செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை :  சந்திப்போம், பிரிவோம்;மீண்டும் சந்திப்போம் 3/3 - ஜீவி


சந்திப்போம், பிரிவோம்;மீண்டும் சந்திப்போம் 
ஜீவி 
-------------------------------------------------------------------

3
கோயில் உண்டியலில் போடுவதற்காக சட்டைப்பையில் தனியே எடுத்து வைத்திருந்த பணம் நூறு  ரூபாயைக் காணோம்.

என் திகைப்பைப் பார்த்து, "என்னப்பா?" என்றார் பெரியவர்.

"ஐயா, கோயில் உண்டியலில் போடுவதற்காக சட்டைப்பையில் பணம் வைத்திருந்தேன்.  அதைக் காணோம்.." என்று பரிதாபமாகச் சொன்னேன்.

"எவ்வளவு?.."

"நூறு ருபா."

"இந்த நோட்டா பாரு.."  பெரியவர் ஒரு நூறு ரூபாய்த் தாளை என்னிடம் நீட்டினார்.

"ஐயா,  இது நூறு ரூபா நோட்டு தான்.  ஆனால் தொலைந்த என்  ரூபாய் தான் என்று எப்படிய்யா, சொல்வது?"

"இந்தா, உன் பணம்.." என்று  பெரியவர் என்னிடம்  ரூபாய் நோட்டை நீட்டினார்.

நான் தயங்கினேன்.

"உன்னது  தான்.  அந்தத் தூணுக்கருகில் நாம் உட்கார்ந்து அங்கு பேசிக்கொண்டிருந்தோம், இல்லையா? அப்பொழுது சட்டைப் பையிலிருந்து வீபூதிப் பொட்டலத்தை எடுத்தாய் அல்லவா?.. அப்போ நோட்டும் உன் கையோடு வந்துத் தவறித் தரையில் விழுந்தது.  நான் தான் எடுத்து வைத்திருந்தேன்..  இந்தா..."

என்னால் நம்ப முடியவில்லை.  'அங்குத் தவறித் தரையில் விழுந்திருந்தால்,  அங்கேயே எடுத்துக் கொடுத்திருப்பாரே!..  உண்டியலில் போட எடுத்து வந்திருந்ததைத் தொலைத்து விட்டுத்  தவிக்கும் என் தவிப்பைக் காணச் சகியாமல்,  பெரியவர்  தனது  பணத்தைத் தருகிறாரா?.."

"ஐயா,  இது  உங்களது இல்லை தானே?.. என்னது தானே?"

பெரியவர் கடகடவென்று கோயில் அதிரச்  சிரித்தார். அவரின் அந்தச் சிரிப்பு,  அந்த இடத்திற்குச் சம்பந்தமில்லாதது போலிருந்தது.

"என்னது--உன்னது  என்று ஏன் பிரித்துப்  பேசுகிறாய்?.. நீயும்  நானும் வேறா?"

"ஐயா..."

"உன்னை நீ  என்று அழைத்துப் பேசுகிறேனே?.. அந்த அளவுக்கு உன்னை எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது..  உனது வெகுளியான மனசு நோகக்கூடாது.  இந்தாப் பிடி.."

".........................."

"பூசலாருக்குச் சொன்னது தான்.  கொஞ்ச நேரம் நாம் பேசிக் கொண்டிருந்தாலும்,  பூசலாரும் நீயும் எனக்கு ஒன்று தான்.  திருநின்றவூர்க்காரன் என்று வேறு சொல்றே..  இந்தாப் பிடி.."

எனக்குப் பதில் பேச நாவெழவில்லை.  விழி முனையில் நீர்  தளும்ப,  பார்வை கலங்கிற்று.

"என்ன யோசனை?.. வாங்கிக்கோ..  வாங்கி உன் கையாலே உண்டியலில் போடு.   யாருக்குப் போகணுமோ,  அவங்களுக்குப் போய்ச் சேரட்டும்.." என்றார்.

நான் திகைத்தேன்.  'யாருக்குப் போகணுமோவா?.. நியாயப்படி அந்த அதிகாலைப் போதில் எங்கள் மனத்தில் சந்தோஷ அலைகளை  விதைத்த  அந்த ஏழை குடுகுடுப்பைக்காரனுக்கு அல்லவா  இந்தப் பணம் போய்ச் சேர வேண்டும்?..  நீ  போடு;   அவனுக்கேப் போய்ச் சேரும்'  என்று குறிப்பால் உணர்த்துகிறாரா,  இந்தப் பெரியவர்?..

அவர் சொல்வதைச் செய்'  என்று  ஆழ்மனம் ஓங்காரமிட்டது.

