சனி, 9 ஏப்ரல், 2022

நட்பு என்றால்... & நான் படிச்ச கதை - இணைப்பறவை

 பெரியநாயக்கன் பாளையத்தில் ஒரு சம்பவம்


கடந்த புதன்கிழமை 30.03.2022 வழக்கம் போல பயணிகளை கோவையில் ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று மதியம்..3.00.மணியளவில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது...
பேருந்தை ராஜேஷ்குமார் என்கின்ற ஓட்டுனர் இயக்குகிறார்.... நடத்துனராக தமிழ்செல்வன் என்பவர் கடமையே கண்ணாக பணியாற்றி கொண்டிருக்கிறார்...இருவரும் சிறந்த நண்பர்கள்...நீண்டநாட்களாக இதே வழித்தடத்தில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள்...
பேருந்து நிறைந்த கூட்டத்தோடு பெரியநாயக்கன் பாளையம் தாண்டி சீராக சென்று கொண்டிருக்கிறது...வண்ணாங்கோயிலை நெருங்கியதும் வண்டியை ஓட்டுனர் நிறுத்துகிறார்...அப்போது அவரிடம் ஒரு பதட்டம் தெரிகிறது..
முகமெல்லாம் வேர்வை...
உடனே நடத்துனர் தமிழ் செல்வனை கூப்பிட்டு அண்ணா...ஏனோ நெஞ்சு வலிக்கிறது...படபடப்பாக இருக்கிறது...இடது தோள்பட்டை வலிக்கிறது என்கிறார்..
நிலைமையின் தீவிரத்தை நடத்துனர் புரிந்து கொள்கிறார்...பதட்டப்படவில்லை...பயப்படவில்லை....அதே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த சக ஓட்டுனர் ஒருவரை அழைத்து அண்ணா வண்டியை கவனித்து கொள்ளுங்கள்...வரும் அடுத்த பேருந்தில் பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்து விடுங்கள் நான் தலைமை அலுவலகத்தில் சொல்லி விடுகிறேன் எனக்கூறி விட்டு உடனடியாக தன் சகதோழரை அருகில் உள்ள...DJ..மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறார்


அங்குள்ள டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சிவியர் ஹார்ட் அட்டாக்...என்கூறி...முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல பரிந்துரைக்கிறார்கள்...
நடத்துனர் தமிழ்செல்வன் அவர்கள் அப்போதும் பதட்டப்படாமல்...பயப்படாமல்...நண்பனை அங்குள்ள ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு...கோவை..PSG...மருத்துவமனைக்கு அழைத்தச்செல்கிறார்...
நடத்துனர்..ஆம்புலன்ஸில் செல்லும் போதே...PSG..மருத்துவமனையில் பணியாற்றும் தன்மகள் ஹேம பிரியாவிடம்
நிலைமையைச் சொல்லி விடுகிறார்....
மகள் ஹேமா..... தீவிரத்தின் தன்மை உணர்ந்து...உரிய ஏற்பாடுகளை செய்து வைத்து விடுகிறார்...அடுத்த அரைமணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைகிறது...... .
ICU..அழைத்துச் செல்கிறார்கள்...பரிசோதித்து விட்டு...உடனடியாக இவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்...இத்தனை லட்சம் செலவாகும் என்கிறார்கள்....உடனடியாக ரூ..ஐம்பதாயிரம் கட்டுங்கள் என்கிறார்கள்...
சற்றும் யோசிக்காமல் தன்னுடைய கிரெடிட் கார்டு மூலம் பணத்தை கட்டிவிடுகிறார்.....உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.. இவரே தைரியமாக உரிய படிவத்தில் கையொப்பமிட்டு தந்து விடுகிறார் .உடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது..மருத்துவமனையில் இருக்கும்போதே இரண்டாவதாக மீண்டும் ஒரு அட்டாக வந்து விடுகிறது.....காப்பாற்றப்படுகிறார்..
அதன்பின் சற்றே ஆசுவாசமாக ராஜேஸ் குமார் அவர்களின் வீட்டிற்கு கூப்பிட்டு சொல்கிறார்... இந்த நடத்தனரின் பதட்டப்படாத செயலால்....மனிதாபிமானத்தால் ஒரு உயிர் காப்பாற்றப்படுகிறது....யாருக்கு வரும் இந்த தைரியமும்...உதவும் மனப்பாண்பும் ????.
வண்டியை பயணிகளோடு நடுரோட்டில் நிறுத்திவிட்டுச் செல்கிறோமே இதனால் நமது வேலைக்கு பங்கம் வந்து விடுமோ என்றவர் அஞ்சவில்லை.....நண்பனின் துடிப்பைக்கண்டு பதட்டப்படவில்லை...அமைதியாக சிறிதும் பயப்படாமல்...பதட்டப்படாமல் உரிய ஏற்பாடுகளை செய்து உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து....தன்னுடைய பணத்தை கட்டி.... தன் சக தோழரை காப்பாற்றிய நடத்துனர் தமிழ்ச்செல்வனின் செயல் போற்றப்பட வேண்டிய செயல்....வணங்கப்பட வேண்டிய செயல்.....தெய்வம் சிலசமயங்களில் இப்படி மனித உருவிலும் வந்து உதவுமோ....என ஆச்சரியப்பட வைக்கிறது.... இந்த மனிதநேய பண்பாளரை நண்பர்களே வாழ்த்துங்கள்.....வாழ்த்துங்கள் ...
- பதிவாளருக்கு நன்றி

