செவ்வாய், 1 செப்டம்பர், 2020

கேட்டு வங்கிப் போடும் கதை : சாபம் 2/3 -------- ஜீவி


 பகுதி--2

முதல் பகுதி சுட்டி << 

                                  ஜீவி 

ம்ப்யூட்டர் திரையில்---

ஒரு பஸ் எரிந்து கொண்டிருந்தது.  சுற்றிலும்  'காச் மூச்' என்ற ஆக்ரோஷமிக்க ஜனத்திரள்.  மூலையில் ஒருவன் தன் கையை உயர்த்தி உயர்த்திக் காட்டுவது தெரிகிறது..  சட்டென்று திரையில்  அங்கேயும் இங்கேயும் ஓடி பதற்றத்துடன் ஓடும் அவனின் தலைக்கு நேரே ஒரு சிவப்பு அம்புக்குறி பளீரிடுகிறது.

பாபு அந்த அதிசயக் கணினியின் வயிற்றுப் பகுதியிலிருந்த ஒரு பட்டனைத் தட்டியவுடன்  ஒரு பிளாஸ்டிக் அட்டை வெளிப்படுகிறது. அதில் பொறித்திருந்த எழுத்துக்களை வேகமாக மேய்ந்து விட்டுச் சொல்கிறான்:  "சுந்தரேசன் ஸார்!!   திரையில் ஒற்றையாய் கையை உயர்த்தி உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை சிவப்பு அம்புக்குறி சுட்டிக் காட்டுகிறது, பாருங்கள்,  அவன் தான் நீங்கள்! அதாவது இந்த ஜென்ம உங்களின் போன ஜென்மத்திற்கு முந்திய ஜென்ம உருவம்!  பை த பை அவன்-- ஸாரி, இந்த ஜென்ம உங்களின் அந்த ஜென்ம ஆசாமி--  எதற்காக இப்படி கையை உயர்த்தி உயர்த்திக் காட்டுகிறார், என்ன  சொல்கிறார் என்று கேட்கலாமா?" என்று பாபு சொல்லி முடிப்பதற்குள் மொத்தக் கூட்டமும் ஆரவாரத்துடன் ஆர்ப்பரித்தது.

அவர்களை அமைதிப்படுத்தி விட்டு அந்த அதிசயக் கணினியின்  கீழ்ப்பகுதியிலிருந்த 'ஸ்பீக்' பட்டனை  பாபு அழுத்தி  'தமிழ்' என்று மொழியின்  பெயரைப் பதித்ததும்  உரத்த ஓசையாய் குரல் வந்தது. "வேண்டாண்டா.. வேண்டாண்டா.  அரசாங்கத்தின் மேல் உங்களுக்கு ஆத்திரம்ன்னா பஸ்ஸை ஏண்டா கொளுத்தறீங்க, பாவிங்களா.... நம்ம சொத்துடா, அது!..  அது தெரியலையா, ஒங்களுக்கு?  இந்த அக்கிரமத்தைக் கேட்பாரில்லையா?..நிறுத்துங்கடா.. நிறுத்துங்க.."

இப்பொழுது திரையில் பஸ்ஸைக் கொளுத்தும் கூட்டத்திலிருந்து ஒருவன் ஓடிவந்து ஓலமிடும் அந்த ஒற்றை மனிதனை நையப் புடைத்து ஓரம் தள்ளினான்.  மொத்த பஸ்ஸூம் சொக்கப்பனை.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சுந்தரேசனின் முஷ்டி இறுகுகிறது.  "நிறுத்துங்கள், நிறுத்துங்கள்..  பஸ்ஸைக் கொளுத்தாதீர்கள்.." என்று ஆவேசத்துடன்  அவர் கத்துவதைப் பார்த்து  திகைத்தபடி 'ஸ்பீக்' பட்டனை 'ஆஃப்' செய்தான்  பாபு.

