செவ்வாய், 27 ஜூலை, 2021

சிறுகதை :  வரம் -  ஜீவி

 

வரம் 

ஜீவி 

நாவுக்கரசன் பெயருக்கு ஏற்ற மாதிரி பேச்சில் மன்னன்.

உங்களுக்கும் ஓரளவு இவன் அறிமுகமானவனே. தொலைக்காட்சி விழாக்கால பட்டிமன்றங்கள் பலவற்றில் நீங்களும் இவனைப் பார்த்திருக்கலாம்.  முப்பத்தைஞ்சு வயசாகிறது.  இருந்தாலும்  கவலை ரேகை படியாத முகத்தோடு  ராஜா போல இருப்பான்.  ஆமாம், ராஜாப் போலத்தான்!1.



அவன் பேசற எல்லா பட்டிமன்றங்களிலும் தவறாது அவன் மனைவியைப் பார்க்கலாம்.  காட்சியை ஷூட் பண்ணுகிற பார்ட்டிகளிடம்  சொல்லி வைச்சிடுவான் போலிருக்கு.  இவன் பேசறச்சே  தவறாது  நாலைஞ்சு தடவையாவது ஒரு   மேடம் பக்கம் காமிரா  ஃபோக்கஸ் பண்ணுமே,  பார்த்திருக்கீங்களா?.   அவங்க தான் இவனோட மிஸஸ்.  


அவங்களும் ராஜாவுக்கு ஏத்த ராணி தான்.   எப்பவும் அவங்களுக்கு சிரிச்ச மூஞ்சியா  அல்லது காமரா தன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம்  சிரிக்கற மாதிரி முக பாவத்தை வெச்சுப்பாங்களான்னு கண்டுபிடிக்கிறது சிரமம்.  மொத்தத்திலே  ரெண்டு பேருமே கவலையில்லாத மனுஷ வரம் வாங்கிண்டு வந்த மாதிரி ஜிலுஜிலுன்னு தான் இருப்பாங்க.    


நாவுக்கரசன் பெற்றோர் பரம சிவ பக்தர்கள்.   இவன் அம்மாவைப் பார்த்தால்  பொன்னியின் செல்வனில்  வருகிற  செம்பியன் மாதேவியை அப்படியே  உரிச்சு வைச்ச மாதிரி இருப்பாங்க.    இடுப்பில் எப்பவும் சின்னதா  ஒரு சுருக்குப் பை  வைச்சிருப்பாங்க.  அவங்க வீட்டுக்கு யார் போனாலும்  அந்த சுருக்குப் பையிலிருந்து வீபூதி எடுத்துக் கொடுப்பாங்க. அவங்க கொடுக்க நாம அதை பூசிக்க,  'மனம் வெளுக்க மார்க்கம் காணீர்'  என்று  பாரதியார் சொல்லுவாரே  அதான் ஞாபகம் வரும்.    


நாவுக்கரசனின்  அப்பாவுக்கு  லேசா காது கேக்காது.  இருந்தாலும் பேச்சு என்னவோ பளீர்ன்னு இருக்கும்.  கழுத்திலே உத்திராட்ச மாலையும்  தலைக் குடுமியுமாய்  பார்த்தாலே நம்மை அறியாமலேயே பெரியவரிடம் ஒரு பயபக்தி ஏற்பட்டு விடும்.    


வீட்டு ஹால்லே   கண்ணாடி பதித்த ஒரு மர பீரோ.  பீரோ நிறைய  நாயன்மார்களின் புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன்.   சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம்  போட்ட புஸ்தகங்கள்  நிறைய இருக்கும்.    அத்தனை புஸ்தகங்களுக்கும்  பழுப்பு நிறக் காகிதத்தில் அட்டை போட்டு வைத்திருப்பார்.    நிறைய புஸ்தக மேலட்டை மேல்  சந்தன குங்குமம் 

பதித்திருக்கும்.   சரஸ்வதி பூஜையின் போது புஸ்தகங்களை மணையில் வைத்து வணங்கியிருப்பார் என்று நினைத்துக் கொள்வேன்.


