வியாழன், 14 ஏப்ரல், 2022

யாசக சாலை

 தர்மம் செய்கிறீர்களா?

நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தர்மம் இருக்கிறதா என்று கேட்கவில்லை!! யாசகம் கேட்போருக்கு காசு போடுகிறீர்களா என்றே கேட்க விரும்புகிறேன்.  

ஆமாம் என்றால் எவ்வளவு தர்மம் செய்கிறீர்கள்?  தானத்துக்கு தர்மத்துக்கும் வித்தியாசம் உண்டு என்று எங்கோ படித்தேன்..  நம்ம புதனில் கூட கேள்வி வந்ததோ..

அந்தக் காலத்தில் பத்து, ஐந்து, இரண்டு, ஒரு பைசாக்கள் தர்மம் செய்யவே புழக்கத்தில் இருந்தன!  இப்போது 50 பைசா, 25 பைசா கூட புழக்கத்தில் இல்லையென்று நினைக்கிறேன்.  மினிமம் ஒரு ரூபாய்தான்!  உண்மையிலேயே முடியாத, இல்லாத ஏழை யாசகர்களுக்கு அம்மா உணவகம் ஒரு வரப்பிரசாதம்.

தியேட்டர்களிலும், மால்களிலும் ஏராளமாக பணம் செலவழியும் நிலையில் மக்கள் யாசகர்களிடமும் சற்று தாராளமாகவே இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் யாசகர்கள் முன்னர் அளவுக்கு இல்லாமல் அளவில் குறைந்திருக்கிறார்களோ என்கிற சந்தேகமும் இருக்கிறது.

கேட்காமல் செய்வது தானம்.  கேட்டபின் செய்வது தர்மம்.  

நான் பள்ளியில் படிக்கும்போது அப்பாவிடமிருந்து பஸ் காசு வாங்குவதே பெரிய விஷயம்.  அப்போ பதினெட்டு பைசா பஸ் காசு என்று ஞாபகம்.  ஸ்கூல் சென்று வர ஒன்பது பைசா ப்ளஸ் ஒன்பது பைசா பதினெட்டு பைசாவா,   பதினெட்டு ப்ளஸ் பதினெட்டு முப்பத்தாறு பைசாவா என்று நினைவில்லை.  தினசரி காலை அதை அப்பாவிடமிருந்து வாங்குவதற்குள்...

என் பல தோழர்கள் பஸ்ஸுக்கு காசு இல்லாமல் நடந்தே சென்று வருவது வழக்கம்.  

என் அக்கா பலமுறை அந்தக் காசு இல்லாமல் பள்ளியிலிருந்து நடந்தே வீடு வந்திருக்கிறாள்.  ஒருமுறை நான் என் காசை தொலைத்துவிட, அவள் காசை என்னிடம் கொடுத்து பஸ் ஏற்றிவிட்டு, அவள் நடந்து வந்திருக்கிறாள். அப்பாவிடம் விஷயத்தையும் சொல்ல மாட்டோம்..  யார் அடி வாங்குவது!!

ஆனால் ஒன்று.   இப்போது போல வெள்ளை பஸ், பச்சை பஸ் என்று வெவ்வேறு கட்டணம் கிடையாது.  வெண்சங்கு என்கிற தனியார் பஸ்ஸும் வரும்.  அதிலும் அதே கட்டணம்தான்.

இந்த லட்சணத்தில் இருக்கும் எங்கள் நிலையில், பஸ் ஸ்டாப்பில் நிற்கும் எங்களிடம் ஒரு குண்டான - மிகவும் குண்டான - இளைஞனுக்கும் இளையவன், பையன்களில் பெரியவன் - ஒருவன் வந்து யாசகம் கேட்பான்.  "பத்து பைசா கொடுங்க பிரதர்..   இரண்டு இட்லி சாப்பிட்டுப்பேன்..  பசிக்குது..."

'அவனே இட்லி போல இருக்கிறான்' என்று எங்களுக்குள் சிரித்துக் கொள்வோம்.  'அவனுக்கு இரண்டு இட்லி எப்படிடா போதும்' என்றும் சிரிப்போம்.  இந்தப் பேச்சே சில சமயங்களில் அவன் மீது ஒரு இரக்கத்தையும் எங்களுக்குள் தோற்றுவிக்கும்.

நாமெல்லாம் டிஃபன் பாக்சில் எடுத்துக் கொண்டு வந்து சாப்பிடுகிறோம்..  அவனுக்கு யாரும் இல்லை போல என்று எங்களுக்குள் பேசிக்கொண்டு நாங்கள் மூன்று பேர் எங்கள் பஸ் காசிலிருந்து ஆளுக்கு ஐந்து பைசா தியாகம் செய்தோம்.  என்ன, மங்களபுரத்தில் இறங்கி  நடக்கவேண்டும்..  நடந்துடுவோம் என்று பேசிக்கொண்டு!

ஒருமுறை அப்பா, அம்மாவுடன் ஒரு சிவாஜி படம் யாகப்பா தியேட்டரில் பார்க்கச் சென்றபோது எங்களுக்கு அடுத்த மேல்வகுப்பில் அவனைப் பார்த்தேன்.  இடைவேளையில் ஏதேதோ வாங்கி கொண்டு தாண்டிச் செல்லும் அவனை ஏக்கத்துடன் பார்க்கத்தான் முடிந்தது!  அப்பாவிடம் சொன்னேன், 'அப்பா..  இவன் எங்கள் கிட்ட வந்து டெய்லி பத்து பைசா பிச்சை கேட்பான்' என்று.  நான் அவனுக்கு காசு கொடுத்ததோ, என் ஏமாற்றமோ அப்பாவுக்குத் தெரியாதே..   சும்மா தலையை ஆட்டிக்கொண்டார்.  அங்கிருக்கும் கடைப்பக்கம் திரும்பியே பார்க்காமல் மூச்சா போயிட்டு உள்ளே அழைத்து வந்தார்!  ரொம்ப ஸ்ட்ரிக்ட்!

அப்புறம் பஸ் ஸ்டாப்பில் என்னைப்  பார்த்தால் அவன் யாசகம் கேட்க அருகில் வரமாட்டான்.  நாங்கள் நண்பர்கள் அவனை சற்றே விரோதத்துடன் பார்த்தபடி நின்றிருப்போம்.  இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

டெலிபோன் டைரக்டரியிலிருந்து ஏமாற்ற என்றே என்னைத் தேடி அழைத்து ஏமாற்றிய ஒரு அன்பரும் உண்டு.  திருப்பதிக்கு வேண்டுதல், தாலிக்கு தங்கம் (நோ அரசியல்ங்க......) என்று பேசி காசு வாங்கிச் சென்றார்.  எரிவாயு சிலிண்டர் விஷயத்தில் ஒரு முறை ஏமாந்திருக்கிறேன், ஒருமுறை மயிரிழையில் தப்பி இருக்கிறேன்.

அது சரி..  பாவப்பட்டவர்கள் என்று நினைக்கும் நபர்களுக்கு யாசகம் போட என்றே முன்னர் இரண்டு பைசா, ஒரு பைசா, அஞ்சு பைசா, பத்து பைசா எல்லாம் இருந்தன.  25 பைசா கொஞ்சம் காஸ்ட்லி!

இப்போது எல்லாம் யாசகம் என்று ஒரு ரூபாய் போட்டால் அவர் நம்மை ஒருமுறை நிமிர்ந்து பார்ப்பார்...  எங்கே திருப்பி எடுத்து கொடுத்து விடுவாரோ என்று கூட தோன்றும்.  திருப்பிக் கொடுக்கும்போது அது அஞ்சு ரூபாய் நாணயமாகக் கூட இருக்கலாமோ என்றும் தோன்றுமளவு..

ஆமாங்க..    பெட்ரோல் என்ன விலை விற்குது?!

முன்பு இருந்த வீட்டுக்கருகில் ஒரு மனநிலை பாதித்த பெண் இருந்தார்.  நல்ல குண்டாக ஆஜானுபாகுவாக இருப்பார்.  எப்போதுமே குளிக்கப் போவது போல ஒரு புடைவையை கழுத்து வரை சுற்றி இருப்பார்.   கையில் ஒரு கம்பு இருக்கும்.   தெருவோர குழாயில் குளியல்.  நடந்து கொண்டே இருப்பார்.  எங்கேயாவது பிளாட்பார்மில், மர நிழலில் படுக்கை.