இதற்கு மேல்  என்னால் அவர் பேச்சைத்  தட்ட முடியவில்லை.  அவர் கொடுத்த அந்த நூறு  ரூபாய்த் தாளை நடுங்கும் கரங்களால் வாங்கி, "ஈஸ்வரா..." என்று நெஞ்சடைக்க உச்சரித்து உண்டியலில் போட்டேன்.
பளீரென்று வெளுத்த வானம் போல, நெஞ்சமெல்லாம் நிர்மலமாயிற்று.




பெரியவர் என் தோள் பிடித்து அணைத்துக் கொண்டார்.  என் உடலில் மின்சாரம் மீட்டி விட்டுப் போனது.  "இப்போ திருப்தி.  யாருக்குன்னு  கேக்காதே.. ஊர் போய்ச் சேர்..." என்று  அடிக்குரலில் சொன்னவர்,  சந்நிதி காட்டி,  "இந்தக் கச்சி மூதூர் கைலாசநாதன்,  இச்சகத்து நாயகன்,  உன் இடும்பை தீர்ப்பான்..  பத்திரமாகப் போய் வா.." என்று அவர் சொல்கையிலேயே எனக்குப் பொறி தட்டிய மாதிரி இருந்தது.   'அன்று அந்த விடியலில் அந்தக் குடுகுடுப்பைக்காரன் 'இடும்பை தீரும்'  என்று குறி சொல்வது  போல் சொன்ன அந்த  அசலான   வார்த்தைகளால்லவா,  இவை?..

அந்தப் பெரியவரை மலங்கப் பார்த்தபடி நான் நிற்கையிலேயே,  "அதோ....  இன்னொருவர் என்னைத் தேடி வந்து விட்டார்.   என்னைப் பார்த்தால் தான் அவருக்குத் திருப்தி..." என்று கும்பலாகக் கோயிலுள் நுழைந்த  கூட்டத்துள்  கலந்தார். 



இப்பொழுது  தானே சந்நிதி சென்று  வந்தோம்?..  இந்தப்  பெரியவர் சந்நிதி நோக்கி ஏன் அவசரமாக  விரைகிறார்?' என்று திகைத்து கொஞ்ச நேரம் நின்றேன்.  பிறகு ஊருக்குச் செல்ல  வேண்டுமே என்கிற எண்ணத்தில் கோயிலின்   வெளிப்புறம் வரத்  திரும்பினேன்.

கிட்டத்தட்ட கைலாசநாதர் கோயிலின் வெளிப் புல்வெளி தாண்டி  ரோடு பக்கம் வந்து விட்டேன்.




"ஐயா!..." என்று கெஞ்சுகிற மாதிரி அழைத்த குரல் வேகமாக நடை போட்ட என்  கால்களைப் பின்னுக்கு இழுத்தது.  திரும்பிப் பார்த்தேன்.   முப்பது வயது 
மதிக்கத்தக்க ஒரு பெண்,  மிக ஏழ்மைக் கோலத்துடன். கையில் கைக்குழந்தை.

"ஐயா..  குழந்தை பாலுக்குத் தவிக்குதய்யா..  கையில் காசு இல்லை..  தருமம் ஐயா!.."  என்று திக்கித் திணறி அந்தப் பெண் யாசிக்கையிலேயே,  இப்படி யாரிடமும் கேட்டு அந்தப் பெண்ணுக்குப் பழக்கமில்லை என்பது  தெளிவாகத் தெரிந்தது. 

'ஏதாவது கொடு..  தாமதிக்காதே.. கொடு..'  என்று உள்மனம் அவசரமாக ஆணையிட,  பை  துழாவினேன்..   சட்டைப் பையில் சில்லரைக் காசு இல்லை...  வலது பக்க பேண்ட் பாக்கெட்டில் கை விட,  நான் வெளியூருக்கு எங்கு  சென்றாலும் என்னோடு  எடுத்து வரும் என் அலுவலக அடையாள அட்டை கையோடு வந்தது.

ஏதோ அவசர அவசரமாக நினைவில் பொறிதட்டிய வேகத்தில் பிளாஸ்டிக் உறையில் இருந்த அந்த அட்டையைப்  பிரித்துப் பார்க்கையில் துணுக்குற்றேன்.  வழிச் செலவுக்குப் போக, கோயில் உண்டியலில் போடத் தனியாகப் பத்திரப்படுத்தி  எடுத்து வைத்திருந்த  நூறு ரூபாய் நோட்டு,  அப்படியே பத்திரமாக இருந்தது.  'அப்போ, என் சட்டைப் பையிலிருந்து வீபூதிப் பொட்டலம் எடுக்கையில்  விழுந்ததாகக் கூறி பெரியவர் கொடுத்த அந்த நூறு ரூபாய்?...   அந்தப் பெரியவரின் காசா?..  வேண்டிக் கொண்டு உண்டியலில் போட எடுத்து வந்தக் காசை நான் தவற விட்டு விட்டதைக் காணப் பொறுக்காமல், 'எவ்வளவு?'  என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தப் பெரியவர் கொடுத்த காசா அது?.. அடப்பாவமே!..  எவ்வளவு வயசுப் பெரியவர்?..  எதற்கு வைத்திருந்தாரோ?.. அவரிடம் வாங்கி...'

