9.10.10

பத்து செய்திகள், பத்து கமெண்டுகள் !



# டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் 'அதிரடி' உத்தரவு. 

** லத்திகாவுக்கே 'லத்தி' சார்ஜா! 

# ஆத்தூர் அருகே நரபலி முயற்சி ? 
** யார் அந்த நரபலி? ஆத்தூர் அருகே என்ன முயற்சி செய்தார் அவர்? 

# இந்தியா - ஆஸி., 2வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா பேட்டிங், அதிரடி ஆட்டம்.
** இப்பிடித்தான் முதல் டெஸ்டும் ஆரம்பித்தது. அப்புறம் என்ன ஆச்சு? 

# 20 கி.மீ., நடைப்போட்டி : இந்திய வீரருக்கு வெண்கலம். 
** எவ்வளவோ தடைப் போட்டிகளில் அன்றாடம் ஜெயித்து வரும் இந்தியருக்கு, நடைப்போட்டி சர்வ சாதாரணம்! 

# மின்சார ரயில் தப்பியது.  
** பவர் கட்டா? 

# பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் இந்தியா அல்ல :முஷாரப். 
** அது சரி. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் எது - அதையும் சொல்லிடுங்க சார்! 

# அடுத்த காமன்வெல்த் போட்டி: பெண்களுக்கான மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி!  
** இன்றளவில் இந்தியா இன்னும் இருபது தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள மற்ற போட்டிகளுக்கும் ஏதாவது வேட்டு வைப்பார்களா? 

# நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?   
** விளைவிப்பது சாத்தியமாக இருக்கலாம்; ஆனால் விலை(க்கு) விப்பது (விற்பது) சாத்தியமா?         
    
  
# இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் தனித்து போட்டி. 
** எங்களைக் கேட்டால், தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவிக்கும் கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து, போட்டியிடலாம். 


# அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு இணையாக கூட்டம்? விஷப்பரீட்சையில் காங்.,
** இதுல என்னங்க விஷப்பரிட்சை? 'பிரியாணிப் பொட்டலங்கள் தயார் செய்தால் போதாதா?' என்கிறார் 'விஷ'யமறிந்த தொண்டர் ஒருவர்!   

8.10.10

வருகிறது ஒரு சிறப்பு நாள், நேரம்


இன்று அக்டோபர் எட்டு.
இன்னும் இரண்டு நாட்களில் வருகிறது ஒரு சிறப்பு.
இந்த நூற்றாண்டின் 
பத்தாம் வருடம், 
பத்தாம் மாதம்,
பத்தாம் நாள், 
அன்றைக்கு, காலை பத்துமணி பத்து நிமிடங்களுக்கு, 


நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள், என்ன செய்துகொண்டு இருக்கின்றீர்கள் 
என்பதை, engalblog@gmail.com முகவரிக்கு மெயிலுங்கள். 

முடிந்தால், செல் காமிரா / டிஜிட்டல் காமிரா கொண்டு பத்து மணி பத்து நிமிடம் ஆகும்பொழுது உங்கள் கண்ணுக்குத் தெரிந்த நல்ல காட்சியை படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். சுவையான விவரங்களையும், படங்களையும் 'இது நம்ம ஏரியா வலையில் வெளியிடுவோம். 

பங்கு பெறுகின்ற வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துகள்! 

எடக்கு மடக்கு கேள்விகள், சந்தேகங்கள் இவற்றை, இந்தப் பதிவிற்கு பின்னூட்டமாக பதியுங்கள். 

நன்றி. 
            

7.10.10

புதிர்ப் போட்டி !

நமது SPS பட்டம் பெற்ற, எதிர்காலத்தில் பெறப்போகும் வாசகர்களுக்கு ஒரு புதிர்ப் போட்டி. 


இங்கே கிளிக்குக: 

யார் இவர்? என்ன புகழ்?  



4.10.10

பொடி விஷயம்...

அந்தக் காலத்தில் இருந்த எத்தனையோ விஷயங்கள் இந்தக் காலத்தில் கண்ணை விட்டு மறைந்து விட்டன. கண்ணை விட்டு மறைந்தாலும் கருத்தை விட்டு மறையாது. சிட்டுக் குருவி, பருந்து என்று பல உண்டு! அந்த வரிசையில்...

