செவ்வாய், 28 ஜனவரி, 2014

புத்தகக் கண்காட்சி 2014

            
போக வேண்டாம் என்று நினைத்தாலும் போக முடியாதிருக்க முடியவில்லை. 

சென்னைவாசிகளுக்கு சங்கீத சீசனில் தொடங்கும் வருடாந்திரக் கொண்டாட்டம் புத்தகக் கண்காட்சியில் நிறைவு பெறுகிறது!   

                 
சுஜாதா, சாண்டில்யன், நாபா, ஜேகே, லக்ஷ்மி என்று அத்தனை பெரிய எழுத்தாளர்களின் படைப்புகள் நிறைய என்னிடம் பி டி எஃப் ஆக இருக்கின்றன. அதே படைப்புகள் புத்தகங்களாகவும் என்னிடம் இருக்கின்றன. மின் நூலைச் சேகரிப்பது ஒரு கடமை, பாதுகாப்பு. அதற்காக விரும்பிய புத்தகங்களை காசு கொடுத்து வாங்காதிருப்பது இல்லை. அது வேறு, இது வேறு.  இதன் சௌகர்யம் வாசகனறிந்தது. நான் வாசகன். விற்பவர்களுக்கு அது வியாபாரமும் கூட.  வாசகனாக எனக்கு ரசனை மட்டும்தான்!   
                   
வாங்கிய புத்தகங்களில் பல இன்னும் படிக்கவில்லை. வீட்டில் சில மின்சாதனப் பொருட்களை ஆர்வமாக வாங்கி, அடிக்கடி உபயோகப் படுத்தாமல் இருப்பதில்லையா... அது போல!
       
போதாக்குறைக்கு சில பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் (வின்ஸ்டன் சர்ச்சில் கூடச் சொல்லியிருக்காராம்) எல்லாப் புத்தககளையும் யாராலும் முழுமையாகப் படிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்களாம். ஒருமாதிரி ஆறுதலாக இருந்தது!  
             
அலமாரியில் கொஞ்சம் இடம் வேறு பாக்கி தெரிந்தது. சரி, சும்மா பார்த்து விட்டு வருவோம் என்று ஒரு வருடமாக அவ்வப்போது புத்தக விமர்சனங்கள் படித்துக் குறித்து வைத்திருந்த லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
        
உள்ளே நடந்துகொண்டிருந்த எல்லோருமே ஒரு புத்தகம் வெளியிட்டவர்கள் போலத் தோன்றியதற்கு அதிகமாக முக நூல் மற்றும் G+ இல் புழங்கியதும் ஒரு காரணமாயிருக்க வேண்டும்.  உள்ளுக்குள் தோன்றிய கூச்சத்தை  'ஆ! நான் வாசகன்!  நானில்லாமல் எழுத்தாளர்களா' என்று விலக்கிக்கொண்டு அலசலைத் தொடங்கினேன். 
           
விசாலமான வழியமைப்புகளில், காலில் இடரும் பலகைகளுடன் வழக்கமான சௌகர்ய, அசௌகர்யங்களுடன் வியாபாரத்துக்குத் தயாராயிருந்தது கண்காட்சி. 
            
வெறும் கைகளுடன் உற்சாகமாகத் தொடங்கிய வேட்டை, நேரம் செல்லச் செல்ல, கைகளில் சுமையுடன் அலைவது கஷ்டமாக இருந்ததால் வேகம் குறையத் தொடங்கியது!  சுமை இருக்கும்போது அலசிப் பார்ப்பது குறைந்தது. பையுடன் உள்ளே சுற்றும்போது கடைக்காரர்கள் 'புத்தகத்தை எடுத்து பையில் போட்டுக்கொண்டு விடுவானோ' என்று நம்மையே பார்ப்பதுபோல பிரமை வேறு.  
                
பொங்கலன்று சென்றதால் வீட்டிலேயே முழு வயிறு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டதால், அங்கு உணவகங்கள் செல்லும் வாய்ப்பைத் தவிர்க்க முடிந்தது. எனவே அவர்கள் அதிக சார்ஜ் செய்தார்களா என்பதுபற்றி கவலை ஏற்படவில்லை! தாகத்துக்குக் கவலையே இல்லை. நிறைய கேன்கள், நிறையத் தண்ணீர்!   
             

