வியாழன், 20 ஜூன், 2024

கணுக்காலில் கருப்புக் கயிறு

 சமீப காலங்களில் மத்தியபிரதேஷ் சற்றே அதிக வளர்ச்சி பெற்று விட்டதாக அறியப்பட்டதால் தவிர்க்க முடியாத காரணங்களால் நின்று போயிருந்த நடைப்பயிற்சியை மறுபடி தொடங்கினேன்.

பதினேழு வருடங்களுக்கு முன் என்னுடன் பணிபுரிந்து ஓய்வுபெற்ற என் அதிகாரி ஒருவர் என்னை வந்து சந்தித்தார்.  அவர் தோற்றம் பார்த்ததும், 'என்ன இவ்வளவு குச்சி மாதிரி ஆகிவிட்டார்' என்று ஆச்சர்யமாக இருந்தது.  அவருடன் இணைந்து போட்டோ எடுத்து பின்னர் பார்த்தபோதுதான் (எப்படி இருந்த)  நான் எப்படி இருக்கிறேன் என்றும் தெரிந்தது.  அதுதான் மீண்டும் நடைப்பயிற்சி!

நடைப்பயிற்சியை ஒரு கடமையாக தொடர்ந்து செய்து வருவதில் அடிக்கடி எனக்கு மனத்தடங்கல் ஏற்படும்.  ஒவ்வொரு முறையும் இன்று வேண்டாம், நாளை என்று ஒத்திப்போடுவேன், அபப்டியே தள்ளிக்கொண்டே சென்று விடும்.  அதை மறுபடி தொடங்க ஒரு கொழுப்பு சோதனை முடிவு தேவைப்படலாம்.  இப்போது மத்தியப்பிரதேச வளர்ச்சி!

நடக்க ஆரம்பித்ததும் ஆரம்ப உற்சாகத்தில் ரொம்ப தூரம் நடப்பது என்பது கூடாது என்பது என் முந்தைய அனுவங்களின் வாயிலாக அறிந்து கொண்டது.  தினமும் இவ்வளவு தூரம்தான் நடக்க முடியும் என்கிற அளவுக்குத்தான் தொடங்கி இருக்கிறேன்.  காலை ஒருமுறை, மாலை ஒருமுறை என்று நான் நினைத்ததே நட(க்க)த்த முடியவில்லை!  ஏதாவது ஒரு வேலை என்று மனதுக்குள் காரணம் சொல்லிக் கொள்கிறேன்!  உண்மையில் சோம்பேறித்தனம்தான் காரணம்!

எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம், முழங்கால்கள் ஒழுங்காய் இருந்தால்.  முன்னர் இடது முழங்கால் ரிப்பேராய் இருந்தது.  சமீப காலங்களில் வலது முழங்காலும் ரிப்பேர் ஆகி வலிக்கிறது.  சொல்லப்போனால் இடதை விட வலதுதான் அதிகம் வலிக்கிறது.  முட்டியின் இரண்டு பக்கங்களிலும் ஒரு கம்பியை சொருகி வைத்தது போல நீட்டினால் மடக்க முடியாமல், மடக்கினால் நீட்ட முடியாமல் வலிக்கும்!

ஒன்றரை வருடங்கள் இடைவெளியில் சென்றதால் முன்னர், அதாவது சென்ற நடைப் பயிற்சியில் நான் சந்தித்த செல்லங்கள், நான் குறிப்பிட்டிருந்த இரண்டு செல்லங்களில்  ஒன்று தள்ளி நின்று அன்பாராட்டும் (அன்பு + பாராட்டும்) செல்லம் குனிந்து ஆராய்ந்தாலும், நெருங்கி வந்து பழகிய மற்றொன்று கண்டுக்காமல் கடந்தது.  அதன் மறதி எனக்கு அதிர்ச்சி அளித்தது...   ச்சே...  இப்படி சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்...   ஆச்சரியமளித்தது என்று சொல்லலாம்.  இரண்டு மூன்று நாட்கள் இப்படியே கடந்தாலும் ஒரு நாள் ஓரமாக அமர்ந்திருந்த அது, என்னை புருவங்களை உயர்த்திப் பார்த்தது.  என்னையே பார்த்தது - தாண்டிச் சென்றும் அதன் பார்வை தொடர்ந்தது.  மறுநாள் சற்று தூரத்தில் நின்று முகத்தைக் குனிந்து மோப்பம் பிடித்துக் கன்பியூஸ் ஆனது.  மறுநாள் வாலை ஆட்டிக் கொண்டு பக்கம் வந்து விட்டது!  

ஆனால் குழந்தை அழாமல் பார்த்துக் கொண்ட செல்லமோ,(நினைவிருக்கிறதா என்ன?!) முதல் நாளே என் அருகில் வந்து பாதம் முகர்ந்து அடையாளம் கண்டு வாலாட்டிக் கொண்டே மேலே மேலே குதித்தது.   இது போன்ற சம்பவங்களால் சிலர் கலவரம் அடையக்கூடும்.  எனக்கு அது அடையாளம் கண்டு கொண்டது என்பது புரிந்ததால், பேசிக்கொண்டே அதன் நெற்றியை தடவி விட்டு நடந்து கொண்டே இருந்தேன்.

எல்லை பிரச்சனை வைத்திருக்கும் குழு ஒன்று குழுவாகவே ஏன் அருகில் வந்து முகர்ந்தபடி கடந்து சென்றது.  

நாம் தாண்டியதும் திரும்பிப் பார்க்கக் கூடாது.  நம் பின்னால் நாம் அறியாமல் (!) சற்று பின்னே வந்து 'நண்பனா, பகைவனா...  மூக்கினால் அறியலாம்' என்று சட்டம் கமலஹாசனைப் போல மனதுக்குள் பாடிக் கொண்டு ஆராயும்.  நம் ரத்தத்தில் பதட்டம் இருந்தாலும் அது நம்மை நம் வியர்வையின் வாசனையில்' எச்சரிக்கைக்குரிய நபர்' என்று குறித்துக் கொள்ளும் சாத்யக் கூறு இருக்கிறது!

இவை மறுநாள் முதல் என்னை தங்கள் பழைய கடப்பாளன் (கடந்து செல்பவன்) நண்பன்தான் என்பதை புரிந்து கொண்டு பிரச்னையின்றி தாண்டிச் செல்ல அப்ரூவ் செய்தன.

ஒரு புதிய செல்லம் ஐந்து குட்டிகள் போட்டிருக்க, அவை ஒவ்வொரு நாளும் நான் தாண்டும்போது கேட் கதவின் இடுக்கு வழியே வெளியே ஓடிவந்து மொலுமொலுவென என் காலை சுற்றி வந்து, எங்கே அதன் கழுத்தில் காலை வைத்து விடுவேனோ என்கிற பயத்தில்  நடக்க விடாமல் செய்து அவற்றைத் தூக்கிக் கொஞ்சச் செய்தன.   முதல் முறை அதன் தாய் அருகே வந்து என்னை கவலையுடன் பார்த்தது.  அடுத்தடுத்த நாள் அமர்ந்த இடத்திலேயே தலைதூக்கி பார்த்து விட்டு தூக்கத்தை கன்டின்யு செய்தது! 

மொபைலில் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்து தினசரி எவ்வளவு தூரம் நடக்கிறோம், எத்தனை கிலோமீட்டர், எத்தனை ஸ்டெப்ஸ் என்பதெல்லாம் பார்க்கும் வழக்கம் 2021 ல் என் மாமாவே (கொரோனாவில் மறைந்தவர்) செய்திருக்கிறார்.  ஆனால் என் எதிரே நடந்து வரும் பலர் கையில் மொபைலை வைத்துக் கொண்டு அதையே பார்த்தபடி நடந்து வருகின்றனர்.  இந்த App பைதான் பார்க்கிறார்களா, இல்லை வேறு ஏதாவதா என்பதை கணிக்க முடியவில்லை.  என் அண்ணன் மகன் கம்பெனியில் ஒரு வாரத்துக்குள் இவ்வளவு தூரம் நடக்கவேண்டும் என்று டாஸ்க் கொடுத்திருந்தார்கள்.  அதைக் கேள்விப்பட்டதிலிருந்துதான் இவர்கள் கம்பெனியிலும் அப்படி கொடுத்திருப்பார்களோ என்கிற சந்தேகம் வந்தது. 

