28.7.25

​"திங்க"க்கிழமை : முட்டைகோஸின் கண்ணீர் - ஸ்ரீராம்

"அப்பா..  இன்று முட்டைகோஸ் கறி செய்து விடலாம்" என்று மருமகள் சொன்னபோது ஒரு வியாழன் பதிவின் பதில் சொல்லலிலும், அடுத்த வியாழன் பதிவு தயாரிப்பிலும் இருந்தேன்.  இருவேளை அன்று அஷ்டமியாகவோ, சந்திராஷ்டமமாகவோ கூட இருந்திருக்கலாம்.  எனக்குத் தெரியாது.

டைப்புவதை நிறுத்து ஒருகணம் யோசித்தவன், சொல்லி விட்டு திரும்பிச் சென்ற மருமகளை அழைத்தேன்.
"இப்பல்லாம் தேங்காய்க்கறிதான் செய்யறோம்.  இன்னிக்கி வெங்காயம் போட்டு வதக்கிடு"

"சரிப்பா" என்று மருமகள் திரும்புமுன் அறையிலிருந்து வெளிவந்த பாஸ் புயல் சீறியது.  "ச்ச்ச்சை...  எப்பப் பார்த்தாலும் எதுல பார்த்தாலும் வெங்காயமா?"

"ஏன்? அதற்கென்ன?"

"எனக்குப் பிடிக்கலை"

'பிடிக்கலைன்னா போயேன்' என்று சொல்ல முடியாமல் பின்வாங்கினேன்.  மருமகளை பார்த்தேன்.  முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் நின்றிருந்தாள்.

"இதில் என்ன வேற மாதிரி செய்யலாம்?"

இந்த கேள்விதான் எனக்கு எப்பவும் சுவாரஸ்யம்.  பாஸுக்கு அலர்ஜி.  கோபம் வரும்.  "வேற வேலையில்ல"  மருமகளுக்கு பீதி.  'என்ன படுத்தப் போறானோ'

"தேங்காய்க்கறி செய்திருக்கிறோம். வெங்காயம் போட்டு வதக்கி இருக்கிறோம். உசிலி செய்திருக்கிறோம். மோர்க்கூட்டு செய்திருக்கிறோம். உருளையுடன் சேர்த்து கூட்டுக்குழம்பு செய்திருக்கிறோம். ஃபிரைட் ரைஸில் சேர்த்திருக்கிறோம்.. இப்போ என்ன செய்யலாம்?"

மருமகள் என்னைப் பார்த்தபடி காத்துக் கொண்டிருக்க..  விதி சிரித்தது!
"இதை சின்ன பாகங்களா நறுக்கி தண்ணி சேர்க்காம மிக்சில அரைச்சுடு" .

"ம்ம்ம்ம்"

"அப்புறம் அதுல வெங்காயம் பூப்போல தூவி, அரிசிமாவு, கொஞ்சம் ரவா, பச்சை மிளகாய், காஷ்மீர் சில்லிப்பொடி, உப்பு, சீரகத்தூள் சேர்த்துப் பிசைஞ்சுடு...  கட்லெட் போல தட்டி எடுத்துடலாம்.  அல்லது கொஞ்சமா எண்ணெய் வச்சு பொரிச்சுடலாம்"

"காஷ்மீரி பொடி இல்லைப்பா..  காலி.  சாதாரண காரப்பொடி கூட இல்லை"

"சுத்தம்.  சரி பரவாயில்லை பட்டை மிளகாய் ஏழெட்டு கூடப் போட்டு அரைச்சுடு"

பாஸ் "எனக்கு அது வேண்டாம்..  எனக்கு கொஞ்சம் கோஸ் தனியா எடுத்து நறுக்கி வழக்கம்போல சாதாரணமா வதக்கிடு" என்று மருமகளிடம் சொன்னார்.

திரும்பி நடந்த மருமகளுடன் விதி குதித்து குதித்து வாய்விட்டு சிரித்தபடி நடந்ததை நான் கவனிக்காமல் என் வேலையில் ஆழ்ந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து மருமகளின் குரல் கேட்டது.  "அப்பா... நைஸா அரையலை"

"பரவாயில்லை அப்படியே கூட இருக்கட்டும்..  மற்ற பொருட்கள் எல்லாம் ரெடியா?"

