சனி, 15 ஜூன், 2024

அரசை எதிர்பாராமல்.... மற்றும் நான் படிச்ச கதை

 


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\



\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\



\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

 

நான் படிச்ச கதை (JKC)

மூங்கில் குருத்து - திலிப் குமார்


திலீப்குமார (பிறப்பு 1951)  சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தாய் மொழி குஜராத்தி. இவரது முன்னோர்கள் குஜராத் கட்ச் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து சென்னையில் குடியேறியவர்கள். முறையான கல்லூரிப் படிப்பு இல்லை என்றாலும்  தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, ஆகிய மொழிகளில் திறமை உள்ளவர். .

1979 முதல் 1990 வரை கிரியா பதிப்பகத்தில் பணிபுரிந்தார். பின்னர் ஒரு இலக்கியப் புத்தகக் கடையை  நிறுவி நடத்தியபடியே எழுத்துப்பணியையும் தொடர்ந்தார்.

இவரது கதைகள் மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, வங்காளம், குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, மற்றும் ஜேர்மன் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

திலீப்குமாரின் கதைகளில் பல தமிழ் நாட்டில் வியாபாரத்திற்காகப் புலம் பெயர்ந்து வாழும் மத்திய தர குஜராத்திகள், மராத்தியரின் வாழ்க்கை, வறுமை, முதுமை, சமூக, உளவியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, 'இடம்–பெயர்ந்த’ ஒரு சமூகத்தின் மதிப்பீடுகள், நம்பிக்கைகள், பதற்றங்கள், நெருக்கடிகள், ஏமாற்றங்களைப் பிரதிபலிக்கின்றன.

இவர் தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்து கலிபோர்னியா, சிகாகோ, ஹார்வர்ட், யேல், டெக்ஸாஸ் பல்கலைக் கழகங்களில் உரையாற்றியுள்ளார்.

2002இல் இந்திய அரசு வழங்கும் "பாஷா பாரதி" என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்றவர்.

அசோகமித்திரன் "திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையான பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே, இவ்வளவு சிறப்பு அடையக்கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவரது எழுத்து உற்சாகம் தவிர்த்தது அல்ல." என்று குறிப்பிடுகிறார்.

"உயரிய அங்கதம் கையறுநிலைகளில் எழும் சிரிப்பு. இயலாமையின் புன்னகை. கைவிடப்பட்டவனின் கடைசிச் சிரிப்பு. திலீப் குமாரின் பல கதைகளில் அந்த புன்னகையை நாம் காண்கிறோம். அதுவே அவரை தமிழில் ஒரு முக்கியமான படைப்பாளியாக நிலைநாட்டுகிறது." என்று ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

எஸ்ரா இவரது மூங்கில் குருத்து என்ற இந்தக் கதையை 100 சிறந்த கதைகளில் ஒன்றாகத் தேர்ந்திருக்கிறார்.

முன்னுரை

இது இரு நாள் நிகழ்வை படம் பிடித்து குறும்படமாகக் காட்டும் கதை. கதையின் முக்கிய கரு ஒரு ஏழை பணியாளரின் வறுமையையம் அதன் காரணமாக ஏற்படும் இயலாமையும் சொல்வது. வருடம் தவறாமல் இறந்த தந்தையின் நினைவாக திதி கொடுக்க ஒரு பிராமணனுக்கு போஜனம், மற்றும் தட்சிணை கொடுக்க தேவையான  பணத்திற்கு அல்லாடும் கதை. அடுத்த நாள் சோற்றுக்கு அல்லாடும் தவிப்பு கூடுதல்.

மூங்கில் குருத்துக்கும் திவசத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? மூங்கில் குருத்து தந்தையின் விருப்ப உணவு. அவனது தாய் கணவரின் திதி அன்று மட்டும் அவரை நினைத்து உண்ணும் உணவு.

கதை அறிமுகம். (கதை சுருக்கம்)

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல் கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ் கடையிலும் அப்படித்தான்.