இவரை ஏன் நினைவு வைத்திருக்கிறேன் என்றால் ஒருமுறை பள்ளி விட்டு சென்று கொண்டிருந்த மூன்று நான்கு பெண்களை ஒரு விடலைக் கும்பல் சமாளிக்க முடியாத அளவு வம்பிழுத்துக் கொண்டு சென்றது.  நான் வீட்டின் மொட்டை மாடியில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்.  தெருவில் தாண்டிச் செல்லும் யாரும் ஒன்றும் சொல்லவில்லை.  சிறுமிகள் பயந்து நடந்து கொண்டிருக்க, கையில் குச்சியுடன் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார் இவர்.  சம்பவத்தை கவனித்தார்.  நின்றார்.  பார்த்தார்.  நிதானமாக தெருவைக் கடந்து அருகே வந்தார்.  தாண்டிச் சென்ற ஓரிரு கார், பைக்குகள் பிரேக் அடித்து நிற்க நேர்ந்தன.  அவற்றை லட்சியம் செய்யாமல், பார்க்காமல்தான் தாண்டி வந்தார்.

சிறுமிகளுக்கு முன்னே குச்சியுடன்  நின்றார்.  அவர்களுக்கு முன்னே பைலட் போல நடந்தார்.  அவர் பார்வை முழுக்க அந்த விடலைகளிடம் உக்கிரமாக இருந்தது.  அவர்கள் நழுவி ஓடிவிட்டார்கள்.  பார்த்துக் கொண்டிருக்கையில் நீண்ட நேரம் கழித்துதான் திரும்ப தன்வழி நடந்தார் அவர்.  அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு அந்தச் சாலையில் அந்த நேரத்துக்கு குச்சியுடன் 'வைதேகி காத்திருந்தாள்' விஜயகாந்த் மாதிரி நின்றிருந்தார்.  எனக்குத் தெரிந்து அவர் ஒரு வார்த்தை கூட அந்தச் சிறுமிகளிடமும் பேசவில்லை.

சில வருடங்கள் ஆகிவிட்டன.

இவரை  இப்போதும் ஓரிரு போக்குவரத்து நிறுத்தங்களில் பார்க்கிறேன்.  சடை விழுந்த முடியுடன், கையில் குச்சியுடன் சில நேரங்களில் மட்டும் யாரிடமாவது கையேந்துவார்.  அந்த நெரிசலில் இறங்கி தர்மம் செய்ய முடியாது.  அவர் அருகில் கிடைக்கும் ஒருநாளில் அவர் கையில் தர முதலில் பத்து ரூபாய்த்தாள் கையில் வைத்திருந்தேன்.  இப்போது இருபது ரூபாய்த்தாள் கையில் வைத்திருக்கிறேன்.  ஒரு நாள் தருவேன்!

அவர்கள் மனம் நிறையும் வகையிலோ, வாழ்க்கை நிறையும் வகையிலோ தர்மம் செய்ய முடியாது.  நம்மால் முடிந்த அளவு.  இப்போதெல்லாம் ஒரு ரூபாய்க்கு என்னென்ன அவர்களால் வாங்க முடியும்?  ஆனால், நாம் அவர்களால் என்னென்ன வாங்க முடியுமோ அந்த அல்லவா தர்மம் செய்ய முடியும்?  நம்மால் இயன்ற அளவு..  


===========================================================================================================

சென்ற வாரம் வாட்ஸாப்பில் வந்த ஒரு பகிர்வு...


இன்று முதல் பணப் பிச்சை நிறுத்தம்...

  பிச்சைக்காரர்களுக்கு (உணவு + தண்ணீர்) கொடுங்கள்...

ஆனால் ஒரு ரூபாய் கூட பணமாக கொடுக்ககூடாது ...

மும்பை-புனே ஹைதராபாத்தில் அனைத்து விதமான பிச்சைக்காரர்களை கட்டுபடுத்த வித்தியாசமான இயக்கம் தொடங்கியுள்ளது.... 
 
எந்த வகையினரும் (பெண், ஆண் ,மற்றும் முதியவர் மாற்றுத்திறனாளி  குழந்தைகள்) பிச்சை எடுத்தால் பணத்திற்கு பதிலாக (உணவு + தண்ணீர்) கொடுப்போம்...,  அப்படி செய்தால்  இன்று முதல் அவர்கள் பணத்தை பிச்சை எடுக்க மாட்டார்கள்.... 

இதன் விளைவாக, சர்வதேச தேசிய மாநில அளவில், பிச்சைக்காரர்கள்
 கும்பல் உடைந்து, குழந்தை கடத்தல் தானே நின்றுவிடும்....  இத்தகைய கும்பல்களின் குற்றம் உலகில் முடிவடையும்...

 பதிவை பகிரவும்...

 மேலும் ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள்...

 உங்களுக்கு விருப்பமானால் உங்கள் வாகனத்தில் 2 பிஸ்கட் பாக்கெட்டுகள்
வைத்துக் கொள்ளுங்கள் ..  உணவு மற்றும் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்...
அதை கொடுங்கள்.. ஆனால் பணம்  கொடுக்காதீர்கள்...

 
இந்த பிரச்சாரத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், இந்த யோசனையை அடுத்த மூன்று குழுக்களுக்கு அனுப்பவும்....

Make this chain keep sharing in your contacts..

==========================================================================================================

நேற்றிரவு கீதா தொலைபேசி இந்த விவரத்தை இன்றைய பதிவில் சேர்க்கச் சொன்னார்.  நானெங்கே...  உங்களுக்குத் தெரிந்த விஷயத்தை சுருக்கமாக எழுதி அனுப்புங்களேன் என்று சொன்னேன்.  அவரும் அனுப்பி இருக்கிறார்.  இது ஒரு முக்கியமான செய்தி என்கிறார் கீதா.  நன்றி கீதா.


மிகப்பெரிய சூரிய புவிகாந்தப் புயல்,  ஏப்.14, 2022 அதாவது இன்று, புவியைத் தாக்கும் என்றும், தாக்கிய பின் வேகமாகத் தீவிரமடையும் என்றும் நாசா கணித்திருக்கிறது. நாசா மட்டுமின்றி உலகெங்கும் உள்ள விண்வெளி நிறுவனங்கள் இந்தப் பெரிய, சூரிய புவிகாந்தப் புயல் பூமியைத் தாக்க உள்ளதாகச் சொல்லியிருக்கின்றன.


இது கொஞ்சம் அபாயகரமாக இருக்கலாம் என்றும் கணிப்பின் படி தெரிகிறது.  


இந்திய விண்வெளி அறிவியல் மையம் (CESSI) டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ஏப்ரல் 14, 2022 அன்று 429-575 கிமீ/வி வேகத்தில் பூமியின் தாக்கத்தின் மிக அதிக நிகழ்தகவைக் குறிக்கிறது. குறைந்த முதல் மிதமான புவி காந்த இடையூறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.


சூரிய புவி காந்தப் புயல் என்பதாவது, சூரியன் கணிசமான அளவு கரோனல் மாஸ் எஜெக்ஷனை அதிக செறிவு ஆற்றலுடன் பூமியை நோக்கிச் செலுத்த உள்ளது, மற்றும் உள் சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற சில கிரகங்களை நோக்கியும் வியாழன் அன்று (இன்று) செலுத்த உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

NASA மற்றும் NOAA ஆகியவை சூரியனால் ஏற்படும் CME உமிழ்வைக் கண்காணித்து வருகின்றன. மேலும் ஏப்ரல் 14 அன்று புயல் நமது கிரகத்தைத் தாக்கும் என்று கணித்துள்ளது.


இந்தப் புயல் பூமியைத் தாக்கிய பிறகு, அது மிக வேகமாக தீவிரமடையும் என்று நாசா கணித்துள்ளது.


 சூரிய புவி காந்தப் புயல் பூமியின் மின்சார கிரிட் மற்றும் பிற வளங்களை சேதப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளதாம். மற்றும் பூமியில் அதிக உயரத்தில் உள்ள பகுதிகளில் மின் தடை மற்றும் ரேடியோ சிக்னல்களில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது. மத்திய உயரமான பகுதிகள் அதிக சேதத்தை சந்திக்காமல் இருக்கலாம், ஆனால் சில மின் தடைகள் இருக்கலாம்.



லிங்க் 1


லிங்க் 2



=====================================================================================================




எங்கே போனார்கள் எல்லோரும்?

முடியவில்லை என்றாலும் 
முயன்றுகொண்டுதான் இருக்கிறேன் 
எப்படி மாட்டிக்கொண்டேன் என்று தெரியவில்லை 
ஆயிரம் கிளைகளுடன் படர்ந்து 
தரையில் நீண்டிருக்கும் 
இலையிலா மரத்தின் 
வளைந்த கிளைகளுக்கு நடுவில் 
முகம் இடுப்பு முதுகு கால் 
கை யென்று மாட்டிக்கொண்டிருக்க 
எப்படி வெளிவருவது என்று தெரியாமல் 
நெளிந்து நெளிந்து 
முடியவில்லை என்றாலும் 
முயன்றுகொண்டுதான் இருக்கிறேன் 
நசுங்கி விழுந்த கணம் 
மீண்டும் நகர்கையில் வாழ்க்கையின் 
வாய்ப்பொன்றை இழந்ததது 
தெரிந்தாலும் 
முயன்று கொண்டுதான் இருக்கிறேன் 

=========================================================================================================


2020 ல் கொரோனா இந்தியா முழுவதும் பயமுறுத்திய காலத்தில் செய்தித்தாள், பேஸ்புக் என்று எங்கெங்கும் கொரோனா நியூஸ்...  அப்போது முக்கியமாக என் மனதை திருப்ப இது மாதிரி சி பதிவுகள் பேஸ்புக்கில் இட்டேன்.