"ரெடிதான்..   ஆனால் இங்க பாருங்க"  அரைபட்ட கோஸைக் காட்டினாள்.
"என்ன அதுல"  கோஸை ஒதுக்கிக் காட்டினாள்.  நீர் விட்டிருந்தது.  கோஸ் கண்ணீர் விட்டபடி காத்துக்கொண்டிருந்தது!

அதை தனியாய் ஒரு பாத்திரத்தில் வடிகட்டினால் கொஞ்ச நேரத்தில் அதே அளவு அல்லது அதைவிட அதிகமாய் இன்னும் நீர் விட்டிருந்தது.

எவ்வளவு பிழிந்தாலும் கைகளுக்குள் வைத்து இறுக்கி நீரை வெளியேற்றினாலும் காய் விடுபடுவதற்குள் அது இன்னும் இன்னும் நீர் விட்டுக் கொள்வது ஒரு அற்புதம், மேஜிக்.



முன்பு போல நறுக்கியவுடன் எண்ணெயில் பொரித்தெடுத்து மிக்சியில் அரைத்திருக்கலாம் என்று பின்னர் தோன்றியது.  நீர் விட்டிருக்காது.  நாங்களும் கண்ணீர் சிந்தியிருக்க மாட்டோம்!!

எனினும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து பிழிந்த உடன் அரிசிமாவு, ரவா, சோளமாவுடன் கலந்து எடுத்து உடனே உடனே நான் ஸ்டிக் தவாவில், ஓவனிலும் வைத்து எடுத்து ஒருவழியாய் ஒப்பேற்றினேன்.  சிலவற்றை தட்டு போட்டு மூடி எடுத்தேன்.  ஒண்ணேகால் கிலோ கோஸுக்கு கொஞ்சம் பாஸுக்கு போக எவ்வளவு இருந்தது?  பிழியப்பிழிய மிகவும் குறைந்து விட்டது. 

எங்கிருந்துதான் அந்த கோஸ் இவ்வ்ளவு நீரை தயார் செய்கிறது!  ஆண்டவன் படைப்பில் எவ்வளவு அற்புதங்கள்...

ருசி மோசமாயில்லை.  பரவாயில்லை என்றே விமர்சனம் வந்தது.  ஆயினும் இனி முட்டைகோஸிடம் ஜாக்கிரதையாக இருக்கவே வேண்டும்.  ஆனாலும் விடமாட்டேன்.  வேறுவகையில் பழி வாங்கியே தீருவேன்!

"முட்டைகோஸும் முட்டாப்பயலும்" என்று தலைப்பு வைக்கலாமா என்று யோசித்தேன்.  ஆனால் கோஸையே தோற்ற லிஸ்ட்டில் வைத்து விட்டேன்!  அது என்ன வந்து படிக்கவா போகிறது!

அது சரி...   பிழிந்து பிழிந்து எடுக்கப்பட்ட கோஸ் வடி நீரை என்ன செய்வது?  மருமகளிடம் சொல்லி அதை சூப் வைக்கச் சொல்லி விட்டேன்.  அதைக் இரண்டு பல் பூண்டு போட்டு கொதிக்க வைத்து (கொதிக்க வைக்கும் ஃபோட்டோ ஆரம்ப போட்டோ கூட்டத்தில் ஒளிந்திருக்கிறது!) சோளமாவு சேர்த்து  சூப் பிரமாதமாக அமைந்தது.  சாப்பாட்டுக்குமுன் ஆளுக்கு ஒரு கப் குடித்தோம்.

மீண்டும் அடுத்த முறை வெற்றிகரமான நல்லதொரு ரெசிப்பியுடன் ச்சே...   முயற்சியுடன் சந்திக்கிறேன்.  

22 கருத்துகள்:

  1. அட்டா... பேசாமல் தேங்காய் கறியோ இல்லை மிளகு கூட்டோ அதுவுமில்லை, உசிலியோ செய்யாமல் அதனை அரைத்தால் கோஸ் பிழியப் பிழிய அழாமல் என்ன செய்யும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.  நீங்க சொல்றதைத்தான் எப்பவும் செய்யறோமேன்னு நினச்சேன்..  