"ஐயா..." என்று இறைஞ்சி அந்தப் பெண் பரிதாபமாக என்னைப்  பார்த்து மீண்டும் அழைக்கையில்,  'உண்டியலில் போடத் தவறிய  எனது இந்தப்  பணத்தை இந்தப் பெண்ணுக்குக் கொடுத்து விட வேண்டும்' என்ற நினைப்பு முன்னின்று  மனசில் துளிர்க்கையில், அந்தப் பெரியவரின் குரல் நினைவில் ஏதோ அசரீரி மாதிரி  ஒலித்தது.

'என்னது... உன்னது'  என்று ஏன் பிரித்துப் பேசுகிறாய்?.. நீயும் நானும் வேறா?..'

ஏதோ குருடனுக்குப் பார்வை கிடைத்த மாதிரி மனசில் ஒரு புது வெளிச்சம் பளீரிட்டது..  'ஆமாம்,  வேறில்லைதான்..  அந்தப் பெரியவர்,  நான், அந்த ஏழை குடுகுடுப்பைக்காரன்,  இந்தப் பெண், இந்தப் பெண்ணின் கையிலிருக்கும் அந்த சிறு ஜீவன்,  என் அம்மா,  உஷா, உஷாவின் கருவில் உருவாகியிருக்கும்  குழந்தை...

ஓ!  யாருமே, வேறில்லை தான்!..  ஒவ்வொரு கூறும் ஒவ்வொரு விதமாய்ப் பதிந்து,  சேர்ந்து, பிரிந்து,  மாயையாய் வெவ்வேறு வடிவெடுத்த மாதிரி ரூபம்  கொண்டு.......

இத்தனை சிந்தனைக்கும் நடுவே,  ஷண நேரத்தில், அனிச்சையாய் அந்தப் பெண்ணிடம் அந்த நூறு ரூபாயைக் கொடுத்திருக்கிறேன்...

"ஐயா..  இவ்வளவு காசு வேண்டாம்..  பாலுக்கு அஞ்சு ரூபா போதும்.."

"இல்லை..  வைச்சிக்க..   இன்னிக்கு,  நாளைக்கு, அதுக்கு  மறு நாளைக்கு..   குழந்தைக்குப்  பால் வாங்கித் தா... வைச்சிக்க.."

"வேண்டாம், ஐயா!..  இவ்வளவு காசு வேணாம்.  எங்கிட்டே இருந்தா,  யாருகிட்டேயிருந்தாவது திருடிட்டதா   நெனைப்பாங்க..  எனக்கு அஞ்சு..."

வேறு யாரோ  என்னுள் நுழைந்து கொண்டு என் குரலில் பேசுவது போன்ற உணர்வில் என் குரல் எனக்கே குழறிற்று..  'இல்ல..   வாங்கிக்க..  இது உன் காசு தான்.. என் மனசு சொல்றது..  இது உனக்குச் சேர வேண்டியது தான்.. மறுக்காம வாங்கிக்க.. .." என்று ஏதோ  ஒரு சக்தி என்னை ஆட்டுவிக்கிற மாதிரி அவசர அவசரமாக்க்  கூறியவன், அந்தப் பெண் திருப்பித் தர முயன்ற பணத்தை  திரும்பி வாங்கிக் கொள்ள நேரிட்டு விடுமோ என்கிற பயத்தில் வேகவேகமாய்  பஸ் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  

வானம்,  கருமேகம் சூழ்ந்து  எப்பொழுது பொத்துக் கொள்ளுமோ என்று மிரட்டியது.

கச்சபேஸ்வரர்  கோயில் அருகில்,  ஒரு சைக்கிள் ரிக்ஷாகாரர்  வற்புறுத்தி தன் வண்டியில் என்னை  ஏற்றிக் கொண்டார்.   பஸ் நிலையம் வந்ததும் என்னை  இறக்கி விட்டு,  காசு கொடுக்க முற்பட்ட என்னிடமிருந்து வாங்கிக் கொள்ள மறுத்தார்.

'இந்த வழியாகத் தான் எனக்குப் போகணும்..   ஏதோ தோணித்து..  உங்களை ஏத்திண்டேன்..  அதுக்குப் போய் காசா?"  என்று மறுத்தவரைப் பார்க்க எனக்கு  என்ன சொல்வதென்றே தெரியவில்லை..  அந்த ரிக்ஷாக்காரரின் நெற்றியில் பட்டை பட்டையாக  திருநீறு கீற்று...  குழந்தைச் சிரிப்புடன்,  சின்ன வயசுப் பையன்  ஒருவன் ஞானவான் மாதிரி ரிக்ஷாவுடன் பிணைத்திருந்த சைக்கிள் சீட்டில் உட்கார்ந்திருக்கிற உணர்வு எனக்கு..  

