல்லத்தின் ஜன்னல் பக்கமாக என் பார்வை சென்றது. இரண்டு கண்கள் என்மீது பதிந்திருந்தன. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது….. உடனடியாகத் திரும்பி மற்ற இல்லங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினேன். உண்மையிலேயே என் பதற்றம் அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு ஜன்னலில் பக்கத்திலும் இருகண்கள். நைந்து தளர்ந்த விழிக்குழிகளிலிருந்து உயரும் பார்வை. பாதையைப் பார்த்தபடி வேகமாக நடக்கத் தொடங்கினேன். யாரோ என்னை அழைப்பதைப் போலிருந்தது. தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தேன். யாரையும் காணவில்லை. அடையாளம் காட்டிய பெண்ணைக்கூட இறக்கி வைத்துவிட்டுப் போன பெரிய பெரிய எந்திரங்களைப் போல நிமிர்ந்துகூட பார்க்கமுடியாத அளவு நெஞ்சில் அச்சம் துளிர்த்ததை ஆச்சரியமாக உணர்ந்தேன். மறுகணமே என் பகுத்தறிவு மூளை விழித்து அந்த அச்சத்தை விரட்டியது. அந்த இடத்தின் விசித்திரம் ஒரு சின்னச் சத்தம்கூட காதில் விழவில்லை என்பதுதான். ஒரு தும்மல் சத்தம்கூட கேட்கவில்லை.

இல்லத்தின் கதவை நெருங்கி அழைப்புமணியை அழுத்தினேன். என் புலன்கள் இல்லத்துக்குள் ஏற்படக்கூடிய துணிகள் உரசும் ஒலியையோ செருப்புகள் அழுந்தும் சத்தத்தையோஒ ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்தன. சில கணங்கள் வரை எதுவும் கேட்கவில்லை. மீண்டும் மணியை அழுத்தலாம் என்று நினைத்த தருணத்தில் கதவு சட்டெனத் திறந்தது. வெளிப்பட்ட அந்த உருவத்தின் தோற்றம் என்னை ஒரு கணம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உருக்குலைந்த சதைக் கோளத்துக்குக் கையும் காலும் முளைத்ததைப் போலிருந்தது அத்தோற்றம். என் இதயம் வெகுவேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

”தையல்நாயகிங்கறது நீங்கதானேம்மா?”

கேட்க நினைத்த கேள்வி நெஞ்சிலிருந்து எழாமல் வறட்சி அடைந்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கி ஈரத்தைப் படர வைத்தபிறகுதான் சகஜமாகக் கேட்க முடிந்தது. என் கேள்வியையே அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் கண்கள் மட்டும் அசைந்தன. என்னை ஆராய்வதைப் போல உற்றுப் பார்த்தன. நான் மீண்டும் “தையல்நாயகிங்கறது நீங்கதானே?” என்று கேட்டேன். அவர் மேலும் நெருங்கிவந்து “ம்?” என்று என்பக்கம் செவியைக் கொடுத்தார். என் கேள்வியை மறுபடியும் நான் கேட்கவேண்டியதாக இருந்தது.

“என் சின்னப்புள்ளைதான் இங்க கொண்டாந்து உட்டுட்டுப் போனான். அப்புறமா வரவே இல்ல”

தொடர்பில்லாமல் பேசியபடி அவர் உள்ளே திரும்பினார். அவரைத் தொடர எனக்கு அச்சமாக இருந்தது. அதைத் தள்ளி வைத்துவிட்டுத்தான் நான் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றேன்.

இல்லம் மிகவும் தூய்மையாக இருந்தது. டெட்டால் மணம் கமழ்ந்தது. சுவரில் இயற்கைக் காட்சிகளின் ஓவியம் ஒருபுறமும் குழலூதும் கிருஷ்ணனின் படம் மறுபுறமும் ஒட்டப்பட்டிருந்தன. அப்பால் கம்பியிட்ட ஜன்னல். வெளிப்புறக் காட்சிகளும் மேகங்களும் அசையும் மரக்கிளைகளும் படம்படமாகத் தெரிந்தன. மறுபுறம் குளியலறையும் கழிப்பறையும் இருந்தன. ஜன்னலோரமாகவே கட்டில். மருந்து மேசை. மூலையில் தொலைக்காட்சிப் பெட்டி. என் உடல் பதறுவதை உணர்ந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடிவயிற்றில் குளிர்ச்சி பரவி உறைவதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்தபடியே நின்றேன். தோல் சுருங்கிய முகம். ஒடுங்கிய கன்னக் குழிகள். வெள்ளையாகப் புரண்ட நீண்ட கூந்தல் அள்ளிக் கொண்டையாகக் கட்டப்பட்டிருந்தது. பார்க்கப்பார்க்க அக்கண்கள் முதலில் ஊட்டிய அச்சம் கரைந்தது. குழப்பத்தையும் கலவரத்தையும் அவை வெளிப்படுத்துவதை உணர்ந்தேன். முதுமையின் சரிவும் தளர்ச்சியும் படிந்த உடல். காதுகளின் விளிம்பிலும் முன்நெற்றியிலும் வெண்முடி காற்றில் புரண்டு அலைபாய்ந்தஹ்டு. சட்டென என் பக்கமாக விரலை நீட்டி “நீங்க யாரு” என்று கேட்டார்.