ஒரு சோகம் என்ன தெரியுமா?  தாண்டி வரும் வழியில் மூன்று இடங்களில் சுடச்சுட வடை போட்டுக் கொண்டிருப்பார்கள்.  ஒரு துறவியின் மனநிலையோடு அனோஸ்மியா வந்தவன்போல் அதைக் கடந்து வரும் சிரமம் இருக்கிறது பாருங்கள்..   வார்த்தைகளில் வடிக்க முடியாத சோகம்!  என்ன வாசனை என்கிறீர்கள்?  எண்ணெயில் பொரிந்து பொன்னிறத்தில் செவசெவ என்று தட்டில் விழும் வடைகளை பார்ப்பது..  இல்லை, பார்க்காமலேயே கடக்க வேண்டும்.

நேற்று நடக்கையில் முன்னால் சென்ற ஒரு நடுத்தர வயதுக்காரர் இடது கணுக்காலில் ஒரு கருப்புக் கயிறு கட்டியிருந்தார்.  ஏனோ?  என்ன காரணமாயிருக்கும்?

கொஞ்ச தூரம் நடப்பதற்குள்ளாகவே முழங்கால்கள் வலிக்க ஆரம்பித்து விடுகின்றன.  அதை பாராட்டாமல் நடக்கவேண்டும் என்று வாட்ஸாப் டாக்டர்கள் சொல்லியதைக் கேட்டேன்.  எனவே  முடிந்தவரை தொடர முடிவு!

"அப்பா...  நீ இளையராஜா ரசிகன்தானே?  நடக்கும்போதும் அவர் பாட்டுதான் கேட்பியா?"  நடுவில் ஒரு நாள் பெரியவன் கேட்டான்.

"ஆமாம்..  அப்பாவுக்கு மெலடிதான் பிடிக்கும்..."  சின்னவன் சேர்ந்திசைத்தான்.

"போங்கடா...   உங்களுக்கு தெரியாதா?  நான் ஹெட்ஃபோனே யூஸ் பண்ண மாட்டேன்..  அப்புறம்ல பாட்டு கேக்க..."

"கேக்காதன்னுதான் நாங்களும் சொல்றோம்....  இளையராஜா பாட்டு கேட்டுகிட்டு நடந்தா மெலடின்னு ஸ்லோவாதான் நடப்பே..  ரஹ்மான், அனிருத் பாட்டு கேட்டுகிட்டு நடந்தா வேகமா உற்சாகமா நடப்பே..."

"ஆமாமாம்...   பைத்தியம் பிடிச்சாப்போல ஓடவேண்டியதுதான்!  நான்தான் பாட்டு கேட்டுகிட்டு நடக்க மாட்டேனே....  ஆனால் ஒன்னு...  இருக்கற முழங்கால் வலிக்கு இளையராஜா பாட்டுதான் பெஸ்ட்"


========================================================================================

சமீபத்தில் மறைந்த பாடகி உமாராமணன் அளித்த பழைய பேட்டி ஒன்று...


பின்னணி பாடகி உமராமணன் குறித்து அவர் கொடுத்த பேட்டியில் இருந்து
-
கணவர்கிட்ட வாங்கின முதல் சம்பளம்... 30 ரூபாய்!” சிங்கர் உமா ரமணன்.

'உங்களை ரொம்பவே மிஸ் பண்றோம். முன்பு மாதிரி சினிமா சார்ந்த உங்க பங்களிப்பு அதிகமாகணும்'னு ரசிகர்கள் பலரும் கேட்கிறாங்க. நானும் கணவரும் சினிமாவில் வொர்க் பண்ண எப்பயுமே தயார்தான்" - புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார் உமா ரமணன். 80, 90-களில் பின்னணிப் பாடகியாக சினிமாவிலும் தன் கணவர் ரமணனுடன் இணைந்து மேடைக் கச்சேரிகளிலும் கலக்கியவர்.

“சின்ன வயசுலேருந்து இசை ஆர்வமுண்டு. காலேஜ் கல்ச்சுரல் நிகழ்ச்சிகள்ல பாடி நிறைய பரிசு வாங்குவேன். எம்.ஏ முடிச்ச பிறகு, ஏர்ஹோஸ்டஸாக ஆசைப்பட்டேன்.

1972-ல் ஒருநாள் ரமணனைச் சந்திச்சப்போ, தன்னோட 'மியூசியானோ' இசைக்குழுவுல பாடக்கேட்டார். நானும் பாடினேன். 30 ரூபாய் சம்பளம் கொடுத்தார். அந்த நினைவுகள் எல்லாம் மனசுல பசுமையா பதிஞ்சிருக்குது.

தொடர்ந்து நாலு வருஷம் அவரின் இசைக்குழுவுல தனியாகவும் அவரோடு சேர்ந்தும் நிறைய கச்சேரிகள்ல பாடினேன். திடீர்னு ஒருநாள், `நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கலாமா'னு கேட்டார். நானும் சம்மதம் சொல்ல, நண்பர்களான நாங்க 1976-ல் தம்பதியானோம்.

80, 90-கள்ல நாங்க ரொம்ப பிஸியா கச்சேரிகள் செய்தோம். ஒரே நாள்ல பல கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. அந்தச் சமயத்துல எங்களுக்குப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்துச்சு. ரொம்ப பிஸியாவும் சந்தோஷமாவும் வொர்க் பண்ணிட்டிருந்தோம். இதுவரை 6,000-க்கும் அதிகமான கச்சேரிகள் செய்திருக்கிறோம்.

மேடைக் கச்சேரிகள்ல மட்டுமே பாடிட்டிருந்த நான், கணவரின் இசையமைப்பில் வெளியான 'நீரோட்டம்' படத்தில் பின்னணிப் பாடகியா அறிமுகமானேன். பிறகு, பல இசையமைப்பாளர்கள்கிட்டேருந்து பாடுறதுக்கு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு.

இளையராஜா சார் மியூசிக்ல 'இன்னும் சில பக்கங்கள்' படத்துல முதல்ல பாடினாலும், 'நிழல்கள்' பட 'பூங்கதவே தாழ்திறவாய்' பாட்டுதான் பெரிய ரீச் கொடுத்துச்சு. தொடர்ந்து ராஜா சார் மியூசிக்ல பல நூறு பாடல்களைப் பாடினேன்.

'ஆகாய வெண்நிலாவே', 'நீ பாதி நான் பாதி', 'பூபாளம் இசைக்கும்', 'ஆனந்த ராகம்'னு ராஜா மியூசிக்ல பாடின நிறைய பாடல்கள் சூப்பர் ஹிட்டாச்சு. அதனால அந்தக் காலத்துல 'ஹிட் லிஸ்ட் சிங்கர்'னு எனக்குப் பெயர் வெச்சுட்டாங்க. 'பூங்கதவே தாழ்திறவாய்', 'கண்ணும் கண்ணும்தான் (திருப்பாச்சி)' பாடல்கள் என் ஃபேவரைட்.
கணவர் ரமணன், சில படங்கள்ல நடித்தும், இசையமைத்தும், பின்னணிப் பாடல்கள் பலவும் பாடியுமிருக்கிறார். ஆனா, தொகுப்பாளராதான் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சன் டி.வி 'சப்த ஸ்வரங்கள்' நிகழ்ச்சியின் தொகுப்பாளரா 10 வருஷங்கள் சிறப்பா பணியாற்றினார். நூற்றுக்கணக்கான சிங்கர்ஸை உருவாக்கினதுல இவரின் பங்கு அதிகம்.
வீட்டில் இருக்கிறப்போ இசை சார்ந்தும், கச்சேரி சமயங்கள்ல மத்த விஷயங்கள் பற்றியும் விவாதிக்க மாட்டோம். வீட்டில் நாங்க இசைப்பயிற்சி எடுத்துக்கிட்டதுமில்லை. ஆன் தி ஸ்பார்ட்லதான் பாடுவோம்.

