திங்கள், 25 மார்ச், 2024

"திங்க"க்கிழமை  :  பருப்பு உருண்டைக் குழம்பு  -  கமலா ஹரிஹரன் ரெஸிப்பி 

 

பருப்பு உருண்டை குழம்பு. 

இந்த பருப்பு உருண்டை குழம்பு நிறைய பேர் இங்கு செய்து  பங்களித்துள்ளனர். மேலும் அனேகம் பேர் அடிக்கடி செய்வதுதான். தெரியாத விஷயம் ஒன்றுமில்லை. இருப்பினும் என் பங்களிப்பாக இருக்கட்டுமேயென இங்கு இதை  பகிர்கிறேன். செய்முறைகள் அலுப்பை தருமாயின் பொறுத்துக் கொள்ளவும்.🙏. 


முதலில் து. ப ஒரு டம்ளர்( 200கிராம்) எடுத்தால் அரை டம்ளர் க. பருப்பையும் சேர்த்து எடுத்துக் கொள்ளவும். க. ப சேர்த்தால்தான் பருப்பு உருண்டைகள் ஓரளவு உருண்டையான உருவமாக உடையாமல் வரும். இல்லையென்றால் குழம்பிலேயே பாதி கரைந்து விடும். 


இது எடுத்தப்பருப்பை களைந்து பின் வேண்டிய தண்ணீர் சேர்த்து  ஒருமணி நேரம் ஊறிய பின் அவரவர் விரும்பும் காரத்திற்கேற்ப மி. வத்தல் உப்பு கறிவேப்பிலை சேர்த்து ஓரளவு கெட்டியாக ரொம்ப நைசாக இல்லாமல், கொஞ்சம் கரகரவென அரைத்தெடுத்த மாவு. 


அந்த மாவில் ஒரு இரண்டு மூன்று ஸ்பூன் அரிசி மாவை கலந்து விட வேண்டும். இதுவும் உருண்டைகள் உடையாமல் இருக்க உதவும். 


ஒரு கடாயை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்த பின் கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகை போட்டு அது வெடித்ததும்.... 


அரை ஸ்பூன் பெருங்காயப்பொடியை அதனுடன்  சேர்த்து, அதன் வாசனை வந்ததும்.... 


அரிசி மாவுடன் கலந்து வைத்திருக்கும் பருப்பு கலவையை அதில் கலந்து அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் பொடி கலந்து.... 


நன்றாக ஒன்று சேர்ந்து இறுகும் வரை கை விடாமல் கலந்து விட வேண்டும். 


இது உருண்டை பிடிக்க தயாராகி ஆறுவதற்காக இருக்கும் பருப்பு கலவை... 


அதே கடாயில் குழம்புக்கு வறுக்க தேவையான சாமான்கள். 



அனைத்தும் சேர்ந்து குழம்பாக ரெடியாகப் போவதால், உண்டாகும்  பரபரப்பான டென்ஷனில் மசாலா பொருட்கள் ஒன்று சேர்ந்து சமரச ஒப்பந்தத்தை பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டன. 

எப்படியும் எடுத்த மற்றொரு படத்திற்கு இப்படி ஏதாவது வசனங்கள் எழுதி விடுவேன் என அவை ஆவலுடன் இருப்பதால் அவற்றின் ஆவலை புறக்கணிக்க இயலவில்லை. ஆகையால் இந்தப்படமும், அதன் விவரமும் இடம் பிடித்து விட்டது. 

 
அதே கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி... 


வழக்கப்படி முதலில் கடுகு, வெந்தயம்... 


அது வெடித்ததும் ஒன்றிரண்டாக கிள்ளிய சி. வத்தல்கள் சேர்த்த பின்,... 


அதனுடன் காரப்பொடி, தனியா பொடி, மஞ்சள் தூள் என சேர்த்து பச்சை வாசனை போகுமளவிற்கு வதக்கியப்பின்.... 
 

ஏற்கனவே ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து, கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீரை அதனுடன் கலந்து அது கொதிக்கும் தறுவாயில்.... 



ஆற வைத்திருக்கும் அந்த பருப்பு கலவையை இப்படி கெட்டியான உருண்டைகளாக பிடித்து.... 