மணிமேகலைப் பிரசுரம் உள்ளிட்ட நிறைய ஸ்டால்களில் நாம் தேடும் புத்தகங்கள் குறித்துக் கேட்டால் சரியான பதில் இல்லை. 'அங்க இருக்கும், தேடிக்குங்க' டைப் ரீ ஆக்ஷன்தான். கொஞ்சம் பழைய புத்தகங்களை அவர்கள் கொண்டு வரவில்லை அல்லது அவற்றைக் கண்ணில் படும் இடத்தில் வைக்கவில்லை! தலைப்பைச் சொன்னால் அலமாரியில் தேடுவதற்குப் பதில் டேபிள்களின் கீழே படுதா விலக்கித் தேடிப் பார்த்த ஸ்டால்களும் இருந்தன. அப்போதும் அவை கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்!   
           
என் அப்பா சி சு செல்லப்பாவின் 'சுதந்திர தாகம்' புத்தகமும், சுவாமிநாத ஆத்ரேயாவின் 'மாணிக்கவீணை' மற்றும் அவரது எந்த படைப்புகள் கிடைத்தாலும் வாங்கச் சொல்லிக் கேட்டிருந்தார். ஒரு ஸ்டால் விடாமல் கேட்டும் அதைப் பற்றி விவரம் சொல்லக் கூட ஆள் இல்லை, புத்தகங்களும் கிடைக்கவில்லை!
       
அறிமுகப்படுத்திக்கொண்டதும், கை குலுக்கிய மூத்த எழுத்தாளர்,  'முகநூல் ப்ரொஃபைல் படத்தில் முகம் வித்தியாசமாக இருந்தது' என்றார்.  

(என்னுடைய முகநூல் ப்ரொஃபைல் படம்!) 
   

வம்சியில் புத்தகம் வாங்கிக் கொண்டபோது 'கரும்புனலை' சிபாரிசு செய்தார் அங்கிருந்த நண்பர். புரட்டிப்பார்த்து விட்டு மறுத்து விட்டு நகர்ந்தபோது 'காக்கைகள் கொத்தும்...' புத்தகத்தைக் காண்பித்தார். சென்ற வருடமே ஒரு நண்பர் எனக்குப் பரிசளித்தார். இதில் இடம்பெற வேண்டி நான் கூட கதைகள் அனுப்பியிருந்தேன்' என்று சொன்னதும் பில் போடுமிடத்தில் அமர்ந்திருந்த ஷைலஜா மேடத்திடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அவர் எழுந்து நின்று பேசியது கூச்சத்தைக் கொடுத்தது.
               
1 மணி முதல் 6 மணிவரை நடை...நடை...நடை..
          
முக்கால்வாசி ஸ்டால்கள் முடித்து, மிச்சத்தைப் பார்க்க இன்னொருநாள் வரவேண்டும் என்று நினைத்திருந்து, முடியாமல் போனது.  

மெலூஹாவின் அமரர்கள் 160 ரூபாய். பேப்பர் தரம் சொல்லிக் கொள்ளும்வண்ணம் இல்லை. அதே அளவு, அதே 160 ரூபாய்க்கு வாங்கிய வேறு சில புத்தகங்கள் நல்ல தரத்தில் பேப்பர்.   ம்..ஹூம்! விலை பற்றிப் பேசக் கூடாது!
நுழைவுக்கட்டணம் 10 ரூபாய் ஆக்கியவர்கள் - இது பெரிய விஷயமில்லைதான்  - தள்ளுபடியை 20 சதவிகிதம் வேண்டாம், 15 சதவிகிதம் தந்திருக்கலாம்! இதைச் சொன்னாலும் கணக்கு பார்க்கக் கூடாது என்பார்கள். விடுங்கள்!


