வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

வெள்ளி வீடியோ : அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம்மதேவன் சாதனை




      ஏற்கெனவே வாக்களித்திருந்தபடி ஒரு வழியாக இளையராஜா பேட்டியை ஆரம்பிக்கிறேன்!



     எல்லா இசையமைப்பாளர்களும் சொல்லும் சொல்லும் சிரமங்களையே இளையராஜாவும் சொல்கிறார்.  பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் இடம்பெற்ற ' ஓரம்போ...' பாடலை அப்போது  ஆல் இந்தியா ரேடியோவில் தடை செய்து விட்டார்கள் என்று ஞாபகம்.  அதைத்தான் அவர் தனது கட்டுரையில் சொல்கிறார்.



     இன்று பகிர்ந்திருக்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஒரு தோல்விப்படம்.  காதல் ஓவியம்.   படம் பார்க்க நிறைய பொறுமை வேண்டும்.  ஆனால் பாடல்கள் தேன்.  எல்லாப் பாடல்களும் தேன்போன்ற பாடல்கள்.   உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால் காட்சியுடன் இருக்கும் பாடல் பாதிதான் இருந்ததால் காட்சியில்லா கானம் இணைத்திருக்கிறேன்!!


     "காமன் சாலை யாவிலும் ஒரு தேவரோஜா ஊர்வலம்.." 


   'ராஜகீதம்',   'தேவரோஜா' போன்ற பிரயோகங்களுக்குச் சொந்தக்காரர் வைரமுத்து.  உண்மையிலேயே காதல் ஓவியம் படத்தில் எல்லாப் பாடல்களிலும் இவரது வரிகள் வைரவரிகள்தான்.  இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'பூவில் வண்டு கூடும்' பாடல்தான்.  எனினும் அதை பகிராமல் இந்தப் பாடலைப் பகிர்கிறேன்.


     அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம்மதேவன் சாதனை 


     




==========================================================================



இளையராஜா 





     யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கில்லை.  அதேபோல பிறரை வம்புக்கு இழுக்கும் நோக்கமும் கிடையாது.  இளையராஜா என்னும் இசையமைப்பாளரின் இதயத்தை அடிக்கடி வந்து நெருடிக்கொண்டிருக்கும் சில எண்ணங்களை - சில நினைவுகளை உங்களுக்குத் தொடர்ந்து சொல்லப்போகிறேன்.


     ஒரு கால கட்டத்தில் புதிதாக நல்ல இந்திப் பாடல்கள் வந்தால் போதும்.  "ஆகா!  இதைப் போன்ற ஒரு பாட்டு நம் படத்திலும் இருந்தால்...."  என்று உணர்ச்சி வசப்பட்டு நேரே இசையமைப்பாளரிடம் ஓடுவார் தயாரிப்பாளர்.  அவரின் முகபாவங்களை பார்த்ததும் "நாம் வேறு எந்த ட்யூன் போட்டாலும் இவர் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.  நமக்கேன் வீண் வம்பு?" என்று இசையமைப்பாளர் தலையை ஆட்டி விடுவார்.  ஆனால் இதற்குள்ளாக அதே ட்யூனை வேறொருவர் தெலுங்கிலோ, கன்னடத்திலோ போட்டு விட்டிருப்பார்.  இதை நான் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை.  திரு ஜி கே வெங்கடேஷ் அவர்களிடம் நான் உதவியாளனாகப் பணிபுரிந்துகொண்டிருந்த நாட்களில் நானும் அவரும் - இன்னும் பல இசையமைப்பாளர்களும் நேரடியாக அனுபவித்ததுதான்.


    ஒரு கன்னடத் தயாரிப்பாளர் - பெயரைக் கேட்காதீர்கள் - ஆர் டி பர்மனின் இந்தப் பாடல் ரிலீஸானாலும் முதல் ரிக்கார்ட் வாங்குபவர் இவராகத்தான் இருக்கும்.  கம்போஸிங்கிற்காக நாங்கள் உட்காந்த உடன் அந்த இசைத்தட்டைப் போட்டு விடுவார்.  அதேபோல் பாட்டு வேண்டும் என்பார்.  ஜி கே விக்கு இந்திப் படங்களைப் பார்ப்பதோ, பாடல்களைக் கேட்பதோ அவ்வளவாக வழக்கமில்லை.  எது கம்போஸ் பண்ணினாலும் சுயமாகச் செய்ய வேண்டும் என்ற பிரக்ஞை  உள்ளவர்.  தன்னால் முடிந்தவரை விவாதித்துப் பார்ப்பார்.  சில சமயங்களில் இந்த விவாதமே சீரியஸான சண்டையில் போய் முடிவதும் உண்டு.


