புதன், 21 டிசம்பர், 2016

என் பல் (ஆஸ்பத்திரி) அனுபவங்கள்



     பத்து வருடங்களுக்கு முன் ஒரு முறை பல் பிடுங்கிய அனுபவம்.  அதற்கும் முன்னால் எப்போதோ சிறுவயதில் பல் எடுத்தது.  அதுவே இதற்கு மேலும் தாங்க முடியாது என்ற நிலை வந்த பிறகு தாளமுடியாத வலியுடன் கப்பல் கவிழ்ந்த பிரமுகர் போல கன்னத்தில் கைவைத்து பல் மருத்துவரைப் போய்ப் பார்த்தேன்.  அன்பாகப் பேசிக்கொண்டே என் பல்லைக் கழற்றிக் கையில் கொடுத்து (இல்லை, பேசினில் போட்டுக்கொண்டு) ஆதரவாக  100 ரூபாய் மட்டும் கட்டணமாக வாங்கி கொண்டார்.  
Image result for tooth extraction images

     ஆறேழு வருடங்களுக்கு முன்வரை பல் டாக்டரைப் பார்ப்பது என்றாலே பல் பிடுங்குவது என்று ஒன்றாகத்தான் இருந்தது.  ஆனால் இப்போது அந்தத் துறையில் பேசிக் ஃபோனிலிருந்து ஸ்மார்ட் ஃபோனானது போல நிறைய முன்னேற்றங்கள்.  



     எனக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல அதற்கும் மேற்பட்ட பற்கள் வருமானத்துக்கு மேல் "சொத்தை" குவித்து மேலும் கீழும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க, அதை அறிந்து வைத்திருந்த
எனக்குத் தெரிந்தவர்கள் ஒவ்வொரு பல் மருத்துவ
ரைச் சென்று அவர்கள் பிரச்னைக்குப் பார்த்துக்கொண்டு வரும்போதெல்லாம் எனக்கும் சிபாரிசு செய்வார்கள்.  ஓகே, இதோ கிளம்பி விடலாம் என்றுதான் தோன்றும்.  நகரின் 'பல்'வேறு மூலைகளிலும் மருத்துவர்களை சந்திக்க மனதளவில் பாதித் தயார் நிலையில் இருந்தேன்.  அப்புறம் தைரியம் வராது!  தண்ணீர் குடித்தாலும், வெந்நீர் குடித்தாலும் தேவர் மகன் ரேவதி போல கூசும்.   உணவுப் பொருள்கள் மேல் நான் அபார கருணை கொண்டு அதிகம் கடிக்காமலேயே அவற்றை விழுங்குவேன். 
Image result for tooth extraction images
 
     ஒருநாள் என் (பொது மருத்துவம்) டாக்டர் நண்பர்,  அவர் பார்த்துக்கொண்டிருந்த  பல் மருத்துவரிடம் எனக்கும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி விட்டதாகவும், உடனே கிளம்பி வரும்படியும் சொன்னார்.  "உடனேயா?  இன்னிக்கேவா?  நாளை வர்றேனே..." என்று நான் ரங்கராஜ் பாண்டேயிடம் பதில் சொல்லும் தீபா போல மழுப்பியதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை.  "உடனே வாங்க" என்று சொல்லி ஃபோனைக் கட் செய்து விட்டார்.  கூட்டமாயிருந்தாலும் வேறு வழியில்லாமல் ஏடிஎம் நாடிச் செல்லும் இந்தியக் குடிமகன் போல கிளம்பிச் சென்றேன்.
Image result for tooth clinic  clip art images

     அங்கு சென்றதும் வந்த நம்பிக்கை என்ன என்றால் அவர் பல் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் இருந்தார்.  அதனால் என்ன இப்போ என்கிறீர்களா?  மனதை ஏதாவது ஒரு முறையில் தயார் செய்துகொள்ள வேண்டுமே! 