எம் ஜி ஆருக்கு இருக்கும் சிறப்புகளில் இதுவும் ஒன்று என்று வைத்துக் கொள்ளுங்களேன்...!

================================================================================================================

ரசித்த படங்கள் வரிசையில்...

இன்று பெட்ரோல்  விற்கும் விலையில் இது பொருத்தமே....





========================================================================================================

பொக்கிஷம்...

சுவாரஸ்யமான விஷயங்கள்தான்.  டைப் அடித்துப் போட்டால் கூட நன்றாயிருக்கும்.  பொறுமை இல்லாததாலும், எப்போதோ வெளிவந்த விநோதங்கள் என்பதை நிரூபிக்கவும் படமாக வெளியிடுகிறேன்.  படிக்க முடிகிறதா என்று சொல்லுங்கள்.  கீழே உள்ளவை யாவுமே இன்றைக்கு 52 வருடங்களுக்கு முன்னால் தீபம் இதழில் வெளிவந்தவை.



ரகசியத்தைக் கேட்பவர்களுக்கு நல்ல பதில்...


அனுபவித்தவனுக்குத் தெரியும் அதன் கஷ்டம்!


இடது மேல், கீழ் மூலைகளைப் பார்த்தீர்களா?  என்ன தெரிகிறது?


பூச்சிகளுக்குத் தெரிவதில்லை புத்தகத்தின் அருமை!

அடுத்து வரும் மூன்று செய்திப் படங்களும் முக்கியமான விஷயங்கள்.  இது போன்ற விஷயங்களை வெளியிட்டிருப்பபது கல்கண்டு!



======================================================================================================

என்னடா...   இன்று தமிழ்ப்புத்தாண்டு...    அது சம்பந்தமாய் பதிவில் ஒன்றுமில்லை சரி, ஒரு வாழ்த்து கூடவா இல்லை என்றுதானே யோசிக்கிறீர்கள்?


அதற்குதான் நான் வந்திருக்கிறேன்...   தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் மக்கா...

179 கருத்துகள்:

  1. பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
    அணிஎன்ப நாட்டிற்கு இவ் வைந்து..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. சுப கிருது வருகவே..
    சுகங்கள் எல்லாம் தருகவே..
    அறங்கள் எங்கும் பெருகவே..
    அமுதத் தமிழ் நிறைகவே!..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கத்துடன்
    அனைவருக்கும்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு

  4. கடைசியில் உள்ள படத்திற்கு ஜே ஜே ஜே ஜே காரணம் எனக்கு பிடித்த கலர் சேலை என்பதால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா..   உங்களுக்குமா?  'பழகிய' காலத்தில் நான் என் பாஸுக்கு வாங்கி கொடுத்த முதல் புடைவை நிறம்!

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மலர்ந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் இனிமையானதாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  6. முதலில் கண்ணில் பட்டது எம் ஜிஆர் பற்றிய செய்தி. அவருக்கென்ன
    வசூல் மன்னன். வண்ணக் கதா நாயகன்.
    அருமையான செய்தி பகிர்ந்ததற்கு
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசூல் மன்னன்.
      வண்ணக்கதாநாயகன் -ரசிகர் 
      எண்ணங்களில் நிறைந்தவன்.

      :)))

      நீக்கு
  7. அனுஷ்கா ஆரம்பித்து,ஜெஜே, லக்ஷ்மி, பத்மினி என்று
    ஒரே நக்ஷத்திரப் பதிவுகள். வெகு சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  8. தி ரா சேதுராம் அவர்களின் துணுக்கு அருமை.

    பதிலளிநீக்கு
  9. மாட்டு வண்டி பூட்டிக் கிட்டு,
    காருலதான் உட்கார்ந்து சாலை வழி போவதும் சந்தோஷமே.
    சிறப்புப் படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடிவிடலாம் போல!

      நீக்கு
    2. கட்டபொம்மன் படப் பாட்டு ராகம். :)

      நீக்கு
    3. "மாட்டுக்காரவேலா.  உன் மாட்ட கொஞ்சம் பாத்துக்கோடா..." என்று வரும்.  கட்டபொம்மனா அது?

      நீக்கு
  10. பொக்கிஷம் பக்கங்களைக் காலையில் தான் படிக்க வேண்டும்.

    ரொம்பப் பொடி எழுத்துகள் மா.

    பதிலளிநீக்கு
  11. பால குமாரன் பற்றிய புதிர்கள்.

    1, நினைவில்லை
    2,படங்கள் யூடியுபில் பார்த்துக் கண்டு பிடிக்கவேண்டும்:)
    3, ''தொடரும்"
    4, அப்பம் வடை தயிர்சாதம்,
    5, சிவாஜி சாவித்ரி,ஜேசுதாஸ் இடிக்கிறது:)

    பதிலளிநீக்கு
  12. கவிதை வரிகள் வலியைச் சொல்கின்றன.
    அபரிமிதமான அலுப்பு.

    அனுபவம் என்றால் அனுபவித்துக் கடக்கலாம்.
    வலி தரும் என்னும் போது யோசிக்க வேண்டி இருக்கிறது.
    நல்ல கவிதைக்கு வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவர் மனதிலும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் கீதா அக்கா..   வாங்க.  பிரார்த்திப்போம்.

      நீக்கு
  14. சூரிய காந்த அலைகள் செய்தி பயங்கரம்.
    ஏற்கனவே வெப்ப பாதிப்பு இருக்கும் நாட்களில்
    இன்னுமொரு அக்கினிப் பார்வை.
    நன்றி கீதாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பொழுது நல்லபடியாய்க் கடந்து நாளைப்பொழுது நல்லபடியாக வேண்டும்.

      நீக்கு
  15. // செய்யும் செல்களில்// செய்யும் செயல்களில்!

    //தியேட்டர்களிலும், நாள்களிலும் // தியேட்டர்களிலும், மால்களிலும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தமா? இருங்கள் எங்கே என்று தேடி சரி செய்கிறேன்.

      நீக்கு
    2. அப்பாடி..    முன்னாடியே இருந்தது.    சரி செய்துவிட்டேன்.  மால் சரியான கெஸ்தான்.

      நீக்கு
  16. எந்தப் பிச்சைக்காரரும் உணவோ துணியோ கொடுத்தால் வாங்குவதே இல்லை. பணம் தான். குறைந்த பட்சமாகப் பத்து ரூபாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் கொடுத்தால், கட்டிக்க ஏதாவது கொடும்மா என்பார்கள்.

      நீக்கு
    2. இப்படியும் உண்டு, அப்படியும் உண்டு.  ஆனால் வீடு தேடி வரும் யாசகர்கள் இப்போது நான் பார்க்கவில்லை.

      நீக்கு
  17. சூரியப் புயல் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு முன்னரும் வந்திருக்கின்றன. பார்ப்போம், இன்றைய நாள் எப்படிக் கடக்கிறது என்பதை.
    வண்ணப் படங்களில் அதிகம் நடித்தவர் எம்ஜிஆர் தான். அதே போல் பலரும் எம்ஜிஆரைக் கதாநாயகானாய்ப் போட்டு எடுக்கும் படங்களையே வண்ணத்திலும் எடுத்தார்கள். அது ஏன்? மற்ற நடிகர்களில் ஏன் அவ்வாறு முயலவில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கு காசு அதிகம் கிடைக்கிறதோ அங்குதான் முதலீடு செய்வார்கள்!

      நீக்கு
  18. யாசக சாலையை "யாக"சாலை எனப் படிச்சேன்.
    பாலகுமாரனெல்லாம் மறந்து போய் எத்தனையோ ஆண்டுகள். விநோதங்களை எல்லாம் பின்னர் படிக்கிறேன். மாட்டு வண்டிப் பயணம் நீங்கள் செய்திருக்கிறீர்களா? குதிரை வண்டி? ரிக்‌ஷா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாகசாலையா?  நானா? 

      எனக்கும் அதைப் பற்றி எழுதுவதற்கும் எவ்வளவு தூரம்!

      நீக்கு
  19. தானம் தர்மம் விளக்கமும்,
    தர்மம் செய்து ஏமாந்ததும் பலர் வாழ்வில்
    நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். சென்னையில்
    கன்னா பின்னாவென்று ஏமாந்திருக்கிறேன்.