   
சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப் பட்டது. அதைப் பற்றி படிக்கும்போது பல வருடங்களுக்கு முன்னால் தஞ்சையில் இருந்த போது கொண்டாடப் பட்ட கும்பாபிஷேகம் என்று நினைக்கிறேன்... நினைவுகள் வந்து போயின. வேஷ்டி கட்டத் தொடங்கிய புதிது. அரசுக் குடியிருப்பில் இருந்தோம். மேம்பாலம் வழியாக இறங்கி இடது பக்கமாக போய் வலது பக்கம் போனால் கோர்ட்) புதாற்றை ஒட்டி இடது பக்கம் திரும்பினால் பெரிய கோவில். தாண்டிச் சென்று இடதுபுறமாகப் போனால் சிவகங்கைப் பூங்கா. ராஜராஜன் சிலையை ஒட்டி வலது புறம் திரும்பினால் மத்திய நூலகம், ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரி வழியாக பஸ் ஸ்டேண்ட் அடையலாம். அந்த கும்பாபிஷேகம் சமயம் இந்தப் பாதையில் தான் பயங்கரக் கூட்டத்தில் மாட்டி, வேஷ்டி எப்போது எங்கே விழுந்தது என்று தெரியாமல் அலமலந்து ஓடி, திலகர் திடல் குட்டிச் சுவர் ஏறி, நரகல் குவியலில் குதித்து ஒரு ரிக்க்ஷா பிடித்து அப்பா, அண்ணன் தயவில் மானத்தை மறைத்து, பத்திரமாக வீடு வந்து சேர்ந்த நினைவுகள் எல்லாம் வந்தன...!     
   
ஆனால், இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல...!

அப்போதெல்லாம் இந்த மாதிரி விழாக்காலங்களிலும், இன்னும் ஏதேதோ கண்காட்சி போன்ற கூட்டம் கூடும் நாட்களிலும் மக்கள் கவனத்தைக் கவர்வது பல விளம்பரங்களுக்கு நடுவில் காணப் படும் (மூக்குப்) பொடி விளம்பரம். என் வி எஸ் என்று நினைக்கிறேன்,(டி ஏ எஸ்? ) வேஷ்டியை தார்ப் பாய்ச்சிக் கட்டியது போன்ற உருவகத்துடன் ஒரு மனிதன் உட்கார்ந்து பொடி இடிப்பது போன்ற விளம்பரம். பின்னர் விளக்குகள் போடப்பட்டு, மின் இணைப்பு தரப்பட்டு, கைகள் உரலில் இடிப்பது போல மேலும் கீழும் சென்று வரும் . இது அந்நாளில் புதுமை. அந்நாளில் குடைராட்டினத்துக்கு இணையாக இதைப் பார்ப்பதற்கும் கூட்டம் சேரும்.

இப்போது முதல் பாராவை மறுபடி படிக்கவும்.

நாகப்பட்டினத்திலிருந்து என் தாத்தா தஞ்சை வருவார். எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார். செம்மங்குடி பற்றியும் மதுரை மணி கச்சேரி சென்று வந்த அனுபவங்கள் பற்றியும் பேசுவார். சிறுவர்களிடம் அவர்களுக்கு இணையாகப் பேச்சு கொடுப்பார். ஒன்றும் தெரியாதது போல கேள்விகள் கேட்டு எங்கள் அறிவைச் சோதிப்பார். நான் அதில் ஒரு போதும் தேறியதில்லை! எங்களுடன் செஸ் விளையாடுவார். ஜோதிடம் பற்றி பேசுவார். மொத்தத்தில் சகலகலாவல்லவர். எதைப் பற்றி வேண்டுமானாலும், யாரிடம், எந்த வயதினரிடம் வேண்டுமானாலும் பேசுவார்.  அரசியலை விவாதிப்பார். பேச்சில் பொறி பறக்கும். என் அப்பாவுக்கும் அவருக்கும் குடுமி பிடி சண்டைக்கு இணையாக தடித்த பேச்சு வார்த்தைகள் பறக்கும். மாமனார் Vs மாப்பிள்ளை விவாதங்களை நாங்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். சண்டை கைகலப்பில் முடியுமோ, தாத்தா ஊருக்குக் கிளம்பி விடுவாரோ என்று பயமாக இருக்கும்.   