நான் சென்ற அன்று ரோட்டோர புத்தகக் கடைகளைக் காணோம். எதையோ இழந்தது போலத்தான் இருந்தது. வைக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்களோ என்னவோ... அல்லது கடைசி நாள் நெருங்க நெருங்க கடை பரப்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நான்தான் ரெண்டாம்தரம் போவேனே என்று நினைத்திருந்தேன். ரெண்டாம்தரம் போகும் வாய்ப்பு கிடைக்காததால் ரோட்டோரக் கடைகள் வைத்தார்களா என்றும் தெரியாது!
அப்படி என்னதான் வாங்கினேன்?  
              

சி சு செல்லப்பா சிறுகதைகள் (காவ்யா), இலைகள் பழுக்காத உலகம்,அடை மழை, சுஜாதாட்ஸ், என்றென்றும் சுஜாதா, வானம் வசப்படும், தூக்குக் கயிற்றில் நிஜம், புயலிலே ஒரு தோணி, திரை (பைரப்பா), சாமான்யனின் முகம், சிறகு விரிந்தது, கீதா மாதுர்யம், திருப்பாவை விளக்கம், ஸ்ரீவில்லிப்புத்தூரார் மகாபாரதம், வெற்றிக்கோடு, து ஆக்களின் தொகுப்பு, நோன்பு, லஜ்ஜா (அவமானம்) வீர சிவாஜி, விவேகானந்தர், ஸ்ரீ விஷ்ணு புராணம், அர்த்தமுள்ள கேள்விகள், அறிவுபூர்வமான பதில்கள், மகாபாரதம் (வானதி - கே ஜி ஜி கேட்டது! ), மெலூஹாவின் அமரர்கள், லா.ச. ராமாமிர்தம் கதைகள் பாகம் 1&2, டாக்சி டிரைவர், துளி விஷம், விஷ்ணுபுரம், வெயில் தின்ற மழை, ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்...  
                   

35 கருத்துகள்:

  1. நல்ல க(செ)லக்‌ஷன்ஸ்!

    வாசித்ததும் விமரிசனம் போடுங்க.

    பதிலளிநீக்கு
  2. நானும் உடன் சுற்றிப் பார்த்த உணர்வு
    பகிர்வு சுவாரஸ்யம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்ல அனுபவம்.....

    அடுத்த புத்தக சந்தைக்கு எப்படியும் வந்து விடவேண்டும்......

    பதிலளிநீக்கு
  4. இன்று வரை ஒரு புத்தகத் திருவிழாவுக்குக் கூடப்போனதில்லை. :))) இதுவும் ஒரு சாதனை தானே! அது சரி, விஷ்ணுபுரம் படிச்சுட்டு விமரிசனம் எழுதுவீங்க தானே?

    பதிலளிநீக்கு
  5. கலந்து கட்டி வாங்கி இருக்கீங்க! எனக்கெல்லாம் பெரிய லிஸ்ட் எல்லாம் கிடையாது. போனாலும் சும்மாப் பார்ப்பேன். வாங்கறதுங்கறது நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. :)))) மத்தபடி பிடிஎஃப் ஆகப் புத்தகங்கள் இருக்கின்றன. பழைய கலெக்‌ஷனில் தொலைஞ்சது, தானம் செய்தது போக மிச்சம் இருக்கு கொஞ்சம் போல்! :))))

    பதிலளிநீக்கு
  6. உங்க வீட்டுக்கு ஒரு நாள் நடு நிசியில் வந்து எல்லாப் புத்தகங்களையும் கொள்ளை அடிச்சுடப் போறேன். சி.சு.செல்லப்பாவின் சுதந்திர தாகம் புத்தகம் ஹூஸ்டன் மீனாட்சி கோவில் நூலகத்தில் கிடைச்சது. படிச்சேன். சுதந்திரச் சங்கு பத்திரிகை விற்கிறது பத்தி ஒரு அத்தியாயம் வந்திருக்கும். அதிலே மதுரையிலே சுதந்திரச் சங்கை விற்பனை செய்த இளைஞர் நாராயணன் என்று வந்திருக்கும். அந்த நாராயணன் என் அம்மாவோட சித்தப்பா. அவருக்கு சங்கு நாராயணன் என்றே பெயர். :))))) சி.சு. செல்லப்பாவெல்லாம் தூரத்துச் சொந்தம். மதுரையிலிருந்து தேனி வழியாப் போனா வரும் சின்னமனூர்க்காரர். ரொம்பக் கஷ்டப்பட்டார். இந்தப் புத்தகம் விற்காமல் அவர் பட்ட கஷ்டம்! :(((( அதுக்காகவே வாங்கணும்னு நினைச்சுப்பேன். முடியலை!

