புதன், 6 மார்ச், 2024

ஸ்டார் ஹோட்டல்களை விட கையேந்தி பவன்களில் உணவு சுவையாக இருக்குமாமே?

 

நெல்லைத்தமிழன் : 

நல்ல நல்ல திட்டங்களை மனதில் வைத்திருப்பதால் ஒருவர் நல்ல அரசியல்வாகி ஆகமுடியுமா? யார் செயல்படுத்துவார்கள் என்பது கூடத் தெரியாமல் கொள்ளைக் கும்பலை வளர்த்தவர் நல்ல அரசியல்வாதி ஆக முடியுமா?

# " நல்ல அரசியல்வாதி " என்பது ஓரு முரண்சொல் என்று ஆகிவிட்ட காலம் இது. தேர்தலுக்கு லட்சங்களாக இருந்த செலவு இன்று கோடிகளுக்குப் போய் விட்டது .  அதுவும் 5 கோடி 10 கோடி என்று !!  அது போகட்டும்.  நல்ல திட்டங்கள் பற்றி சிந்தித்து அவை குறித்து முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்வதற்கும் அரசியல்வாதியாக செயல் புரிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நேர்மை உணர்வு ஒன்று மட்டும் இருந்து, தேர்தலில் வெற்றி பெற வழி வகுக்கத் தெரிந்தவர்தான் திறமையான நல்ல அரசியல்வாதி.  பதவிக்கு வந்ததும் உங்கள் திட்டங்களை சொன்னால் அவற்றை நிறைவேற்ற எல்லா வசதியும் அரசுக்கு உண்டு.

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஸ்டார் ஹோட்டல்களை விட கையேந்தி பவன்களில் உணவு சுவையாக இருக்குமாமே? உங்கள் அனுபவம் எப்படி?

# ஸ்டார் ஹோட்டல்களில் என் அனுபவம் மிக மிக சொற்பம். அங்கு நான் பார்த்தது: பெரும்பாலான உணவு வகைகள் நமக்கு பரிச்சயம் இல்லாதவை.  சிலவற்றின் பெயர் கூட நமக்குத் தெரியாது.  அவை அனைத்தும் மிக சுத்தமாக இருக்கும்.  வெகு சில சுவையாகவும் இருக்கும்.  அவற்றின் ஒட்டு மொத்த விலை பெரும்பாலும் மார்க்கெட் நிலவரத்தைப் போல் பத்து மடங்கு வரை அதிகமாக இருக்கும்.  உதாரணமாக தண்ணீர் பாட்டில் 20 ரூபாய்க்கு கிடைப்பது 110 ரூபாய்க்கு விற்கப்படும்.  அங்கு சென்று சாப்பிட்டால் நம் அந்தஸ்தை தூக்கிப்  பிடித்துவிட்டோம் என்ற ஒரு மாயத் திருப்தி ஏற்படும். நாம் ஏதோ சமூகத்தின் மிக மேல் மட்டத்தில் இடம் பெற்றதாக ஒரு பத்து நிமிஷம் நினைப்போம். 

கையேந்தி பவன்களில் சுத்தம் இரண்டாம் பட்சம்.  சற்றே அழுக்குத் தண்ணீரில்  தட்டு கழுவுவார்கள். ஆச்சரியான முறையில் சுவை நன்றாகவே இருக்கும்.  சில புத்திசாலிகள் தட்டின் மேல் ஒரு பட்டர் பேப்பர் வைத்து பலகாரம் தருவார்கள். பேப்பர் தூக்கி எறியப்படுவதாக தோன்றும். விலை நம் வீட்டில் செய்வதைக் காட்டிலும் ஒரு கால் ரூபாய் அதிகம் இருக்கும். இந்த வகை கடைகளின் பலம் அவை அமைந்துள்ள இடம். எல்லாமே விற்றுத் தீர்ந்து விடும் என்று நாம் அனுமானிக்கும் சாத்தியக் கூறு. 

ஹோட்டலுக்குச் செல்ல வேண்டுமென்றால் எப்படிப்பட்ட ஹோட்டல்களை தேர்ந்தெடுப்பீர்கள்? வெஜிட்டேரியன் ஒன்லியா? அல்லது வெஜ், நான் வெஜ் இரண்டும் இருந்தாலும் ஓகேயா?

