செவ்வாய், 26 மார்ச், 2024

சிறுகதை : அடுக்கு மல்லி - துரை செல்வராஜூ

 அடுக்கு மல்லி

துரை செல்வராஜூ

*** *** *** *** ***
" மா ஜீ.. பஹ்வான் ஹே.. லேகின் தோடா அச்சா சே .. காம் கர்னாச் சாஹியே.. அரே பாபா ஜீ .. கொய் முஷ்கில் நயி.. டேக் கேர்.. டேக் கேர்.. ஜேய் ஸ்ரீராம்.. ஜேய் ஸ்ரீராம்!.. "

விவரம் அறிந்து கொண்ட பக்கத்து வீட்டு சௌதாமினி ஆறுதல் கூறிச் சென்றாள்..

மதியம் வீட்டுக்கு வந்த அருண் வித்யாவிடம்  சத்தம் போட்டான்..

" எல்லாம் நீ செய்றதுக்கு என்ன?.. "

" நானா செய்ய மாட்டேங்கறேன்?.. அத்தை விடறதில்லை.. " என்றவள் -
' ராத்திரி ல தூங்கறதும் இல்லே.. தூங்க விடறதும் இல்லே.. அத்தையும் மாமாவும் தான் என்னயப் புரிஞ்சுக்கறாங்க.. ' - என்ற, நினைப்புடன் வித்யா உதட்டைக் கடித்துக் கொண்டாள்..


" டே.. ஏண்டா வித்யா கிட்ட சத்தம் போடறே... நாந்தான் செய்றதை ஒழுங்கா செய்யலை.. கொத்த மல்லிய  சரியா கிள்ளிப் போடலை..
மருமக மட்டும் பக்கத்துல இல்லேன்னா... "

காமாட்சியம்மாள் நன்றிப் பெருக்குடன் மாங்கல்யத்தைப் பற்றிக் கொண்டார்..

கூடத்துக் கட்டிலில் படுத்திருந்த தந்தையின் நெற்றியில் மெல்ல கை வைத்தான் அருண்.. 

சட்டென விழித்துக் கொண்ட சுந்தரம் - " எனக்கு ஒன்னும் இல்லப்பா..
அந்தப் புள்ளயும் காமாட்சியும் தான் ரொம்பவும் பயந்துட்டாங்க.. அவங்களுக்கு தைரியம் சொல்லு.. " 

- என்ற போது வாசலில் அழைப்பின் குரல்..

" அம்மா.. அம்மா!.. "

" என்னப்பா.. என்ன சேதி?.." காமாட்சியம்மாள் வாசலுக்கு வந்தார்.. 

அண்ணாச்சி மகனும் செட்டியார் மகனும் இன்னும் சிலரும் நின்றிருந்தார்கள்..

" நம்ம தெரு செங்கமலாட்சிக்கு தை மூனாங்கிழமை சந்தனக் காப்பு.. "

" அதான் ஐயர் கிட்ட சொல்லியிருக்கேன்.. அஞ்சு கிலோ ரவா கேசரி நாங்க உபயம் செஞ்சிடறோம் ன்னு.. "

" அது தெரியும் மா.... இருந்தாலும் வீட்டுக்கு வீடு நேர்ல சொல்லணும்னு வந்தோம்.. " கை கூப்பினார்கள்..

" ரொம்ப சந்தோஷம் பா!.. " காமாட்சியம்மாளுக்கு மகிழ்ச்சி..

இந்த நகரில் சந்துக்கு சந்து தெருவுக்குத் தெரு செங்கமலாட்சியும் முனீஸ்வரனும் சின்னச் சின்ன பீடங்களில் பிரதிஷ்டை ஆகியிருப்பார்கள்..

அந்தந்தப் பக்கத்து வசதிப்படி ஆடியிலோ ஆவணியிலோ தை மாசத்திலோ அபிஷேகம் அலங்காரம் பால்குடம் அன்னதானம் என்று கோலாகலமாகி விடும்.. இங்கே இந்தத் தெரு செங்கமலாட்சி கோயிலில்  காய்கறிக் கடை விட்டலுக்கு  முக்கிய பங்கு..

" அது என்னங்க செங்கமலாச்சி?.. " - வித்யாவிடம் கேள்வி..

" எனக்கு தெரியறதை விட உன்னோட மாமாவுக்குத் தான் அதிகமாத் தெரியும்.. நான் ஆபீஸுக்குக் கிளம்பறேன்.. நீ அவரையே கேட்டுக்க..  கவனமா இருங்க!.. '

அருண் புறப்பட்டு விட்டான்..

