2.2.26

"திங்க"க்கிழமை  :  ஒரு எளிய உணவு  -  JKC  ரெஸிப்பி

 

ஒரு எளிய மதிய உணவு

சமைத்தால்தான் உணவா? சில காய்களை சமைக்காமலேயே உண்ணலாம். வாருங்கள் பார்க்கலாம்.

இன்றைய மதிய உணவு

தக்காளி சாதம்.

சேனை வறுவல்

சாலட் எனப்படும் பச்சை காய்களின் கலவை

வத்தல்/வடாம் என்றும் கேரளத்தில் கொண்டாட்டம் என விளிக்கப்படும் பொறித்த வடாம்.

முதலில் தக்காளி சாதம் செய்முறை காண்போம்.

தக்காளி சாதம் இரண்டு வகையில் செய்யலாம்.

முதல் வகை புளிசாதம், தேங்காய் சாதம் செய்வது போன்று தக்காளி தொக்கு ஒன்று செய்து கஞ்சி வடிக்கப்பட்ட சாதத்தில் பிரட்டி எடுப்பது. வேலை குறைவு, தொக்கு செய்தால் பிரிஜில் வைத்து பல நாள் உபயோகிக்கலாம். .

இரண்டாம் வகை குக்கர் வெஜ் பிரியாணி முறை. காரசாரமாக வெஜ் பிரியாணியில் வெஜிடபிள் போடாமல் மசாலா பொருட்கள் தூக்கலாக. சாதம் கஞ்சி வடிக்காமல் பிரியாணி போன்று குக்கரில் வேவித்து எடுப்பது.

இதன் செய்முறையை துரை அவர்கள் ஏற்கனவே எ பி யில் பதிவிட்டிருக்கிறார். நன்றி.  சுட்டி

"திங்க"க்கிழமை   :  தக்காளி சாதம்   -   துரை செல்வராஜூ  ரெஸிப்பி 


சேனை வறுவல்

சேனைக்கிழங்கை படத்தில் உள்ளபடி சிறு துண்டுகளாக்கி கழுவிக் கொள்ளவும்.

கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் வேகவைத்து நீரை வடிகட்டிக் கொள்ளவும்.

உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் பிரட்டி சிறிது எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

சாலட் எனப்படும் காய் கலவைக்கு எடுத்துக்கொண்ட காய்கள்.

கேரட், முள்ளங்கி, வெங்காயம், தக்காளி, கேபேஜ். பச்சைமிளகாய் 1, கொத்தமல்லி, எலுமிச்சம் பழம்

வெள்ளரிக்காய் இல்லாததால் சேர்க்கவில்லை.

காய்கறிகளை துருவிக்கொள்ளவும், பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

எல்லாவற்றையும் கலந்து அரை மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து பிரட்டிக்கொள்ளவும்.

எலுமிச்சம் பழத்திற்கு பதில் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்தால் பிரமாதமாக இருக்கும்.

வடாம் பற்றி கூற தேவையில்லை.

பரிமாறப்பட்ட உணவு

 

ஊசிக்குறிப்பு.


பச்சையாக தின்னும் காய்கள் எவை?

அசை போடும் மிருகங்கள் ஐந்து எழுதுக?

இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் என்னுடைய படிப்பு, உத்தியோகம் மாறியிருக்கலாம். 

1958ஆம் வருடம். திருச்சி குருவியன்குளம் R C துவக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு முடித்து மேல் படிப்பிற்கு செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் சேர நுழைவு தேர்வு எழுதினேன். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அவை. இரண்டு கேள்விகளுக்கு பதில் தெரிந்திருந்தும் பதில் சரி என்று கணிக்க முடியாததால் எழுதவில்லை. சேர்க்கை மறுக்கப்பட்டது. பின்னர் திருச்சி சானியன்குளம் ஆர்யன் செகண்டரி ஸ்கூலில் (RSS) 6, 7 வகுப்புகள், 8 முதல் 11 வரை கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் ஹை ஸ்கூல் என்று பள்ளிப்படிப்பு தீர்ந்தது. 


======================================================================================

ஸ்ரீராம் குறிப்பு!!

தலைப்பை ஒரு எலியின் உணவு என்று படித்தவர்கள் எல்லாம் கைதூக்குங்க 

==========================================================================================


சுவாரஸ்ய செய்தி ஒன்று....