அதெல்லாம் அந்தக்கால மனுஷங்களின்  வாழ்க்கை முறை என்று நினைக்கிற மாதிரி  நாவுக்கரசனோ இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி அச்சு அசலா இருப்பான்.  இப்படி பேச்சில் ஆளை அசத்தறானே, என்னய்யா படிச்சிருப்பான்னு பார்த்தா,  அப்படி ஒன்றும்  சொல்லிக்கற மாதிரி இல்லே.  தட்டுத் தடுமாறி எஸ்.எஸ்.எல்.சி. தாண்டுவதற்குள்ளேயே ஒரு வழியாகி விட்டது.  இருந்தாலும்   'குல வித்தை கல்லாமல் பாகம் படும்' --  அது என்ன பழமொழி நானூறு தானே?  --   அந்த மாதிரி ஒரு கொடுப்பினை  அவனுக்கு.    


எனக்குத் தெரிந்து மேடையில் பேச அவன்  எந்த சிறப்புப் பயிற்சியும் பெறவில்லை.   இருந்தாலும்  அது எப்படியோ தெரிலே,   மைக்கைப் பிடிச்சா பிடிச்சதுதான்.  அவனுக்கும் அதை விட மனசு வராது.. நமக்கும் அரங்க ஹாலை விட்டு வெளியே வர மனசிருக்காது. அப்படி  அட்டகாசமாப் பேசுவாங்கறது நான் என்ன புதுசாவா, சொல்லப் போறேன்?..  உங்களுக்கும் தெரிஞ்சது தானே!..


அந்த பேச்சுக்கலைதான்  அவனுக்குக்  கிடைச்ச  சரஸ்வதி கடாட்சம்.    ஒரு தயாரிப்பும் இருக்காது.  இருந்தாலும் பிச்சு உதறி விடுவான். ஒண்ணைச் சொன்னான்னா, அதைத் தொடர்ந்து இன்னொண்ணு இன்னொண்ணுன்னு சங்கிலி கோத்த அழகில் பின்னிப் பிணைந்திருக்கும்.


அவன் அப்பா ஒரு மானி..   யார் கிட்டேயும் எந்த தயவும்  எதிர்பார்க்காமலேயே  அவர் காலத்தை கழிச்சிட்டார்.  இவனோ அதற்கு நேர் எதிர்.   எதுக்கு யாரைப் பிடிச்சு எப்படி விஷயத்தை முடிக்கணும்னு ஜோராத் தெரிஞ்சவன்.    


சொன்னா நீங்களே நம்ப மாட்டீங்க,  உள்ளூர்லே  திண்ணைலே உட்கார்ந்து எங்களோட  அரட்டை அடிச்சிண்டிருந்த நாவுக்கரசன்தான்.   மாமா  வீட்டுக்குப்  போறேன்னு ஒரு நாளைக்குக் கிளம்பி  மெட்ராஸ் போனவன்,  அவன்  மாமா  கூட்டிப் போக   ஒரு தனியார்  தொலைகாட்சி  நிலையத்திற்குப்  போயிருக்கான்.  


அவன் மாமாவுக்கு பட்டிமன்ற பேச்சாளர் ஒருத்தர்  தூரத்து சொந்தம்.  அவர்  நடுவராய் இருந்து நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு நாவுக்கரசனின் மாமாவுக்கு பாஸ் அனுப்பியிருந்தார்.   


நேரலை நிகழ்ச்சி.   அதுக்கு நாவுக்கரசனையும் அவன் மாமா கூட்டிக் கொண்டு போன அதிர்ஷ்டம்தான் நாவுக்கரசனின் காட்டிலேயும்  மழையாயிற்று.  அவர் நடுவராய் இருக்கும் எல்லா பட்டிமன்றங்களிலும் தவறாமல் இவனையும் நீங்கள் பார்க்கலாம்.  பூவோடு  சேர்ந்த நார் மாதிரிதான் பாக்கறத்துக்கு ஆரம்பத்திலே இருந்தது.  போகப் போக இந்த  நார் இல்லேனா  பட்டிமன்றமே சோபிக்காது என்ற நிலையை அந்தப் பூவே உணர்ந்து,  தனக்கு எந்த ப்ரோக்ராம் கிடைச்சாலும் சரி,  இவனுக்கும் தலைப்பைச் சொல்லி அவசியம் வந்திடுப்பா என்று ஃபோன்லே சொல்லி, அதையே மறந்துடாதே, அவசியம் வந்திடணும்ன்னு  ரெண்டு மூணு தடவை ஞாபகப் படுத்த வேண்டிய நிலையாயிற்று 


லாவோஸ் பிரச்னையிலிருந்து லாண்டிரிகாரர் அயர்ன் பாக்ஸில் போடும் அடுப்புக்கரி வரை மிகத் தெளிவாக அறிந்தவன் நாவுக்கரசன்.   நம்மைக் குலுங்கிக் குலுங்கி நகைக்க வைப்பது அவனுக்குக் கைவந்த கலை. எதையும் கோபுரத்திலும் தூக்கி வைப்பான்; குப்பையிலும் தூர எறிவான். அவன் எதைச் செஞ்சாலும் அரங்கமே 'கலகல' குலுங்கிச் சிரிக்கும்.  