அரைத் தூக்கத்தில் இருந்த சுந்தரம் எழுந்து உட்கார்ந்து கொண்டார்..

" நீ பொன்னியின் செல்வன் கதை படிச்சிருக்கியாம்மா?.. "

" எங்க வீட்ல  முழுப் புத்தகமே இருக்கு!.. "

" புத்தகம் இருக்கட்டும்.. நீ படிச்சிருக்கியா?.. அதுல கல்கி எழுதியிருப்பாரே.. "

" கல்கியா?!.. "

ஆமாம்மா.. ஈழத்துப் பெண்..  மந்தாகினி வருவாங்க.. அருள் மொழியக் காவிரியில காப்பாத்துவாங்க.. கடைசியா தியாக வல்லியாகிடுவாங்க.. "

" ஆமா.."

" சிங்கள நாச்சியார்.. ன்னு  அவங்க வழிபாடு தான் இப்படி மாறிடிச்சுன்னு ஆய்வாளர்களும் அறிஞர்களும் சொல்றாங்க.. " 

" அப்படியா.. " - வித்யாவிடம் வியப்பு..

" ஆனா இது கற்பனை கதாபாத்திரம் ன்னும் ஒரு பேச்சு இருக்கே.. "  

" இருக்கட்டுமே.. அவங்க சொல்ற கோயில்  முந்திரிக் காட்டுக்குள்ள..   இப்போ முந்திரிக்காடு ராஜப்பா நகர் ன்னு ஆகிடுச்சு..  ஒருபக்கம் குந்தவை நாச்சியார் கல்லூரியும் வந்துடுச்சு.. அந்த வட்டாரமே துணை நகர் மாதிரி இன்னிக்கு இருக்கு..

" அப்போ கோயிலு?.. "

" அதான் இன்னமும் இருக்கே.. பெரிய முனீஸ்வரனும் அங்கே இருக்கார்.. சின்னதா மாரியம்மனும் கோயில்ல இருக்கிறா.. "

" சிங்கள நாச்சியார் ன்னும் சொல்றீங்க.. செங்கமலாட்சி ன்னும் சொல்றீங்க.. எது சரி?.. "

" ரெண்டுமே சரிதான்.. தாய் வழிபாட்டோட தொடர்ச்சி ன்னு தெரியுது!.. "

" அப்போ சுந்தர சோழருக்கு ஈழத்து மந்தாகினி தேவி காதலியா மாமா?.."

" இருக்கட்டுமே.. நமக்கு என்ன கஷ்டம்?.. அவங்க இங்கே சோழ நாட்டுக்கு வந்து தங்கிட்டதாகவும் அருண்மொழிக்கு நிழலா இருந்து காவேரியில ஒருதரம் காப்பாத்துனதாகவும் சுந்தர சோழருக்காக உயிர் தியாகம் செஞ்சதாகவும் கதை போகும்.. "

" ஆமா ல்ல.. " வித்யாவின் நெஞ்சுக்குள் பழைய பொன்னியின் செல்வன் ஓடிக் கொண்டிருந்தான்.

" இளவரசனைக் காப்பாத்திக் கொடுத்து மன்னருக்காக உயிர்த் தியாகம் செஞ்சவங்கள கையெடுத்துக் கும்புடுறதுல என்ன தப்பு?.. "

" ஆமா.. இவங்க தான் ஆராய்ச்சித் தில்கம்!... " காமாட்சியம்மாளிடம் சிரிப்பு..

" மாமா சொல்றதும் சரிதான் அத்தை.. எத்தனையோ இடத்துல படை வீரருக்கு நடுகல் கோயில் இருக்குதே!.. "

" அப்படிச் சொல்லும்மா!.. " இப்போது சுந்தரத்திடம் சிரிப்பு..

" இங்கே மட்டும் பத்து இடத்துக்கு மேல கோயில் இருக்கு.. சியாமளாதேவி, செங்கமலாட்சி, செங்கமலாயி, செங்களாச்சி அம்மன்.. ன்னு பலப்பல பேரு.. நம்ம தெரு சியாமளாதேவி கோயில் கூட நம்ம விட்டலோட தாத்தா கட்டுனது.. "

". இவங்க கூட செங்கமலாட்சி அம்மா மேல பாட்டு எழுதறே ன்னு.. "

" ஹை.. அப்படியா.. மாமா நீங்க பாட்டு எல்லாம் எழுதுவீங்களா... சொல்லவேயில்ல!.. "

" பாட்டா!.. கதை கூட எழுதுவாங்களே.. "

" ஓ.. மாமா  கதை எல்லாம் எழுதுவீங்களா!.. பரிசு வாங்கி இருக்கீங்களா?.."