Image result for tooth clinic  clip art images

    வெள்ளைக் 'கோட்'டணிந்து கையில் கம்பி போன்ற வஸ்துவுடன் நின்ற பெண்ணின் தோள் வழியே எட்டிப் பார்த்து "என்ன ஸார் இப்படி உடனே கூப்பிட்டுட்டீங்க..." என்றேன் நண்பரிடம், ஏதோ அவருக்காகத்தான் நான் வந்திருப்பது போல.
      பாதிச் சாய்ந்த நிலையில் ஒய்யாரமாக 'ஆ' என்று திறந்து வைத்திருந்த வாயை சற்று மூடிவிட்டு (பல்லை உடைத்துக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணிடம் அனுமதி வாங்கி கொண்டுதான்!) "அப்படிக் கூப்பிடல்லைன்னா நீங்க வரமாட்டீங்கன்னு தெரியுமே.." என்று விட்டு மறுபடி வாயை சுஜாதா கதை போல மாற்றிக் கொண்டார்! 


     எனக்காகக் காத்திருந்த இளம் (மருத்துவப்) பெண்களைக் கண்டதும் அஞ்சலியையும் நயன்தாராவையும் ஒரே நேரத்தில்  பார்த்த ஜெய் மாதிரி எனக்குக் கூச்சம் வந்தது!  "ஸார்... ஜென்ட்ஸ் இல்லையா?" என்றேன் அவர் காதருகில் நினைத்தாலே இனிக்கும் கமலஹாசன் மாதிரி.  "ஏன்? லேடீஸ்னா காட்ட மாட்டீங்களா?  அவர்களுக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்
கத்தான் தெரியாதா?" என்று தெரியாமல் கை பட்டு மியூட் ரிலீஸான டீவி மாதிரி சத்தமாகக் கேட்டு மானத்தை வாங்கினார்.
     இன்னமும் அம்மா பெயரையே சொல்லிக் கொண்டிருக்கும் அப்பாவி அதிமுக தொண்டனைப் பார்க்கும் சின்னமா ஆதரவாளர் போல என்னை மிகவும் கேவலமாக ஒரு லுக் விட்ட அந்த வளரும் மருத்துவர் "கொஞ்சம் வெளில உக்காருங்க..  கூப்பிடுவோம்" என்று சபையை விட்டு வெளியேற்றினார்.
     வெளியில் காத்திருந்த ஐந்தாறு பேர்களுடன் நானும் காத்திருக்கலானேன்.  முகமூடிக் கொள்ளைக்காரர்கள் போல அங்கிருந்தவர்கள் வாயையையும் மூக்கையும் கர்சீப்பால் மறைத்திருந்தார்கள்.  திடீரென்று உள்ளிருந்து தோன்றிய ஒரு இளம்பெண் என்னை அணுகினாள்.  என் கையில் ஒரு டேபை(Tab)  நீட்டினாள்.
Image result for tooth clinic  patients waiting clip art images

     "இல்லை.. பரவாயில்லை" என்றேன் பெருந்தன்மையுடன், எனக்குப் பொழுது போக எதையோ கையில் கொடுத்துப் பார்க்கச் சொல்கிறாள் என்ற எண்ணத்தில்.
     "இதை fill பண்ணுங்க" என்று அதை என்னிடம் நீட்டி விட்டுச் சென்று விட்டாள்.  அதைப் பார்த்தேன்.  அதில் சிமிட்டிகொண்டிருந்த கோடு இருந்த இடத்தில் என் பெயர் கேட்டுக் கொண்டிருந்தது.  அதை டைப்பியதும் நகர்ந்து செக்ஸ்? என்றது.  மேல் என்று டைப்பி அடுத்து எங்கு போகிறது என்று பார்த்தேன்.  வயது கேட்டது.   டைப்பினேன்.  காத்திருந்தேன். 