”உங்க தங்கச்சி பையன் சந்திரனுக்கு சிநேகிதன் நான். சந்திரன் சந்திரன் தெரியுமில்ல..?”

சற்று சத்தமாகவே நான் சொன்னேன். ஆனால் என் ஒலிகள் எதுவும் கேட்காத உலகில் அவர் இருந்தது ஆச்சரியத்தைத் தந்தது. கட்டிலில் உட்கார்ந்தபடி உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டார். மேலுதடும் கீழுதடும் உட்குழிந்து காணப்பட்டன. கோடுகோடாக எழுந்த சுருக்கங்களின் நீட்சி உதடுகள் வரை தாக்கியிருந்தது.

“ஆறு ஆம்பளை புள்ளைங்க பெத்து என்ன பிரயோஜனம் சொல்லு. ஊரு உலகத்துல புள்ளைங்க தலையெடுத்து பெத்தவங்கள காப்பாத்தும்ன்னு பேரு. நான் பெத்ததுங்க எல்லாமே அதுக்கு நேர்மாறா போச்சிங்க. ஒவ்வொருத்தனா போவும்போது கடைசி பையன் பாத்துக்குவான்னு இருந்தேன். அவனும் இங்க கொண்டாந்து தள்ளிட்டு போயிட்டான். என் தங்கச்சி பையன் வெளிநாட்டுல இருக்கான். அவன்தான் இதுக்கான ஏற்பாடயெல்லாம் கவனிச்சிக்கறான்.”

”உங்க தங்கச்சி பையன் சந்திரன் சிநேகிதன்தான் நானு. அவர்தான் உங்கள பாத்துட்டு வரச்சொல்லி அனுப்பனாரு”

அவர் பதில் சொல்லவில்லை. என் சொற்கள் அவர் மூளையைத் தொடவே இல்லை என்று தோன்றியது. ஜன்னல் வழியே தெரியும் பனைமரங்களின் அசைவையே வெகுநேரம் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அவர் மௌனம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

“அந்தக் காலத்துல எங்களுக்கு பெரிய பலசரக்குக்கட இருந்திச்சி. வில்வண்டி வச்சிருந்தாரு அவரு. எங்க போனாலும் நாங்க அதுலதான் போவோம்.”

அவராகவே ஒரு கதையைத் திடீரென சொல்லத் தொடங்கினார். அவரைப் பெண்பார்க்க வந்தது, திருமணம் நடந்தது, செழிப்பான முறையில் நடந்த வியாபாரம், வரிசையாகப் பிறந்த பிள்ளைகள், சந்தையில் யார் பிடியையோ விலக்கிக் கொண்டு ஓடோடிவந்த எருதுகளின் முரட்டுத்தனமான தாக்குதலால் நேர்ந்த மரணம் என அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே போனார். பிறகு ஒரு கணம் நிறுத்தி “நீங்க யாரு?” என்றார். நான் நிதானமாக மறுபடியும் என்னைப்பற்றிய தகவல்களைச் சொன்னேன். அவர் கண்கள் என்மீது படிந்திருந்தனவே தவிர என் சொற்களைக் கேட்டுக்கொண்ட சுவடுகளே அந்த முகத்தில் தெரியவில்லை.

மருந்துமேசை மீது ஒரு புத்தகம் கிடந்தது. ஆசுவாசப் படுத்திக் கொள்ள அதை எடுத்துப் புரட்டினேன். அதுவரை நான் பார்த்திராத புத்தகம். வெறும் படங்கள். எல்லாமே தென்னாட்டுச் சைவத் திருத்தலங்கள். ஒருபுறம் குன்றும் மரங்களும் ஆறும் சூழ நிற்கிற கோயில்களின் கம்பீரத் தோற்றம். மறுபுறம் கருவறை நாயகரின் படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தது. கூடுதலாக சிற்சில பக்கங்களில் சில தூண்சிற்பங்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன.

“ஒங்கள நல்லா கவனிச்சிக்கறாங்களா இங்க? சந்திரனுக்கு ஏதாவது சொல்லணுமா?”

அவர் எவ்விதமான பதிலும் சொல்லவில்லை. என் மனம் அதிர்ச்சியில் உறையத் தொடங்கியது. ஒரு சிற்பத்தின் முன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் போல சங்கட உணர்வு எழுந்தது. நான் அவர் புருவங்களைக் கவனித்தேன். வெளுத்து வளைந்திருந்தன அவை. கண்கள் மட்டும் இமைத்தபடி இருந்தன.

சட்டென அவர் மறுபடியும் பேசத் தொடங்கினார்.