      நீக்கு
    2. முன்னர் கோஸை இழை இழையாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து பதிவு போட்டிருக்கிறேன்! தூள் பஜ்ஜி போல இருக்கும்.

      நீக்கு
  2. இந்த முயற்சி வார இறுதியில் நடந்திருக்கும் என்பது, தி பதிவாகையால் நினைவுக்கு வருவதில்லை.

    வேலைக்குப் போறவங்க கிட்ட இது என்ன வித்தியாச வித்தியாசமான செய்முறை கொடுத்துப் படுத்தல் எனத் தோன்றியது. ஹாஹாஹா

    கோஸ் வடை நல்லா இருந்திருக்குமோ?

    காயின் நீரை சூப் வைத்தது அருமையான ஐடியா. பீட்ரூட் ஜூஸ் வெறும்னயே எனக்குப் பிடிக்கும். கோஸ் ஜூஸ் அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோஸ் ஜூஸில் கோஸ் வாசனையே வரவில்லை.  மிளகுப்பொடி தூக்கலாக இருந்தது!  

      நீக்கு

  3. ​கண்டிப்பாக முட்டை கோஸை இது போல் சித்திரவதை செய்ய மாட்டேன். கோஸ் என்றால் பொரியல், கடலைப்பருப்பு கூட்டு, குருமா தான். எல்லாவற்றிலும் வெங்காயம், தேங்காய் இருக்கும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...அப்படி எல்லாம் வாக்குறுதி கொடுக்க முடியாது JKC ஸார்...! 

      கோஸில் நான் பதிவிலேயே சொல்லியுள்ளபடி இன்னும் சில வகையும் செய்யலாம்.  அதுதான் எப்பவும் செய்யறோமே...!

      நீக்கு
  4. பதில்கள்
    1. முருகா..  முருகா..  

      வாங்க செல்வாண்ணா...  வணக்கம்.

      நீக்கு
  5. சிறப்பான செய்முறை...

    கோஸ் வடை, பகோடா செய்வதுண்டு...
    ஒவ்வாமையின்
    இப்போது ஒதுக்கப்பட்டு விட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதினைந்து நாட்களுக்குமொருமுறையாவது கோஸ் செய்து விடுகிறோம்..  விதம் விதமாக.

      நீக்கு
  6. பாவம் வர்ஷினி!!!! ஹாஹாஹாஹாஹா... அடுத்தாப்ல பாவம் கோஸ்!

    அது நினைச்சிருக்கும், "என்னைப் பத்தி தெரியாம ரிஸ்க் எடுக்கறியா!!!! எடுத்துக்கோ எடுத்துக்கோ. நானும் ஆகாத்தியம் பண்ணுவேனே!!! உன்னை முழிபிதுங்க வைப்பேனேன்னு"

    ஸ்ரீராம், கோஸ் தண்ணீர் விடும். நானும் இப்படிக் கட்லெட், வடை எல்லாம் செய்து பார்த்ததுண்டே.

    அரைப்பதை விட, துருவினா ஓரளவு பெட்டெர். அதாவது சன்னமாக.

    உங்க பதிவிலிருந்து சீன் பை சீன் கண்ணில் வர....பதிவை ரசித்து வாசித்தேன், ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..   

      துருவினா இன்னும் கண்ணீர் விடுதே...   பார்த்தாச்சே...

      //அது நினைச்சிருக்கும், "என்னைப் பத்தி தெரியாம ரிஸ்க் எடுக்கறியா!!!! எடுத்துக்கோ எடுத்துக்கோ. நானும் ஆகாத்தியம் பண்ணுவேனே!!! உன்னை முழிபிதுங்க வைப்பேனேன்னு"//

      கடைசில ஓரளவுக்கு அடக்கிட்டேன்ல...  நினைத்தாலே இனிக்கும் தீபக் ரஜினி மாதிரி!