வாராவாரம் வியாழக்கிழமை தட்டி-பாஸ் தயவில் ’குலேபகாவலி’, ‘குலமகள் ராதை’ போன்ற ஒப்பற்ற ‘திரைக்காவியங்களை’ இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டுக் கனவுக்கன்னிகளின் திரட்சிகளை மனத்திற்குள் ஆலிங்கனம் செய்து, லுங்கியைக் கறைபடியச் செய்து கெட்டுப்போய்க் கொண்டிருந்த அநேகம் கடைப் பையன்களைப் போலத்தான் நானும். அண்ணன் சென்னைக்கு ஓடித்தொலைத்தாயிற்று. அக்காவை நீலகிரியில் ஒரு எஸ்டேட் மானேஜருக்குத் தாரை வார்த்தாகிவிட்டது. அக்காவின் அழகு அவளுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கூட்டிக் கொடுத்தது. தம்பிக்கு ஐம்பது ரூபாயில் ஒரு ரெடிமேட் ஃபாக்டரியில் வேலை. எனக்குத் திரு கிருஷ்ணாஜிராவ் தையல் கடையில்.

கிருஷ்ணாஜிராவ் தையல் கடையில் வாரக்கூலிக்கு வேலை செய்யும் ஒரு கடைப்பையன்  என்பதை சொல்ல  பத்து வாக்கியங்கள். இது போன்று மிக்கவிவரங்களும் வளவளவென்று கூடை கூடையாக எழுதுகிறார் ஆசிரியர். 

திரு கிருஷ்ணாஜி ராவ் மராத்தியர். குள்ளம், குண்டு, நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார். நிறையக் குடிப்பார் என்றாலும் தொழிலில் படுகில்லாடி. இதன் விளைவாகவே வெள்ளைக்கார கலெக்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிகவும் நெருக்கமானவராக ஒரு காலத்தில் திகழ்ந்தார். மல்யுத்த வீரன் கிங்காங்குக்கு “சூட்” தைத்து அதன் கச்சிதத்தில் அந்த மாவீரன் மயங்கி, உற்சாகத்தில் திரு ராவை, குழந்தையைத் தூக்குவதுபோல் தலைக்கு மேல் உயர்த்திக் கொஞ்சி விட்டுப் போனதும், பெருந்தலைவர் காமராஜர்க்குக் கதர்ச்சட்டை தைத்துக் கொடுத்ததும் இவரது நீண்ட தொழில் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

சுபிட்சத்திலிருந்து தரித்திரத்திற்குச் சரிந்த திரு ராவின் வீடும், தையற்கடையும், நவாப் ஹகீம் ரோடின் கோடியில் ஒரு சினிமாக் கொட்டகைக்கு எதிரில் இருந்தது. மேஜை, நாற்காலிகள், ‘கௌண்டர்கள்’, தையல் இயந்திரங்கள் அனைத்துமே நவீனமற்றுச் சிதைந்து பழமை பகரும். ஒரு கம்மிய இருள் கடைக்குள், எப்போதும்.

கோபிநாத்ராவ், பத்மநாத் ராவ் , கோவிந்த ராவ், தேஷ் பாண்டே, ரகுநாத் ராவ், பாண்டுரங்க ராவ், மல்லிகார்ஜுன ராவ் என்று ஒரு ஏழை மராட்டியர் பட்டாளத்தையே வேலைக்கு அமர்த்தியிருந்தார் ராவ். சில்லரை பண்ணுகிற சுகுமாரன் (வயது 10) மலையாளி. கணக்குப் பார்க்கிற நான் குஜராத்தி. கணக்கு என்றால் ஏதோ பெரியபெரிய பேரேடுகளைப் புரட்டிப் புரட்டி எழுதுகிற வேலை இல்லை. திரு. ராவ் இல்லாத சமயங்களில் வசூலாகும் பணத்தைக் கணக்கு வைத்து, அவர் வந்து வெற்றுடம்போடு அமர்ந்து ‘கத்திரி’ மார்க்கைச் சப்தத்துடன் உறிஞ்சி ஊதிக்கொண்டிருக்கிற சுமுகமான மனநிலையில் விவேகத்துடன் கொடுத்துவிட வேண்டும்.