”அவருக்கு நான்னா ரொம்ப உசிரு. எங்க போய் வீட்டுக்குத் திரும்பிவந்தாலும் கையில பூ இல்லாம வரமாட்டாரு. சமையக்கட்டுக்கு வந்து அவரு கையாலியே தலையில வச்சிட்டுப் போனாத்தான் அவருக்கு நிம்மதி. ஒருநாளு அவர் எனக்கு பூ வச்சிவிடறத என் மாமியார்க்காரி பாத்துட்டா. சம்சாரி இருக்கற எடமா, இல அவிசாரி இருக்கற எடமா இதுன்னு ஒரே சத்தம். எவளுக்காவது இங்க கண்ணியமா இருக்கத் தெரியுதா, தாசி மாதிரி கொண்டை போட்டு பூ வச்சிட்டு திரியறாளுங்கன்னு பேசிட்டே இருந்தா. அவரு உடனே பின்பக்கமா போயிட்டாரு. நா சத்தம் காட்டாம அடுப்பு வேலையை கவனிச்சிக்கிட்டிருந்தேன். அதுலயும் ஒரு குத்தம் கண்டுபிடிச்சி பேச ஆரம்பிச்சிட்டா. என்ன நெஞ்சழுத்தம் பாரு இவளுக்கு. எப்ப எப்பன்னு அலையறா வெறிபுடிச்ச கழுதன்னு சொல்லிட்டே உள்ள வந்தா. வந்து என் தலையில இருந்த பூவை புடுங்கி எரியற அடுப்புல போட்டுட்டா”.

அவர் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் பறித்துத் தீயிலிட்ட பூ இன்னும் தன் கண் முன்னால் எரிந்து வதங்குவதைப் போல தேம்பித் தேம்பி அழுதார். உதடுகள் கோணிக்கொள்ள அவர் அழுத கோலத்தை ஏறிட்டுப் பார்க்கமுடியவில்லை. சங்கடமாக இருந்தது. அழுகையின் உச்சத்தில் அவர் சொன்ன சொற்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மிக அருகே இருந்தாலும் யாராலும் எளிதில் நெருங்கித் தொட்டுவிடமுடியாத காலத்தின் விளிம்பில் இருப்பதை உணரமுடிந்தது. எங்கோ பார்வை நிலைகுத்த சுவரில் சாய்ந்துகொண்டார். தேம்பலால் அவள் நெஞ்சு தூக்கித்தூக்கிப் போட்டது. கழுத்து நரம்புகளும் நெஞ்சுக்குழியும் நெளிந்தன. அவற்றின் அசைவுகள் என் சங்கட உணர்வை மேலும் மேலும் அதிகரித்தன. மீண்டும் அவர் முகத்தைப் பார்த்தேன். முன் குவியலுக்கிடையே தவறிவிழுந்த கண்ணாடித் துண்டுகளைப் போல அவர் கண்கள் பளிச்சிட்டன. நாக்கைச் சுழற்றி உதடுகளை மற்றொருமுறை ஈரப்படுத்திக் கொண்டார்.

கண்ணீரும் அச்சமும் நிரம்பி அக்கண்களிலிருந்து என் பார்வையை விலக்க இயலவில்லை. பெரும் குற்ற உணர்வுடன் மூண்ட வேதனையால் என் தொண்டை இறுகி உலர்ந்து போனது. எழுந்து அவரை நெருங்கித் தொட்டு ஆறுதல் சொல்ல நினைத்தேன். மறுகணமே அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு பின்வாங்கினேன். சந்திரனைப்பற்றிய நினைவுகளை அவர் மனத்தில் எழுப்பமுடியாத தோல்வியுணர்வு ஒருபுறம் அரித்தபடி இருந்தது.

அந்த உட்கூடம், ஜன்னல், திரைச்சீலை, சுவரோவியங்கள், கழிப்பறைக் கதவுகள், தென்னாட்டுச் சைவத் திருத்தலங்கள் புத்தகம் என ஒவ்வொன்றின் மீதும் தயக்கத்துடன் என் பார்வை படர்வதையும் பெருமூச்சுடன் எழுந்திருப்பதையும் நடக்கத் தொடங்குவதையும் அவர் கண்கள் கவனித்தபடியே இருந்தன. நான் கதவை நெருங்கும்வரை கூட அவர் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென ஒருகணம் கண்களை இமைத்து என்னை நோக்கி “நீங்க யாரு?” என்று கேட்டார். அக்கேள்வியால் என் உடல் குறுகிச் சிலிர்த்தது. சில நொடிகள் கதவில் சாய்ந்தபடி அக்கண்களைப் பார்த்தேன். அந்த இல்லங்களின் ஒவ்வொரு ஜன்னல்களிலும் தென்பட்ட கண்களையெல்லாம் மறுபடியும் எண்ணிக்கொண்டேன். ஒருகணம் கூட என்னால் அங்கே நிற்க முடியவில்லை. வேகவேகமாக இல்லத்தைவிட்டு வெளியேறினேன். கச்சிதமாக வளைந்து நீளும் சாலைகளையும் புல்வெளிகளையும் நீரூற்றுகளையும் தாண்டி நுழைவாயிலைக் கடந்து தரையில் கால்வைத்த பிறகுதான் சீராக மூச்சுவிட முடிந்தது. என் வேதனையைச் சந்திரனுக்குத் தெரியப்படுத்தும் விதத்தைப் பற்றிய கவலையை முதன்முதலாக உணர்ந்தது மனம்.

– தீராநதி, ஏப்ரல் 2004. சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)

ஆசிரியர் =====>சுட்டி<======

பாவண்ணன் (பாஸ்கரன், 1958). வளவனூர் சொந்த ஊர். கல்லூரி படிப்பை முடித்து பி எஸ் என் எல் லில் கோட்டப்பொறியாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். சிறுகதைகள், நாவல்கள், குழந்தை இலக்கியம், பாடல்கள் , கட்டுரைகள், ஆங்கிலம், மற்றும் கன்னட நூல்களின் மொழிபெயர்ப்பு என்று இவரது படைப்புகளின் பட்டியல் நீள்கிறது. 2005 இல் சாஹித்திய அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றிருக்கிறார். 

தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

ஆசிரியரின் வலைத்தளம் ====>https://writerpaavannan.blogspot.com/

=======>கதையின் சுட்டி<=======


============================================================================================


சற்றே நேரம் கடந்து ஒரு பிற்சேர்க்கை...   என்னுடைய Face Book Memories பகுதியில் இன்று காலை பார்த்து, இன்றைய கதையுடன் சற்றே சம்பந்தப் பட்டிருப்பதால் இதைச் சேர்க்கிறேன்.  = ஸ்ரீராம் 


தடுக்க முடியாது; தள்ளி போடலாம்!
'அல்சீமர்' என்னும் மறதி நோய் குறித்து கூறும், நியூராலஜிஸ்ட் டாக்டர் மாணிக்கவாசகம்:
"எல்லா மறதியும், அல்சீமர் என்று சொல்ல முடியாது. ஞாபக மறதி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். வைட்டமின், 'பி12' குறைபாடு, முக்கிய காரணம்.
எனவே, இந்த வைட்டமின் குறைபாட்டால் ஞாபக மறதி ஏற்படலாம். தொடர்ந்து இந்தக் குறைபாடு இருக்கும்போது, 30, 40 வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடும். வைட்டமின், 'பி12' டெஸ்ட் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.
அடுத்தது, தைராய்டு பிரச்னை காரணமாக ஒருவருக்கு ஞாபக மறதி ஏற்படலாம். அதனால், தைராய்டு பரிசோதனையும் நல்லது. அல்சீமர்ஸ் என்பது பரம்பரை நோய். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி யாருக்கேனும் அல்சீமர்ஸ் இருந்தால், அவர்களுக்கு அல்சீமர் வரலாம்.
அல்சீமர் நோய் உள்ளோர், அன்றாட வேலைகளை செய்து முடிக்க சிரமப்படுவர், கடினமாக உணர்வர்.
அதாவது, பழக்கப்பட்ட இடத்திற்கு வாகனம் ஓட்டிச் செல்வதில் சிரமம்; நிதி நிலைகளை சமாளிப்பதில் சிரமம்; விருப்பமான விளையாட்டின் விதிமுறைகளை நினைவுபடுத்திக் கொள்ள இயலாமை போன்றவை.
தேதி மற்றும் பருவ காலங்கள் குறித்த நினைவுகளை இழந்துவிடலாம். சில சமயங்களில் எங்கே இருக்கிறோம் அல்லது எவ்வாறு சென்றோம் என்பதையும் மறந்து போகலாம்.
அதேபோல், உரையாடலின் போது அவர்கள், இடையில் நிறுத்திவிடுவர் மற்றும் மேற்கொண்டு எவ்வாறு தொடர்வது என்று அறியாமல் இருப்பர் அல்லது சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பர். சரியான வார்த்தையைக் கண்டறிய சிரமப்படுவதுடன், பொருட்களை தவறான பெயர் சொல்லி அழைப்பர்.
ஆரம்ப அறிகுறியால் அல்சீமரை கண்டறிந்தாலும், மருந்து, மாத்திரையால் தள்ளிப் போடலாமே தவிர, முழுமையாகக் குணப்படுத்த முடியாது. எனவே, திட்டமிட்டே சில விஷயங்களை பின்பற்றினால், அல்சீமர்ஸ் வராமல் தடுக்க முடியும்.
புதிய மொழிகளை கற்றால், மூளையின் செயல்திறன் மேம்படும். எப்போதும் வலது கையால் செய்வதை, இடது கையால் செய்ய முயற்சிக்கலாம். உதாரணமாக, வலது கையில் எழுதினால், இடது கையால் எழுத முயற்சி செய்யலாம். தினமும் ஒரே பாதையில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்பவராக இருந்தால், மாற்றுப் பாதையில் சென்று வரலாம்.
சுடோகு, குறுக்கெழுத்துப் போட்டிகளில் கவனத்தை செலுத்தலாம். அதிகமான புத்தகங்கள் வாசிப்பதால், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். இதனால், ஞாபக மறதி வருவது தடுக்கப்படும்.
மேலும், அதிகமாக பழங்கள் மற்றும் வால்நட்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுப்பதால், மூளையின் செயல்திறனை மேம்படுத்தி, ஞாபக மறதியை தள்ளிப் போடலாம்.
2017 தினமலரிலிருந்து... நான் பகிர்ந்தது!

31 கருத்துகள்:

  1. மூன்று செய்திகளுமே நல்ல செய்திகள். முதல் செய்தி பிரமிப்பு. அது பெரிய விஷயம்.