    பதிலளிநீக்கு
  7. சென்று வந்த அனுபவத்தை அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். உண்மைதான், எல்லாவற்றையும் வாசித்து விட வேண்டுமென்றுதான் வாங்கி சேகரிக்கிறோம்.

    சி.சு. செல்லப்பா அவர்களைப் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சொல்வனத்தில் ஒரு தொடர் எழுதியிருந்தார். முதல் பாகம் இங்கே: http://solvanam.com/?p=22195

    பட்டியலில் நண்பர்களது புத்தகங்களையும் சேர்த்துக் கொண்டிருப்பதற்கு நன்றி:).

    பதிலளிநீக்கு
  8. பல ஸ்டால்களில் நமக்கு புத்தகங்களைத் தேடித்தர யாரும் ஒத்துழைக்கவில்லை. நான் தோள்பை பயன்படுத்தியதால் என்னை யாரும் சந்தேகிக்கவில்லை...

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் குறிப்பிட்ட புத்தகங்கள் கண்ணில் படும்பொழுது நானும் வாங்கத்தான் செய்வேன். இருப்பினும் பல புத்தகங்கள் 1961 முதல் வாங்கியவை, இன்னமும் படிக்கப்படாத நிலையில் உள்ளன. புத்தகங்களின் அட்டையை பார்த்து வாங்கும்போது இருக்கும் ஆர்வம், புத்தகங்களை படிக்கும்போது குறைந்து போகிறது என்பதும் ஓர் அளவிற்கு உண்மை.

    இந்த நிலையில், வாங்கிய புத்தகங்களையே திரும்பவும் வாங்குவது போலவும் தோன்றுகிறது.

    மூவாயிரப்படி ஆராயிரப்படியும் பெரியவாச்சான் உரை , வேதார்த்த மஞ்சூஷா , வால்மீகி கம்பன் ராமாயணம் இவைகளில் கேள்வி பதில்கள், திருக்குறள் உரைகளில் காலத்துக்கேற்ப சிந்தனைகள், ஆசார அனுஷ்டானங்கள்,பதஞ்சலி யோக சாஸ்திரம், பூர்வ மீமாம்ஸா இது போன்ற பல புத்தகங்கள், இவை தவிர கீட்ஸ் , ஷெல்லி கவிதைகள், அனாடமி பிசியாலஜி ரஷ்யா பல்கலைகழக நூல், ரீகி , கிதார் கற்றுக்கொள்ளுங்கள், என்பது போன்ற பலவகையான ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத புத்தகங்களை என் அலமாரியில் பார்க்கும் பலர் என்னை ஒரு தினுசாக பார்ப்பதும் என்னால் உணர முடிகிறது. சார், பல சரக்குக் கடை வைக்கலாம் போல இருக்கிறதே என்று கிண்டல் காதுபட யாரும் சொல்லவில்லை.

    நமக்குத் தேவை என்ன, என்ன என்று புரிந்து கொள்ளாத வகையில், புத்தகங்கள் வீடுகளில் காட்சிப்பொருள் ஆகவே இருப்பது வெள்ளிடை மலை.

    படியாத புத்தகமும்,
    அணியாத நகையும்,
    பிறருக்குப் பகிர்ந்து அளிக்காத செல்வமும்
    ஒன்று தான். என ஒரு சுபாஷிதானியில் சொல்லப்பட்டதை சுந்தர்ஜி
    சொல்லி இருக்கிறார்.