டிவிலே பாத்திருப்பீங்களே, காமரா அந்த அரங்கத்தைச் சுற்றி வருகையில்... பஞ்சக்கச்சம்-- வீபூதிக் கீற்று சகித மடி ஆசாமிங்க ரெண்டு மூணு,  சுடிதார்  இளசுகள்,  காலேஜ் பேண்ட்-- டீ ஷர்ட் பூமலர்கள், மடிசார் மாமிகள், நடுவயது கடந்த பெண்மணிகள், சிறுசுகள்  என்று சமூகத்தின் அத்தனை பிரதிநிதிகளையும் ஒரே நேரத்தில்  ஒரே விஷயத்துக்காக   தன்னை மறந்த கலகலப்பில் ஆழ்த்துவதென்றால்,  சும்மாச் சொல்லக் கூடாது, அது பெரிய சமாச்சாரம்தான்.  சுருக்கமா சொல்லணும்ன்னா, எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் விதவித கோணங்கள்லே அவற்றை அலசி ஆராய்ந்து அடி ஆழத்துக்குப் போய் தட்டுப்படற ஒரு குறுக்குக் கேள்வியில் அதைத் தூக்கிப் போட்டு, 'அடபோப்பா.. இவ்வளவு தான்யா இது' என்றுஅவன் சொல்லி முடிக்கும் பொழுது 'அட, ஆமாம்லே' என்று நமக்கே அவன் சொன்னது புது விஷயமாய்த் தோன்றும்.. இதான்  நாவுக்கரசன்னா, ப்ளீஸ், ஏத்துக்கங்க.. 

நாம அடுத்த  விஷயத்துக்குப் போலாம். 


போனவாரம் விவேகானந்தன் வீட்டில் ஒரு விசேஷம்.. ஒண்ணுமில்லே, விவேகானந்தன் தாத்தாவாகியிருந்தான்.  விவேகானந்தன் யார்னா, எங்க க்ரூப்லே ஒருத்தன்னு  மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன்..  இன்னொரு தபா அவனைப் பத்தி டீடெயிலா...  சரியா?.. அவன் மருமகளுக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தது. அது தொடர்பான விசேஷத்திற்குத்தான் நண்பர்களை அழைத்திருந்தான்.


விசேஷத்தின் விசேஷ சாப்பாடு முடிந்து வெற்றிலை பாக்கு மென்றபடி பேசிக்கொண்டிருந்தோம்.


பேச்சின் நடுவே, "பெண் குழந்தேல்லயோ?" என்று விவேகானந்தன் எது பற்றியோ சொல்லத் தொடங்க, நாவுக்கரசன் பிடித்துக் கொண்டுவிட்டான். "என்னப்பா காந்தன்! ... பெண் குழந்தேல்லயோ--ன்னு இழுக்கறே..உங்களுக்கெல்லாம் பெண்ணென்றால் அப்படி ஆகிப் போச்சா?.." என்று அவன் ஆரம்பிக்க...


"இல்லே, நாவுக்கரசு! நான்.." என்று காந்தன் ஏதோ சொல்ல வரும் பொழுதே, பட்டிமன்ற பாணியில் நாவுக்கரசன் அடித்துப்பேச ஆரம்பித்து விட்டான்: "ஒண்ணு தெரிஞ்சிக்க.. பிள்ளையாயிருந்தா, பெண்டாட்டி முந்தானையைப் பிடிச்சிண்டு போயிடுவான்.. பொண்ணுங்க தான் இன்னொரு வீட்டுக்குப் போனாலும், பெத்தவங்களை மறக்காம நன்றியோட நெனைச்சிகிட்டு இருப்பாங்க.. மனசிலே ஆயி?.."


யாருக்கும் ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. கும்பகோண வெற்றிலைச் சாறு வாய்க்கு அமிர்தமாக இருக்கவே, இன்னும் இரண்டு வெற்றிலை எடுத்துத் துடைத்து, அவற்றின் முதுகில் மூன்றாவதைத் தடவினேன்.