அதிவேகத்தில் சுழலும் கருந்துளை ஒன்று, பிரபஞ்சத்தின் 'காலவெளி' (Spacetime) கட்டமைப்பைத் தன்னோடு சேர்த்துச் சுழற்றும் என்று, நுாறு ஆண்டுகளுக்கு முன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கணித்தார். அதை அவர் காலத்து விஞ்ஞானிகள் இருவர் கணிதவியல் ரீதியில் நிறுவினர்.

அதேபோன்ற ஒரு நிகழ்வை, அண்மையில், வானியலாளர்கள் முதன்முறையாக நேரடியாகக் கண்டு பதிவு செய்துள்ளனர். சீன அறிவியல் அகாடமி, பிரிட்டனிலுள்ள கார்டிப் பல்கலை ஆகிய வற்றின் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வு 'சயின்ஸ் அட் வான்சஸ்' இதழில் வெளியாகி உள்ளது.

ஒரு நட்சத்திரம் ராட்சதக் கருந்துளையின் ஈர்ப்பு விசைக்குள் சிக்கிச் சிதைந்தது.

அப்போது, அதிலிருந்து சிதறிய துகள்கள் கருந்துளையைச் சுற்றி ஒரு பிரமாண்ட ஒளித் தட்டை உருவாக்கின. இந்த தட்டின் சுழற்சியிலிருந்து மிக வலிமையான கதிர்வீச்சுகள் விண்வெளியில் பீய்ச்சிடித்தன. இந்தத் தட்டும் கதிர்வீச்சுகளும் 20​ நாட்களுக்கு ஒருமுறை அலைவுறுவதை எக்ஸ்-ரே மற்றும் ரேடியோ அலைகள்​ வாயிலாக விஞ்ஞானிகள் கண்டனர். இப்படி நிகழும் என 1918ல், ஜோசப் லென்ஸ்​ மற்றும் ஹான்ஸ் திர்ரிங் ஆகியோர் கணித்ததால், அதற்கு 'லென்ஸ்-திர்ரிங்' விளைவு என்று பெயரிடப்பட்டது.

எனவே, ஒரு கருந்துளை அதிவேகமாகச் சுழலும்போது, அது தன்னைச் சுற்றியு ள்ள கால-வெளிப் பரப்பை, ஒரு துணி போல இழுத்துச் சுழற்றுவதை (Frame--dragging) இது உறுதிப்படுத்துகிறது. இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முன்வைத்த, பொதுச் சார்பியல் கோட்பாட்டிற்கு கிடைத்த ஆதாரமாகக் கொண்டாடப்படுகிறது. விண்வெளி இயற்பியலில் கருந்துளையின் சுழற்சி, அதன் சுற்றுப்புறத்தில் ஏற்படுத்தும் நேரடித் தாக்கத்தை நிறுவும் மிக முக்கியமான மைல்கல்லாக சீனா-- பிரிட்டன் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு பார்க்கப்படுகிறது.

- தினமலர் -

=============================================================================

இரண்டாவது சுவாரஸ்ய செய்தி ....

விண்வெளியில் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகவும் மிகப்பெரிய பிளாக்ஹோல்(Black Hole) ஒன்று, ஒரு நட்சத்திரத்தை விழுங்கிய பிறகு, பிரகாசமாக ஒளிரத் தொடங்கியுள்ளது. 10 டிரில்லியன் சூரியன்களுக்குச் சமமான ஒளியை உமிழ்ந்தது. 
 
- நவம்பர் 2025 இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் -

26 கருத்துகள்:

  1. எளிய உணவு சிறப்பு! சமைத்த உணவையும், சமைக்காத உணவையும் சேர்த்து சாப்பிடக் கூடாது என்கிறார்களே?
    விதம் விதமான சாலடுகள் பற்றி எழுதலாமே என்று நினைத்துக் கொள்வேன்.
    ஆப்பிள் செடார் வினிகர் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்குமாம், ஆனால் பல்லில் படாமல் சாப்பிட வேண்டுமாம், பல்லில் பட்டால் பல்லை கரைத்து விடுமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​எது எப்படியோ ஒரு திங்க கிழமை பதிவு ஒப்பேற்றியாயிற்று ஸ்ரீராமுக்கும் கொஞ்சம் ஆசுவாசம்.

