புதன், 27 மார்ச், 2024

ஹோம் ஸ்கூலிங் பற்றி ..

 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

Home schooling என்பதை ஆதரிக்கிறீர்களா? வெளிநாடுகளில் கொஞ்சம் இருக்கும் இந்த முறையை நம் நாட்டிலும் வெகு சிலர் கடைபிடிக்கிறார்கள் போலிருக்கிறதே?

# "நல்ல" பள்ளிகளில் படிக்க செலவு மிக அதிகம்.  போவது வருவதில் சிரமம்.   தற்போது குழந்தை கடத்தல் , பாலியல் தொல்லை, போதைப் பொருள் போன்ற   அபாயம் இவற்றை வைத்துப் பார்க்கும்போது வீட்டிலேயே கல்வி என்பதில்  ஒரு கவர்ச்சி இருக்கிறது.

ஆனால் ஒத்த வயதினரோடு நட்பு, உடற்பயிற்சி , குழுச் செயல்பாடு போன்றவை இழப்புப்பட்டியலில் வரும். கொரோனா காலத்தில் வீட்டில் பள்ளி பெரிய நன்மையாகத்தான் இருந்தது. பள்ளி செல்லாமல் பயிலும் இரண்டொரு கெட்டிக்காரப் பிள்ளைகளை எனக்குத் தெரியும். வரும் நாட்களில் வீட்டில் பள்ளி மிகப் பரவல் ஆகலாம் என்றுதான் நினைக்கிறேன்.

& ஜலதோஷம் / தலைவலி இருந்த நாட்களிலும் கஷ்டப்பட்டு பள்ளிக்கூடத்திற்குப் போய் வந்த நாட்களை நினைக்கும்போது .. 'ஹூம் - இதெல்லாம் அந்தக் காலத்திலேயே வந்திருக்கக் கூடாதா' என்று ஏக்கம் வருகிறது.  

March 23 அன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை மின் உபகரணங்களை நிறுத்தினீர்களா?

# இல்லை கவனிக்கவில்லை.

& மறுநாள் - அதாவது மார்ச் 24 அன்று தொலைக்காட்சி செய்திகள் பார்த்தபோதுதான் நினைவுக்கு வந்தது. ஆனால் நான் சாதாரணமாக எல்லா தினங்களிலுமே இரவு எட்டரை மணிக்கு எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு தூங்கிவிடுவேன். காலை 3 மணிக்கு எழுந்த பின் விளக்கு மீண்டும் எரியத் தொடங்கும்.  

= = = = = = = =

வாசகர்களுக்கான கேள்விகள் : ( கேட்டிருப்பவர் : நெல்லைத்தமிழன்) 

1. நிறையப் படித்து பல விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம் (வேலைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. வேலை, உயிர் வாழ, குடும்பத்தைக் காப்பாற்ற, அடுத்த சந்ததியை வளர்க்க). அதனால் என்ன பிரயோசனம்? உதாரணமாக, அண்ணா, கடைசி ஆபரேஷனுக்கு முன்னால் தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை முடித்துவிடுகிறேன் என்றாராம்  புத்தக அறிவு எதற்கு உபயோகம்?  

2. விவாதம் செய்து அல்லது உங்கள் Point of Viewவை விளக்கி, யாருடைய கருத்தையாவது மாற்ற நேர்ந்திருக்கிறதா? அப்படி இருந்தால் பகிர முடியுமா?  

3. இந்தப் பழக்கத்தை இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு அதைக் கடைபிடிக்கிறேன் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

4. நிம்மதியாக மனம் விட்டுப் பேச நீங்கள் நினைப்பது உங்கள் துணைவரிடமா, நண்பர்களிடமா அல்லது பெற்றோர்களிடமா?  

= = = = = = = =

KGG பக்கம் : 

பாலிடெக்னிக் படித்த காலத்தில் - முதலாம் ஆண்டில் எங்களுக்கு physics பாடம் எடுத்து நடத்தியவர், வாஞ்சிநாதன் என்னும் ஆசிரியர். அவர் பாடம் சொல்லிக்கொடுக்கும்  விதம் மிகவும் அருமையாக இருக்கும். 

physics பரிட்சை கேள்வித் தாளில் பெரும்பாலும் ஒவ்வொரு கேள்வியிலும் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி தியரி அல்லது வெறும் பாடப் பகுதி. இரண்டாம் பகுதி முதல் பகுதி சம்பந்தப்பட்ட ஒரு கணக்கு கேள்வி. 

வாஞ்சிநாதன் சொல்லுவது: 

நீங்க எவ்வளவு முட்டி மோதி, தலையால் தண்ணி குடித்தாலும் - முதலாவது தியரி பகுதியில் முழு மதிப்பெண் வாங்க முடியாது. ஆனால், கணக்கு பகுதியில் முழு கவனம் செலுத்துங்கள். கணக்கு பகுதிக்கு மட்டுமே முழு மதிப்பெண்கள் கிடைக்கும். 