அந்தக் காலக்கணினித் திரையை இத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம், "என்ன, என்ன?""  என்று ஆவலுடன் நெரிபட்டது.

பாபு உடனே கணினியின்   வயிற்றுப் பகுதி விளக்க பட்டனைத் தட்டி, பிளாஸ்டிக் அட்டையை உருவி அதில் பொறித்திருந்த விளக்கக் குறிப்பை வாசித்து விட்டுச் சொன்னான்: "ஒன்றுமில்லை!...    நமது சென்ற தலைமுறைக்கு முந்தைய தலைமுறை ஜனங்கள் அவர்கள்.  எதற்காகவோ தங்களை ஆளுகின்ற அரசாங்கத்தின் மீது அவர்களுக்குக் கோபம்.  அந்த அவர்களது ஆத்திரத்தை வெளிக்காட்ட,  தங்களது கோபத்தை அரசாங்கத்திற்குப்  புரிய வைக்க  பொதுச் சொத்தான பஸ்ஸைக் கொளுத்துகிறார்கள்..."                  
                              
"பஸ் என்றால்?"  என்று  உட்கார்ந்திருந்தவர்களின் மத்தியிலிருந்து ஒரு குரல் விளக்கம்  கேட்டது.

"விளக்கக் குறிப்பிலிருந்து அது பயணம் செய்வதற்கான ஒரு வாகனம் என்று தெரிந்தது.   நீங்கள் தான் திரையில் பார்த்தீர்களே,  அதான் பஸ்ஸின் தோற்றம்.  ரயில், பஸ், விமானம் போன்றவற்றை அந்தக் கால மனிதர்கள் தங்கள் பயணத்திற்காக உபயோகப்படுத்தினார்கள் என்று நானும் அறிந்திருக்கிறேன்.." என்றான் பாபு..

"தங்கள் பயண வாகனத்தைக் கொளுத்தினார்களா?..   அட... புத்திசாலிகளே!'  என்று இரண்டாம் வரிசை ஆரம்பத்தில் அமர்ந்திருந்த விஸ்வநாதன் கேலியாக உரக்கச் சொன்னான்.

"ஆமாம், புத்திசாலிகள் தான்.. தங்களது வரிப்பணத்தில் உருவாக்கிய தங்களின் சொத்துக்களையே அழிக்கிற புத்திசாலிகள்!" என்று சொல்லி விட்டு  பாபு தொடர்ந்தான்...  "இதைத் தான் அந்த  ஒற்றை ஆசாமி-- சுந்தரேசன் சாரின் போன ஜென்மத்திற்கு முந்தைய ஜென்ம உயிர்-- தடுக்கிறது.  ஜென்ம ஜென்மங்களாகத் தொடரும் உயிர்களின் தொடர்பும்  எனக்கு ஆச்சரிய மூட்டுகிறது.  கொஞ்ச  நேரத்திற்கு முன்பு  பஸ் எரியும் அந்தக் கணினிக் காட்சியைப் பார்த்து  விட்டு  அந்த ஜென்ம-- இந்த  ஜென்ம   உயிர்கள்  தொடர்பு கொண்டதே போல சுந்தரேசன் சாரும் ' நிறுத்துங்கள்   , நிறுத்துங்கள், பஸ்ஸைக் கொளுத்தாதீர்கள்!..' என்று பதறித்  துடித்ததைப்  பார்த்து நான் அசந்து போய் விட்டேன்..  என்ன அதிசய அனுபவம் அது நமக்கு1'  என்று பாபு வியந்து போனான்.