தம்பதினு சொல்லறதைவிட, நாங்க நல்ல நண்பர்கள். 2000-ம் வருஷத்துக்குப் பிறகு, எங்களுக்கு சினிமா வாய்ப்புகள் குறைஞ்சுடுச்சு. ஆனா, தொடர்ந்து இப்போவரை மேடைக் கச்சேரிகள்ல பாடிட்டிருக்கிறோம். சினிமா வாய்ப்புகள் வந்தால் ஆக்டிவா வொர்க் பண்ண நாங்க தயார். 'வீ ஆர் ஸ்டில் இன் தி ரேஸ்' என்று புன்னகைக்கிறார் உமா ரமணன்.

====================================================================================

 
இறந்த மகளுக்கு உயிரிழந்த இளைஞரை மணமகனாக உருவகப்படுத்தி பெற்றோர் நடத்திய வினோத திருமணம் அரங்கேறி உள்ளது. பெங்களூரு, கர்நாடக கடலோர மாவட்டங்களில் வசித்த வரும் துளு மொழி பேசும் மக்கள் வினோத சடங்கு ஒன்றை கடைபிடித்து வருகிறார்கள். அதாவது தங்கள் வீட்டில் உள்ள இளம்பெண் திருமணமாகாமல் இறந்துவிட்டால் அவருக்கு வரன் தேடி திருமணம் செய்து வைத்து அந்த சடங்கை நிறைவேற்றுகிறார்கள். இதில் விசேஷம் என்னவென்றால் அந்த மணமகனும் திருமணம் ஆவதற்கு முன்பே இறந்தவராக இருக்க வேண்டும். தொன்றுதொட்டு அவர்கள் இந்த சடங்கை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது.  திருமணம் ஆகாமல் இறந்த தங்கள் மகளின் ஜாதகம் மற்றும் சாதி, குலம் உள்ளிட்டவைகள், திருமணம் ஆகாமல் உயிரிழந்த வாலிபரின் ஜாதகத்துடன் ஒத்துப்போனால், அந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதுபோல் சடங்கை நிறைவேற்றுகிறார்கள். 

இதன்மூலம் தங்களது ஆசை நிறைவேறாமல் ஆவியாய் அலையும் ஆத்மாக்கள் சாந்தி அடையும் என்று துளு மக்களால் நம்பப்படுகிறது. இந்த திருமணத்தை அவர்கள் 'குலேய் (பேய்)என்று அழைக்கிறார்கள். இதுபோல் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. புத்தூர் பகுதியில் வசித்து வரும் துளு மொழி பேசும் தம்பதிக்கு ஒரு மகள் இருந்தாள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிறுமி இறந்துவிட்டாள். 

இந்த நிலையில் அவளுக்கு பேய் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் செய்தித்தாள் ஒன்றில் பேய் திருமணத்துக்காக இளம்பெண்ணுக்கு வரன் வேண்டும் என்று கேட்டு விளம்பரம் செய்திருந்தனர். அதன்பேரில் அந்த தம்பதியை மணமகன் வீட்டார் அணுகினர். பின்னர் இருவீட்டாரும் பேசி பேய் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்த திருமணத்தில், மற்ற திருமணங்களைப் போன்றே நிச்சயதார்த்தம் உள்ளிட்ட அனைத்து சடங்குகளும் நடத்தப்பட்டன. ஜவுளியும் எடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் இருவீட்டாரும் சேர்ந்து பேய் திருமண சடங்கை செய்து முடித்தனர். அப்போது மணப்பெண்ணுக்கான பட்டுப்புடவை, அலங்கார பொருட்கள் மற்றும் மணமகனுக்கான பட்டுவேட்டி, சட்டை உள்ளிட்டவைகளை படைத்து, அதன் மீது மாங்கல்யத்தையும் வைத்து இறந்தவர்களை நினைவுகூர்த்து வழிபட்டனர். இந்த வினோத திருமணத்தைக் காண அங்கு ஏராளமானோர் திரண்டனர். 

இதையடுத்து இரு குடும்பத்தினரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 50 பேரை மட்டும் அழைத்து திருமண சடங்கையும் முடித்து அவர்களுக்கு விருந்து அளித்தனர். இந்த திருமணம் மூலம் இறந்துபோன தங்களது மகன், மகளின் ஆன்மாக்கள் அமைதி பெறும் என்று அவர்கள் கூறினர். தற்போது இந்த திருமணம் தொடர்பான புகைப்படம புகைப்படமும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் வியப்படைய செய்துள்ளது.

=================================================================================

சந்தனக் கடத்தல் வீரப்பன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.  எரிச்சலூட்டும் இடங்கள் நிறைய உண்டு.  முதல் எரிச்சல் 'அவர்', 'இவர்' என்று வீரப்பன் விளிக்கப்படுவது.  அந்தப் புத்தகத்தின் முதல் பகுதியில் நான் படித்து மனம் நொந்த ஒரு இடம்...  வீரப்பன் நக்கீரன் நிருபரிடம் சொல்கிறான்...

"யானையை அடிச்சா மூச்சு அடங்க, கொறஞ்சது பத்து நிமிஷமாவது ஆகும்.  கடத்தியை அடித்தால் கூட,  அது ஓடற போக்கிலேயே கொஞ்ச தூரம் போய்தான் கீழே விழுந்து சாகும்.  ஒரு சமயத்தில் நான் கிட்டத்தில் போய் பார்க்கும்போது, குண்டடிப்பட்டு கிடக்கும் கடத்தி அதாவது கடமான், யானை எல்லாம் கண்ணீர் விட்டு அழுதிருக்கு.  சில யானையிலிருந்து நான் தந்தத்தை வெட்டிக்கிட்டு கிளம்பற வரைக்கும் சுடு ரத்தம் வந்துகிட்டே இருக்கும்.  

எனக்கும் கூட சில நேரத்தில் இதையெல்லாம் பார்க்கவே பாவமாய் இருக்கும். ஆனா என்ன செய்யறது,  ஒன்னு செத்தாதான் நாலு ஜீவன் வயிறு கழுவ முடியும் என்று எனக்கு வேண்டியதை எடுத்துக்குவேன். மீதியை 
பறவை மற்ற உயிரினங்களுக்கு இரையா விட்டுட்டு வந்துருவேன்."

===================================================================================

பறக்கும் மனிதன்....

**********************************************************************************************************************

இரண்டாம் உலகப் போரில் இந்த யானைக்கும் ஒரு சிறு பங்கு இருக்கிறது!


======================================================================================

என்ன சொல்கிறீர்கள்?...

அரைகுறையாய்ப் பெய்யும்
அல்ப மழை(யா)
அரண்டுபோக வைக்கும்
அசுர மழையா
எதை ரசிக்கிறீர்கள் நீங்கள்?
பாதுகாப்பான இடத்தில் நின்று,
நம்மை பாதிக்காதவரை
எதுவுமே
ரசிக்கும் மழைதான் .... Sep 24 2014

==================================================================================

நியூஸ்ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 

- புதிதாக பதிவியேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் 99 சவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.

புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட மத்திய மந்திரிகளின் கல்வி, சொத்து, மற்றும் வழக்கு விவ்ரங்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளீட்டுள்ளது.

அதன்படி புதிதாக பதவி ஏற்றுள்ள மத்திய மந்திரிகளில் 11 பேர் ப்ளஸ் டூ வரை படித்துள்ளனர். 57 பேர் பட்டப்படிப்பும், அதற்கு மேலும் படித்துள்ளனர். இவர்களில் 10பேர் சட்டம், பொறியியல், மற்றும் மருத்துவ பட்டதாரிகள். 7 பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள், 3 பேர் டிப்ளமோ முடித்துள்ளார்கள்.

28 மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 99 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.107.94 கோடி இருக்கும்.