". பரிசா.. ஒரு தகர சல்லி கூட கிடைச்சதில்லை.. பேனாவத் தேய்ச்சது தான் மிச்சம்.. "

" மாமா எழுதுன கதை பத்திரிக்கையில வந்துருக்கா  அத்தை!?.. "

" அன்னைக்குத்தான் நாங்க பத்திரிக்கையே வாங்கலையே!.. "

தங்கவேலுவின் பழைய  நகைச்சுவையுடன் காமாட்சியம்மாளிடம் மீண்டும் சிரிப்பு..

" மாமா.. மாமா.. உங்க கதை கவிதையெல்லாம் கொடுங்களேன்... நானும் படிச்சுப் பார்க்கிறேன்.." வித்யாவிடம் பரவசம்..

" கதயா?.. அதெல்லாத்தையும் விட்டல் அள்ளிக்கிட்டுப் போய்த் தான் ஒரு வருசம் ஆச்சே.. "

வித்யாவின் முகம் சோர்ந்து விட்டது..

" செங்கமலாட்சி பாட்டு மனசுக்குள் ல இருக்கும்மா.. அப்பறமா சொல்றேன்.. எழுதி வச்சுக்கோ.. "

சுந்தரம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வித்யா மயங்கிச் சரிந்தாள்..

" செங்களாட்சி.. மகமாயி.. "

" மா ஜீ பிஃர் பி க்யா முஷ்கில்?.. "

பக்கத்து வீட்டில் இருந்து சௌதாமினியின் பதற்றம்..

" ஒன்னுமில்ல டா.. ஒன்னுமில்ல.. " - என்றபடி தோளில் வித்யாவைத் தோளில் சாய்த்துக் கொண்ட காமாட்சியம்மாள்  - நாடியைப் பிடித்துக் கொண்டு காதருகில் எதையோ கேட்க வித்யாவிடம் மெல்லிய சிரிப்பு.. -

பதற்றத்துடன் அருகில் வந்த கணவரிடம் - " அருணுக்கு சொல்லிடுங்க.. அப்படியே ஐயருக்கும் போன் போட்டு தை மூனாங்கிழமை எல்லா செலவும் நம்மோடது.. ன்னு சொல்லிடுங்க.. " - என்றார் காமாட்சியம்மாள்..

" என்ன ன்னு சொல்றது.. எதுக்குன்னு சொல்றது!.. " சுந்தரம் வழக்கம் போலத் திகைத்து நிற்க -

சற்றே கனத்த சரீரத்துடன் உள்ளே வந்த சௌதாமினி நிலைமையை சட்டெனப் புரிந்து கொண்டாள்..

வித்யாவின் கன்னத்தை வாஞ்சையுடன் வருடினாள்..

 " நீங்க தாத்தா ஆய்ட்டீங்கோ..  மா ஜீ..  ரொம்ப ரொம்ப நல்ல சேதி.. லட்டு கொடுங்கோ.. லட்டூ!. "

*** 

49 கருத்துகள்:

  1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு




  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    கண் கவரும் படத்துடன் அழகு செய்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. இன்று வெளியாகியிருக்கும் கதையின் கருப்பொருளாக மலர்ந்திருப்பவள் - செங்கமலாட்சி அம்மன்.. சிங்கள நாச்சி என்பதே செங்கலாச்சி - செங்கமலாட்சி அம்மன் என்று வாதிடுபவர்களும் இருக்கின்றனர்.. எப்படியோ இருக்கட்டும்..

    இந்த அம்மனைக் குறித்து பாடல் ஒன்று எனது தளத்தில்...

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.

    நல்ல கதை. சென்ற செவ்வாயில் தொடர்ந்த கதை இன்றைய செவ்வாயில் சுபமாக முடிந்திருக்கிறது. அந்த குடும்பத்துடன் கூடவே இருந்த மாதிரியான உணர்வு. இப்படி உணர்வு குவியலாய் கதையை பின்னித்தர தங்களால் மட்டுமே இயலும். சிங்கள நாச்சியார், பல பெயர்களில் தெய்வமாகி இருப்பதை தெரிந்து கொண்டேன். அனைத்திற்கும் அவளே துணை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த குடும்பத்துடன் கூடவே இருந்த மாதிரியான உணர்வு...

      சில விஷயங்களை மற்க்கமுடியாது..

      தங்களது கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அழகிய கதை. எப்போதும்போல் சுப முடிவுடன். நன்றாக இருந்தது

    பதிலளிநீக்கு
  9. நல்ல குடும்பமே பல்கலைக் கழகம்.