கொதிக்கும், புளி மசாலா கலவையில் ஒவ்வொன்றாக போட வேண்டும். குழம்புக்கு தேவையான கல்உப்பையும் அதனுடன் சேர்க்கவும். 


எல்லாம் சேர்ந்து கொதிக்கும் போது கவனமாக உருண்டைகளை திருப்பிப் போடவும். புளி தண்ணீரில் போட்ட உடனே திருப்பினால், அது கரைந்து விடும். இறுதியில் கொஞ்சம் பெருங்காய பொடி சேர்க்கலாம். கொத்தமல்லி தழைகள் வீட்டில் இருந்தால் அதையும் சிறுக வெட்டி சேர்க்கலாம். 

குழம்பு ரொம்ப நீர்க்க இருந்தால் அரை ஸ்பூன் அரிசி மாவை கரைத்து விடலாம். இல்லையென்றால் ஆற ஆற குழம்பே பருப்பு உருண்டைகளின் சேர்மானத்தில் கெட்டியாகி விடும். 


ஒரு மட்டும் ப. உ குழம்பின் தயாரிப்பு ரெடியாகி விட்டது. இந்த உருண்டை களே சாதத்தின் உடன் சேர்த்து தொட்டுகையாக சாப்பிட போதுமானவவையாக அமைந்து விடும். ஒத்துக் கொள்ள மனமில்லையென்றால் இருக்கவே இருக்கிறது இந்த சுட்ட அப்பளங்கள். 


என்ன நான் சொல்வது சரிதானே... இவ்வளவு நேரம் இந்த ப. உ. குழம்பின் மகிமை புராணத்தை பார்த்து படித்தவர்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள். 🙏. 

36 கருத்துகள்:

  1. புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் ...

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      எல்லோரும் நலமாக வாழ இறைவன் நல்லருள் புரிய வேண்டுமென நானும் பிரார்தித்துக் கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. பாரம்பரிய பருப்பு உருண்டைக் குழம்பு செய்முறை அருமை...

    எல்லாருக்கும் தெரிந்தது தான் என்றாலும் தங்களது கை வண்ணம் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      பதிவுக்கு தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களது ஊக்கம் நிறைந்த கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  4. இதையே வடையாகத் தட்டி எண்ணெயில் பொரித்து குழம்பு கூட்டுவதும் உண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. நல்லதொரு மாற்று செய்முறையையும், இங்கு எடுத்துச் சொன்னதற்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் பங்குனி உத்திரம், மற்றும் ஹோலிப்பண்டிகை நல்வாழ்த்துகள். இறைவன் அனைவருக்கும் நல்லருள் தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    இன்று" திங்க" கிழமை பதிவாக இந்த ரெசிபியை அன்பு கூர்ந்து வெளியிட்டமைக்கு சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு என் அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வகையில் எங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தரும் எபி. ஆசிரிய பெருமக்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

    இதைப் படித்து கருத்துக்கள் தரும் என் சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான ரெசிப்பியைக் கொடுத்து ஆர்வமுடன் பங்கேற்ற உங்களுக்கு நாங்களும் நன்றி சொல்ல வேண்டும்.  தொடர்ந்து அனுப்புங்கள்.  கதை அனுப்பலாம்.  நான் படிச்ச கதைக்கு கூட அனுப்பலாம்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து எழுதி அனுப்ப முயற்சிக்கிறேன். நான் படிச்ச கதை யென்றால், அதற்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களைப் போல வராது. பல கதைகளை தேடிப்பிடித்து அதை கவனமாக படித்து, சனிக்கிழமைதோறும் சிறப்பானதொரு பதிவாக அளிக்கும் அவரின் திறமைக்கு முன் என்னால் அது முடியுமா எனவும் தோன்றகிறது. இருப்பினும் முயற்சி செய்கிறேன். தங்கள் இந்த ஊக்கம் தரும் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  7. சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்

    இன்று என் பங்களிப்பான இந்த ரெசிபியை படிக்கும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

    இங்கு வீட்டில் காலை நேரத்தில் மட்டுமே வரும் தண்ணீர் பிரச்சனையாலும் அதன் தேவைகளுக்காக தண்ணீரை சேமிக்கும் பணி காரணமாகவும், கொஞ்ச தாமதமாக வந்து அனைவருக்கும் நன்றிகள் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதனால், அனைவரும் அன்பு கூர்ந்து பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது யாரு பெங்களூர் பேரைக் கெடுப்பது? சென்னைக்குப் போனா ஒவ்வொருத்தரும் துக்கம் விசாரிக்கறாங்க. மத்தவங்க சொன்னாக்கூட பொறுத்துக்கலாம். இந்தச் சென்னைவாசிகளா?

