வியாழன், 26 ஜூன், 2014

6174 - படித்ததன் பகிர்வு

                                                

எல்லோரும் முதலிலேயே நிறைய எழுதி விட்டார்கள். நான் இப்போதுதான் படித்தேன். ஹிஹி..எனவே இப்போது எழுதுகிறேன்.

காலமும் இடமும் மட்டும் சொல்லி சின்னச் சின்னதாய் முதல் சில அத்தியாயங்கள் வரும்போது மண்டை காய்ந்து போனாலும், காரணமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே படிக்க வைத்தது. நாவலில் பின்னால் இதன் தொடர்பு என்ன என்று புரிய வேண்டுமே, அதற்கு இவற்றை இவற்றை எல்லாம் சரியாக நினைவில்  வேண்டுமே என்ற கவலையும் இருந்தது.

அதற்குத் தேவை இல்லாமல் செய்து விடுகிறார் க. சுதாகர். இது இவரது முதல் படைப்பு என்கிறது இரா முருகனின் முன்னுரை. அவர் சொல்வது போல மிகப் பெரிய கதைக்களனை அநாயாசமாகக் கையாண்டிருக்கிறார் சுதாகர். 

கொஞ்சம் நம்ம மூன்றாம்சுழி அப்பாதுரை எழுதும் பாணியில் கதை!
அதேசமயம் நம்மூரில் விஜயகாந்த், அர்ஜுன், வெளியூரில் அர்னால்டும் செய்யும் காரியம்தான்கதை! தாய்நாட்டை அல்லது உலகைக் காக்கும் வேலை. மற்ற சாதாரண மக்களுக்கு இப்படி ஒன்று நடப்பது கூடத் தெரியாது.

புத்தகக் கண்காட்சி செல்லும்போது,  ஏற்கெனவே முக நூலில் படித்திருந்த விமர்சன வரவேற்பைக் கண்டு புத்தகத்தை எடுத்துப் பார்த்து நிராகரித்திருந்தேன். அதற்கு இரண்டு காரணங்கள் - என்னைப் பொறுத்தவரை! ஒன்று ஒரு அறிமுக எழுத்தாளர் புத்தகத்தை 300 ரூபாய் கொடுத்து வாங்கி ரிஸ்க் எடுப்பதா? இரண்டாவது அங்கேயே லேசாகப் புரட்டிப் பார்த்தபோது படிக்கத்தூண்டும் வகையில் இல்லை என்று தீர்மானித்திருந்தேன்.

இந்த இரண்டு என் கணிப்புகளுமே தவறு என்று உணர்த்தி இருக்கிறது இந்தப் புத்தகம்.  புத்தகத்தின் கடைசியில் எந்தெந்த இடங்களிலிருந்து கற்பனை ஊற்று கிடைத்தது, மற்றும் இந்தப் புத்தகத்துக்காக ரெபரன்ஸ் எடுத்திருக்கிறோம் என்ற பட்டியலையும் தந்திருக்கிறார்.

பதினைந்து மூன்றில் வாங்கிப் படித்திருந்தாலும் சொந்தமாக ஒன்று வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்! :))) அனன்யாவுக்கு நன்றி சொல்லவேண்டும்.

ஒரு மிகப் பெரிய பல்சக்கரம் சுற்றி வரும்போது அதன் பற்கள் நீள் வட்டத் தொலைவில் இருக்கும்போது எப்படி ஒன்றுடன் ஒன்று பொருந்தப் போகின்றன, எங்கேயோ இடிக்கப் போகிறது என்று தோன்றும் வேளையில் அந்தந்தப் பல் அதனதன் இடத்தில் உட்காரும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குமே, அதுபோல கதையில் முடிச்சுகள் அவிழும் நேரம் அதது அதனதன் இடத்தில் அமரும்போது இருக்கிறது.

சின்னச் சின்ன விஷயங்களைக் கூட 'இதை இவர் கடைசியில் விடுவிக்கிறாரா என்று பார்க்கவேண்டும்' என்று நினைத்தால், நாம் மறந்து விட்ட விவரங்களுக்குக் கூட கடைசியில் விளக்கம் கொடுத்து விடுகிறார்.  ஆனால் கவனமாக, வரிகளைத் தாவாமல் படிக்க வேண்டும். 

