செவ்வாய், 15 அக்டோபர், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : நான்... கல்பனா .. - துரை செல்வராஜூ


நான் கல்பனா..

============

துரை செல்வராஜூ 

==================



ஒரு வார விடுமுறைக்குப் பின்
மருத்துவமனையை நெருங்குகின்றேன்..

மருத்துவமனையை நெருங்கும்போதே இனம் புரியாத பரபரப்பு...

என்றுமே இப்படி இருந்ததில்லை...

மாருதியை வளைத்துத் திருப்பி பார்க்கிங்கில்
நிறுத்தி விட்டு உள்ளே விரைகிறேன்...

வார்டை நெருங்கும் போது மீண்டும் உள்ளுணர்வு துடிக்கின்றது...

சொன்னால் நம்பமாட்டீர்கள்...
யாரோ என்னைத் தேடுவது போல் இருக்கின்றது..

ஓடிப் பிடித்து விளையாடலாம் என்று -
கதவிடுக்கில் ஒளிந்து கொண்ட தன்னைக் கண்டுபிடிக்க
தேடித் திரியும் குழந்தையைக் கண்டு தாய் மனம்
எப்படியெல்லாம் பரிதவிக்குமோ அப்படி இருக்கிறது...

வார்டுக்குள் நுழைந்ததும் ஏகப்பட்ட வணக்கங்கள்..

அத்தனைக்கும் பதில் சொல்லியவாறு உள்ளே நடக்கையில்
எனக்காகவே காத்திருந்ததைப் போல அந்தப் பெண் கை கூப்பியவாறு...

எங்கோ பார்த்ததைப் போல் இருக்கிறது... ஆனால் நிச்சயமாக இல்லை...

அவளருகில் அந்தப் படுக்கையில் - யார்?..

அவளது தந்தையாகத்தான் இருக்க வேண்டும்!..

வலப்புறம் அந்தப் பெரியவரைப் பார்த்ததும்
நெஞ்சுக்குள் சடார்.. - என, மின்னல்!...

சட்டெனப் பாய்ந்து Clinical Case History யைக் கையில் எடுத்தேன்..

Dr. மீனா குருமூர்த்தி Attend பண்ணியிருக்காங்க...

Patient Name: Mr.K.Nagarajan., M/Age 62 Yaers..

திடுக்கென்றிருந்தது..

நாலு நாட்களுக்கு முன் Admit ஆகியிருக்கின்றார்..

இப்போது எல்லாம் சரியாக இருக்கின்றது..
ஆழ்ந்து தூங்குகின்றார்.. அவ்வப்போது விழிக்கின்றார்..

அழுத்தம்.. மன அழுத்தம் அது ஒன்று தான் பிரச்னை...

ஏறிட்டு நோக்கினேன் - மெல்லிய சுவாசத்துடன்
அதே தீர்க்கமான முகம்...

அவர் தான்... அவரே தான்!...

எனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியரே தான்...

கால்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன்...

அருகிலிருந்த அந்தப் பெண் என் கைகளைப் பற்றிக் கொண்டாள்...

" நீங்க?.. " - அவள் முகத்தில் கேள்விக்குறியுடன் ஆர்வம் படர்ந்தது...

" நான் சாரோட Student!.. " - என்றேன்...

" உங்க பேரு கல்பனா?.. "

" ஆமாம்!... "

" உங்களப் பத்தித் தான் அப்பா பேசிக்கிட்டே இருப்பாங்க!... "

என் கண்களில் நீர் துளிர்க்க
நாற்பது ஆண்டுகளுக்குப் பின் ஓடியது மனம்...

அன்று மாலை வீட்டு வாசலில்
சைக்கிளுடன் சார் வந்து நின்றார்...

விளையாடிக் கொண்டிருந்த நான் வீட்டுக்குள் ஓடி அப்பாவிடம் சொன்னேன்..

அப்பாவும் வெளியே வந்து வரவேற்க
ரொம்பவும் தயங்கித் தயங்கி வீட்டுக்குள் வந்து அமர்ந்தார்...

ரெண்டு பேரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்..

எனக்குப் பெரிதாக எதும் புரியவில்லை..