     பத்து நிமிடத்தில் தென்றலாய் மிதந்து வந்த வனிதை "முடிந்ததா?" என்று கேட்டு வாங்கிச் சென்றவள், புயலாய் மீண்டும் திரும்பினாள்.  "இன்னும் இருக்கே.." என்று அடுத்த பக்கத்துக்குப் போகும் அம்புக்குறியைக் காட்டினாள்.  இந்த முறை அவள் விலகவில்லை.  என் ஞானத்தின் மீது நம்பிக்கை இழந்திருந்தாள்.  அருகிலேயே பௌடர் வாசனையுடன் காத்திருக்க, மறுபடி அடுத்த பக்கத்துக்குச் சென்று டைப்பத் தொடங்கினேன்.  என் ஜாதகத்தில் பாதியை வாங்கிக்கொண்டது அது.  மறுபடி கன்னியிடம் கருவியை கருத்துடனே நீட்ட முயற்சித்த கணத்தில் கன்னி என் முகம் பார்த்து "ஃபோட்டோ எடுங்க" என்றாள்.  'யாரை, அல்லது எதை' என்று நான் கேட்குமுன் அவளே "உங்களை ஒரு செல்ஃபி எடுத்து சேவ் பண்ணுங்க" என்றாள் லேசான அதட்டலுடன்.  saveவினேன்.  அருகில் காத்துக்கொண்டிருந்த முகமூடி மனிதர்கள் உள்ளே அழைக்கப்பட்டு, அவ்வப்போது வெளியேறிக் கொண்டிருந்தார்கள். 
     எதிரே மூன்று கதவுகள் இருந்தன.  முதல் கதவில் நுழைந்து மூன்றாவது கதவு வழியாக வெளியேற வேண்டும் என்று நினைத்திருந்தது தவறு என்று ஒவ்வொரு கதவு வழியாகவும் வெவ்வேறு மனிதர்கள் வருவதை பார்த்ததும் தெரிந்தது.  நல்லவேளை யாரானா (அமிதாப்) படம் பார்த்திருந்ததால் இன்னொரு மாதிரி நினைத்து பதறவில்லை.  (புரியாதவர்கள் யு டியூப் சென்று Lift Scene என்று தேடிப் பார்க்கவும்)





     'டேப்' வனிதை வெளியே வந்து "ஸ்ரீராம்" என்று பாடினாள்..  இதயம் படபடக்க பஞ்சடைத்த கால்களுடன் முதல் கதவை நோக்கிச் சென்றேன். 

40 கருத்துகள்:

  1. பௌடர் வாசனை, டேப் வனிதை, இளம் பெண்கள் அஞ்சலி/நயனதாரா... ஆரம்பம் அமர்க்களமாகத்தான் இருக்கும். கடைசியில் பில் போடும்போது 'பினிசிங் சரியில்லேப்பா' என்பதுபோல் ஆகாமல் இருந்தால் சரிதான்.

    இப்போல்லாம் இந்த மாதிரி ஹைடெக் பல் ஆஸ்பத்திரிகள், எப்படி service பண்ணினார்கள் என்று கேட்டு feedback mailம் வரும்..

    எல்லாம் சரி பண்ணியபின், உங்கள் முகத்தில் நாங்கள் விரும்புவது அந்தச் சிரிப்பைத்தான், என்று சொன்னால், அதன் காரணம் 'பல் செட்தான்' என்று சொல்லி பல் செட்டைக் கழற்றிக்காண்பிக்காமல் இருந்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு
  2. என் பல்லைப் பிடுங்கிய முதல் அனுபவம் நினைவுக்கு வருகிறதுநான் அம்பர்நாதில் பயிற்சியில் இருந்தநேரம் 1957-58 என்று நினைக்கிறேன் பல்லில் வலி அம்பர்நாதில் பல் மருத்துவர்கள் இல்லை. என்னை பம்பாய்க்குப் போகச் சொன்னார்கள்இத்தனை வருடத்துக்குப் பின் மருத்துவமனை பெயர் நினைவுக்கு வருவதில்லை. அங்கே சென்று என் பல் வலி பற்றிச் சொன்னேன் என்னை ஒரு பெண்டாக்டரிடம் அனுப்பினார்கள் அழகான பெண் .அந்தவயதில் எல்லா இளம்பெண்களுமே அழகாகத்தெரிவார்கள் என்பது இப்போது புரிகிறதுநான் அவரைப் பார்த்து ஜொள் விட்டுக் கொண்டிருக்கும் போதே ஆ காமிக்கச் சொல்லி ஒரு இன்செக்‌ஷன் போட்டு சில நொடிகளில் பல்லைப் பிடுங்கி அனுப்பினார்கள் வலியே தெரியாத பல் பிடுங்கல் எல்லாம் வயசுக் கோளாறு ..!