என் வசமில்லாமல்,  மாற்றி மாற்றி நடக்கும்  நாடகக் காட்சியில் பங்கேற்கிற உணர்வில்,  அடுத்த காட்சி என்ன என்று தெரியாத மயக்கத்தில்  பக்கத்தில் வந்து  நின்ற பஸ்ஸில், 'வாங்க, சார்.." என்று கண்டக்டர் அழைக்க ஏறிக் கொண்டேன்.

தோ  ஊர் வந்து  விட்டது.    திருநின்றவூர் தான்.




கோயிலைத் தாண்டி தான் வீட்டுக்குப் போக வேண்டும்.  இருதயாலீசுவரர் கோயிலைத் தாண்டும் பொழுது,  இறைவனையும் அன்னை மரகதாம்பாளையும்  மனமுருக நெஞ்சில் நிறுத்தி வணங்கிப் பின் வீடிருக்கும் தெருவிற்குள்  நுழைந்தேன்.

வீட்டு வாசல்  திண்ணையில் அம்மா கண்ணாடி தரித்து ஏதோ புத்தகத்தை வழக்கம் போலக் கொஞ்சம் இரைந்த குரலில் படித்துக் கொண்டிருந்தார்கள்..  பாதியில் நிறுத்த வேண்டாம்;  படித்து முடிக்கட்டும் என்று சற்று ஒதுங்கிக் காத்திருந்தேன்..




"அத்வைதம்  என்றால்  இரண்டு இல்லை என்று அர்த்தம்.
ப்ரம்மம் என்கிற  சத்திய வஸ்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை..     அந்த ஒன்றே தான் மாயா சக்தியினால் இத்தனை ஜீவர்கள் மாதிரியும் தோன்றுகிறது.  இத்தனை ஜீவராசிகள் இருந்தாலும் அவற்றுள்  உள்ளே இருக்கிற  ஸ்வாமி  ஒருத்தர் தான்.   ஜீவாத்மா--பரமாத்மா  என்று விவகார தசையில் பிரித்துச் சொன்னாலும் வாஸ்தவத்தில் உள்ளது ஒரே ஆத்மா தான்...  நாம் மாயையைத் தாண்டி இந்த ஞானத்தை அனுபவத்தில் அடைந்து விட்டால் ஒரு குறையுமில்லாத நிறைந்த நிறைவான  சத்யமாகவே   ஆகி விடுவோம்...

சட்டென்று  வாசிப்பதை நிறுத்தி  தலை நிமிர்ந்த அம்மாவிடம்,  "அம்மா!  உனக்குப் பூசலாரைத் தெரியுமா?..  இந்த ஊர்க்காரராமே?..."  என்று மனசில் நிலை கொண்டிருந்த கேள்வியைக்  கேட்கும் என்னை விநோதமாகப் பார்த்தார்  அம்மா..  'பூசலாரைத் தெரிந்து கொள்ளாமலா  இந்த ஊரில் இருக்கே?' என்று அவர் ஏளனமாக என்னை நோக்குவது போலிருந்தது அவரது அந்தப் பார்வை.

உங்களுக்காவது  பூசலாரைத் தெரியுமா?...

41 கருத்துகள்:

  1. மொத்தமாக இனிதான் படிக்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாகம் படித்து, இரண்டாம் பாகம் சொடுக்கினால் இணைப்பு தவறு வேறு கப்பிரோடு வழியாக சென்று படித்து விட்டு இறுதி பாகமும் படித்து முடித்தேன்.

      கதை அருமை நம்பினால் நாராயணன்.

      நீக்கு
    2. காலை 6 மணிக்கு முதல் பின்னூட்டமே 'இனி தான் படிக்கப் போகிற' பின்னூட்டமா என்று நினைத்தேன். எட்டே காலுக்குள் படித்து முடித்து கருத்தும் சொல்லி விட்டதற்கு நன்றி.

      தேவகோட்டையாரே! கப்பிரோடு வழியாக?.. ஹஹ்ஹஹா..

      கரடு முரடான ரோடு கூட காலுக்கு (மனசுக்கு) மெத்தையாகத் தானே இருந்திருக்கும்? ம்?..

      நம்பினால்.. இந்த ஆல் ஒரு விவகாரமான மூன்றாம் வேற்றுமை உருபு. மதில் மேல் பூனை.

