திங்கள், 9 ஜூன், 2014

திங்க கிழமை 140609 :: சத்து மாவு.

                
வீட்டில் தயார் செய்கின்ற சத்துமாவு எப்படிச் செய்வது என்று பார்ப்போம். 
   
முதலில் கடையில் ராகி ஒரு கிலோ வாங்குங்கள் 
  


வாங்கிய ராகியை, தண்ணீரில் முதல்நாள் மாலை முதல், மறுநாள் காலை வரையிலும் ஊறப்போடுங்கள். 

பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, அந்த ராகியை சுத்தமான ஈரத்துணியில் கட்டி வைத்துவிடவும். அவ்வப்பொழுது ராகி மூட்டை மீது தண்ணீரை தெளித்துக் கொண்டிருக்கவேண்டும் 

ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் கழித்து எடுத்துப்பார்த்தால், ராகி முளை வந்திருக்கும். 

இந்த ராகியை ஒரு வாணலியில் இட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு கிலோ கோதுமை வாங்கி அதை பட்பட்டென்று பொரியும் வரை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 
         

ஒரு கிலோ பொட்டுக்கடலை (சென்னை பாஷையில் ஒடச்ச கடலை) வாங்கி (வறுக்காமல்) அதையும் சேர்த்துக்கொள்ளவும். 
          

சிலர் இதனோடு கொஞ்சம் பாதாம் பருப்பு கூட சேர்ப்பார்கள். 
   

மேற்கண்ட அனைத்து பொருட்களையும், ஒன்றாக மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். 

சத்துமாவு மூன்று கிலோ தயார். 

இந்த சத்துமாவை, கொஞ்சம் எடுத்து, நெய் சர்க்கரை சேர்த்து, பிசைந்து உண்ணலாம். 
     






# கொஞ்சம் சத்து மாவை நல்ல தண்ணீரில் கரைத்து, ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பில் கொதிக்கவிட வேண்டும். கொதிக்கும்பொழுது, அடிப்பிடிக்காமல் இருக்க, கரண்டியால் கிளறிவிட்டுக் கொண்டிருக்கவேண்டும். கொதி வந்த பிறகு தேவையான அளவு பால் விட்டு,  பொங்கி வரும் வரை மீண்டும் அடிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். பொங்கி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, சர்க்கரை போட்டுக் கலக்கவும். மிதமான சூட்டில் இருக்கும்பொழுது, டம்ப்ளரில் ஊற்றிக் குடிக்கவும். 
    
# சிலர் சத்து மாவை, மோரில் கரைத்தும் அருந்துவார்கள். 
                  
               
சத்துமாவை ஐம்பது நாட்கள் வரை மூடியுள்ள எவர்சில்வர் பாத்திரத்தில் பாதுகாத்து வைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். 
                       

18 கருத்துகள்:

  1. இதோடு கொஞ்சம் ஓமமும் போட்டுச் சேர்த்து அரைத்தால் குழந்தைகளுக்கு முதல் திட உணவாகக் கொடுக்கலாம். அதை விட்டுட்டீங்களே. இந்த சத்துமாவைக் கஞ்சியாகச் சாப்பிடுவதை விட, நெய் விட்டு சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து உருண்டையாகச் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். நாட்டுச் சர்க்கரை சேர்த்தால் கூடவே தேங்காய்த் துருவலும் சேர்த்துக்கணும். சர்க்கரை சேர்த்தால் உருண்டைகளைச் சில நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம். இரண்டுமே பிடிக்கும். :)

    பதிலளிநீக்கு
  2. பொட்டுக்கடலையையும் கொஞ்சம் சூடு பண்ணிப்போம். :) அதோடு பார்லி, பாசிப்பருப்பு, சோளம் போன்றவையும் சேர்ப்பது உண்டு. இதில் பாதி மாவும், கோதுமை மாவு பாதியும் சேர்த்துச் சப்பாத்தியும் செய்யலாம். இந்த மாவோடு அரிசி மாவு சேர்த்துக் கொண்டு தோசை பண்ணலாம். மோர்க்களி கிண்டலாம், புளி கரைத்துப் புளி உப்புமா பண்ணலாம். புளி உப்புமா அவ்வளவு நல்லா இல்லை! :)

    பதிலளிநீக்கு
  3. கீதா அம்மா குறிப்புகளுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  4. அப்பாதுரை, 50 நாட்கள் என்ன, ஆறு மாசமே வைச்சுக்கலாம். எங்க பொண்ணு குழந்தையோடு வந்துட்டு யு.எஸ். திரும்பிப் போறச்சே நான் பண்ணிக் கொடுத்த கஞ்சி மாவு 2 வருஷம் வரை வைச்சிருந்தேன்னு சொன்னாள். அப்புறம் யாரோ சிநேகிதிக்குக் குழந்தை பிறந்தப்போ அந்த மாவைக் கேட்டு வாங்கிக் கொண்டதாகச் சொன்னாள்.