    கம்புடன் நடக்கும் சித்தம் கலங்கிய பெண்மணியின்
    கதை மனதைக் கலக்கியது.
    இவர்களைப் பைத்தியம் என்று எப்படி ஒதுக்குவது!!!


    இங்கேயும் சாலையோரம் நிற்கும் ஆதரவில்லாதவர்கள், அண்டை நாட்டிலிருந்து வந்தவர்கள்,'
    வீடில்லாதவர்கள் என்று பார்க்க நேரிடும். அப்போதெல்லாம்
    மகள் மருமகன் மாக் டி இல்லாவிட்டால் வேறெதாவது ஃபாஸ்ட் ஃபுட் கூப்பன் களைக்
    கொடுப்பதுதான் வழக்கம்.
    அவர்களின் பார்வையும்,அனாதை நிலையும்
    சங்கடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்புப்பெண்மணி சித்தம் கலங்கியவரா, இறுகிய மனத்தினரா தெரியாது.  அவரைப் பார்க்கும்போது என் மனதில் ஒரு மதிப்பு தோன்றும்.

      நீக்கு
  20. இன்றைய யாசகசாலை பகுதி மிகவும் யோசிக்க வைக்கிறது.

    நேற்றுதான் குழந்தைக் கடத்தல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைக் கடத்தல் இன்றில்லை..  ரொம்ப காலமாக இருக்கிறது.  'அன்பைத்தேடி' படம் நினைவிருக்கிறதா?

      நீக்கு
  21. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. கீதா ரங்கன் சூரியகாந்தப் புயலைப் பற்றி எழுதியுள்ளது எனக்கு முக்கியத்துவம் இல்லாத்தாகத் தெரிந்தது.

    காக்கு உட்கார.... காலையில் இரண்டு முறை கரண்ட் போய் சில நொடிகளில் வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு அடிக்கடி கரண்ட் போகிறது.  ஏழை மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலைப்படச் சொல்லி மற்றவர்களுக்கு அறிவுரை கூறும்  அரசு மின்சாரத்தை பணக்கார விஷயமாகக் கொள்கிறது போலும்.

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை, எப்போதுமே நாம் பாதிக்கப்படாதவரை நாம் எதையுமே நம்புவதில்லை. பக்கத்து வீட்டில் இடி விழுந்தால் கூட அது நம்மை பாதிக்காதவரை அதைப் பற்றி நாம் யோசிக்கமாட்டோம். கண்டுக்கவும் மாட்டோம்.

      ஆனால் இதனால் உள்ள பாதிப்புகள் உலக அளவில் என்பதால் நாம் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படாததால் முக்கியமானதாகத் தெரியாதுதான். கடலில் போட்ட கடுகு போல! ஆனால் அடுத்த தலைமுறை இனி வரும் தலைமுறை இதனால் பாதிப்புகளை உணரலாம் எனிவே அதைத் தெரிந்து கொள்ள நாம் இருக்க மாட்டோமே.

      கீதா

      நீக்கு
    3. உக்ரைன் போர் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது என்பதைப் பற்றி நம்புவோம் ஏனென்றால் அது கண்கூடாகத் தெரியும் ஒன்று.

      கீதா

      நீக்கு
    4. ​உண்மைதான் கீதா... எதுவும் நம்மை பாதிக்காத வரை நாம் கவலைப்படுவதில்லை!

      நீக்கு
  23. பிச்சை, அது சம்மந்தமான ஏமாற்று வேலைகளை விடுங்கள்.

    சிலர் இதனைப்பற்றியெல்லாம் சட்டை செய்யாமல் தர்மம் செய்யும் மனதோடு இருப்பார்கள். அவர்களின் மனதைப் பாராட்டுவோம். (ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதைப்போல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தர்மம் செய்வது என்பது ஏதாவது எதிர்பார்ப்புடன் செய்வதா?  எனினும், வாங்குபவருக்கு லாபம்தான்.

      நீக்கு
  24. தான தர்ம விவரணத்தில் தொடங்கி பள்ளிக்கூடத்திற்கு பஸ் காசுக்கு போய், அங்கிருந்து குண்டு பையனிடம் தர்மம் என்ற பெயரில் ஏமாந்ததை எழுதி, பின்னர் குண்டு ரமணி (சுஜாதா ஸ்ரீரங்கத்து தேதை) கதையை விவரித்து, 20 ரூபாய் கையில்ரெடியாக வைத்திருக்கிறேன் என்று சொல்லிய பத்திக்கு அடுத்த பத்தி யிலேயே பிச்சைக்காரர்களுக்கு பணமாக தர்மம்  செய்யாதீர்கள் என்று எழுத உங்களால் மட்டுமே முடியும். 

    பின்னர் solar flare பற்றி பயமுறுத்தி, அனுஸ்காவின் அழகிய படத்துடன் முடித்த கதம்பம் உண்மையியேயே கதம்பம் தான். இதற்கிடையில் மருக்கொழுந்து போன்று ஒரு கவிதையும் கூட. ஆஹா.  என்ன ஒன்று கவிதை தான் புரியவில்லை எந்த இடியாப்ப சிக்கலில் மாட்டியுள்ளீர்கள்? 

    பாலகுமாரன் கேள்விகள் புதன் கேள்வி பதிலில் கேட்டிருக்கலாம். அங்கேயே விடையும் சொல்லி இருக்கலாம். 

    தேர்தல் விநோதங்கள் படிக்க முடியவில்லை. MGR வண்ணப் படங்களில் கலர் அடிச்சு போட்ட மாதிரி இருக்கும். 

    பழைய புத்தகங்களின் கதை போட்டோக்கள் படிக்க சிரமமாக இருக்கிறது. படிக்கவில்லை 

    அனுஷ்காவிற்கு காம்பென்சேஷனா என்னைப் போன்ற முதியோர்களுக்கு பப்பி சேச்சி JJ அம்மா செய்தி + படம் வெளியிட்டீர்களா? கொஞ்சம் நல்ல கலர் படங்களாக வெளியிட்டிருக்கலாம். 

    மொத்தத்தில் இன்றைய பதிவு  நீளம் கூடுதல். சுவையும் வித்யாசம். புது வருடத்து அறுசுவை சமையல் போல் உள்ளது. 

      Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் ஸார்..   தர்மக்கதை பழைய கதை.  குண்டு ரமணிக்கு 20 ரூபாய் தர காரணம் இருக்கிறது.  மற்றபடி வாட்ஸாப்பில் வந்த பொது அறிவுரை 'பணம் தராதீர்கள்'!

      //எந்த இடியாப்ப சிக்கலில் மாட்டியுள்ளீர்கள்? /

      நாமே மாட்டினால்தான் கவிதையா?  ஆனால் மாட்டி இருப்பதும் ஜிஜாம்தான்.  ஆமாம், யார்தான் மாட்டுவதில்லை?!


      கேள்விகள் எல்லா நாளிலும் பொது!  புத்தனென்ன, வியாழன் என்ன?!


      தேர்தல் விநோதங்கள் படிக்க முடையவில்லை என்பது வருத்தம்தான்.  பார்த்து தட்டச்சாவும் சிரமமாக இருந்தது.  நேரமும் பொறுமையும் இல்லை!

      பழைய புத்தகங்களின் போட்டோக்கள் படிக்க அல்ல, பூச்சிகள் அதை அழிப்பதைக் காட்ட!

      கடைசி வரி பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  25. தர்மம் செய்கிறீர்களா?//

    வலது கை கொடுப்பது இடது கைக்குக் தெரியக் கூடாது என்று காஞ்சிப் பெரியவர் சொல்லியிருக்கிறார்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. தானத்துக்கு தர்மத்துக்கும் வித்தியாசம் உண்டு என்று எங்கோ படித்தேன்//

    உண்டுதான்.

    உங்கள் அக்கா போலத்தான் நாங்களும் அந்தக் காலத்தில். கையில் 10 பைசா, 20 பைசா, நாலணா என்பதெல்லாம் கூட இல்லாமல் நடந்து சென்று நடந்து வந்து என்று பல நாட்கள் பல வருடங்கள் எங்கள் பள்ளிப் படிப்பு. ஊரிலிருந்து நாகர்கோவில் வரை சென்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மட்டும் தான் எங்க வீட்டில் பள்ளி தொலைவு. அண்ணா/தம்பி இருவருமே அப்பா வேலை பார்த்த சேதுபதிப் பள்ளியிலேயே படிச்சாங்க. அதனால் நடந்தே போயிடலாம். எனக்கும் பேருந்துக்கு அப்படி ஒண்ணும் ரொம்பக் காசு ஆகாது. காலை ஐந்து பைசா டிக்கெட். மாலை ஐந்து பைசா டிக்கெட். டிவிஎஸ் பேருந்துகள். காலம்பரவே பத்துப் பைசாவுக்கு டிக்கெட் எடுத்துட்டா மாலை எடுக்க வேண்டாம். அதுவே அப்பாவிடமிருந்து காசு பெயராது. மாமா ஒருத்தர் சதர்ன் ரோட்வேஸ் காஷியரா! அவரிடம் சொல்ல மூன்று மாதத்துக்கான பஸ் பாஸ் வாங்கிடுவார் அப்பா. காசு பெயர்ப்பதற்குள்ளாகப் போதும் போதும்னு ஆயிடும்.யாரானும் நாலணாக் கொடுத்தால் சந்தோஷம் பிய்ச்சுண்டு போகும்.