ஊரக வளர்ச்சி, மற்றும் தகவல் தொடர்பு இணை மந்திரி டாக்டர் சந்திரசேகர பொம்மசானி ரூ.5705.47 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.427.75 கோடி.

கனரக தொழில்துறை மந்திரி எச்.டி.குமாரசாமிக்கு ரூ.217.23 கோடியும், அஸ்வினி வைஷ்ணவுக்கு ரூ.144.12 கோடியும் சொத்துக்கள் உள்ளன.  

- இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் டிஜிடல் பணபரிமாற்றம். 2018ல் 20.4% ஆக இருந்த பணபரிமாற்றம் 2023ல் 58.1.% ஆக உயர்ந்துள்ளதாக குளோபல் டேட்டா என்னும் தரவு ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

- கடந்த ஆண்டில் இணைய வழி வணிகம் மூலம் ரூ.30 கோடிக்கு ஆவின் பால், பால் பொருள்கள் விற்று சாதனை.

- மழை வேண்டி கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பது போன்ற வேண்டுதல்களை கேள்விப்பட்டிருகிறோம், கம்போடியா, மியான்மர், வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசியா நாடுகளில் கருப்பு பூனைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்றால் மழை வரும் என்ற வினோதமான நம்பிக்கை நிலவுகிறது.

‘ஹே நியாங் மாவ்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஊர்வலத்தில் கருப்பு பூனைகள் மூங்கில் கூடைகளில் வைக்கப்பட்டு, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நிறுத்தப்பட்டு, பாரம்பரிய இசை வாசிக்கப்படும். இப்படி செய்தால் மழை வரும் என்று நம்பிக்கை.- வேடிக்கைதான்.

- எதிர்காலத்தில் ஃபோன்களே இருக்காது, நியூராலிங்க் மட்டுமே – எலான் மஸ்க் கணிப்பு.

- புதுடெல்லி: ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் என்பது தற்கொலைக்கு நிகரானது என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) தலைவர் டி.பி. சக்லானி தெரிவித்துள்ளார்.

"பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாதபோதிலும், ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் என்பது தற்கொலைக்கு நிகரானது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை திணிக்கும் பழக்கம் குழந்தைகளிடையே அறிவு இழப்புக்கு வழிவகுக்கிறது. அதோடு, அவர்களின் வேர்கள் மற்றும் கலாச்சாரத்திலிருந்து அவர்களை விலக்குகிறது. என்று அவர் கூறியிருக்கிறார்.

- சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுவதையொட்டி பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்களில் ஊர்களில் இடம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து  தோல்வியுற்ற ஏகனாபுரம் மக்கள் ஆந்திராவில் தஞ்சம் அடைய தீர்மானித்துள்ளனர்.  தமிழகத்திற்கு இது தலைகுனிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

- மஹாராஷ்டிராவில் மாமனாரின் 300 கோடி சொத்தை அபகரிக்க வேண்டி நடைப்பயிற்சி செல்லும் வேளையில் ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் கூலி கொடுத்து இரண்டு ஆட்களை வைத்து மாமனாரைக் கொலை செய்துள்ள பெண் அதிகாரி!

-"நீங்கள் இறந்து விட்டதால் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க முடியாது" என்று சம்பந்தப்பட்ட, அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதியிடமே அரசு அதிகாரிகள் கையெழுத்து பெற்ற சம்பவம் சென்னையில்!

- போலீஸ்துறையின் கொடுமைகள் குறித்து மொட்டை கடிதங்கள் எழுதியதாக பணி நீக்கம் செய்யப்பட போலீஸ் கான்ஸ்டபிளை, 23 ஆண்டுகளுக்குப் பின் மறுபடி பணியமர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டு, ஆறு வார கெடு விதித்துள்ளது!


======================================================================================


பொக்கிஷம் :




94 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதி வழக்கம் போல சுவாரஸ்யமாக இருக்கிறது. விட்ட நடைப்பயிற்சியை மீண்டும் தொடர்ந்ததற்கு வாழ்த்துகள். முன்பு இது போல் எழுதியதும் நினைவில் உள்ளது.

    செல்லங்கள் தங்களை யாரென தெரிந்து கொண்டு முன்பு போல உடன் பழகுவது ஆச்சரியம் அளிக்கிறது. (அவைகளின் நினைவாற்றலை கண்டு)

    இங்கும் நிறைய பேர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே காலில் (கணுக்காலில்) கறுப்பு கயிறு கட்டிக் கொள்கிறார்கள். கண் திருஷ்டிக்கோ, இல்லை பேஷனோ என நானும் நினைத்துக் கொள்வேன்.

    உங்கள் மகன்களுடான சம்பாஷணைகள் சுவாரஸ்யம். இருப்பினும் இளையராஜாவை நீங்கள் விட்டுத் தரவில்லை. :)) மீண்டும் பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.  நானும் இதுவரை எத்தனை எத்தனை முறை இடைவெளி விட்டு நடைப்பயிற்சி ஆரம்பித்திருக்கிறேன் தெரியுமா?!!  கணுக்காலில் கறுப்புக் கயிறு என்றால் அவர் வலிப்பு நோய் உள்ளவராக  இருக்கலாம் என்று நினைத்தேன்.  மேலும், பொதுவாக கயிறு கைகளில்தானே கட்டிக்கொள்வார்கள்!  மகன்கள் அடிக்கடி என்னை வம்பிழுப்பார்கள்!

      நீக்கு
  3. ஹி..ஹி.. மத்திய பிரதேஷ் வளர்ச்சி?..
    வாசிப்பின் ஆரம்பத்திலேயே கவனத்தைக் கவர்ந்த வரி!

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில் ரஜினி காந்த் பற்றி குறிபபுகள் இருந்தால் தவறாது பகிர்ந்து கொள்ளுங்கள்.
    சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீரப்பன் புத்தகத்திலா?  இப்போதுதான் இரண்டாம் பகுதி வந்திருக்கிறேன்.  மொத்தம் நான்கு பாகங்கள்.

      நீக்கு
    2. என்ன அப்படிக் கேட்டுட்டீங்க? நிறைய சுவாரஸ்யங்கள் அடங்கிய விவரங்கள் அல்லவா அவை?

      நீக்கு
    3. ஆம்.  அந்தப் புத்தகத்தை தடை செய்ததாகவும் அறிகிறேன்.  ஆனால் அத்தியாயத்துக்கு அத்தியாயம் காவல்துறை, அரசும், வீரப்பன் குழுவும் மாற்றி மாற்றி கும்பல் கும்பலாக கொலை செய்கிறார்கள்.

      நீக்கு
    4. டிஷ்யூம் டிஷ்யூம் படம் பார்த்தது போன்றா!? ஸ்ரீராம்? அப்படித்தானே காட்டுவாங்க மாறி மாறி போட்டுத் தள்ளுவாங்க. புத்தகம் யார் எழுதியது? உண்மையை சொன்னாலும் சரி, தூக்கி வைத்துக்கொண்டாடினாலும் சரி தடை செய்யப்படும். இது எந்த வகை? ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    5. புத்தகம் எழுதி இருப்பது நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியன்.  ஆனால் அப்போதே அவரை நக்கீரன் குழுமத்திலிருந்து வெளியேற்றி விட்டதாக அறிந்தேன்.  நீங்கள் சொல்லி இருப்பது போல மசாலா படங்களில் லாஜிக்கே இல்லாமல் எதிர்படுவோரை எல்லாம் கொல்வார்களே..  அதே போல தங்கள் தனி "கொல்கை" மற்றும் நியாயங்களில் இரு தரப்பும் மக்களை போட்டுத் தள்ளுகிறது!

      நீக்கு
  5. நடைப்பயிற்சிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். பின்னால் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...    பின்னால் நடக்கும் பயிற்சியா?  ஹிஹிஹி...   சும்மா ஜோக்!