# வேறு வழி இல்லை என்றபோது மட்டும் சைவமும் அசைவமும் கிடைக்கும் இடங்களை "கடவுளே" என்று நாடுவது உண்டு . மற்றபடி எனக்கு அசைவம் கிடைக்கும் இடங்களில் சாப்பிட அவ்வளவாக விருப்பம் அல்லது சகிப்பு கிடையாது.

& நான்,  " வெஜிடேரியன் ஒன்லி" 

 உணவகங்களின் ஆம்பியன்ஸீக்கு முக்கியத்துவம் தருவீர்களா?

# ஆம்பியன்ஸ் - இது நம் திருப்தியை சற்றுக்  கூட்டும் அம்சம். அழுக்கு இல்லாதவரை, இதற்கு முக்கியத்துவம் இல்லை.

& கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்பு, அலுவலக நண்பர் ஒருவர், சென்னை பெரியமேட் பகுதியில் ( சென்ட்ரல் ஸ்டேஷன் / மூர் மார்க்கெட் பக்கம்) ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த பகுதி முழுவதும் லெதர் தொழில் சிறந்து விளங்கும் பகுதி. அந்தப் பகுதி தொழிலதிபர்கள் எல்லோரும் சேர்ந்து அங்கு தரமான உணவகம் ஒன்றை நடத்தி வந்தார்கள். அங்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் யாவும் சுத்தமான நெய்யில் தயாரிக்கப்பட்டவை என்று சுவற்றில் அட்டையில் பிரிண்ட் செய்து வைத்திருந்தார்கள். விலையும் குறைவாக இருந்தது. அல்வா சாப்பிட்டோம். அளவு குறைவாக இருந்தாலும் சுவை நன்றாக இருந்தது. ஆனாலும் சுற்றிலும் தோல் வாசனை / கிடங்கு வாசனை, அதிக நடமாட்டம் இருந்த பகுதி என்பதால் தூசு மாசு காரணமாக அந்த இடத்தின் ஆம்பியன்ஸ் ( சூழல்) அவ்வளவாக ரசிக்கவில்லை. எனவே அடுத்த முறை அங்கு செல்ல ஆசை வரவில்லை. 

= = = = = = = = =

எங்கள் கேள்விகள் : 

எங்கள் சார்பாக - நெல்லைத்தமிழன் - சென்ற ஞாயிறு பதிவில், (ஜீவியை) கேட்ட கேள்விகளை வாசகர்களிடம் கேட்க கேட்டுக்கொண்டதால் நாங்களும் கேட்டிருக்கிறோம். 

மகாத்மா காந்தியைப் பற்றி  தெரிந்தவர்கள் / அறிந்தவர்கள் பதில் கூறவும். 

1) காந்திஜியின் உயர்ந்த குணங்கள் என்று எவற்றைக் காண்கிறீர்கள்? 

2) நீங்கள் பெண்ணாக இருந்திருந்தால் காந்தியைப் போன்றவரைத் திருமணம் செய்திருப்பீர்களா? 

3) உங்களுக்கு காந்தி போல அப்பா இருக்கணும்னு ஆசைப்படுவீங்களா?

= = = = = = =

KGG பக்கம் : 

நான் பதின்மூன்று வயதிலேயே காசு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன்! எப்படி என்று கேட்கிறீர்களா? 

JTS படித்தபோது அரசாங்கம் அளித்த உதவித் தொகை - முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் இருபது ரூபாய் - மூன்றாம் ஆண்டு மாதம் முப்பது ரூபாய் - நன்றாகப் படிக்கும் மாணவன் என்பதால் எனக்குக் கிடைத்தது. 

ஒவ்வொரு மாதமும் எனக்குக் கிடைக்கும் stipend பணத்தை அப்பாவிடம் கொடுத்துவிடுவேன். 

இருபது ரூபாய்தானா - என்று நினைக்காதீர்கள் - அந்தக் காலத்தில் நாகை பஸ் ஸ்டாண்டிலிருந்து நாகூர் வரை டவுன் பஸ்ஸில் செல்ல பதினெட்டு பைசா மட்டுமே டிக்கெட் சார்ஜ். என்னுடைய பள்ளி இருந்த பாலிடெக்னிக் வரை செல்ல பதினான்கு பைசா டிக்கெட் சார்ஜ்.  வாரம் ஆறுநாட்கள் பள்ளிக்கூடம் என்று வைத்துக்கொண்டால் ஒரு மாதத்தில் இருபத்தாறு நாட்கள் - மொத்தம் ஏழே கால் ரூபாய் இருந்தால் போதும். 