பாரதியார் பாட்டெல்லாம் என் மனைவி சொல்லிக் கொடுத்தது தான்!..
- என்று அப்பா சொல்லவும் அம்மா வெட்கத்துடன் புன்னகைத்தாள்..

அதுமட்டும் தான் நினைவில் இருக்கின்றது...

அடுத்து சில வாரங்களோ சில மாதங்களோ தெரியவில்லை..

மழை நாள் ஒன்றில் வீட்டிலிருந்த சாமான்களை
எல்லாம் மூட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள்..

அம்மா சொன்னாள் - அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆகி விட்டது!....  என்று...

வண்டியில் நாங்கள் புறப்படும்போது
ஊர் ஜனங்களோடு சாரும் நின்றிருந்தார் கையில் ஒரு பையுடன்..

என் அருகே வந்து -
" நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்!... " - என்றபடி அந்தப் பையைக்
கொடுத்தார்.. அப்போ சார் கண்ணெல்லாம் கலங்கியிருந்தது..

அம்மா கண் காட்ட - நான் அந்தப் பையை வாங்கிக் கொண்டேன்...

அதனுள் பழங்களும் சாக்லேட்டுகளும் இருந்தன...

புதிய இடம்... புதிய சினேகிதம்... மெல்ல மெல்ல முன்பு இருந்த ஊர்
நினைவில் இருந்து மறைந்தாலும் சாருடைய முகம் மட்டும் நிழலாடும்...

பாரதியின் பாட்டை எங்கே கேட்டாலும்
அங்கே சாருடைய நினைப்பு வந்து மனதை உறுத்தும்...

ஒரு தடவை கூட அவரைப் போய் பார்க்க முயற்சிக்கவில்லையே!.. என்று...

ஆனாலும் உள்மனம் சொல்லிக் கொண்டே இருக்கும்
என்றைக்காவது ஒருநாள் அவரை நீ பார்க்கும் வாய்ப்பு கிட்டும்!... என்று...

" அந்த நாள் இன்று தானா?...
அவரை நான் இப்படியா பார்க்க வேண்டும்?.. இதற்காகவா தவம் கிடந்தேன்?.. "

கதவை மெல்லத் தட்டும் ஒலி கேட்டு நிமிர்ந்தேன்..

மலர்விழி - நர்ஸ் நின்றிருந்தாள்..

" அந்தப் பொண்ணு உங்களைப் பார்க்கணும்...ங்கறாங்க மேடம்!... "

" வரச் சொல்லுங்க!... " - என்றேன்..

அந்தப் பக்கம் நின்றிருந்தவள் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்...

" உட்காரம்மா!... "

" தெய்வம் போல வந்தீங்கம்மா!... "

" அப்படியெல்லாம் இல்லை..."

" அப்பாவுக்கு... " மிகுந்த கவலை அந்தக் குரலில் தெரிந்தது..

" ஒன்னும் பயப்பட வேண்டாம்... எல்லாம் Normal ஆக இருக்கு.. வெறும்
Stress - மன அழுத்தம் தான் காரணம்.. வீட்ல என்ன பிரச்னை?... "

" அண்ணன் சரியா இல்லை....
அந்தக் கவலை தான் அப்பாவை புரட்டிப் போட்டது!.. "

மெல்ல விசும்பினாள்...

" அழாதே..ம்மா!.. உங்க அண்ணன் வந்து பார்த்தாரா?.. "

" ம்.. அண்ணன் நேத்து வந்து பார்த்தாங்க... அப்பா தூங்கிக்கிட்டு
இருந்தாங்க.. எழுப்பக்கூடாது.. ன்னு நர்ஸம்மா சொல்லிட்டாங்க.... "

" அது சரி.. என்னைப் பார்த்து கல்பனா.. ந்னு எப்படி சொன்னீங்க?.. "

"அப்பா அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க..
அந்த இக்கட்டான நேரத்துல மன தைரியத்தையும்
மறு வாழ்க்கையையும் கொடுத்தது நீங்க தான்..ன்னு... "

" நான் பாரதியார் பாட்டு தானே சொன்னேன்!... "

" இருந்தாலும் உங்க வாய் வார்த்தை தானே
அன்னைக்கு அப்பா மனசை தூக்கி நிறுத்தியிருக்கு!... "

" என்ன வாழ வைச்ச தெய்வம்..ன்னு!.. அப்பா சொல்றப்போ
கண்ணு கலங்கும்... உங்களைச் சொல்லித்தான் எங்களை வளர்த்தாங்க!..."