      நீக்கு
  7. முதல் படத்தைப் பார்த்ததும் அட!!! நாம் செஞ்சந்து போல ஐடியா ஸ்ரீராமுக்கு வந்து செய்தாரோன்னு நினைச்சேன்.

    சின்ன கோஸாக இருந்தால் நடுவில் உள்ள தண்டைக் குடைந்து எடுத்துவிட்டு, அதற்குள் நீங்க நினைப்பதை ஸ்டஃப் செய்து ஸ்டீம் செய்துவிட்டு, ரொம்ப ஸ்டீம் செய்தால் கோஸ் குழைந்துவிடும் எனவே அளவாக.....அப்புறம் வெளியில் எடுத்து மெதுவாகப் பிளக்க வேண்டியதுதான். நான் செய்யும் போது ஃபோட்டோஸ் எடுக்க முடிந்தால் எடுத்து அனுப்புகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு சின்ன கோஸ் கிடைப்பது கடினம் கீதா..  அப்படியே செய்தாலும் அடுக்கடுக்கடுக்கடுக்கடுக்கான இலைகளைத் தாண்டி நடுவில் ஸ்டஃப் வைப்பதும் கடினம்!

      நீக்கு
    2. ஸ்ரீராம் இங்கு சின்ன கோஸ் கிடைக்கிறது. அதாவது நார்மல் கோஸ்லயே ....

      ஒன்று நீங்க கோஸை கத்தரிக்காயை நான்காக வெட்டி உள்ளே பொடி அடைப்பது போல சின்னதா கிடைக்கற கோஸை நான்கா கட் பண்ணி உள்ளே பொடி அடைத்து வதக்கலாம். இல்லைனா அப்படித் வதியக்கியதை கிரேவியும் செய்யலாம்.

      இன்னொன்று சின்ன கோஸ் கிடைக்கலைனா, Brussels கிடைக்குமே ஸ்ரீராம். அதிலும் செய்யலாம்.

      நான் இப்படிச் செய்து சில மாசங்கள் ஆச்சு. கோஸ் குவியலில் சின்னதா பொறுக்கி எடுப்பது வழக்கம் நான் சாலட் செய்வதற்கு.

      brussels கண்ணில் படலை. அது வாங்கினாலும் செய்து முடிஞ்சா ஃபோட்டோஸ் எடுத்து அனுப்பறேன். பார்ப்போம்

      கீதா

      நீக்கு
  8. சில வியாபாரிகள் கோஸ் எடை அதிகரிக்க
    மற்றும் அது இளமை மாறாமல் இருக்க
    கோஸை தண்ணீரில் முக்கி உள்ளே தண்ணீர்
    புக வைத்திருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கே ஆர் மார்க்கெட்டில் அப்போது கருஞ்சிவப்பு இலையைக் கட் செய்து விற்பனைக்கு கோஸ் அடுக்க ஆரம்பிக்கும்போது வாங்குவேன். ஒரு கோஸுக்கு 10, 20 ரூபாய்க்குமேல் கொடுத்து வாங்கியதில்லை. எந்தக் கனை மதியுணவிலும் கோஸ் கறி இருக்குமாகையால்இப்போதெல்லாம் மிளகூட்டு அல்லது பருப்புசிலிதான்.

      நீக்கு
    2. அப்படி கோஸ் தண்ணீரை இழுக்குமா தெரியவில்லை. நானும் நிறம் மாறிய கோஸ் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  9. ​அடுத்த தடவை கோஸை அரைத்து பன்னீர் செய்வது போல் துணியில் கட்டி வடிகட்டி, கேக் படிவத்தில் துண்டுகள் போட்டு பொரித்து சாப்பிடலாம். அல்லது வடிகட்டிய கோஸை அல்வா செய்யலாம். புது கோஸ் அல்வா. அல்லது சாதத்தில் கலந்து கோஸ் சாதம் செய்யலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்யலாம்.  ஆனால் என்னதான் துணியில் வடிகட்டினால் கோஸுக்குள் ஒரு நயாகரா யிருக்கிறது!  ஒன்றும் செய்ய முடியாது!

      நீக்கு
  10. சூப்...சூப்...சூப்....சூப்பர்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!