சனி, 30 ஏப்ரல், 2022

வெப்பத்தைத் தாங்கும் தடுப்பூசிகள் மற்றும் நான் படிச்ச புத்தகம்

 கேரளாவில் கொல்லம் அருகில் உள்ள சாஸ்தாம்கோட்டை

டி.பி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்துக் கொண்டிருக்கிறார்,
ஆலிஃப் முகமது. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவருடைய வகுப்புத்
தோழிகள் ஆர்யா, அர்ச்சனா இருவரும் அவரைத் தூக்கிக் கொண்டு
சென்ற காணொளி சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகப் பரவி
வருகிறது.


‘‘பிறந்ததில் இருந்தே இப்படித்தான் இருக்கிறேன். ஆர்யா, அர்ச்சனா

மட்டும் இல்லை... என்னுடன் படிக்கும் எல்லாருமே என்னைத் தூக்கிட்டு
போவாங்க. நான் எங்கேயாச்சும் போகணும்னு சொன்னாப்போதும்
ஆண், பெண் பேதம் இல்லாம உடனே என்னைத் தூக்கிட்டு போயிடுவாங்க.

மார்ச் 24ம் தேதி அப்படித்தான் என்னை ஆர்யாவும், அர்ச்சனாவும் தூக்கினாங்க.
அவங்க தூக்கினதை சும்மா வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில்
பதிவிட்டோம். அந்த வீடியோ இந்த அளவுக்கு வைரல் ஆகும்னு கொஞ்சமும்
எதிர்பார்க்கலை.

என்னை மாதிரியான மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள்ளேயே
முடங்கியிருக்கக் கூடாது. அவங்க எல்லாருக்கும் நான் ஒரு முன்மாதிரியாக
இருக்கணும்னு விரும்புறேன். என் நண்பர்கள் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்.
அதுதவிர காலேஜிலும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குறாங்க.

அந்த வீடியோ வைரலானதைப் பார்த்துட்டு என் நண்பர்களும், ஆசிரியர்களும்,
பெற்றோர்களும் அடைஞ்ச சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை...’’ என்கிறார்
ஆலிஃப் முகமது.

நன்றி- குங்குமம் டீம்  (நன்றி ஜெயக்குமார் ஸார்)

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

திருச்சி: துளசியின் மருத்துவ குணங்கள் பாரம்பரிய மருத்துவ நிபுணர்களால் அடிக்கடி பாராட்டப்படுகிறது. இப்போது, தாவரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட மூலக்கூறைப் பிரித்தெடுத்து, அதன் பெருக்கத்தைத் தடுக்க புற்றுநோய் உயிரணுக்களுக்கு அறிமுகப்படுத்தும் செயல்முறை ஜெர்மன் அரசாங்கத்திடமிருந்து காப்புரிமையைப் பெற்றுள்ளது.  திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியின் தாவரவியல் துறையின் டாக்டர் செந்தில் குமாரின் வழிகாட்டுதலின் கீழ், ஆராய்ச்சி அறிஞர் ஆஷா மோனிகா இந்த ஆய்வை மேற்கொண்டார்.  "துளசியிலிருந்து ஒரு மூலக்கூறைப் பிரித்தெடுத்து, மார்பகப் புற்றுநோய் செல் லைனரில் அறிமுகப்படுத்தினோம். அந்த மூலக்கூறு மார்பகப் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது என்று எங்கள் ஆராய்ச்சி கண்டறிந்தது. எங்கள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பிறகு, நாங்கள் காப்புரிமைக்காகப் பணியைச் சமர்ப்பித்தோம். நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆய்வு ஜெர்மனி அரசிடம் இருந்து காப்புரிமை பெற்றது" என்று டாக்டர் செந்தில் குமார் கூறினார்.  ஆய்வின் அடுத்த கட்டங்களை விளக்கிய ஆஷா மோனிகா, “அடுத்த கட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விளையும் செடியில் இருந்து ஒரே மூலக்கூறைச் சேகரிப்போம். வெவ்வேறு மாவட்டங்களில் விளையும் தாவரத்தின் மூலக்கூறுகள் ஒரே மாதிரியான மூலக்கூறைத் தருகின்றனவா என்பதை ஆய்வு செய்வோம். சில நேரங்களில், அதே மூலக்கூறு வேறொரு மாவட்டத்தில் உள்ள ஆலையில் இருந்து சேகரித்தால் நல்ல பலன் கிடைக்கும்."  மார்பக புற்றுநோய்க்கான மருந்துகளை மலிவான விலையில் தயாரிக்க இந்த ஆய்வு உதவும் என்று டாக்டர் செந்தில் குமார் நம்பிக்கை தெரிவித்தார். "துளசி ஒரு பொதுவான தாவரமாகும், அதை நாம் பெரும்பாலான இடங்களில் காணலாம். பல தலைமுறைகளாக இதைப் பயன்படுத்துகிறோம். மார்பக புற்றுநோய்க்கான மலிவான மருந்து ஆய்வில் வரும் என்று நம்புகிறேன். அதைச் சாத்தியமாக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். நமது விவசாயிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்," என்றார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.ஆரோக்கியசாமி சேவியர் எஸ்.ஜே., இப்பணியைப் பாராட்டி, மேலும் இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். "கடந்த நான்கு மாதங்களில், எங்கள் கல்லூரி சுமார் மூன்று காப்புரிமைகளைப் பெற்றுள்ளது. எங்கள் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் சாமானிய மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதாகும். துளசி குறித்த தற்போதைய ஆய்வு எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.  தலைப்பு: திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் ஆஷா மோனிகா மற்றும் டாக்டர் செந்தில் குமார் ஆகியோர் காப்புரிமை சான்றிதழை செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் டாக்டர் எம் ஆரோக்கியசாமி சேவியர் எஸ்.ஜே.யிடம் வழங்கினர்.  (நன்றி ஜெயக்குமார் ஸார்)