      நீக்கு
  6. ஆனாலும் உங்களுக்கு கொழுப்பு ஜாஸ்தி என்று சொல்வோம். அது இதுதானா? கொழுப்பையும் செல்லங்களையும் இணைத்து கட்டுரை எழுத முடிகிறது. கொழுப்பைக் குறைக்க நடக்கலாம் என்பதோடு செல்லங்களின் உணர்வுகளையும் விவரித்தது உங்களுக்கு மட்டுமே உள்ள கொழுப்பு.

    வயிற்றுக்கொழுப்பு கரையாது. அது 70க்கு மேல் கடைசி காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நெல்லை நடக்காத நடையா? ஆனாலும் அவருடைய வயறு குறையவில்லை. முட்டி வலிக்கு நம்ம பாஸ் kneecap உபயோகிக்கிறார். மெடிக்கல் ஷாப்பில் கிடைக்கும். வெளியில் நடக்கும் போது மட்டும் காலுக்கு ஒன்றாக சாக்ஸ் போன்று அணிந்து கொண்டு செல்வார். அது வலியைக் குறைக்கும்.
    பேய் திருமணம் வித்தியாசமான செய்தி. விருந்து நடத்த ஒரு சாக்கு, நல்லது தான்.

    click at the right moment photo is good.

    அடை மழையோ
    சாரல் மழையோ
    எதுவானாலும்
    பாதிக்காத மழை
    மழலையின்
    முத்த மழை

    இந்த வார செய்திகளில் பலவும் context புரியாமல் இருக்கிறது. //- 58.1.% ஆக உயர்ந்துள்ளதாக குளோபல் டேட்டா என்னும் தரவு ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.// எது?

    பொக்கிஷத்தில் "முதல் இரண்டு நிமிசம் என்னைத் திட்டிட்டுதான் விசயத்துக்கு வருவா" டாப். மற்ற ஜோக்குகளும் நன்றாக உள்ளன.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொழுப்பை ரசித்த உங்களுக்கு நன்றி!

      முன்னர் குறிப்பிடத்தக்க அளவு கரைத்திருக்கிறேன்.  இப்பவும் கொஞ்சம் குணம் தெரிவதாக நம்புகிறேன்.  பார்ப்போம்.  முயற்சி உடையார் இகழ்ச்சி முதலியார்....   சே..  இகழ்ச்சி அடையார்!

      Knee cap நானும் வைத்திருக்கிறேன்.  பெரிய உபயோகம் எதுவும் இல்லை.

      கவிதை..  குழந்தையின் ஜொள்ளை சொல்கிறீர்களா?  ஹிஹிஹி..  லொள்ளு!

      ஜோக்ஸ் கூட பாஸாகி விட்டன போல...  நன்றி JKC  ஸார்.

      நீக்கு
    2. செய்திகளில் குழப்பம் என்னுடைய தவறு.  சரியாக காபி பேஸ்ட் செய்யவில்லை.  ஒரு கையில் காபி, இன்னொரு கையில் காபி பேஸ்ட் என்று செயல்பட்டதால் வந்த வினை!!  இப்போது படித்துப் பாருங்கள்.  சரியாக இருக்கும்.

      நீக்கு
    3. நடைப்பயிற்சி எடை குறைப்புக்கு என்ற தவறான புரிதல் இருக்கு. நடைப் பயிற்சி இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் பொதுவான ஆரோக்கியத்துக்கும்தான். அப்புறம் ஏன் தொப்பை வந்தால் நடக்கறாங்கன்னா, உட்கார்ந்துகொண்டே இருந்தால் தொப்பை போடும் என்பதால் மூவ்மென்ட் கொடுக்கறாங்க. எவ்வளவு நடக்கணும்? வேகமா அரை மணி அல்லது நாற்பது நிமிடங்கள்.

      தொப்பை குறையணும் உடல் எடை குறையணும்னா இனிப்புகளைத் துறக்கணும், தட்டில் சாதம் போட்டுக்கொண்டு குளம் வெட்டி குழம்பு, ரசம், மோர் என மூன்று தடவைகள் சாப்பிடக் கூடாது. அதிக எண்ணெய் உபயோகத்தை நிறுத்தணும். உப்பைக் குறைக்கணும், அது உடலில் நீரை சேமிக்கும் என்பதால்.பெண்கள், சமையல் செய்த கஷ்டத்தை நினைத்தும் பொருட்களின் விலையை நினைத்தும் மீதமான உணவை வயிற்றுக்குள் தள்ளக் கூடாது. அவ்ளோதான்.

      நீக்கு
    4. இதெல்லாம் செய்ய முடியாதவங்க, தமன்னா உடலைப் பார்த்தோ இல்லை உறவினர்களில் சிலர் குளம் வெட்டிச் சாப்பிட்டும்்ஒல்லியான உடல்வாகைப் பெற்றிருப்பதையும் பார்த்து பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான்.

      நீக்கு
    5. // நடைப்பயிற்சி எடை குறைப்புக்கு என்ற தவறான புரிதல் இருக்கு. நடைப் பயிற்சி இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் //

      அதெல்லாம் சரிதான் நெல்லை.  ஆனால் இதற்கும் உதவும்.  அப்புறம் நான் எப்பவுமே குளம் வெட்டி சாப்பிடுவது இல்லை.  சில வருடங்களுக்கு முன்னாவது  சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் (அப்போது கூட இந்த பாதிப்பு இருந்தது இல்லை!) இப்போது அதுவும் கிடையாது.  எண்ணெயில் பொரிக்கும் எதுவும் சாப்பிடக் கிடைப்பது இல்லை.  சாதம் குறைந்த அளவும், ரசம், மோர் போன்ற நீர்வகை அதிகமாகவும் போட்டு வயிற்றை ரொப்புகிறேன்!

      நீக்கு
    6. // ஒல்லியான உடல்வாகைப் பெற்றிருப்பதையும் பார்த்து பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான். //

      ஆனா அவர்கள் என்னடான்னா குளம் வெட்டி சாப்பிடுகிறார்கள், ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறார்கள், சமோசா பப்ஸ் என்று வெட்டுகிறார்கள்...  ஆனால் ஒல்லியாகவே இருக்கிறார்கள்!!! 

      'முருகா..  இதென்ன சோதனை' என்று கே பி எஸ் குரலில் கேட்க வேண்டியதுதான்!

      நீக்கு
  7. பா.வெ. வாசித்து திரட்டிக்
    கொடுத்திருக்கும் தகவல்கள் சுவாரஸ்யமாபவை.
    என் ஃபேஸ் புக் நண்பர் ஒருவரிடம் (!) இதையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டுமே என்று உடனே தோன்றியது.
    எப்படி அதைச் செய்யலாம் என்று யோசனை ஓடியது.

    ஸ்ரீராமபிரானே துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன, காபி பேஸ்ட் தான். ' உபயம் எங்கள் பிளாக்' என்கிற வரியோடு!!

      நீக்கு
    2. //பா.வெ. வாசித்து திரட்டிக்
      கொடுத்திருக்கும் தகவல்கள் சுவாரஸ்யமாபவை.// நன்றி. செய்திகளை யாராவது படிக்கிறார்களா? என்று தோன்றும். தி.கீதா, கோமதி அரசு, கமலா ஹரிஹரன் போன்றவர்கள் குறிப்பிடுவார்கள். ஜெய்குமார் சார், இப்போது நீங்கள்... ரைட், ரைட்! பானு ஹாப்பி! :))

      நீக்கு
    3. ஜீவி என்றால் ஜெய்குமார் அல்ல.
      இந்தக் குறிப்பை பா.வெ. பார்க்கப் போவதும் இல்லை.

      நீக்கு
    4. ஜீ.வி என்றால் ஜெயக்குமார் அல்ல என்று எனக்கு நன்றாகவே தெரியும்🙂 நியூஸ்ரூம் செய்திகளை யாரெல்லாம் வாசிக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு ஜெயக்குமாருக்கு பிறகு ஒரு கமா போட்டு 'இப்போது நீங்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறேன். ஜீ.வி சாரின் கருத்தை ஹைலைட் செய்திருப்பதால் நான் அளித்திருக்கும் பதில் அவருக்கு என்பதுதானே பொருள்? @ஜீ.வி. சார் என்று குறுப்பிட்டிருக்க வேண்டுமோ?