    சுப்பு தாத்தா.
    www.wallposterwallposter.blogspot.in

    பதிலளிநீக்கு
  10. சுவாமிநாத ஆத்ரேயன்...! பேரைக் கேட்டே மிரண்டு போயிருப்பாங்க புக் ஸ்டால்ல இருக்கறவங்க. அப்புசாமி கதை ஒண்ணு வெளியிடறவங்களோட ஸ்டால் பூரா சுத்தியும் காணோம், அங்கருந்த பொறுப்பாளர்ட்ட கேட்டதுக்கு ‘அதெல்லாம் கொண்டு வரலை’ன்னு வள்ளுன்னு விழுந்தார். அதுக்கு உங்க பாடு எவ்வளவோ தேவலை!

    பதிலளிநீக்கு
  11. சுவாரஸ்யமான அனுபவம்... வாங்கி சேமித்துக் கொள்வதும் நல்லது தான்... அதைப் பற்றி பகிர்ந்து கொள்வது அதை விட சிறந்தது...

    வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...? ஆனால் நம் மனதிற்கு வயதே ஆவதில்லை... ஹிஹி...

    (நேரம் கிடைப்பின் :) http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  12. Nice choice of books. I don't recognize a few. Losing touch with tamil literature. Must start again. Liked immortals of meluha in English. Did you buy a translation???

    பதிலளிநீக்கு
  13. புத்தகக்கண்காட்சி
    புதிதான பகிர்வுகள்...

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. வாங்கிய புத்தகங்கள் விரைவில் படிக்க நேரம் வாய்க்கட்டும்,விமர்சனம் படிக்கும்வாய்ப்பு எனக்கும்
    கிடைக்குமே என்பதால் !

    பதிலளிநீக்கு
  16. நல்ல அனுபவம். புத்தகங்களும் படிக்கக் கூடியவையாகத்தான் தெரிகின்றன.நேரம் தான் கிடைக்கணும்.கணினி இணையத்துக்கு முன்னால் கைகளில் புத்தகங்களோடு இருந்த காலம் அழகானது.

    பதிலளிநீக்கு
  17. நூலகத்தில்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறைய புத்தகங்களைப் படித்தேன்.

    அதற்க்கு பிறகு பாரதியின் கவிதைகளிலும்
    சித்தர் பாடல்களிலும் மூழ்கினேன். பிறகு படிக்கவே நேரமில்லை.

    வாழ்வு முழுவதும்
    ஒரே ஓட்டம்தான்.

    சிவானந்தரின் சிந்தனைகளில் ரமணரின் சிந்தனைகளில், ராமகிருஷ்ணர், வள்ளலார், உபதேசங்களில் மனம் மூழ்கி ஆன்மிகம்புகுந்ததும்
    படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.

    வீடு நிறையப் புத்தகங்கள் தற்போது. நான் எதுவும் வாங்கவில்லை.
    அவைகளாகவே வந்து உட்கார்ந்துவிட்டன. படிக்க நேரமில்லை.

    இருந்தும் அவைகள் இவன் படிப்பதற்காக காத்துக்கிடக்கின்றன.

    ஆனால் இவனோ பகவானைப் பார்ப்பதற்காக காத்துக் கிடக்கிறான்.

    முடிவாக லா சா ராமாமிர்தம் பற்றி அவர் கதைகளை 20 ஆண்டுகளுக்கு முன் தினமணிக் கதிரில் படித்திருக்கிறேன். நம்மையும் பாத்திரங்களுடன் பயணிக்க செய்திடும் எழுத்துக்கள் அவை.

    அவர் கதையில் படித்த கீழ்கண்ட சொற்றொடர்கள் என்னால் என்றும் மறக்கமுடியாது

    பிடிச்சா தின்னு. பிடிக்காட்டி முழுங்கு.

    இதை வாழ்க்கையில் கடைபிடித்ததால் என் மனதில் என்றும் எந்த பாரமும் அழுத்தியதே இல்லை என்றால் மிகையாகாது.