    இரண்டாவது செய்தி மிக அருமையான செயலைச் செய்கிறார்கள் ராம்நகர் உணவகத்தார். உணவகங்களில் உணவின் விலை கூடிக் கொண்டே போகிறது. அதில் அவர்கள் இப்படி ஏழைகளுக்கு ஏழைகள் என்பதைவிட முதியவர்கள், மற்றும் பணம் கொடுத்து சாப்பிட முடியாதவர்களுக்கு உணவளிப்பது மிக நல்ல விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பெங்களூர்ல தண்ணிக் கஷ்டத்தைப் பார்த்தா அதுவும் பள்ளிகள் இப்ப ஆன்லைனாம்....ஐடி கம்பெனிகளும் , உணவகங்களும் கூட ஆன்லைன் வழி உணவு கொடுக்க ஆரம்பிச்சுருவாங்க போல! ஸ்விக்கி, ஜொமாட்டோவுக்கான காலம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஜெ கெ அண்ணா, முழுவதும் வாசித்தேன், சுட்டியில். கதை ரொம்பப் பெரிதாகத் தெரியவில்லையே அண்ணா. கிட்டத்தட்ட நீங்க இங்க எல்லாமே கொடுத்திருக்கீங்க.

    //சமீபகாலத்தில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் கனவுகள் அவரைப் பாடாய்ப்படுத்திவந்தன. விலங்குக்காட்சி சாலையில் நின்றிருந்தபோது அக்கூண்டுகளையும் முதியோர் இல்லங்களையும் சம்பந்தப்படுத்தி யோசித்த கணத்திலிருந்து அக்கனவு விரட்டத் தொடங்கிவிட்டது. பெரியம்மா பலவித விலங்குகளின் உருவத்துடன் ஒவ்வொரு முறையும் கனவில் வந்து கம்பிகளைப் பிடித்தபடி ஏக்கத்துடன் முறைத்துப் பார்ப்பதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. நினைத்தவுடன் விடுப்பெடுப்பது சாத்தியமாக இல்லை. //

    மனதைப் பிசைந்த வரிகள்.

    இப்படியான காட்சிகளை மனநிலை பிறழ்ந்தவர்களுக்கான மருத்துவமனைகளிலும் காணலாம். என்னை உலுக்கிய காட்சிகள் அவை. அதுவும் என் நெருங்கிய சொந்தம் ஒருவர் அப்படியான ஓர் அறையில் இருந்ததைப் பார்த்ததும் வாழ்க்கையைக் குறித்த என் பார்வையையே மாற்றிய தருணம். இது நான் சொல்வது 90களில். இப்போது அப்படி இல்லை என்றே நினைக்கிறேன். மருத்துவத் துறை வளர்ந்துவிட்டதே.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆரம்பமும் கதைக்குள்ளானது என்பது பின்னர்தான் புரிகிறது. அது கொஞ்சம் விவரம் போல் உள்ளது. நீங்கள் இங்கு அதை எடுத்துவிட்டுக் கொடுத்திருப்பதே கதைக்குப் போதுமானதாக இருக்கிறது போல் என் மனதில் பட்டது.

    கதை அல்ஜிமரால் பாதிக்கப்பட்ட முதிய பெண்மணி ஒருவரைப் பற்றி....அதில் ஒரு வரி அதுதான் இந்தக்கதையின் ஆழமான வரி.

    //சந்திரனைப்பற்றிய நினைவுகளை அவர் மனத்தில் எழுப்பமுடியாத தோல்வியுணர்வு ஒருபுறம் அரித்தபடி இருந்தது. //

    இதன் முன்னான பெண்மணியைப் பற்றிய வரிகள் மனதை என்னவோ செய்த வரிகள்.

    //அவர் மிக அருகே இருந்தாலும் யாராலும் எளிதில் நெருங்கித் தொட்டுவிடமுடியாத காலத்தின் விளிம்பில் இருப்பதை உணரமுடிந்தது. //

    சரியான தலைப்புதான், ஜெ கெ அண்ணா. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கால அளவுதானே இல்லையா?

    இந்த மூதாட்டி அவரது காலத்தின் விளிம்பில் இருக்கிறார். தொட்டு இழுத்துக் காப்பாற்ற முடியாத விளிம்பு இது. தொட்டாலும் கூட அது அதிர்ச்சியில் முடியலாம். அவர்களுக்குள் ஒரு பய உணர்வு இருக்கும். சிலர் கிட்டக் கூட நெருங்க விடமாட்டார்கள். அந்த பயத்தினால் அவர்கள் கொஞ்சம் violent ஆகக் கூட மாறும் நிலை ஏற்படும்.

    அல்ஜிமரால் பாதிப்படைந்த மறைந்த என் மாமனார் நினைவுக்கு வருகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கதை கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றாலும் நேரில் எங்கள் வீட்டிலேயே சில கண்டிருப்பதால் அனுபவமும் உண்டு என்பதால் பழகியதாகத் தெரிகிறது.

    முதல் முறையில் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்.

    இக்கதை இரு படங்களை நினைவுபடுத்துகிறது. தமிழில் ராதாமோகன் இயக்கிய 65 மாநிறம், மற்றும் மலையாளத்தில் தன்மாத்திரா படம். தன்மாத்திரா ரொம்பவே நல்லா எடுத்திருப்பாங்க இந்த பாதிப்பு குறித்து மிகவும் இயல்பான யதார்த்தமாக.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நாம் படித்து ரசித்த சிறுகதையை இங்கு பகிர்கிறோம். அதோட நம் கடமை முடிந்தது. வரவேற்பு இல்லைனு நீங்க ஏன் நினைச்சுக்கறீங்க? பல கதைகள் நல்லா இருக்கலாம், கருத்து எழுத்த் தோணும். சில, மனதில் தாக்கம் எழுப்பாமல் இருக்கும். கடந்து போகத் தோணும். அவ்வளவே.