ஒரே ஒரு இடம் மட்டும் சொல்லாமல் விட்டு விட்டாரா, நான்தான் கவனமாகப் படிக்கவில்லையா, அல்லது படித்துப் புரிந்து கொள்ளவில்லையா என்று புரியவில்லை. அது பெரிய விஷயம் இல்லை என்பதால் விட்டு விட்டேன். தேவராஜ் தன ஆட்களைத் தானே கொன்று டபுள் கேம் ஆடியிருப்பதாக அனந்த் நினைக்குமிடம்.

ஆதிகதை என்று லெமூரியாவில் தொடங்கும் கதை பெர்முடா, பிரமிட், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சி, உலக யுத்தம் உலக அழிவு பழந்தமிழ்ப் பாடல்களில் புதிர் என்று எங்கெங்கோ பயணிக்கிறது.

"இழிந்து வானின்று வரும் கல்லொன்று
எழும் ஊழிக் காலத்தின் சிலநாள் முன்பு
ஊழிமட்டும் ஒளியெறியும் இரண்டாய்ப் பிரிந்து
ஆழிமேல் தானும் அசையா நின்று..."

மேலே சொல்லப் பட்டுள்ள பாடல்தான் கதையின் கரு!  இது மாதிரி ஆங்காங்கே நிறைய பாடல் புதிர்களை விடுவித்தபடி முன்னேறுகிறார்கள் நன்மை கோரும் குழவினர்.  கூடவே வேறு வழியில் வில்லக் குழுவினரும்.

"தன்னிலே பிரிந்துகூடிப் பின் பகுக்க
தன்னை இயல்தோற்றும் தசம ஆதி
சீரிய கட்டமதில் தடயம் காண்
ஆதியின் முதல்வர்க்கம் சூடிய அறைதனிலே"

இந்தப் புதிர்கள் புரியவேண்டுமானால் உங்களுக்கு அதின்மேல் நம்பிக்கை ஏற்பட வேண்டும். எந்த ஒன்றின்மேலும் நம்பிக்கை இருப்பவர்களுக்கே,  தான் நம்பிக்கை கொண்ட பொருளின் மேல் ஒரு பாசிடிவான எண்ண அலையால்,  அந்தப் பொருட்களைப் பற்றி மற்றவர்களுக்குத் தோன்றாத கோணங்களில் புதிய விஷயங்கள் புலப்படுகின்றன என்று சொல்கிறார்.

காலச்சக்கரம் நரசிம்மாவின் கதைகள் கூட இதேபோன்றதொரு அமைப்பில் இருப்பதனாலேயே எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டன. இந்திரா சௌந்தரராஜன் கூட இதுபோன்ற மர்மக் கதைகள் எழுதி இருக்கலாம். படித்ததில்லை. பாலகணேஷ் முன்பு ஓரிரு பதிவுகளில் சொல்லியிருந்ததிலிருந்து அவர் கதைகள் படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது.

கப்ரேகர் கான்ஸ்டன்ட் எண் 6174 பற்றி தெரியுமா?  அதை அழகாக இந்தக் கதையில் பொருத்துகிறார்.

இடையில் பெரிதாக நினைக்கத் தோன்றாத, அதிக முக்கியத்துவம் தராத, மென்மையான, ஆனால் சிறிய காதல் ஒன்றும் கதையில் இழையோடுகிறது.

300 ஆம் பக்கத்திலிருந்து மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்குகின்றன. முதலில் மெல்ல, விட்டு விட்டு, அப்புறம் கதை இன்னும் சூடு பிடிக்கிறது.
லெமூரியா பற்றி அரைகுறையாய் அறிந்திருக்கிறேன். பிரமிட் பற்றி படித்திருக்கிறேன். ப்ரிசம் பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறேன். கணக்கோடுதான் எனக்குப் பிணக்கு. இவைகளை வைத்து மிக மிக சுவாரஸ்யமாய் கதை புனைந்திருக்கிறார் க. சுதாகர்.
மறுபடியும் சொல்கிறேன், இது இவரின் முதல் படைப்பு என்பதை நம்பத்தான் முடியவில்லை!

நம்ப முடியாத வேகமும், கருவும் கதைக்கு பலம் சேர்க்கின்றன. எந்த இடத்திலும் போரடிக்கவில்லை.


