வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

வெள்ளி வீடியோ : உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே.. உறங்க வைத்தே விழித்திருப்பாயே

கமலா அக்கா விருப்பத்தில் 1963 இல் வெளிவந்த ரா கி ரங்கராஜனின் கதையான 'இது சத்தியம்' படத்திலிருந்து டைட்டில் பாடல்!
கண்ணதாசன் பாடல்களுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை.  



அசோகன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில்தான் ஹேமமாலினி பத்தோடு பதினொன்றாக நாட்டியக் குழுவில் ஒருவராக அறிமுகமானார்.  கே சங்கர் இயக்கத்தில்  ஜி என் வேலுமணி தயாரித்துள்ள திரைப்படம்.  இந்தத்திரைப்படம் 1972 இல் ஷேஜாதா என்கிற பெயரில் ஹிந்தியிலும் எடுக்கப்பட்டிருக்கிறது.  இயக்கம் கே சங்கர்தான்.  இசை ஆர் டி பர்மன்.    கிஷோர் குமார் பாடியிருந்தும் ஹிந்தியில் எனக்குப் பிடித்த மாதிரி ஒரு பாடல் கூட தேறவில்லை!



இந்தப் பாடலை டி எம் எஸ் பாடி இருக்கிறார்.

சத்தியம் இது சத்தியம் சத்தியம் இது சத்தியம் 
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை 
சொல்லப்போவது யாவையும் உண்மை 
சத்தியம் இது சத்தியம் 

பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன் 
பள்ளிக்கூட அறையிலிருந்தேன் 
பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன் 
பள்ளிக்கூட அறையிலிருந்தேன் 
எத்தனையோ சிறைகளை 
நான் பார்த்துவிட்டேன் போடா போ போடா.. போ.. 
சத்தியம் இது சத்தியம் 
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை 
சொல்லப்போவது யாவையும் உண்மை சத்தியம் இது சத்தியம்  

தலைக்கு மேலே வெள்ளம் போனால் 
ஜாணென்ன முழமென்ன 
தன்னை நம்பும் தைரியம் இருந்தால் 
நாளென்ன பொழுதென்ன 
தலைக்கு மேலே வெள்ளம் போனால் 
ஜாணென்ன முழமென்ன 
தன்னை நம்பும் தைரியம் இருந்தால் 
நாளென்ன பொழுதென்ன 
விலைக்கு மேலே விலைவைத்தாலும் 
மனிதன் விலை என்ன 
உயிர் விட்டுவிடால் உடல் சுட்டுவிட்டால் 
அதில் அடுத்த கதை என்ன.. என்ன 
அதில் அடுத்த கதை என்ன 
சத்தியம் இது சத்தியம் 
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை 
சொல்லப்போவது யாவையும் உண்மை 
சத்தியம் இது சத்தியம்  
பஞ்சை போட்டு நெருப்பை மறைப்பவன் 
பைத்தியக்காரனடா 
பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன் 
பச்சை மடையனடா 
நெஞ்சுக்கு நீதியை ஒளித்து வாழ்பவன் 
நிச்சயம் மிருகமடா 
நல்ல நேர்மையிலும் தன் வேர்வையிலும் 
தினம் வாழ்பவன் தெய்வமடா.. 
தினம் வாழ்பவன் தெய்வமடா 
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை 
சொல்லப்போவது யாவையும் உண்மை 
சத்தியம் இது சத்தியம் சத்தியம் இது சத்தியம்



==============================================================================================

இனி என் விருப்பத்துக்கு வருகிறேன்..



தமிழில் 1961 இல் வெளிவந்த படம்.  பீம்சிங் இயக்கத்தில், கண்ணதாசன் பாடல்களுக்கு  விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் அதே வேலுமணி தயாரிப்பில் வெளிவந்த படம்.   இது பின்னர் 1968 இல் ஹிந்தியில் 'ஸாத்தி' என்று எடுக்கப்பட்டது.  இயக்கம்?  நம்ம ஸ்ரீதர்தான் இயக்கம்!

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பி சுசீலாவின் அற்புதமான பாடல் "காதல் சிறகைக் காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?"