    பலர், கருத்து எழுதினால் மறுமொழி கிடைக்குமா எனவும் நினைக்கலாம்.

    எழுதுவதே நல்லா இல்லை, அட்டுப் பகுதின்னா எபி ஆசிரியர்களே சொல்லிடப் கோறாங்க. அதனால் நாமே நினைத்து மனதைக் குழப்பிக் கொள்வது தேவையற்றது. அது நம் செயலைப் பாதிக்கும்.

    பதிலளிநீக்கு
  7. ஜெயகுமார் சார் பகிர்ந்த கதை மனதை மிகவும் உலுக்கிற்று. கதை த்த்ரூபமாக அந்த உணர்வை, முதியோர்களின் நிலையை உணரச் செய்யும் விதமாக இருந்தது.

    எத்தனையோ பேர்கள் மனக்கஷ்டத்தையும் உடல் கஷ்டத்தையும் அந்த ஆத்மா கொடுக்கும் மனவேதனையையும் (அவச் சொற்கள்) தாங்கிக்கொண்டு ஆத்மாவை வழியனுப்பி வைக்கிறார்கள். சிலர் ,அந்தக் கடமையைச் செய்யாதவாறு, அவர்கள் மனநிலையை ஆண்டவன் மாற்றிவிடுகிறான்.

    தன்னைப் பார்த்துக்கொள்ளவில்லை என்ற குறையைத் தவிர வேறு கெட்ட பெயர் வாங்கவேண்டாம், கோபத்தில் பேசும் அவச் சொற்களைச் சாபமாக்கிக்எஒள்ள வேண்டாம் என நினைப்பது சரியா, இது அவள் விதி, செய்வது நம் கடமை, நம் மனதில் தவறு இல்லை என்பதால் எதுவும் நம்மை பாதிக்காது என எண்ணுவது சரியா எனத் தெரியவில்லை, அல்லது மனது நமக்குத் தெரியவில்லை என்ற பொய்யை உண்மையாக நினைக்கச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  8. எந்த ஒரு கைவிடப்பட்ட அல்லது அல்லல்படுகின்ற அல்லது புறக்கணிக்கப்பட்ட வயதானவர்கள், பிறந்த போது தங்கள் பெற்றோர் உற்றார்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாயிருந்திருப்பார்கள். காலம் ஏன் அவர்களுக்கு இப்படிப்பட்ட விதியை வைத்திருந்திருக்கிறது?

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு ஜன்னல் பக்கத்திலும் இரு கண்கள்... என்று ஒவ்வொரு விவரத்திலும் அந்த இடத்துக்கே நம்மை அழைத்துப் கோகிறார் கதை ஆசிரியர். மனதை உலுக்கும் கதை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சாரின் ஊக்கத்திற்கு நன்றி. பின்னூட்டக்குறைவைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. இத்தனை நாள் எப்படி இப்பகுதியை கொண்டு சென்றேன் என்ற ஆச்சர்யம் மட்டுமே உள்ளது. நன்றி
      Jayakumar

      நீக்கு
  10. சற்றே நேரம் கடந்து ஒரு பிற்சேர்க்கை... என்னுடைய Face Book Memories பகுதியில் இன்று காலை பார்த்து, இன்றைய கதையுடன் சற்றே சம்பந்தப் பட்டிருப்பதால் இதைச் சேர்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. @கீதா

    ஆசிரியர் மிருகக் காட்சி சாலையையும், முதியோர் இல்லங்களையும் மறைமுகமாக ஒப்பிட்டு எழுதியுள்ளார். அதற்காகவே தனித்தனி குடில்கள் உள்ள இல்லத்தைத் தேர்ந்திருக்கிறார். எப்படி மிருகக்காட்சி சாலைக்குள் செல்லும்போது நம்மை மிருகங்கள் பார்க்குமோ அதே போல் அதே போல் குடிலில் உள்ள முதியோர்களும் பார்க்கின்றனர்.
    கதையின் வரிகள் பலவும் மாறுபட்ட உண்மைகளை குறிப்பால் உணர்த்துகின்றன. உதாரணமாக

    //அவர் கண்கள் கவனித்தபடியே இருந்தன. நான் கதவை நெருங்கும்வரை கூட அவர் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென ஒருகணம் கண்களை இமைத்து என்னை நோக்கி “நீங்க யாரு?” என்று கேட்டார்.//

    கண்களை இமைத்து என்ற சொற்தொடர் தையல்நாயகி அம்மாள் வந்திருப்பவரைப் பற்றி தெரிந்தாலும் தெரியாதது மாதிரி கேட்பதை சுட்டிக்காட்டுகிறது.
    இது போன்று பல உதாரணங்கள் உள்ளன.

    இதை எஸ்ரா சிறந்த கதையாக தேர்ந்ததில் ஆச்சர்யமில்லை.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர் கண்கள் கவனித்தபடியே இருந்தன. நான் கதவை நெருங்கும்வரை கூட அவர் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென ஒருகணம் கண்களை இமைத்து என்னை நோக்கி “நீங்க யாரு?” என்று கேட்டார்.//

      ஆமாம், இன்னும் குறிப்பிட வந்தேன்...இங்கு உங்கள் கருத்து பார்த்ததும் இடவில்லை.