    ஓவியம் இன்னொரு கதையின் க்ளோசப் படமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நல்ல குடும்பமே பல்கலைக் கழகம்.. ///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
    2. இன்னொரு கதையா? அது எங்கேயிருக்கிறது நெல்லை? சொன்னீரகளென்றால் அதையும் படித்து விட்டு வருகிறேன்.

      நீக்கு
    3. // ஓவியம் இன்னொரு கதையின் க்ளோசப் படமோ?// போன வார கதையின் பாத்திரங்களே இந்த வாரமும் தொடர்ந்து வந்துள்ளனர். போன வார வித்யா உடை பாழானதால், அருண் வருவதற்கு முன்பு மாற்று உடை அணிந்து வந்துள்ளார். போன வார கதையையே மறந்துவிட்டீர்களா நெல்லை!

      நீக்கு
  10. அப்படியென்றால் சென்ற வாரக் கதையின் இறுதியில் அடுத்த வாரம் நிறைவுறும் என்று போட்டிருக்கலாமில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேறு கதை - இது அதே கதா பாத்திரங்களுடன், வேறு ஒரு நிகழ்வு. துரை செல்வராஜூ அவர்களின் புதுமை யுக்தி.

      நீக்கு
    2. ஒரே கதாபாத்திரங்கள் - ஆனால் வெவ்வேறு கதைகள்.

      நீக்கு
    3. அப்படியா, தம்பீ!
      கொத்தமல்லியை அடுக்கு மல்லியோடு சேர்த்துத் தொடுப்பது எப்படி என்று எனக்குத் தான் குழப்பம் போலிருக்கு.

      நீக்கு
    4. கொத்தமல்லியால் இன்னல்.. அடுக்கு மல்லியால் ஆனந்தம்..

      எனக்குத் தான் சரியாக கொடுப்பதற்குத் தெரிய வில்லை அண்ணா..

      நீக்கு
  11. ஜீவி அண்ணா அவர்களுக்கு நல்வரவு..

    /// அப்படியென்றால் சென்ற வாரக் கதையின் இறுதியில் அடுத்த வாரம் நிறைவுறும் என்று போட்டிருக்கலாமில்லையா?.. ///

    29/1 ல் அந்தக் கதையை எழுதி 30/1 ல் அனுப்பிவிட்ட பிறகு அன்றிரவு தோன்றியதே இந்தக் கதை.. பச்சை வண்ண பாவாடை சட்டையுடன் பத்து வயது குழந்தையாக அன்னை வந்தாள்.. அதைத் தொடர்ந்து Fb ல் அன்னையின் ஓவியங்கள்.. தஞ்சையின் சியாமளாவை மறந்திருந்தது புரிந்தது.. பொன்னியின் செல்வன் மந்தாகினி தேவியை கதைக்குள் கொண்டுவந்து இப்படிப் புனைந்தேன்..

    இக்கதைக்கு ஸ்ரீராம் குறித்திருந்த நாள் வேறு நான் கேட்டுக் கொண்டதன் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன..

    இப்படியெல்லாம் கதைகளை என்னுள் விதைக்கின்ற அன்னைக்கும் பொதுவெளியில் சேர்ப்பிக்கின்ற ஸ்ரீராம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  12. @ கௌதமன்

    /// அது வேறு கதை - இது அதே கதா பாத்திரங்களுடன், வேறு ஒரு நிகழ்வு.. ///

    சட்டென்று வார்த்தைகள் வரவில்லை..

    அவசரத்துக்குக் கை கொடுத்த கௌதம் அவர்களுக்கு நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  13. @ ஜீவி அண்ணா..

    /// ஓவியம் இன்னொரு கதையின் க்ளோசப் படமோ?...///

    @ கௌதம்..

    போன வார கதையின் பாத்திரங்களே இந்த வாரமும் தொடர்ந்து வந்துள்ளனர்..

    19/3 தேதியில் முதல் பதிவு.. உண்மையில் இப்படியான கதைகளே மனதுக்கு நெருக்கம் ஆகின்ற்ன...

    இப்போதும் நெஞ்சுக்குள் சுந்தரமும் காமாட்சியம்மாளும் வித்யாவும் சௌதாமினியும் சுற்றிக் கொண்டு தான் இருக்கின்றனர்..