சிவாஜி கணேசன், சரோஜா தேவி நடித்துள்ள இந்தத் திரைப்படத்திலிருந்து இன்று பகிரும் பாடல்  "பாலும் பழமும் கைகளில் ஏந்தி..."  

டி எம் எஸ் குரலில் டைட்டில் பாடல்தான் இதுவும்.  கேசெட் காலத்தில் என்னுடைய டி எம் எஸ் கேசட்டில் இரண்டு பக்கமும் இதைப் பாடலோடு முடித்திருப்பேன். அது நினைவுக்கு வருகிறது.


பாலும் பழமும் கைகளில் ஏந்தி 
பவழ வாயில் புன்னகை சிந்தி 
கோல மயில் போல் நீ வருவயே 
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே  

பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே 
பேசிப் பழகும் மொழி மறந்தாயே 
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே 
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே  

உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே 
உறங்க வைத்தே விழித்திருப்பாயே 
கண்ணை இமைபோல் காத்திருப்பாயே 
காதற் கொடியே கண் மலர்வாயே  

ஈன்ற தாயை நான் கண்டதில்லை 
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை 
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன் 
உதய நிலவே கண் மலர்வாயே 


59 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், நல்வரவு, பிரார்த்தனைகள். இந்த வாரப் படங்கள் இரண்டுமே பார்த்ததில்லை. ஆனால் பாடல்கள் நிறையக் கேட்டிருக்கேன். அருமையான பாடல்கள். பாலும் பழமும் ஸ்ரீதர் இயக்கமா? பீம்சிங் இல்லையோ? ஹிந்தியில் ஸ்ரீதர் இயக்கியிருப்பாரோ? அதிலும் பாடல்கள் நன்றாக இருக்கும். ராஜேந்திரகுமார், வைஜயந்தினு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் பற்றி இப்படி நினைவில் வைத்திருக்கும் கீசா மேடம், இன்று புதிதாய்ப் பிறந்தவர் போல எனக்குத் தெரிகிறார்

      நீக்கு
    2. வணக்கம் கீதா அக்கா... வாங்க, நல்வரவு, நன்றி!

      நீக்கு
    3. ஆமாம் நெல்லை. ஆமோதிக்கிறேன்!

      நீக்கு
    4. வாராந்தரி, மாதாந்தரி புத்தகங்கள் படிக்கும் காலங்களில் எல்லாத் திரைப்பட விமரிசனங்களையும் விடாமல் படிப்பேன். தினசரிப் பத்திரிகை விமரிசனங்களையும் விட்டதில்லை. படம் பார்க்கிறோமோ இல்லையோ படத்தைப் பற்றிய ஓர் கருத்து என்னளவில் இதனால் உருவாகும். அதனால் தான் திரைப்படங்கள் பற்றி ஓரளவுக்காவது தெரியும், புரியும். இப்போதும் அநேகமாக எல்லாப் பட விமரிசனங்கள் இல்லைனாலும் நண்பர்கள் எழுதும் முக்கியமான விமரிசனங்களைப் படிக்கிறேன் என்றாலும் இப்போதைய படங்கள் பற்றிய அறிவு கொஞ்சம் தான்!

      நீக்கு
    5. அந்தக் காலத்து ஆனந்த விகடனில் "சேகர் - சந்தர்", முனுசாமி-மாணிக்கம், ஷண்முகசுந்தரம் - மீனாக்ஷி அம்மாள்" என்னும் பெயர்களில் விமரிசனங்களை உரை நடையில் கொடுப்பார்கள் அத்தகையவற்றை ஓர் ஆவலோடு படிப்பேன். அநேகமாகக் கதை முழுவதும் வந்துவிடும். தொழில் நுட்பங்களையும் ஆங்காங்கே சொல்லி இருப்பார்கள். குமுதத்தில் கடைசி வரியில் மொத்த விமரிசனத்தின் கருத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

      நீக்கு
  2. எல்லோரும் ஆறுமணியை நினைச்சுட்டு வரலை போல!

    பதிலளிநீக்கு
  3. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  4. இன்றைய பாடல்களைப் பற்றி சொல்வதென்றால்...