      ஆமாம் அதனால்தான் அந்த மிருகக் காட்சிச் சாலையை ஒப்பிட்டது உலுக்கியது. வித்தியாசமான ஒப்பீடு.

      கண்டிப்பாக இதைத் தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பே. இதையும் கீழே குறிப்பிட வந்தேன்...கரன்ட் போய்விட்டது. இப்பதான் வந்தேன் உங்கள் கருத்துப் பார்த்துவிட்டதால் இங்கே சொல்லிவிடுகிறேன்

      கீதா

      நீக்கு
  12. @கீதா

    காலம் என்பதை ஆங்கிலத்தில் இரண்டு வகையாக மொழி பெயர்க்கலாம் ஒன்று time மற்றொன்று period. time முடிவற்றது. period துவக்கம், முடிவு உள்ளது. வாழ்க்கை என்பது ஒரு period தான்.

    ஆகவே இங்கு காலம் என்பது period என்ற முறையில் கையாளப்படுகிறது. ஆனாலும் தலைப்பு காலத்தின் விளிம்பில் என்பதற்கு பதிலாக வாழ்க்கையின் விளிம்பில் என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா ஆமாம் நீங்கள் சொல்லியிருப்பது புரிகிறது. முழுவதும் சரியே.

      காலம் என்பதற்கு முடிவு இல்லை. ஆங்கிலப் பொருளும் தெரிந்தத ஒன்று. Period என்ற வகைதான் இக்கதை... நீங்கள் பார்க்கும் கோணமும் புரிகிறது.

      நாம் தமிழில் டக்கென்று சொல்வது ...அவன் காலம் முடிஞ்சு போச்சுன்னு இல்லையா அப்படிப் பார்த்தேன் நான்.

      வாழ்க்கையின் விளிம்பில் என்றால் அவர் அவரது வாழ்வின் கடைசிக்கட்டத்தில் என்ற அர்த்தம் கொள்ளலாம் தான்,

      நான் பார்த்த கோணம் அல்ஜிமரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு time sense இருப்பதில்லை. எனவே அந்தக் கோணத்தில் பார்த்தேன், அண்ணா

      கீதா

      நீக்கு
  13. ஒவ்வொரு ஜன்னலிலும் இரு கண்கள் - அது மிகவும் வேதனை தந்த வரிகள்.

    ஸ்ரீராம், நீங்க இதை முன்னர் பகிர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. வியாழன் பதிவிலும். நல்ல தகவல்கள்

    //அல்சீமர் நோய் உள்ளோர், அன்றாட வேலைகளை செய்து முடிக்க சிரமப்படுவர், கடினமாக உணர்வர். //

    ஆமாம் இதுதான் வித்தியாசம் சாதாரணமாக ஏற்படும் மறதிக்கும், இதற்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரு ஜன்னலிலும் இரு கண்கள் - அது மிகவும் வேதனை தந்த வரிகள்.

    ஸ்ரீராம், நீங்க இதை முன்னர் பகிர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. வியாழன் பதிவிலும். நல்ல தகவல்கள்

    //அல்சீமர் நோய் உள்ளோர், அன்றாட வேலைகளை செய்து முடிக்க சிரமப்படுவர், கடினமாக உணர்வர். //

    ஆமாம் இதுதான் வித்தியாசம் சாதாரணமாக ஏற்படும் மறதிக்கும், இதற்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியர் பற்றியும் அறிந்து கொண்டேன் புதிய அறிமுகம். பெங்களூரில் இருக்கிறார் என்று நீங்கள் குறிப்பிட்டதிலிருந்து தெரிகிறது. அவரது மற்ற கதைகளையும் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

      இயற்கையே இன்னும் ஒரு 24 மணி நேரம் கூடுதலாகத் தரக் கூடாதா பகல் நேரமாக!!

      கீதா

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. மூன்று செய்திகளும் நல்ல செய்திகள் தான்.வேரோடு வெட்டி வீழ்த்திய மரங்களை மீண்டும் நட்டு பராமரிப்பது மகிழ்ச்சியான விஷயம்.
    இல்லாத வர்களுக்கு பசி என்று வந்தால் ரசசாதம் இலவசமாக வழங்கும் நல்ல உள்ளம் வாழ்க!

    பதிலளிநீக்கு
  17. கதை படித்து முடித்ததும் மனம் கனத்து போனது.
    ஆதரவற்றோருக்கு அல்சீமர் நோய் கொடுமை.

    //ஒவ்வொரு ஜன்னலில் பக்கத்திலும் இருகண்கள். //
    குழந்தைகளின் வருகைக்கு காத்திரத்த கண்களோ!

    //என்ன நெஞ்சழுத்தம் பாரு இவளுக்கு. எப்ப எப்பன்னு அலையறா வெறிபுடிச்ச கழுதன்னு சொல்லிட்டே உள்ள வந்தா. வந்து என் தலையில இருந்த பூவை புடுங்கி எரியற அடுப்புல போட்டுட்டா”.//

    இப்படியும் பெண்கள்! மகன், மருமகள் நன்றாக வாழ்வதை சந்தோஷமாக பார்க்க முடியத மனம் என்ன மனம்?
    இப்போதும் இப்படி நடப்பதை கேள்வி படுகிறோம்.அதனால் பிரிவினைகள் வருகிறது.

    வயதான பின்னாலும் அந்த நினைவுகள் அவருக்கு இருக்கிறது.