      நீக்கு
    2. ஒரு கட்டத்துக்குமேல் தஞ்சையில் பள்ளிக்கு நடந்து சென்றே வந்தேன்.  அப்புறம் அண்ணனின் நண்பர் ஒருவரின் சைக்கிள் உதவியது.  இத்தனை வருடங்களுக்கு பிறகு ஒரு ஆச்சர்யம்.  அந்த நண்பர் இப்போது எங்கள் ஏரியாவில் எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருவில் வசிக்கிறார்.  நட்பு தொடர்கிறது.  தூரத்து உறவும் கூட...

      நீக்கு
    3. ம்ம்ம், அப்படியும் அந்த ஐந்து பைசாக் காசு கொடுக்கையில் நடந்தே வந்து மிச்சம் பிடிப்போமாக்கும். கீழ்ப்பாலத்தில் ஒரு மாமா சுண்டல், பகோடானு விற்பார். அவரிடம் என்னிக்காவது ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சு திரும்பறச்சே பசிச்சால் வாங்கிச் சாப்பிடுவேன். அம்மா எப்படியானும் அங்கே இங்கே புரட்டி நாலணா, எட்டணா எனக் கொடுப்பார். எட்டணாக் கொடுத்தால் கோடி ரூபாய் கிடைத்த சந்தோஷம்.

      நீக்கு
    4. அஞ்சு பைசாவுக்கு சேமியா ஐஸ் கிடைக்கும்.  ஆரோக்கியமானது ஒன்றாவது..   நான் அதை வாங்கி சாப்பிடுவேன்.  பத்து பைசாவுக்கு அருமையான ஒரு பால் ஐஸ் என்று ஒன்று கிடைக்கும்.  35 பைசாவுக்கு, 75 பைசாவுக்கு கிடைக்கும் ஐசெல்லாம் கூட அதற்கு ஈடாகாது.  இப்போது இதெல்லாம் கிடைப்பதில்லை.  ஆனால் நான் பசிக்கெல்லாம் சாப்பிடுவதில்லை.  வாய்க்கொழுப்புதான்! 

      நீக்கு
  27. தர்மத்திலும், தானத்திலுமே ஏமாற்றல்கள் உண்டு ஆனால் செய்த பிறகு அதை நினைத்துப் பார்க்கக் கூடாது. அடுத்த முறை ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பது போல ஆனால் இப்படி உஷாராகும் போது நிஜமாகவே தேவைப்படுபவர்களுக்குச் செய்ய முடியாமல் போவதும் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும், ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடவேண்டும், வலது கை கொடுப்ப்பது இடது கைக்கு தெரியாமல், எல்லாவற்றுக்கும் சாதகமாய் ஒரு பழமொழி இருக்கிறது!

      நீக்கு
  28. மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சின்ன வயசிலும் பார்த்திருக்கிறேன் இதோ இப்போதும் வீட்டருகில் 5 பேரைப் பார்க்கிறேன் அதில் ஒரு பருவ வயதுப் பையன். ஒரு பெண்.

    //அவர் அருகில் கிடைக்கும் ஒருநாளில் அவர் கையில் தர முதலில் பத்து ரூபாய்த்தாள் கையில் வைத்திருந்தேன். இப்போது இருபது ரூபாய்த்தாள் கையில் வைத்திருக்கிறேன். ஒரு நாள் தருவேன்!

    அவர்கள் மனம் நிறையும் வகையிலோ, வாழ்க்கை நிறையும் வகையிலோ தர்மம் செய்ய முடியாது. நம்மால் முடிந்த அளவு. இப்போதெல்லாம் ஒரு ரூபாய்க்கு என்னென்ன அவர்களால் வாங்க முடியும்? ஆனால், நாம் அவர்களால் என்னென்ன வாங்க முடியுமோ அந்த அல்லவா தர்மம் செய்ய முடியும்? நம்மால் இயன்ற அளவு.. //

    சூப்பர் ஸ்ரீராம். வாழ்த்துகள்! இம்மாதிரியானோரைப் பார்க்கும் போது மனம் நெகிழ்ந்து போகும். இப்பெண்மணியும் உங்கள் வரிகளும் மனதை நெகிழ்த்தியது.

    நம் நெருங்கிய உறவினர்களுக்கு இம்மாதிரியான பிரச்சனைகள் வரும் போது எப்படியே மருத்துவம் பார்த்தேனும் ஏதேதோ செய்துவிடுகிறோம். ஆனால் இப்படித் தெருவில் விடப்பட்டவர்களை நினைக்கும் போது மனம் ரொம்ப வேதனைப்படும். நம் சொந்தபந்தங்கள் எவ்வளவோ லக்கி என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொன்ன பெண்மணியை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் சொல்ல முடியவில்லை.  தனக்குள் இறுகிப்போனவர் என்று சொல்லலாம்.

      நீக்கு
  29. Make this chain keep sharing in your contacts..//

    மிக மிக நல்ல விஷயம். நாம் எப்போதும் பின்பற்றுவது. ஆனால் சிலர் உணவை ஏற்கிறார்கள் சிலர் ஏற்பதில்லை. பைசாதான் கேட்கிறார்கள். நான் கடவுள் படத்தில் வருவது போல இதற்கும் ஒரு சங்கிலி உண்டே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுவுமே அட்வைஸ் செய்வது எளிது.  பின்பற்றுவது கடினம்.  நேரத்தையும், சந்தர்ப்பத்தையும் பொறுத்தது.

      நீக்கு
  30. மின் காந்தப் புயல் - நன்றி ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ஸ்ரீராம், கவிதையை ரசித்தேன். மனதைத் தொட்டது என்னென்னவோ நினைவுகள். பல விஷயங்களுக்கும் பொருந்த்திப் போகிறது!

    //நசுங்கி விழுந்த கணம்
    மீண்டும் நகர்கையில் வாழ்க்கையின்
    வாய்ப்பொன்றை இழந்ததது
    தெரிந்தாலும்
    முயன்று கொண்டுதான் இருக்கிறேன்//

    என் பதிவின் இரண்டாவது பகுதிக்குப் பொருந்திப் போகும் ஒன்று!!!!! எனக்கு மட்டுமல்ல நல் எல்லோருக்குமேதான்!!!

    ஜெகே அண்ணா அதற்குச் சொல்லியிருந்த - //குதிரை போல் இல்லாவிடினும் வண்டிமாடு போல்// !!!!!!!! விடா முயற்சிதானே வாழ்க்கை!

    மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினி விளையாட்டுகளில் லைஃப்லைன் தருவார்கள்...  அது போல!

      நீக்கு
  32. அ - இனி இரவு எழுந்திரு?? நிலாவே வா?

    ஆ -

    இ - என்றென்றும் அன்புடன்?

    ஈ - அப்பம் வடை தயிர்சாதம்?

    உ -

    பானுக்காவைக் காணுமே. அவங்க உடனே இதற்குப் பதில் சொல்லியிருப்பாங்க...!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா..  வணக்கம்.  புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  34. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  35. வண்ணமிகு நாயகன் எம் ஜி ஆர்!! ஹாஹாஹாஹா உண்மையிலேயே ஜிகு ஜிகு என்று ஈஸ்ட்மென் கலர் உடைதான், திரைப்படங்களில் பெரும்பாலும் . பளீர்னு கான்ட்ராஸ்ட்

    கீதா

    பதிலளிநீக்கு
  36. குதிரை மாடு இழுப்பது எல்லாம் ஓகேதான் அதுங்களுக்குத் தீனி போட புல்லு இருக்கோ? கட்டிடமானா இருக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் கஷ்டம்தான். ஆனால் பெட்ரோல் விலைக்கு பரவாயில்லை!

      நீக்கு
  37. இது ரகசியம் !! ஹாஹாஹா செம காமன்சென்ஸ் நல்ல யதார்த்த பதில் மிகவும் ரசித்தேன்.

    பொக்கிஷம் பெரிசு படுத்தி வாசித்துவிட்டு வருகிறேன் ஸ்ரீராம்

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தாண்டு வாழ்த்துகள்.  விநோதங்கள் படிப்பது கடினம்.  சுந்தர ராமசாமி மற்றும் மலையாள எழுத்தாளர் கதை படிப்பதற்கு அல்ல, அந்த மாதிரி நல்ல எழுத்தாளர்கள் எழுதிய ஒரிஜினல் பக்கங்கள் வீணாகப் போகும் வருத்தத்தைக் காட்டி இருக்கிறேன்!