    அமுதும் தேனும் எதற்கு.. நீ
    அருகினில் இருக்கையிலே!...

    - என்பது போலத்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி பாடும்படியாக இப்போது யாரிருக்கிறார் என ஒவ்வொருவரும் இப்போ சிந்தித்தால் எத்தனை பேர் தேறுவாங்க, யார் அருகில் இருக்கையில் என்பது எப்படி மாறுபட்டிருக்கும் என யோசித்தேன்

      நீக்கு
    2. ஆமாம் துரை செல்வராஜு ஸார்.

      நீக்கு
    3. ஆமாம் நெல்லை... பாலும் பழமும் பாடல் முதல் வரியை வைத்தே முழு பாடலையும் பாடுவார்கள். தெரிந்திருக்கும்!

      நீக்கு
  5. இரண்டு பாடல்களும் அருமை.

    பா வரிசை படங்களில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    இன்று எனக்கு பிடித்த படத்திலிருந்து பாடல் பகிர்ந்திருப்பதற்கு மிகவும் நன்றி. கூடவே அதன் விபரங்களுக்கும் நன்றி. ஆனால் ஒரு சிறு திருத்தம். இந்த படத்தில் பாடல்கள் அனைத்துமே ஓரளவுக்கு அப்போது கேட்க நன்றாக இருக்கும். நான் இந்த படத்தில் வரும் "மனம் கனிவான அந்த கன்னியை கண்டால்" என்ற பாடலை கேட்டிருந்தேன். அது டி. எம் எஸ் பி சுசீலா அவர்கள் இணைந்து பாடிய அழகான பாடல் என நினைக்கிறேன். சத்தியமாக பட டைட்டில் பட பாடலை நான் கேட்கவில்லை. ஹா. ஹா. ஹா.

    இருப்பினும் உணர்ச்சிப்பூர்வமான பாடலை ரசித்தேன். இரண்டாவது பட பாடல்கள் அனைத்துமே மனதில் முணுமுணுப்பாக என்றுமே ஓடிக் கொண்டிருப்பது. தாங்கள் பகிர்ந்த பாடல்களையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க கமலா அக்கா... வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

    இன்னொரு பாடலையா சொல்லி இருந்தீர்கள்? கவனிக்கவில்லை போல... மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இதில் மன்னிக்க என்ன இருக்கிறது? பாடல் மாற்றம் பற்றி அவசரமாக நான் உடனே சொன்னதுதான் எனக்கும் வருத்தமாக இருந்தது. இருக்கிறது. (ஒரு வேளை அது இந்தப்படப் பெயரின் தாக்கமோ? ஹா.ஹா. ஹா.) அது தங்களையும் வருத்தியிருந்தால் என்னையும் மன்னிக்கவும்.

      இதன் மூலக்கதையும் ஏற்கனவே படித்து ரசித்திருக்கிறேன். ஆனால் இன்னமும் இந்த படத்தை பார்த்ததில்லை. பாடல்கள்தான் கேட்டிருக்கிறேன். அதனால்தான் இதன் பாடல்களை நேயர் விருப்பமாக கேட்க விருப்பப்பட்டேன்.
      மேலும் மற்றொரு முறை நான் கேட்ட பாடலை பகிராமலா இருக்கப் போகிறீர்கள். அப்போது அந்த "மனம் கனிவான" பாடலையும் அனைவரும் கேட்டு ரசிக்கலாம். ("எப்படியும் அந்தப் பாடலை விட மாட்டார்கள் போலிருக்கிறதே..! என எல்லோரும் சகோதரி அதிரா பாணியில் கூறுவதானால், கீழே குனிந்து தரையில் கல் ஏதாவது தென்படுகிறதா என தேடுவது போல் தோன்றுகிறது. ஹா. ஹா. ஹா.)