    பதிலளிநீக்கு
  3. haa haa :) எங்க வீட்ல பல் மருத்துவரிடம் அடிக்கடி போவது என் கணவர் தான் .மசால் வடையில் இருந்து கவனிக்காம சாப்பிட்டார் ஒரு நுனி உடைஞ்சி அப்புறம் ரெகுலர் செக்கப்
    .நீங்க நிறைய இனிப்பு சாப்பிடுவீங்களா ..இவர் சாக்லேட்ஸ் பிரியர் நான் நார்மல் செக்கப் கூட செய்ய மாட்டேன் ..க்ளீன் பன்றேன்னு இங்கே எனாமலை எடுத்து விட்ருவாங்க ..
    முன்பெல்லாம் சென்னையில் சைனீஸ் டென்டிஸ்ட் நிறைய உண்டு இப்போவும் இருக்காங்களா ?
    நயன் அஞ்சலி ரேவதிலாம் வந்தாச்சு முக்கியமான உயரமானவர் வரலையே :)அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ..

    பதிலளிநீக்கு
  4. பல் டாக்டரிடம் போய் வந்த அனுபவத்தை நகைச்சுவையாக சொல்லி விட்டீர்கள். பல் டாகடர் ஜாதகம் மட்டுமா கேட்பார் சொத்தையும் அல்லவா கேட்பார்.
    //அந்தத் துறையில் பேசிக் ஃபோனிலிருந்து ஸ்மார்ட் ஃபோனானது போல நிறைய முன்னேற்றங்கள்.//

    நிறைய முன்னேற்றம் தான் பல் வைத்திய துறையில்.


    வை.கோ சார் பல் கதை நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. "இதை fill பண்ணுங்க"பல் வலின்னு போனா ,இந்த இம்சை வேறேயா :)

    பதிலளிநீக்கு
  7. நான் யாரிடமும் பல்லைக்காட்டுவதாக இல்லை.

    பதிலளிநீக்கு
  8. நான் முதல் முதல் 88 ஆம் ஆண்டில் பல் பிடுங்கிக் கொண்டேன். கடைவாய்ப் பல்! கடுமையான வலி! வாயே திறக்க முடியலை! அதுக்கு முன்னாடி 76-77 ஆம் ஆண்டுகளிலே ஞானப்பல் என்னும் விஸ்டம் டீத் முளைக்கையில் இருந்த ஞானமெல்லாம் போய் தினம் காலை இரண்டு ஊசி மாலை இரண்டு ஊசி என்று போட்டுக்கொள்ள வேண்டி வந்தது. இப்போக் கடைசியாப் பார்த்தப் பல் மருத்துவர் பெண் தான். பற்களைப் பிடுங்குவதில் எதிரி. சுத்தம் செய்து கொடுத்துவிட்டுத் தொடர்ந்து பயன்படுத்த ஒரு பற்பசையும், பல்லில் வைக்க மாத்திரையும் கொடுத்ததில் பல் கூச்சத்தையே விட்டு விட்டது. அந்த மருத்துவர் இப்போ வெளிநாடு போயிட்டார். பதஞ்சலியின் தந்த் கந்தி பற்பசையால் பற்களைச் சுத்தம் செய்தால் பற்கள் கூச்சம், வலி இல்லாமல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. இனிமேல் பல் டாக்டரிடம் போக வேண்டாம் பல் வலிக்கும் போது பச்சை மிளகாயை வலி இருக்கும் இடத்தில் நன்றாக அழுத்துங்கள். எச்சில் போன்ற திரவம் வடியும் ஸிங்க் முன் செய்வது உகந்தது.
    இரண்டு அல்லது மூன்று முறை செ ய்தால் வலி போயேபோச்!
    எச்சரிக்கை-பல் வலி இல்லாத இடத்தில் அழுத்தினால் எரிச்சல் அதிகமாகும் இவ்வாறு செய்தால் ஆறு மாதம் வரை வலி இருக்காது. சிலர் பல் தானாக விழும் வரை செய்வதுண்டு.
    விஸ்வநாதன்

    பதிலளிநீக்கு
  10. நல்ல நகைச்சுவையான அனுபவப் பகிர்வு. பல்வலி ஏற்பட்டால் மிகவும் அவஸ்தைதான். அதைப் பகிர்ந்துகொண்டுள்ளதற்கு நன்றிகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  11. //கோமதி அரசு said...
    வை.கோ சார் பல் கதை நினைவுக்கு வருது.//

    தங்களின் நினைவாற்றலுக்கு மிக்க நன்றி, மேடம்.

    இதோ அதற்கான இணைப்புகள்:

    (1) http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html
    பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?

    (2) http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html
    அவன் போட்ட கணக்கு.