அட்டகாசக் குரலில், நாவுக்கரசனே தொடர்ந்தான்: "என்னையே எடுத்துக்கங்க.. அடுத்தடுத்து நாலு பொண்ணுங்க... வரிசையா பொம்பளைப் பிள்ளைங்களா பிறந்திருச்சேன்னு நானோ என் மனைவியோ என்னிக்குமே சலிச்சிக்கிட்டதில்லே.. "


எல்லோரும் விவேகானந்தனை ஒரு மாதிரி பார்க்க, விவேகானந்தன் சிரிச்சிக்கிட்டே சொன்னான்: "எனக்கு முதல் குழந்தை ஆண்.. இதிலே எங்க விருப்பம் ஒண்ணுமில்லே.. அடுத்தது, பெண்.. எங்க விருப்பப்படியே பெண்ணாப் பிறந்ததும், தடா போட்டுட்டோம்."


"பையனுக்கு அடுத்தது, பெண்ணா இருக்கணும்னு விரும்பினியா..அதைச் சொல்லு?" என்று நாவுக்கரசன் கொக்கி போட்டான்.


"அப்கோர்ஸ்.. சந்தேகமில்லாம... அதுக்குத்தான் ஒண்ணோட நிறுத்திக்காம அடுத்ததுக்கும் ஆசைப்பட்டோம்.. ஆனா, நாவுக்கரசு! நீ என்ன நெனைச்சே.. அடுத்ததாவது ஆணா இருக்கக்கூடாதா, இருக்கக்கூடாதான்னு நாலு வரைக்கும் முயற்சி செஞ்சிருக்கே.. உண்டா, இல்லையா?"


எனக்குத் தெரிந்து நாவுக்கரசன் முகத்தில் முதல் முறையா அசடு வழிந்தது. நாவுக்கரசனை மடக்கி விட்ட விவேகாந்தனின் முகத்தில் சலனமே இல்லை.


"ஆணா, பெண்ணாங்கறதெல்லாம் நம்ம கையிலே இல்லேப்பா!" என்று அனுபவ உணர்வுடன் சொல்லும் அவனை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன்.


எங்கள் அரட்டையிலிருந்து விலகிச் சடாரென்று எழுந்து போன ராமசுப்புவின் துயரம் எனக்குப் புரிந்தது.. எதுவாவது ஒன்று என்று ஒரு குழந்தைக்கு ஏங்கும் அவரின் ஏக்கம் அதற்கு மேலும் அவரை அங்கு உட்கார்த்தி வைக்கவில்லைங்கறது தெரிஞ்சது.


= = = = 

71 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு..

    குறள்நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்கியம் நிறை வாழ்வை இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. ஜீவி சாரின் கதை 'வரம்' படிக்க வேண்டும்.
    பட்டிமன்ற ராஜாவை அப்படியே வரைந்திருக்கும்
    கௌதமன் ஜிக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
    அச்சு அசல் அவரே தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைலே வர்ற அச்சு அசலா-ங்கற வார்த்தை வரை படிச்சிட்டு மேற்கொண்டு படிக்கலை போலிருக்கு. :))

      நீக்கு
  6. நாவுக்கரசன் உண்மையில் மனித மனங்களுக்கு
    அரசன் இல்லை போல.
    உண்மையில் பரிதாபத்துக்குரியவன்,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனித மனங்கள் என்று தனியாக ஏதும் இல்லை. வாழ்க்கையில் அவரவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுகு ஏற்ப வார்ப்பு கொள்ளும் நிலைகளைத் தான் மனமாக உருவகிக்கிறோம்.

      நீக்கு
  7. குழந்தை வரம் கிடைக்காத ராமசுப்பு
    கதைக்கு நல்ல முடிவு.
    எதுவுமே நம் கையில் இல்லை என்பது தீர்மானம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தக் காரணத்தால் குழந்தை வரம் கிட்டாமல் ராமசுப்பு காப்பாற்றப்பட்டு அவர் இறை அருள் பெற்றார் என்பதற்குக் கூட கதை ஒன்று எழுதலாம்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. பலரும் இப்படித்தான் என்பதிலேயே
      அந்த 'இப்படித்தான்' என்பதற்கு ஒரு வெகுஜன ஆதரவு கிட்டி விடுகிறது பாருங்கள், கரந்தையாரே;

      நீக்கு
  9. பட்டிமன்ற பேச்சாளர் அசலில் யாராவது மாடலா?

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. 'கடைசி வரிகள் தான் கதையே..'

      ததாஸ்து.

      ஆனால் அந்த அஸ்திவாரத்தின் எழுப்பப் பட்ட கதைக் கட்டிடம் தான் கண்ணுக்குத் தெரிகிறது.