     ஜி கே வியும், அந்தத் தயாரிப்பாளரும் என்னையும் பாரதிராஜாவையும் போல அடிக்கடி சண்டை போட்டுக்கொள்பவர்கள்.  இவர் போடும் எல்லா ட்யூன்களையும் கேட்டுவிட்டு, "என்ன இருந்தாலும் து மாதிரி இல்லையே..." என்று பர்மனின் ரிக்கார்ட் பக்கம் கையை நீட்டுவார் தயாரிப்பாளர்.  கைமேலேயே தட்டி, "உனக்கு ஏதாவது அறிவிருக்கா?  அது முழுவதும் முடிந்த பாடல்..  நான் வெறும் ட்யூன்தானே வாசித்துக் காட்டினேன்?  இனி பாடல் எழுதி, ஆர்செஸ்ட்ரேஷன் செய்து, பின்னணிப் பாடகர் பாடி, ஒலிப்பதிவு செய்தால்தானே முழுமை வரும்?  வெறும் ஹார்மோனியத்தையும், கிடாரையும் வைத்துப் பாடிக் காட்டினால் உன் காதுக்கு இப்படித்தான் கேட்கும்.  போய் வேலையைப் பார்..." என்பார் ஜி கே வி.


     இசையமைப்பாளர் ஒருவர் அங்கலாய்த்துக்கொண்டார்.  "சேச்சே... வரவர இந்த இந்திப் படங்களின் பாட்டுகளே சரியில்லப்பா... ஒரு நல்ல டூயட் போடணும்னு நானும் அஞ்சாறு மாசமாய்ப் பார்க்கிறேன்...  ஒரு பயலாவது நல்ல ட்யூன் போடறானா பாரேன்..."


     நல்லவேளையாக கடவுள் புண்ணியத்தில் எனக்கு இம்மாதிரி நேருவதில்லை.   என்னிடம் வருபவர்கள் வேறுமாதிரி.  உட்காரும்போதே "அண்ணே... .............................................................................................................................................................. ராஜேஷ் கன்னா படம் சில்வர் ஜூப்ளி தாண்ணே!"  என்றுதான் சொல்கிறார்கள்.  இந்திப்பாட்டு போல் வேண்டும் என்று கேட்காமல், ஏதோ என் பாட்டையே உதாரணம் காட்டுகிறார்களே, அந்த மட்டில் எனக்குச் சந்தோஷம்.  ஒரே மாதிரி பாட்டுப் போட்டால் இளையராஜா இருந்த இடம் தெரியாமல் போய்விடுவான் என்பது எனக்குப் புரிகிறது. இவர்களுக்கு?  இவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் எப்படியும் ஒரு பாட்டு ஹிட் ஆக்கிவிட வேண்டும் என்பதுதான். [கோடிட்ட வரிகள் பைண்டிங் கட் செய்ததில் காணாமல் போன வரிகள்! ]


      எவ்வளவு இடைஞ்சல்களுக்கு மத்தியில் ஒரு பாடல் ஹிட்டாக வேண்டியிருக்கிறது தெரியுமா?


     ஒரு தேதியைச் சொல்லி "அண்ணே....   அடுத்த மாசம் இந்த நாள்தான் நல்லாயிருக்கு.  அதை விட்டா நல்ல நாள் எதுவும் இல்லே...  அன்னிக்கி ஒரு பாட்டை எடுத்துக் கொடுத்திட்டீங்கன்னா மத்ததை அப்புறமா பார்த்துக்கலாம்...." என்று பலர் வருகிறார்கள்.  நல்ல பாடலைவிட நல்ல நாளுக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.  ஐந்தாறு  மாதங்களுக்கு முன்பாகவே என்னுடைய நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு விடுகின்றன.  அடுத்த மாதம் பாடல் வேண்டுமென்றால் நான் என்ன மெஷினா? தயாரிப்பாளர்களை நான் வேண்டிக்கொள்வது இதுதான் :  "நீங்கள் தரும் பணத்துக்காகததான் நான் உழைக்கிறேன்.  ஆனால் அதே சமயம் என்னிடமிருந்து கொஞ்சமாவது எதிர்பார்க்கும் ரசிகர்களை ஏமாற்ற முடியாது.  என் திருப்திக்காகவும், உங்கள் பட வெற்றியில் பங்கு வகிக்கவும் நான் பாட்டைக் கம்போஸ் செய்யப் போதிய அவகாசம் கொடுங்கள்."


     இதுதான் இப்படி என்றால் ரிக்கார்டிங் தொல்லைகள் வேறு.  29ம் தேதி திடீரென்று தியேட்டர் கிடைக்கும்.  அன்று எப்படியாவது பாடலைப் பதிவு செய்தாக வேண்டும்.  நான் ஐடியாவில் வைத்திருக்கும் இசைக்கருவி வாசிப்பவர் அன்று கிடைக்க மாட்டார்.  அந்தக் கருவியை வைத்து ஏதாவது புதுமை செய்ய எண்ணியிருப்பேன்.  அவர் வரவில்லை என்பதற்காகக் கிடைத்திருக்கும் தியேட்டரைத் தியாகம் செய்ய முடியாமல் நான் நினைத்திருக்கும் புதுமையைத் தியாகம் செய்ய வேண்டிய நிலை.