[நன்றி :  ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.]

==========================================================================================

இம்பால்,-  மணிப்பூரை சேர்ந்த 10 வயது சிறுமி, தன் 1 வயது தங்கையை மடியில் சுமந்தபடி பள்ளி வகுப்பறையில் பாடம் படிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, சிறுமியின் எதிர்காலமே மாறியுள்ளது.

மணிப்பூரில், பீரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு மணிப்பூரின் டாமெங்லாங் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி மெய்னிங்சின்லியு பாமெய், அதே பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு 1 வயதில் தங்கை உள்ளார்.விவசாய கூலிசிறுமியின் பெற்றோர் விவசாய கூலிகளாக உள்ளனர். எனவே பணிக்கு செல்லும் அவர்களால் குழந்தையை உடன் எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது.





இதனால் பள்ளிக்கு செல்லும் சிறுமி, தன் தங்கையை சுமந்தபடி பள்ளிக்கு செல்கிறார். அங்கு வகுப்பில் தங்கையை மடியில் துாங்க வைத்தபடி பாடங்களை கவனிக்கிறார்.இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியானது. சிறுமியின் பாசம், பொறுப்புணர்வு மற்றும் படிப்பின் மீதான ஆர்வத்தை கண்டு பலரும் வியந்தனர்.


பா.ஜ.,வை சேர்ந்த மாநில அமைச்சர் பிஸ்வஜித் சிங், தன் சமூகவலைதள பக்கத்தில் சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:கல்வி மீதான சிறுமியின் அர்ப்பணிப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. தாய்மை உணர்வுசிறுமியின் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினேன்.

அவரை இம்பால் அழைத்து வருமாறு அவர்களிடம் தெரிவித்தேன். அந்த சிறுமி பட்டப்படிப்பு படித்து முடிக்கும் வரை அவரது கல்வி செலவை தனிப்பட்ட முறையில் ஏற்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.பெண் குழந்தைகள் இயல்பிலேயே தாய்மை உணர்வு உடையவர்கள் என்பது இந்த சம்பவத்தின் வாயிலாக மீண்டும் நிரூபணமாகி உள்ளது

========================


= = = =

==================================================================================================== ========================

 

நான் படிச்ச கதை

ஜெயகுமார் சந்திரசேகர்

==================

 இணைப் பறவை - ஆர். சூடாமணி

 இணையப் பறவைகளான எ பி வாசகர்கள் இன்று வாசிக்கப்போவது இணைப் பறவை என்ற சிறுகதையைப் பற்றிய அறிமுகம். இக்கதையை எழுதியவர் ஆர். சூடாமணி. இயற் பெயரும் புனை பெயரும் ஒன்றே. ஆசிரியர் சூடாமணியைப் பற்றிய சிறு குறிப்பு.


1931இல் சென்னையில் பிறந்து 2010இல் மறைந்தார். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர். முறைப்படி ஓவியம் கற்று ஓவியங்களும் வரைந்தவர்.

இவரைப்பற்றி ஏகாந்தன் ஐயா எழுதிய ஒரு பதிவு 


இணைப்பறவை பற்றி ஏகாந்தன் ஐயா எழுதிய விமரிசனம்

https://aekaanthan.wordpress.com/2017/11/17/ஆர்-சூடாமணியின்-சிறுகதை/

திண்ணையில் இணைப்பறவை பற்றிய ஒரு பார்வை

ஆர்.சூடாமணி – இணைப் பறவை – சிறுகதை ஒரு பார்வை! | திண்ணை

இவரது கதைகள் ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த எளிமையான சிக்கல்களை எடுத்துக்கொண்டு விவாதிக்கும் கதைகள் என்று ஜெயமோகன் கூறுகிறார்.