    பதிலளிநீக்கு
  12. பல் பிடுங்கப் போனால் இப்படியெல்லாமா கேட்கிறார்கள்
    ஆகா
    தம +1

    பதிலளிநீக்கு
  13. ஹஹஹாஹ்! நல்ல அனுபவம் தான்..ஸ்ரீராம்...பாரதிராஜா படம் போல வெள்ளை தேவதைகள் நடமாட நீங்களும் அவர்கள் நடுவில் சென்று வந்தீர்கள்!!! தொடருமோ? தொடரும் போல தெரிகிறது முடிவு அதனால்தான் இந்தக் கேள்வி. எனக்கு இன்னும் பல் அனுபவம் எதுவும் இல்லை..

    கீதா: ஹஹ்ஹஹ சிரித்து ரசித்து வாசித்தாயிற்று. என்ன ஸ்ரீராம் எந்தக் காலம் பௌடர் வாசனை...சென்ட், க்ரீம் இல்லையோ இப்போ உள்ள வனிதைகள் பயன்படுத்துகிறார்கள்! என்ன இது இந்த ஸ்ரீராம் 80 களிலேயே இருக்கிறார்னு நினைச்சு வந்தா நல்ல காலம் அஞ்சலியும், நயந்தாராவும் காப்பாற்றினார்கள் என்று நினைத்துக் கொண்டு அடுத்த வரி வந்தால் ரெட்ரோ ரவுண்ட் போல நிஇ கமல்னு. சரி சரி அப்புறம் என்னாச்சு...தொடருமோ?? எல்லாம் சரி ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு உங்க ஃபோட்டோ??!!! ஸ்வீட் ரொம்ப சாப்பிடுறீங்களா ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  14. என்ன தந்தும் 'விறுவிறு'வென்று வலியில் துடிக்க வைக்கும் infected பல்லை எடுத்து விடலாம். பல் போனால் சொல் போச்சு என்பார்கள். உயிரே போகும் பொழுது சொல் போனால், என்ன? என்று தான் அந்த சமயத்தில் தோன்றும். பாதிக்கப்பட்ட பல்லை மட்டும் எடுத்து விட்டால், அடுத்த நிமிடமே, 'போயே போச்!' என்று நிம்மதி மனசில் குடிகொண்டு விடும்!

    இடது பக்க கடைவாய்ப்பல், அதற்கு அடுத்த பல், அதற்கு நேராக மேல் தாடையில் ஒரு பல் என்று மூன்று பல்களை ஒரே சமயத்தில் எடுத்தாச்சு! பாதிக்கப்பட்ட இடத்துக்கு பக்கத்தில் மூன்றே ஊசிகள்! சுத்தமாக வாயே மறத்துப் போய் விட்டது.. ஐந்தே நிமிடங்களில் வெகு அழகாக ஒன்று, இரண்டு, மூன்று என்று கண்ணில் காட்டி எண்ணி வாஷ் பேசினில் போட்டார்கள். எடுத்ததற்கு நிரூபணமாக நம் திருப்திக்காக
    ஸ்கேனிங் படத்தைக் காட்டினார்கள்.

    ஒரு பல் எடுக்க ரூ.2500/. 250௦3=7500. டெபிட் கார்டை நீட்டி விட்டதால், காசு கொடுத்த வலி கூட அவ்வளவாக இல்லை!

    பதிலளிநீக்கு

  15. அன்று
    பல் இழுத்தலா - அது
    எனக்கு முதலில் அச்சம் தர
    ஓடி ஒளித்த நினைவு
    இன்று
    எனக்கோ ஐம்பது நெருங்க
    ஒன்பது பல்லு இழுத்தாச்சு

    தங்கள் பதிவைப் படித்ததும்
    தோன்றிய எண்ணத்தைப் பகிருகிறேன்!

    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  16. இந்தியாவில் வந்து தான் வைத்தியம் பார்க்க வேண்டும் என்று நான் வருடம் பல்வளையைத் தாங்கிக் கொண்டு காத்திருந்தேன். இங்கு மருத்துவமனை சென்றால் சொத்தைப் பல்லோடு சொத்தையே பிடுங்கி விடுவார்கள். அது மட்டுமின்றி உண்மையான டாகடர் தானா என்னும் சந்தேகம் தீரவே தீராது.
    இந்தியாவின் அருமை ஆப்பிரிக்காவில் தான் தெரியும்

    பதிலளிநீக்கு
  17. இந்தளவு (TAB) முன்னேற்றம் வந்து விட்டதா....?