      நம்பினோம், நாராயணனை என்று மனம் கனிந்து விட்டால்
      நடப்பதெல்லாம் நாராயணின் செயல் என்று வாழ்க்கைப் பாதை வெகு சுலபமாகக் கடந்து விடலாம். என்ன சொல்கிறீர்கள், ஜீ?..




      ஆல், ஓடு, உடன் --

      நீக்கு
  2. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறள் உள்ளத்தை உணர வைத்தது, துரை சார்.

      நல்மொடு வாழ்க!

      நீக்கு
  3. மிக அருமையான கதை. சாதாரணமாக குடும்பத்துப் பிரச்சனைகளில் உழன்று அதனையே எழுதியிருக்கலாம். ஆனால் முதல் பகுதியினின்று விலகி கதையை வேறு தளத்துக்குக் கொண்டு சென்ற விதம் மிகவும் கவர்ந்தது. பாராட்டுகள் ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, நெல்லை..

      குடும்பப் பிரச்னைகளில் உழன்று உழன்று தான் அந்த வேறு தளமே லபிக்கும் போலிருக்கு, நெல்லை. இந்த வழியில் நுழைந்து தான் அந்த இடத்த்திற்குப் போக வேண்டும் போல!

      உழலலே அந்த சித்திக்குத் தானோ என்று ஆச்சரியமாகவும் இருக்கு. கசடு கலந்த பொன்னை தீயிலிட்டு பத்தரை மாற்று தங்கம் உருக்கொள்வது போல!

      நீக்கு
    2. "'ஆமாம், வேறில்லைதான்.. அந்தப் பெரியவர், நான், அந்த ஏழை குடுகுடுப்பைக்காரன், இந்தப் பெண், இந்தப் பெண்ணின் கையிலிருக்கும் அந்த சிறு ஜீவன், என் அம்மா, உஷா, உஷாவின் கருவில் உருவாகியிருக்கும் குழந்தை...

      ஓ! யாருமே, வேறில்லை தான்!.. "

      இந்த சிந்தனை தான் டார்ச் லைட் அடித்து வழி காட்டியது, நெல்லை..

      சிந்தனை, கதை ரூபம் கொள்ள என் எழுத்தாசான் ஜே.கே. கூடவே இருந்து கைப்பிடித்து வழி காட்டினார்!

      நீக்கு
  4. அனைவரும் பரமாத்வாவின் ஒரே ஸ்வரூபங்கள் என்பது, கொஞ்சம் சிந்திக்க வேண்டிய கருத்து. நான் விசிட்டாத்வைத்த்தை நம்புகிறவன். அது வீடுபேற்றுக்குண்டான கருத,து.

    அதே சமயம் அந்தராத்மாவாக எல்லோரிலும் அவன் உள்ளுறைந்து நம்மை வழிநடத்துகிறான் என்பது என் எண்ணம்.

    கதை, ஒவ்வொரு பகுதியாக உயர்ந்த தளத்தை நோக்கிச் சென்றிருக்கிறது. நல்ல கதையைப் படித்த திருப்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்தாய்ப்பாக சொன்ன வரி என்னிலும் 'இன்னும் இன்னும்' என்ற திருப்தியற்ற வேட்கையை விளைவித்தது. நன்றி, நெல்லை.

      நீக்கு
  5. என்னைப் புரிந்து கொள்ளாமலா
    இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறய்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்து கொள்வதற்குத் தானே
      வாழ்க்கை அமைப்பை நீயே
      சமைத்துத் தந்திருக்கிறாயு!

      நீக்கு
  6. கதை முழுவதும் நினைவில் வந்து விட்டது. அப்போது என்ன கருத்துச் சொல்லி இருந்திருப்பேன்? நினைவில் இல்லை. சாதாரணக் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சந்தோஷத்தில் ஆரம்பித்துக் கடைசியில் எல்லையற்ற சச்சிதானந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கியாச்சு. இந்த சந்தோஷம் தனிதான். அதோடு சேர்த்துப் பேச முடியாது, இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கள் நிலையானதில்லை. நம் மன வளர்ச்சிக்கேற்ப
      காலத்திற்கு காலம் மாறுபடும். இப்பொழுது சொல்லியிருக்கிற 'சச்சிதானந்த பெருவெள்ளத்தில் மூழ்கியாச்சு' என்பதே சிறப்பாக இருக்கிறது. நன்றி, கீதாம்மா.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள்,பிரார்த்தனைகள். கதையைப் படித்ததும் அதைக் குறித்துத் தான் சொல்லத் தோன்றியது. தாமதமான வணக்கம்.

    பதிலளிநீக்கு
  8. உன் இடும்பை தீர்ப்பான்.. பத்திரமாகப் போய் வா.."
    இதைவிட வேறு என்ன வேண்டும்!
    அவரே வழித்துணையாக வந்தார்.அவர் நடத்தி சென்றார் (ஒரு சைக்கிள் ரிக்ஷாகாரர் வற்புறுத்தி தன் வண்டியில் என்னை ஏற்றிக் கொண்டார்.)
    யாருக்கு போய் சேர வேண்டுமோ அவருக்கு போக வைத்தார்.