அன்று சனிக்கிழமை

அன்று வசூல் பிரமாதம் இல்லை. பிற்பகல் மூன்று மணிவரை பதினைந்து ரூபாய்கூட வரவில்லை. இதற்குள் எல்லோரும் என்னிடம் ஓரிரு முறை வசூஎல்லோரும் கூலியைப் பற்றிய பீதியில் அரைமனத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். எவ்வளவு என்று தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தார்கள். மாலைக்குள் இருநூறு ரூபாயாவது ஆனால்தான் அனைவருக்கும் கூலி தர முடியும். ஆகும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை.

எல்லோரும் கூலியைப் பற்றிய பீதியில் அரைமனதுடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

எனக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அவள் கூட எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். இன்றோடு அரிசி தீர்ந்தது என்று மதியமே அறிக்கைவிட்டிருந்தாள். மறுநாள் அப்பாவின் ’திவசம்’ வேறு .திவசத்தன்று பிராமணனுக்குப் போடுகிற சாப்பாடு அப்பாவைச் சென்றடைகிறதோ இல்லையோ, இப்படி மாதக் கடைசியில் செத்துப் போய் கழுத்தறுத்திருக்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டேன். பின் அதற்காக வருத்தப்பட்டேன். தொடர்ந்து, நான் பெரியவனான பின் அப்பாவின் திவசத்திற்கு ஊரையே கூட்டி சாப்பாடு போடவேண்டும் என்று லஜ்ஜையன்று மனது உறுதி பூண்டது.

எதிர்த் திசையிலிருந்து தெருவைக் கடந்து திரு ராவ் வருவது தெரிந்தது. நன்றாக வெயிலில் அலைந்ததால் முகம் கிழடு தட்டிய ஆப்பிள் பழம் போல் சிவந்திருந்தது. அவர் ஒவ்வொரு அடியை வைத்த போதும் அவர் தொந்தி குலுங்கி குலுங்கி ஆடியது.

திரு ராவ் வந்ததை அறியாத பாண்டுரங்க ராவ் தனக்குத் தெரிந்த ஒரு மலையாளக் கெட்ட வார்த்தைக்குச் சுகுமாரிடம் அர்த்தம் கேட்டு அவனைச் சீண்டிக்கொண்டிருந்தான். திரு ராவ் மௌனமாக ஒரு ஒற்றனைப் போல் அவர்களையே கவனித்துக் கொண்டு நின்றார்.

 

மற்ற ராவ்கள் எல்லோரும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு காத்திருந்தார்கள்.

நாணிச் சிணுங்கிச் சிரித்தபடித் தலைநிமிர்ந்த சுகுமாரன் திரு ராவைக் கண்டதும் திகைத்து மிரண்டு போனான். திரு ராவுக்குக் கோபம் பீறிட்டது. மேஜைமேல் வைத்த துணிப் பொட்டலத்தை அவன் முகத்தை நோக்கி வீசிக் கொண்டே “என்னடா லௌடே கா பால் சிரிக்கிறே?” என்று பாய்ந்தார். துணிப் பொட்டலம் சுகுமாரனின் பிடரியில் பட்டு சிதறியது. அவன் நடுங்கிக் குனிந்தபோது அவன் காதில் பாதியும் கன்னத்தில் பாதியும் சேர்த்து ஒரு அறை விழுந்தது. “மாதர் சோத்! வேலையெ பாப்பானா சிரிச்சிட்டிருக்கான்... லௌடே கா பால்” தொடர்ந்து திட்டியபடி திரு ராவ், பாண்டுரங்க ராவ் பக்கம் திரும்பினார். அவர் திரும்புவதற்காகவே காத்திருந்தவன் போல சட்டென்றுத் தலையைக் கவிழ்த்து வேலையில் ஆழ்கிற பாவனை செய்தான் இவன். இப்படிச் செய்ததும் திரு ராவுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.