"இதில் இன்னொரு  ஆச்சரியமும்  இருக்கிறது" என்றார் புவியியல்  அறிஞர் சர்மா. "அந்த பஸ் என்ற வார்த்தையையும்   இந்த ஜென்ம மிஸ்டர்  சுந்தரேசன் உபயோகப்படூத்தினார், பாருங்கள்.   நமக்கெல்லாம் -- மிஸ்டர்  சுந்தரேசன் உட்பட- - அறிமுகமில்லாத  பஸ் என்ற  வார்த்தையையே பதற்றத்தில் துடிக்கும் பொழுதும் மிஸ்டர் சுந்தரேசன் உபயோகப்படுத்தியிருப்பது இன்னொரு ஆச்சரியம்.  இதிலிருந்தும் நீங்கள் சொன்ன அந்த ஜென்ம உயிர்களின் தொடர்பையும் புரிந்து கொள்ள முடிகிறது.   அதாவது இந்த ஜென்ம அவர் உணர்வுகளில் முந்தைய ஜென்ம  உணர்வு அவர் பதறித் துடித்த அந்த ஷண நேரத்தில் புகுந்து கொண்டு அவரை ஆட்டுவித்ததாக நான் கருதுகிறேன்.." என்று சர்மா  சொன்னதும் அங்கு குழ்மியிருந்த அத்தனை பேரும் திகைத்துப் போயினர்.

"எதற்காக  அப்படி ஒரு நிகழ்வு நடந்ததென்று எனக்குப் புரியவில்லை. அரசாங்கத்தை எதிர்த்து எதற்கு  ஜனங்கள் இப்படியான செயல்களில் ஈடுபட வேண்டும்?..  அப்போ,  அரசாங்கம் வேறே,  ஜனங்கள் வேறே என்ற நிலையா அந்த ஜென்ம காலகட்டத்தில் இருந்தது?..  இந்த அதிசயக் கணினி குறிப்புகளிலிருந்து அது பற்றி ஏதாவது  தெரிந்து கொள்ள முடியுமா?" என்று ஆவலுடன் கேட்டார்  நாலாவது வரிசை ரங்கசாமி.

"ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்..." என்று இழுத்த பாபு  'சரித்திர நிகழ்வுகள்' என்ற குமிழைத் திருப்பி,  அந்த ஜென்மக் கால பிரதேங்களின் சரித்திர நிகழ்வுகளைத் தேடிப் பார்த்து சொன்னான்.. " இந்த குறிப்புகளின் படி பார்த்தால்  குறிப்பிட்ட அந்த ஜென்ம காலத்தில் மக்களால்    தேர்ந்தெடுக்கப் பட்ட  அரசாங்கங்கள் தாம் மக்களை ஆளும் அதிகாரத்தைப் பெற்றன    என்று தெரிகிறது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட அரசாங்கங்கள்,  மக்களின் நலன்களைப் பேணிக்காக்காத பொழுது,   மக்களுக்கான  அரசாங்கமாக செயல்படாத போது இந்த மாதிரியான நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்தன என்ற முடிவுக்கு வரலாம்.. " என்றான்.

"எனக்கு இன்னொரு  சந்தேகம்.." என்றான்  இளங்குமரன்.  "தொடர் ஜென்மங்கள் கொள்ளும் உயிர்த்  தொடர்பு பற்றிச் சொன்னீர்கள்.   அப்படியான உயிர்த் தொடர்புகள் எப்படி சாத்தியமாகும் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது..  உயிர்கள் பிறந்து இறந்ததும் அவற்றின் உடல்களான சடலங்கள்  எரிக்கப் பட்டோ அல்லது புதைக்கப்பட்டோ அவற்றின் பெளதீகக் கூறுகள்  மக்கி மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுகின்றன.     
அப்படியிருக்க மண்ணோடு மண்ணாக மக்கிக் கலந்து  போன எந்த ஜென்மத்து உயிரோ   இன்னொரு ஜென்மத்து உயிருடன்  ஜென்மாந்திரத் தொடர்பு  கொண்டிருக்கிறது என்றால்...  எனக்கு இதைப் பற்றி விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.. ஆனால் உணர்கிறேன்..  நான் உணர்வதை நீங்களும் உணர முடியும் என்று நம்புகிறேன்.. இல்லையா,  பாபு ஸார்?"  என்றான்.