 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

 இணைப்பறவை என்ற இந்த சிறுகதையும் ஒரு உளவியல் கதை தான்.

இக்கதை தனது 60 வருட துணைவியாயிருந்த பாட்டியின் மரணத்தின் பின்பு தாத்தா படும் மனப்போராட்டம் பற்றியது. இறப்பு என்பது ஒரு சாதாரண நிகழ்வே. ஆனாலும் துக்கம் எவ்வளவு தான் இருந்தாலும் அதை அடக்கி வைக்கப் பாடுபடும் தாத்தா கடைசியில் தோற்று, பாட்டியைக் காணப் பயணிக்கிறார்.

 


இக்கதையை ஏகாந்தன் ஐயாவும் பாஸ்கரன் அவர்களும் மிகச் சிறப்பாக முன்னரே விமரிசனம் செய்திருக்கிறார்கள் என்பது தற்போதுதான் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் சொல்ல வந்ததைச் சொல்கிறேன்.

 

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாட ஒன்று

மறந்து வாழ ஒன்று (2)

இரண்டு மனம் வேண்டும்

 

என்று தாத்தாவின் மனது பாட்டியின் நினைவுகளால் நிறைந்து வெடிப்பதற்குக்  காத்திருக்க, வந்தவர் போவர் எனத் துக்கம் விசாரிக்க வருபவர்களால், அது தீ பற்றாமல் இருக்கத் தாத்தா படும் பாடு. கதையாசிரியர் அதை ஓவியமாக நம் கண் முன் நிறுத்துகிறார்.

பாட்டி புழங்கிய இடங்களுக்குச் செல்வது, வெற்று வெறித்த பார்வை, உணர்வுகள் அறவே மழுங்கி, காலம் நேரம் எல்லாம் மறந்து, ஒரு இயந்திர வாழ்க்கை என்று தாத்தா 15 நாட்களை ஓட்டி விட்டார்.

ஆசிரியர் கடைசி நாள் நிகழ்வைப் படம் பிடித்து முன் வைக்கிறார்.

கதை துவங்குவது இவ்வாறு :

தாத்தா துக்கம் விசாரிக்க வருபவர்களைத் தூரத்தே கண்டு புழக்கடைப் பக்கம் ஒதுங்குகிறார். ஆனாலும் ஒருவர் அங்கேயும் வந்து சம்பிரதாய விசாரிப்புகளைச் சொல்ல, தாத்தா சம்பந்தம் இல்லாமல் பேச்சை திசை மாற்ற முயல்கிறார். முடிவில்

வந்தவர் போனபோது தன் நண்பர்களிடம், “என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்த சந்தர்ப்பத்தில் கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்ட்டப்படலே பாருங்களேன். அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூட குடித்தனம் பண்ணினாளோ, பாவம் !

அவர் போனபின்பு பேத்தி ஸ்ரீமதி தாத்தாவைக் காண வர

பின்கட்டுத் தாழ்வாரப் படிகளிலே மேல் படியில் பாட்டி வழக்கமாக உட்கார்ந்து காற்று வாங்கும் படியில் தாத்தா உட்கார்ந்துக் கொண்டார். அவளை அருகில் இருத்திக் கொண்டு அவள் கையைத் தம் கையில் பற்றிக் கொண்டார். பார்வை மறுபடியும் மல்லிகைக் கொடியில் நிலைத்தது. அவர் எதுவும் பேசவில்லை. நிறைந்து ததும்பும் பாத்திரத்திலிருந்து துளிகள் சிந்திவிடாதபடி ஜாக்கிரதையாகப் பற்றுவதுபோல், ஸ்ரீமதி அந்த மௌனத்தை வெகு கவனமாகப் பாதுகாத்தாள்.

தாத்தா பேத்தியின் வடிவில் பாட்டியை  காண்கிறார் என்பது புலப்படுகிறது .

தாத்தாவின் மேல் பரிதாபப்படாமல் சாதாரணமாக எப்போதும் போல் பணிந்து சொன்னதைச் செய்யும்  “ஸ்ரீமதி” யில் தற்போது இல்லாமல் இருக்கும் பாட்டியை  தாத்தா காண்கிறார். அதுவே அவரது ஒரே திருப்தி அல்லது ஒரே ஆசை.