அவர் ஊர் சென்று விட்டால் சுவையான பொழுதுபோக்குப் பேச்சுகள் இல்லாமல் போய் விடும் என்பது மட்டுமில்லை, தாத்தா சுவைப் பிரியரும் கூட. சாப்பாட்டில் பக்குவம் சொல்வது, புதுப் புது காம்பினேஷன்களில் எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்வது என்று கலக்குவதோடு அவர் ஒரு சிறிய அலுமினியப் பெட்டி வைத்திருப்பார். அதிலிருந்து காசு எடுத்து வெள்ளை அப்பம், பஜ்ஜி, காராச் சேவு மற்றும் இன்ன பிற நொறுக்குத் தீனிகளுக்கு மாலை நேரங்களில் வழி செய்வார். 'உன் கூட யார் பேசுவா' போன்ற இறுதிக் கட்ட வசனங்களுடன் கோபமாகப் பிரியும் மாமனாரும், மருமகனும் இரவு உணவின்போதோ, மறுநாளோ மிகச் சாதாரணமாகப் பேசிக் கொள்வதைக் கேட்கும் போது ஆச்சர்யமும் சந்தோஷமும் ஒருங்கே உண்டாகும். தாத்தா பற்றி தனிப் பதிவே போடலாம்!  ஆனால், பதிவு அவரைப்  பற்றியும் அல்ல...!

அந்த தாத்தா தன்னுடைய வேட்டி மடிப்பில் ஒரு வாழை நார்ப் பொட்டலம் வைத்திருப்பார். பாடல் ராகம் இழுத்துக் கொண்டே அல்லது சுவையான விவாதங்களுக்கு நடுவே, அல்லது படித்துக் கொண்டிருக்கும் 'ஹிண்டு'வை லேசாக மடித்து இடுக்கிக் கொண்டு... மிக ஜாக்கிரதையாக அந்தப் பொட்டலத்தை உள்ளங்கையில் வைத்து லேசாக ரெண்டு தட்டுத் தட்டி, ஜாக்கிரதையாகப் பிரிப்பார். மெல்லத் திறந்து கட்டை விரலாலும், நடு விரலாலும் ஒரு சிமிட்டா அதிலிருந்து எடுப்பார். மூக்கின் இரு துளைகளிலும் சமமாகப் பங்கிட்டு கண்ணை மூடி 'சர்.ர்..ர், சர்..ர்...ர்..' என இழுப்பார். சிலபல தும்மல்கள். இதற்காகவே இடுப்பில் நிரந்தரமாகச் சொருகியிருக்கும், இப்படி துடைத்து துடைத்தே நிறம் மாறி பழுப்பாகிப் போன கைக்குட்டையை வைத்து துடைத்துக் கொள்வார். சில சமயங்களில் அது நார்ப் பொட்டலமாக இல்லாமல் நீள் உருளையாக தகர டப்பி ஒன்று வைத்திருப்பார். அதிலிருந்து எடுத்துப் போடுவார். அவருக்கு அவர் பெயர் போட்ட எவர்சில்வர் டப்பா ஒன்றை அவருடைய பையன் ஒருவர் செய்து கொடுத்திருந்தார் (தந்தைக்கு மகன் ஆற்றிய உதவி - பெயர் சொல்லும் டப்பா!) இன்னொரு பொடிப் பிரியர் அருகிலிருந்தால் அவருக்கு ஒரு சிமிட்டா கிடைக்கும். 'மூக்கு அடைப்பு, ஜலதோஷம்லாம் கிட்ட அண்டாதுடா' என்பார்.      
           
மூக்குப் பொடி எதனால் செய்யப் பட்டது என்று எங்களுக்குள் விவாதம் நடக்கும்.. 'காபிப் பொடியில் காரம் கலப்பார்கள்' என்பான் ஒருவன். 'காய்ந்த புகையிலைப் பொடிடா' என்பான் இன்னொருவன்...