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதுடில்லி :கொரோனாவுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாக்கப்படும் நிலையில், வெப்பத்தை தாங்கக் கூடிய புதிய தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் இந்திய நிறுவனம் ஈடுபட்டுள்ளது.  கொரோனாவுக்கு எதிராக தற்போது உலகெங்கும் பல தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த தடுப்பூசிகளை, குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதனால் கூடுதல் செலவுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இந்திய அறிவியல் மையமும், 'மின்வாக்ஸ்' என்ற உயிரிதொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து புதிய தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.இந்த தடுப்பூசியை, 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில், நான்கு வாரங்கள் வரையிலும், 100 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில், 90 நிமிடங்கள் வரையிலும் வைத்திருக்க முடியும்.தற்போது, இந்த தடுப்பூசி எலிகளுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இது, டெல்டா, ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனாவுக்கு எதிராக மிகச் சிறந்த பலனை அளித்துள்ளதாக மின்வாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீநகர்: இந்திய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டிபி பாண்டே ரம்ஜான் மாதத்தில் மத வேறுபாடுகளின்றி தனது படைப்பிரிவினருடன் தொழுகை நடத்தினார். அப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டது.

நாடு முழுவதும் முஸ்லிம்கள் ரம்ஜான் மாதத்தை கடைப்பிடிக்கின்றனர். இந்நிலையில் ராணுவத்தினர் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் மத வேறுபாடுடின்றி தொழுகை நடத்திய புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி பாராட்டுக்களை பெற்றது. ராணுவத்தில் படை வீரரிலிருந்து அதிகாரிகள் நிலை வரை முஸ்லிம்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.

தொழுகை நடத்திய புகைப்படத்தின் சிறப்பு என்னவெனில் அதனை ஏற்பாடு செய்தவர் 15வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பாண்டே. அவருடன் சீக்கியர் ஒருவரும், மேலும் பல ஹிந்துக்களும் தொழுகையில் ஈடுபட்டனர்.  காஷ்மீரில் மத மோதல்கள் அதிகம். அங்கு ராணுவம் அனைவருக்குமானது என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் இதனை செய்துள்ளனர். இதனை பலரும் வரவேற்று கருத்துக்கள் பதிவிட்டனர்.
“மதத்தின் பெயரால் பிளவை உருவாக்க முயற்சிக்கும் கூறுகளுக்கு மதநல்லிணக்க செய்தி இது. இது தான் நமது இந்தியா. அதை எண்ணி பெருமை கொள்வோம்.” என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர், ”இந்திய இராணுவத்தில் உள்ள மதச்சார்பற்ற மரபிற்கு சல்யூட்.” என கூறினார்.

==================================================================================================



நான் படிச்ச புத்தகம்
ஜீவி 


பிரபஞ்சம் என்பது நாம் சர்வ சாதாரணமாக அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை தான்.
 
வானவெளியில் சஞ்சரிக்கிற கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கிரகங்களும் உள்ளடங்கியது தான் இந்தப் பிரபஞ்சம். சூரியன் ஒரு மிகச் சிறிய நட்சத்திரம். சூரியனைச் சுற்றி வருகின்ற கிரகங்கள், அந்த கிரங்களில் ஒன்றான  கடுகு போன்ற பூமி --  இதெல்லாம் கூட நமக்குத் தெரிந்தவை தான்.

நாம் கூட இந்தப் பிரபஞ்ச இயக்கத்தின் அங்கம் தான் என்று சொன்னால் லேசான சுவாரஸ்யம் சிலருக்கு தட்டுப்படலாம்.  இந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து வாசிப்பதற்கு குறைபட்ச தகுதி இது தான்.  அந்தத் தகுதி உங்களில் நிச்சயம் ஆனவர்கள் மட்டும் மேற்கொண்டு அது தொடர்பாகத் தெரிந்து கொள்வதற்காக வாசியுங்கள். வாசித்ததின் அடிப்படையில்  உங்களவில் புதிதாக உணர்ந்த உள்ளுணர்வுகளை மற்றவர்களிடமும் பகிர்ந்து சந்தோஷப்படுங்கள். 

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நமது ஆறாவது வகுப்பில் படித்த பாடம்.  வானவெளி எங்கும் நட்சத்திரங்களும், கிரகங்களும் தங்கள் வழியில் முறையாக பயணித்துக் கொண்டு தான் இருக்கின்றன. பிரபஞ்சம் முழுவதையும் ஒரு காந்தசக்தி இயங்கி, இந்த ஒழுங்கு முறையை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. பிரபஞ்சத்தின் அங்கமான மனிதனுள்ளும் ஒரு ஒப்பற்ற காந்தசக்தி பொதிந்துள்ளது என்றும் அதை எப்படி உபயோகமாக பயன்படுத்திக் கொள்வது என்பதை உயிரோட்டமாக விவரிப்பதே இந்த நூலின் உள்ளடக்கம்.   

இதயத்தின் அயர்வில்லாத தொடர்ச்சியான இயக்கம் ஒரு ஆச்சரியம் என்றால் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள், அதனை இயக்கும் மூளையில் உருவாகும் மின் தூண்டல்கள் இன்னொரு பிரமிப்பு.