      /தலைக்கு மேலே வெள்ளம் போனால்
      ஜாணென்ன முழமென்ன
      தன்னை நம்பும் தைரியம் இருந்தால்
      நாளென்ன பொழுதென்ன
      தலைக்கு மேலே வெள்ளம் போனால்
      ஜாணென்ன முழமென்ன
      தன்னை நம்பும் தைரியம் இருந்தால்
      நாளென்ன பொழுதென்ன
      விலைக்கு மேலே விலைவைத்தாலும்
      மனிதன் விலை என்ன
      உயிர் விட்டுவிடால் உடல் சுட்டுவிட்டால்
      அதில் அடுத்த கதை என்ன.. என்ன
      அதில் அடுத்த கதை என்ன /

      பொதுவாக இந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே இனிமையானவைதான்.
      தாங்கள் இன்று நேயர் விருப்பமாக பகிர்ந்துள்ள இந்த பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
      இதையே என் மனம் வருத்தம் வரும் போது அடிக்கடி முணுமுணுக்கும்.

      இன்றைய பாடல்கள் இரண்டுமே மிகவும் இனிமையான அர்த்தமுள்ள பாடல்கள். பகிர்ந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. அதனால் என்ன கமலா அக்கா? சந்தர்ப்பம் வாய்க்கும்போது பகிர்ந்து விடுகிறேன். வீடு மாற்றிய களேபரத்தில் ட்யூவில் என்னென்ன நே.வி இருக்கிறது என்பதே வேறு நினைவில் இல்லை! பாடல்களை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  8. அற்புதமான பாடல்கள்.குறிப்பாக இது சத்தியம் பாடல் இன்று வரை ஒருவரி கூட மறக்கவில்லை அப்படி மனதில் பதிந்து உள்ளது..பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் அனைவருக்கும். காலை வேளையில் அருமையான இரு பாடல்கள். பதின்ம வயதில் கேட்டவை மனதில் பதிந்தவை. எப்போது எந்த வரியைக் கொடுத்தாலும் உடனே முழுப்பாடலையும் பாடும் திறமை எங்கள் அனைவருக்குமே தெரியும். இது சினிமாப் பைத்தியம் இல்லை. எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. இசை,தமிழ் இரண்டுமே மனசு ஈர்ததால் மனப்பாடமான பாடல்கள. நல்லதையும் எளிமையான மொழியையும் அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்கள் நாங்கள். அன்பு கமலாவுக்கும் பாடல்களைப் பதிவிட்ட ஶ்ரீராமுக்கும். மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா. அப்போதெல்லாம் புத்தகங்கள் தவிர இருந்த ஒரே பொழுதுபோக்கு இதுதானே? மனதில் நன்றாகவே பதிந்து விடும்தான்.

      நீக்கு
  10. இரண்டு பாடல்களையும் எத்தனை முறை ரசித்து கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது...!

    பதிலளிநீக்கு
  11. கண்ணதாசன் வரிகள்.
    எப்படித்தான் எழுதினாரோ.

    //பஞ்சைப் போட்டு நெருப்பை அணைப்பவன்
    பைத்தியக்காரனடா.
    பாவம் தீர்க்கப் பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா.//
    எத்தனை உரம் இந்த வரிகளில்.
    இதைச் சொல்லி அல்லவா பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
    நன்றி.மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ஆமாம். ரசிக்கத்தக்க, மனதில் அமர்ந்து விட்ட அருமையான வரிகள். நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  13. ஈன்ற தாயை நான் கண்டதில்லை
    எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
    உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
    உதய நிலவே கண் மலர்வாயே//அந்த இளவயதில் இந்தப் பாடலைக் கண்டு அழுதிருக்கிறோம்.
    டி எம் எஸ் அவர்களின் தழுதழுப்பு, சிவாஜியின் சோகம்
    எல்லாமே அத்தனை அருமை.
    படம் முழுவதும் இருவரும் போட்டி போட்டு நடிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  14. நேயர் விருப்பமான கமலாக்கா கேட்ட பாடல், கேட்டதாகவே நினைவிலிலை, அழகிய தத்துவ வரிகள்.. ரஜனி அங்கிள் பாடல்தான் நினைவுக்கு வருது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிர்ர்ர்ர்.... ரஜினி அங்க்கிள் பாடலா?!! இவையன்றோ முன்னோடி?

      நீக்கு
    2. அதே... அதே.... ஆனா நாம் கேட்டதுதானே மனதில் பதியும்....