இரவு வந்தது. அவரது மகன் - ஸ்ரீமதியின் தந்தை - தாத்தாவை சாப்பிடக்  கூப்பிடுகிறார்.

ஆனால் அவர், “ம்.. வரேன் போ” என்றார். சாதாரணமாக, ஸ்ரீமதியின் கையை விட்டுவிட்டு, “நீயும் போய் எலையிலே உக்காரு, வந்துடறேன்” என்றார்.

ஆனால் உடனே செல்லவில்லை.

“சாப்பிட வரணும்னெ மறந்துட்டாப் போல் இருக்கு” என்றான் ஸ்ரீமதியின் தம்பி. “பாட்டி இருந்தால் அவருக்கு இப்போ ஒரு டோஸ் குடுத்து அழைச்சுண்டு வருவா”

“இது தினம் தினம் நடக்கற கூத்தாப் போயிடுத்து” என்றாள் ஸ்ரீமதியின் தாய்.

ஸ்ரீமதி எழுந்துவிட்டாள். “நான் போய்த் தாத்தாவைக் கூப்பிட்டு வர்ரேன்” என்று சொல்லி வேகமாய் அறையை விட்டுச் சென்றாள்…..

தாத்தா வந்து உட்கார்ந்துச் சாப்பிட்டார். எதுவுமே பேசவில்லை.

தாத்தா “ஸ்ரீமதி”யில் பாட்டியை காண்பது உறுதியாகிறது.

ஸ்ரீமதியின் தந்தை அவரை அனுதாபத்துடன் நோக்கினார். “புரியறது அப்பா! எனக்கும் அதே மாதிரிதான் இருக்கு. துக்கம் நெஞ்சை அடைக்கற போது என்ன செய்யறோம்னே சில சமயம் நினைவிருக்கிறதில்ல. ஒவ்வொரு நிமிஷமும் அம்மா ஞாபகம் வந்துண்டே இருக்கு. எங்கே பாத்தாலும் அவ நிக்கற மாதிரியே தோண்றது. அம்மா உயிரோடு இல்லேன்னே இன்னமும் நம்ப முடியலே….”

ஸ்ரீமதியின் தாய்

“இப்படி உணர்ச்சியில்லாம மனுஷன் நடந்துக்க முடியுமான்னுதான். பாவம் உங்கம்மா அவருக்காக கொஞ்சமாவ உழைச்சா? ஆயுசெல்லாம் கூடவே இருந்தவள் போய்ட்டாளேன்னு துளிக்கூட துக்கம் இல்லையே”

ஸ்ரீமதியின் அண்ணன் நாராயணன் தன் மனைவியிடம் பாட்டியை பற்றிச் சொல்வது

அவளைப் பார்த்தாலே யாருக்கும் தான் உயிரோடு இருக்கிறதைப் பத்தியே சந்தோஷம் ஏற்படும். அவள் உயிரே வடிவமாயிருந்தவள். வாழ்க்கையோடு பிணைஞ்சிருந்தவள். நாங்க குழந்தைகளாயிருந்த போது அவள் எங்களுக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள், புராணக் காவியக் கதைகள், தேவதைக் கதைகள் எல்லாத்திலேயும் நல்லது ஜயிக்கிறது, கெட்டது தோற்கறது என்கிறதை இன்னும் அடிப்படைக்குப்போய் வாழ்க்கை வளர்ச்சி என்கிற உயிர்த் தத்துவம் ஜயிக்கிறதுன்னும், அழிவும் சாவும் தோற்கறதுன்னும் மனசிலே பதியறாப்பலே சொல்வா. நன்மை ஏன் ஜயிக்கிறதுன்னா அது வாழ்வு. தீமை ஏன் தோற்கறதுன்னா அது அழிவு. அவள் பார்வையில் வாழ்க்கையே ஒரு பெரிய திருவிழா; உயிர் நிரந்தரமான வசந்தம். அவளுக்குச் சாவில் நம்பிக்கை கிடையாது. அதனால் தான் சொன்னேன், அவளுக்குத் துக்கம் கொண்டாடினால் அவளைப் புரிஞ்சுக்காத மாதிரின்னு.”

