சனி, 23 மார்ச், 2024

விதைக்காமலே அறுவடை செய்த விவசாயி மற்றும் நான் படிச்ச கதை

 


========================================================================================================================


======================================================================================================




=============================================================================================================



 ==========================================================================================================

JKC பக்கம்


நான் படிச்ச கதை

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…

 கதையாசிரியர்: ஆதவன் தீட்சண்யா


எஸ். எம். இரவிச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா - Aadhavan Dheetchanya (பிறப்பு: 6 மார்ச் 1964). தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். கவிஞர், எழுத்தாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார். புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் மதிப்புறு ஆசிரியராகவும் செயல்பட்டார்.

முன்னுரை

கதை என்றாலே கற்பனை என்றுதான் பொருள். என்றாலும் ஒரு சிறிய உண்மை நிகழ்ச்சி அல்லது கருத்தின் அடிப்படையில் தான் சிறுகதைகள் அமையும். அப்படி இல்லாமல்  முழுவதும் கற்பனையாக அமையும் சிறுகதைகளில் ஒன்றே இக்கதை.

நாடாளுமன்ற உறுப்பினர்களாக கழுதைகளும் நாய்களும் தேர்ந்தெடுக்கப்டுவதாக கதை அமைந்திருக்கிறது. முதலில் கழுதைகளும் நாய்களும் வாக்காளர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் வேட்பாளர் ஆக நிற்க முடியும். கற்பனையில் அல்லாமல் இவ்வாறு நடக்க வழியில்லை.

ஆனாலும் இப்பகுதியில் முன்பே வாசித்த தைவாதர்சனம் போன்று நகைச்சுவை மிக்க கற்பனைக் கதையாய் இக்கதை அமைந்ததால் இங்கு தருகிறேன்.

ஆசிரியர் எழுதிய நீண்ட கதையின் ஒரு சில பகுதிகளை மட்டும் மாலையாகக் கோர்த்து வாசித்தால் புரியும் வண்ணம் சுருக்கமாக இங்கு தரப்பட்டுள்ளது. முழுக்கதையின் சுட்டி கடைசியில் சேர்க்கப் பட்டுள்ளது. கண்டிப்பாக சுட்டியில் சென்று வாசியுங்கள். 

கதை சிறுகதைகள் தளத்தில் 2012 இல் பதிக்கப்பட்ட ஒன்று. ஆனாலும் இக்கால கட்டத்திற்கும் மிகவும் பொருந்தும். இக்கதையை வாசித்தபோது J  மற்றும் K யை தலைவர்களாக கற்பனை செய்து வாசித்தேன். 

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…

ஆதவன் தீட்சண்யா

Extract


இந்தத் தேர்தலில் கழுதைகளும் நாய்களும் போட்டியிடப் போவதாக முதலில் செய்தி வந்தபோது, அது சுயேட்சை வேட்பாளர்கள் சிலருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பற்றிய செய்தியாக இருக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். அதற்கப்புறம் வேட்பாளர்களே கழுதைகளும் நாய்களும்தான் என்று தெரிந்தபோது தேர்தல் பரபரப்புக்காக யாரோ குசும்புக்காரர்கள் கிளப்பிவிட்டிருக்கும் வதந்தியாக இருக்கக்கூடும் என்று மறந்துபோனார்கள். ஆனால், தேர்தல் ஆணையத்தால் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் ஏழு நாய்களும் ஏழு கழுதைகளும் இடம் பெற்றிருந்ததைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி எளிதில் மீளக்கூடியதாயில்லை. மனிதர்கள் போட்டியிடும் தேர்தலில் மிருகங்களா என்ற குழப்பமே இன்னும் நீங்காத நிலையில் அவை வெற்றியும் பெற்றுவிட்டன என்றால் யார்தான் இயல்பாக இருக்க முடியும்? அதுவும் எதிர்த்துப் போட்டியிட்ட எல்லா வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கவைத்துவிட்டு வெற்றி பெற்றுள்ளன என்றால்?