கொடுக்கப்பட்டுள்ள கணக்கை மீண்டும் மீண்டும் படியுங்கள். (Read, read and read and understand the English of the problem. )

பிறகு, கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை, அழகாக பட்டியல் இடுங்கள். 

எளிய உதாரணம் : 

Voltage = 12 V

Resistance  = 20 ohms 

Current = ? 

Always remember the formula V = I*R ( ஒரு புன்சிரிப்போடு .. " என்னை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் - Vanchinathan = IR .. ஐயர் !!)

If V = I x R, you know I = V / R. 

so, when you apply the formula, you can find that Current I in this problem is V / R = 12/20 = 0.6 Amp. 

*********

Calorimetry / Specific heat பாடம் நடத்தும்போது .. 

A Bright, Clean Dry Empty Calorimeter with stirrer ( Calorimeter and stirrer are husband and wife - don't separate them!) taken and weighed. 

***********

Dynamics பாடம் நடத்தும்போது .. 

E V.R = M.A  ( Remember the famous couple E V Ramasamy = Mani Ammai) 

Efficiency multiplied by Velocity Ratio = Mechanical Advantage. 

********** 

Physics Lab முதல் வகுப்பில் சந்திரன் என்ற மாணவர் வேட்டி சட்டை அணிந்து laboratory வகுப்பிற்கு வந்தார். 

வாஞ்சிநாதன் அவரிடம் சொன்னார் : " சந்திரன் அண்ணே! நீங்க வேட்டி கட்டிக்கொண்டு செல்ல வேண்டிய இடம் Lavatory - Laboratory அல்ல ! இங்கு பாண்ட் ஷர்ட் அணிந்துதான் வரவேண்டும்  " 

**********

வாஞ்சிநாதன் நினைவுகள் இன்னும் இருக்கின்றன - அடுத்த வாரம் பார்ப்போம். 

= = = = = = =

37 கருத்துகள்:

  1. இவ்வளவு டெடிகேட்டாக ஆசிரியர்கள் அமைவது வரம். அவர்களும் வஞ்சனையில்லாமல் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்கள். வாஞ்சிநாதன் ஆசிரியர் மிகவும் கவர்ந்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. டெடிகேஷனுக்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீராம்.

    ஒரு பக்கம் தன் பையன் கல்யாணத்திற்கான பொறுப்புகள்; வேலைகள் என்று கடமை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் எண்ணங்களைப் பங்கிட்டுக் கொள்ள முடியாத நிலை -- இன்னொரு பக்கம் எபி பொறுப்புகள். அந்த வியாழக்கிழமை ஒரு நாள் தான் வேறு வழியே இல்லாமல் அவரால் எபி பக்கம் வர முடியாமல் போயிற்று.

    இந்த மாதிரி டெடிகேஷன்கள் வெகுவாக அரிதானவை.
    அதனால் பெருமையுடன் நினைத்துப் பார்த்து பிரமிக்க வேண்டியவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி அர்ப்பணிப்பு உணர்வுகள் வெகுவாக அரிதானவை.. அன்பினால் கட்டிப் போட்டு விட்டார் ஸ்ரீராம்..

      நீக்கு
    2. தம்பியுடையான்
      படைக்கு அஞ்சான்
      மாதிரி மாமன் உள்ளான் மருளத் தேவையில்லை தான்.
      இருந்தாலும்...

      நீக்கு
  4. /// தலையால் தண்ணி குடித்தாலும் - முதலாவது தியரி பகுதியில் முழு மதிப்பெண் வாங்க முடியாது. ஆனால், கணக்கு பகுதியில் முழு கவனம் செலுத்துங்கள். கணக்கு பகுதிக்கு மட்டுமே முழு மதிப்பெண்கள் கிடைக்கும். ///

    ஸ்ரீமான் வாஞ்சி நாத ஐயர் அவர்களது அணுகுமுறை சிறப்பு..

    பதிலளிநீக்கு
  5. " நல்ல " பள்ளிகளில் படிக்க செலவு மிக மிக அதிகம்.  போவது வருவதில் சிரமம்.  தற்போது குழந்தை கடத்தல் , பாலியல் தொல்லை, போதைப் பொருள் போன்ற   அபாயம் இவற்றை வைத்துப் பார்க்கும்போது வீட்டிலேயே கல்வி என்பதில்  ஒரு சிறப்பு இருக்கிறது.

    உண்மை. உண்மை..

    பதிலளிநீக்கு

  6. 1. புத்தக அறிவு எதற்கு உபயோகம்?