    முளை கட்டிய ராகியை நாங்க கொஞ்சம் நிழலில் உலர்த்திக் காய வைப்போம். அப்புறமா கேப்பையை (கேழ்வரகு) வறுத்து மாவாக்கி வஸ்திராயனம் பண்ணித் தான் கஞ்சி மாவில் சேர்ப்போம். இப்போல்லாம் வஸ்திராயனம் யாருமே பண்ணறதில்லை போல.

    பதிலளிநீக்கு
  5. வஸ்திராயனம்னா சல்லடையில் சலிக்காமல் மெலிதான வெள்ளைத் துணியில் மாவைப் போட்டுக் கையால் துழாவிக் கொண்டே சலிப்பது. குழந்தைகளுக்கான கஞ்சி மாவு, ராகி மால்ட் எல்லாமும் இம்முறையில் தான் எங்க அம்மா தயார் செய்வாங்க. ராகி மால்டுக்குச் சலித்த கேழ்வரகு மாவோடு சர்க்கரையைப் பொடித்து சேர்த்து ஏலக்காய், பச்சைக்கற்பூரம் பொடித்துச் சேர்ப்போம்.

    நானும் தயார் செய்திருக்கேன். உடலில் தெம்பும் மனதில் ஆர்வமும் இருந்தப்போ. இப்போக் கடையில் வாங்குற ராகிமால்ட்டைக் குடித்தால் ராகிமால்ட் சாப்பிடும் ஆசையே போயிடுது. :))))))

    பதிலளிநீக்கு
  6. கேழ்வரகு மாவு + பொடித்த சர்க்கரை +ஏலக்காய், பச்சைக்கற்பூரம்+ கேசரிப்பவுடர் நிறத்துக்கு

    பதிலளிநீக்கு

  7. என் பிள்ளைகள் குழந்தைகளாய் இருந்தபோது வெறும் ராகியும் கோதுமையும் மாவு செய்து கூழாக்கிக் கொர்டுப்போம். இப்போதெல்லாம் கடையில் செரிலாக் மற்றும் என்னென்னவோ வாங்கிக் கொடுக்கிறார்கள். சத்துமாவு உடலுக்கு மிகவும் நல்லது.

    பதிலளிநீக்கு
  8. சிறந்த சத்துமாக் குறிப்புகள்

    visit http://ypvn.0hna.com/

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா

    நல்ல போசக்கு உணவு பற்றி கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வு. கஞ்சியாக அருந்துவது பிடிக்கும். /வஸ்திராயனம்/ கீதாம்மா, இந்த முறையில்தான் இப்போதும் என் அம்மா தயாரிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஆஹா, ரா.ல. வஸ்திராயனம் உங்களுக்கு அறிமுகம் ஆகி இருப்பதில் மகிழ்ச்சி. நிறையப் பேருக்குப் புரியவில்லை. :))))))

    பதிலளிநீக்கு
  12. வஸ்திராயனம் பண்ணறச்சே மாவிலிருந்து வரும் புகை ஒத்துக்கொள்ளாது என்பதால் இப்போதெல்லாம் ராகிமால்ட் தயார் செய்வதையே விட்டாச்சு! :(

    பதிலளிநீக்கு
  13. வஸ்திராயணம்..சல்லடை இல்லாத காரணத்தால் ப்யன்படுத்தப்பட்ட முறை.. சல்லடை கிடைக்கும்பொழுது இது சிரமமாகும் இல்லையா?

    2 வருசம் வச்சுட்டு இருந்தா yeast தொல்லை வராதா?

    பதிலளிநீக்கு
  14. சல்லடைக்கும் வஸ்திராயனத்துக்கும் தொடர்பு இருக்கிறதாத் தெரியலை. ஏன்னா என்னோட அம்மா எழுபதுகளுக்கு முன்னால் இருந்தே கேழ்வரகு மாவை மட்டும் வஸ்திராயனம் தான் செய்வார். :)))

    காய்ந்த, மற்றும் வறுத்த பொருட்களை வைத்து அரைக்கப்பட்ட மாவில் ஈஸ்ட் எப்படி வரும்? வராது. Dry Powder!

    பதிலளிநீக்கு
  15. இன்னாபா, ஒனக்கு இது நன்னா கீதா !
    ரண்டு நாள் முன்னாடி, நீனு கல்லிலே எழுதிருக்கு படிச்சு சொல்லு
    அப்படின்னு போட்டதை மானா வாரியா படிச்சு போட்டு,

    இலை போட்டாச்சா ? அப்படின்னு கேட்டுட்டு, தரை லே குந்திகினே
    கீறேன்.

    அப்படின்னு கேட்டதுக்கு ஒரு பதிலு ?

    எம்புட்டு நேரமாச்சு.

    அட, சரி. அதுனாச்சும் போவட்டும்.

    இப்ப சத்து மாவு கஞ்சி அப்படின்னு !!

    இன்னாய்யா... ஒரு ஓல்டு மேன் புரந்த நாளைக்கு கஞ்சியா காச்சி ஊத்துவே !!

    அப்பாதுரை சாரே ! நீங்க தான் தரும துரை

    நீங்கனாச்சும் நியாயம் சொல்லுக.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  16. சத்துமாவு - வாவ் என்னவொரு சுவையாக இருக்கும்.... சிறு வயதில் சாப்பிட்டதுண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!