பிரபஞ்ச காந்த மண்டலத்தோடு நம் மூளையும் இணைக்கப் பட்டிருப்பது தான் அடிப்படையான உயிர் சக்தியின் செயல்பாடுகளின் ஆதார விஷயம்.  நம் உயிர் இயக்கமே ஒப்பற்ற சக்தியை உள்ளடக்கிய காந்த இயக்கம் தான்.  இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் போன்றவை ஒரு வகையான காந்த இயக்கத்தால் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நரம்பு மண்டலமே ஒரு காந்தப் பிரதேசமாக உடலெங்கும் வியாபித்திருக்கிறது. நம்மில் பிரபஞ்ச  சக்தியின் வெளிப்பாடு தான் இது. சொல்லப் போனால் உடலின் செயல்பாடே காந்த அதிர்வுகளால் தான் நடைபெறுவதாகக் கருதலாம்.

இரண்டு விஷயங்கள். ஒன்று : நம் உடலமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ள காந்த சக்தி..  மற்றொன்று : நம்மைச் சுற்றிலும் உள்ள பிரபஞ்சத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற காந்த சக்தி.  இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பது தான் நம் இயக்கத்தின் ஆதார சக்தி.

பேரா சைகாலஜி (Para - Psychology) பற்றித் தெரிந்தவர்களுக்குத் தெரியும். உலகத்திலுள்ள அத்தனையும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. உயிர்ப் பொருட்களும் சரி, ஜடப்பொருட்களும் சரி இந்த இணைப்பில் அடக்கம். இந்த இணைப்பு மின் காந்த அலைகளால் ஏற்படுகிறது. ஒரு அகண்ட காந்த வெளியில் குட்டியூண்டு உயிர் சுமந்த பிறவிகளாய் மிதந்து கொண்டிருக்கிறோம்.

பிரபஞ்ச சக்தியை நம்மில் உள்ளடக்கமாகக் கொண்ட காந்தம் நாம் என்பதோடு பிரபஞ்சம் என்கிற காந்தவெளியோடு நாம் இணைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. 
பிரபஞ்ச காந்த வெளியில் மகத்தான சக்தியும் நமக்குத் தேவையான சிந்தனைகளுக்கு உந்து சக்தி கொடுக்கக் கூடிய ஆற்றலும் (Energy) நிரம்பிக் கிடக்கின்றன.   எது நடக்க வேண்டும் என்று நாம் உறுதியாக எண்ணுகிறோமோ, அது தொடர்பான எண்ண அலைகள் பிரபஞ்ச காந்த சக்தியோடு இணைப்பு கொண்டு விடுகின்றன. இதன் விளைவாக நாம் விரும்புகிற காந்தச் சூழ்நிலை நம்மைச் சுற்றி உருவாகி விடுகிறது. 

எவரெடி செல்லை நினைவில் கொள்ளுங்கள். பாட்டரி செல்லில் அடைக்கப் பட்டுள்ள ரசாயனப் பொருள்களின் மாற்றம் மின்சார சக்தியாக வெளிப்படுவது போலத் தான் இதுவும்.  மூளையில் உள்ள செல்களில் ஏற்படுகிற ரசாயன மாற்றம், எண்ணங்கள் என்ற காந்த அலைகளாக வெளிப்படுகின்றன. மூளையை தலைமை பீடமாகக் கொண்டுள்ள நரம்பு மண்டலம் அனுப்புகிற தகவல்கள் பூராவும் மின் உந்துதலாகவே வெளிப்படுகின்றன. ஆக நம்மில் உருவாகும் எண்ணங்கள் காந்த அதிர்வுகளாகின்றன. நம்முடைய எண்ணங்க்ளுக்கு நம்பிக்கை என்னும் கவசம் கிடைத்து வலுப்பெறும் போது காந்தசக்தியும் மிகுதியாகி பிரபஞ்ச காந்த வெளியில் அதற்கான அதிர்வுகள் ஏற்படுகின்றன. இது தான் எண்ணியர் திண்ணியராகப் பெறின் எண்ணியது நம் கைவசப்படும் சூத்திரம்.

தகுந்த பயிற்சியில்லாமல் எந்தச் செயல்பாடின் வெற்றியும் இல்லை. நம்மிடம் காந்த சக்தி இருக்கிறது. அந்த காந்த சக்தியை உபயோகப்படுத்தி பிரபஞ்ச காந்த சக்தியில் நமக்கு சாதகமான அதிர்வுகளை நேர்மறைச் சிந்தனைகள் உதவியுடன் நம்மால் ஏற்படுத்த முடியும். எண்ணங்கள் மூலமாகத் தான் நம்முடைய காந்தசக்தியை நாம் பயன்படுத்துகிறோம். நம்முடைய எண்ணங்கள் வலுவுள்ளதாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைகின்ற பொழுது நம் செயல் வெற்றிக்கான சாதக சூழ்நிலை உருவாகிறது.  இது தான் தாத்பரியமே.

எதிர்மறை எண்ணங்களைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் ஒரு பக்கம் ஆக்கபூர்வ எண்ணங்கள் தோன்றாமல் சமன்படுத்தி விடுவதோடு இன்னொரு பக்கம் நம்மைச் சுற்றி நாமே எதிர்மறை காந்த அலைகள் உருவாக வழிகோலுகின்றன.
ஆழ்மனத்தில் எதிர்மறை எண்ணங்கள் படிந்து விடுவதால் ஆக்கபூர்வ சிந்தனை தடைபட்டுப் போய்விடுகிறது என்பது மனவியல் நிபுணர்களின் கருத்து. ஆழ்மனப் பதிவுகள்,  நினைவு மனத்தின் கவனத்திற்கு வருவதில்லை என்பதினால் ஹிப்னாடிச உறக்கத்தின் மூலமாகத் தான் தகுந்த சஜஷன் மூலம் அந்த எதிர்மறைப் பதிவுகளை அப்புறப்படுத்த முடியும் என்கிறார்கள்.