      நீக்கு
    2. //அதன் தேவைகளுக்காக தண்ணீரை சேமிக்கும் பணி காரணமாகவும், கொஞ்ச தாமதமாக வந்து// - இவ்வளவு நேரம் தண்ணீர் வீட்டுக்காகச் சேமித்தால், மத்த பெங்களூர் காரங்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டாமா?

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      ஹா ஹா ஹா ஹா . சகோதரி கீதாரெங்கன் பாணியில் சொன்னால், சிரித்து முடியவில்லை...!!

      /சென்னைக்குப் போனா ஒவ்வொருத்தரும் துக்கம் விசாரிக்கறாங்க. மத்தவங்க சொன்னாக்கூட பொறுத்துக்கலாம். இந்தச் சென்னைவாசிகளா?/

      ஹா ஹா. அதானே..!! சென்னை மட்டுமல்ல..! தமிழ் நாட்டில் மற்ற ஊர்களில், அதுவும் திருநெல்வேலியில் . இருக்கும் உறவுகளும் விசாரிக்கிறார்கள். இங்கு வந்து இரண்டு மாதங்கள் கூடவேனும், தங்கிச் செல்லுங்கள் என வருந்தி அழைக்கிறார்கள். பெங்களூர் இப்படி ஆகி விட்டதே என வருத்தமாகத்தான் உள்ளது. கூடிய விரைவில் சரியாக வேண்டுகிறேன்.. நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      /இவ்வளவு நேரம் தண்ணீர் வீட்டுக்காகச் சேமித்தால், மத்த பெங்களூர் காரங்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டாமா?/

      ஹா ஹா ஹா. தண்ணீர் கவலையெல்லாம் காலை ஒன்பதோடு முடிந்து விடும். அத்தோடு அது நாள்தோறும் வரும் வராது கதை வேறு.

      நேற்றும் இன்றுமாக மகன், குழந்தைகள் இங்கு தங்க வந்திருந்தார்கள். அவர்களோடு நேரம் சரியாகப் போய் விட்டது. நேற்று மாலையும் அவர்களுடன் வெளியில் சென்றதால் உங்கள் பதிவுக்கே தாமதமாக வந்தேன். அதனால்தான் இன்றும் தாமதமாக அனைவருக்கும் பதில் தருகிறேன். மன்னிக்கவும். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. எனக்கு மிகவும் பிடித்த குழம்பு இது. கொஞ்சம் மெனெக்கிட வேண்டும்,

    பாரம்பர்ய நெல்லை முறையுடன் செய்து பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி. அந்த அந்த சமூக, தேசாந்திரப் பழக்கத்திற்கு ஏற்ப, சோம்பு, பூண்டு வெங்காயம் சேர்ப்பார்கள். நீங்கள், நான் சாப்பிட்டு வந்திருக்கிற முறையிலேயே பதிந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். இதற்கு கொஞ்சம் வேலை அதிகம்.

      /பாரம்பர்ய நெல்லை முறையுடன் செய்து பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி./

      வீட்டில் வெங்காயம், பூண்டு சேர்க்காதவர்கள் இருந்ததினால் அவை யாவும் இல்லாமல் இப்படித்தான் எங்கள் அம்மா செய்வார்கள். அப்படியே எனக்கும் பழக்கமாகி விட்டது. வெங்காயம் பூண்டு இவைகளை சேர்த்தே செய்வதில்லை. ஆனால், இப்போது அனைவரும் மாறுபட்ட சுவைக்காக சேர்க்கிறார்கள். அதன் ருசியும் கொஞ்சம் வித்தியாசபடுமென நினைக்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  9. மற்ற குழம்பு போல இதனைச் சாப்பிடுவதில்லை. பருப்பு உருண்டைகளை, மோர் சாத்த்துடன் சாப்பிட்டால் யம்மி.

