16.2.26

"திங்க"க்கிழமை  :  ஒரு எளிய காலை உணவு 3 -- JKC  ரெஸிப்பி

 

ஒரு எளிய காலை உணவு

தவலை அடை

(JKC)

என்ன இட்லி தோசை பொங்கல் பூரி உப்புமா/கிச்சடி இவை மட்டுமா காலை உணவு, வேறு காலை உணவே கிடையாதா என்று அலுத்துக்கொள்பவர்களுக்கு ஒரு மாறுதல்.  

புழுங்கல் அரிசி மட்டும் போதும். தவலை அடை செய்யலாம்.  

சாதாரண இட்லி அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளுங்கள். வேண்டும் என்றால் கொஞ்சம் கடலைப்பருப்பு தனியாக ஊறவைத்துக் கொள்ளுங்கள். ஊறவைத்த அரிசியை உப்பு சேர்த்து மிக்ஸியிலோ கிரைண்டரிலோ அரைத்துக்கொள்ளுங்கள். மாவு நீர்க்க தோசை மாவு பதத்தில் இருக்கட்டும்.  

அடி கனமான கடாய்/வாணலியில் அரைத்த மாவை கொட்டி, ஊறவைத்த கடலைப் பருப்பையும் சேர்த்து  அடிபிடிக்காமல் கிளறி,  சேவை நாழியில் பிழியும் பதத்திற்கு வந்தவுடன் எடுத்து ஆறவைக்கவும்.

(என் அம்மா மாவை விறகடுப்பில் கல் சட்டியில் கிண்டுவார்கள் அது ஒரு தனி மணம்)

பின்னர் ஒரு அடி கட்டியான வாணலியில் எல்லாப்புறமும் எண்ணெய் புரட்டி கொள்ளவும். 

ஆறிய மாவை உருட்டி உருட்டி படத்தில் காட்டியபடி லேசாக விரல் கனத்திற்கு தட்டிக் கொள்ளவும்.  

வாணலியில் அடி குழியில் மாவை கொஞ்சம் ஒதுக்கி சிறிய குளம் போல் உருவாக்கிக்கொள்ளவும்.

இந்த குளக் குழியில் ஒரு ஸ்பூன் நெய் தண்ணீருடன் சேர்த்து நிரப்பவும்.  இது அடைக்கு நெய் மணம் கொடுக்கவும் அடி பாகம் தீ மிகுதியால் தீய்ந்து விடாமல் இருக்கவும் உதவும்.   

மிதமான தீயில் மூடி போட்டு அடுப்பில் வேக வைக்கவும்.

 

வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து துண்டுகள் ஆக்கி பரிமாறவும். பாஸ் பொறுமையில்லாமல் பிய்த்து எடுத்து விட்டார். நான் கத்தி எடுப்பதற்கு முன் பாஸ் பிய்த்து எடுத்த அடை கீழே

தொட்டுக் கொள்ள புளி மிளகாய் நன்றாக இருக்கும். இங்கு உபயோகித்தது மிளகு குழம்பு + செச்சுவான் சாஸ்.  

குறிப்பு  

1. ருசிக்கு தேங்காய் பல் பல்லாக சேர்க்கப்பட்டது.

2. தவலை அடைக்கு என்ன பிரத்யேக குணம்?

தோசைக்கல்லில் தட்டி வேக வைக்கப்படும் அடை இரண்டு பக்கமும் மொறு மொறுப்பாக இருக்கும். சமயத்தில் பல்லை உடைக்கும். தவலை அடை மேல் பக்கம் மிருதுவாகவும் மறு பக்கம் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.  

வாசனைக்கு ஜீரகம், பெரும்காயம், வெந்தயம், சின்ன வெங்காயம் பொடியாக அரிந்தது இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்க்கலாம்.  

3. பேசாமல் நான் மோர் களி உண்டாக்கி சாப்பிடுவேனே என்பவர்களுக்கு

மோர் களி பச்சரிசி மெஷின் மாவில் செய்வது. இந்த அடை புழுங்கலரிசி ஊறவைத்து அரைத்து செய்வது, மோர் களி அரிசி உப்புமாவின் தனயன். தவலை அடை கொழுக்கட்டையின் அண்ணன்.  

தவலை அடை என்பது தவளை அடை அல்ல, புரிந்ததா?

5 கருத்துகள்:

  1. நாங்கள் செய்யும் தவலை அடை செய்முறையே வேறு.

    இந்த புழுங்கலரிசி அடை நல்லா வந்திருக்கு. இதுக்கு புளிமிளகாய் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. மற்ற நாட்களில் பதிவு உள்ளடக்கங்கள் மாறும். திங்கட்கிழமை மட்டும் மாறாது போலிருக்கு. வயிற்றில் கண்டதைப் போட்டு ரொப்புவதில் உடல் ஆரோல்கியத்திற்கு அப்படி என்ன நன்மை , தெரிலே. ஆனான பட்ட வியாழக்கிழமையிலேயே மாற்றங்கள் வந்தாச்சு. திங்கட்கிழமையிலும் சாப்பாட்டுக்கு சம்பந்தப்படாத ஓரிரண்டு விஷயங்கள் இருந்தால் வரட்சியான திங்கள் பதிவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக பசுமை பூக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றைக்கு ஒரு நாளாவது ஶ்ரீராமுக்கு ஓய்வு கிடைக்கட்டுமே. நீங்க சொல்லிட்டதுனால தி.கிழமைல இனி, கல்யாண சமையல் சாதம், உப்புமா கிண்டிவையடி, சமைத்துப் பாரடீ போன்ற பாடல்களையும் பகிர ஆரம்பிப்பாரோ? அதைத் தொடர்ந்து, கீதா ரங்கன் அக்கா, இது வாசமஞ்சரி ராகம், இது காதம்பரி, இது வசனகுதூகலம் என ராகங்கள் கண்டுபிடிப்பாரோ?

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    தவலை அடை - வித்தியாசமான குறிப்பு. இதை எங்கள் வீட்டில் வேறு விதத்தில் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!