லிபரல்பாளையத்தில் இருக்கிற இரண்டு தலைவர்களின் தனிப்பட்ட அகந்தையாலும் வாய்க்கொழுப்பாலும் வந்த வினைதான். தனக்குள்ள செல்வாக்கை மிகைப்படுத்திக் காட்ட ‘நான் பார்த்து ஒரு கழுதையை நிறுத்தினாலும் இந்த மக்கள் அதற்குதான் ஓட்டுப் போடுவார்கள்’ என்று அ கட்சியின் தலைவர் சொன்னதை வெறும்பேச்சாய் கருதி விட்டுவிட்டிருக்கலாம்.

‘எனக்கு மட்டும் செல்வாக்கில்லையா… என்னை லேசுப்பட்டவனென்று நினைத்துக்கொண்டாயா நீசனே, நான் பார்த்து ஒரு நாயை கைகாட்டினாலும் மக்கள் அந்த நாயைத்தான் ஜெயிக்கவைப்பார்கள்’ என்று ஆ கட்சியின் தலைவரும் தன்பங்குக்கு எகிறி அங்கு ஒரு போட்டியை உருவாக்கிவிட்டார். கடைசியில் உன்னால் முடிந்தால் நிறுத்திப் பார்? என்று ஒருவருக்கொருவர் சவால் விட்டு நிலைமையை முறுக்கேற்றி இவ்வளவு சிக்கலாக்கிவிட்டிருந்தார்கள்.

பகிரங்கமாக சவால்விட்டுவிட்டாலும் அ கட்சித்தலைவருக்கு அவ்வளவு எளிதாக கழுதைகள் கிடைத்துவிடவில்லை. கழுதைகூட குட்டியில் அழகாய்த்தான் இருக்கும் என்று சொல்லப்படுவதால் வாக்காளர்களை எளிதாக ஈர்க்க குட்டிக்கழுதைகளைத் தேடியலைந்தார். எங்கும் கிடைக்காத நிலையில், சினைப்பட்டிருந்த கழுதைகளுக்கு சிசேரியன் செய்து குட்டியை வெளியே எடுத்து வேட்பாளராக்கிவிடலாமா என்றும்கூட யோசிக்குமளவுக்குப் போய்விட்டார்.

 பத்துப்பிள்ளைகளை பெற்றதற்கு பதில் சில கழுதைகளையாவது பெற்றிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ மனைவி மீது எரிந்துவிழுந்தார். அதுக்கு நீ கழுதையா இருந்திருக்கணும்யா என்று அந்தம்மாவிடம் வசை வாங்க வேண்டிதாயிற்று. (மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்?)

அவசரப்பட்டு கழுதையை நிறுத்துவதாக சொல்லிவிட்டு இப்படி இம்சைப்பட வேண்டியிருக்கிறதே என்று தலைவர் தன்னையே நொந்துகொண்டார். ஒன்றிரண்டு கழுதைகளை வைத்திருந்த சலவைத் தொழிலாளர்கள் ‘எங்கப் பொழப்புல மண்ணள்ளிப் போட்டுராதீங்க…’ என்று மறுத்துவிட்டார்கள். கட்சி, அதிகாரம் என்ற அஜால் குஜால் ஜம்பமெல்லாம் அவர்களிடம் பலிக்கவில்லை. கடைசியில் ஒவ்வொரு குட்டிச்சுவராய்த் தேடி கேட்பாரற்று புரண்டு கொண்டிருந்த ஏழு கழுதைகளை இழுத்துவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

ஆ கட்சித்தலைவருக்கோ வேறுமாதிரியான சிக்கல் இருந்தது. அவர் வீட்டிலேயே பத்து நாய்கள் வளர்ந்து வந்தாலும் அவற்றை தேர்தலில் நிறுத்துவதில் சங்கடமிருந்தது. வாரீசு அரசியல் நடத்திக் கொண்டிருப்பதாக அவர்மீது ஏற்கனவே உள்ள குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் எந்தக் காரியத்தையும் இந்தத் தேர்தலில் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே ஏதாவது சில பதவிகளை ஆக்கிரமித்திருந்த நிலையில், நாய்களென்றாலும் அவர் வீட்டு நாய்கள்தானா என்று கட்சிக்குள்ளேயும் அதிருப்தி உருவாகும் வாய்ப்பிருந்தது. அதற்காக கட்சியின் பிறதலைவர்களது வீட்டு நாய்களுக்கு சீட் கொடுக்கவும் அவருக்கு மனமில்லை. எனவே தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஏழுநாய்களை தரதரவென இழுத்துவரச் செய்து விஷமுறிவு ஊசிகள் பலவற்றை அவற்றுக்கு ஏற்றி ஆபத்தானவையல்ல என்று உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு வேட்பாளர்களாக அறிவித்தார்.