     அப்படியே எல்லாம் அமைந்தாலும் முதல் பத்து டேக்கிற்குள் பாட்டு ஓகே ஆனால்தான் உண்டு.    நாற்பது இசைக்கலைஞர்களை எல்லா நேரத்திலும் சரியாக வாசித்து விடுவார்கள் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.  டேக் அதிகமாக அதிகமாக அசதியும் அதிகமாகும்.  வாசிப்பவர்கள் தவறு செய்யும் வாய்ப்புகள் அதிகமாகும்.  


     இது எல்லாம் நல்லபடியாக அமைந்து விட்டால் மட்டும் போதாது.  பாடலின் வெற்றி அது படமாக்கப்படும் விதத்தையும் பொறுத்தே அமைகிறது.  இவ்வளவையும் மீறி பாட்டு ஹிட் ஆகி விட்டாலும் ஆல் இண்டியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தில் கேட்க முடியாத நிலை (புரிகிறதா? )    (தொடரும்)



தமிழ்மணம் வாக்களிக்க.....

19 கருத்துகள்:

  1. அருமை
    ஒரு பாடல் நம் செவிகளை வந்தடைவதற்குள் எத்தனை எத்தனைத் தடைகளைக் கடந்துவருகின்றது
    இதோ காணொளியினைக்காணச்செல்கின்றேன்
    தம+1

    பதிலளிநீக்கு
  2. இசையமைப்பாளர்களுக்கும் மிகுந்த சிரம்ம்தான். டியூன் ஓகே ஆகி, பாடலாசிரியர் பாடல் எழுதி, அப்புறம் இசை கம்போஸ் செய்து, தயாரிப்பாளரின் வசதியைப் பார்த்து, ஆர்டிஸ்ட் புக் பண்ணி, இசைக்கோர்ப்பு செய்து ஒரு பாடல் வெளிவரவேண்டும். அதற்குமேல் அது ஹிட் ஆகவேண்டும்.

    ராஜா அவர்கள் வரம் வாங்கி வந்த இசையமைப்பாளர். அவரது வரலாறே ஆச்சரியமானதுதான். பேட்டி எப்போதும் இன்டெரெஸ்டிங். த ம

    பதிலளிநீக்கு
  3. சாதனைக்குப் பின் உழைப்பினை அறியும்போது வியப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. எனக்குப் பிடித்த பாடல் - வெள்ளிச் சலங்கைகள் கொஞ்சும் கலைமகள்..

    கட்டுரையின் அடுத்த பகுதிக்குக் காத்திருக்கின்றேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  5. இளையராஜா பேட்டி எப்பயுமே விமர்சனத்துக்குள்ளாகும்ன்னு கேள்வி..

    காதல் ஓவியம்ல் இந்த பாட்டை கேட்டதா நினைவில் இல்லை. கேட்டு பார்க்குறேன். பகிர்வுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  6. எந்தத் தொழிலையும் வெளியிலிருந்து மேலோட்டமாகப் பார்த்து விமரிசித்துவிடமுடியாது. ஆனால், விமரிசகர்களில் பலர் என்னவோ அப்படித்தன். கதையைப்படிக்காமலே படைப்பாளியைப்பற்றிப் பேசுபவர்கள்!

    பதிலளிநீக்கு
  7. பாடலும், பேட்டியும் அருமை.

    //ஒரு தேதியைச் சொல்லி "அண்ணே.... அடுத்த மாசம் இந்த நாள்தான் நல்லாயிருக்கு. அதை விட்டா நல்ல நாள் எதுவும் இல்லே... அன்னிக்கி ஒரு பாட்டை எடுத்துக் கொடுத்திட்டீங்கன்னா மத்ததை அப்புறமா பார்த்துக்கலாம்...." என்று பலர் வருகிறார்கள். நல்ல பாடலைவிட நல்ல நாளுக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்//

    பாடகருக்கு எவ்வளவு கஷ்டம் இது போல் எல்லோரும் கேட்டால்!

    பதிலளிநீக்கு
  8. இசையமைப்பாளர்களுக்கு எவ்வளவு கஷ்டம் எல்லோரும் இப்படி கேட்டால்!