      நீக்கு
  11. ஹெமிங்வே ஒரு வரிக் கதை எழுதியிருப்பார்:
    for sale: baby shoes, never worn.
    இதான் கதை.

    வரம் கடைசி வரிகள் ஹெமிங்வேயை நினைவுபடுத்தின.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம். வாங்கோ !

      நீக்கு
    2. எபி வாட்ஸாப் குரூப்பில் உங்கள் அறிக்கை பார்த்துத் திகைத்துப போனேன்!
      இயலானதெற்கெல்லாம் திகைக்கக் கூடாதென்ற ஞானோதயம் அப்புறம் தான் கிட்டியது!!

      நீக்கு
  13. எல்லா மனிதர்களுமே ஆண் குழந்தைக்குதான் விருப்பம் கொள்கிறார்கள்.
    குழந்தை பிறக்க தாமதமாகும் பொழுது பெண் குழந்தையானாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள்.

    மேலும் தாமதமாகும் பொழுது ''ஏதோவொன்று'' பிறந்தால் போதுமென்று கடவுளை வேண்டுவதுதான் மனிதமனம்,

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. கதை நன்றாக இருக்கிறது.கெளதமன் சார் ஓவியம் பொருத்தமாக இருக்கிறது.

    வாங்கி வந்த வரம் தான் எல்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கெளதமன் சார், ஓவியமா?

      அவர் இப்பொழுதெல்லாம் ஓவியத்தில் கதை அல்லவோ எழுதுகிறார்!

      நீக்கு
    2. ஆ ! ஜல்ப்பு புடிச்சுக்கும் போல இருக்கு!

      நீக்கு
  16. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஜீவி சகோதரரே

    கதை நன்றாக இருக்கிறது. அழகாக நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள். ஒரு நாளின் அன்றாட நிகழ்வுகள் கூட அமைவதும் நாம் வாங்கி வந்த வரந்தான். நம் கையில் எதுவும் இல்லை.

    பொதுவாக அப்படியே சில எண்ணங்கள் தம் வாழ்வில் நடக்கிறது, அது எங்களின் தீவிர முயற்சியால்தான் என சிலர் தற்பெருமை அடைந்தாலும் கூட அது இறைவன் நமக்கு தரும் வரம் என்பதை அந்த சிலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

    நல்ல கதை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ஒரு நாளின்..... வரந்தான். '

      கரெக்ட்! முற்பகல் நல்லது செய்து, பிற்பகல் வரமாகப் பெற்று விடுவோம்..

      நீக்கு
  18. வணக்கம் கெளதமன் சகோதரரே

    இன்றைய கதைக்கு பொருத்தமாக நீங்கள் வரைந்த ஓவியம் நன்றாக உள்ளது. உங்களின் திறமைக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. பதில்கள்
    1. வாசித்து கருத்து தந்தமைக்கு நன்றி, நண்பரே!

      நீக்கு
  20. ஒரு கதையை வாசித்ததின் அடையாளமாக சம்பந்தமில்லாமல் வேறு பக்கம் கவனம் போகாமல் கதையை ஒட்டியதாகவே கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. நல்ல கதை. கடைசியில் சொன்ன விஷயம் - சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி விஷயமே கதை வண்டி உருண்டதற்கு அச்சாணி.

      நன்றி, வெங்கட்ஜி.

      நீக்கு
  22. அப்பாதுரை அவர்கள் ஹெமிங்வே அவர்களை நினைவு கொண்டார்கள்.
    மொத்த கதையையும் கடைசி வரியில் கொண்டு வந்து நிறுத்தி தடாலென்று புரட்டிப் போடும் முடிவை அழுத்தமாகச் சொல்வதில் எனக்கு ஓ ஹென்றியைப் பிடிக்கும்.

    எனினும் தடாலடி எதுவுமின்றி எல்லோரும் எதிர்பார்க்கிற ஏற்றுக் கொள்கிற இயல்பான முடிவு என் பதினால் அப்பாதுரை நினைவு கொண்டதே சரி.

    பதிலளிநீக்கு
  23. அடுத்து தேவகோட்டையார் விவரித்த அந்த 'மூன்று நிலை' என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதை அவர் சொன்ன விதமும் அழகு.

    பதிலளிநீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. இப்படியான எண்ண ஓட்டங்களைக் கையாள்வதில் ஜீவி அண்ணா அவர்களுக்கு நிகர் ஜீவி அண்ணா அவர்களே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனன் நிறைந்த வெளிப்பாடுகளும்
      பெற்ற வரம்களே!!