நம்மில் படிந்திருக்கும் காந்த அலைகளைத் தவிர நம்மைத் தாக்கும் காந்த அலைகளும் உண்டு. நம் காந்த சக்கியை நம் மனோசக்தியாக உருவெடுக்கச் செய்யும் வழிமுறைகளும் உண்டு.
நம் எண்ணங்கள் தான் நம் உடல் தோற்றத்திற்கான வடிவமைப்பையும் கொடுக்கிறது போன்ற தகவல்களை நூலாசிரியர் விவரிப்பதை வாசிக்க வாசிக்க வியப்பு தான் விஞ்சுகிறது.

விருப்பமுள்ளவர்கள் முழு நூலையும் வாசித்துப் பலனடையலாம்.

எனக்கென்னவோ தொன்ம காலத்து முனிவர்கள் பிரபஞ்ச காந்த சக்தியை தம்மில் அடக்கிக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகளைத் தாம் தவமியற்றினார்கள் என்று நாம் சொல்வதாக எண்ணம். 

நூல் விவரம்:

உங்கள் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி?
ஆசிரியர்:  J.S. ஏப்ரகாம்
நர்மதா பதிப்பகம்
16/7,  ராஜாபாதர் தெரு,
பாண்டிபஜார்,  
சென்னை -- 17

67 கருத்துகள்:

  1. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் அனைவருக்கும் இனிய காலை
    வணக்கம். தொற்றில்லா வாழ்வு தொடர வேண்டும். இறைவன் அருள் என்றும்
    நம்முடன்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.  பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. ஆர்யா வாழ்க..
    அர்ச்சனா வாழ்க..
    அன்புடை நெஞ்சங்கள்
    ஆ ல் போல வாழ்க!..

    பதிலளிநீக்கு
  5. இந்நாட்டின் வீரர்களுக்கு வணக்கம்!.. வாழ்க பாரதம்!.?

    பதிலளிநீக்கு
  6. ''அந்த வீடியோ வைரலானதைப் பார்த்துட்டு என் நண்பர்களும், ஆசிரியர்களும்,
    பெற்றோர்களும் அடைஞ்ச சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை...’’ என்கிறார்
    ஆலிஃப் முகமது.''

    ஆலிஃப் முஹமதுவுக்கு உதவி செய்த ஆர்யா,அர்ச்சனா
    இருவரையும் நினைத்து
    மிகப் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

    இளைய வயதினரின் உற்சாகமும் நம்மைத் தொற்றிக் கொள்கிறது.
    இந்தக் குழந்தைகள் எல்லோருமே வளமாக
    இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ''ஆய்வின் அடுத்த கட்டங்களை விளக்கிய ஆஷா மோனிகா, “அடுத்த கட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விளையும் செடியில் இருந்து ஒரே மூலக்கூறைச் சேகரிப்போம். வெவ்வேறு மாவட்டங்களில் விளையும் தாவரத்தின் மூலக்கூறுகள் ஒரே மாதிரியான மூலக்கூறைத் தருகின்றனவா என்பதை ஆய்வு செய்வோம். சில நேரங்களில், அதே மூலக்கூறு வேறொரு மாவட்டத்தில் உள்ள ஆலையில் இருந்து சேகரித்தால் நல்ல பலன் கிடைக்கும்."\


      தளராமல் ஆராய்ச்சி தொடர்ந்து
      வெற்றி பெற வேண்டும். இந்திய மருந்துத் துறைக்கே
      நன்மை கிடைக்கும். மிக நல்ல செய்தி இது.

      நீக்கு
    2. ''ஸ்ரீநகர்: இந்திய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டிபி பாண்டே ரம்ஜான் மாதத்தில் மத வேறுபாடுகளின்றி தனது படைப்பிரிவினருடன் தொழுகை நடத்தினார். ''

      இப்போது இது போன்ற மத நல்லிணக்கம்
      காட்ட வேண்டியது மிக அவசியம். அதிகாரிகளின்
      பண்பட்ட நடவடிக்கை
      ராணுவத்துக்கு வெளியே உள்ளவர்களுக்கும் நல்ல
      மாதிரியான நேர் எண்ணங்களை விதைக்கும்.
      மிக அருமை.

      நீக்கு
    3. பாராட்டப்பட வேண்டியவர்கள். நன்றி வல்லிம்மா.

      நீக்கு
    4. நர்மதா பதிப்பகமே ஒரு பொக்கிஷம்.

      ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அவர்களின்
      புத்தகங்கள் வெளியாகும் போது வாங்கிப் படித்த அனுபவம்
      இன்னும் என்னுடன்.

      இந்த மின் காந்த அலைகள், பாரா சைக்காலஜி, டெலிபதி,
      எண்ணங்களை மற்றவர்களுக்குக் கடத்துதல்
      வாழ்க்கை, அதற்கு அப்பால் என்ன என்பதைக் குறித்து
      எழுதப்படும் புத்தகங்கள் எப்பொழுதுமே
      மனதை ஈர்க்கும்.

      ''இரண்டு விஷயங்கள். ஒன்று : நம் உடலமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ள காந்த சக்தி.. மற்றொன்று : நம்மைச் சுற்றிலும் உள்ள பிரபஞ்சத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற காந்த சக்தி. இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பது தான் நம் இயக்கத்தின் ஆதார சக்தி.''