அந்த பொடி மட்டையை இப்போதெல்லாம் காணோம்! இப்போதெல்லாம் யார் கையிலும் பொடி மட்டை வைத்து அல்லது பொடி போட்டுக் கூட நான் பார்க்க நேர்வதில்லை. எங்கேயும் பொடி விளம்பரங்களையும் காணக் கிடைப்பதில்லை. முன்பெல்லாம் தெருவுக்குத் தெரு கடைகளில் பொடி விற்பார்கள். தாத்தா இருபத்தைந்து பைசாவுக்கோ எட்டணாவுக்கோ பொடி வாங்கி வரச் சொல்வார். கடைக் காரர் இதற்கென்றே ஸ்பெஷலாக வடிவமைக்கப் பட்ட ஸ்பூன் ஒன்று வைத்திருப்பார். நீளக் குச்சியில் குழிந்த அடிப்பாகம் கொண்ட 'எடுப்பான்'. அதை மூக்குப் பொடி ஜாடிக்குள் விட்டு காசுக்கு தகுந்தாற்போல அளவில் எடுத்து, பதம் அல்லது பாடம் செய்யப் பட்ட நார்ப் பொட்டலத்தில் கட்டித் தருவார்கள். இதற்கென்றே வாழை மட்டைச் சருகு எடுத்து காய வைத்து அடித்து பதப் படுத்தி வைத்திருப்பார்கள். சமீப காலங்களில் எந்தக் கடையிலும் பொடி விற்பனை செய்யும் அரிய காட்சியைக் காண முடியவில்லை. நான் போகும்போது யாரும் வாங்குவதுமில்லை. வழக்கொழிந்து போய் விட்டதோ? என்று எண்ணுகின்ற அளவு என் கண்பட யாரும் பொடி போடுவதும் இல்லை...! நல்ல வேளை - நாடு முன்னேறிவிட்டது, ஒரு புகையிலைப் பழக்கத்தைக் கைவிட்டு. 
        
இன்றைய இளைய சமுதாயம் பொடியை புறக்கணித்து மறந்து விட்டதா?  அல்லது, 'உமிழ்தல், உறிஞ்சுதல், ஊதுதல்' (tobacco chewing and spitting, snuff, smoke) ஆகிய மூன்று கெட்ட பழக்கங்களில் இரண்டை மறந்து ஒன்றில் விழுந்துவிட்டார்களா? மூன்றையும் விட்டுவிட்டால் ஆரோக்கிய வாழ்க்கை வாழலாமே!     
                                            

3.10.10

குமாரி கமலாவும் தேவி ஸ்ரீ பிரசாத்தும்..


இப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏன், சனிக் கிழமைகளில் கூட தொலைக் காட்சிகள் இப்போதோ, அல்லது எப்போதோ நடந்த திரைப் பட விருது வழங்கும் விழாக்களைக் காட்டுவது வழக்கமாகி விட்டது. லக்ஸ் விருதுகள், விஜய் விருதுகள், ஃபில்ம் ஃபேர் விருதுகள், என்று ஏகப் பட்ட விழாக்கள். எல்லாம் ஏதாவது ஒரு டிவியில் காட்டப் பட்டு விடும்.


இதில் பொதுவான அம்சம் எல்லா கலைஞர்களும் பெரும்பாலும் விதம் விதமான உடைகளில் வருவார்கள். உடைகள் போட்டிருக்கிறார்களா, அல்லது விழாவுக்கு நேரமாகி விட்டால் உள்ளே விடுவார்களோ மாட்டார்களோ என்று அவசரத்தில் கிளம்பி அரைகுறை உடையில் பாதி போட்டும் போடாமலும் வந்து விட்டார்களோ என்று சந்தேகப் படும் அளவில் சில பல நடிகைகள் வருவார்கள். சிலர் அந்த நேரத்தில் தான் எந்த ஜோடியுடன் இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள் என்பது போல அவர்களுடன் வருவார்கள்.
பரிசு வாங்கும் பிரபலத்துக்கு பரிசு கொடுக்க முதலில் இரண்டு பிரபலத்தை அழைப்பார்கள். அவர்கள் வந்து பரிசு வாங்கும் பிரபலத்தை அறிவித்து பரிசை அவர்கள் கையில் கொடுக்க வேண்டும். நால்வரும் நாலு நாலு வார்த்தைப் பேச வேண்டும். டிவி இடையில் சில க்ளிப்பிங்குகளைக் காட்ட வேண்டும். பரிசு வாங்கியவர் சில சமயம் 'அழுது' விடுவார். சமீபத்தில் நான் பார்த்து அழுதவர் தெலுங்கு ஆர்யா படப் பாடல் ரிங்கரிங்க பாடலைப் பாடிய பாடகி. ஏதோ ஹிமேஷ் என்று வரும்.
இந்தப் பாடல்களுக்கு இடையில் பொழுது போக்கு என்று சினிமாப் பாடல் காட்சிகள் 'நடன'த்துடன் இடம் பெறும். சமீபத்தில் இந்த நடன ஒத்திகையைக் கூட தனி நிகழ்ச்சியாகக் காட்டி அரை மணி நேரம் ஒப்பேற்றியது சன் டிவி. இந்த 'நடனங்கள்' பார்த்த்ததும் தோன்றியதைத்தான் இங்கு பதிவாக்கியுள்ளோம்.