வருத்தமிருக்கிற மனசாலே பாட்டியைத் தெரிஞ்சுக்க முடியாது. வாழ்க்கை அற்புதமானதுன்னு உணர்கிற உணர்ச்சிதான் என் பாட்டி.”

இந்த வாக்கியங்களைப் படிக்கும்போதுதான் தாத்தா ஏன் வருத்தப்படாமல் அல்லது வருத்தத்தை வெளியில் காட்டாமல் உணர்ச்சியற்ற  ஜடம் போல் வாழ்கிறார் என்பது புரிகிறது (வாழ்க்கை ஜெயிப்பது, சாவு தோற்பது).

இவ்வாறாக குடும்பத்தினர் வாயிலாக அவரவர் கண்ணோட்டத்தில் பாட்டி, தாத்தா பற்றிய எண்ணங்களை விவாதிக்கிறார் ஆசிரியர்.

இரவு முற்றியது.

வெளி வராந்தாவில், தான் ஒரு பக்கமாகத் தாத்தா நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்…..ஸ்ரீமதி மெள்ள அவரிடம் வந்தாள். “தூக்கம் வரவில்லையா தாத்தா? முந்திமாதிரி ராமாயணம் ஏதானும் படிச்சுச் சொல்லட்டுமா? ”

“வேணாம்மா. தூக்கம் வராப்பலே இருக்கு; போய்ப் படுத்துக்கறேன்.”

தாத்தா வீட்டினுள் ஒவ்வொரு அறையாகச் சென்றார். நின்று நின்று  இடங்களை வெறித்தார். பாட்டி பூஜை செய்த அறைக்குச் சென்று அசையாமல் சிறிது நேரம் நின்றார். ……தட்டு தடுமாறி நடந்து வந்து தன் படுக்கையை மீண்டும் அடைந்தார். நடையின் தள்ளாட்டம் இருட்டினால்தானா என்று புரியவில்லை. ஸ்ரீமதி தன் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தாள்; பார்வை மட்டும் அரை இமைத் திறப்போடு தாத்தாவின் மேலே படிந்திருந்தது.

தாத்தா சிறிது நேரம் அசையாமல் படுக்கையின் மீது உட்கார்ந்திருந்தார். பிறகு படுத்துக் கொண்டார். ஆனால் தூங்கவில்லையென்று தெரிந்தது. அவர் கண்கள் திறந்துதான் இருந்தனவென்பதை கருமணிகள் இருளில் பளபளப்பதிலிருந்து ஸ்ரீமதி தெரிந்து கொண்டாள். அவர் ஆழமாகப் பெருமூச்சு விடுவது அவளுக்குக் கேட்டது.

மறுநாள் காலை தாத்தா எழுந்திருக்கவில்லை.

 நீ இல்லாமல் நானும் நானல்ல

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி

இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

அழியாசுடர்களில் படிக்க சுட்டி

https://azhiyasudargal.blogspot.com/2010/07/blog-post.html

அங்கு நம் எ பி வாசகர்கள் இருவர் இட்ட பின்னூட்டங்கள். 

வல்லிசிம்ஹன் on September 25, 2010 at 12:30 PM said...

நன்றி.

Geetha Sambasivam on September 25, 2018 at 1:42 PM said...

மிக அருமை! இணைப்பறவையைத் தேடிப் பறந்த ஆண் பறவை! ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பதன் முழுப் பொருளும் இந்த ஒரு சிறுகதையில்! ஶ்ரீமதியின் மன முதிர்ச்சியும் வியக்க வைக்கிறது.

வலைதமிழில் படிக்க

https://www.valaitamil.com/inai-paravai_9059.html

sirukathaigal.com இல்

https://www.sirukathaigal.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88/

அது என்னமோ தெரியவில்லை. தற்செயலா? நான் அறிமுகம் செய்யும்  கதைகளில் “நாணு” வந்து விடுகிறார். மாதவனின் “பாச்சி”, க நா சு வின் “காவேரி மடத்து கிழவர்”, மற்றும் இன்றைய கதை; இன்றைய கதையில் நாணு ஒரு முக்கிய பாத்திரம் அல்ல என்றாலும். 

இன்றைய இந்த அறிமுக விமரிசனம் ஒரு கதா காலட்சேபம் போல் அமைந்திருக்கிறதாக எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

இலவச இணைப்பு:

மத்யமம் என்று ஒன்று உண்டேல்

மாக்ஸிமமும் எப்போதும் உண்டு.