"எஸ்.. நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரிகிறது. அந்த விஷயத்தில்  நாம் எரிப்பதும் புதைப்பதும்  உடல்களாகிய  சடலங்களைத் தானே தவிர உயிரை அல்ல..  அல்லவா?..  அதனால் உடல்கள் தாம் மண்ணோடு மண்ணாக மக்கி கலந்து போகிறன்றனவே தவிர உயிர் அல்ல என்று  தெரிகிறது.." என்றான் பாபு.

"அப்போ  உயிர் வேறு.. உடல் வேறா?"  என்று சடக்கென்று கேள்வியைப்  போட்டார்  கருணாகரன்.

"சந்தேகமில்லாமல்...  இந்த அதிசய காலக்கணினியின்  ஆராய்ச்சிக்கே அந்த  கோட்பாடு தான் அடிப்படை."  என்றான் பாபு.

"அப்படிப் பார்த்தால் உடல்கள் தாம் இறக்கின்றன.  உயிர்கள் இல்லை என்று தெரிகிறது..  ஆம் ஐ கரெக்ட்?.."  என்றார் சுந்தரேசன்.

"அப்படித் தான் நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின்  அடிப்படையில் தெரிகிறது" என்றான்  பாபு..  "உயிர் என்ற ஒன்றை உடலை இயக்கும் சக்தியாக நாம் கொள்ளலாம்.   இயற்கையின் கொடையாகிய வெளிசக்தி     உடலின் உள்ளே போய்  உள்சக்தியாக மாறுவதை உயிராகக் கொள்ளலாம். சுலபமாகச் சொல்ல வேண்டுமானால்,  உடலை இயக்கும் ஆற்றல் கொண்ட உள்சக்தியை உயிர் என்கிறோம்.  அவ்வளவு தான்." என்றான் பாபு..

"அப்போ  இந்த புவியில் பிறந்தது எதுவும் இறக்கும் பொழுது அதன் உயிர் என்னவாகிறது?"  என்ற் கேள்வியைப் போட்டார்  ராமசாமி.

"வெளியிலிருந்து  பெறப்பட்டது உள்சக்தியாய் செயல்படுவதற்குரிய ஆற்றலை இழந்ததும்  எங்கிருந்து அந்த சக்தி பெறப்பட்டதோ அந்த பரந்த வெளி சக்தியுடனேயே கலந்து விடுவதாகக் கொள்ளலாம்.   அப்படிப் பேராற்றலான வெளிச்சக்தியுடன் கலப்பதால் ஆற்றல் மிக்க புத்தம் புது சக்தியாக  உருமாற்றம் கொள்கின்றன.  இருந்தாலும் இந்த நேரத்து நான் கொண்டிருக்கும் இந்த கருத்து அறிவியலின் புது வாசல்களைத் திறக்கும் பொழுது மாற்றம் கொள்ளலாம்.  அதைப் பற்றிய  ஆராய்ச்சிகள் தாம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று உங்களுக்கே தெரியும்" என்றான் பாபு.

"என்னால் என் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  அடுத்து நான் மேடைக்கு வரலாமா?' என்ற குரல் பரபரப்புடன் ஒரு மூலையிலிருந்து வெளிப்பட்டது.

பாபு அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்த பொழுது  கையை உயர்த்தியபடி புவியியல் பேராசிரியர் துரைசாமி எழுந்து நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

(வளரும்)

படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.