    பதிலளிநீக்கு
  18. //ஒருமாதிரி ஆறுதலாக இருந்தது!// ஹா ஹா ஹா

    என்னது விஷ்ணுபுரம் வாங்கி இருக்கீங்களா.. சூப்பர் விரைவில் புத்தக விமர்சனம் எழுதுங்கள் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  19. புத்தக சந்தைக்கு நாங்களும் உடன் வந்த உணர்வைத் தந்தது.நல்ல கலெக்‌ஷன்ஸ்... விரைவில் ஒவ்வொன்றாக படித்து விமர்சனம் எழுதுங்கள்..

    சுஜாதாட்ஸ் எங்களிடமும் இருக்கிறது...:) சில பக்கங்கள் வாசித்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  20. நல்லது. நிறையப் புத்தகங்கள் வாங்கியிருப்பதால் நிறையப்பேர் தாங்கள் விரும்பும் புத்தகம் பற்றி விமரிசனம் எழுதச்சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.
    நான் எழுதிய 'என்றென்றும் சுஜாதா' புத்தகமும் உங்கள் லிஸ்டில் இருப்பதால் நானும் சொல்கிறேன். அந்தப் புத்தகம் படித்து விமரிசனம் எழுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
  21. நான் இரண்டு வாட்டி போனேன். முத்துலிங்கம் எழுதிய புத்தகங்கள் இந்த முறை வாங்கினேன்.
    அந்த நாய் நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  22. நல்ல புத்தகங்கள் வாங்கி வந்து இருக்கிறீகள்.
    .மகாபாரதம் படித்து இருக்கிறேன். 1973 ல் இரண்டாம் பதிப்பாய் வானதி பதிபகத்தில் போட்டது அப்போது 20 ரூபாய் இப்போது மகாபாரதபுத்தகம் என்ன விலை ?

    நிறைய புத்தக விமர்சனங்கள் வரப்போகிறது.

    பதிலளிநீக்கு
  23. ராஜாஜி அவர்கள் எழுதிய சக்கரவர்த்தி திருமகன் (இராமாயணம்) நன்றாக இருக்கும் அந்த புத்தகம் இருக்கிறதா உங்களிடம். அந்த புத்தகமும் 1973ல் 20 ரூபாய்தான்.

    பதிலளிநீக்கு
  24. முக நூல் முகம்...ஹா..ஹா..ஹா. நல்ல கலெக்‌ஷன் தான். அவைகளைப் படித்து பதிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  25. நல்லப்பகிர்வு!

    படிக்காத/படிக்க முடியாத அளவுக்கு இருப்பதை வாங்குவதில்லை,வாங்கிட்டு படிக்க நேரம் இல்லை என "பந்தாவாக" சொல்லிக்கொள்ளும் பழக்கமும் இல்லை :))

    நாம என்ன அட்லாஸ் போல வானத்தையா சுமந்துக்கிட்டு நிக்கிறோம் :-))

    பதிலளிநீக்கு
  26. ஏராளமான புத்தகங்களை வாங்கி இருக்கிறீர்களே! வாழ்த்துக்கள் நம்ம பட்ஜெட் கொஞ்சம்தான். சீனுவின் புண்ணியத்தில் கூடுதலாக ஒரு புத்தகம் வாங்கினேன்.

    பதிலளிநீக்கு
  27. உங்கள் உணர்வுகள் புரிகிறது.

    புத்தகங்களும் ஒரு commodity-
    யாக ஆகிப்போன சூழலில் ஏற்படும் மனப்புழுக்கம் இது.

    அது சரி, புத்தகக் கண்காட்சியா, புத்தக சந்தையா? பரவலாக என்ன பெயரிட்டு அழைக்கிறார்கள்?..

    பதிலளிநீக்கு
  28. //பட்டியலில் நண்பர்களது புத்தகங்களையும் சேர்த்துக் கொண்டிருப்பதற்கு நன்றி :-)//

    Repeeeeeetu :-)
    (sorry.. no tamil fonts)

    பதிலளிநீக்கு

  29. வாங்கிய புத்தகங்கள் எல்லாம் பிரபலமானவர்களின் புத்தகங்கள் என்றே தெரிகிறது.புதியவர்களின் புத்தகங்கள் வாங்கிப் படித்து அவர்களைப் பிரபலப் படுத்தக் கூடாதா. ? புத்தகங்கள் வாங்கினால் ராப்பர் டு ராப்பர் படித்து விடுவேனாக்கும். !