      மிக அருமையான விஷயம். இதை உணர்ந்து நம் ஆற்றலை
      அதிகரிப்பதால் இன்னும் நன்மைகளை அடைய முடியும்.
      மிக நல்ல பதிவு.
      திரு ஜீவிக்கு நன்றி.

      நீக்கு
    5. இங்கு கூட நாலாவது தடுப்பூசி வந்து விட்டது. நம் நாட்டைப் போன்ற வெப்பம் அதிகமான
      தேசத்தில் உஷ்ணம் தாங்கக் கூடிய
      தடுப்பூசி கண்டுபிடிப்பது
      மிக அருமையான சேவை. நம் வாழ்த்துகள்.

      நீக்கு
    6. நர்மதா பதிப்பகம் பற்றி எனக்கும் அந்த அபிப்ராயம் உண்டு.

      நான் இன்னும் மூன்றாவதே போட்டுக்கொள்ளவில்லை!

      நீக்கு
    7. பிரபஞ்ச காந்த சக்தி பற்றி, அதை வைத்து நம் ஆற்றலை அதிகரிப்பதற்கான வழி முறைகள், அதற்கான பயிற்சிகள் என்று இதெல்லாம் பற்றி வேதாத்ரி மகரிஷி நிறைய எழுதியிருக்கிறார், வல்லிம்மா.
      வேதாத்ரி மகரிஷி அவர்களின் மனவளக் கலை பற்றி சகோதரி கோமதி அரசு அவர்கள் நிறைய அறிவார்கள்.

      நீக்கு
    8. பிரபஞ்ச காந்த சக்தி பற்றி, அதை வைத்து நம் ஆற்றலை அதிகரிப்பதற்கான வழி முறைகள், அதற்கான பயிற்சிகள் என்று இதெல்லாம் பற்றி வேதாத்ரி மகரிஷி நிறைய எழுதியிருக்கிறார், வல்லிம்மா.
      வேதாத்ரி மகரிஷி அவர்களின் மனவளக் கலை பற்றி சகோதரி கோமதி அரசு அவர்கள் நிறைய அறிவார்கள்.

      நீக்கு
    9. பிரபஞ்ச காந்த சக்தி பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டதை படித்தவுடன் வேதாத்ரி மகரிஷி அவர்களின் எண்ணம் ஆராய்தல் நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டு கொண்டு இருக்க வேண்டும் என்ற வரிகள் நினைவுக்கு வந்தது.
      நன்றி என்னை குறிப்பிட்டதற்கு.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைத்து நல்ல செய்திகளுக்கும் மிக்க நன்றி. அனைவரின் ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    ஆலிஃப் முகமது அவர்களுக்கு உதவி செய்த அவரது கல்லூரி தோழிகள் ஆர்யா, அர்ச்சனா இருவரையும் மனதாற பாராட்டுவோம்.

    மருத்துவ குணங்கள் நிரம்பிய துளசிச் செடியின் பயன்களை நல்ல முறையில் ஆராய்ச்சி செய்த திருச்சி செயிண்ட் ஜோசப் தாவரவியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுக்கு பாராட்டுக்கள். இன்னமும் அருமையான பயனுள்ள மருந்தாக கிடைத்து நோயாளிகள் முழுமையாக பயன்பெறும் வகையில் அவர்களின் ஆராய்ச்சிகள் மென்மேலும் வெற்றியடையவும் வாழ்த்துவோம். இன்றைய அனைத்து செய்திகளின் பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. தொழுகை சிறப்பு...

    புத்தக விமர்சனம் நன்று...

    யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
    உயர்ந்த உலகம் புகும்

    பதிலளிநீக்கு
  11. அனைத்து செய்திகளும் சிறப்பு.

    இராணுவ வீரர்களுக்கு எமது இராயல் சல்யூட்.

    பதிலளிநீக்கு
  12. ஜீவி ஐயா 

     காலையில் எழுந்ததில் இருந்தே தலை சுற்றல். இன்றைய புத்தகம் கொஞ்சம் கனத்த ஆராய்ச்சி. பின்னர் வருகிறேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  13. மெதுவாக வாருங்கள்.
    அவசரமில்லை.

    பதிலளிநீக்கு
  14. @ அன்பின் திண்டுக்கல் தனபாலன்..

    //வானோர்க்கு
    உயர்ந்த உலகம்..
    //

    முப்பாலுக்குள் இருக்கின்ற வீடு!..

    பதிலளிநீக்கு
  15. இது ஓரளவு சகோ.
    தி. கீதாவுக்கு பிடித்த சப்ஜெக்ட். ஆனால் மற்றவர்கள் சொல்வதின்
    வழியில் அவர் யோசனை தடம் புரளவும் வாய்ப்பிருக்கிறது. இந்த விஷயத்தில் தனக்குத் தெரிந்ததை நமக்கும் சொல்ல அவர் முந்திக் கொண்டால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் மற்றவர்கள் சொல்வதின்
      வழியில் அவர் யோசனை தடம் புரளவும் வாய்ப்பிருக்கிறது. //

      ஜீவி அண்ணா, இந்தக் கருத்து எப்படி வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஜி எம் பி சாரும் இதைச் சொல்லியிருக்கிறார். ஸாரி அண்ணா மற்றவர் கருத்து பார்த்து எனக்குத் தடம் புரண்டது இல்லை. நான் கருத்து போடும் முன் மற்றவர் கருத்தைப் பார்ப்பது இல்லை. போட்ட பின் தான் பார்ப்பது. பெரும்பாலும்.