      நீங்கள் தயிர் பச்சடி மற்றும் ஊறுகாய் சாப்பிட மாட்டீர்களோ? இவை சமைக்காத உணவுகள் தானே?

      Jayakumar

      நீக்கு
    2. // எது எப்படியோ ஒரு திங்க கிழமை பதிவு ஒப்பேற்றியாயிற்று ஸ்ரீராமுக்கும் கொஞ்சம் ஆசுவாசம். //

      அதைச் சொல்லுங்க...!

      நீக்கு
  2. பிளாக் ஹோல் தகவல்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியாப் பெரும்புதிர்  இந்தக் கருந்துளைகள்!

      நீக்கு
  3. எல்லோருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. ​நாம் எல்லோரும் வாழ்க்கை எனும் space/time இல் பயணித்து மோட்சம் என்ற முடிவில்லா கருந்துளையை நோக்கி செல்கிறோமோ? நாத்திக வாதி எய்ன்ஸ்ட்டின் கடவுளைப் பற்றி விவரிப்பது எப்படி சரியாக இருக்கிறது!!!

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு ஏற்கனவே இது பற்றி எல்லாம் பதிவிட்ட நினைவு.  மலர்விழியும் நாடோடியும் என்று ​தொடர்புடைய பதிவொன்றும், பாரலல் யுனிவர்ஸ் பற்றியும் பகிர்ந்த நினைவிருக்கிறது.

      நீக்கு
    2. ​தற்போது கடவுள் என்று பெயர் வந்தது என்பது எனக்கு புரிகிறது. கட: செல்/பயணி; உள்: கருந்துளைக்குள். அதுதான் மோட்சம்.

      Jayakumar

      நீக்கு
  5. ஜெ கே அண்ணே.....சூப்பர் போங்க....

    துரை அண்ணாவின் தக்காளிச் சாதக் குறிப்பைச் சுட்டிச் சொன்னதும் சிறப்பு.

    தட்டைப் பார்த்ததும் நானும் ஒரு தட்டைத் தூக்கிக் கொண்டு வண்டுவிடலாமான்னு தோணுது!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மருத்துவர் சொன்ன ஒரு குறிப்பு - பச்சைக்காய்களை லைட்டாக ஸ்டீம் செய்து அதாவது முழுவதும் வேகாமல், அப்புறம் என்ன கலக்கணுமோ அதைக் கலந்து சாப்பிடுவது நல்லதுன்னு. குறிப்பா, கோஸ், காரட்...கோஸிற்குள் இலைகளுக்கு நடுவில் கண்ணுக்குத் தெரியாத பூச்சி முட்டைகள் இருக்கக் கூடுமாம்.

    அது போல பச்சைப் பயறு வகைகளையும் முளை கட்டிவிட்டு ஸ்டீம் செய்து சாப்பிடுவதுதான் நல்லதென்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாரி. உங்கள் வீட்டிற்கு நான் சாப்பிட வருவதாக இல்லை

      நீக்கு
  7. நான் சாலட் செய்தால் அதுதான் உணவு. வேறு எதுவும் செய்வதில்லை. காய்கள் வெந்த வேர்க்கடலை, பயறு அல்லது கொண்டைக்கடலை .....பருப்பு, விதைகள் அரைத்த பொடி, மிளகுப் பொடி என்று கலந்து எலுமிச்சை பிழிவது அவ்வளவுதான்...கொத்தமல்லி தூவிக் கொண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம்!! ஹாஹாஹா கை தூக்க அவசியம் இல்லாமல் போய்விட்டது எளிய எலி ஆகலையே...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கருந்துளை பற்றிய விஷயங்களை நான் அவ்வப்போது வாசிப்பதுண்டு என்பதால், இதையும் வாசித்தேன். கூடவே துளசிக்கு நோட்ஸ் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கான இலக்கியத்தில் உள்ள பாடம் அவர் நோட்ஸ் அனுப்பிய போதும் இதைப் பற்றி வாசித்தேன். அதைத் தமிழிலும் எழுதத் தொடங்கினேன். எப்படி கருநுளை எல்லாவற்றையும் விழுங்கும் என்று...

    நான் வாசிப்பது பொதுவாக, தத்துவங்களையும் இதில் உட்படுத்திப் பார்ப்பதற்கு.