    சமீபத்தில் கும்பகோணத்தில் நடந்த திருமணத்தில் உருண்டைகளாக மோர்க்குழம்பில் மிதக்கவும், அதனை மாத்திரம் போடச் சொல்லிச் சாப்பிட்டேன். அது உருண்டையாகப் பொரித்தெடுத்திருந்த மெதுவடை.(உளுந்துவடை).

    என் அம்மா, மோர்க்குழம்பைக்கு துவரம் பருப்புல்லாம் சேர்த்து வடை தட்டி அதில் போடுவார். நன்கு ஊறிய பிறகு மறுநாள் தயிர் சாத்த்திற்கு ரொம்ப நல்லா இருக்கும். அதன் செய்முறையை என் பெரியம்மாவிடம் கேட்டு (அவருக்கு நினைவிருந்தால்) செய்து பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். வெறும் பருப்பு உருண்டைகள். மோர் சாதத்திற்கு துணையாக நன்றாக இருக்கும்.

      மோர் குழம்பில் போடும் ப. உருண்டைகளும் அதி ருசிதான். வெறும் உ. வடையும் அதில் போட்டு எடுத்தால் சுவையாகத்தான் இருக்கும்.

      /அதன் செய்முறையை என் பெரியம்மாவிடம் கேட்டு (அவருக்கு நினைவிருந்தால்) செய்து பகிர்கிறேன்./

      சுவையான அந்த செய்முறைகளையும், படங்களுடன் பகிருங்கள். படிக்க காத்திருக்கிறோம். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. பருப்புருண்டைக் குழம்புக்கு, உருண்டைகளைப் போடுமுன் ரொம்ப நீர்க்க இருக்கணும்தான். உருண்டைகள் சேரச் சேர கொஞ்சம் கரைந்து குழப்பு கெட்டியாகும். இறக்கிய ஒரு சில மணியில் இன்னும் கட்டியாகிவிடும்.

    இன்னும் ஓரிரு நாட்களில் செய்துபார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ப. உருண்டைகள் போட்ட குழம்பு ஆற, ஆற கெட்டியாகி விடும். சமையல் செய்த ஆரம்பத்தில், அப்படி கூட்டாக சாப்பிட்ட சில தருணங்களும் உண்டு. அதன் பின்தான் கவனமாக செயல்படும் பக்குவங்கள் உண்டானது. .ஆனாலும், யானைக்கும் அடி சறுக்கும் என்பது என்றும் உண்மைதானே..!!!

      தாங்களும் இன்னும் ஓரிரு நாளில் இதை செய்து பார்ப்பதற்கு மகிழ்ச்சி. கருத்துகளுக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  11. வத்தக் குழம்புக்கான சேர்த்தியான சுட்ட அப்பளாத்திற்கு, பருப்புருண்டைக் குழம்பில் என்ன வேலை?

    சமீபத்தில், சோடியம் பிரச்சனைகளுக்கு சுட்ட அப்பளாம் நல்லது என ஶ்ரீராம் எழுதியிருந்தது நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /வத்தக் குழம்புக்கான சேர்த்தியான சுட்ட அப்பளாத்திற்கு, பருப்புருண்டைக் குழம்பில் என்ன வேலை?/

      வத்தக் குழம்புக்கென்றில்லை. அவியல் குழம்பிற்கு, ரசசாதத்திற்கு, துவையல் சாதத்திற்கு இந்த ப. உருண்டை குழம்பிற்கு என எது கூடவும் இந்த சுட்ட அப்பளங்கள் இணைந்து கொள்ளும்.

      எங்கள் வீட்டில், மோர் மிளகாய் போட்ட அரிசி மாவு உப்புமாவுக்கு (உதிர்த்து செய்வோமே ) கூட இந்த சுட்ட அப்பளங்கள் துணையாக வேண்டும்.