கழுதையை எதிர்த்து நாய் என்று நிறுத்தப்பட்டிருந்தால்கூட அது இரண்டு விலங்குகளுக்கிடையிலான போட்டி என்ற அளவில் சமதையானதாக கருதப்பட்டிருக்கும். ஆனால் கழுதைகள் நிற்கிற தொகுதிகளை கவனமாக தவிர்த்துவிட்டு வேறு ஏழு தொகுதிகளில் நாய்களை நிப்பாட்டியிருந்தார் ஆ கட்சித்தலைவர்.

இது மற்ற தொகுதிகளில் நடப்பதுபோல வெறுமனே எத்தனை வாக்குகள் என்கிற எண்ணிக்கை விளையாட்டல்ல, தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கை நிறுவிக் காட்டும் யுத்தம் என்று ஊடகங்கள் வர்ணித்து உசுப்பேற்றின. எனவே இரண்டு தலைவர்களும் தத்தமது மான அவமான கௌரவப்பிரச்னையாகக் கருதி இந்த 14 தொகுதிகளிலேயே தேர்தல் முடியும்வரை முகாமிட்டிருந்தார்கள். தலைவர்கள்

தொண்டர்கள் தம்மை கழுதையாகவோ நாயாகவோ பாவித்துக்கொண்டு நாலுகாலில் நடக்கத்தொடங்கினர். தலைவர்கள் காரில் போகும்போது சக்கரத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதில் அவர்களுக்கு பயிற்சியிருந்தாலும் இப்படி குனிந்து நடந்து பழக்கமில்லை. முதுகுத்தண்டில் வலி தெறித்தது.

அ கட்சி தொண்டர்கள் கனைத்தும் காகிதம் தின்றும் சாம்பலில் புரண்டும் தாங்களும் கழுதைகள்தான் என்று நிரூபிக்க முயன்றுகொண்டிருந்தனர். ஆ கட்சியினரும் சளைத்தவர்களில்லையே? அவர்கள் கம்பத்தைக் கண்டுவிட்டால் உடனே காலைத்தூக்கிக் கொண்டு… தாங்களும் நாய்தான் என்று நம்பவைக்க பாடாய் பட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த வேட்பாளர்களும் கட்சிக்காரர்களும் செய்த சேஷ்டைகளைக் கண்டு ஊர்உலகமே சிரித்தது.

 லிபரல்பாளையம் மக்கள் யார் பக்கம் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலில் கொள்கை கொத்தவரங்காய் என்றெல்லாம் பம்மாத்து செய்யாமல், ‘இந்தியாவின் திருமங்கலம் பாணியையும்’ அ, ஆ இரு கட்சிகளுமே கையாண்டன.

 கழுதை ஜெயித்தால் காலை மாலை இருவேளையும் குடும்பத்துக்கு ஒரு லிட்டர் கழுதைப்பால் இலவசமாக தரப்படும். மருத்துவ குணம் நிறைந்த அதை நீங்கள் குடிக்கலாம் அல்லது உலகப்பேரழகி கிளியோபாட்ரா போல் அதில் குளிக்கலாம் என்ற வாக்குறுதி வாக்காளர்களிடம் வெகுவாக எடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆ கட்சி தலைவர் மனதில் வேறு கணக்குகள் ஓடின. எப்போதும் கும்பலாகவும் கோஷ்டியாகவும் புடைசூழ அலைகிற குணம் ஏற்கனவே நாய்களுக்கிருப்பதால் அவை அரசியலுக்கு வந்தது வெகு இயல்பானதுதான் என்பது அவர் கருத்து. யாரைக் குதற வேண்டும் யாரிடம் குழைய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கும் இந்நாய்கள் அரசியலுக்குள் லாவகமாகப் பொருந்திவிடும் என்பதும் அவரது யூகம். கறியை நாம் தின்றுவிட்டு எலும்பை மட்டும் வீசினாலேயே வாலாட்டுகிற இந்த நாய்களை எம்.பியாகவும் ஆக்கிவிட்டால் அவை காலகாலத்துக்கும் விசுவாசமாய் இருக்கும் என்பதும் அவருக்கு உவப்பாயிருந்தது