      நீக்கு
  15. 2 வது பாடல்....ஸ்ரீராம் இப்பூடிப் பாடல்களைப் பகிரக்கூடாதாக்கும் ஹா ஹா ஹா ஏன் தெரியுமோ.. பிறந்த குழந்தைகூடப் பாடிக் காட்டுமே இப்பாடலை:)) அவ்ளோ பேமஸ் ஆன பாடலெல்லோ...

    எனக்கும் அண்ணனுக்கும் இடையில சின்னனில ஒரு ஒப்பந்தம் இருந்தது..:)
    அவருக்கு அவரின் கால்பாதம் மற்றும் கால் விரல்களை மசாஜ் செய்து, நான் ஒரு டொக்டர் எனவும் அவர் ஒரு பேஷண்ட் எனவும் சொல்லி, துணி எடுத்து கயம் மருந்து கட்டு என்றெல்லாம் காலில் போட்டு, மசாஜ் பண்ணி நெட்டி முறிச்சு... இப்படி ஒரு பொழுது போக்கு இருந்தது... அப்படிச் செய்து விட்டால்,

    எனக்கு ஒரு படக்கதை சொல்லுவார் ஹா ஹா ஹா.. அப்படித்தான் நிறைய பழைய படங்கள் சொல்லியிருக்கிறார்.. அப்படிச் சொன்னதிலதான் இந்தப் பாலும் பழமும் சொன்னார்.. அன்று தொட்டு இப்படம் பார்க்க்கோணும் என துடிச்சிருந்து தேடிப் பார்த்தேன் ஹா ஹா ஹா... அதேபோல அவர் எனக்கு கதை சொல்லி, நான் பின்பு பார்த்த முதல் ஆங்கிலப் படம் “கசிண்டா குறொசிங்”. .. இரண்டும் என மனதில் பதிந்துவிட்ட படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா... இது போன்ற எல்லோருக்கும் தெரிந்த புகழ் பெற்ற பாடல்களைப் பகிர்வது என் வழக்கம் இல்லைதான். கொஞ்ச நாட்களாக சிறு மாறுதல்!

      நீக்கு
  16. அசோகன் ஹீரோவா? கற்பனையே பண்ண முடியவில்லையே? பீம்சிங் படத்தை ஸ்ரீதர் ரீமேக்கினாரா? அதற்காகவே அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @பானுமதி, மாடர்ன் தியேட்டர்ஸின் ஒரு சில படங்களில் கூட அசோகன் தான் கதாநாயகராக வந்திருக்கார். அதன் பின்னரே ஜெய்சங்கர் - எல்.விஜயலக்ஷ்மி ஜோடி இடம் பிடித்துக் கொண்டது. "இது சத்தியம்" படத்தின் கதாநாயகனின் சுபாவத்துக்கு அசோகன் பொருத்தமாக இருப்பார் என்று அப்போது சொல்லுவார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன். சந்திரகாந்தா தான் கதாநாயகி.

      நீக்கு
    2. ஸ்ரீதர் இயக்கிய படமும் முழுக்க முழுக்கப் பாலும் பழமும் கதை தான். அதில் ஊசி மருந்தை வாயில் கௌவிக்கொண்டு தண்ணீர்க்குழாய் வழியாக வைஜயந்தி ஏறிச்செல்லும்/இறங்கிச் செல்லும் காட்சியில் அருமையான நடிப்பைக் காட்டி இருப்பார்.

      நீக்கு
    3. இதே வைஜயந்தி கதாநாயகியாக நடித்த "பார்த்திபன் கனவு" படத்தில் சரோஜா தேவி அவரின் தோழிகளில் ஒருத்தியாக வருவார். நான் பார்த்திபன் கனவு பார்க்கணும் என்பதற்காகவே என் பதின்ம வயதுகளில் மேலமாசி வீதி "சந்திரா, பின்னர் பழனி" திரை அரங்கில் ஒரு காலைக்காட்சியில் பார்த்தேன். அந்தப் படத்துக்குக் கலை/ஆர்ட் இயக்குநராக ஓவியர் மணியமே வேலை செய்திருக்கார்.

      நீக்கு
    4. அசோகன் ஹீரோவாக நடித்திருந்தாலும் என்னாலும் அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை!  