“ஏய் காய் கொஸ்டியே, புத்தி நஹி பெஹ்ன் சோத்” (ஏய் என்ன பேச்சு இது! புத்தி இல்லையா பெஹ்ன் சோத்) என்று உரத்த குரலில் சத்தம் போட்டார் திரு ராவ். பாண்டுரங்கராவ் ஏதோ சமாதானம் சொல்ல வாயெடுத்தான். உடனே திரு ராவ் அவனை மறித்து, “அமி விட்சார்த்தோ (த்) கசாலா? கசாலா ரே மா....தர் சோத்?” (நான் கேட்கிறேன் எதற்கு? எதற்கடா மாதர்சோத்?) என்று முன்பை விட வேகமாகக் கத்தினார். பின் ஓரிரு வார்த்தைகளைத் தாழ்ந்த குரலில் முனகிவிட்டு மீண்டும் குரலை உயர்த்தி “புட்டா மாதர் சோத்!... புட்டா மாதர் சோத்!” (கிழட்டு மாதர் சோத்! கிழட்டு மாதர் சோத்) என்று தீர்மானமான குரலில் கூறிவிட்டு வேகமாகத் தன் நாற்காலியை அடைந்து அமர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து ஃபோன் கிணுகிணுத்தது.

ஃபோன் செய்தவரோடு நெடுநேரம் ஒருமையில் சிரித்துப் பேசிவிட்டு வெளியே வந்தபோது திரு ராவின் கோபம் கணிசமாய் மறைந்துவிட்டிருந்தது.

நான் தயங்கித் தயங்கி திரு ராவிடம் டீ குடிக்க வெளியே செல்ல அனுமதி கேட்பதற்கு மணி ஏழாகிவிட்டது.

நம்பியார் கடை ரேடியோ விவசாயிகளுக்கான நிகழ்ச்சியைப் பரப்பிக் கொண்டிருந்தது. சுவையில்லாத ஆனால் சூடான டீ தொண்டைக்குள் இறங்கியதும் சிறிது தெம்பாக இருந்தது.

கடைக்குத் திரும்பியபோது திரு ராவ் உற்சாகமாக ஒரு வாடிக்கையாளரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். தவிர, இன்னும் பல வாடிக்கையாளர்கள் வந்து போனதற்கான தடயங்கள் காணப்பட்டன. பத்மநாத் ராவ் ஒரு சட்டை காலரின் உட்பக்க தையலை முடித்து விட்டு அதை வெளிப்பக்கம் உதறலுடன் திருப்பி நிமிர்ந்தான். என்னைப்பார்த்ததும் பற்களைக் காட்டிச் சிரித்தான். கூலிக்கான பணம் வசூலியாகியிருக்க வேண்டும்.

எனக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.

மணி ஒன்பதரை.

தரையில் அமர்ந்து வேலை செய்வதற்காக காலையில் விரித்த ‘காடா’ துணியை பாண்டுரங்க ராவ் உதறி மடிக்க ஆரம்பித்தான். நான் என் மேஜைக்குச் சென்றமர்ந்து ஒவ்வொருவார் கணக்கையும் சரிபார்த்து வைத்துக் கொண்டேன். பின் சொல்ல ஆரம்பித்தேன். வழக்கம் போல கூலி பட்டுவாடா நடைபெற்றது.

ஒரு சில நிமிடங்களில் எல்லோரும் கூலியைப் பெற்று கிளம்பினார்கள்.

நானும் திரு ராவும் தனிமையில் விடப்பட்டோம்.

ஒரு சில கணங்களின் யோசனைக்குப் பின் திரு ராவ் என்னைப் பார்த்து “நீ திங்கட்கிழமை வாங்கிக் கொள்கிறாயா?” என்று இந்தியில் கேட்டார். அம்மாவின் சிவந்த மூக்கு ஞாபகம் வர எனக்கு வயிற்றைக் கலக்கியது. நான் தாழ்ந்த குரலில் ”நாளை ரேஷன் வாங்க வேண்டும்” என்றேன்.

வாரக்கூலி கிடைக்கவில்லை என்று அறிந்தபோது ஆவேசமாய், திரு ராவின் குடும்பத்திற்கே சாபம் கொடுத்தாள் அம்மா. “ராஸ்கல், நாளை உன் அப்பாவுக்கு திவசத்தை வைத்துக் கொண்டு வெறும் கையோடு வந்திருக்கிறாயே! வெட்கமாக இல்லையா நாயே”

ஒரு சில நிமிடங்களுக்குப் பின் கடை சைக்கிளை ஓசைப்படாமல் சாத்தி வைத்துவிட்டுத் திடீரென்று உள்ளே நுழைந்தான் தம்பி. அவன் வந்ததும் ஒரு கணம் மௌனமாய் இருந்துவிட்டு, அவனுக்கும் விஷயம் தெரியட்டும் என்று, கோபத்துடன் “நாளைக்கு நீங்களும் மண்ணைத் தின்னுங்கள்! வருகிறவனுக்கும் மண்ணைப் போடுங்கள்” என்றாள்.