பல்வேறு நடிகைகளும் (நடிகர்கள் கிடையாது) இறுக்கிப் பிடித்த உடைகளுடன் அந்தப் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க விளக்குகளின் வர்ணஜாலத்தில் ஆடுவார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத்.

இசை அமைப்பது இவரது தொழில்.

நடிக்க முயற்சி செய்து கிடைக்கவில்லையோ என்னமோ இந்த மாதிரி மேடைகளில் தவறாது இப்போதெல்லாம் இவரது 'நடன'த்தைக் காண முடிகிறது. நடிகைகள் எல்லாம் ஆடும் ஆட்டம் போலதான் இதுவும். இவர் மேடையின் இந்த கோடியிலிருந்து அந்தக் கோடி வரை வேகமான கேட்வாக் போல நடப்பார். நடுநடுவில் வாய் அருகே கை வைத்து ஹூ என்று கர்ஜனை செய்வார். அவ்வப் போது இரண்டு கையையும் தட்டிக் கொள்ள வேண்டும். பின்னங்கழுத்தில் ஒரு கை, கீழ் இடுப்பில் ஒரு கை வைத்து அவ்வப்போது ஒரு சில வெட்டுகள் கொடுக்க வேண்டும். நடனமாம். என்ன ஆசையோ?
அக்டோபர் இரண்டாம் தேதி அன்று சில சேனல்களில் காட்டப்பட்ட குமாரி கமலாவின் 'மஹ்ஹான்...காந்தி மஹ்ஹான்..' பாடலைப் பார்க்கும்போது அவர் நடனம் நினைவு வந்தது. அந்தக் காலத்தில் அவர் நடனம் இல்லாத படம் இருக்காது என்பது போல இருக்கும். ஆடுவோமே, பள்ளு பாடுவோமே போன்ற பாடல்கள் உதாரணம்.


பின்னர் வந்த பத்மினி, வைஜயந்தி மாலா போன்றோர் நடனம். சின்னஞ்சிறு கிளியே, கண்ணும் கண்ணும் கலந்து போன்ற பாடல்களை நினைவில் கொண்டு வரவும். தில்லானா மோகனாம்பாள், பாட்டும் பரதமும், சலங்கை ஒலி போன்ற படங்கள் இது போன்ற கிளாசிக் நடனத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்டன.

பிறகு வந்தார் சுந்தரம் மாஸ்டரின் பையன் பிரபு தேவா! சுந்தரம் மாஸ்டர் நீண்ட காலமாக சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர். ஓரளவு இந்த நடனங்கள் முன்பே நாகேஷினால் சர்வர் சுந்தரம், தங்கைக்காக போன்ற படங்களில் ஆடப் பட்டதுதான். நடுவில் அவர் மகன் ஆனந்த் பாபு. நடனத்துக்காகவே ஓடிய படம் பாடும் வானம்பாடி. அவர் நடித்தது. சற்றே வலிப்பு வந்தது போலவும், திடீரென ஷாக் அடித்தது உதறுவது போலவும் இருக்கும் நடனம்.

பிரபுதேவா நடனங்கள், 'உடம்பா அல்லது ரப்பரா!' என்று வியந்து போகுமளவு புது மாதிரி ரசிக்க வைத்தது. இதயம், சூரியன் போன்ற படங்களில் இவர் நடனம் தனியாகச் சேர்க்கப் பட்டிருக்கும். இது ஒரு மாதிரி ட்ரேட் மார்க்காகி லாரன்ஸ், ராஜு சுந்தரம் என்று இது போல ஆடுபவர்கள் அதிகமானார்கள். அதுவரை டான்ஸ் இளவரசனாக இருந்த கமல் கூட ஓரம் கட்டப் பட்டார்.