      எனக்கும் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் கூறியது நினைவுக்கு வந்தது. தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  12. எங்களது செய்முறையே வேறு. சோம்பு, வெங்காயம் சேர்த்த பருப்பு உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் இட்லி போல வேக வைத்து குழம்பு கொதிக்கும் போது போடுவோம். பூண்டு குழம்பில் சேர்ப்பது உண்டு.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தங்கள் வீட்டு செய்முறையை விளக்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி. இட்லி போல செய்து, அதை குழம்பில் போடும் போது அது கரையாமல் இருக்குமா? தாங்கள் கூறுவது போல் பூண்டின் வாசனையோடு குழம்பும் ருசி மிகுந்ததாக இருக்கும். ஒரு முறை நானும் இப்படிச் செய்து பார்க்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  13. பருப்பு உருண்டை குழம்பு உடல்நலத்துக்கு உகந்தது .

    சுவைக்காக அவித்தும்,பொரித்தும் செய்வதுண்டு.

    நல்ல படங்களுடன் செய்முறையும் தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      ஆம். இது ஒரு நல்ல ஹெல்தியான உணவுதான்.

      /சுவைக்காக அவித்தும்,பொரித்தும் செய்வதுண்டு./

      ஓ.. அப்படியா... . நல்லதொரு தகவல்களுக்கு மிக்க நன்றி.

      பதிவை ரசித்துப் படித்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. எனக்கு மிகவும் பிடித்தது இந்த பருப்பு உருண்டை குழம்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உங்களுக்கும் இது மிக பிடித்தமான உணவென்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  15. பருப்பு உருண்டை குழம்பு, மற்றும் செய்முறை, படங்கள் எல்லாம் அருமை. வீட்டில் குழம்பு கொதிக்கும் போது போட்டால் பிடிப்பது இல்லை. மோர்குழம்புக்கு எண்ணெயில் வடை செய்து போடுவது போல இதிலும் போட சொல்வார்கள்.

    //மசாலா பொருட்கள் ஒன்று சேர்ந்து சமரச ஒப்பந்தத்தை பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டன.//

    வசனத்தை ரசித்தேன்.
    காணொளியும் நன்றாக இருக்கிறது.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /மோர்குழம்புக்கு எண்ணெயில் வடை செய்து போடுவது போல இதிலும் போட சொல்வார்கள்./

      அப்படியா? உருளை வடிவத்திற்கு பதிலாக இப்படி செய்வது ஒன்றும் சிரமமில்லையே சகோதரி அவர்களுக்கு பிடித்தமான முறையில்தான் நாம் செய்ய வேண்டும். .

      பதிவை ரசித்துப்படித்து, குறிப்பிட்டுச் சொல்லி, பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      உங்களைத்தான் சில நாட்களாக பதிவுகளில் காணோமே என்று தேடினேன் சகோதரி. நீங்கள் இதற்கு முன் வந்த பதிவில் தாங்கள் வராததற்கான அந்த இழப்புச் செய்தியை சொல்லியிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தமடைகிறேன். உங்கள் தங்கை குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர்கள் மனம் விரைவில் சமாதானமடைந்து, இதிலிருந்து கடந்து தேறி வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

      இத்தனை துயரங்களிலும், நீங்கள் இங்கு வந்து தங்கள் கருத்தை தெரிவித்திருப்பதற்கு என் அன்பான நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      யாருமே பார்க்கவில்லையே என நினைத்தேன். ஆனால் தாங்கள் பதிவில் இணைத்திருந்த காணொளியையும் கண்டு ரசித்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. உங்கள் தங்கை குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர்கள் மனம் விரைவில் சமாதானமடைந்து, இதிலிருந்து கடந்து தேறி வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.//

      உங்கள் பிரார்த்தனைக்கும், ஆறுதலான வார்த்தைக்கும் நன்றி.

      நீக்கு
  16. பருப்பு உருண்டை குழம்பு - நல்ல குறிப்பு. எப்போதேனும் செய்வார்கள் வீட்டில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவை ரசித்துப்படித்து சொன்ன கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      ஆம். இது பெரும்பாலும் வீட்டில் காய்கறிகள் சரியாக அமையாத போது, எப்போதேனும் செய்வதுதான். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!