      நான் பல சமயங்களில் என் கருத்தைச் சொல்லாமல் செல்வதுண்டு என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். பல வீண் விவாததங்களை நான் விரும்புவதில்லை, அதற்கு நேரமும் இல்லை என்பதால், பொதுவாகச் சொல்லிச் செல்வதுண்டு....ஒரு வேளை என் கருத்தும் மற்றவர்கருத்துகளுடன் ஒத்துப் போனதாக இருந்தால் அதற்கு அர்த்தம் தடம் புரண்டது என்று சொல்வதற்கில்லை. மட்டுமல்ல நான் என் கருத்தைச் சொல்லாமல் தவிர்ப்பது என்று எடுத்துக்கொள்ளலாம். மீண்டும் வந்து கருத்து போடவோ பதில் சொல்லவோ நேரம் வாய்க்காததால்.

      இப்படியான கருத்துகளைப் பார்க்கும் போது கருத்து போடும் ஆர்வம் குறைகிறது.

      கீதா

      நீக்கு
    2. மற்றவர்கள் தங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடுவதற்கு வெட்டியோ ஒட்டியோ உங்கள் பின்னூட்டம் இல்லாமல் இருந்தால்
      நீங்கள் குறிப்பிட நினைக்கும் எதுவும்
      வார்த்தைக்கு வார்த்தை தவறாமல் பதியப்படும் என்பதற்காக சென்னேன். பிறர் influence பல நேரங்களில் நம்மைக் குழப்பி விடுவதும் உண்டு.

      இப்பொழுது சுஜாதா உங்களுக்கு நினைவு வந்ததையே எடுத்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
  16. @ ஸ்ரீராம்..

    // வாழ்க.. ஆமாம் ஏன் கேள்விக் குறி?.. //

    கருத்துரை அவ்வப்போது சுருண்டு கொள்கின்றது.

    அதனால் வந்த பிழை..

    பதிலளிநீக்கு
  17. ஜீவி அய்யா

    புத்தகத்தின் தலைப்பு சரியில்லை என்பது என் கருத்து. தலைப்பு நாற்சந்தியில் தாயத்து விற்பவன் கூவி கூவி விற்பானே “இந்த தாயத்தைக் கட்டிக்கொண்டால் எல்லோரும் உன்னை நோக்கி வருவார்கள், உன்னிடம் மயங்குவார்கள். குறிப்பாக பெண்கள். MGR தாயத்து கட்டியிருக்கார் பார்க்கலையா?” என்பது போல் உள்ளது.

    பிரபஞ்சத்தின் காந்த சக்தி gravitational force என்ற பெயரால் அறியப்படுவது. நாம் அறிந்த காந்த சக்தி magnetic force ஆகும். இரண்டும் வெவ்வேறு.

    சரி காந்த சக்தி என்றே தற்போதைக்கு வைத்துக்கொள்வோம். பிரபஞ்சத்தின் சக்தி நம்மிலும் உண்டு என்பது உண்மை. அதற்கு மேல் விரிவடையும் கட்டுரைப் பகுதி தான் சற்று தடுமாறுகிறது. காந்த சக்தி என்பது காந்த அலைகள், energy என்றெல்லாம் குழப்பி விடுகிறது.

    ஒரு பெண் ஒரு ஆண் நோக்கும் பார்வையிலேயே அவனுடைய சிந்தனைகளை அறிகிறாள். காமப் பார்வை, இரக்கப் பார்வை, சகோதர பார்வை, வியப்புப் பார்வை என்ற பார்வைகளின் வகையில் அவனுடைய சிந்தனை அலைகளை அவள் புரிந்துகொள்கிறாள். இங்கு அலை என்றே கொள்ள வேண்டும். சக்தி இல்லை. சக்தி என்பது நிலையானது.

    இங்கு நாம் நம்முடைய இந்துமத தத்துவங்களை நோக்கலாம். பிரபஞ்ச சக்தி பரமாத்மா எனவும் நம்மில் இருக்கும் சக்தி ஜீவாத்மா எனவும் கொள்ளலாம்.

    ஜீவாத்மா உடலில் இருந்து பிரிந்து பரமாத்மாவுடன் இணைவதே முக்தி என்று த்வைதம் கூறுகிறது.

    செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்
    எத்தைத் தின்று எங்கே கிடைக்கும்.

    அத்தை தின்று அங்கே கிடைக்கும்.

    ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. உயிரை இயக்குவதும் பரமாத்மாவே. அந்த இயக்கம் நிறுத்தப்படுவதே முக்தி என்று அத்வைதம் கூறுகிறது.

    இது போன்று சைவம் (பசு பதி பாசம்), விசிஷ்டாத்வைதம் போன்றவையும், பிரபஞ்ச சக்தி பற்றி கருத்துக்கள் கொண்டுள்ளன .

    புத்தகம் கூறுவது என்னவென்றால் உள்ளில் இருக்கும் காந்த சக்தியை எண்ணங்களோடு (காந்த அலைகளோடு) பொருத்தி பிரபஞ்ச காந்த சக்தியோடு இணையும் போது எண்ணியவை திண்ணம ஆகும். இது ஒரு வகையில் hipnotism அல்லவா?

    சொல்லுவது யாவர்க்கும் எளிதாம். சொன்னபடி நடப்பது மிகவும் சொற்பம்.

    நீட்டவில்லை. புத்தகத்தை வாசிக்கலாம். ஒரு பொது அறிவு என்ற முறையில்.