    பதிலளிநீக்கு
  9. அருமையான பாடல். அப்போது இந்தப் படத்தில் வரும் பாடல்களுக்காகவே இந்த சினிமாவைப் பார்த்தேன். சாதிப்பவர்கள் எல்லோருமே பல கஷ்டங்களை எதிர்கொண்டுதான் சாதனைபடைக்கிறார்கள். எம் எஸ் வியின் கதையக் கேட்டால் அதுவும் அப்படியே. ராஜாவுக்கும் அப்படியே.

    கீதா: முதலில் பாடல்...அப்புறம் பேட்டிக்கு வருகிறேன்

    பாடல் என்னமான ஒரு பாட்டு. கல்யாணி!!! இந்தக் கல்யாணியை ராஜா நிறைய போட்டிருக்கிறார். என்றாலும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம்..ராகப்பரிமாணம், ஒவ்வொரு ரஸம், பாவம்...இதே கல்யாணி அம்மா என்றழைக்காத உயிரில்லையே வில் ஒருவிதம்....என்றால் ஜனனீ ஜனனீயில் ,,,கலைவாணியே ஆரோகணம் மட்டும் எடுத்துக் கொண்டு அதிலும் விளையாடியிருப்பார்...சுந்தரி கண்ணால் ஒரு சேதி ஐயோ அதில் இன்டெர்லூடும் பிரமாதமாக இருக்கும்...நீயொரு காதல் சங்கீதம் அதுவும் கல்யாணிதான்...அருமையான பாடல் பகிர்வு ஸ்ரீராம்....மிக்க நன்றி...இதோ பேட்டிக்கு...போறேன்...

    பதிலளிநீக்கு
  10. ஒரு பாடல் வெளியில் வர வேண்டும் என்றால் எளிதல்ல. பல இடர்பாடுகள் வரும். ராஜா சொல்லியிருப்பதிலிருந்து தெரிவது என்னவென்றால்...நாம் பாட்டுக்கு ஹேய் இந்தப் பாட்டு அப்பட்டமான காப்பி என்று...ஆனால் உண்மையில் தயாரிப்பாளர்கள் அப்படிக் கேட்கும் போது இசையமைப்பாளர்கள் செய்து கொடுக்க வேண்டியக் கட்டாயத்தில் இருக்கும் போது ட்யூன் காப்பியாகாமல் போகுமா...அப்படித்தானே போட்டாக வேண்டும்...இது இசையமைப்பாளரின் க்ரியேட்டிவிட்டியையும் கொல்லும் ஒன்றல்லவா...அந்த இசையமைப்பாளரால் இந்தச் சுயமரியாதை இழப்பை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடிய்ம்....கஷ்டம்தாம்...அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறோம்...

    மற்றொன்று நம் சமூகத்தில் ஒருவரது திறமையையும் அவரது பெர்சனல் லைஃபையும்/அவரது தனிப்பட்ட குணங்களையும் இணைத்துப் பார்ப்பது. உதாரணத்திற்கு....ராஜாவோட அந்தப் பாட்டு அல்லது கமலின் அந்த நடிப்பு எப்படி என்னமா இருக்கு என்றால்...ராஜாவா கர்வம் பிடிச்ச்வன்....கமலா அவன் கேரக்டர் ரொம்ப மோசம்....இப்படித்தான் பதிலாக இருக்கும்....அதுவும் ஏக வசனத்தில்..இது எழுத்தாளர்களுக்கும் தான்.....நாம் திறமையை மெச்சினால் பதில்கள் அவர்களது தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவதாக இருக்கும்...எதிர்மறை சிந்தனைகள்...இதுதான் நம் பெரும்பான்மையான சமூகம்..இரண்டையும் பிரித்துப் பார்க்கக் கற்க வேண்டும் நாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பாடலைக் கேட்கவில்லை. பேட்டி அருமை என்பதோடு யதார்த்த நிலையைச் சுட்டிக் காட்டுகிறது. மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  12. பேட்டி நன்றாக இருக்கிறது.(சரியாக சொன்னால் இருந்திருக்கிறது) எடுத்தது யார்? ராணி மைந்தனா?

    பதிலளிநீக்கு
  13. கொடுக்கப்பட்ட பாட்டுக்கு வரிகளா வரிகளுக்கு இசையா தெரியுமா

    பதிலளிநீக்கு
  14. உழைப்பின் வலிகளை உணர்ந்து கொள்ளும் பதிவு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  15. ஓரம் போ பாடலை ஓரம் கட்டியதால் இளையராஜா அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார் :)

    பதிலளிநீக்கு
  16. ராஜாவின் பேட்டி மிக அருமை. எத்தனை துன்பங்கள் ஒரு நல்ல இசை அமைப்பாளருக்குக் கூட. வளர்ந்த காலத்திலியே இப்படி என்றால் அதற்கு முன் இருந்தவர்கள் எத்தனை பாடுபட்டார்களோ.
    எம் எஸ் வீ ஸாரை யாராவது பேட்டி எடுத்திருக்கிறார்களா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!