===

43 கருத்துகள்:

  1. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பு துரைக்கும்,
    மற்றும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நன்மை தரும் இறை சக்திகள் நம்மிடம் அருள் பாலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இது எதிர்காலத்தில் நடக்கும் கதையா.
    வெகு சுவாரஸ்யமாகக் கதை செல்கிறது.
    பெயர் இன்னும் சுந்தரேசன் என்று வைத்துக் கொள்வார்களா:)

    அடுத்தாற்போல் மேடைக்கு வருபவர் என்ன சொல்லப்
    போகிறார் என்று பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா.. எனக்கும் இது தோன்றியது. இந்தப் பகுதிலதான் இது நடக்கும் காலம் என்ன என்று தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தலைமுறைக்கே இந்தப் பெயர்கள் வெகு அந்நியம். அதிலும் பலர், சர்மாவாக இதனை அப்பா வைத்துவிடுவதால், கூப்பிடும் பெயரை (அது வடமொழி எழுத்துகள் இல்லாமல் வராது, தமிழகத்தில் 90%க்கும் மேல் இந்தக் கதிதான்) வெளியே சொல்லிக்கொள்வார்கள். இதில் ராமசாமி, சுந்தரேசன்... பாபு.

      இதனைப் புறம் தள்ளிவிட்டு கதையைத் தொடர்கிறேன். எப்படி முடிக்கிறார் என்று பார்ப்பதற்காக. சுவாரசியமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

      நீக்கு
    2. சுந்தரேசன் பெயர் எனக்கும் கொஞ்சம் யோசனை அளித்தது. ஆனாலும் பெயர்கள் ஒருவேளை தொடர்ந்து வரலாம் என எண்ணிக் கொண்டேன். இதிலே அனைவருக்குமே இரண்டு தலைமுறைகளுக்கும் முந்தைய பெயர்களே!

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் இப்போது ஏற்பட்டிருக்கும் ஊரடங்குத் தளர்வினால் பிரச்னைகள் இல்லாமல் இருக்கவும் பிரார்த்தனைகள். விரைவில் அனைவரும் சகஜமாக நடமாடக் கூடிய சூழல் உருவாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. ஜீவி சாரின் கதை சுவாரசியமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே படித்த மாதிரிக் கொஞ்சம் கொஞ்சம் நினைவுகள் வருகின்றன. என்றாலும் எப்படி முடிந்தது/முடியப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏற்கெனவே படித்த மாதிரிக் கொஞ்சம் கொஞ்சம் நினைவுகள்// - கதையே இரண்டு ஜென்மத்துக்கு முன்னால் என்ன நடந்தது என்பதைப் பற்றியது. கீசா மேடம், கதைக்குள் ஆழ்ந்துவிட்டதால் இரண்டு ஜென்மத்துக்கு முன்னால் உள்ள நினைவு வந்துவிட்டதா?

      நீக்கு
    2. நெல்லைத்தமிழரே, ஏற்கெனவே என்னோட ஞாபக சக்தியைப் பார்த்துட்டு நம்ம ரங்க்ஸ் ஏழேழு ஜன்மக் கதையெல்லாம் சொல்லிட்டு இருக்கே என்கிறார். இரண்டு ஜன்மம் வரதில் ஆச்சரியம் என்ன இருக்கு? நான் கதைக்குள் ஆழ்ந்தெல்லாம் போகவில்லை. என்னிடமிருந்தே என்னைப் பிரித்துத் தனியாகப் பார்க்கும் வழக்கம் உண்டு. அப்படி இருக்கையில் கதைக்குள் ஆழ்ந்து போவேனா?

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    ஜீவி சகோதரர் எழுதிய கதை இரண்டாம் பாகமும் ஸ்வாரஸ்யமாக விறுவிறுப்புடன் இருக்கிறது. முந்தைய ஜென்மத்தைப்பற்றிய விளக்கங்கள் நன்றாக உள்ளன.

    ஒரு வீட்டில் ஒருவர் தவறிப் போன பின்பு அவர் வீட்டில், அடுத்துப் பிறக்கும் சந்ததிகள் (பேரன் பேத்தி) அந்த அவரின் பேச்சு,செயல்பாடுகளை வெளிக்காட்டும் போது வீட்டிலுள்ளவர்கள் அந்த தவறிப் போனவரை நினைவு படுத்தி அவரைப்போலவே இருக்கிறா(ள்)ன். என்று விமரசிப்பதும் அவரின் கடந்த பிறவியின் உயிரை(றவை)த்தானே.. இல்லையா?