டவுன் பஸ் கிடைக்கவில்லை என்றால் - காரைக்கால், பொறையார் செல்லும் சக்தி விலாஸ் பஸ்ஸில் அதே பயண தூரத்திற்கு 31 பைசா சார்ஜ்! அநியாயத்திற்கு அதிகம் இல்லையா! 

ஆனாலும் நான் வீட்டில் தினமும் காலையில் அம்மாவிடமிருந்து முப்பத்து ஒரு பைசா வாங்கிக்கொண்டு கிளம்புவேன். டவுன் பஸ் இரண்டே இரண்டுதான் அந்தக் காலத்தில் ஓடிக்கொண்டிருந்தன. நாகூர் கந்தூரி உற்சவம் போன்ற நாட்களில் டவுன் பஸ் எல்லாவற்றிலும் பயங்கரக் கூட்டம் இருக்கும். சில நாட்களில் டவுன் பஸ் பழுதாகி எங்காவது நின்றுவிட்டால் அன்று சாதாரண பஸ்ஸில்தான் பயணிக்கவேண்டும். ஆகையால் இதைப் போன்ற அவசர பயணத்திற்கு முன்னெச்சரிக்கையாக முப்பத்து ஒரு பைசா எடுத்துக்கொண்டு கிளம்புவது வழக்கமானது. 

இதில் நான் சம்பாதிக்க வேறு ஒரு வழி கண்டுபிடித்தேன். காலையில் முப்பத்து ஒரு பைசா எடுத்துக்கொண்டு கிளம்புகிறேன் என்றால், முன்னரே கிளம்பி, வேகமாகச் சென்று, டவுன் பஸ் பிடித்து, பள்ளிக்கு சென்றுவிடுவேன். 

மாலை வீடு திரும்ப டவுன் பஸ்ஸில் இடம் கிடைப்பது மிகவும் கடினம். கூட்டமாக இருக்கும். நேரத்தில் பஸ் வரவும் வராது. 

அதனால் பள்ளியிலிருந்து வீட்டுக்கு (சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம்) நடந்தே வந்துவிடுவேன். ஒரு நாளில் பதினேழு பைசா மிச்சம் ஆகும். அதை அம்மாவிடம் சொல்லிவிட்டு நானே வைத்துக்கொள்வேன். 

என்னுடைய அம்மா என்னைவிட கெட்டி. அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், சில நாட்களில் பதினைந்து பைசா மட்டும் கொடுத்துவிட்டு - மீதி பதினாறு பைசா உன்னிடம் இருக்கும் சில்லறையிலிருந்து எடுத்துக்கொள் - நான் அப்புறமாக உனக்குத் தருகிறேன் என்று சொல்லிவிடுவார். ஆனால் தரமாட்டார்! அன்றைக்கு எனக்கு மிஞ்சுவது ஒரு பைசா மட்டுமே! 

அந்த ஒரு பைசா கூட ஒருநாள் - சில்லறை இல்லை என்பதால் கண்டக்டர் மீதி தரவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அன்றைக்கு கடவுளே அனுப்பி வைத்தது போல எனக்கு ஒரு அதிர்ஷ்டம். பள்ளிக்கூட நிறுத்தத்தில் நான் இறங்கும் சமயம் டிக்கெட் பரிசோதகர் வந்து இறங்கும் வழியில் நின்றுகொண்டு பயணிகளிடம் டிக்கெட் சேகரித்தார். அவரிடம் நான், " கண்டக்டர் இன்னும் எனக்கு ஒரு பைசா மீதி சில்லறை தரவில்லை " என்று விளையாட்டாகக் கூறினேன். 

டிக்கெட் பரிசோதகர் மிகவும் சீரியசாகி விட்டார். உடனே கண்டக்டரைக் கூப்பிட்டு - அவரிடமிருந்து ஒரு பைசாவை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டு, " அவர் தர மறந்து போனாலும் நீங்க கேட்டு வாங்கிக்கணும் " என்றார். கண்டக்டரிடம், " இந்த மாதிரி விஷயங்களால் நம்ம சக்தி விலாஸ் பஸ் சர்வீஸ் பெயர் கெட்டுப்போய்விடும். இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார். 