    இந்த subject இல் சுஜாதா “ஒரு விஞ்ஞான ப்பார்வையிலிருந்து” என்று ஒரு குட்டி புத்தகம் (60 பக்கம்) எழுதியிருக்கிறார். நியூட்டன் முதல் எய்ன்ஸ்ட்டின் வரை பிரபஞ்சத்தின் புதிர்களை எப்படி விடுவித்தனர், அது ஈவாரு நம்முடைய உபநிஷதங்களிலும், பிரம்ம சூத்திரத்திலும் முன்பே இருக்கிறது என்பது பற்றியும் விளக்கம் தந்துள்ளார். என்னிடம் உள்ள புத்தகத்தின் சுட்டி கீழே கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.

    https://drive.google.com/file/d/16qCFFSvs1tyB5Y0vP6qCIsuswDhZTlEs/view?usp=sharing

    sujatha-vignanaparvai.pdf



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெஸி ஸார்,

      பிரபஞ்ச காந்த சக்தி என்பதை ஆங்கிலத்தில் Universal Magnetic force என்று சொல்வார்கள். இது பற்றி நிறைய புத்தகங்கள் வந்து விட்டன. ஆ. விகடன் ஆன்லைன் க்ளாஸ் நடத்துவதாகக் கேள்வி.
      மிகப் பிரபலப்பட்டு விட்ட இந்த விஷயத்திற்கு இப்படி மட்டையடியாய் பொருள் கொள்ளக் கூடாது.
      பின்னூட்டங்கள் இந்த
      மாதிரி விஷயங்களுக்கு விஷயத் தெளிவோடு இருந்தால் தான் எடுபடும்.
      ஒரேயடியாக குழப்பி விட்டீர்கள்.

      நீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. எனக்குப் பிடித்த சப்ஜெக்ட்! ஆனால் பல இடங்கள் குழப்புகின்றன.

    பிரபஞ்ச சக்திதான் இயக்குகிறது என்பதும், நம்முள்ளும் பிரபஞ்ச சக்தி உண்டு அதைப் பெறுவது பற்றி எல்லாம் தத்துவனள் பலவற்றில் சொல்லப்பட்டிருக்கிறது குறிப்பாக தியானம். (இதன் அடிப்படையில்தான் ரெய்க்கி, ப்ரானிக் ஹீலிங்க் போன்ற மாற்று மருத்துவங்கள் சக்தியைப் பெற்று சரியாக்கும் முறைகள் என்று வந்து ஆனால் அறிவியல் பூர்வமாகவும், அனுபவ ரீதியாகவும் புள்ளியியல் மற்றும் பரிசோதனை முயற்சியில் அதைப் பற்றிய டாக்குமென்டேஷன் இல்லாததால் ரீச் ஆகவில்லை. )

    பிரபஞ்ச சக்திக்கும் காந்த சக்திக்கும் வேறுபாடு உண்டு இல்லையோ? நான் அறிவியலில் கெட்டி இல்லை, வீட்டில் கேட்டதற்குக் கிடைத்த பதில் இது. வேறு வேறு என்று.

    //எனக்கென்னவோ தொன்ம காலத்து முனிவர்கள் பிரபஞ்ச காந்த சக்தியை தம்மில் அடக்கிக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகளைத் தாம் தவமியற்றினார்கள் என்று நாம் சொல்வதாக எண்ணம். //

    நானும் இந்த ரீதியில் சிந்தித்ததுண்டு.கிட்டத்தட்ட மேலே சொன்ன ரெய்க்கி, பிரானிக் ஹீலிங்க் போன்றவையை அறிந்த போதும் எனக்கு ஏற்பட்டது. அதுவும் இதை செயற்கை நுண்ணறிவு சார்ந்த சில விஷயங்கள் வாசிக்கும் போதும் தோன்றியதால் இதை நான் இயற்கை வலியது என்று இங்கு எபியில் எழுதிய கதையில் சொல்லியிருந்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. சுஜாதாவும் அவரது சகோதரரும் - கிட்டத்தட்ட சுஜாதாவின் இறுதிநாட்களுக்கு சற்று முன்பாக என்று நினைவு, சரியாக நினைவில்லை....ரகசிய த்ர்யசாரம் பற்றி பௌதிக அடிப்படையில் எழுதியிருந்தார்கள். நான் அதை வாசித்திருக்கிறேன். அது இன்னும் தெளிவாக இருந்ததாகத் தோன்றுகிறது. ஆழ்வார்கள் பற்றி எழுதிய போதும் கூட ஆங்காங்கே குறிப்பிட்டிருந்த நினைவு.

    இதில் பல புரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிவதற்கு மறு வாசிப்புகளும் ஈடுபாடும் தேவை.
      எல்லா வாசிப்புகளையும் பாதி பாதியில் விட்டு விட்டால் முழுமையான புரிதல் என்பது துர்லபம் தான்.

      நீக்கு
    2. புரிவதற்கு மறு வாசிப்புகளும் ஈடுபாடும் தேவை.
      எல்லா வாசிப்புகளையும் பாதி பாதியில் விட்டு விட்டால் முழுமையான புரிதல் என்பது துர்லபம் தான்.

      நீக்கு
  21. இராணுவ வீரர்களின் செயல் மிகவும் பாராட்டிற்குரியது

    அர்ச்சனா ஆர்யா வாழ்க!

    வெப்பம் தாங்கும் தடுப்பூசிகள் நல்ல விஷயம் அதுவும் இப்போது கொளுத்தும் வெயிலுக்கு தேவையான ஒன்று.

    துளசிச் செடி பற்றிய ஆராய்சி மிக அருமை. இப்படி இன்னும் நிறைய மூலிகைகள் இருக்கின்றன. சரியான தகுந்த பரிசோதனை முயற்சிகள் செய்து வெற்றி சதமானம் குறித்த டாக்குமெண்டேஷன் - வர வேண்டும். நம்மிடம் இல்லாத மூலிகைகளா அல்லது விஷயங்களா?