திருமணத்தில் துவங்கும் குடும்பம்;

குடும்பம் துவங்கும் மூன்று

பாசம், நிதி (வரவு, செலவு), கடமை

பிள்ளைகள் வளரும்போது

மூன்றும் மத்யமத்தில்

நிறைவது முதுமையில்

மாக்ஸிமம் உடைந்தால்

சொல்லவொணா வீழ்ச்சி.

தாத்தாவின் பாசம் உடைந்தது

அவருக்குத் தாங்கவொணா வீழ்ச்சி.

52 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் ஆரோக்கியம் நிறை வாழ்வு இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  பிரார்த்திப்போம்.

      இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அம்மா. நமஸ்காரங்கள்.
       

      நீக்கு
    2. மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம். மணங்கள் கூடி வர வேண்டும்.

      நீக்கு
  2. பேருந்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வு அதிர்ச்சியையும்
    ஆச்சரியத்தையும் கொடுத்தது. இது போல சமயத்தில்
    பதட்டப்படாமல் செயல் பட்ட
    தமிழ்ச்செல்வனின் ஆதரவான செயல் ஒரு
    பிரமிப்பையும் கொடுக்கிறது.

    தன் வேலை பறிபோவதாக இருந்தாலும் துணிந்து
    ஓட்டுனரின் உயிரைக் காப்பாற்றிய
    மனிதரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    அந்த நொடியில் காப்பாற்றி இருக்காவிட்டால்
    அந்த இயிர் நஷ்டப்பட்டிருக்கும்.
    மனதை நெகிழ்த்தும் சம்பவம்.
    சிறப்புடன் வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் நிதான செயல்பாடுதான் சிறப்பு.  ப்ளஸ் அவரின் நட்பும், உதவிய பாங்கும்.

      நீக்கு
  3. கடைசி கருத்து மினிமம் என்று ஆரம்பித்து இருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
  4. இணைப்பறவை படித்த நினைவு இருக்கிறது.

    சூடாமணி அவர்களின் கதைகளில் மனோதத்துவக் கருத்துக்களும் அதிகம் இடம்
    பெறும்.
    மனதின் மெல்லிய உணர்வுகளை
    அழகாகச் சொல்வார்.

    இந்தக் கதையிலும் அன்றில் பறவை போல
    இணை பிரிந்ததால் தாத்தாவின் உயிர் பிரிகிறது.

    பதிலளிநீக்கு
  5. காரட் பற்றிய செய்தி புதியது.
    நல்ல காரட் இங்கே கிடைக்கிறது.

    சாப்பிட்டுப் பயனடையலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் எல்லோர் இல்லங்களிலும் சமையலில் வாரம் ஒருமுறையாவது கேரட் இடம்பெற்று விடும்.

      நீக்கு
    2. ஆர்க்கி/ஆர்ச்சி காமெடியில் ஜக் ஹெட் காரட் சாப்பிடுவது பற்றி அடிக்கடி நகைச்சுவையாக வரும்.

      நீக்கு
  6. மணிப்பூர் சிறுமியைப் பற்றி இப்போதுதான் பார்க்கிறேன்.
    பாவம் அவளே சின்னக் குழந்தை. இந்தக் குழந்தையையும் தூக்கி நடக்கவேண்டும் என்றால்
    எத்தனை பெரிய வேலை.!!!

    செய்தி படித்து அந்தக் குடும்பத்துக்கு யாராவது உதவினார்களோ என்னவோ..
    இறைவன் துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதவினார்கள் என்றுதான் படித்த ஞாபகம் அம்மா.

      நீக்கு
    2. நல்ல பொறுப்புள்ள குழந்தை. இங்கே குடியிருப்பு வளாகத்தில் ஒரு பெண் அந்த மாதிரித் தான் இருந்தாள். இத்தனைக்கும் சொந்தத் தம்பி இல்லை. பெரியம்மா பிள்ளை.

      நீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. மனித நேயங்களை வெளிப்படுத்தும் இரு செய்திகளும் படிக்கும் போதே உள்ளத்தை உருக்குகிறது. எல்லோரையும் ஆண்டவன் நலமாக வைத்திருக்க வேண்டுமென மனது பிரார்த்திக்கிறது.🙏.