    பதிலளிநீக்கு
  18. பல்லைக் காட்டப் போனீங்க...
    தீபா, சசிகலா...(ஆத்தாடி சாமி குத்தம் ஆயிரும்...) சின்ன அம்மாவை எல்லாம் இழுத்து என்ன ரசனையான எழுத்து...
    பவுடர் வாசனை அடிச்சிக்கிட்டே இருக்குண்ணா இப்ப என் பக்கத்தில்...

    பதிலளிநீக்கு
  19. வாங்க நெல்லைத்தமிழன்... இப்போதெல்லாம் பில் அமவுண்ட் எவ்வளவு ஆகும்னு சொல்லி சம்மதம் இருந்தால்தான் ட்ரீட்மெண்ட் தொடங்குகிறார்கள். நீங்கள் சொல்லும் அந்த Practo mail "இவரை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு சிபாரிசு செய்வீர்களா? எனில், ஏன்? என்றெல்லாம் கேட்டு எனக்கும் வரும். நான் அதைக் கண்டுகொள்வதில்லை!

    பதிலளிநீக்கு
  20. வாங்க ஜிஎம்பி ஸார்.. நான் கொஞ்சம் கூச்ச ஸ்வபாவம். எனவே அந்தப் பெண்கள் அருகில் வந்ததும் கண்களை இறுக மூடிக் கொண்டேன்!

    பதிலளிநீக்கு
  21. வாங்க ஏஞ்சல்... நான் இனிப்பு அதிகம் சாப்பிடுபவன் அல்ல. என் அம்மாவுக்கு பல் பிரச்னை இருந்தது. எனக்கும் வந்தது அது! சீனப் பல் மருத்துவர்களிடம் போக எனக்கு பயம். தேசபக்தியுடன், மொழிப்பற்றுடன் உள்ளூர் மருத்துவர்தான்!

    //முக்கியமான உயரமானவர் வரலையே :)//

    ஹா.... ஹா.... ஹா... நானே மறந்தாலும் விடமாட்டீங்க போலவே! கொண்டுவந்து விடுவோம்!!!!

    பதிலளிநீக்கு
  22. வாங்க கோமதி அரசு மேடம்.... காசு கூடத்தான். ஆனால் வேலை ஜாஸ்திதான்... தச்சு வேலை மாதிரி நிறைய வேலை!

    பதிலளிநீக்கு


  23. வாங்க பகவான்ஜி...

    //"இதை fill பண்ணுங்க"பல் வலின்னு போனா ,இந்த இம்சை வேறேயா :) //

    அட, ஆமாங்கறேன்!!!

    பதிலளிநீக்கு
  24. வாங்க அசோகன்...

    //பல்பிடுங்கபோராட்டமா//

    பயங்கரப் போராட்டம்! என் மனதில்!!!!

    பதிலளிநீக்கு
  25. வாங்க பாரதி,,

    //நான் யாரிடமும் பல்லைக்காட்டுவதாக இல்லை. //

    ஹா.... ஹா.... ஹா... நல்ல கொள்கை!

    பதிலளிநீக்கு
  26. வாங்க கீதாக்கா....

    எனக்கு ஊசி போட்டுக்கொள்ளவே பயம். அதுவும் வாய்க்குள் ஊசி என்றால்? அதற்காகவே போகாமல் இருந்தேன்! ஆனால் கடைசிக் காலத்தில் அப்பா சாப்பிடமுடியாமல் பட்ட கஷ்டம் பார்த்ததும் சென்று ட்ரீட்மெண்ட் எடுப்பதே நல்லது என்று தோன்றிவிட்டது.

    பதிலளிநீக்கு
  27. வாங்க விஸ்வா... நன்றி ஆலோசனைக்கு. அதையும் தாண்டிய நிலையில்தான் மருத்துவரை நாடினேன். எனக்கு ஒன்றிரண்டு பிரச்னை இல்லை. "பல்"வேறு பிரச்னைகள்!!!

    பதிலளிநீக்கு
  28. வாங்க வைகோ ஸார்... அனுபவப்பட்டவர்களுக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம் என்று புரிகிறது, மு. மேத்தா கவிதை மாதிரி!