6174
க. சுதாகர்
வம்சி பதிப்பகம்
408 பக்கங்கள் 300 ரூபாய்.





19 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    தாங்கள் படித்த அனுபவத்தை வைத்து பகிர்ந்த பதிவை பார்க்கும் போது புத்தகத்தை வேண்டி படிக்கச்சொல்லுகிறது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. படித்துப் பிடித்ததன் பகிர்வு! மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். சிறப்பான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  4. அனன்யா என்னிடமும் படிக்க சொல்லி சொல்லியிருக்கிறாள். படிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். அந்த எண்ணத்திற்க்கு வலுசேர்க்கிறது, தங்கள் விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  5. நல்லா சொல்லியிருக்கீங்க.. தேவராஜ் பத்தி நீங்க சொல்லியிருக்கிறது எனக்கு சரியா நினைவில் இல்லை.. :)

    பதிலளிநீக்கு
  6. அருமையான விமர்சனம். கதையை படிக்க ஆவலை ஏற்படுத்துகிறது.
    இந்திரா செளந்தரராஜன் கதைகள் படித்து இருக்கிறேன். நல்ல விறு விறுப்பாய் இருக்கும் சித்தர்கள் பாடல்களும் அதில் இடம் பெறும்.

    பதிலளிநீக்கு
  7. கொஞ்சம் நம்ம மூன்றாம்சுழி அப்பாதுரை எழுதும் பாணியில் கதை! //
    கதை அமானுஷ்யம் நிறைந்த திகில் கதையாய் இருக்கும் இல்லையா!
    படிக்க நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. நீங்க சொல்றதைப் பார்த்தால் அப்பாதுரையும், சுஜாதாவும் கலந்து கட்டி அடிச்சிருப்பாங்க போல! :)))

    இந்தக் கதையையோ, இதன் பெயரையோ இன்று தான் முதல் முதலாகக் கேள்விப் படுகிறேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். :)))))

    பதிலளிநீக்கு
  9. கீதாசாம்பசிவம் அவர்களின் கருத்தே
    என் கருத்தும்,,,
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. What a coincidence! கடந்த நான்கு நாட்களாக இந்த வீட்டிலிருக்கும் இந்த (நூலக) புத்தகத்தை படிக்கலாமா வேண்டாமா என்ற யோசித்தபடியிருந்தேன். படித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. விமர்சனம் அருமை. படிக்கத்தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு

  12. அத்தனை நீள புத்தகத்தைப் படித்து விமரிசனம் செய்வது சாதாரணமல்ல. செய்திருக்கிறீர்கள் என்பதே பாராட்ட வேண்டியது.

    பதிலளிநீக்கு
  13. புதிர்கள் என்றவுடன் ஆவல் அதிகரிக்கிறது...!

    பதிலளிநீக்கு
  14. காலங்காத்தால இந்த புத்தகம் பற்றிய தகவலும் ஒரு விமரிசனமும் படித்து ‘வெச்சாங்கடா வேட்டு ஒரு முந்நூறு ரூபாய்க்கு’ ங்கற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. அவரின் மூஞ்சி புத்தகம் பக்கம் போனா நிறைய ப்ராமிஸும் சாத்தியங்களும் கண்ணில் படுகிறது. அப்றம் என்ன. வாங்கிப் படிச்சு மனசில ஓடுற எண்னங்கள பகிர வேண்டியது தான - இப்பத்திக்கு வேறு பொளப்புன்னு உண்டுமா என்ன? ஆனா இங்க இருக்கிற பதிவுகளப் பாத்தா நாம ரொம்ப லேட்டுன்னு புரியுது. ம்ஹூம் என்ன பண்றது!

    பதிலளிநீக்கு
  15. நீங்க சொல்றதைப் பார்த்தால் மெகா சீரியலாய் டிவியில் வந்து விடும் போலிருக்கே !

    பதிலளிநீக்கு
  16. பல்சக்கரம்... படிக்கச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  17. நல்லதொரு விமர்சனம் ஸ்ரீராம் சார்... ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாகச் சென்றாலும் தொடர்ந்து வாசிக்க வைக்கும் கதை

    பதிலளிநீக்கு
  18. நல்ல விமர்சனம். படிக்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!