      நீக்கு
    5. ஜீ.வி என்றால் ஜெயக்குமார் அல்ல என்று எனக்கு நன்றாகவே தெரியும்🙂 நியூஸ்ரூம் செய்திகளை யாரெல்லாம் வாசிக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு ஜெயக்குமாருக்கு பிறகு ஒரு கமா போட்டு 'இப்போது நீங்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறேன். ஜீ.வி சாரின் கருத்தை ஹைலைட் செய்திருப்பதால் நான் அளித்திருக்கும் பதில் அவருக்கு என்பதுதானே பொருள்? @ஜீ.வி. சார் என்று குறுப்பிட்டிருக்க வேண்டுமோ?

      நீக்கு
  8. மத்தியபிர்தேஷ் - ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்!!! நீங்க தேஷ் போட்டிருக்கீங்க நான் என் மகனிடம் சொல்வது ம பிரதேசம் வளராம பார்த்துக்கோ அது போல உபிரதேசமும் கவனமா இருக்கணும். தக்ஷினபிரதேசம் ரொம்ப முக்கியம் மபி நல்லா இருக்கணும்னா....மபிரதெசத்தின் உள்நாட்டிலும் கலவரம் வராம பாத்துக்கணும் என்று நானும் மகனும் இப்படித்தான் பேசிக் கொள்வது. ரெண்டு பேருமே இனியவர்களாச்சே!!!!! அது போல கோழிக் கொண்டை யோட ஹெல்த் ரொம்ப முக்கியம்னு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. செல்லங்களுக்கு வரேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. நடைப்பயிற்சி மீண்டும் தொடர்வது மகிழ்ச்சி.

    //எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம், முழங்கால்கள் ஒழுங்காய் இருந்தால். //

    ஆமாம். கால்வலி, முட்டிவலி இருந்தால் 10 நிமிட நடை சற்று ஓய்வு , மீண்டும் நடை என்று கடைபிடிக்க சொல்கிறார் மருத்துவர்.

    //எண்ணெயில் பொரிந்து பொன்னிறத்தில் செவசெவ என்று தட்டில் விழும் வடைகளை பார்ப்பது.. இல்லை, பார்க்காமலேயே கடக்க வேண்டும்.//

    நடைப்பயிற்சியின் போது இது போன்ற ஆசை எழுவது தப்பாச்சே!
    நடைப்பயிற்சி செய்யும் இடங்களில் இப்படி அருகம்புல் ஜூஸ் , முடக்கத்தான் சூப் , மற்றும் பண்டங்கள் விற்கிறார்கள்.

    செல்லங்கள் தங்களை வளர்த்தவர் என்று அறிந்து கொண்டு இருக்கும்.

    மகன்களின் ஆலோசனைகளும், உங்கள் தேர்வும் நல்ல கலந்துரையாடல்.






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் ஓய்வெடுத்து விட்டு தொடர்ந்தாலும் நடக்க முடிவதில்லை.  செய்து பார்த்தேன்!  நடைப்பயிற்சி செய்யும் இடமா...  நான் நான் குடியிருக்கும் இடத்திலேயே சுமாரான ஒரு பெரிய ரௌண்ட் சுற்றி வருகிறேன்!  வடை வாங்குவதில்லை. 

      அருகம்புல், முடக்கத்தான் ஜூஸ்கள் விற்பதில்லை!

      // செல்லங்கள் தங்களை வளர்த்தவர்  //

      என் வளர்ப்பல்ல..  பக்கத்துக்கு தெரு நண்பர்கள்.  சும்மா பழக்கம் அவ்வளவுதான்.

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    2. முன்பு வளர்த்தீர்கள் இல்லையா அதை சொன்னேன்.
      அவைகளுக்கு நம்மை நேசிப்பவர் என்று அதற்கு தெரியும் என்ர அர்த்ததில் சொன்னேன்.

      நீக்கு
    3. ஓ...  புரிகிறது...   நன்றி அக்கா.  அதைதான் நானும், அவை நம்மை முகர்ந்து நம் வியர்வை வாசனை பிடித்து நம்மை அளந்து விடும் என்று சொல்லி இருக்கிறேன்!

      நீக்கு
  12. உமா ரமணன் பேட்டி, பானுவின் செய்தி படித்தேன், வீரப்பன் செய்து மனதை வருந்த வைக்கிறது. யானைகளை பற்றிய செய்தி படித்து வருத்தம்.

    சேதம் விளைவிக்காத மழை ரசிக்கலாம். நீங்கள் சொல்வது போல நம்மை பாதிக்காத மழை ரசிக்க வைக்கும் தான்.

    பொக்கிஷபகிர்வை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  13. அட்வைஸ் செய்கிறேன் என்று நினைக்க வேண்டாம். கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது திரவங்கள் கையாள்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இப்படித்தான் நான் தண்ணீர்குடிக்கும்போது புரை ஏறி தண்ணீர் கீ போர்டில் விழுந்து லேப்டாப் பேட்டரி சார்ட் ஆகிவிட்டது. பிக்சட் பாட்டரி உள்ள மாடல்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட்வைஸ் செய்தாலும் தப்பில்லை.  எனக்கும் காபி கீபோர்டில் கொட்டி விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்த அனுபவம் உண்டு.  கொஞ்ச நாள் ஜாக்கிரதையாக இருப்பேன்.  அப்புறம் பழைய குருடி..  காபி குடிடி தான்!  எதைத்தான் நிலையாக செய்திருக்கிறேன் நான்..  ஆனாலும் எச்சரிக்கையை இருப்பேன்.  நன்றி.

      நீக்கு
  14. சோம்பல் தான் பலவகையில் இடையூறாக உள்ளது.

    தற்போது எனக்கும்தான்.... ஆரம்பித்து இருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன ஸ்ட்ரெஸ் கூட இதற்கு(ம்) காரணமாம்...  வாட்ஸாப் மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.  நன்றி ஜி.

      நீக்கு
  15. மெல்ல நட மெல்ல நட முழங்கால் என்னாகும்!!!
    பழகப் பழக முழங்கால் சரியாகும்!

    செல்லங்களைப் பற்றிய பகுதியை மிகவும் ரசித்தேன், ஸ்ரீராம். அந்த ரெண்டு செல்லங்கள் பற்றி முன்ன நீங்க சொல்லியிருந்தது நினைவு இருக்கு.

    எப்படியோ பாஸ்போர்ட், விசா என்ட்ரி வாங்கிட்டீங்க! ஏற்கனவே இந்த வழியா போனவர் தானேன்னு அவங்களும் புதுப்பித்துவிட்டார்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  பாஸ்போர்ட் விசா வாங்கவில்லை என்றாலும் அவர்களைக் கடக்க எனக்கு தயக்கமில்லை! 

      முழங்கால் சரியாக நானும் நடந்து நடந்துதான் பார்க்கிறேன்....!

      நீக்கு
  16. நடக்க நடக்க சரியாகும் ஸ்ரீராம், முட்டி வலி முழங்கால் வலி. இல்லைனா அவை இன்னும் இறுகிவிடும். இப்ப இருக்கற தூரத்துக்கு முட்டிய பழக்கிட்டு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தூரத்தை அதிகப்படுத்துங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அந்த ரகசிய மாஸ்டர் பிளானில்தான் இருக்கிறேன் கீதா...   என் முழங்கால் கிட்ட சொல்லிடாதீங்க...

      நீக்கு
  17. நடக்கும் போது வழியோரத்தில் பொரிக்கப்படும் வடையைப் பார்க்கும் போது எழும் ஆர்வத்தை வர்ணிக்க முடியாது என்று சொல்லியிருக்கும் இடம் அருமை.