    பதிலளிநீக்கு
  30. //புதியவர்களின் புத்தகங்கள் வாங்கிப் படித்து அவர்களைப் பிரபலப் படுத்தக் கூடாதா. ? //

    ஜிஎம்பீ சார்! மணிமேகலை பிரசுர புத்தக ஸ்டாலின் படம் பார்த்தவுடனே உங்கள் நினைவு தான் வந்தது. இது தொடர்பாக உங்களுக்கு வேறு ஏதாவது நினைவுக்கு வருகிறதா?..

    பதிலளிநீக்கு

  31. @ துளசி கோபால் ... நன்றி, முயற்சிக்கிறேன்.

    @ ரமணி ஸார்... நன்றி.

    @ வெங்கட் நாகராஜ் ..... நன்றி.

    @ கீதா சாம்பசிவம் ..... நன்றி. ஒரு வழியாக அந்த 'சுதந்திர தாகம்' கிடைக்குமிடத்தைக் கண்டு பிடித்துக் கொடுத்து விட்டீர்கள். நன்றி.

    @ ராமலக்ஷ்மி ..... நன்றி. சுட்டியில் சென்று படித்துப் பார்த்தேன்.

    @ ஸ்கூல் பையன் ..... நன்றி.

    @ சூரி சிவா ...... உண்மை. அட்டையைப் பார்த்து வாங்கி உள்ளே படிக்க முடியாத புத்தகங்கள் உண்டு. நான் பெரும்பாலும் அந்த வருடம் முழுதும் ஆங்காங்கே வரும் விமர்சனங்களைப் படித்துக் குறித்து வைத்துக் கொள்வதோடு, புத்தகக் கடையில் வாங்கும்போதும் ஒருமுறை புரட்டிப் பார்த்தே வாங்குகிறேன். உள்ளடக்கம் எனக்குப் பிடிக்கா விட்டால் வாங்குவதில்லை.

    @ பால கணேஷ் .... உங்களுக்கே இந்த நிலைதானா?
    @ DD ......... நன்றி.

    @ சு..... நன்றி. immortals of meluha வின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இந்தப் புத்தகம்.

    @ இராஜராஜேஸ்வரி ..... நன்றி.

    @ பகவான்ஜி ... நன்றி. உங்கள் வாழ்த்தினாலாவது சீக்கிரம் படிக்க முயல வேண்டும்!

    @ வல்லிம்மா .... இணையத்தில் உலாவும் நேரத்தைக் குறைத்தால் படிக்கலாம். நன்றி.

    @ பட்டாபிராமன் ஸார்.... நன்றி. 'பிடிச்சா தின்னு, பிடிக்காட்டா முழுங்கு' நல்ல பிரயோகம்.

    @ சீனு .... நன்றி.

    @ ஆதி வெங்கட் .... நன்றி.

    @ அமுதவன் .... விரைவில் எழுத முயற்சிக்கிறேன் ஸார். நன்றி.

    @ அமுதா கிருஷ்ணா .... நன்றி.

    @ கோமதி அரசு .... ராஜாஜி எழுதிய அந்த ராமாயணமும் சரி, வியாசர் விருந்து என்ற தலைப்பில் எழுதிய தொடரும் சரி, முறையே 'ராமாயணம்', மகாபாரதம்' என்ற தலைப்புகளில் வானதி வெளியிட்டு இருக்கிறார்கள். ராமாயணம் வாங்கவில்லை. எனக்கு என்னமோ மகாபாரதத்தில் இருக்கும் சுவாரஸ்யம் ராமாயணத்தில் இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள வானதி-ராஜாஜி -மகாபாரதம் எனக்கு ஏற்கெனவே -சென்ற வருடமே - வாங்கி விட்டேன். இப்போது ஆங்கியிருப்பது கௌதமன் அவகளுக்கு.