    பஸ் என்பது இப்போதும் பேச்சு வழக்கில் உள்ளதாக நினைக்கிறேன். ஆனாலும் அங்கிருப்பவர்களின் வியப்பு ஆச்சரியமாக உள்ளது. இந்த இடத்தில் சகோதரரின் திறமையான கதைகளம் இக்கதையின் திருப்பு முனையாக அமைக்க பார்க்கிறதோ?முடிவு அறிய நானும் காத்திருக்கிறேன்.

    அடுத்து மேடைக்கு வரத் துடிக்கும் புவியியல் பேராசிரியர் துரைசாமி அவர்களின் அனுபவங்களை காணவும் ஆவலாக இருக்கிறேன். ஸ்வாரஸ்யமான கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. பிறிதோர் உலகிற்குப் பயணிக்கிறோம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறிதோர் பிறவிக்குப் பயணிக்கிறோம் என்று கொள்ள வேண்டுகிறேன். தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

      நீக்கு
  9. நல்ல சுவாரஸ்யம் இது எதிர்காலத்தில் நிகழப்போகிறது...

    ஆனால் சம்பவத்தில் சொல்லப்படுவது இந்த (இன்றைய) நமது சந்ததிகள்தான் அதாவது நாம்தான் இல்லையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் சம்பவத்தில் சொல்லப்படுவது இந்த (இன்றைய) நமது சந்ததிகள்தான் அதாவது நாம்தான் இல்லையா ? //

      இன்றைய காலகட்ட நிகழ்வுகளை இரண்டு தலைமுறை தாண்டியவர்கள் காலக்ணினி மூலம் கணிக்கிறார்கள் என்று கொள்ள வேண்டுகிறேன்.;

      நீக்கு
  10. ஒருபொருள் ஆக்கப்படுவதோ அழிகப்படுவதோ இல்லைமாற்ற்ப்படுகிறது அழிவற்றது என்று படித்த நினைவு அதுவே ஒரு கதையின் உட்பொருளாவதைக் காண்கிற ஒரு ஃபண்டசி கதை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. கதை வெகு சுவாரஸ்யமாக செல்கிறது. விஞ்ஞானத்தோடு. லேசாக மெய்ஞானத்தை தொட்டுச் செல்கிறது. உயிர் பற்றிய விளக்கம் அருமை! 

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. வாங்க, டி.டி. தொடர்ந்தும் வாருங்கள். கருத்தைப் பகிர்ந்தும் கொள்ளுங்கள். நன்றி.

      நீக்கு
  13. மெய் ஞானத்தின் உட்பொருள் காண்பதுவும் ஆமோ!...

    விஞ்ஞானத்தின் வழியே மெய்ஞானம் அரிந்தவர் எத்தனை பேர்?...

    நம்மை நாம் உட்கண்டால் விஞ்ஞானத்தின் துணையின்றி மெய்ஞ்ஞானத்தை உணரலாம் என்பது ஆன்றோர் கூற்று...

    பதிலளிநீக்கு
  14. புதிய களம்.. புதிய சிந்தனை...
    கதையின் போக்கு அருமை...

    பதிலளிநீக்கு
  15. இன்னிக்கு என்னமோ போணி ஆகலை போல! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரியான முயற்சிகள் தாமதமானப் புரிதலுக்குள்ளாவது தான் அதற்கான பெருமை.. !!