    அது போலவே நாய்கள் வந்து மோப்பம் பிடிக்கும் போது பதட்டப்பட்டால் நம் உடலிலிருந்து வெளிப்படும் உடல் மொழி மணத்தை வைத்து அவை குரைக்கக் கூடும் அலல்து நம்மைத் தாக்கலாம் என்பது நல்ல ஆராய்ச்சி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. ஆமாம் ஸ்ரீராம் அதுங்கள பார்த்துட்டுக் கண்டுக்காத மாதிரி போய்டணும். நேருக்கு நேர் பார்க்கக் கூடாது. அவங்க நம்மளை நல்லா படிப்பாங்க!!

    வடை - ஹாஹாஹாஹா....இம்மாந்தூரம் நடந்துட்டு வடையை லபக்கினா நடையின் பலன் போச்!

    ரசித்து வாசித்தேன் முதல் பகுதியை, ஸ்ரீராம்.

    பாருங்க எனக்கும் நடையின் போது சுவாரசியமாகக் காண்பதை பதிவாக்க எண்ணம் இருந்தாலும் எழுதும் உந்துசக்தி இல்லை இப்ப.

    நான் ஸ்டெப்ஸ் ஆப் வைத்துக் கொள்ளவில்லை. இருந்தது முன்னால் ஆனால் அதில் ஒரு முறை எவ்வளவு நடந்தால், 10,000 - 12, 000
    எவ்வளவு நேரம் தூரம் எல்லாம் கணக்கிட்டுவைத்துக் கொண்டு, எடுத்துவிட்டேன். ஏனா, தேவையில்லாம வந்து மெசேஜ் கொடுத்துத் தொல்லைப்படுத்தும்! இது பற்றியும் எழுதத் தொடங்கி....ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூரம் கணக்கிட்டு நடக்கும் நிலையில் எல்லாம் நான் இல்லை கீதா.. ஆட்டோவில் ஏறி ஆட்டோவில் இறங்குபவன் நான். கொஞ்சமாவது நடக்க வேண்டிய நிலை!

      நீக்கு
  19. பசங்க உரையாடல் - ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன். நடக்கும் போது பலரும் ஹெட் செட் போட்டு நடப்பதைப் பார்க்கலாம். நான் இடையில் அந்தச் சமயத்தில் தான் பேச முடிகிறது என்று பேசியதுண்டு இப்ப செய்வதில்லை பெரும்பாலும். சொல்லப் போனா நல்லதில்லைதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹெட் செட் போடுவது காதுக்கு(ம்) ஆபத்து என்றும் படித்திருக்கிறேன் கீதா...

      நீக்கு
  20. உமாரமணன் அவர்களின் பேட்டி சுவாரசியம். அருமையான குரல் வளம் உடையவர். இப்போது நம்மிடையே இல்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அவர் பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட் ஆனது. ஆனால் வாய்ப்புகள் இல்லாமல் போனது வருத்தம்தான். ட்ரென்ட் என்று சொல்வது போல் பல புதியவர்கள் வரும் போது அப்படித்தானே!

      இங்கு குறிப்பிட்டிருக்கும் பாடல்களை ரசித்த்துண்டு.

      துளசிதரன்

      நீக்கு
    2. வருத்தமான விஷயம். நமக்கே அப்படி இருந்தால் ரமணனுக்கு எப்படி இருக்கும், பாவம்.

      நீக்கு
  21. பேய் திருமணம் போன்ற இப்படியான மூடநம்பிக்கைகளைக் குறித்து என்ன சொல்ல என்று தெரியவில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் நமக்கு ஒரு புதுமையான, சுவாரஸ்யமான தகவல் கிடைத்திருக்கிறது பாருங்கள்.

      நீக்கு
  22. வீரப்பனைக் குறித்து நக்கீரன் சொல்லியிருக்கும் பகுதியை வாசித்த பிறகு உங்கள் கருத்தே எனக்கும் தோன்றியது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  23. சிறப்பான கதம்பம். கணுக்காலில் கயிறு - வட இந்தியாவில் பலரும் அணிவது - அதுவும் ஒற்றைக்காலில்! இப்போது தமிழகத்திலும் பார்க்க முடிகிறது.

    உமா ரமணன் - என்னவொரு குரல் வளம். எனக்கும் பிடித்த பாடகி.

    மற்ற தகவல்கள்/துணுக்குகள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரும் ஒற்றைக் காலில்தான் அணிந்திருந்தார்.  ஃபேஷனோ! 
       
      நன்றி வெங்கட்.

      நீக்கு
    2. ஃபேஷன் அல்ல - கண்படுவதைத் தவிர்க்க இப்படிக் கட்டிக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

      நீக்கு
    3. கண்திருஷ்டி!  நான் வலிப்பு நோய் இருந்தால் இப்படி கட்டிக் கொள்வார்கள் - ஒரு அடையாளம் தெரிவதற்கு - என்று நினைத்தேன்!

      நீக்கு
  24. உமா ரமணன் பகுதி சமீபத்தில் இதில் சொல்லப்பட்டிருப்பதை துண்டு துண்டாக வெவ்வேறு இடங்களில் இருந்து அறிய முடிந்தது. இப்போது இங்கு தொகுத்து!

    எனக்கு ரொம்பப் பிடிக்கும் அவரது குரல். ஆனா பாருங்க அப்புறம் அவங்க குரலை யாரும் பயன்படுத்திக்கலை. காரணம் என்னன்னு தெரியலை.

    அவரது மறைவு பற்றியும் என்னென்ன செய்திகள் நம்ம மக்கள் இருக்காங்க பாருங்க!!! உடனே மைக்க தூக்கிட்டு வீடியோக்கள் போடத் தொடங்கிடுவாங்க...என்ன மக்களோ....ஒரு வீட்டின் நிகழ்வு அவங்க பொதுவெளியில் இருப்பவர்களானாலும் சரி ஒரு personal space உண்டு அவங்களை நாம அந்த சமய்த்துல படுத்தக் கூடாதுன்னு ஒரு நாகரீகம் கூட இல்லாம...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பவோ எடுத்து வச்சது கீதா...   பின்னால போயிருச்சு போல..  சம்பந்தப்பட்ட படத்தை பிளாக் ஃபோல்டர்ல பார்த்தபின் தான் ஞாபகம் வந்து தேடி எடுத்து பகிர்ந்தேன்.

      நீக்கு
  25. திருமணம் ஆகாமல் இறந்தவங்களுக்குத் திருமணம் செய்யும் சடங்கு ஹையோ இப்படி எத்தனை மூடநம்பிக்கைகளோ! ஒவ்வொருவர் நம்பிக்கை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. வீரப்பனைப் நக்கீரன் நிரூபரிடம் சொன்னது...என்னத்த சொல்ல? நீங்க சொன்னாப்லதான். வேறு கருத்து எதுவும் இல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவுல ஓரிரு வார்த்தைகளைக் காணோமோ?!!  ஆனால் சொல்ல வந்த கருத்து புரிகிறது.  அதேதான் கீதா..

      நீக்கு
  27. பறக்கும் மனிதன் - ஷாட் சூப்பர். ரசித்தேன். எனக்கு இப்படி எடுக்கணும்னு ஆசை உண்டு!!!! ஹாஹாஹா...அது போல பறக்கும் பறவையும். துள்ளும் செல்லங்கள் என்று.

    யானை - பாவமா இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறக்கும் மனிதன் ஏதோ அந்தரத்தில் பாலே டான்ஸ் ஆடுவது போல!!! இருக்கு அந்தக் குறிப்பில் சொன்னது போல்!

      கீதா

      நீக்கு
    2. ஆமாம். ரசிக்க வைக்கிறது.

      நீக்கு
  28. தூறலா, சின்ன மழையா பெரிய மழையா - எல்லாமும் ரசனைதான்... ஆனால்.....நான் சொல்ல நினைத்தேன் அதை நீங்க அடுத்த வரிகளில் சொல்லிட்டீங்க. நல்லாருக்கு கவிதை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்..  எல்லோருக்கும் மனசுல சட்டென தோன்றுவது அதுதானே...