இப்போதெல்லாம் படங்களில் பாட்டு என்பது இரைச்சல். நடனம் என்பது ஜிம்னாஸ்டிக்... ஆர்யா படத்தில் ரிங்க ரிங்க ரிங்க ரிங்கா பாட்டு பார்த்திருக்கிறீர்களோ? படங்களில் இயற்கை அல்லது செயற்கைப் பின்னணியில் கதாநாயகன் நாயகி இப்படி ஆடும் ஆட்டங்களையே பார்க்க முடியவில்லை. இதில் தேவி ஸ்ரீ இப்படி வேக வேகமாக மேடையின் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் அலைவதை நடனம் என்று சேர்க்க முடியுமா?
வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் 'சபாஷ் சரியான போட்டி' என்று ஆடும் நடனம் ஒரு வகை. தில்லானா மோகனாம்பாள், மணமகள், சலங்கை ஒலி போன்ற படங்களில் வரும் பாரத நாட்டியம் ஒரு வகை. சந்திர பாபு ஆடும் ராக் அண்ட் ரோல் ஒரு வகை. நாகேஷின் நடனங்கள் தனி வகை. (ரசிக்காமலிருக்க முடியாது) பாட்டும் பரதம் படத்தில் சிவாஜி அல்லது கோபி கிருஷ்ணா ஆடிய நடனம் ஒருவகை, கமல் நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது என்று மற்ற படங்களில் ஆடிக் கொண்டிருந்த நடனம்.. இப்போது தேவி ஸ்ரீ மேடையில் போடும் 'பாப்பா நொண்டி' நடனம்...!!
எங்கு தொடங்கி எங்கு வந்திருக்கிறது இந்த நடனக் காட்சிகள்? அதையும் விட முக்கியமான கேள்வி, 'எங்கே போகும்?'

ஞாயிறு - 65

1.10.10

வலைப் பதிவருக்கு ஒரு பாஸ் இருந்தால்?


அலுவலகத்தில், முன்பொரு காலத்தில்,குப்பை கொட்டிக் கொண்டிருந்த நாட்களில்,  'பாஸ் தொல்லை இல்லாமல் எப்போதடா இருப்போம்?' என்று இரண்டு மூன்று முறைகள் (ஹி ஹி ஒரு நாளில்தான் இரண்டு மூன்று முறைகள்! சாரி பாஸ்களே!). நினைத்ததுண்டு. அலுவலக வாழ்க்கையில், ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு டஜன்++ பாஸ்கள் (ஒரு நேரத்தில் ஒருவர்தான் - ஆனால் முப்பத்து நான்கு ஆண்டு கால அலுவலக வாழ்க்கை!) ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம்! ஆனால் என்ன? எல்லோரும் (இரண்டொருவரைத் தவிர ) டெர்ரர்தான்! 

இப்போ பாஸ் பிரச்னைகள் ஏதும் இல்லை. ஆனாலும் பாழும் மனம், வலைப் பதிவராகியபின், எனக்கு ஒரு பாஸ் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து, யோசித்துப் பார்க்கையில் ......
   
(ஒரு டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருள் - கடிகார ஓட்டத்திற்கு எதிர் திசையில் சுழல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதுதான் ப்ளாஷ் பேக் யுக்தி !!!)

காலையில் எழுந்து, கடன்கள் முடித்து, காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு, இரயிலைப் பிடித்து, பஸ் பிடித்து, இருக்கையில் அமர்ந்தால்....  

எதிரே பாஸ். எப்பவுமே இவர் எப்படி நான் லேட் ஆக வரும் நாட்களில் முன்பாகவும், நான் சரியான நேரத்தில் அல்லது அதற்கு முன்பாக வரும் நாட்களில் ரொம்ப லேட் ஆகவும் வருவாரோ! அவர் கணக்கில் நான் எப்பவுமே 'லேட் கமர்'!   

பாஸ்: " நேத்திக்கு என்ன பதிவு போட்டீங்க?"

நான்: " சார்? எந்திரன் பற்றி..."

பாஸ் : " எவ்வளவு பேஜ் வியூஸ் வந்தது?" 

நான்: " ஆயிரத்திற்கு மேலே வந்திருக்கு சார்! அதைத்தான் இப்போ வந்தவுடன் பார்த்துக் கொண்டு இருக்கேன்..."