இரவானால் கிளம்பிவிடுகிற கழுதைப்படை, அ கட்சியின் சுவரொட்டிகளை மட்டும் கவனமாக தவிர்த்துவிட்டு பிறகட்சிகள் ஒட்டிவிட்டுப் போகிற விளம்பர சுவரொட்டிகள் அனைத்தையும் விடிவதற்குள் தின்று தீர்த்துவிடும் உத்தியைக் கையாண்டன. சுவற்றில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்கள் மீதும் கழுதைகள் உரசிஉரசி இருந்தே சுவடே தெரியாமல் அழித்துவிட்டதால் இந்த ஏழு தொகுதிகளிலும் பிற வேட்பாளர்களின் சின்னங்களே தென்படவில்லை.

நாய்களும் சளைக்கவில்லை. பிற வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வரும் தொண்டர்களை தெருமுக்கிலிருந்தே துரத்தி அடுத்தத்தெருவுக்கு விரட்டியடிப்பது, அடுத்தத்தெருவிலிருக்கும் இன்னொரு குழு அதற்கடுத்த தெருவுக்கு விரட்டுவது என்கிற மிக முக்கியப் பொறுப்பை தெருநாய்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுத்தின. சும்மாவே தெருத்தெருவாய் மூச்சிரைக்க நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஓடித் திரிந்த இந்தத் தெருநாய்களுக்கு, இப்போது ஒரு நோக்கத்தை முன்வைத்து ஓடுவதில் சற்றே பெருமிதமும் இருந்தது.

ஆனால் இவை மட்டுமே கழுதைகளும் நாய்களும் வெற்றிபெறும் சூழலை உருவாக்கிவிடவில்லை. அறுபதாண்டுகளாக ஓட்டுப்போட்டு சலித்துப் போயிருந்த மக்களின் மனநிலையே உண்மையில் இதில் பெரும் பங்கு வகித்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தக்கப்பாடம் புகட்டிவிட வேண்டும் என்று காத்திருந்த மக்கள், கழுதைகளும் நாய்களும் போட்டியிடுவதை பயன்படுத்திக் கொண்டு ஒரு மௌனப்புரட்சியை நிகழ்த்தத் தயாராகிவிட்டிருந்தார்கள். ஒரு மாறுதல் வேண்டும் என்று மக்களுக்கு தோன்றிவிட்டால் அவர்கள் கழுதையா குதிரையா என்று பார்ப்பதில்லை என்பதுதான் லிபரல்பாளையம் தேர்தல் களம் தெரிவிக்கும் செய்தியாக இருந்தது.

அ கட்சித்தலைவர். அவர் நாயை ஜெயிக்கவைத்து நாடாளுமன்றம் அனுப்பினாலும் அது லொள்ளென்றுதான் குரைக்கும் என்று ஏளனம் பேசுகிறார். அவர் நிறுத்தியிருக்கிற கழுதை மட்டும் ‘மாண்புமிகு சபாநாயகர் அவர்களே’ என்று பேசவா போகிறது? இது குரைக்குமென்றால் அது கனைக்கும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் ஐந்து வருடத்தில் ஒரு கேள்வியும் கேட்காமல் நாற்காலியை தேய்த்துவிட்டு வருகிற இந்தக் கட்சிகளோட எம்பிக்களைவிடவும் இப்படி குரைத்துவிட்டும் கனைத்துவிட்டும் வருகிற நாயும் கழுதையும் மேல்தானே?.