    அதைக் கதை ஒன்றிலும் உணர்வுகள் ரீதியாகப் பயன்படுத்தியிருக்கிறேன். கதை இன்னும் முட்க்கலையேஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  10. தினமலர் செய்தி சுவாரசியம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இரண்டாவது செய்தியும் அதில் உட்பட்ட ஒன்று மேலே சொன்னதில்..

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. எளிய உணவு என்று சொல்லி விட்டு தட்டு நிறைய நல்ல சத்தான ஆகாரங்கள் வைக்கப்பட்டு இருக்கிறது.
    சாலட் சாப்பிடுவது நல்லதுதான். பற்கள் நன்றாக இருக்கும் போது சாலட் நல்லது.

    மாயவரத்தில் மாதம் ஒரு நாள் "இயற்கை சங்கம்" செல்வோம், அங்கு சமைக்காத இயற்கை உணவை காலையில் கொடுப்பார்கள். பழங்கள் அவல் நனைத்து அதில் இனிப்பு போட்டும், காரத்துக்கு அவலில் பச்சைமிளகாய் காரட் துருவல், தேங்காய் துருவல் போட்டு எலுமிச்சை பிழிந்து கொடுப்பார்கள்.நெல்லிக்காய், தேங்காய் , பச்சைமிளகாய் போட்டு அரைத்த துவையல் கொடுப்பார்கள்.
    பழ வகைகள், இளநீர், மற்றும் பழ ரசங்கள் இடை இடையே கொடுப்பார்கள்.

    பாடம் நடக்கும் யாராவது வந்து பேசுவார்கள் இயற்கை உணவுகள் மற்றும், பிரமிட், மற்றும் காந்த சிகிட்சை , ரேக்கி பற்றி எல்லாம்.
    சாரின் சமைக்காத உணவுகள் மாயவரம் நினைவுகளை நினைக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு மேடம்.. பேசாமல் குழம்பு, சாதம் ரசம் கறியமுது கூட்டு தயிர ஊறுகாய் அப்பளம்னு வாழையிலைல வெட்டறதை விட்டுவிட்டு இயற்கை உணவு சாலட்லாம் நல்லாவா இருக்கும்?

      நீக்கு
    2. மாதம் ஒரு ஞாயிறு இந்த மாதிரி இயற்கை சங்கத்தில் இயற்கை உணவு.

      நாங்கள் இரண்டு பேரும் ஞாயிறு விரதம் இருப்போம்.அதனால் நான் பழம் மட்டும் எடுத்து கொள்வேன். சார் அதுவும் சாப்பிட மாட்டார்கள்.

      ஜூஸ், இளநீர் மட்டும் எடுத்து கொள்வார்கள்.

      நாங்கள் வகுப்பில் கலந்து கொள்வோம்.
      ஞாயிறு விரதம் பல வருடம் கடைபிடித்தோம்,
      காலை ஆகாரம் கிடையாது மதியம் ஒரு வேளை மட்டும்.

      நீக்கு
  14. இலகு உணவு நன்றாக உள்ளது. சலட் உணவுகள் உடலுக்கு நன்று என்கிறார்கள்.

    கரணை வறுவல் இரண்டு நாட்களுக்கு முன் நாங்களும் செய்தோம்.

    கருந்துளை பற்றி அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
  15. பத்திரிக்கை செய்திகள் படித்தேன்.

    பெரிய தொலை நோக்கியில் பார்க்கும் போது காலத்தை காட்டும் மாயகண்ணாடி போன்றது என்கிறார்கள்.


    பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை பிக பாங் நிகழ்வுக்குப் பிறகு 800 பத்து லட்சம் ஆண்டுகள் என்பது சிறு கைக்குழந்தை நிலை. பிரபஞ்சத்தின் இளம் வயதிலேயே இவ்வளவு நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளை எப்படி ஏற்பட்டு இருக்க முடியும் என விஞ்ஞானிகள் மலைத்து நிற்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரபஞ்சத்தின் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டு வரும்போது சில இடங்கள் மட்டும் நிரப்பப்படாமல் நின்று போயிருக்கும்! Deep... Deep... Deep..

      நீக்கு
  16. எனது சமையல் குறிப்பினை மேற்கோள் இட்டதற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!