செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீபாவளி பழசும், புதுசும் !

                          
புதுத் துணி எடுத்துத் தைக்கக் கொடுத்து, தையற்காரர் தைத்து விட்டாரா இல்லையா எனும் கவுன்ட் டவுனில் தீபாவளி பரபரப்புத் தொடங்க, எத்தனை ரூபாய்க்கு பட்டாசு வகைகள் வாங்க அனுமதி கிடைக்கும் என்று கணக்குப் போடும் மனம். 
         
முதல் நாள் இரவு முதல் அம்மா & பாட்டி செய்யும் பட்சணங்களை திருட்டுத் தனமாய் எடுத்து ஓடும் சுவாரஸ்யமும் தன பங்கு வெடி மத்தாப்பூக்களை பத்திரப் படுத்தி ஒளித்து வைத்து இரவு சீக்கிரம் படுத்து எப்போது விடியும் என்று ... 
    
மூன்று மணிக்கு எழுந்து (குளிக்காமல்) முதல் சர வெடி விடும் வழக்கமும், கடைக்குட்டியிலிருந்து தொடங்கி ஒவ்வொருவராக மனைப் பலகையில் அமர்ந்து பாட்டி கையால் தலையில் "கொஞ்சமா பாட்டி... கொஞ்சமா... நிறைய வைக்காதீங்க" என்று கெஞ்சலுடன் எண்ணெய் தேய்த்துக் கொண்டு... 
   
விறகு அடுப்பில் தவலையில் கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் ஒரு வாளி எடுத்து குளிக்கப் போய், நாலடி பாத்ரூமில் கங்கா ஸ்நானம் செய்து கண்ணில் சீயக்காய்ச் சிவப்புடன் வெளி வந்து, தீபாவளி மருந்து வாங்கி, பாட்டி கையால் புதுத் துணி கையில் வாங்கி காலில் விழுந்து ஆசி வாங்கி உள்ளே ஓடி ... 

புத்தாடையுடன் வெளி வந்து, சாமிக்கு, பெரியவங்களுக்கு நமஸ்காரம்  செய்து,  சாஸ்திரத்துக்கு வெடி வெடிக்கத் தொடங்கி நண்பர்களைப் பார்க்கக் கிளம்பி, அவர்கள் புத்தாடையைச் சிலாகித்து, நம் உடையைக் காட்டி,

   
தெருத் தெருவாக அலைந்து வெடித்து, பேசி, சிரித்து, முறைத்து, சண்டையிட்டு, கூடி மகிழ்ந்து இட்லி, பஜ்ஜி சாம்பார் என்று சாப்பிட்டு மிஞ்சிய வெடிகளை பத்திரப் படுத்தி, வெடிக்காத வெடிகளை மருந்தை வெளியில் எடுத்து பேப்பரில் கொட்டி கொளுத்தி, கைக்காயம் கால்காயம் பட்டு, பெற்றவர்களை டென்ஷன் ஏற்றி ... 
   
கனமான தீபாவளி மலர் புத்தகத்தை இரு கைகளால் தூக்கி, குமுதம் தீபாவளி மலராக இருந்தால் குனேகா மணத்தை கண்களை மூடி அனுபவித்து, கல்கி / ஆனந்தவிகடன் மலர்களில் இருக்கும் தெய்வப் படங்களை பரவசத்துடன் பார்த்து, தீபாவளி மலரின் ஒவ்வொரு பக்கத்திலும் (விளம்பரங்கள் உள்பட) இருந்த தீபாவளியை அனுபவித்து ....

முடிந்தால் அன்று வெளியாகி இருக்கும் புதுப் படத்துக்குப் போய் அல்லது இரண்டொரு நாள் கழித்து, பள்ளி செல்லும்போது புத்தாடை அணிந்து, பார்த்த அல்லது பார்க்கப் பட்ட புதுப் படங்களை அலசி..

ம் ... ஹூம்...

இப்போதெல்லாம் தீபாவளிச் சத்தம் ஆறு மணிக்கு மேல்தான் கேட்கத் தொடங்குகிறது. யாரும் அதிகாலையில் எழுவதில்லை. பட்சணங்கள் வீட்டில் செய்வதை விட கடையில் வாங்குவது எளிதாக இருக்கிறது. சுவாரஸ்யம்தான் மிஸ்ஸிங். 
              