    //என் தங்கச்சி பையன் வெளிநாட்டுல இருக்கான். அவன்தான் இதுக்கான ஏற்பாடயெல்லாம் கவனிச்சிக்கறான்.”//

    சந்திரன் நண்பர் தான் சந்திரன் அனுப்பி வந்து இருப்பதை உணர்த்த முடியவில்லை என்றாலும் பெரியம்மாவின் நினைவுகளில் சந்திரன் இருக்கிறார். அது போது.

    கதை படித்து முடித்தவுடன் இறைவா யாருக்கும் இந்த அல்சீமர் நோயை கொடுக்காதே என்று வேண்டி கொள்ள தோன்றுகிறது. இறக்கும் வரை நல்ல நினைவுகளுடன் இருக்க பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  18. அல்சீமர்' என்னும் மறதி நோய் குறித்து கூறும், நியூராலஜிஸ்ட் டாக்டர் மாணிக்கவாசகம் அவர்கள் கட்டுரை பகிர்வு மிகவும் உபயோகமான பகிர்வு ஸ்ரீராம். நன்றி.

    பதிலளிநீக்கு
  19. நெடுஞ்சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் நகர அதிகாரிகள் முதலில் முடிவெடுத்து முனைந்து செய்வது அழிவுச்செயலை. தழைத்து நிற்கும் வயதான மரங்களை இஷ்டத்துக்கும் வெட்டிச் சாய்ப்பது. அவர்களுக்கு அதில் அலாதி இன்பமோ என்று நான் நினைத்ததுண்டு. தமிழ்நாட்டில் ஒருவர் முயன்று அவைகளை இடம்பெயர்த்து மறுவாழ்வு கொடுத்திருக்கிறார். அவர் குலம், கொற்றம் எல்லாம் தழைத்து வாழ்க.

    பதிலளிநீக்கு
  20. செய்திகள் அனைத்தும் அருமை. பசியுடன் இருப்பவரகளுக்கு உணவு. மரங்களுக்கு மறு வாழ்வு, மிக அருமையான செய்திகள்.

    இளம் பெண் ஏ ஐ பிரஞ்சலி அவஸ்தி க்கு வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. கதை மனதை தொட்டது. இப்படித் தனிமைப்பட்டுப் போகும் வயதானவர்கள் அவர்கள் வாழ்வதே கடந்த கால நினைவுகளுடன் தான். அதைச் சொல்ல யாராவது கிடைத்தால் அது அவர்களுக்குப் பேரின்பம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படித் தனிமைப்படும் போது வருத்தத்திலும் யாருமே அவர்களுடன் பேசுவதற்கு இல்லை என்பதாலும், மற்றவர்கள் பேசுவதைக் கவனிக்கவோ உள்வாங்கவோ கூட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். யாரையேனும் பார்க்கக் கிடைக்கும் போது மனதில் உள்ளதை நினைவலைகளில் அப்போது இருப்பதைக் கொட்டுவதை மட்டுமே அவர்களால் செய்யக் கூடிய ஒன்றாய் ஆகிப் போகிறது. மறதி வந்தாலே இப்படித்தான் அதிலும் மறதி நோய் வந்தால் ரொம்பவே கடினம்தான். மனதைத் தொட்ட ஒரு கதை. இப்படிப்பட்ட சூழல்களில் வாழும் முதியோர்கள் நிறைய இப்போது. மனது வலிக்கத்தான் செய்கிறது.

    பகிர்ந்த ஜெயகுமார் சந்திரசேகரன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. மூன்று செய்திகளும் நன்று. மரங்களுக்கு மீள் உயிர், உணவளிப்பது சிறபானது.

    கதை மனதை நெருடுகிறது.
    அல்ஜீமர் நோய் மிகுந்த துயரம்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. மரங்களின் நலவாழ்வு மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.

    இன்றைய கதைப்பகிர்வை படிக்கையில் மனது வேதனையுறுகிறது. ஆதரவற்ற முதியவர்களுக்கு இப்படியும் ஒரு நோயின் தாக்குதல் அவசியமா..! என மனதுக்குள் ஒரு சங்கடம் உண்டாகிறது. . இறைவா..! இது கதையாகவே போகட்டும். நிஜ வாழ்வில் யாரையும் இப்படி துன்புறுத்தாதே என்ற பிரார்த்தனைகளோடு கலங்கிய கண்களுடன் நானும் படித்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  24. சுஜாதா சொல்வார். கதை என்பது படித்தவரின் மனதில் ஒரு நெருடலையாவது உண்டாக்க வேண்டும். இந்தக்கதை படிப்பவரின் மனதை மிகவும் பாதித்திருக்கிறது என்பது புரிகிறது. அதுவே கதையின் சிறப்பு.
    கதையைப் படித்து கருத்துக்களை பகிர்ந்தவர்கள் யாவருக்கும் நன்றி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  25. பாவண்ணன் அருமையான சிறுகதை எழுத்தாளர். இலக்கிய விமர்சகர் வெ.சா.வின் இரங்கல் கூட்டத்தின்போது பெங்களூரில் சந்தித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. இந்த வாரத்தின் சனிக்கிழமை செய்திகள் அனைத்தும் சிறப்பு. பசித்தவர்களுக்கு உணவளிக்கும் உணவகம் - நல்ல விஷயம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!