கத்தை கத்தையாக கவிழ்த்துக் கொட்டினாலும் எந்த ஒரு கழுதையும் கட்சி மாறாது. அந்தந்த வேளைக்கு தேவையானதைத் தவிர அடுத்தவேளைக்காகக்கூட எதையும் பதுக்கிவைக்காது. ஏழேழு தலைமுறையும் உட்கார்ந்து சாப்பிடுவதற்காக பினாமிப் பெயரில் அமுக்கி வைக்கவும் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கவும் ஒரு கழுதைக்கும் தெரியாது. தன் குடும்பத்து குஞ்சுகுளுவான்களுக்கெல்லாம் பதவி கொடுத்து கட்சியை கம்பனி மாதிரி நடத்தாது. காண்ட்ராக்ட் எடுப்பது கமிஷனடிப்பது என்பதெல்லாம் அறியாத இந்த அப்பாவிக் கழுதைகளைப் போலதான் நாய்களும். வாய் கொள்ளும் அளவே நாய் கொள்ளும். கவ்விக் கொண்டு போக முடியாத சைசில் நீங்கள் அமிழ்தத்தையே உருண்டை பிடித்துக் கொடுத்தாலும் அது சீண்டாது. ஆத்து நிறையத் தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும். இவர்களைப்போல குழாய் போட்டு உறிஞ்சியெடுக்காது அல்லது பாட்டிலில் அடைத்து விற்காது’’.

– இப்படி, தலைவர்கள் கொழுப்பெடுத்துப் போய் கழுதைகளையும் நாய்களையும் நிறுத்தினார்கள் என்றால் அதையே தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதென்ற மக்களின் தந்திரத்தால் ஏழு கழுதைகளும் ஏழு நாய்களும் எம்பிக்களாகி விட்டிருந்தன. முதன்முறையாக நாடாளுமன்றம் செல்லவிருக்கும் தம்மினத்தின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தன தெருநாய்களும் கழுதைகளும்

விரைவில் அடுத்தத் தேர்தல் வருகிறது என்று சொல்லப்பட்டதற்கு காரணம் இல்லாமலில்லை. எந்தக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிட்டாமல் தொங்கு பாராளுமன்றம் உருவாகிவிட்டிருந்தது. அ, ஆ என்கிற இரண்டு பெரிய கட்சிகளுக்கும் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சீட் கிடைக்கவில்லை. இவற்றின் தலைவர்கள் 14 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தியதை நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு மற்ற கட்சிகள் கூடுதலாக சில இடங்களைப் பெற்றுவிட்டிருந்தன. இப்போது ஏதேனும் வித்தைகள் செய்து மந்திரிசபை அமைக்காவிட்டால் மீண்டும் தேர்தலை நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை.

இன்னொரு தேர்தலை சந்தித்து தோல்வியைத் தழுவுவதைவிட அரசியலில் தீண்டத்தகாத கட்சி எதுவுமில்லை என்ற புதிய / புளித்த வியாக்கியானத்தோடு எல்லாக் கட்சிகளும் சேர்ந்து ஒரு ஜம்போ உல்டா-புல்டா கூட்டணி மந்திரிசபை அமைப்பதென்று முடிவானது.

அவையின் மூத்த உறுப்பினர் தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைக்கும் வைபவம் நாடாளுமன்றத்தின் நட்டநடு மண்டபத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற வரலாற்றில் நாய்களுக்கும் கழுதைகளுக்கும் பதவி பிரமாணம் செய்துவைக்கும் முதல் சபாநாயகர் என்பது தனக்கு பெருமையா சிறுமையா என்று யூகிக்க முடியாத குழப்பத்துடனேயே அந்த விழாவில் அவர் வீற்றிருந்தார். நடப்பிலிருந்த மும்மொழித் திட்டம் அவருக்கு கைகொடுக்கவில்லை. தவிரவும் அவருக்கு நாய்களின் பாஷையோ கழுதைகளின் பாஷையோ தெரிந்திருக்கவுமில்லை. ஆனாலும் நாய் என்றால் குரைக்கவேண்டும் கழுதை என்றால் கனைக்கவேண்டும் என்ற பொதுப்புத்தியிலிருந்து அவர் உறுதிமொழிப் (பிரமாண) பத்திரத்தை குரைத்தும் கனைத்தும் வாசித்துக் காட்டினார்.