    பதிலளிநீக்கு
  29. வாங்க.... நண்பர் கரந்தை ஜெயக்குமார். தம வாக்கு தவறாமல் அளிப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க துளஸிஜி... சோம்பேறித்தனம் வந்து விட்டால் தொடர லேட்டாகும். அதனால்தான் தொடரும் என்று கமிட் செய்து கொள்ளவில்லை.

    பதிலளிநீக்கு
  31. வாங்க கீதா... அதென்ன, நீங்கள் பௌடர் உபயோகிக்க மாட்டீர்கள் என்றால் யாருமே உபயோகிக்க மாட்டார்களா என்ன! அந்தப் பெண் பாண்ட்ஸோ ஏதோ பௌடர் போட்டிருப்பாள் போலும்... தெரிந்தது! அதுசரி, ஸ்வீட் சாப்பிட்டால் மட்டும்தான் பலப்ரச்னை வருமா கீதா?!!

    //ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு உங்க ஃபோட்டோ?//

    அடடா.... பார்த்தீங்களா பார்த்தீங்களா.. பௌடர் வாசனைல நான் அதை யோசிக்க மறந்துட்டேன்! ஆமாம், அவங்களுக்கு எதுக்கு என் போட்டோ? ஆனா அதுக்கும் காரணம் இருக்கு. சொல்றேன்

    பதிலளிநீக்கு
  32. வாங்க ஜீவி ஸார்... இப்போல்லாம் அபூர்வமாத்தான் எங்கள் பக்கம் வருகிறீர்கள்! வலி இருக்கும் பல்லை எடுத்துவிட்டால்தான் என்னவொரு நிம்மதி! உண்மை. ஆனால் என் பல் ட்ரீட்மென்ட் சற்றே பெரிய சிறுகதை!!!

    //வாயே மறத்துப் போய் விட்டது.//

    மரத்து? அல்லது வலியே மறந்து போய்விட்டது!!!

    இங்கு ஒரு பல் எடுக்க 800 ரூபாயாம்!

    பதிலளிநீக்கு
  33. வாங்க யாழ்ப்பாவாணன். உங்கள் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  34. வாங்க சிவகுமாரன். நீங்கள் மதுரையில் இல்லையா? இப்போது ஆப்பிரிக்காவிலா இருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  35. வாங்க தனபாலன்... இது மட்டுமா முன்னேற்றம்? "எங்கள்" ( ! ) கிளினிக்கில் மயக்குவதற்கு சிரிக்கும் வாயு வந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  36. வாங்க பரிவை சே குமார். ரசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. now a days free extraction held in our VMSDC (Vinyaka Missions Sankarachariar Dental college at Ariyanoor. salem. Camp Officer.

    பதிலளிநீக்கு
  38. //இப்போல்லாம் அபூர்வமாத்தான் எங்கள் பக்கம் வருகிறீர்கள்! //

    அப்படியில்லை, ஸ்ரீராம். எலலா பதிவுகளையும் படிக்கிறேன். பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைக்கிற பதிவுகளுக்கு அவசியம் பின்னூட்டமிடுகிறேன். அதனால் இந்தப் பக்கம் வராதது போலத் தெரிகிறது போலும். ஆனால் ஆழமான பின்னூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டிருப்பது மட்டும் உண்மை. அதனால் மனம் தோய்ந்த ஆழமான் பின்னூட்டங்கள் போட வேண்டிய சில பதிவுகள் இயல்பாகவே 'எதற்கு வீணாக' என்று பின்னூட்டங்கள் போடாமலேயே நழுவி விடவும் செய்கின்றன. நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

    பதிலளிநீக்கு
  39. எந்தப் பதிவையும் அதை படித்தவர்கள் ஏதாவது ஒருவகையில் அக்ஃநாலட்ஜ் செய்தாலொழிய தெரிவதில்லை. பின்னூட்டங்கள் எவ்வகை ஊட்டங்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே. எனவேதான் என் ஏமாற்றம். கடந்த வியாழன் பதிவான "பிறமொழிச் சிறுகதைகள்" பகுதியில் குல்ஸார் எழுதிய ராவி நதி கதைப்பகிர்வைப் படித்தீர்களா இல்லையா என்றும் தெரியவில்லை. மெயில் செக் செய்தீர்களா என்றும் தெரியவில்லை. இரண்டு மெயில்களுக்கு பதில் இல்லை!!!

    மீள் வருகைக்கு நன்றி ஜீவி ஸார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!