பாஸ்: " வெரி குட் - அந்தப் பதிவு நான் கொடுத்த ஐடியா தானே?"

நான்: " அது.... வந்து... நானே சொந்தமாக யோசித்து ...."

பாஸ்: "ஆமாம் ஆமாம் - நான்தானே நேற்று உன்னை சொந்தமாக யோசித்து எழுதச் சொன்னேன்!"

நான்: "நீங்க கடந்த ஒரு வருடமாக தினமும் அதையேதானே சொல்லிக்கிட்டு இருக்கீங்க .. அதனால ...."

பாஸ்: "நான் ஒரு வருஷமா சொல்லிக்கிட்டு இருந்தாலும், நேற்றுதான் அதை செயல் படுத்தி இருக்கின்றீர்கள்! - அதுதான் இவ்வளவு பிரபலம் ஆகியிருக்கின்றது!"

நான்: (பல்லைக் கடித்தபடி) "சரி அப்படியே இருக்கட்டும். இன்றைக்கு நான் போடவேண்டிய பதிவு பற்றி நான் கொஞ்சம் சிந்திக்கலாமா ..."

பாஸ்: "இன்றைக்குப் போடுகின்ற பதிவு இரண்டாயிரத்திற்கு மேலே பேஜ் வியூ வரணும். ஆமாம் சொல்லிட்டேன்."

நான்: "அது எப்படி சார்? நேற்றைக்கு நமக்கு டாக் ஆஃப் தி டவுன், எந்திரன் கிடைத்தான். இன்றைக்கு என்ன கிடைக்கும்? "

பாஸ்: "அதெல்லாம் உன்னுடைய வேலை.  என்னைக் கேட்காதே"

நான்: (கடுப்புடன்) "சரி சார்!"

பாஸ்: " நான் காலேஜ்ல படித்த காலத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் தினந்தோறும் லட்சக் கணக்கில் பேஜ் வியூஸ் வந்தது. தெரியுமா? "

நான்: "அட! அப்படியா சார்!" (மனதுக்குள் - யோவ் நீ காலேஜ் படிச்ச காலத்துல கூகிள்,  ப்ளாகர், பேஜ் வியூ, ஸ்டாடிஸ்டிக்ஸ் எல்லாம் காதுல கேட்டிருந்தா கூட, ஏதோ கோதாவரி சம்பா அரிசி ரகம் என்று நினைத்திருப்பாய். என்னா ரீலு விடுறான் பாருய்யா!)

பாஸ்: "ஆமாம். சென்ற மாதம் நான் கொடுத்த ஐடியா டெவெலப் பண்ணி ஒரு பதிவு போட்டியே, அதுக்கு எவ்வளவு பேஜ் வியூஸ் வந்தது?"

நான்: "அஞ்சு சார்."

பாஸ் : " ஆஹா ! ஐந்தாயிரமா! பார்த்தியா - என்னுடைய ஐடியா எவ்வளவு நல்ல ஐடியா என்று? .."

நான்: "இல்லை சார் - வெறும் அஞ்சு ... ஃபைவ் ... பான்ச்... ஐது ..."    

      
பாஸ்: (வெறுப்புடன்) " ஆமாம் என்னுடைய ஐடியாவை நானே எழுதி இருக்கலாம். அதை விட்டு உன்னை எழுதச் சொன்னேன் அதனாலத்தான் அஞ்சு பேஜ் வியூ மட்டும் கிடைத்தது." 

நான்: "நீங்க எழுதி இருந்தா நான்கு பேஜ் வியூதான் வந்திருக்கும்!"

பாஸ்: (கோபமாக) "எப்படி?"

நான்: "நான் அந்தக் கண்றாவியைப் படித்து, பதிவிட்டு  தொலைத்திருக்க வேண்டி இருந்திருக்காதே!"

பாஸ் வேகமாக என்னை நோக்கி வர, நான் கிரேட் எஸ்கேப்!
***********
நல்ல வேளை! பதிவுலகில், எனக்கு ஒரு பாஸ் இல்லை. நானே பாஸ், நானே ஊழியன். ஆனால் என்ன? உங்களைப் போன்ற ரசிகர்கள் அதிகம் இருப்பதுதான் சந்தோஷமான விஷயம்!