    // இருதயாலீசுவரர் கோயிலைத் தாண்டும் பொழுது, இறைவனையும் அன்னை மரகதாம்பாளையும் மனமுருக நெஞ்சில் நிறுத்தி வணங்கிப் பின் வீடிருக்கும் தெருவிற்குள் நுழைந்தேன்.//

    இருதயத்தில் என்றும் இருப்பார் இனி.


    பழைய கதையில் படங்கள் கிடையாது இதில் படங்களுடன் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிம்மா.. அந்த சைக்கிள் ரிக்ஷாகாரரும் மாயவரத்துக்காரர் தான். ராமமூர்த்தி என்று பெயர். பட்டை பட்டையாக வீபூதி தரித்து குழந்தைத் தோற்றமாய் இருப்பார். ஒருநாள் காஞ்சீபுரம் மேட்டுத்தெரு பக்கம் எதிரில் ரிக்ஷாவை மிதித்துக் கொண்டு வந்த இவரைப் பார்த்தவுடன் மனம் நெகிழ்ந்து என் வீட்டு அவுட் ஹவுசில் அவரைக் குடியேற்றினேன். அவ்ராகவே இந்தக் கதையிலும் நுழைந்து கொண்டு விட்டார்.

      'இதயத்தில் இனி என்றும் இருப்பார்' என்ற வரி போதும். நன்றி சொல்ல வேண்டும் நல்லுள்ளங்களுக்கு.

      நீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
    இந்த நாள் இனிய நாளாகட்டும்.
    ஒரு சிசு ,கருவிலிருந்து கொண்டு தந்தையை இறைவழி நடத்தி விட்டது.
    பூசலார் மனதில் செய்த கும்பாபிஷேகம் போல்
    இறை இந்தமகனின் மனத்தில் மகிழ்ச்சியை நிறுவி விட்டார்.
    ஆனந்தமான கதை.
    ஒரு நற்செயல் பல நற்செயல்களை உருவாக்குகிறது,.
    அபூர்வமாகக் கனியும் மனித மனம் அடையும்
    மகிழ்ச்சிகளுக்கு எல்லையே இல்லை.
    அம்மா ,மகனுக்குச் சொல்லி இருந்தால்
    அவன் அவளைக் கேட்டிருக்கமாட்டான்.
    ஊர் சரித்திரத்தை அவளல்லவா சொல்ல வேண்டும்.
    இருதயாலீஸ்வரர் கோவில்,அங்கே தனிச் சன்னிதி கொண்டருளும் சீதாமாதா, கர்ப்பவதியாக இருக்கும் கோலம்.லவ்குசா சன்னிதி எல்லாம் கண்ணில் வந்து போயீற்று.
    மிக நன்றி ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரு சிசு ,கருவிலிருந்து கொண்டு தந்தையை இறைவழி நடத்தி விட்டது...//

      ஆஹா.. புதிய கோணம் இது. இது தான் கருவிலேயே திரு என்பது போலும்.

      //ஆனந்தமான கதை! ஒரு நற்செயல்... //

      ஆமாமாம். ஒரு நற்செயல் விளைநிலத்தில் ஊன்றும் கதிர் தான். ஓராயிரமாய் பல்கிப் பெருகும்! ஆனந்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். உண்மை! உண்மை!

      //அம்மா ,மகனுக்குச் சொல்லி இருந்தால்
      அவன் அவளைக் கேட்டிருக்கமாட்டான்.. //

      மதுரை அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருவிளையாடல் புராணம் கதையையெல்லாம் சொல்லி வைப்பதில்லை என்ற பெரிய குறை எனக்குண்டு. அது இங்கு வெளிப்பட்டு கதை வளர உதவியிருக்கிறது போலும்.

      சீதாமாதா பற்றி நெல்லை போன பகுதியிலேயே கேட்டிருந்தார். இந்தத் தகவல் நான் அறிந்திராதது. இந்தப் பதிவில் வந்து நீங்களே அதைச் சொல்ல வேண்டும் என்று இருந்திருக்கிறது, பாருங்கள்!
      மனம் நிறைந்த தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, வல்லிம்மா.

      நீக்கு
  10. // ஏதோ குருடனுக்குப் பார்வை கிடைத்த மாதிரி மனசில் ஒரு புது வெளிச்சம் பளீரிட்டது.. 'ஆமாம், வேறில்லைதான்.. அந்தப் பெரியவர், நான், அந்த ஏழை குடுகுடுப்பைக்காரன், இந்தப் பெண், இந்தப் பெண்ணின் கையிலிருக்கும் அந்த சிறு ஜீவன், என் அம்மா, உஷா, உஷாவின் கருவில் உருவாகியிருக்கும் குழந்தை...