"அதனால தான் உங்களைப் பார்த்ததும் -
அந்தத் தெய்வம் இவங்க தான்...ன்னு எம் மனசு சொன்னது!... "

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் என் விழிகளில் நீர் ததும்பியது....
துடைத்துக் கொண்டபடியே கேட்டேன்...

" நான் டாக்டரா இருக்குறது அப்பாவுக்குத் தெரியுமா?... "

" அது தெரியாது.. ஆனாலும் சொல்லுவாங்க..
பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய ஆளா இருப்பா என் தாயி...ன்னு!... "

" என் தாயி இந்த ஊர விட்டுப் போனதுக்கப்புறம்
ஒரு தடவை கூட தேடிக் கண்டு பிடிச்சு பார்க்கலையே!...
பெரிய தப்பு பண்ணிட்டேனே.. ந்னு வருத்தப்படுவாங்க!... "

" இப்போ எல்லாரும் புதூர் பூங்குடியில தானே இருக்கீங்க?...  "

" இல்லம்மா.. அந்த வீட்டுல யாரும் இல்லை..
அந்த வீட்டுக்குத் தான் அண்ணன் பிரச்னை பண்றான்...
அப்பா எங்கூட பாபநாசத்தில இருக்காங்க...
என் வீட்டுக்காரர் தாலுகா ஆபீஸ்..ல வேலை செய்றாங்க!... "

" இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருக்கிறோம்./.
உன் பெயரைக் கேட்கவில்லையே!.. " - என்றேன்..

" கல்பனா.. " - என்றாள்..

அப்போது தான் -

நர்ஸின் உற்சாகக் குரல் கேட்டது - " பேஷண்ட் கண் முழிச்சிட்டார்!... "

இனி ஒரு குறையும் இல்லை என் ஆசானுக்கு...
இனி என் கையில் ஒரு குழந்தை ஆவார்!..

Steth ஐ கையில் எடுத்துக் கொண்டு விரைந்தோடினேன் -
என் ஆசானின் அன்பு முகம் பார்ப்பதற்கு!..
ஃஃஃ


58 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். மற்றும் தொடரும் அனைவருக்கும்

    ஆஹா நான் ஊகிச்சு வந்தது போலவே இன்று துரை அண்ணாவின் கதை...

    வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி உங்களால் இதெல்லாம் சாத்தியம் ஆகின்றது!...

      ஆனாலும் ஒரு விருப்பம்...

      சென்ற மாதத்தில் வெளியான
      களத்து மேட்டுக் காவலன் - 1,2,3
      வாசிக்கப்பட வேண்டும்...

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கீதா...     அதிரா கூட போனவாரம் கெஸ் பண்ணியிருந்தாங்களோ!

      நீக்கு
    3. ஏஞ்சல் அவர்கள் தான்
      இப்படியாகுமோ... - என்று யூகித்திருந்தார்கள்...

      நீக்கு
    4. துரை அண்ணா அதெல்லாம் ஒரு பரம ரகசியமாக்கும் ஹா ஹா ஹா ஹா ஒரு கூட்டல் கழித்தல்னு வைச்சுக்கங்க ஹிஹிஹி..

      களத்து மேட்டுக் காவலன் 3 பகுதியும் வாசித்துவிட்டேனே...கருத்தும் போட்டேன் அண்ணா. டன்ண்ட்ரா னு சாமி வீட்டுக்கு வந்து ஆற்றில் குதித்த பையனைக் காப்பாற்றியது அந்தப் பாட்டியின் நரம்பில்லா நாக்கு அதற்குக் கிடைத்த தண்டனை குழந்தைகள் இருவரையும் சேர்த்து வைத்தல் எல்லாம்

      கருத்து போட்டேன் ஆனால் போயிருக்குமா என்று சந்தேகம் வருது துரை அண்ணா. கதை செம. அப்படியே கிராமத்தைக் கண்ணில் கொண்டு வந்த கதை...எங்க மெயில் பெட்டிக்குத் தகவல் வரலையே...