    பதிலளிநீக்கு
  14. /// பக்கத்து வீட்டு சௌதாமினி வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தாள்.. ///

    சௌதாமினிக்கான வர்ணிப்பு -

    /// சௌதாமினி பக்கத்தில் குடியிருக்கும் சேட்டு வீட்டுப் பெண்.. சின்ன வயது தான்..  உருண்டு திரண்டு குதிர் மாதிரி இருப்பாள்.. ///

    கதையை தட்டிக் கொண்டிருந்த போது சட்டென்று வந்த பெயர் - சௌதாமினி...

    இதற்கு என்னடா அர்த்தம்?.. என்று தேடியபோது மின்னல் போன்றவள் என்றார் காடு காத்த ஐயனார்..

    இது மாதிரி ஒரு சில - எனது உருவாக்கத்திற்குள்...

    இனிமேல் அவ்வப்போது அதுவும் பகிர்வில்!..

    என்று சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன்.. கௌதம் அவர்கள் மட்டுமே கண்டு கொண்டார்..

    சௌதாமினியும் ஒரு கதை முழுக்க வர இருக்கின்றாள்..

    யாரையும் விட்டு வைப்பதாக இல்லை!..

    பதிலளிநீக்கு
  15. //தஞ்சையின் சியாமளாவை மறந்திருந்தது புரிந்தது..//

    இந்த வரியையும் கொஞ்சம் விளக்கி விடுங்கள், தம்பீ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை கீழவாசலில்
      இருக்கும் கோயிலில் குடிகொண்டிருக்கும்இருக்கும் அம்மன்
      என்று கூகுளில் தேடிப்பார்த்துத் தெரிந்து கொண்டேன்
      நன்றி, தம்பி.

      நீக்கு
    2. இங்கே தஞ்சையில் சியாமளா தேவி என அம்மன் வழிபாடு நடைமுறையில்..

      இவளை செங்கமலாட்சி என்றும் சொல்வர்

      ஓரளவுக்கு கோயில்களாக ஒரு சில இடங்களில்..

      வீட்டுத் திண்ணையில் சித்திர ரூபமாக பல இடங்களில்..

      ஆடி, தை, பங்குனி மாதங்களில் அவரவர் வசதிக்கேற்ப விசேஷங்கள் செய்வர்...

      இந்த அம்பிகையை வழிபாட்டில் சொல்ல மறந்த குற்றத்தை இங்கே ஒப்புக் கொண்டிருக்கின்றேன்...

      எனது தளத்தில் இந்த அம்பிகைக்காக ஒரு பாட்டும் இன்று வெளியாகி உள்ளது..

      விரும்பினால் அங்கு வந்து தமிழ்த்தேன் அருந்தவும்...

      வருக அண்ணா..

      நீக்கு
  16. வடமொழி உச்சரிப்பு நேர்த்திகள் தம்ழ்த்தேனில் முக்குளித்திருப்பதைப்
    பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  17. ஒரே கதாபாத்திரங்கள் - வேறு வேறு கதைகள். சிறப்பு. நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  18. கதை நன்றாக இருக்கிறது.
    போன வார கதையும் படித்தேன்.
    இரண்டிலும் மனநிறைவு தருகிற நிறைவு பகுதி.

    சிங்கள நாச்சியார் செங்கமலாட்சி ஆன விவரமும், மாமா, மருமகள் உரையாடலும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இரண்டிலும் மனநிறைவு தருகிற நிறைவு பகுதி.///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. இன்றைய பதிவின் படத்தை இப்போது தான் உற்று கவனித்தேன்..
    அதென்ன கண்கள் கலங்கியிருக்கின்றன!..

    இத்தனை பேரு பக்கத்தில இருக்கறப்போ புள்ளத்தாச்சிப் பொண்ணு கலங்கலாமா?.. ராசாத்தி!..

    இது சந்தோஷக் கண்ணீர் ங்க..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  20. உணர்வு பூர்வமான சித்திரம்...

    ஒளி ஓவியர் கௌதம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  21. சார் வரைந்த படம் ஆனந்த கண்ணீருடன் வித்யா அழகு. படம் அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனந்த கண்ணீருடன் வித்யா அழகு.

      ஆனந்த கண்ணீருடன் வித்யா கொள்ளை அழகு.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  22. ஆகா! பொன்னியின் செல்வனுக்கு ள் மந்தாகினி சிங்கள நாச்சி செங்கமல நாச்சி அம்மனாகிய கதையை அறிந்து கொண்டோம்.

    நல்லதோர் கதைக்குள் வரலாறும் கலந்து சிறப்புறுகிறது. வாழ்த்துகள்.

    படமும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நல்லதோர் கதைக்குள் வரலாறும் கலந்து சிறப்புறுகிறது. வாழ்த்துகள்... ///

      அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!