ஒருவாறாக அம்மாவின் ஓலம் அடங்கி கீழ்ஸ்தாயியில் அவள் பொரும ஆரம்பித்த பிறகுதான் வெகுநேரமாய் ஒரே இடத்தில் நின்றுவிட்டிருந்ததை நான் உணர்ந்தேன்.

லுங்கியை உடுத்திக்கொண்டு சமையற்கட்டின் விளக்கைப் போட்டான் தம்பி.

அப்போது ஏறக்குறைய தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த அம்மா பேச்சோடு பேச்சாகக் குரலை உயர்த்தி, “இந்த லட்சணத்தில் உன் அக்கா மூங்கில் குருத்தையும் வாங்கிக்கொண்டு வந்து போட்டு விட்டாள், நாளை குழம்பு வைக்க!” என்ற செய்தியையும் சொல்லி வைத்தாள்.

சட்டென்று எங்கள் இருவரின் பார்வையும் சுவரில் மாட்டியிருந்த பைக்குள் ஒளிந்துகொண்டிருந்த மூங்கில் குருத்துகளின் மேல் விழுந்தது. நான் உடனே போய் அதை எடுத்துப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தன. பசுமையாய்!


மூங்கில் குருத்துகள் அப்பாவின் நண்பர் நாயகத்தின் எஸ்டேட்டில் நிறைய வளைந்தன. மூங்கில்  குருத்துக் குழம்பு எல்லோருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும். எதேச்சையாக அப்பா இறந்த தினத்தன்றும் அம்மா மூங்கில் குருத்தையே சமைத்திருந்தாள். அப்பாவின் திவசத்தன்று தவிர மற்ற நாட்களில் அம்மா அதைச் சாப்பிட மாட்டாள்.

மூங்கில் குருத்தை இந்த வருஷமும் அம்மா சாப்பிட மாட்டாள் என்று நினைத்தபோது ரொம்பவும் அபத்தமாகப் பட்டது.

இரவு வெகுநேரம் கழித்துத் தம்பி இருட்டிலிருந்து ஏதோ பேசினான். அம்மா தூக்கமும் களைப்பும் பாரித்த குரலில், “வீட்டுக்காரியிடம் இரண்டு ரூபாய் கைமாத்து வாங்கித் தருகிறேன். காலையில் பிராமணன் வந்ததும் ‘கிருஷ்ணா மந்திர்’ இல் அளவுச் சாப்பாடும் ஒரு ஸ்வீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்துவிடு, அடுத்த வருஷம் வீட்டிலேயே சாப்பிட வைக்கலாம்” என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

நான் வாசற்கதவை அடைந்ததும் தன்னருகே இதற்காகவே வைத்திருந்த பையை, “இதைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போ” என்று வன்மத்துடன் என்னை நோக்கி வீசி எறிந்தாள் அம்மா. பை என் காலில் பட்டுத் தெறித்தது. அதிலிருந்த மூங்கில் குருத்துகள் தரையெங்கும் சிதறின. அவை வாடிப்போயிருந்தன.

நான் அம்மாவுக்கு முதுகைக்காட்டியவாறே ஒரு கணம் நின்றேன். திரும்பி அவளை நேருக்கு நேர் பார்க்கும் திராணி இல்லை. மனம் குழம்பி, நிறையக் கோபம் எங்கிருந்துமில்லாமல் வந்தது. “நீயே போய்ப் போட்டுக்கொள்” என்று கூறிவிட்டு நடந்தேன். எல்லாம் அர்த்தமற்றதாக இருந்தது.