      நீக்கு
  16. இது வரை வந்திருக்கிற பின்னூட்டங்களில்
    உயிர் பற்றிய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஒரே பின்னூட்டமாக பா.வெ.யின் பின்னூட்டம் திகழ்கிரது. இந்த மாதிரி பின்னுட்டங்கள் வரும் பொழுது தான் மாற்றுக் கருத்துக்களை அலசவும் நமக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த கோணத்தில் பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் பின்னூட்டம் முக்கியத்துவம் பெறுவதை இங்கு குறிப்பிட்டே
    ஆக வேண்டும். ஒரு அலசலுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அவருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. உயிர் பற்ரிய கருத்துருவுக்கு ஒரு வடிவம் அமைத்துத் தரும் முயற்சியாய் அறிவியல் பூர்வமான ஒரு அடித்தளத்தை அமைத்துத் தந்த GMB ஐயாவிற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. //எங்கிருந்து அந்த சக்தி பெறப்பட்டதோ அந்த பரந்த வெளி சக்தியுடனேயே கலந்து விடுவதாகக் கொள்ளலாம்.//

    பெரியவர்கள் சொல்வார்கள் எங்கிருந்து வந்தோமோ அங்கு போகும் நல்ல வழியை பார்க்க வேண்டும் என்றும், வந்த நினைப்பு இருக்கனும் என்றும் எளிமையாக சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  19. கதை மிக அருமையாக இருக்கிறது. அடுத்து என்ன என்று படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. அடுத்த பகுதிக் கதையையும் வாசித்து விடுங்கள்.

      நீக்கு
  20. கதையின் போக்கிலிருந்து விடுபட்டு கதா பாத்திரங்களின் பெயர்க்ள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய நெல்லைத் தமிழன், கீதாம்மா பின்னூட்டங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

    பாபு, துரைசாமி, ராமசாமி, சர்மா, கருணாகரன் போன்ற பெயர்கள் இந்தத் தலைமுறையிலேயே வழக்கொழிந்து போய் விட்டன; இந்த கதை நிகழும் இன்றைய தலைமுறைக்கு இரண்டு தலைமுறைகள் தாண்டிய காலகட்டத்தில் இந்தப் பெயர்கள் எப்படி வழக்கில் இருக்கும் என்பதே இவர்கள் ஆய்வின் தாத்பரியம்.

    கதாபாத்திரங்களுக்கு வைத்த பெபர்கள் பற்றி கூட அந்தக் கதையை எழுதிய ஆசிரியன் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் வேடிக்கையானது. அப்படிப் பெயர் வைத்ததற்கான காரணத்தை கதையை எழுதியவன் விளக்கிச் சொன்னாலும் அதை வாசித்து விட்டு தாங்கள் அதைப் புரிந்து கொண்டதின் அடிப்படையில் மறுமொழியும் கொடுக்கப் போவதில்லை. இருந்தாலும் கேட்டு விட்டார்களே என்பதற்காக இதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு என் எதிர்ப்பார்ப்பைச் சொல்ல வேண்டி இருப்பது என் முறை என்பதால் சொல்கிறேன்.

    தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்தப் பெயர் சூட்டல் விஷயத்தில் ஒரு பெருமையே உண்டு என்பதை நாம் புறந்தள்ளி விடலாகாது. பழந்ததமிழ்ப் பெயர்களை மீட்டெடுத்தவர்கள் அவர்கள். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னாலான வரலாற்று சரிதத்தில் இடம் பிடித்த பெயர்கள் அவை.

    சங்கரன் என்ற பெயரை ஷங்கர் என்று அழைப்பதில் கூட ஒரு பெருமையைக் காணாமல் வழிவழி வந்த நம் முன்னோர் இட்ட பெயர்களை நம் குழந்தைகளுக்குச் சூட்டும் பழக்கத்தைக் கைக்கொண்டோமானால் இன்னும் இரண்டு தலைமுறை என்ன ஈரேழு தலைமுறைக்கும் அந்தப் பெயர்களே வழக்கத்தில் இருக்கும் பெயர்களாக மிளிரும் என்பது உண்மை. இந்த தேசம், அதன் தர்மங்களின் மீது அக்கறை கொண்டவர்கள் இதையெல்லாம் சாதித்துக் காட்டலாம். பெரிய விஷயமே இல்லை.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் பற்றிய ஆராய்ச்சியில் அதை ஆரம்பித்து வைத்த "வல்லி"யை விட்டுட்டீங்களே! இன்னும் இரண்டு தலைமுறை கழித்தும் இந்தப் பெயர்களெல்லாம் வழக்கில் இருக்குமா என்பதாலேயே எனக்குக் கேள்வி எழுந்தது. மற்றபடி எங்க உறவுகளில் ராஜேந்திரன், கண்மணி, கயல்விழி என்ற மீனாக்ஷி, அல்லியங்கோதை, என்றெல்லாம் பெயர்கள் இருந்திருக்கின்றன. இப்போதும் ஒரு ராஜேந்திரன் இருக்கிறார். :)))))