      கீதா

      நீக்கு
    5. ஸ்ரீராம் அதிரா கேட்டது அவங்க இந்த ரெண்டு வாரம் பிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸி யாமே அப்ப கருத்து பதில் போட முடியாதேன்னு அவங்க கதை வந்தால்னு (அப்படியே அவங்க கதை வரப் போகுதுனு ரகசியத்தைச் சொல்லிட்டாங்க ஹா ஹா ஹா)

      கீதா

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு,வாழ்த்துகள், பிரார்த்தனைகள். துரையோட கதையா? படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  3. சென்ற வார சிறுகதையின் மற்றொரு கோணம் தான் -

    நான் கல்பனா....

    அன்புடன் பதிப்பித்து ஊக்கமளிக்கும்
    ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  4. சென்ற வாரத்தின் தொடர்ச்சி வேறோர் பார்வையில். இதுவும் அருமையாகவே இருக்கிறது. இரண்டையும் நன்றாக இணைத்துவிட்டார். நல்ல கதை சொல்லி. அதுவும் சுருக்கமாகச் சரளமான நடையில்.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் அனைவருக்கும் இனிமை நிறைந்ததாக இருக்கவும், மனபூர்வமாக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    இன்று துரை செல்வராஜ் சகோதரரின் கதையா? அதுவும் சென்றதின் தொடர்ச்சியாக...அருமை. முழுவதும் படித்து விட்டு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக....

      உங்களைத்தான் நினைத்தேன்..
      இன்னும் காணவில்லையே... என்று....

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      மன்னிக்க வேண்டும். உடன் அவசரமாக படித்து விட்டேன்.ஆனால் கருத்திட முடியாமல் கொஞ்சம் தாமதமாகி விட்டது. என்னை தேடியதற்கு என் பணிவான நன்றிகள். ஆனால் என்னால்தான் உடனே வந்து கருத்துக்களை தர இயலாமல் வேலைகள் நிறைய வந்து விட்டன.

      கதை அருமை. கல்பனாவின் கோணத்திலிருந்து சிந்தித்து எழுதுவதென்பது யாராலும் ஊகிக்க கூட இயலாத ஒன்று. . தங்களது மனதில் இந்த மாதிரி சிந்தனை எழுந்தது மிகுந்த பாராட்டுக்குரிய விஷயம்.

      பாடம் சொல்லித்தந்த (குருவை) ஆசானை அவருடைய நல்ல குணங்களை நினைவில் மறந்து போகாமல் வைத்திருக்கும் மாணவியும்,தன் புதல்வியாய் தன்னிடம் பயின்ற மாணவியை நினைத்துக் கொண்டே அவளின் நல்ல பண்புகளை தன்னுடைய குழந்தைகளுக்கு சொல்லி வளர்த்த பள்ளி ஆசிரியரும் மனதை நிறைக்கிறார்கள். இதிலும் முடிவு நன்றாக உள்ளது.கல்பனாவின் நல்ல மனதுக்கும் ஒரு குறையும் வராமல் நன்றாக இருக்கட்டும். நல்லதொரு கதையை எங்களுக்கு தந்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. துரை அண்ணா கதை அட்டகாசம்...

    வாசித்து முடித்ததும் என் கண்ணில் என்னை அறியாமல் நீர் துளிர்த்திருந்தது....மனதை நெகிழ்த்தி விட்டது அண்ணா...

    இன்னும் சொல்ல மீண்டும் வருகிறேன்...மிகவும் ரசித்தேன் என்பதை இப்போது பதிந்துவிட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று ஆசிரியரின் பார்வையில் இன்று மாணவியின் பார்வையில் கதை தொடர்கிறது என்று புரிந்து விட்டது தலைப்பைப் பார்த்ததும்

      கீதா

      நீக்கு
    2. அன்பு துரை செல்வராஜு, ஸ்ரீராம், கமலாமா, கீதா சாம்பசிவம், கீதா ரங்கன்
      அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

      கல்பனாவின் கோணத்தில் தான் எத்தனை உருக்கம். அவரும் ஆசிரியரை மறக்கவில்லை.
      ஆசானும் ,தாயாக மாறிய அன்பு மாணவியும் இப்படி
      இணைய வேண்டும் என்று நினைத்த இறைவன் கருணை, இனி நாகன் சாரையும்

      நன்றாக வாழ வைப்பார். தெள்ளிய நடையில் அன்பு தோய்ந்த கதை.
      இந்த அன்பு எங்கும் நிறையட்டும்.