பின்னுரை

கதை நீண்ட கதை. 32 பக்கம். சுருக்கி 10 பக்கமாக தந்திருக்கிறேன். பல கிளைக்கதைகளை தவிர்த்து விட்டேன். முக்கியமாக குறவர்கள் மேல் போலீஸ் நடத்தும் அராஜகம் மற்றும் கதை நாயகன் பொறியியற்கல்லூரிக்கு கோட் டெலிவரி செய்து பணம் புரட்ட முயற்சித்ததையும் விட்டுவிட்டேன். கதையை முழுதும் வாசித்தாலே கதையின் சிறப்பு புலப்படும்.

முன்பே சொன்ன மாதிரி ஒரு குறும்படம் ஆக கதை செல்கிறது. ஆசிரியர் நம் கையைப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு காட்சியையும் விளக்குகிறார். அவ்வாறு சொல்லும் போது சில காட்சிகள் தேவையற்ற ஒன்றாகத் தோன்றுகிறது.

உதாரணமாக

திரு ராவின் தொந்தியானது மற்றெல்லா தொந்திகளைவிடவும் பிரத்தியேகமானது. ரோமம் இல்லாத மார்புக்கு கீழே, மேல்வயிற்றில் ரகசியமாய்த் துவங்கி, அமைதியாய் முன் எழுந்து அவசரமில்லாமல் அரைவட்டம் போட்டு, பின் ‘வெடுக்’கென்று இறங்கிச் சரிந்து மறைந்தது அது. ராஜ வம்சத்து அழகிகளின் அழகான மார்பகங்கள், மதுக்கிண்ண வார்ப்புகளுக்கு மாதிரிகளாய்த் திகழ்ந்த மேற்கத்திய கதைகள் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால் வடிவ நேர்த்தி பற்றி அதிகம் கவலைப்படாத இந்தியக் குயவர்களுக்கோ, கால்பந்து தயாரிப்பாளர்களுக்கோ இது தெரிந்திருக்க நியாயமில்லை. இதன் விளைவாகவே ரொம்பவும் துரதிர்ஷ்டவசமாக திரு ராவின் தொந்தி பார்ப்பாரற்றுக் குலுங்கிக் கொண்டிருந்தது. (மண் பானை, கால்பந்து இவற்றிற்கு தொந்தியை ஒப்பிடுகிறார்)

இப்படிப்பட்ட விவரணம் தேவையில்லைதானே?  ஆனாலும்  வாசிப்பிற்கு ஒரு தடங்கல் இல்லை. ஆற்றொழுக்காக கதை செல்கிறது. மராட்டி, குஜராத்தி, இந்தி தெரியும் என்பதால் அவற்றையும் கதையில் புகுத்தியிருக்கிறார்.

மூங்கில் குருத்து என்பது அம்மாவை உருவகப்படுத்துகிறது (நிறம், மற்றும் உடலமைப்பு).  பசுமையான மூங்கில் குருத்து போன்று இருந்த அம்மா திவசம் தரமுடியாததில் வாடிப்போய் விட்டாள். 

**************கதையின் சுட்டி****************

 


16 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. மருத்துவர்கள் இப்படி துணிந்து செயல்பட வேண்டும்.

    அவரை வாழ்த்துவோம்...

    பதிலளிநீக்கு
  3. மருத்துவரின் சமயோசித அறிவுக்குக் கைதட்டல்கள். பாராட்டுகள். இப்படி மாற்றுச் சிந்தனைகள் - lateral thinking மிக அவசியம். எந்த இடத்திலும் எந்த உபகரணமும் இல்லாமல் உடனடி சிகிச்சைக்கான சமயோசித அறிவு மிக முக்கியம். மருத்துவர் மிக தைரியமாகச் செயல்பட்டதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். எல்லா மருத்துவர்களும் இப்படிச் செயல்பட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அரசின் உதவியை எதிர்பாராமல் வேளச்சேரி நாட்டார் குளத்திற்கான மறுவாழ்வு கண்ட தன்னார்வலர்களுக்குப் பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கதையை சுட்டிக்குச் சென்று முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம். இன்றைய சிறப்புச் செய்திகள் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
  7. அழியாச்சுடர்கள் தளத்தை எஸ் ரா அவர்கள் தான் வைத்திருப்பதாகச் சமீபத்தில் அறிந்தேன்.