ஆண்களுக்கு எப்போதும் உடை வகைகளிலும், நிற வாய்ப்புகளிலும் சாய்ஸ் கம்மி... ரொம்பக் கம்மி. பெண் குழந்தைகளுக்கு விதம் விதமாக வண்ண வண்ண உடைகள் எப்போதும் கிடைக்கும்.  ஆனால் இன்று தீபாவளிக்கு எந்த 'வயசுப் பெண்'ணாவது எடுக்கும் இரண்டு மூன்று உடைகளில் ஒரு உடையாகவாவது பாவாடைத் தாவணி எடுக்கிறார்களோ... நகரில் இந்த உடை அணிந்த பெண்களைப் பார்ப்பதே அரிய காட்சியாகி விட்டது.   
                   
வெடி வெடிப்பதை ஒத்திப் போட்டு பட்டி மன்றங்களும் இந்திய / உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாகத் திரைப் படங்களையும் பார்த்து,    
    
வெடிப்பதற்கு இடமின்றி, பக்கத்து வீடுகளின் முறைப்புக்கிடையில் சிக்கனமாகச் சத்தப் படுத்தி, நண்பர்களின்றி, கணினியும் தொலைக் காட்சியுமாக முடங்கி ... 
             
பழைய தீபாவளி மலரின் கனத்தையும், பழைய எழுத்தாளர்களின் படைப்புகளையும், படித்திருந்த நாட்களையும் நினைத்து, அன்று உயிரோடு இருந்தவர்களோடு கொண்டாடிய தீபாவளிகளை வலியோடு நினைத்துப் பார்த்து .... 
                     
அவரவர்களுக்குப் பிடித்ததைச் செய்வதுதான் சந்தோஷம் என்றால் இப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் மக்கள்! நாம் விரும்பியதையே இப்போதும் செய்ய வேண்டும் நாம் ரசித்ததையே இப்போதும் ரசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன...
                      
இந்த வருடமும் தீபாவளி வந்து விட்டது. இதுவும் கடந்து போகும்!   
        

23 கருத்துகள்:

  1. அருமையாக சொல்லி விட்டீர்கள்.

    //அவரவர்களுக்குப் பிடித்ததைச் செய்வதுதான் சந்தோஷம் என்றால் இப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் மக்கள்! நாம் விரும்பியதையே இப்போதும் செய்ய வேண்டும் நாம் ரசித்ததையே இப்போதும் ரசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன...//
    திருவாசகம்!

    பதிலளிநீக்கு
  2. ஒப்பிடல் சங்கடப்படுத்தும். நான் சிறுபிள்ளையாக இருந்த போது - என் பெற்றோர் அவர்கள் சிறுபிள்ளையாக இருந்த போது கொண்டாடிய தீபாவளிகளை பெருமையாக சொல்வார்கள். இப்போது நாம். ஆனால் எல்லோரும் எப்போதும் மகிழ்ச்சியுடன் தான் கொண்டாடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன!!

    காலத்துக்கேற்ற கோலம் தான் சரி!! :-))

    பதிலளிநீக்கு
  5. உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். நன்றாகவே வந்து விட்டது.

    படித்துக் கொண்டே வந்த பொழுது நினைத்தபடியே, இன்று அதே உணர்வுகள் எப்படி என்பதும் பதிவாகி இருப்பதைப் பார்த்ததில் சந்தோஷம்.

    அடுக்கு மாடி குடியிருப்பின் வெளிப்பக்கம் பட்டாசு சப்தம் காதைக் கிழிக்கிறது. காலை மழையில் வெடி வெடிப்போமா என்று சாம்பி இருந்த குழந்தை மனங்கள் மழையில்லா இந்த முன்னிரவில் குதூகலத்தில் குதிக்கின்றன. மாடி ஜன்னல் வழியாகப் பார்த்த பொழுது, அடேடே.. நாம் சிறுவர்களாய் இருந்த பொழுது எப்படி இருந்தோமா, அதே மாதிரியான உணர்வு கொப்பளிப்பில் பட்டாசு கொளுத்தி, காது பொத்தி துள்ளி விலகி ஓடும் சிறார்கள்!
    எது மாறினும் தீபாவளி மாறவில்லை; அந்தந்த பருவத்திற்கு அது அப்படியேத் தான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  6. அத்தனையும் உண்மை.இன்று உயிர்ப்பு இல்லை.எந்திரத்தனமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. தீபாவளி வாழ்த்துகள் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு.
    மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. காலம் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் தீபாவளி எப்போதும் குதூகலத்தைத் தருவது உண்மை. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. தீபாவளி என்றால்,
    அந்த காலத்தில்
    பட்டாசு,டிரஸ்,ஸ்வீட்
    இப்போது,
    செல்..
    அவன்..
    ஹோம் தியட்டர்..
    கங்கா ஸ்னானம் ஆச்சா என்று
    யாரையும் கேட்கவில்லை..
    சாலமன் பாப்பையா பேச்சை கேட்க ஆஜராகி விடுகிறோம்..
    ஆம்,
    இதுவும் கடந்து போம்!