    @ Paramasivam.... நன்றி.

    @ வவ்வால்... நன்றி. நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை.

    @ TN முரளிதரன்.... நன்றி.

    @ ஜீவி ஸார்... நன்றி. புத்தகங்கள் வாங்குவோருக்கு அது சந்தை. சும்மா சுற்றிப் பார்த்து விட்டுச் செல்வோருக்கு அது கண்காட்சி! சமாளித்து விட்டேனா...!

    @ சாந்தி மாரியப்பன் ...... நன்றி.

    @ ஜி எம் பி ஸார்... நிறைய புதியவர்களின் புத்தகங்கள் வாங்கி இருக்கேனே... நானும் அப்படித்தான்... அட்டை டு அட்டை!

    மீள்வருகைக்கு நன்றி ஜீவி ஸார்.

    பதிலளிநீக்கு
  32. சுதந்திர தாகம் புத்தகம் திரு சி.சு.செல்லப்பா அவர்களின் சொந்த வெளியீடாக வெளிவந்ததாய் நினைவு. அவர் விற்க முடியாமல் வீட்டில் புத்தகங்களைக் கண்டபடி போட்டு வைத்திருந்ததாகப் பெண்ணேஸ்வரன் எழுதி இருந்தார். அது தான் அவர் கடைசியாக சி.சு.செல்லப்பாவைப் பார்த்தது. அப்புறமாய் செல்லப்பா இல்லை. சாஹித்ய அகடமி பரிசு கிடைச்சது குறித்துத் தெரியும், உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். செல்லப்பாவுக்குப் பின் அந்தப் புத்தகம் எப்படிக் கிடைக்கிறது என்பதை நான் அறிய முயலவில்லை. ஒரு வேளை ஏற்கெனவே புத்தகம் படிச்சுட்டதாலேயோ என்னமோ! :))))

    பதிலளிநீக்கு

  33. கீதா மேடம்... சாஹித்ய அகாடமி அரங்கில் நீண்ட நேரம் நின்றேன். மிக சல்லிசான விலையில் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள். 50 சதவிகிதம் வரை கூட சில புத்தகங்களுக்குத் தள்ளுபடி தந்து கொண்டிருந்தாகள். அங்கு இந்தப் புத்தகம் கண்ணில் படவில்லை. கல்லாவில் கேட்டிருக்கலாம். எல்லா ஸ்டால்களிலும் கேட்டேன். இங்கும் கேட்டேனா என்று சரியாய் நினைவில் இல்லை!

    பதிலளிநீக்கு
  34. //புத்தகங்கள் வாங்குவோருக்கு அது சந்தை. சும்மா சுற்றிப் பார்த்து விட்டுச் செல்வோருக்கு அது கண்காட்சி! //

    தனக்கு வேண்டிய புத்தகம் கிடைக்காதா என்கிற வாசக ஆசையில் தேடித் திரிந்து சுற்றி வருவோருக்கு அது மனசுக்கு இசைந்த கண்காட்சி!

    கொட்டிக் குவித்திருக்கும் புத்தகக் குவியலில் எத்தனை % விற்றுத் தீர்ந்து காகிதம் காசாகியிருக்கிறது என்று கணக்குப் பார்ப்போருக்கு அது சந்தை!

    //கல்லாவில் கேட்டிருக்கலாம்.. //

    சந்தை மொழி!

    பதிலளிநீக்கு
  35. 'ஆ! நான் வாசகன்! நானில்லாமல் எழுத்தாளர்களா' :) (y)
    அதானே!நீயில்லாமல் நானில்லைதான், ஆனால் நாராயணா! நானில்லாமலும் நீயில்லை ன்னு ஆழ்வார் சொன்ன மாதிரி !
    ஹ்ம்ம்..இவ்ளோ சகட்டு மேனிக்கு புக் படிச்சா உங்க ப்ரோ ஃ பைல் ல போட்டிருக்கிற மாதிரி தூங்க வேண்டியதுதான் ! ஜமாய்ங்க.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!