      நீக்கு
    2. நீங்க வந்த மாதிரி நெல்லை வந்து பதில் சொல்வார்ன்னு நெனைக்கிறீங்க?

      நீக்கு
    3. ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி. நான் எதையும் அப்படியே எடுத்துக்கற டைப்! ஆகவே நெல்லை வந்தாலும்/வராவிட்டாலும் பிரச்னை ஏதும் இல்லை.

      நீக்கு
    4. வல்லிம்மா கண்ணில் பட்டால் அவராகவே வாசித்து மறுமொழி அளித்து விடுவார்.

      ஆரம்பித்து வைத்தது அவர் தான் என்றாலும் லேசாக அவர் மனசில் விளைந்த சந்தேகம் தான். அதற்கு அடிக்கோடிட்டது நெல்லை தான். ஹாஹாஹாஹா..

      நீக்கு
  21. அடுத்து கமலா ஹரிஹரன் அவர்கள்.

    //அடுத்துப் பிறக்கும் சந்ததிகள் (பேரன் பேத்தி) அந்த அவரின் பேச்சு,செயல்பாடுகளை வெளிக்காட்டும் போது வீட்டிலுள்ளவர்கள் அந்த தவறிப் போனவரை.. //

    இது ஜீன் சம்பந்தப்பட்ட விஷயமாகக் கருதுகிறேன், சகோ.

    //பஸ் என்பது இப்போதும் பேச்சு வழக்கில் உள்ளதாக நினைக்கிறேன். ஆனாலும் அங்கிருப்பவர்களின் வியப்பு ஆச்சரியமாக உள்ளது.//

    அவர்கள் இரண்டு தலைமுறைகள் தாண்டியவர்கள் ஆயிற்றே!

    இரண்டு மூன்று தலைமுறைகள் கழித்து பஸ் என்பது புழக்கத்தில் இருக்காது என்று நினைக்கிறேன். வேறு சில தொழிற்நுட்ப முன்னேற்றங்களுடன் கூடிய வாகன வசதிகள் கூடியிருக்கும். இப்பொழுதே அந்த மாற்றங்களுக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து விட்டன.

    அடுத்த பகுதியில் எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்து விடும், சகோ. வாசித்து உங்கள் வாசிபனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. //நம்மை நாம் உட்கண்டால் விஞ்ஞானத்தின் துணையின்றி மெய்ஞ்ஞானத்தை உணரலாம் என்பது ஆன்றோர் கூற்று...//

    மெய்ஞ்ஞானம் என்பதும் விஞ்ஞானம் என்பதும் வேறு வேறல்ல. என்றோ மெய்ஞ்ஞானத்தில் கண்டவைகள் ஒவ்வொன்றாக விஞ்ஞானத்தின் துணை கொண்டு நிரூபணம் ஆகி வருகின்றன். மெஞ்ஞானம் என்பது கட்டுக்கதைகள் ஆகிவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு நமக்கு வேண்டும். அதற்குவப்ப மெஞ்ஞான அறிவு பெற்றால் தான் இது சாத்தியமாகும்.

    பதிலளிநீக்கு
  23. வாங்க, பரிவை. தொடர்வதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  24. தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, கரந்தையாரே!..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!