நன்கு பேசத்தெரிந்த சபாநாயகர் ஏன் இப்படி தங்களைப்போல குரைக்கவும் கனைக்கவும் செய்கிறார் என்று திகைத்துப்போன நாய்களும் கழுதைகளும் அழுத்தம் திருத்தமாக நாடாளுமன்ற அலுவல்மொழியில் உறுதிமொழியை திருப்பிச் சொல்லின. கழுதைகளும் நாய்களும் தங்கள் மொழியில் பேசுவது கேட்டு ஒட்டுமொத்த சபையும் அதிர்ச்சியில் உறைந்தது. சற்றே சுதாரித்து சுயநிலைக்கு மீண்ட சபாநாயகர் உங்களுக்கும் பேசத் தெரியுமா என்றார். எம்.பி வேஷம் போட்ட பிறகு பேசித்தானே ஆகணும் என்றன கழுதைகளும் நாய்களும்.

எம்.பி. என்றால் பதவி, பொறுப்பு என்று இவ்வளவுகாலமும் கித்தாப்பு காட்டிக்கொண்டிருக்கையில், இந்த கழுதைகளும் நாய்களும் வந்த முதல்நாளிலேயே வேஷம் என்று கண்டுபிடித்து அம்பலப்படுத்திவிட்டனவே என்ற கடுப்பில் அதற்கப்புறம் அங்கு ஒருவரும் பேசவேயில்லை. ‘சைலன்ஸ் ப்ளீஸ்’ என்று சுத்திவேண்டிய சபாநாயகர் வழக்கத்திற்கு மாறாக ‘ப்ளீஸ் யாராச்சும் பேசுங்களேன்’ என்று கத்திக்கொண்டிருந்தார்.

(நன்றி: தீராநதி) கதைப்பதிவு: April 21, 2012

முழுக்கதையின் சுட்டி

10 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    வீட்டில் காலை குறிப்பட்ட நேரத்திற்கு மட்டுமே வரும் தண்ணீர் பிரச்சனை காரணமாக நான்தான் தாமதம் என்று நினைத்துக் கொண்டே இடையில் வந்தேன். ஆனால், இங்கு யாரையும் காணாதது வியப்பு..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் என்றிருப்பது இயல்புதானே..!!

    இந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    பறவை, விலங்கினங்களுக்கு தண்ணீர் வைக்கும் திட்டம் நல்லது. அதில் முனைந்து செயல்படுவோர்களை பாராட்டுவோம்.

    விதைக்காமலேயே விளைந்த நெற்ப்பயயிர் அவரின் அதிர்ஷ்டத்தை காண்பிக்கிறது வாழ்க வளமுடன்.

    தொழில் நுட்பத்தின் மாற்றங்கள் நன்மைதான். ஆனாலும் இது எங்கே போய் முடியுமோ ? அந்த ஆசிரியைக்கு மாணவ மணிகளால் எந்தவிதமான கோபங்களும் வராது என நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    கதையை இன்னும் கொஞ்ச நேரத்தில் படித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. கதை நல்ல நகைச்சுவையாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
  4. விதிக்காமல் விளைந்த நெற்பயிர் அதிசயம்.

    விலங்கினங்கள் பறவைகளுக்கு தண்ணீர் திட்டம் பாராட்டுக்குரியது.

    ஏ ஐ ரெக்னொலஜி நன்மை பயந்தால் வெற்றிதான்.

    கதை சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  5. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    பறவைகள், கால்நடைகளுக்கு வீட்டுக்கு வீடு தண்ணீர் வைத்தால் நல்லதுதான்.

    கதை தேர்தல் நேரத்தில் பொருத்தமாக தேர்வு செய்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. பாசிட்டிவ் தகவல்கள் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!