      நீக்கு
  38. அனுபவித்தவர்களுக்குத்தானே. - ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  39. இடது மேல் கீழ் - பார்த்தால் பூச்சி தன் பசியாற்றிய பொக்கிஷம் என்று தெரிகிறது!!! அதற்கும் பொக்கிஷம், நமக்கும் பொக்கிஷம்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலது மேல் கீழ் - அதுவும் சேர்த்து. அதுக்கு வயிற்றுப் பசி! எந்த வீட்டிலும் கிடைக்காத பொக்கிஷம் தானே! இப்படித் தாராள பிரபு வருஷக் கணக்கா புத்தகக் குதிர் வைத்திருந்தால் சந்தோஷமாக்கும்!! நெற்களஞ்சிம் போல்!!!

      கீதா

      நீக்கு
    2. ஆம். பார்க்க கஷ்டமாக இருக்கிறது.

      நீக்கு
    3. என் அண்ணாவிற்கு விலை மதிப்பில்லாப்பல புத்தகங்கள் கறையான்/கரையான் அரிப்பால் போய்விட்டன. வீட்டிற்குள்ளேயே நெருப்பு வைத்து அழிக்கும்படி இருந்தது.

      நீக்கு
    4. இது கரையான் வகை அல்ல. ஒருவகை அந்துப்பூச்சி.

      நீக்கு
  40. மூன்று திரைபப்ட நாயகிகள் செய்தியும் சுவாரசியம். 1- அவங்க என்ன வேணாலும் செஞ்சுக்குவாங்க. புத்தி கூர்மையும் உண்டு, நல்ல காமென் சென்ஸும் உண்டு ஆனால் அது வேறு விதமாகப் பயன்படுத்திட்டாங்க.

    2. ஹாஹாஹா யதார்த்தம்

    3. காலம் காலமாய்த் தொடரும் கதை

    கீதா

    பதிலளிநீக்கு
  41. புத்தாண்டு வாழ்த்துகளே இனிமையா இருக்கே!!!!!!!!!

    இதை முதல்ல எழுத்து வைச்சு உங்களை மாதிரி நானும் கடைசியா போடுறேன் பாருங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
  42. எல்லோருக்கும் அன்பார்ந்த விஷு/தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  43. வீட்டிற்கு வந்து குறி சொல்லும் ஒரு பெண்மணியிடம் ஏமாந்தது உண்டு.

    அதை வேறு விதமாக ஒரு கதையாகவும் எங்கள் தளத்தில் பகிர்ந்திருந்த நினைவு. குறிக்காரி என்று.

    கொடுத்து ஏமாந்ததும் உண்டு. ஆனால் அதெல்லாம் முன்பு. ஆனால் அதன் பின் மிகவும் கவனமாக இருக்கிறேன். இப்போதும் பிரயாணம் செய்யும் போது எங்கேனும் யாரேனும் பாவப்பட்டவர்களைப் பார்த்தால் நாங்கள் கொண்டு சென்ற உணவினைப் பகிர்வதுண்டு.

    சிறு வயதில் என்னோடு படித்த பையன்கள் சாப்பாடு கொண்டு வந்திருக்கமாட்டார்கள். வறுமை. அப்படியான சிலருடன் உணவைப் பகிர்ந்து கொண்டதுண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு இரு முறை குறிகாரி தானாக வந்து குறி சொல்லி இருக்கிறார். ஒரு தரம் குழந்தைகளுடன் மெரினா கடற்கரை சென்றப்போ. பொழுதுபோக்குக்குக் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அம்பத்தூரில் இருந்து மெரினா போனால் இவங்க தொல்லை. நாலைந்து பேராக. ஆனால் அதில் ஒருத்தி இளம்பெண்ணாக இருந்தவள். இன்னும் ஒரு வாரத்தில் படம் பார்க்கும் பொட்டி வாங்கப் போறே என்றாள் என்னிடம். எனக்குச் சிரிப்பு வந்தது. நாமெல்லாம் எங்கே வாங்கப் போறோம்னு. ஆனால் திடீரென ஒரு அரியர்ஸ் மாமாவுக்கு எதிர்பாராமல் கிடைக்க அந்தப் பணத்தில் முதல் முதலாகத் தொலைக்காட்சிப் பெட்டி மஸ்டங் என்னும் பிராண்டில் வாங்கினோம். அதன் மெகானிக் பக்கத்திலேயே கொரட்டூரில் இருந்தார். வைணவப் பையர். கூப்பிட்டால் உடனே வந்துடுவார். ஶ்ரீதர் என்னும் பெயர். அது ஒரு ஐந்து வருடங்களுக்கும் மேல் உழைத்தது. பின்னர் 89 ஆம் ஆண்டில் பிபிஎல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது, அப்போ ராஜஸ்தான்.

      நீக்கு
    2. தஞ்சையில் குறி சொல்பவர்களை பார்த்திருக்கிறேன்.  லேசான பயத்துடன் நகர்ந்து போய்விடுவேன்.  இவற்றை எல்லாம் எந்த அளவு நம்பலாம் என்று தெரியவில்லை.  இப்பது எங்கள் வீட்டுக்கருகில் ஆபீஸ் செல்லும் வழியில் ஒரு குறி சொல்லும் இடம் இருக்கிறது.

      நீக்கு
    3. நம்ம வீட்டிலே மாமனாருக்கும் சரி, நம்ம ரங்க்ஸுக்கும் சரி இந்த ஜோசியம், குறி சொல்லுதல், குடுகுடுப்பைக்காரர்களின் ஜோசியம்னு எல்லாத்துக்கும் ஓடி ஓடிப் பார்ப்பாங்க. ஒரு காலத்தில் எனக்கு இதை எல்லாம் பார்த்து மனசு நொந்து போகும்.

      நீக்கு
    4. எனக்கு நாடி ஜோசியம் பார்க்கும் ஆசை முன்பு இருந்தது. இப்போது ஆவல் வடிந்து விட்டது.

      நீக்கு
    5. ஒரு வாரத்துக்குள்ளாக மத்யமர் நண்பர் ஒருவர் சிறந்த நாடி ஜோதிடர் ஒருவர் குறித்து எழுதி இருந்தார். அவர் பேரன் இப்போது பார்ப்பதாகவும் அனைவருமே சிறந்தவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். பெயர் மறந்துட்டேன். மத்யமரில் தேடினால் கிடைக்கும்னு நம்பறேன். :))))

      நீக்கு
  44. மின் காந்தப் புயலைப் பற்றி நானும் அறிந்தேன். நம்மைச் சுற்றி ஏதேனும் விளைவுகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இப்படியானவை நம் சக்திக்கும் அப்பாற்பட்டவை. ஏதேனும் விளைவுகள் வந்தால் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  45. எம்ஜிஆர் பற்றிய தகவல்கள் சுவாரசியம். அவரை வைத்துப் படம் எடுத்தால் நஷ்டம் ஏற்பட்டதில்லை என்றும் அப்போது சொல்லப்பட்டதுண்டு.

    நடிகைகள் பற்றிய தகவல்களும் சுவாரசியம்.

    மாடுகள் இழுக்கும் படங்கள் நல்ல கற்பனை. இழுப்பதைப் பார்க்கும் போது, பெட்ரோலின் விலை அதிகமாவதைப் பார்க்கும் போது இப்படியான ஒரு போக்குவரத்து வந்துவிடுமோ?

    எரிவாயு விலையும் கூடும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசோகன், சந்திர பாபு என்று எம் ஜி ஆரால் நஷ்டப்பட்டவர்களும் உண்டு!

      நீக்கு
    2. சந்திரபாபு ஒரு கொடுமையான அனுபவம். பாவம் திறமை மிக்கவர்.

      நீக்கு
    3. சாவித்திரியை விட்டுட்டீங்களே! :(

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் படம் எல்லாம் இல்லை. ஆனால் படத்தில் இருந்து ஆரம்பித்தது. அம்புடுதேன் சொல்வேன்.

      நீக்கு
    5. சாவித்ரி சிவாஜியை வைத்து பிராப்தம் எடுத்து கையைச் சுட்டுக்கொண்டார்.

      நீக்கு
    6. அதெல்லாம் இல்லை. விடுங்க! மறந்துடலாம்.

      நீக்கு
  46. பொக்கிஷங்களையும் ரசித்தேன். சிறியதாக இருப்பதை மொபைலில் படிக்க கஷ்டமாக இருந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  47. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
    குறிஎதிர்ப்பை நீரது உடைத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அய்யன் எப்போது தவறாகச் சொல்லி இருக்கிறார்?

      நீக்கு
  48. தர்மம் தலை காக்கும்.