      நீக்கு
    5. கீதா அக்கா...   மனோகர் கூட கதாநாயகனாக நடித்திருக்கார்.   உங்களுக்குத் தெரியாததல்ல...    அதில் காதல் மன்னன் வில்லன்!

      நீக்கு
    6. அது என்ன படம்னு தெரியலை. ஆனால் மனோகர் கதாநாயகனாக நடிச்சிருக்கார் என்பது வரை தெரியும். அப்போ நான் பிறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். என் சின்ன வயசு நினைவுகளில் ஜெமினி நடிச்சு நான் பார்த்ததாக நினைவில் இருக்கும் முதல் படம் கல்யாணப்பரிசு தான்.அதுக்கப்புறமாச் சில ஜெமினி படங்கள் பார்த்திருந்தாலும் தேன் நிலவு,வஞ்சிக்கோட்டை வாலிபன், பார்த்திபன் கனவு, மிஸ்ஸியம்மாவெல்லாம் தொலைக்காட்சி தயவில் பார்த்தது தான். மனோகரின் அக்கா கணவர் ஹோசூரில் ஸ்டேட் வங்கி மைசூரில் மானேஜராகப் பணி புரிந்தப்போ என் அண்ணாவுக்கு அங்கே தான் முதல் போஸ்டிங். மானேஜர் மனைவி மனோகரின் அக்கா மனோகர் பற்றிய நினைவுகளைச் சொல்லுவார்.

      நீக்கு
  17. என்ன ஶ்ரீராம் ஜொள்ளவேயில்லை:)... எப்பூடி மெதுவா மெதுவா கெள அண்ணனின் ட்றக் ல ஏறிட்டீங்கபோல:)...

    இனி இப்பூடியே தொடர்ந்தால் எங்களுக்கு ஜாலி:)... வாறமாதம் நேரம் மாறும் அப்போ உங்கள் 5.30 என்பது எங்கள் 11pm:)... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு, இடம் மாறிய காரணத்தால் நேரத்தை அட்ஜஸ்ட் செய்ய இப்படி!  என்ன செய்ய!

      நீக்கு
  18. //இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பி சுசீலாவின் அற்புதமான பாடல் "காதல் சிறகைக் காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?"// அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான். எல்லோருக்கும் பிடித்த பாடல் "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..."ஆ.வி.யின் தீபாவளி சிறப்பிதழில் கவிஞர் யுகபாரதியின் பேட்டியில் சினேகா, ஸ்ரீகாந்த் நடித்து கரு.பழனியப்பன் இயக்கிய 'பார்த்திபன் கனவு' படத்திற்கு பாடல் எழுத ஒப்பந்தமான பொழுது, இயக்குனர் அவரிடம்,"காதல் பிசாசு, வெட்கக் கவிதை என்று ஏன் இப்படியெல்லாம் கடினமா கஷ்டப்படுத்துறீங்க? நான் பேச நினைப்ப- தெல்லாம், நீ பேச வேண்டும் என்பது எவ்வளவு எளிமையாக இருக்கிறது?" என்றாராம். அந்தப் படத்தில் வரும் 'கனாகண்டேனடி.. ' பாடலில் 'எதையோ என் வாய் சொல்லத்துவங்க, அதையே உன் வாய் சொல்லி அடங்க..' என்று எழுதினேன், அது வேறு ஒன்றுமில்லை நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பதன் விரிவுதான்" என்று சொல்லியிருப்பதை இப்போதுதான் படித்தேன்.   

    பதிலளிநீக்கு
  19. பாடல்கள் இரண்டும் மிக அருமை.
    பிடித்த் பாடல்கள்.
    கேட்டு மகிழ்ந்தேன்.
    கமலா கேட்ட பாடலும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  20. பாலும்பழமும் பாடலைப் போல் சத்தியம் இது சத்தியம்பாடல் மனதில் நிற்கவில்லை பாடலுடன் அதுபற்றிய விபரங்களும் சேர்த்து தருவதே உங்கள் ஸ்பெஷாலிடி

    பதிலளிநீக்கு
  21. பாடல்கள் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. இரண்டுமே இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்தேன் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!