    பதிலளிநீக்கு
  11. // பட்சணங்கள் வீட்டில் செய்வதை விட கடையில் வாங்குவது எளிதாக இருக்கிறது. //

    இதை.. இத.. இதத்தான் நான் நெனைச்சேன்..

    Happy Diwali to 'Engal' Teachers (aaSiriyarkal) & 'Vaasakarkal'

    பதிலளிநீக்கு
  12. பழைய தீபாவளி நாட்களுக்கு சென்று திரும்ப வைத்து விட்டீர்கள். ரமேஷ் சொல்வதும் சரி. இருந்தாலும் அந்த ‘சுவாரஸ்யம்’.. தனிதான்:)!

    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பின் தீபாவளி எப்படிக் கொண்டாடுவோம்?
    இன்றைய தீபாவளிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. காலமாற்றம்,மனித மனங்களின் மாற்றம் தீபாவளியிலும் மாற்றம் !

    எங்கள் புளொக் வழியாக தோழி மீனாட்சிக்கும் என் மனம் நிறைந்த தீபத் திருநாள் வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  15. தீபாவளி வாழ்த்துகள்! இன்னும் இருபது வருடங்கள் கழித்து நம் பிள்ளைகள் ஆறு மணிக்கு எழுந்ததை பெருமையாய் சொல்வார்கள்!

    பதிலளிநீக்கு
  16. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. மிகவும் நன்றி ஹேமா! உங்களுக்கும் என் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. சாய் - எது எப்படி இருந்தாலும், நீங்க விடுகிற ஜொள்ளுல - எல்லாம் கரைந்து போய்விடும்!

    பதிலளிநீக்கு
  20. ஏன் இந்த மாற்றம்.
    மனம் மட்டும் அங்கே நின்றுவிட்டது. கூனேகா வாசனையும் கண்ணில் எரிச்சலும்,வயிற்றுவலி தராத பட்சணங்களும், ரேஷன் படுத்தப்பட்டுக் கிடைத்த பட்டாசு மத்தாப்புக்களும், வெள்ளைப்பாம்டுகளும்,ஒவ்வொன்றாக வெடிக்கும் கேப் சத்தமும்,
    எங்கள் ப்ளாகின் வயசு என்ன என் கொசுவத்தியோடு ஒத்துப் போகிறதே!!!

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. நன்றி மீனாக்ஷி.

    நன்றி தமிழ் உதயம். நீங்கள் சொல்வது சரிதான். கடைசி வரிகளில் அதையேதான் சுட்டிக் காட்டியும் உள்ளோம்.

    மகிழ்ச்சியும், நன்றியும் சூர்யஜீவா.

    நன்றி middleclassmadhavi.

    பதிவின் உள்ளார்ந்த மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டதற்கு நன்றி ஜீவி சார்.

    உணர்வின் பகிரலுக்கும், கருத்துக்கும் நன்றி shanmugavel.

    நன்றி வானம்பாடிகள்.

    நன்றி ரத்னவேல்.

    நன்றி geetha santhanam.

    நன்றி RRR,

    உங்கள் 'பின் ஊட்டத்துக்கு' நன்றி மாதவன்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி அப்பாதுரை. பதிவில் கடைசியாக உங்கள் வரிகளையும் இணைத்து விடலாம் போல!

    நன்றி ஹேமா. நீங்கள் சொல்லியிருக்கும் மாற்றங்களில் இட மாற்றங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    நன்றி HVL. உண்மைதான்!

    முதல் வருகைக்கு நன்றி சுபத்ரா. மீண்டும் மீண்டும் வருக, ஆதரவு தருக. இட்லிவடை யாரென்று தெரிந்த சில பேரில் நீங்களும் ஒருவர்!

    நன்றி வைரை சதிஷ்.

    நன்றி சாய்.

    நன்றி குரோம்பேட்டைக் குறும்பன்.

    சரியாகச் சொன்னீர்கள் வல்லிசிம்ஹன். நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!