    ஆர். சூடாமணி அவர்களின் இந்தக் கதை முன்பே பல தடவைகள் வாசித்திருக்கிறேன். இன்றும் சுட்டிக்குச் சென்று ஒருமுறை வாசித்து வந்தேன். அருமையான உணர்வுகளை அழுத்தமான வார்த்தைகளால் பிரதிபலிக்கும் கதை. ஆனால், இப்படி உலகில் பிறந்து வாழ்வில் இணையும் அனைவராலும், இணைப்பறவைகளாக இருக்க இயலாமல் போகிறது என்பதுதான் நிதர்சனம்.

    நல்லதொரு கதையை அறிமுகப்படுத்திய சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. இது போன்ற ஊக்கங்களே நல்ல கதைகளைத் தேடி சென்று படிக்கத்  தூண்டுகிறது.

       Jayakumar

      நீக்கு
  10. ஓட்டுநரைக் காப்பாற்றிய நடத்துநரை எப்படிப் பாராட்டுவது என்றே புரியலை. அருமை. இனியானும் நல்லபடியாக இருக்கட்டும். அந்தக் குட்டிப் பெண்ணுக்கு உதவிக்கு யாரையேனும் அனுப்பி வைச்சாங்களாமா? படிப்புச் செலவு ஏத்துண்டால் போதுமா? குட்டிக் குழந்தையை யார் பார்த்துப்பா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // குட்டிக் குழந்தையை யார் பார்த்துப்பா?.. //

      அப்பா, அம்மா வயல் வேலைக்குப் போவதனால் தூக்கிச் செல்ல இயலவில்லை.
      வயலில் வேலை ஓய்ந்து போனால் குழந்தையுடன் தானே இருந்தாக வேண்டும் - வேறு வேலை கிடைக்கும் வரை...

      நீக்கு
    2. நமக்குத் தோன்றிய இந்த உணர்வு அருகிலிருந்தோருக்கு தோன்றாமல் இருந்திருக்குமா? நிச்சயம் உதவி கிடைத்திருக்கும்.

      நீக்கு
  11. மனோ தைரியத்துடன் வெகு நிதானமாக ஓட்டுனரின் உயிரைக் காப்பாற்றியவர் உண்மையில் மா மனிதர்.. எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

    பதிலளிநீக்கு
  12. ஜேகே அவர்களின் விமரிசனம் வித்தியாசமாக இருக்கிறது. என்றாலும் கதையின் முக்கிய முடிச்சைப் பிடித்துவிட்டார். கடைசிக் கவிதை மத்யமம் னு எப்படி வரும்னு யோசிக்க வைத்தது. தாத்தாவுக்கு வீழ்ச்சி எல்லாம் இல்லை. தாத்தா கடைசியில் அனைவருக்கும் தான் தன் மனைவி மேல் வைத்திருந்த அன்பை வெளிக்காட்டி விட்டாரே! இது எப்படி வீழ்ச்சியாகும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டிக்கு வாழ்வு என்பதே ஜெயம். சாவு என்பதே தோல்வி என்பதை முன்பே பார்த்து இருப்பீர்கள். அதனால் தாத்தாவுக்கு வீழ்ச்சி என்பதே சரி. வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Jayakumar

      நீக்கு
    2. வாழ்க்கையை அணுஅணுவாக ரசித்த பாட்டி போய்விட்டாள். அது எப்படி அவளுக்கு ஜெயம் ஆகும்? சாவு என்னும் தோல்வியைச் சந்தித்து விட்டாளே! தாத்தா தான் சாவிலும் விடாமல் பாட்டியுடன் போய்ச் சேர்ந்து கொண்டு தன் வெற்றியைக் கொண்டாடுகிறார். பாட்டி போயிட்டாளே என வெளிப்படையாக வருந்தாட்டியும் உள்ளூர் அவர் மனம் பாட்டியையே எதிர்பார்த்துச் சென்றுவிட்டது.

      நீக்கு
    3. விவாதத்துக்குரிய கருத்துகள்.

      நீக்கு
  13. தங்கையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்குச் செல்லும் மணிப்பூர் சிறுமி மெய்னிங்சின்லியு பாமெய்..

    பெண் குழந்தைகள் இயல்பிலேயே தாய்மை உணர்வு உடையவர்கள் என்பது இந்த சம்பவத்தின் வாயிலாக மீண்டும் நிரூபணமாகி உள்ளது..

    உண்மை.. உண்மை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ஆண் என்றால் வேறு வழியை யோசித்திருப்பானோ...

      நீக்கு
  14. மனிதநேய மனிதருக்கு பாராட்டுகள்.. வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. இன்றைக்கு அனைத்துப் பகுதிகளும் அருமை.