    ஓ! யாருமே, வேறில்லை தான்!.. ஒவ்வொரு கூறும் ஒவ்வொரு விதமாய்ப் பதிந்து, சேர்ந்து, பிரிந்து, மாயையாய் வெவ்வேறு வடிவெடுத்த மாதிரி ரூபம் கொண்டு.......
    // Class. That is the essence of the complete story. Hats off.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரிசையாகப் பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளித்து வரும் பொழுது சரியான நேரத்தில் இணைய இணைப்பில் தகராறு. இப்பொழுது தான் மீண்டது.
      கதையின் உயிர்நிலையை மிகச் சரியாக கணித்திருக்கிறீர்கள், கெளதமன்! இந்தப் பொறி தான் இந்தக் கதையாய் பற்றியிருக்கிறது.. ஆழ்ந்த வாசிப்பு ரசனைக்கு நன்றி, சார்!

      நீக்கு
  11. சிறப்பான கதை.

    அனைவருமே ஒன்று தான் எனச் சொல்லும் சிறப்பான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரிலும் உயிராய் அவன் வாழ்வது உண்மை தான்!

      நன்றி, வெங்கட்!

      நீக்கு
  12. ஒரு சிறிய கதையில். பெரிய விஷயத்தை அழகாக சொல்ல உங்கள் அனுபவம் உதவியிருக்கிறது. மிகவும் சிறப்பு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, பா.வெ!

      அறிவில் குடிபுகுந்து ஆட்கொண்ட அத்வைத தத்துவம், கதையிலும் எழுத எழுத தானும் இயல்பாக வந்து உட்கார்ந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருக்கிறது. தங்கள் வாசிப்புக்கு நன்றி...

      நீக்கு
  13. பலரும் விரும்பும் தடத்தில் கதை கற்பனையிலும் அதே மாதிரிதானா கானலில் திருப்தி அடையும்
    உங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா?' என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா, ஜிஎம்பீ சார்?..

      இறைவனின் மோகத்தில் சிக்குண்டவர்கள் அனந்தம். பக்தனின் ஆட்கொள்ளலுக்கு வளைந்து கொடுத்து ஆட்பட்டவனும் அவன் தான். தனக்குவமை இல்லாதானாய் இருப்பினும் அந்த ஒளிவட்டம் கூட அவனாக தன்னைச் சுற்றி சுழல விட்டுக் கொண்டதில்லை!.. அவன் அடியார்கள் ஆசை ஆசையாக கற்பிதம் செய்தது தான் அத்தனையும்!

      எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நானும் ஆசை கொண்டேன்.. அவ்வளவு தான், ஜிஎம்பீ சார்!

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    அருமையான கதை. மூன்று வாரங்கள் கடந்ததே தெரியவில்லை. கதையை நகர்த்தும் ஒவ்வொரு வாரமும் மனிதனுக்கு தெய்வத்துடனான ஆழமான பிணைப்பின் இறுக்கம் நன்றாக புரிந்தது.

    தெய்வமே பெரியவராக வந்திருந்து நாடகங்களை நடத்தி கொண்டிருக்கிறார் என உணரும் போது, அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், கதை நாயகனுக்கு மட்டுமல்ல.. நமக்கும் மெய்சிலிர்க்க வைக்கிறது. நிஜமாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உலக மனிதர்களாகிய நமக்கும், இதுமாதிரி இறையருள் நெருங்கி வந்து கை கொடுத்துள்ளது.. இல்லை இனி கை கொடுக்கும் என்ற நம்பிக்கை கதையின் மூலம் உணர்வில் தோன்றுகிறது.

    சர்வம் சிவமயம்.. எல்லா உயிர்களிலும் அவன்தான் குடி கொண்டுள்ளான். என்ற எண்ணமே மனதை இலகுவாக வைத்திருக்க உதவும். அதை கதையில் நயமபட கூறி சிறப்பித்த பாங்கிற்கு தலை வணங்குகிறேன்.

    இறுதியில் ஒரு நல்ல செயலுக்கு பலன் உடனே கை மேல் கிடைக்கும் என்ற தத்துவத்தை புலப்படுத்திய கதையை மிகவும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமை துள்ள தொடங்கிய கதை இன்ன திசைக்குப் போகும் என்று எதிர்பார்க்கும்போது அது சற்றும் எதிர்பாராத திசையில் திரும்பியது. அடுக்கடுக்காய் அற்புதங்கள்நடக்க அந்த கதாநாயகன் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.  ஒப்பந்தம் நிறைவேற்றுவது போல ரிக்ஷாகாரர் வரை நெகிழச்செய்து செல்கிறார்கள்.  நல்லதொரு கதை. வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, உயர்ந்த நிலையில் சஞ்சாரம் செய்த ஒரு படைப்பு.