    எ பி யில் கேள்விகளுக்கு பதில் சொல்ல. பேரப்பிள்ளைகளின் சந்தேகங்களை தீர்த்து வைக்க, கற்றதும் பெற்றதும் எழுத ஏன் எதற்கு எப்படி என்று விளக்க என்று பல உபயோகங்கள் உள்ளன. ஆதனால் படிப்பை நிறுத்தி விடாதீர்.

    2. விவாதம் செய்து அல்லது உங்கள் Point of Viewவை விளக்கி, யாருடைய கருத்தையாவது மாற்ற நேர்ந்திருக்கிறதா? அப்படி இருந்தால் பகிர முடியுமா?

    விவாதத்தை புரிந்து கொண்டு செவி கொடுத்து கேட்பவரிடம் தான் விவாதிக்க முடியும். ஆனால் பலரும் அவர்கள் பிடித்தது மூன்று கால் முயல்கள் என்றிருப்பவர்கள். பெரும்பாலும் விவாதிப்பதில்லை முக்கியமாக மனைவியிடம்.

    3. இந்தப் பழக்கத்தை இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு அதைக் கடைபிடிக்கிறேன் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

    சிகரட் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். 41 வருடங்களுக்குப் பிறகு விட்டு விட்டேன். விட்டு 13 வருடங்கள் ஆகிறது. மற்றபடி நாம் மிக்க காரியங்களிலும் பெற்றோர் மற்றும் சமூகம் ஏற்படுத்தித் தரும் பழக்கங்களை வழக்கங்களைத் தான் கடைபிடிக்கிறோம்.

    4. நிம்மதியாக மனம் விட்டுப் பேச நீங்கள் நினைப்பது உங்கள் துணைவரிடமா, நண்பர்களிடமா அல்லது பெற்றோர்களிடமா?

    மனம் விட்டு எல்லாக் காரியங்களையும் எல்லோரிடமும் பேசமுடியாது. துணைவரிடம் பேச சில காரியங்கள், நண்பரிடம் பேச சில காரியங்கள், பெற்றோரிடம் பேச சில காரியங்கள், என்று காரியத்தின் தன்மை பொறுத்து பேசலாம்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெஸி ஸார்,

      உங்களை ஏன் செவ்வாய்க் கிழமைகளில் எபியில் பார்க்க முடிவதில்லை?

      சனிக்கிழமையும் செவ்வாயும் ஒரே இலக்கைக் கொண்டவை தான். இருப்பினும் சனிக்கிழ்மை பொறுப்பை செவ்வனே செய்து கொம்டிருக்கும் நீங்கள் செவ்வாய்க் கிழமைகளில் பங்கு கொள்ளாதது ஒரு குறை தான்.

      அடுத்த செவ்வாயும் செல்வாண்ணாவாகத் தான் இருக்கலாம். அவரிடமும் சொல்லியிருக்கிறேன். உங்களிடமும் சொல்லிவிட்டேன்.
      பரஸ்பரம் வருகை தாருங்கள், ப்ளீஸ்..

      நீக்கு
    2. அண்ணா..

      நான் உங்களை விடவும் சிறியவன்..

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    3. நான் எல்லா நாளும் எ பி பக்கம் வருகிறேன். செவ்வாய், மற்றும் வெள்ளி, திங்கள், நாட்களில் கருத்துரைகள் இடுவதில்லை. அதற்கு காரணங்கள் பல உண்டு. முக்கிய காரணம் பதிவைப் பற்றி அல்லாமல் வேறு விஷயங்களை விவாதிக்க விரும்பவில்லை.
      Jayakumar​

      நீக்கு
    4. எங்கள் கேள்விகளுக்கு பதில்கள் அளித்த JC அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
    5. ஓ.. புரிகிறது.

      தெரிந்த 'நம்மவர்கள்'
      கதைகளை விமர்சிக்க தயக்கம் போலும்.

      நீக்கு
    6. ஜெயகுமார் சார்.... நான் நல்ல பழக்கங்களைப் பற்றிக் கேட்டேன். சமீபத்தில் பார்த்த நல்ல விஷயம், ஒருவர் வீட்டில், ஒரு வேளைக்கு பழங்கள் மாத்திரம்தான் (ஒரு bowl). இன்னொருவர் வீட்டில், எப்போதும் யார் இருந்தாலும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவது. தொலைக்காட்சி, லிவிங் அறையில் மாத்திரம்தான், தனி அறைகளில் அல்ல, சாப்பாடை அதற்குரிய மேசையில் மாத்திரம்தான் அமர்ந்து சாப்பிடுவது என்பன போல.

      நீக்கு
    7. நல்ல பழக்க வழக்கங்கள். பாராட்டுவோம்.