    நடத்துநர் செயல், சிறுமியின் அன்பு....

    பதிலளிநீக்கு
  17. நடத்துனர் தமிழ்ச்செல்வன் அவர்களை பாராட்டி வாழ்த்த வேண்டும். உடனே செயல்பட்டு நண்பரை காப்பாற்றி இருக்கிறார், வாழ்க வளமுடன்.

    //சிறுமியின் பாசம், பொறுப்புணர்வு மற்றும் படிப்பின் மீதான ஆர்வத்தை கண்டு பலரும் வியந்தனர்.//

    வாழ்த்துக்கள் குழந்தைக்கு. நன்றாக படித்து வாழ்க்கையில் எல்லா வளங்களும் அடைய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. ஜெயகுமார் சந்திரசேகர் கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.கதையை முன்பு படித்து இருக்கிறேன்.

    இணை பறவைகளில் ஒன்றை ஒன்று பிரிந்தால் வேதனைதான். தாத்தாவிற்கு உடனே பாட்டியை சேரும் பாக்கியம் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவருக்கு நேரம் என்று ஒன்று உண்டு. அவரவர் இறங்கவேண்டிய நிறுத்தங்களில் இறங்குகிறார்கள். மேலே சென்று சேர முடியுமா? கண்டவர் விண்டிலர்.

      நீக்கு
  19. தொடர்ந்து இந்தப் பகுதிக்கு எழுதுங்கள் ஜெயக்குமார் ஸார்.

    போகப்போக சுட்டிகள் தயவில்லாமல்
    நீங்கள் வாசித்ததை நீங்களே உங்கள்
    விவரிப்பில் சொல்ல உங்களுக்கென்று
    ஒரு form கிடைக்கும். முயன்று பாருங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. நடத்துனர் தமிழ்ச்செல்வன் பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
  21. முதல் இரு நாளிதழ் செய்திகளும் மனதை நெருடச்செய்தன.

    பதிலளிநீக்கு
  22. மனதை நெகிழ வைத்த முதல் பாசிட்டிவ் செய்தியில் இடம் பெற்ற நடத்துநர் தமிழ்ச்செல்வன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    இரண்டாம் செய்தியில் இடம்பெற்றுள்ள சிறுமிக்கு உதவி வழங்கும் அமைச்சருக்கும் பாராட்டுகள்.

    ஜெயக்குமார் சந்திரசேகரன் சாரின் புத்தக அறிமுகம் நன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  23. நடத்துநர் தமிழ்ச்செல்வன் வாவ்! இது இதுதான் ஒருவருக்கு மிக மிக அவசியம் என்பதற்கும் எடுத்துக்காட்டு. அந்த படபடப்பு இல்லாத நிதானமும் அந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதுவும். இந்த அமைதியான டென்ஷன் இல்லாத நிதானமான ஆனால் அதே சமயம் டக்கென்று முடிவெடுத்துச் செய்வது எல்லொருக்கும் வராத ஒன்று அதுவும் தன் கார்டை தேய்ப்பது என்பதெல்லாம். எத்தனை பாராட்டினாலும் தகும்! தமிழ்ச்செல்வன் வாழ்க!

    குட்டிச் சிறுமிக்கு உதவி கிடைத்திருப்பது அருமை. நல்ல விஷயம் இப்படி எத்தனைச் சிறுமிகள் நம் நாட்டில் இருக்கிறார்கள்!!! எல்லோருக்கும் இப்படிக் கிடைக்க உதவலாம் கண்டிப்பாக, மாநில அமைச்சர்கள் பெரிய பதவியில் இருப்பவர்கள் அந்த்ந்த மாநிலத்தில் இருக்கும் இப்படியான சிறுமிகலைத் தத்தெடுத்துச் செய்யலாம்.

    இதில் பலருக்கும் தெரியுமா என்று தெரியவில்லை, நடிகை ஹன்சிகா 30 குழந்தைகளைத் தத்தெடுத்துப் படிக்க வைத்து உதவி வருகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. ஜெகே அண்ணா அறிமுகப்படுத்தியிருக்கும் கதையை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். மனதைத் தொட்ட கதை. அறிமுகம் நன்று ஜெகே அண்ணா. உங்கள் கருத்துகளை, வாசிக்கும் போது தோன்றியவற்றை இன்னும் சொல்லலாமோ என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. தகவல்களும் கதை அறிமுகமும் நன்று. இணைப்பறவை வாசித்தது உண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!