      நீக்கு
  29. இன்றைய நியூஸ் ரூம் ல மந்திரிகள் பற்றிய செய்தி செம இன்ட்ரெஸ்டிங்க்.

    புதிதாக பதிவியேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் 99 சவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.//

    சம்பளம் வாங்காம, சலுகைகளைப் பயன்படுத்தாம பணியாற்றுவாங்களா!!!

    குற்ற வழக்குகள் உள்ளவங்களும்!!!!

    அடுத்த ஆண்டு இந்தச் சங்கம் மீண்டும் இப்படி வெளியிடுமா? அப்ப தெரிஞ்சுசும் எவ்வளவு கூடியிருக்குன்னு!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. புதிய விமான நிலையம் அமைப்பு இடம் கண்டிப்பாக தமிழகம் வேறு யோசிக்கணும். இப்படி மக்கள் போவது அசிங்கம் இல்லையா? ப்ளானிங்க் இல்லாத திட்டங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரேஷன் கார்டை திரும்ப ஒப்படைப்பதே அரசுக்கு அசிங்கம்னு சொல்வாங்க..  அரசு அதையெல்லாம் துடைச்சுப் போட்டு ரொம்ப காலம் ஆச்சுன்னு இவங்களுக்குதான் தெரியலை!

      நீக்கு
  31. முதல் ஜோக் - கொஞ்சம் சிரிக்க வைத்தது!
    கூட்டம் ஜோக்கும் அப்படியே!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. கவிதை நன்றாக இருக்கு.

    நகைச்சுவைத் துணுக்குகள் எல்லாமே நன்றாக இருந்தன. குறிப்பாக அதில் கூட்டத்தில் பேசுபவர், இப்போதேனும் திரண்டு வாருங்கள் என்று சொன்னதை வாசித்ததும் சிரிப்பு வந்துவிட்டது.

    இணையப்படங்களில் முதல் படம் மிக அருமை. இரண்டாவது படம் அப்போதைய நிகழ்வைச் சொல்லும் படம்.

    துளசிதரன்



    பதிலளிநீக்கு
  33. நடைப் பயிற்சி செய்வது நன்மைதரும் தொடருங்கள்.

    பறக்கும் மனிதன் படம் நன்றாக இருக்கிறது.

    பொக்கிசம் இன்று என்ன மனைவியுடன் மனத்தாங்கலோ? இரண்டு பொக்கிசம் மனைவி பற்றி வந்துள்ளது .:)) ரசித்தோம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை...  இல்லை... இன்று மனைவியுடன் மனத்தாங்கல் இல்லை..  அது தினமும்தான்!!  ஹா..  ஹா..  ஹா..  

      நன்றி மாதேவி.

      நீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    மத்திய பிரதேசம்... ஹா ஹா ஹா. நானும் காலையிலேயே இந்த வார்த்தை ஜாலத்தை பாராட்ட நினைத்து அவசரத்தில் (காஃபி இன்னமும் தரமாட்டாயா என்ற அதே மத்திய பிரதேச கூக்குரலுக்கு அடிபணிந்து பால் காய்ச்ச போய் விட்டேன்.அப்புறம் அடுப்பு என்னை சும்மா விட்டு விடுமா?) சொல்லாமல் போய் விட்டேன். முதல் பகுதியை இப்போது மீண்டும் படித்து ரசித்தேன்.

    மாலை நேரம் எண்ணெய்யில் பொரியும் உணவுகளுக்கு மனசு தடுமாறத்தான் செய்யும். அதையும் விவரித்த விதம் அருமை. மொத்தத்தில் தங்கள் எழுத்துக்களுக்கென்று ஒரு கவர்ச்சியை தங்களது எழுதும் முறை பாதை அமைத்துத் தருகிறது. ரசித்தேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மாலை நேரம் எண்ணெய்யில் பொரியும் உணவுகளுக்கு  ..

      மாலை நேரம் அல்ல அக்கா, அதிகாலை நேரம் ஐந்தரை மணிக்கு!  உங்கள் காபி ஆசை உங்களை அழைத்து கவனம் சிதற வைத்து விட்டது. ஹா.. ஹா... ஹா நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. காலை ஐந்தரை மணிக்கேவா? கஸ்டந்தான் அந்த கடையை கடப்பது..!

      நீக்கு
  35. மத்திய பிரதேசம்.. ஹாஹா.. நல்ல பிரயோகம். நடைப் பயிற்ச்சி தொடரட்டும். காலில் கருப்பு கயிறு இப்போது பலரும் கட்டிக் கொள்கிறார்கள் அதிலும் மீடியாவில் இருக்கும் பெண்கள் காலில் நிச்சயம் கருப்பு கயிறை பார்க்கலாம். மாடர்னாக உடை அணிந்து கொண்டு இப்படி கருப்பு கயிறு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரகசியம் வெளியாகி விட்டது. அடுத்த வாரம் வெளியாகும்!

      நீக்கு
  36. வணக்கம் சகோதரரே

    இன்றைய கவிதை அருமை. நம்மை பாதிக்காத எதையும் ரசிக்கும் மனநிலையில்தான் இருக்கிறோம். பாதிக்கும் போது ரசிக்கும் மனநிலை அந்த மழையோடு மழையாக கரைந்து விடுமே..! கவிதையை ரசித்தேன்.

    பாடகி உமா ரமணண் அவர்களின் பேட்டி நன்றாக உள்ளது. தம்பதியரின் நாணத்துடன் கூடிய புகைப்படமும் நன்றாக உள்ளது.

    பேய் திருமணம் விநோதமானதுதான். இதில் ஒரு ஆத்ம திருப்தி அந்த பெற்றவர்களுக்கு வருவது அவர்களுக்கு மகிழ்வாகத்தான் இருக்கும்.

    செய்தியறை பகுதியில் அறியாத செய்திகளை தொகுத்து தந்த சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    விட்டு விட்டு வரும் மழை போல் என் வருகையும் இருக்கிறது என நினைக்கிறேன்.:)) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டு விட்டு வந்தாலும், எதையும் விட்டு விடாமல் படித்துக் கருத்திடும் கமலா அக்காவுக்கு ஒரு ஜே...   நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா. நன்றி. நன்றி. இன்னும் பொக்கிஷத்தை பெரிதாக்கி பார்த்து விட்டு வருகிறேன். அதன் பின் மொத்தமாக ஜே யை அங்கிகரிக்கிறேன்.:))

      நீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    பறக்கும், மனிதன் படம் நன்றாக உள்ளது. யானைதான் பாவம்..! எவ்வளவு உழைப்பை அன்றே தந்திருக்கிறது.

    இன்றைய பொக்கிஷ பகிர்வும் அருமை. ஆம்.. அந்தக் கால கணவன்மார்கள் தன் சம்பளத்தை மனைவியிடம் சொல்ல மாட்டார்கள். இது மனைவியாக என் அனுபவமும் கூட... இப்போது ஜாதகம் பார்க்கும் போதே பையனின் சம்பளம் எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டிய நிலை. அதன்பின்தான் பொருத்தம் உள்ளதா என பெண் வீட்டார்கள் தெரிவிப்பார்கள். ( ரஜனி வசனம் நினைவுக்கு வருகிறது. வந்து என்ன பிரயோஜனம்.. :)) )

    காதில் வைத்ததிருந்த ஃபோன் மூலமாக அந்த அயலோன் தன் மனைவியிடம் வசவை வாங்குவது அந்த மனிதருக்கு அவ்வளவு திருப்தியா? ஆம் ஒருநாளாவது அதிலிருந்து தப்பிக்கலாமே ..! ஹா ஹா.

    மேடை பிரசங்கத்திற்கு ஆள் சேர்க்கும் முறை ரசித்தேன்.

    நாலாவது பொக்கிஷ பெட்டகம் என் கைப்பேசியில் திறக்க மறுத்து விட்டது.

    அப்பாடா..! இன்று எல்லாவற்றையும் படித்த சந்தோஷம் வெகு நாட்களுக்குப் பின் (பல வாரங்களுக்குப் பின்) மனதிற்கு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!