    அந்தத் தளத்தில் கதைகள் வாசிப்பது கொஞ்சம் அயற்சியாக இருக்கும். எந்தவித ஃபார்மாட்டிங்கும் பாரா பிரித்தலும் இல்லாமல் தொடர்ந்து இருக்கும். இதை அத்தளத்தை நிர்வகிப்பவர்கள் சரி செய்யலாம். அழியாச்சுடர்கள் என்று தளத்தின் அழகான பெயருக்கு ஏற்ப கதைகளையும் ஃபார்மாட் செய்து கொடுக்கலாம்.

    கதை முழுவதும் வாசிக்கவில்லை. கண்ணைக் கட்டியது (தூக்கம் அல்ல!!!!!) அந்த ஃபார்மாட்டிங்க்! ஸோ ஒரு ப்ரேக்!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அவசர முதலுதவி அளித்த டாக்டருக்கு பாராட்டுகள். உதவிக் கரங்களையும் வாழ்த்துவோம்.

    மூங்கில் குருத்து பேசப்பட்ட கதை என தெரியும் முன்பு படித்திருக்கிறேனா என நினைவு இல்லை.


    பதிலளிநீக்கு
  9. கதையின் தலைப்பிற்கும் கதைக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்க வைத்தது முதலில். அப்பா மூங்கில் குருத்து சாப்பிடுவார் அவர் பிரியமான குருத்தை திவசத்தன்றும் கூடச் செய்ய இயலாத அளவு அந்த வீட்டின் வறுமை, கதையின் முக்கியக் கதாபாத்திரத்திற்கு வாரக் கூலி சரியாகக் கிடைக்கவில்லை என்பதால் திவசம் போட இயலவில்லை எனவே மூங்கில் குருத்து என்று புரிந்தது.

    அதைச் சொல்ல, ஒரு நாள் நிகழ்வின் காட்சிகளை மிகவும் minute details உடன் சொல்லிச் செல்கிறார் கதாசிரியர்! அப்படிச் சொல்லி வருகையில் கொஞ்சம் தேவையில்லாத வர்ணனைகள் என்று என் மனதிற்குப் பட்டது. ஆனால் அப்படி எழுதுவதுதான் சிறப்பு போலும்! பெரிய எழுத்தாளர்களே புகழ்ந்திருக்கும் போது நான் என் கருத்தைச் சொல்வது சரியல்ல.

    ஒரு குஜராத்தி குடும்பத்தின் வறுமை, வாழ்வாதாரம், வேலை செய்யும் இடத்தின் சூழல் என்று நகர்கிறது கதை. இப்படியான தொழிலாளிகளின் வாழ்க்கையும், இயலாமையும்....

    கதை ஓகே.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அம்மாவின் வசைப்பாட்டில் உள்ளடக்கமாய்த் திரு ராவ் இருந்தாலும் உருவாக நாளை வர இருந்த பிராமணரே திகழ்ந்தார். பிராமணர் தமிழர்தான். குஜராத்தி பிராமணர்களை அழைப்பது கைக்கு மீறிய காரியம். சோறு போட்டு ரூ 5.25 தட்சிணை தவிர ஒரு மேல் துண்டாவது தர வேண்டும். சலவன் வீதியில் வியர்வை வழியும் கறுத்த வெற்றுடம்புடன் திண்ணையில் அமர்ந்து மலிவான பேச்சுப்பேசி மகிழும் தரித்திரம் பிடித்த தமிழ் பிராமணனே போதும் என்று முடிவுசெய்து பல வருடங்கள் ஆகிவிட்டது//

    இதில் இவ்வளவு தேவையா என்று எண்ண வைத்தது. கொஞ்சம் உறுத்துகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாரங்கன்.... வட நாட்டிற்குச் சென்று அங்கு கடமைகளைச் செய்யும்போது, நம் தமிழ் பிராமணர்கள் எவ்வளவு ச்ரேஷ்டம் என்று நான் பொதுவாக நினைப்பேன். தமிழகத்தில் இன்னும் ஆசாரமாக, தங்கள் வழிமுறைகளை (குறைந்த பட்சம் வெளிப்படையான விஷயங்களில், உடை...போன்று) பின்பற்றுகின்றனர், வடநாட்டில் அப்படி இல்லை என்று தோன்றும். அதற்கு பலர், தேசாச்சாரம் (அதாவது அந்த அந்த நிலத்திற்கு உண்டான ஆச்சாரத்தை, நெறிமுறைகளை அவர்கள் கடைபிடிக்கின்றனர்) என்று சொல்லிவிடுவர்.