      நன்றி தம்பீ!..

      நீக்கு
    2. மனம் நிறைந்த.. (திருத்தல்)

      நீக்கு
  26. ஆரம்ப பின்னூட்டத்திலேயே ஓவிய பாராட்டாக வல்லிசிம்ஹன் அவர்கள் நினைவுக்கு
    வந்த அனுமானத்தை நிச்சயம் பண்ணிக் கொள்ளும் விதத்தில் அப்பாதுரை பின்னால் வரும் தன் பின்னூட்டத்தில் 'அசலின் ஏதாவது மாடலா' என்று கொக்கி போடுகிறார்.
    இந்த நியாயமான சந்தேகத்தை பற்றி கொஞ்சவாவது விவரமாகச் சொல்ல வேண்டும். சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. சில விஷயங்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்கும் பொழுது நம் நினைவுக்கு சிலர் வருவது இயல்பான ஒன்றே.
    சில நிஜங்களை நினைவுபடுத்துகிற மாதிரியே போக்குக் காட்டி விட்டு 'அட, அவரில்லையே' என்று வாசகர் சந்தேகிக்கிற மாதிரி மேற்கொண்டான விவரணைகளை அடுக்குவது கதைகள் எழுதுவதில் வாசிப்பவருக்கு ஒரு 'எக்ஸ்ட்ரா' சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். அதனாலேயே, நாவுக்கரசனின் மிஸஸ் பற்றிய வர்ணனைகள் அந்த இடத்தில் வந்தன.

    கற்பனைகளில் நிஜங்களுக்கு இடமில்லை என்ற நிலையையும் இதனால் நாம் கட்டிக் காத்தவர்களாகிறோம்.
    இந்த விஷயத்தில் தன் பங்கை மிக அழகாகப் பதித்த கேஜிஜிக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. ** நிஜங்கள் என்று இங்கு குதிப்பிட்டது நிஜ வாழ்க்கையில் வாழும் மனிதர்களை

    பதிலளிநீக்கு
  29. அனைவருக்கும் முகம் மலர அன்பான மாலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  30. அருமையான கதை! நமக்கு பரிட்சயமான ஒருவரைப் பற்றிய கதையாய் விவரித்தது அருமை.நம் கைகளில் எதுமில்லை என, நல்லதொரு முடிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பு அனுபவங்கள் வேடிக்கையானவை. ஒவ்வொருவருக்கும் அது வித்தியாசப்படுவது தான் அதன் சிறப்பு. நன்றி.



      நீக்கு
  31. குழந்தை வரத்தைப் பற்றிய கதைதான்.. ஆனால் அதற்கான மெனெக்கெடல், உரையாடல்கள், கதையின் போக்கு பிடித்திருந்தது. நல்ல கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குப் பிடித்திருந்ததில் சந்தோஷம்..சொந்த திருப்திக்குப் பிறகு தான் பிறருக்குப் பரிந்துரைக்கப் படுவதால் மெனக்கிடல் இயல்பாகவே அமைந்து விடுகிறது. நன்றி, நெல்லை.

      நீக்கு
  32. சொல்ல வந்ததை நறுக்கென்று சொன்ன விதம் சிறப்பு. கதையின் கடைசியில் வந்த ராமசுப்பு கவனத்தை கவர்ந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  33. ராமசுப்புவே குழந்தை தான்.

    அதனால் தான் அந்த இடத்தில் அவரால் அதற்கு மேல் உட்கார முடியாமல் போயிற்று.

    வாசித்தமைக்கு நன்றி, பா.வெ.

    பதிலளிநீக்கு
  34. விவேகானந்தன் தான் காந்தனா?
    ராமசுப்புவை உங்கள் நண்பர்களில் ஒருவராக முதலிலேயே அறிமுகப்படுத்தியிருக்கலாம். வெளியே போகும் போது அறிமுகம் ஆகி வெளியேறியதில் கதைக்கு திடீர் திருப்பம் கொடுத்துவிட்டார்.
    இரண்டுமுறை கதையைப் படித்தேன். பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  35. கரெக்ட். ராமசுப்பு கதையில் வந்து போன அந்தத் தருணம் தான் முக்கியமாகப் போய் வாசகர் மனசில் பதிந்திருக்கிறது.

    இப்பொழுது தான் பார்த்தேன். அதனாலேயே நன்றி சொல்ல தாமதம்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!