      நீக்கு
    3. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    மிகவும் இனிமையான கதை.... பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  8. இது ஒரு தளிக் கதையாக எழுதாமல் கடந்த வார கதையை இன்னும் கொஞ்சம் நீட்டினால் எனன என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். இதுவும் ஒரு நல்ல யுக்திதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜோசப் சார் ..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. // நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்!... " - என்றபடி அந்தப் பையைக்
    கொடுத்தார்.. அப்போ சார் கண்ணெல்லாம் கலங்கியிருந்தது..//

    குருவின் வார்த்தை பலித்து விட்டது.
    அன்றும் பாரதியார் பாட்டு பாடி தன்னம்பிக்கையை கொடுத்தார் கல்பனா, இன்றும் மகனின் தொந்திரவால் மன அழுத்தம் ஏற்பட்டவருக்கு ஆறுதல் அளிக்க மனபலம் கொடுக்க வந்து விட்டார் கல்பனா.
    அருமையான கதை. வாழ்த்துக்கள்.

    முன்பு எழுதிய கதை சுட்டி கொடுக்கலாம். படிக்காதவர்கள் படிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளையும் பயிரையும் வளரும் மாணாக்கனையும் நல்ல விவசாயியும் நல்ல ஆசிரியரும் அறிவார்கள்...

      அவர்களே இக்கதையில் நாயகர்கள்...

      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  11. கதை ரொம்ப நல்லா வந்திருக்கு. படிப்பித்துக்கொடுத்த வாத்தியாருக்கு உதவும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்? கிடைக்கும் வாய்ப்பை எத்தனை பேர் சரியாப் பயன்படுத்திக்குவாங்க?

    மனதை நெகிழவைத்த கதை.

    78கள்ல சிமெண்ட் பற்றாக்குறை தலைவிரித்து ஆடியது. சிமெண்ட் விற்பனையே ரொம்பவும் கட்டுப்படுத்தப்பட்டு, 1 மூட்டை சிமெண்ட் வாங்குவதே இயலாததாகி இருந்த சமயம். எதேச்சையாக என் பெரியப்பா கலெக்டர் ஆபீஸுக்குச் சென்றிருந்தபோது, கலெக்டர், இவரிடம் படித்தவர், இவரைப் பார்த்து நலம் விசாரிக்க, பெரியப்பா, சிமெண்ட் மூட்டை விஷயமா இங்க வந்தேன் என்று சொன்னதும், மனு எதுவும் வேண்டாம் என்று சொல்லி பத்து சிமெண்ட் மூட்டைகளுக்கு அனுமதிக் கடிதம் கொடுத்தாராம். (அப்போ வீடு ரிப்பேர் செய்துகொண்டிருந்தார்). பெரியப்பா, தனக்கு 4 மூட்டைகள் மட்டும் போதும் என்று அதனை மட்டும் வாங்கிக்கொண்டாராம். ஆசிரியர் நினைவுகளே தனி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்களது வருகையுடன் பெரியப்பா அவர்களையும் நினைவு கூர்ந்து கருத்துரை செய்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. கதை மனதை பிசைந்து விட்டது ஜி.
    கல்பனா போன்ற மாணவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      கல்பனா போன்ற மாணவியராலேயே மனிதம் வளர்கின்றது...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  13. என் நெருங்கிய நண்பருக்கு இதே மாதிரியான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.

    புதுவை ஜிப்மரில் பள்ளிப் பருவத்தில் தனக்கு மிகவும் பிடித்த தமிழாசிரியர் பேஷண்ட்டாய்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி ஐயா...