பாருங்கள் - ஒரு பைசாவுக்கு அந்தக் காலத்தில் எவ்வளவு மதிப்பு இருந்தது என்று! 

அவ்வப்பொழுது கையில் இருக்கும் பைசாக்களை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி சேமித்து வைத்துக்கொள்வேன். 

JTS படித்த மூன்று வருடங்கள், அதற்குப் பின்பு பாலிடெக்னிக் படித்த மூன்று வருடங்கள் என்ற ஆறு வருடங்களில் இப்படி பைசா பைசாவாக சேர்த்து - அவ்வப்போது மிக்சர் மிட்டாய், சினிமா போன்றவைகளுக்குச் செலவழித்தது போக - முப்பத்தைந்து ரூபாய் நான் சேர்த்து வைத்திருந்தேன். மூன்று பத்து ரூபாய் + ஒரு ஐந்து ரூபாய். 

நான் சென்னையில் வேலைக்கு செலக்ட் ஆன பிறகு, பெட்டி படுக்கைகளை எடுத்து வர நாகை சென்றபோது என் அம்மா, ' டேய் நீ சேர்த்து வைத்திருந்த முப்பத்தைந்து ரூபாயை வீட்டு செலவுகளுக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொண்டுவிட்டேன்"  என்று சொன்னார்! 

= = = = = = =

50 கருத்துகள்:

  1. நீ சேர்த்து வைத்திருந்த முப்பத்தைந்து ரூபாயை...... மிகவும் ரசித்த வரி... குடும்பச் சூழ்நிலை, மகனின் மனசு நோகாமல் சொல்வது... எனப் பலவற்றையும் இந்தப் பெஉதியில் புரிந்துகொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  2. லட்சிய புருஷர்கள், வரலாற்றில் படிக்க சுகமானவர்கள். வாழ்க்கைக்குக் கடினமானவர்கள். அளவில் சிறிய உதாரணம்... பத்திரப் பதிவுத் துறையில் லஞ்சம் வாங்காத அதிகாரி வேலை பார்ப்பது போல

    பதிலளிநீக்கு
  3. மஹாத்மா காந்திஜி பற்றி அறிந்தவர்களிடம் 2 மற்றும் 3 எண்ணிட்டிருக்கிற கேள்விகளை நெல்லை ஏன் கேட்கச் சொன்னார் என்று தெரியவில்லை.

    இவை பதில் சொல்கிறவரை உளவியல் ரீதியாகப் புரிந்து கொள்கிற மாதிரி இருக்குமே தவிர காந்திஜி பற்றி அவர் அறிந்ததாக இருக்காது.

    கேள்விகளுக்கான பதில்களும் கால வித்தியாசத்தில் மாறலாம். என் காலத்து இலட்சிய புருஷர் காந்திஜி வேறே தற்காலத்து காந்திஜி பற்றிய மதிப்பீடுகள் வேறே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கால இடைவெளி மதிப்பீடுகளை முற்றிலும் மாற்றிவிடுவதில்லை ஜீவி சார். லட்சிய புருஷர்கள் நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக இருப்பது கடினம். தூர இருத்திப் பார்க்கும்போதுதான் எல்லாம் சுகம். அருகே வந்தால் சுட்டுவிடும்.

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. பதிவு வெளியாகிய அந்த விநாடியே வந்து விட்டேன்..

    நிறைய சொல்லலாம்...

    அணா பைசா காலத்தில் ஆழ்ந்து விட்டது மனம்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. நான் காந்திஜியை மதுரையில் சிம்மக்கல் பகுதியில் ஊர்வலத்தில் நேராகவே பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. காந்திஜியின் உயர்ந்த குணங்கள் என்று எவற்றைக் காண்கிறீர்கள்?

    Truth, Humility, compasson. உண்மை பேசுதல், தணிந்து போகுதல், மற்றவர்களையும் நேசித்தல்.

    2) நீங்கள் பெண்ணாக இருந்திருந்தால் காந்தியைப் போன்றவரைத் திருமணம் செய்திருப்பீர்களா?

    இல்லை. அவர் தலைவர் ஆக இருந்ததால் குடும்பத்தைப் பேணாமல் அப்படி வாழ முடிந்தது.

    3) உங்களுக்கு காந்தி போல அப்பா இருக்கணும்னு ஆசைப்படுவீங்களா?