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  49. பத்மினி சொன்னதையும் "சாந்த மீனா" அவங்க மாமியார் பத்திச் சொன்னதையும் முன்னரே படிச்சிருக்கேன். குமுதத்தில் வந்த நினைவு.

    இவங்க தான் அனுஷ்காவா? எனக்கென்னமோ எல்லோர் முகமும் ஒரே மாதிரித் தெரியுதே! கொஞ்சம் கொஞ்சம் காஜல் அகர்வால், நயன்தாரா அடையாளம் கண்டு பிடிப்பேன். மத்தவங்க எல்லாம் ரொம்பப் புதுசுனாலே புரியலை. திரிஷா, சிம்ரன், தேவயானி, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் இதில் வரமாட்டாங்க. இப்போ யாரையுமே தெரியாது, ஆண் நடிகர்கள் உள்பட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குமுதத்தில் வந்த நினைவு.//


      குமுதம் இல்லை, கல்கண்டு.  அங்கேயே சொல்லி இருக்கிறேனே!

      அனுஷ்காவை தெரியாதாக்கும்.  நம்பிட்டேன்.

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்கு எத்தனை தரம் பார்த்தாலும் சில முகங்கள் நினைவில் வராது. நம்பறதும் நம்பாததும் உங்க விருப்பம். என்னோட நிலையைப் பற்றி எனக்குத் தானே தெரியும்! :)))))

      நீக்கு
    3. சொல்லப் போனால் உதயநிதிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் வித்தியாசம் தெரியாது. இப்போ இப்போத் தான் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கேன்.

      நீக்கு
    4. வேண்டாம் போங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  50. வளையல்/வாட்ச் இரண்டையும் ஒன்றாய்க் கட்டிக்கொள்வது வட இந்தியப் பெண்களின் வழக்கம். இப்போல்லாம் தெரியலை. முன்னெல்லாம் அப்படித்தான் கட்டுவாங்க. நான் இடக்கையில் ஒரே ஒரு வளையல் போட்டுக் கொண்டு வாட்ச் கட்டிப்பேன். இப்போல்லாம் நோ வாட்ச்.மாமா முதல் முதலாக எனக்குனு வாங்கித் தந்த ஹெச் எம்டி பெண்கள் வாட்ச் இன்னமும் இருக்கு நல்ல கண்டிஷனில். அதன் பிறகுப் பரிசாக வந்த வாட்செல்லாம் போயிடுத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  இதெல்லாம் நான் அறியேன்..   அவங்க என்னவோ புதுமை செஞ்சிருக்காங்கன்னு நெனச்சேன்!

      நீக்கு
    2. வடக்கே பெண்களுக்கு வளையல்கள் அதுவும் கண்ணாடி வளையல்கள் ரொம்ப முக்கியம். கிட்டத்தட்ட நம்ம தாலி மாதிரி. ஆகவே சுமங்கலிப் பெண்கள் கட்டாயமாய்க் கண்ணாடி வளையல்கள் போட்டுக்கணும். அதில் சிவப்பு, பச்சைக்கலர் எப்போதும் இருக்கணும். மற்ற வண்னங்களுக்கும் அனுமதி உண்டு.

      நீக்கு
  51. //இது மாதிரி //சியா// பதிவுகள் பேஸ்புக்கில் இட்டேன்.// சில பதிவுகள்

    பதிலளிநீக்கு
  52. தரிசனம் திரைப்படம் என்றதும் நாங்க கல்யாணமான ஒரு வாரத்தில் கும்பகோணத்தில் ஏதோ ஒரு தியேட்டரில் பார்த்த முதல் படம்(அதாவது திருமணம் ஆன பின்னர் பார்த்தது என்ற வகை) தரிசனம் தான். அதில் "இது மாலை நேரத்து மயக்கம்" பாடம் வெகு பிரபலம். பாலகுமாரன் அந்தப் பெயரில் ஏதேனும் எழுதி இருக்காரோ? இன்னொண்ணு அப்பம், வடை, தயிர்சாதம் தான் தி/கீதா சொல்லி இருக்காப்போல். மற்றவற்றுக்கெல்லாம் மண்டையை உடைச்சுக்கப் போறதில்லை. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏவிஎம் ராஜன் இரட்டை வேடம். வழக்கமான தமிழ்ப்பட ஃபார்முலா.

      நீக்கு
    2. ஐயே.. நான் அந்தப் படம் எல்லாம் பார்க்கவில்லை!!!

      நீக்கு
    3. பாலகுமாரன்னாலே சிலருக்கு இளப்பம் தான். அ.வ.தயிர் சாதம் படித்ததை பாதியில் விட்டேன் என்று பா.கு.வைப் பற்றி பேசும் பொழுதெல்லாம் சொல்லிச் சொல்லி.....

      அடுத்த வாரம் தேவனை வைத்து ஒரு க்ளூ தயார் பண்ணுங்க ஸ்ரீராம். என்ன செய்யறாங்கன்னு பாக்கலாம்.

      நீக்கு
    4. இளப்பம் எல்லாம் இல்லை ஜீவி ஸார்.  ஒரு அளவுக்குமேல் பாலகுமாரன் அலுத்துப் போனார்.  எனக்கு ஆரம்பகால பாலகுமாரன் இஷ்டம்.

      தேவனை வைத்து....  ?  முயற்சிக்கிறேன்!

      நீக்கு
    5. ஹாஹாஹா, அடுத்தவங்களுக்குப் பிடிச்சதுனால் எனக்கும் பிடிக்கணுமா என்ன? ரொம்பவே அலட்டல் ஜாஸ்தியா இருந்தாப்போல் இருந்தது. அதான் நிறுத்திட்டேன். இதை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லுவேன். நிறுத்துவதும்/படிப்பதும் என் சொந்த விருப்பம். மற்றவர் தலையீட்டுக்கெல்லாம் பயப்பட முடியுமா? யார் வேணாலும் என்ன வேணாலும் நினைச்சுக்கட்டும். அது பற்றிக் கவலை இல்லை. தாராளமாக தேவன் அவர்களைப் பற்றிச் சொல்லட்டும். ஒரு எழுத்தாளர் எனில் அவர் எழுத்துக்களைப் பற்றிப் பலவிதமாகத் தான் விமரிசிக்கப்படும். "தேவன்" பற்றி ஏற்கெனவே ஒரு நண்பர் அவர் ஓர் ஆங்கில எழுத்தாளரின் எழுத்தைக் காப்பி அடித்து எழுதி இருப்பதாக என்னிடமே சொல்லி இருக்கார். இது எல்லாம் அவரவர் விருப்பம். அவங்க அவங்க சொந்த விருப்பு/வெறுப்பில் எல்லாம் நான் தலையிட மாட்டேன்.

      நீக்கு
    6. இன்னும் சொல்லப் போனால் கல்கி அவர்களைப் பற்றிக் கூட அவர் அலெக்சான்டர் டூமாஸ், சர் வால்டர் ஸ்காட் ஆகியோரைப் பார்த்து எழுதினதாகச் சொல்லுவார்கள். இம்மாதிரி இன்னும் எத்தனையோ இருக்கு. சுஜாதாவையும் சிலர் கேலி செய்திருக்காங்க. எதுவானாலும் ஏற்றுக்கொண்டு கடந்து செல்ல வேண்டும்.

      நீக்கு
    7. தேவன் புதிர்களை எந்த அளவுக்கு கண்டுபிடிக்கப் போகிறார்? --

      என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்.

      நீக்கு
  53. உங்கள் கவிதையைக் கற்பனை செய்து பார்த்தால் ஆலம் விழுதுகளிடையே சிக்கிக் கொண்ட மனிதன் முகம் நினைவில் வருது. அப்படி ஒரு சித்திரத்தை எங்கேயோ/எப்போவோ பார்த்திருக்கேன். நினைவில் வரலை. ஆலம் விழுதுகளில் தான் அதிகம் இலைகள் இருக்காது. மற்றவைக்குப் பின்னர் வரேன். இந்த வாரம் அதிகம் படிப்பு. விநோதங்கள் எல்லாம் படிக்கவே முடியலை. ஏற்கெனவே கண் கோளாறு. அதில் கட்டி வேறே. மெதுவாய்த் தான் படிச்சுப்பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலம் விழுதுகள் என்று வேண்டாம்.  முழுவதும் நெருக்கமான கிளைகளால் ஆன இலைகளில்லா ஒரு மரத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

      நீக்கு
  54. நெல்லை எங்கே? போளி வடை/பண்ணுவதில்/சாப்பிடுவதில் பிசியா? அல்லது பத்ரிநாத் சுற்றுலாக் கிளம்பிட்டாரா?

    பதிலளிநீக்கு
  55. வங்கி மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு இன்றிலிருந்து ஞாயிறு முடிய விடுமுறை இல்லையா? இனி திங்களன்று தான் வேலை நாள் ஆரம்பம்.

    பதிலளிநீக்கு
  56. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
    2. சமையல், கதை என்று உங்கள் பங்களிப்பையும் இங்கு வழங்கலாமே...