      நீக்கு
  7. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு அவரது தந்தையே குரு..

    பள்ளிக் கூடத்திற்கு சென்றதே இல்லை..

    இவரது தந்தையார் ஸ்ரீ மல்லையதாசர் தாமே அனைத்தையும் கற்பித்தார் என்பது வரலாறு..

    இதனை உபந்நியாசங்களில் சுவாமிகளே சொல்லக் கேட்டிருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  8. Read, read and read and understand..

    இதைத் தான் எங்கள் ஆசிரியர்கள் திரு. K. குஞ்சிதபாதம், திரு. A. சுப்ரமணியம் ஆகியோர் அடிக்கடி சொல்வர்..

    பதிலளிநீக்கு
  9. வாரியார் சுவாமிகள் போன்ற உத்தமர்களையும் இழுத்துப் போட்டு அடித்த பெருமை தமிழருக்கு உண்டே!..

    பதிலளிநீக்கு
  10. @ ஜீவி அண்ணா..

    /// அடுத்த செவ்வாயும் செல்வாண்ணாவாகத் தான் இருக்கலாம்.. ///

    திரட்டுப்பால் மாதிரி அடுத்த கதை சித்திரை யில் தான்!..

    பதிலளிநீக்கு
  11. வாஞ்சிநாதன் போன்ற ஆசிரியர்கள் அமைவது மாணவர்களுக்கு கொடை.

    புத்தக அறிவு நாம் பல விடயங்களை தெரிந்துகொள்ளவும், தெரிந்ததை பகிர்ந்துகொள்ளவும் உதவும்.

    விவாதம் புரிந்து கொள்வோரிடம் செய்யலாம்.மற்றையவர்கள் ஏற்க மாட்டார்கள்.

    கோபம் வரக்கூடாது, மற்றையோருக்கு உதவி செய்யுங்கள் என்பதை ஆன்மீகத்தில் படித்து அறிந்து அப்படி வாழ முயற்சிக்கிறேன்.

    மனம் விட்டு பேசுவது கணவரிடம் .
    நான் கடைப்பிடிக்கும் பதில்களை கூறியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  12. வாஞ்சிநாதன் போன்ற ஆசிரியர்கள் அமைவது வரம். மெனக்கெட்டு பாடம் சொல்லிக் கொடுத்த சிலர் எனக்கும் அமைந்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  13. வாஞ்சிநாதன் அவர்கள் போல ஆசிரியர்கள் எல்லா மாணவனுக்கும் கிடைத்தால் நல்லது. அப்போது எல்லாம் தனி தனியாக மாணவர்களை
    கவனித்து அவர்களுக்கு எந்த பாடம் வரவில்லையோ அதில் தனி கவனம் செலுத்தி பாடங்களை சொல்லி கொடுத்தார்கள்.

    புத்தக அறிவு மிகவும் அவசியம்.

    விவாதம் தேவை இல்லாதது.
    மனம் விட்டு பேசியது கணவரிடம். இப்போது யாரிடமும் பார்த்து பேச வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. நல்லாசிரியர் வாஞ்சிநாதன்.

    என் தோழி ஒருத்திக்கு நாம் புடவை கொடுத்தால், அதை உடனே கட்டிக்கொண்டு நமக்கு காட்டி விடுவாள். இத்தனைக்கும் அவள் நல்ல வசதியானவள். அவளிடமிருந்து அந்த பழக்கத்தை கற்றுக் கொண்டு அதை கடை பிடிக்கிறேன். எனக்கு யாராவது புடவை வைத்துக் கொடுத்தால், அதை அவர்கள் வீட்டிற்குச் செல்லும் பொழுது கட்டிக்கொண்டு செல்வேன். இல்லாவிட்டால் அந்த புடவையை கட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து வாட்ஸாப்பில் அனுப்பி விடுவேன்.

    இப்போது மனம் விட்டு பேசுவது மகளோடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில்கள் அளித்ததற்கு நன்றி. நல்ல பதில்கள்.

      நீக்கு
  15. காந்தியின் மீது அவரது மூத்த மகனுக்கு கோபம் வந்த காரணங்களுள், அவர் தானே பாடம் சொல்லித் தருகிறேன் என்று அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததும் ஒன்று.

    ஜெயகாந்தன் கூட தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் என்று சொன்னவர்தான். ஆனால்,"எனக்கு பிடிக்காது என்பதற்காக என் குழந்தையின் ஆசையை குலைக்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று பள்ளிக்கு அனுப்பினார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயகாந்தனின் பெண் படித்தது, என்னுடைய மன்னி ஆசிரியையாக வேலை பார்த்த பள்ளியில். ஜெயகாந்தனின் முதல் மனைவி அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தார் என்று ஞாபகம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!