    இல்லை. அவரவருக்கு விதித்ததே நடக்கும் என்று நம்புபவன் நான். அதே சமயம் அப்பா சில காரியங்களில் பெரிய தவறு செய்ததையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. நாகப்பட்டினத்தில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் உண்டா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காளமேகப் புலவர் காலத்தில் காத்தான் சத்திரம் என்று ஒன்று இருந்தது. அந்த இடத்தின் பக்கத்தில்தான் இப்போதைய பஸ் ஸ்டாண்ட் இருக்கு என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.

      நீக்கு
    2. நான் இப்படி கேட்டதன் காரணம் படத்தில் உள்ள பஸ் சத்திரம் பஸ் ஸ்டான்ட் (ஸ்ரீ ரங்கம்) பஸ் ஆக இருப்பதால்
      Jayakumar

      நீக்கு
    3. :))) நெட்டில் சுட்ட படம்.

      நீக்கு
    4. அந்தக் காலத்து சக்தி விலாஸ் பஸ் இணையத்தில் கிடைக்கவில்லை.

      நீக்கு
    5. படத்தை மாற்றிவிட்டேன். தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    நான் இன்னமும் இப்போதுள்ள காலகட்டத்தில் அந்தக்கால ஒற்றை ரூபாயின் மதிப்பை எண்ணி, எண்ணி இப்போதும் வியக்கிறேன். ஒற்றை பைசாவும் நினைவில் உள்ளது. ஆனால் ஒன்று, இந்த ஒன்று, இரண்டு, ஐந்து பைசாக்களை செலவழிக்கும் போது இருந்த ஒரு பெருமை இப்போது ஆயிரக்கணக்கில் செலவழிக்கும் போது வரவில்லை.

    அணா, பைசாக்களின் பெருமையை அம்மா, அப்பா கூறி கேட்டிருக்கிறேன். என் சின்ன வயது காலத்தில் கூட திரையரங்கில் தரை கட்டணம் இருபத்தைந்து பைசாதான்.((நாலணா) மறக்க முடியாத இளமை பருவ நினைவுகள்.

    இறுதியில் நீங்கள் சிரமப்பட்டு சேர்த்து வைத்ததை அம்மா வீட்டு செலவுக்காக எடுத்துக் கொண்டு விட்டதை சொன்ன போது ஒரு நொடி மனது வருத்தப்பட்டாலும், அதன் அடுத்த நொடியிலிருந்து இப்போது வரை தங்களுக்கு பெருமையாகத்தான் இருந்திருக்கும்./இருக்கும். ஏனென்றால் பார்த்துப் பார்த்து நாணயமாக சேர்த்த அந்த பணத்தின்(நாணயங்களின்) மதிப்பு அப்படி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலை கிடைத்த சந்தோஷத்தில் அம்மா செலவு செய்த என் சேமிப்பு எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை!

      நீக்கு
  11. துருக்கி வம்சாவளியினரிடம் காந்திஜி கொண்டிருந்த அன்பு நிகரற்றது..

    பதிலளிநீக்கு
  12. பத்து காசுக்கு கஷ்டப்பட்டாலும் அந்தப் பத்துக் காசு எத்தனை எத்தனை சந்தோஷம்!..

    இனி ஒருக்காலும் அத்தகைய வாய்ப்பு இல்லை..

    பதிலளிநீக்கு
  13. ரகுபதி ராகவ ராஜாராம் பாடல்
    வரி - எதற்காக யாருக்காக மாற்றப்பட்டது??..

    பதிலளிநீக்கு
  14. புலால் உணவகங்களின் சுகாதாரம் உலகத்தரம்..

    இங்கே மருத்துவமனையின் எதிரில் விரைவுப்பேருந்து நிலையம்.. அதை ஒட்டினாற் போல சாக்கடை.. இரவு 12 மணி வரைக்கும் தனியார் பேருந்துகளும் ஓய்வதில்லை... கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில்
    இரவு நேர பிரியாணி ஏவாரம் அமோகம்.. தள்ளு வண்டி என்றாலே பிரசித்தம்... சுத்தம் சுகாதாரம் பற்றி யாருக்கும் கவலை இல்லை.. அருகிலுள்ள கோயில் நகரத்தில் இதைவிட தாராளம்...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுவுமே உடனடி விளைவைத் தந்தால்தான் மக்கள் அலெர்ட் ஆவாங்க. ஐந்து பத்து வருடங்கள் கழித்து கேன்சர், கிட்னி பெயலியர் ஹார்ட் அட்டாக் போன்றவை வந்தால், அது எதனால் என ஆராயும் மனோபாவம் மக்களிடம் இருக்காது.