      கருத்துரையில் முன் நடந்த சம்பவத்தைக் குறித்தமை சிறப்பு...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. ஆசிரிய மாணவ உறவு என்பதே தனிதான். அதுவும் இப்படியான ஆசிரியர் மாணவி என்றால்...அதாவது மதிப்பும் மரியாதையும் அன்பும் கொண்ட ஆசிரிய மாணவ உறவு...

    இப்படி எல்லாருக்கும் அமையுமா என்றால் இல்லை எனலாம் ஒரு சிலருக்கே அமையும்.

    அருமையா சொல்லியிருக்கீங்க அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா...

      உண்மை தான்... ஆயிரத்தில் ஒருவருக்கே இப்படி அமையக் கூடும்...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. அவரைத் தூக்கி நிறுத்திய பாரதியார் பாடல்தான் எதுவோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      பாதகம் செய்பவரைக் கண்டால்...
      என்ற அந்தப் பாட்டைச் சென்ற வாரம் சொல்லியிருக்கிறேனே....

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  16. இப்போதான் கதை படிக்க முடிஞ்சது...

    மிக அழகிய கதை, முதல் பகுதி இன்னும் படிக்கவில்லை, ஆனாலும் இது முடிவுப்பகுதி மிக விறுவிறுப்பாக இருக்கிறது.

    போறிங் இல்லாமல் ரசிச்சுப் படிச்சேன். நல்ல முடிவும்கூட.. என் இனிய வாழ்த்துக்கள் துரை அண்ணன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அதிரா..

      தங்களது தளத்துக்கு நான் வருவதில்லை என்ற குறை இருக்கலாம்..

      இண்ட்லி. காம் எனும் திரை வந்து மறைக்கிறது.. என்ன செய்ய?...

      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. வழமை போல நீரில் இழுத்து செல்லும் ஓடம் போல வேக நடை கதை ...


    நானும் முதல் பாகம் படிக்கவில்லை ..இனி தான் ...

    அதனால் தானோ கதை முடிவுற்றது போல தோன்ற வில்லை ...அவரின் வருத்தம் என்னவாக இருக்கும் என்னும் எண்ணத்தில் யோசனைகளை செல்லுகின்றன ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அனுபிரேம்..
      சென்ற வாரப் பதிப்பையும் படியுங்கள்...

      தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  18. ஆஹா போன வாரம் கதையின் இன்னொரு பார்வை இது கல்பனாவின் பார்வை .மிக அருமையாக இருக்கு 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏஞ்சல்...

      கதை ஒரு பகுதிதான் என்று நினைத்துக் கொண்டு இப்படி ஆகுமோ என்று யூகம் செய்திருந்தீர்களே...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  19. கதை மிக மிக அழகான நடையில் செல்கிறது. சென்றவாரத்தின் தொடர்ச்சி என்றும் தெரிந்தது. சென்றவாரத்தில் ஆசிரியர் பேசினார் இந்த வாரம் மாணவி கல்பனா பேசுகிறாள். முடிவும் மனதை நெகிழச் செய்துவிட்டது.

    இரு வாரக் கதைகளையும் தொடராகவும் பார்க்கலாம், தனி தனிக் கதைகளாகவும் சொல்லலாம் என்ற சிறப்பம்சம். அருமை சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      //இருவாரக் கதைகளையும் தொடராகவும்
      தனித்தனியாகவும் பார்க்கலாம்....//

      மனம் நிறைந்த கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. கதை மிக மிக அழகான நடையில் செல்கிறது. சென்றவாரத்தின் தொடர்ச்சி என்றும் தெரிந்தது. சென்றவாரத்தில் ஆசிரியர் பேசினார் இந்த வாரம் மாணவி கல்பனா பேசுகிறாள். முடிவும் மனதை நெகிழச் செய்துவிட்டது.

    இரு வாரக் கதைகளையும் தொடராகவும் பார்க்கலாம், தனி தனிக் கதைகளாகவும் சொல்லலாம் என்ற சிறப்பம்சம். அருமை சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. கடந்த வாரத்திலும் இந்த வாரத்திலும் எனது கதையை வாசித்து கருத்துரை வழங்கி உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி... மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  22. அன்புள்ளங்கள் நீண்ட இடைவெளியின் பின் கண்டுகொண்டன.இனிய முடிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!