    கீதா

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. இதெல்லாம் தத்துவங்கள் அல்ல.
      அறிவியல் உண்மைகள் சார்ந்தவை. மருத்துவ ரீதியான உபயோகங்கள் வந்து விட்டன.
      அண்டத்தில்.. பிண்டத்தில் என்று எல்லாவற்றயும் ஒரு குண்டத்துள் அடைத்து விட முடியாது.

      நீக்கு
    3. திருமூலர் சொன்னது பஞ்சபூதங்களைக் குறித்து. ஆயுர்வேத சிகிச்சைகள் இதன் அடிப்படையில் தான்.
      பிரபஞ்ச சக்தியை உள்ளடக்கும் பயிற்சிகள் பற்றிய அறிவை முதன் முதலில் தமிழில் சொன்னது எனக்கு த் தெரிந்து வேதாத்ரி
      மகரிஷி அவர்கள்.

      நீக்கு
    4. மனவளக்கலை என்று
      மூன்று பாகங்கள். என்னிடம் உள்ள்து.
      'நாமே காந்தம் தான்' என்ற உண்மையை முதன் முதல் உச்சரித்தவர் அவர் தான்.

      நீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. மாற்று மின்விளக்கு உதவும் நண்பர்கள். மதங்களை போற்றும் இராணுவ வீரர்கள் அனைவரும் எம் மனதிலும் இடம் பிடித்துள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
  26. மன்னிக்கவும் மாற்று திறனாளி என வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  27. ஓ.. அப்படியா... நல்லது..

    அண்ணா..
    தங்களைப் போல் நான் நிறைய வாசிப்பு அனுபவம் உடையவன் அல்லன்.. என் மனதில் இருப்பவைகளுக்கு ஒத்து வருவனவற்றைக் கண்டால் களத்திற்கு வருவேன்..

    தெரியாத புரியாதவைகளின் பக்கத்தில் நெருங்குவதில்லை.. இந்நூலுக்குப் பாதகமாக ஏதேனும் சொல்லி இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.. இன்றைக்கு சந்திராஷ்டமம் வேறு..

    நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசித்த ஒன்றை என் மொழியில் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவு தான். அது சரி, நீங்கள் வாசித்த ஏதாவது ஒன்றைப் பகிர்ந்து கொள்ளும் நாள் எந்நாள்?

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. இன்று மனதில். இருப்பவையெல்லாம்
      சாசுவதமானவை என்றா நினைக்கிறீர்கள்?

      நீக்கு
  28. தெரியாத, புரியாதவைகளின் பக்கத்தில் நெருங்குவதில்லை. என்றால் என்றைக்குத் தான் அவறைத் தெரிந்து கொள்வது? கேள்விகள் மனசில் எழுதுவது ஆரோக்கியமானது. கேள்வி பிறந்தது அன்று: நல்ல பதில் கிடைத்தது இன்று என்பது கவிஞன் வாக்கலல்லவா?

    பதிலளிநீக்கு
  29. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  31. @ ஜீவி அண்ணா..

    // நீங்கள் வாசித்த ஏதாவது ஒன்றைப் பகிர்ந்து கொள்ளும் நாள் எந்நாள்?..//

    நான் தற்போது தேவாரத்தில் முதலாம் திருமுறை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்..

    முழுக்க முழுக்க சிவபெருமானின் புகழினைப் போற்றும் சைவப் பனுவலில்
    ஸ்ரீ ஹரி பரந்தாமனின் வராஹத் திரு அவதாரத்தை ஒரு திருப்பாடலில் அப்படியே பாடி இருக்கும் ஞானசம்பந்தப் பெருமானை வியந்து -

    இன்று எனது தளத்தில் அந்தத் திருப்பாடலினைப் பதிவு செய்திருக்கின்றேன்..

    தங்கள் அன்பினுக்கு
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  32. பிற நூல்கள் எதையும் வாசிப்பதற்கான சூழ்நிலை இப்போது இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது இல்லையா?...
      எதையும் நிலையான கருத்து போல நினைக்கவும் கூடாது. சொல்லவும் கூடாது என்பார்கள். நீங்கள் நினைத்தா எல்லாம் நடக்கின்றன?
      'இந்தப் பகுதிக்கு நான் எழுதியவற்றின் பட்டியல் கொடுக்க முடியுமா என்று எபி ஆசிரியர் குழுவைக் கேட்டேன். எழுதியதையே எழுதி விடப் போகிறேனே என்ற அசட்டுத்தனத்தில்.
      நீங்களே சேகரித்துக் கொள்ள வேண்டியது தான். எங்களால் முடியாது என்று சொல்லி விட்டார்கள்.
      இனி எபிக்கு எழுதக் கூடாது என்று அன்றைக்கு நினைத்தேன். ஆனால் ஏதோ ஒரு சக்தியோ தூண்டுதலோ இன்னும் எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். அதனால் தான் சொல்கிறேன். நாம் நினைத்து நடப்பதில்லை எதுவும்.

      நீக்கு
  33. பதில்கள்
    1. இப்போது இல்லை என்று நீங்கள் விட்டதிற்காக. அது தெரிவதற்காகத் தானே அதே வார்த்தையில் தொடங்கியிருக்கிறேன்?..

      நீக்கு
    2. தொடர்ந்து பேசுங்கள். தயக்கம் வேண்டாம்.

      நீக்கு
    3. தொடர்ந்து பேசுங்கள். தயக்கம் வேண்டாம்.

      நீக்கு
  34. பகிர்ந்து கொண்ட அனைத்து நல்ல செய்திகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  35. அனைத்து செய்திகளும் சிறப்பு. காந்த சக்தி குறித்த நூல்..... படிக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!