      நீக்கு
  15. கையேந்தி பவன் சாப்பாடு என்பதில் நடுவில் உள்ள வார்த்தையை நீக்கி விட்டு நன்றாகக் கவனிக்கவும்..

    எல்லாம் புரியும்!..

    பதிலளிநீக்கு
  16. தி நகர் பிரில்லியன்ட் டூடோரியல் வாசலில் 80-90 களில் இருந்த கையேந்திபவன் பிரசித்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! அந்த சமயம் அங்கே சென்றது உண்டு. ஆனால் ஷாப்பிங் நேரம் என்பதால் கவனித்ததில்லை.

      நீக்கு
  17. கேள்வி பதில்கள் அனைத்தும் நன்று.

    கே.ஜி.ஜி. அனுபவங்கள் - ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  18. பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
  19. Kgg பண அனுபவங்கள் அந்தக்காலத்தை ஞாபகம் ஊட்டின.

    காந்திஜி சாதி இன்றி அனைவரிடமும் அன்புடன் இருந்தமை , உண்மை பேசுதல் ,இந்திய சுதந்திரத்துக்கு பாடுபட்டது பிடித்திருந்தது.

    சிறுவயதில் கீறிய படங்களுடன் வந்த காந்தி கஸ்தூரிபா பற்றிய புத்தகம் பெயர் நினைவில்லை விரும்பி மீண்டும் மீண்டும் படித்திருக்கின்றேன்.

    மற்றைய கேள்விகளுக்கு பதில் நான் இந்திய நாட்டில் பிறக்கவில்லை.:)

    பதிலளிநீக்கு
  20. இளமை காலத்தில் கிடைத்த காசு அனைத்தையும் செலவு செய்து விடாமல் . "குருவி சேர்ப்பது போல "என்று சொல்வார்களே அது போல சேர்த்த காசு 35 ரூபாய். சேமிப்பின் மகிழ்ச்சியை சொல்கிறது.
    இப்போது உள்ள குழந்தைகள் சேமிப்பை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

    அம்மா வீட்டுசெலவு எடுத்து கொண்டது வருத்தம் இருந்து இருக்கும்,

    வேலை கிடைத்த சந்தோஷத்தில் அம்மா செலவு செய்த என் சேமிப்பு எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை! என்று சொன்னாலும் சின்ன வருத்தம் இருந்து இருக்கும்.அல்லது நம் சேமிப்பு வீட்டுச்செலவு உதவி இருக்கு என்ற பெருமையும் இருந்து இருக்கும்.


    சேமித்த பணத்தை ஊருக்கு எப்படி எடுத்து போகமால் இருந்தீர்கள்? அதுதான் ஆச்சரியம். என்ன வாங்க வேண்டும் என்று சேமித்தீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பத்தில், சென்னை வந்தது அசோக் லேலண்ட் எழுத்துத் தேர்வுக்காக. பிறகு ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று திட்டம். ஆனால் அப்பா பிறகு எனக்கு எழுதிய கடிதத்தில் சென்னையிலேயே தங்கி வேலை தேடுவது நல்லது என்று சொன்னதால் சென்னையில் நான்கு மாதங்கள் ( ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை 1971) தங்க வேண்டியதாகிவிட்டது.

      நீக்கு
  21. கேள்விகளும் பதில்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  22. திரிகரணம் என்று சொல்லப்பட்ட மூன்றனாலும் சைவமாக இருக்கும் ஒருவர் சமைப்பது தான் சைவ உணவு.. கண்டவனும் ஓட்டல் வைத்துக் கொண்டு சைவம் என்று சொன்னால் - நாமும் மனம் இசைந்து சாப்பிட்டால் - தவறு யார் மீது..

    ஏதோ ஒரு ஊரில் திருவிழாவின் போது எல்லா வகை ஓட்டல்களும் சைவமாகி விடுகின்றதாக பேசிக் கொள்கின்றனர்...

    இன்னும் இரண்டு மாதத்தில் திருவிழா வேறு வருகின்றது..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!