      நீக்கு
  57. தர்மம் பற்றி எழுதியது அருமை. சிறு வயதில் தானம் கேட்கும் பையனுக்கு நண்பர்கள் காசு கொடுத்து விட்டு நடந்து வீடு போனதும் நல்ல உள்ளத்தை காட்டுது. அந்த பையனை சினிமா தியேட்டரில் மேல் வகுப்பில் அமர்ந்து தின்பண்டங்கள் வாங்கியது அதிர்ச்சியாக இருந்து இருக்கும். அந்த பையனுக்கு அப்புறம் உங்களிடம் காசு கேட்கும் தைரியம் எப்படி வரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. நானும் அவனைப் பார்க்க சங்கடப்பட்டேன்!

      நீக்கு
  58. சூரிய புவிகாந்தப் புயல் பூமியைத் தாக்க உள்ளதாகச் சொல்லியிருக்கின்றன.//

    பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
    முயற்சி கவிதை நன்று.
    வண்ணப்பட செய்தி முன்பு படித்து இருக்கிறேன். லட்சுமி, ஜெயலலிதா, பத்மினி பாலகுமரன் செய்திகள் படித்தேன்.

    பெட்ரோல் விற்கும் விலையில் இப்படி காரை பயன்படுத்தலாம் என்று சொல்வார்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.  முதல் படம் தவிர மற்ற படங்கள் ஒரு காணொளியிலிருந்து எடுத்தது.  டிக்டாக் வீடியோ!

      நீக்கு
  59. இடது மேல், கீழ் மூலைகளைப் பார்த்தீர்களா? என்ன தெரிகிறது?//

    கரையான படித்து இருப்பது தெரிகிறது.அதற்கு புத்த்கத்தை கரைத்து குடிக்க முடியாமல் கடித்து சாப்பிட்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  60. பாலகுமாரன் புதிர்கள்:

    அ) மெர்க்குரிப் பூக்கள்

    ஆ) மாலை நேரத்து மயக்கம்

    இ) முன் கதைச் சுருக்கம்

    ஈ) அப்பம் வடை தயிர்சாதம்

    உ) கை வீசம்மா கை வீசு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட சரி. விடைகள்...


      மாலை நேரத்து மயக்கம், ஏதோ ஒரு நதியில், முன்கதைச் சுருக்கம், அப்பம் வடை தயிர் சாதம், கைவீசம்மா கைவீசு

      நீக்கு
    2. ஶ்ரீராம், நீங்க ஜேசுதாஸ் எனச் சொன்னதால் நான் அதிகம் யோசிக்கலை. அந்தக் கைவீசம்மா கைவீசு பாசமலரில் ஜேசுதாஸா பாடினார்? டிஎம் எஸ் இல்லையா? அதான் சொல்லாமல் இருந்தேன். மற்றவை இரண்டும் என்னால் கண்டுபிடிக்க முடியலை.

      நீக்கு
    3. //அந்தக் கைவீசம்மா கைவீசு பாசமலரில் ஜேசுதாஸா பாடினார்? டிஎம் எஸ் இல்லையா? //

      பாசமலரில் கைவீசம்மா கைவீடு என்கிற பாடலே கிடையாது.  சிவாஜி தன் குரலில் சொல்வது அது. நான் சொல்வது அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்கிற படத்தில் கே ஜெ யேசுதாஸ் குரலில் வரும் பாடல் "கைவீசம்மா வீசு "  அதனால்தான் அவர் பேயரைச் சொன்னேன்.

      https://www.youtube.com/watch?v=SHbQNS8JDSw

      நீக்கு
    4. ஹெஹெஹெஹெ, இன்னமும் பாசமலர்/பாலும் பழமும் பார்க்க நேரம் அமையவே இல்லை! (சிப்புச்சிப்பா வந்துடுமோனு கவலை) :)))))

      நீக்கு
  61. தெரு விளக்குக்கும்

    மெர்க்குரிப் பூக்களுக்கும்

    தான் மிகவும் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜீவி ஸார்..  அது மெர்க்குரிப்பூக்கள்தான்.  முதல் புதிருக்கான விடை டைப் செய்து ஓட்டும்போது விட்டுப் போயிருக்கிறது.

      நீக்கு
  62. மாலை மயக்கத்தை விட மெர்க்குரிப் பூக்கள் கவித்துவமான சொல்லாடல். நாவலிலும் தெருவிளக்குகளைத்தான் குறிப்பிடத்தான் மெர்க்குரிப்பூக்கள் என்றிருப்பார் பாலகுமாரன்.

    தரிசனம் படத்தில் தான் 'அந்த மாலை மயக்கம் யாருக்காக?' என்ற பாடல் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பரா..  ஆமாம்.  உண்மை.  அதேபோலத்தான் அவரின் இரும்புக்குதிரைகள் சொல்லாடலும்.  அது  வாகனத்தைக் குறிப்பது....

      உங்கள் இரண்டாவது வரிகாண பதில் :  'இங்கே மாலை மயக்கம் யாருக்காக' என்கிற பாடல் இடம்பெற்ற திரைபபடம் ஊட்டி வரை உறவு.  நான் சொல்லி இருப்பது 'இது மாலை நேரத்து மயக்கம்' பாடல்.  இது தரிசனம் படத்தில் இடம்பெற்ற பாடல்.  இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி.

      https://www.youtube.com/watch?v=VmQBdMr5qOA

      நீக்கு
  63. பாலகுமாரன் பற்றிய புதிருக்கு ஜு.வி.சார் விடை சொல்லி விட்டதால் நான் சொல்லவில்லை.
    கவிதை சிறப்பு.
    புத்தாண்டில் அழகிய அனுஷ்கா.

    மும்பையில் தொடங்கியிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு பைசா கொடுக்காத இயக்கம் பற்றி முன்பே படித்திருக்கிறேன்.‌
    திருச்சியைச் சேர்ந்த ஒருவர் சமயபுரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு அங்கிருந்த கடை ஒன்றில் ப்ரெட் லோஃப் வாங்கி கொடுத்ததாகவும், அவர் அடுத்த முறை சமயபுரம் சென்றபொழுது அந்த கடைக்காரர் "நீங்கள் சென்ற பிறகு அவர்கள் அந்த ப்ரெட் லோஃபை திருப்பி கொடுத்துவிட்டு, அதற்கு ஈடான பைசா கேட்கிறார்கள்" என்று கூறியதாக மத்யமரில் வந்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வந்து ஒரு கமெண்ட் இட்டுச் சென்றபிறகு உங்களிடமிருந்து விடை வரும் என்று நினைத்தேன்.  ரொம்ப நேரம் காணோம்.  அப்புறம் ஜீவி ஸார் சொல்லி விட்டார்.

      கொடுத்த பொருளைக் கடையில் கொடுத்து காசு வாங்கும் வழக்கம் நிறைய இடங்களில் இருக்கிறது.

      நீக்கு
    2. ஆமாம், தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்ததைக்கூடக் கடையில் திருப்பிக் கொடுத்திருக்காங்க. :( இங்கே நாங்க எந்தப் பிச்சைக்காரருக்கும் எதுவும் கொடுப்பதில்லைனு வைச்சிருக்கோம். அஜ்மேர் தர்கா போனால் அங்கே பிச்சைக்காரங்களுக்குக் கொடுக்கலைனால் கன்னாபின்னாவென சாபம் கொடுப்பாங்க. எங்க பெண் விபரம் தெரிந்து அங்கே போனப்போ அவங்க சாபம் கொடுத்ததைப் பார்த்து நடுங்கிட்டாள். சமாதானம் ஆகவே 2 நாட்கள் ஆச்சு.

      நீக்கு
    3. வீட்டில் திவசம், கர்மாக்களுக்கு கொடுக்கும் சொம்பு, வேஷ்டி, புடைவை முதலானவையே கூட கடைக்குச் செல்லும்!

      நீக்கு
    4. உண்மைதான் ஶ்ரீராம். அதனாலேயே நாங்க வேஷ்டி எடுப்பதில்லை. சிராத்தத்திற்கு வேஷ்டிக்கு உரிய பணமும் சேர்த்துக் கொடுத்துடுவோம்.

      நீக்கு
    5. நான் யாகசாலை என்றே படிச்சுட்டு இருக்கேன். :))))))

      நீக்கு
  64. பதிவின் பகுதிகள் அனைத்தும் நன்று. நீண்ட நாட்களுக்குப் பின்னர் அ படம் நுழைத்து விட்டீர்கள் போல! :)

    பதிலளிநீக்கு
  65. யாகசாலையில் இவ்ளோ தகவல்களா.கடைசியில் பட்டுப்புடவையோடு ஒரு பெண்ணையும் ஹோமத்தில் பூர்ணாகுதி செய்து விட்டீர்களா :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!