      நீக்கு
    2. @ கமலா ஹரிஹரன்

      தொடர்ந்து மூன்று பகுதிகளையும் வாசித்து வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, சகோதரி.

      இறையருள் துணையாக இருக்கிறது என்ற எண்ணம் மனத்தில் ஆழப் படிந்து விட்டதனால் அந்தத் துணையே அடுததுச் செய்ய வேண்டியதற்கு நம்மை வழி நடத்திச் செல்லும் என்பது உண்மை தான்.

      இறையடியார்களின் அனுபவங்களும் அதைத் தான் சொல்கின்றன. அவையே நமக்கும் துணையாக இருக்கட்டும். ஓம் சிவாய நமஹ..

      நீக்கு
  15. @ ஸ்ரீராம்

    இரண்டாம் பகுதியில் கதை வேறுபட்ட தளத்தில் சஞ்சரித்ததுமே முதல் பகுதியோடு எப்படி இணைப்பு பெறப்போகிறது என்ற திகைப்பு நெல்லைக்கும் பா.வெ.க்கும் இருந்தது.

    மே மாதம் 2008-ல் இந்தக் கதையை என்' பூவனம்' தளத்தில் பிரசுரித்திருந்தேன். கீதாம்மா, கோமதிம்மா இருவருக்கும் 12 வ்ருடங்களுக்கு முன் வெளியான இந்தக் கதையை வாசித்த நினைவு தேசலாக இருந்தது அவர்களின் நினைவாற்றலுக்கு சான்று.

    இதே கதை புஸ்தகா.காம் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பிலும், அதே பதிப்பு Amazon-னின் Kindle store-- வெளியீடான சிறுகதைத் தொகுப்பிலும் காணக்கிடைக்கிறது.

    எங்கள் பிளாக்கில் வாசகர் வீச்சு நமக்கெல்லாம் கிடைத்த வரம்.
    ஸ்ரீராமின் வாசிப்பு நேர்த்தியும் நமக்கெல்லாம் நன்கு தெரிந்தது தான்.
    'நல்லதொரு கதை. வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, உயர்ந்த நிலையில் சஞ்சாரம் செய்த ஒரு படைப்பு' என்று அவர் முத்திரை குத்தியதற்கு நன்றி.

    ஸ்ரீராம், எனது அடுத்த சிறுக்தைத் தொகுப்பிற்கு நீங்கள் தான் முன்னுரை எழுதித் தர வேண்டும் என்று இப்பொழுதே கேட்டுக் கொள்கிறென். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ரீராம், எனது அடுத்த சிறுக்தைத் தொகுப்பிற்கு நீங்கள் தான் முன்னுரை எழுதித் தர வேண்டும் என்று இப்பொழுதே கேட்டுக் கொள்கிறென். நன்றி.//

      பயமுறுத்தாதீங்க ஸார்...! நான் அதற்கெல்லாம் தகுதியான ஆள் இல்லை.

      நீக்கு
  16. நான் 2010 ஆகஸ்டிலிருந்து பதிவுகளில் இருக்கிறேன் எனல்லே இக்கதை முன்புபடித்ஹநினவு ஆனால் நீங்கள் 2008 மே மாத எழுதியதாகச் சொல்கிறீர்கள் அவுட் ஆஃப் க்யூரியாசிடி உங்கள்பதிவை 2008 மே மாதத்தில்தேடினால் இரண்டு பதிவுகள் இசை சார்ந்து இருந்தது இக்க்கதை இல்லை கெ வா போ முத்ல்பதிவில் என்பின்னூட்டத்து க்கு மறுமொழியாக என் பின்னூட்டம்நினைவுக்கு வந்ததாக அர்த்த்ம்தெரியும் விதத்திலிருந்தது

    பதிலளிநீக்கு
  17. முதல் பகுதியில் குழந்தை பாக்கியம் வேண்டும் கணவன்; கிடைக்கப் போகிறது என்றவுடன் கடவுளுக்கு நன்றி சொல்ல வருபவருக்கு கிடைக்கும் இறை தரிசனம் இரண்டாம் பகுதி; அத்வைதத்தில் முடியும் மூன்றாவது பகுதி.
    தொடர்பில்லாத மூன்று பகுதிகளை தொடரும் போட்டு தொடர்கதை ஆக்கிவிட்டீர்கள். சிற்சில மாற்றங்களுடன் மூன்று கதைகளாக்கி இருக்கலாம்.
    நான் கைலாசநாதர் கோவிலுக்குப் போயிருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு அந்த சின்ன துவாரத்தின் உள்ளே போய் வந்திருக்கிறேன். இப்போது நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.











    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!