      நீக்கு
    2. ஆமாம் நெல்லை அதனால்தான் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது கொஞ்சம் நெருடியது மனதை. அந்தக் குறிப்பிட்ட லைனை நான் கோட் செய்யவில்லை. அதை என்னால் ஏற்க முடியவில்லை. கதையின் கரு என்ன என்று புரிந்தாலும் இந்த ஒரு குறிப்பிட்ட வரி ஏனோ எதற்கு என்று தோன்றியது. மனதை நெருடியது எதற்கு ஆச்ரியர் அதைச் சொல்லணும் அதுவும் இப்படியான வார்த்தைகளில்? ஏழை என்பது ஓகே. எலல வாத்தியார்களுக்கும்வ் வரும்படி கிடையாது எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன் ஆனால் மற்ற வார்த்தைகள்???? அதைச் சொல்ல வேண்டுமா? தகாத வார்த்தைகள் என்று தோன்றியது நெல்லை.

      கீதா

      நீக்கு
  11. கதையை வாசித்த போது அந்தக் காலகட்டத்தின் வாரக்கூலி வாங்கும் தொழிலாளியின் நிலை இப்பவும் மாறவில்லை என்றே பட்டது. வறுமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. அனைவரையும் பாராட்டுவோம்.

    இன்றைய கதை பகிர்வும் அருமை. கதையை ஆசிரியர் இயற்கையாக எழுதியு‌ள்ளா‌ர். சுட்டிக்குச் சென்று முழுக்கதையையும் படித்தேன். ஒரு நாள் கூலியை வைத்து கொண்டு அன்றாடம் வறுமையின் பிடியில் சிக்கி சிரமப்படும் மனிதர்கள், நரிக்குறவர்களின் தினசரி பிரச்சனைகள் என கதை யதார்த்தமாக இருந்தது. திறமையான வார்த்தை லாவகங்களுடன் கதை நன்றாக இருந்தது. நல்லதொரு பகிர்வை தந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. இனி வரும் காலங்களில் அரசை எதிர்பார்த்து அதிகாரிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பதை விட அந்தந்த இடங்களில் தேவையானவற்றை தனியாகவோ இணைந்தோ செய்வதுதான் சிறந்து என்ப்தை விளக்கும் செய்திகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. கதாசிரியடைப் பற்றிச் சொல்லியிருப்பது அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவியது.

    கதைச் சுருக்கம். நான் முழுக் கதையும் வாசிக்க வில்லைமொபைலில் வாசிப்பது கடினமாக இருக்கிறது. காரணம் பத்தி பிரிக்காமல் ஒட்டு மொத்தமாக வருவதால்.

    தலைப்பின் காரணத்தை நன்றாகப் பொருத்திப் பார்த்துச் சொல்லிவிட்டீர்கள்.

    பெரிய கதையாக இருந்தால் அதைச் சுருக்கி சாராம்சம் மாறாமல் மற்றவர்கள் சுருக்கத்தை வாசித்தே புரிந்துகொள்ளும் படியாக, ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வழங்கும்திறமை உங்களிடம் நிறைய காண்கிறேன், ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.

    சுருக்கத்திலிருந்து தெரிந்துகொள்வது கதாசிரியர் ஒரு சாதாரண வாரக்கூலி வாங்கும் பையன் மற்றும் அப்படியான நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கையை விவரித்து கூடவே ஒரு நாளைய காட்சிகளையும் விவரித்திருப்பது தெரிகிறது. அதனால் அப்பாவின் திதியைப் போட முடியாத சிரமமும் அந்தக் குடும்பம் அனுபவிப்பதையும் அந்தப் பையனின் இயலாமை மற்றும் விரக்தி கடைசி வரியில் தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!