புதன், 12 ஏப்ரல், 2023

உங்களுக்கு எரிச்சலூட்டும் விஷயம் எது?

 

நெல்லைத்தமிழன் : 

எனக்கென்னவோ ஆப்பிள், திராட்சை....போன்ற பல பழங்கள் பறித்து ஃப்ரெஷ்ஷாக நம்மிடம் வருவதில்லை என்று தோன்றுகிறது. ஒரு மாதத்துக்கு மேல் குளிர்சாதன வசதியில் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட்டுக்கு ரிலீஸ் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். 20 வருடங்களுக்கு முன்பு, கல்ஃபில் பேப்பரில் படித்தேன், மார்க்கெட்டில் உள்ள ஆப்பிள்களில் பல, ஒரு வருடத்துக்கு முன்பே பறித்தவை என்று! 

$ ஒரு வருடம் என்பது சற்று மிகையாகக் கூறப்பட்டதுபோலத் தெரிகிறது. ஆனால், பறித்த பழங்களை உடனுக்குடன் சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தல் என்று வந்தால், விநியோகச் சங்கிலி  (supply chain!)யில் உள்ளவர்களின் வருமானம் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, ஆஃப் சீசன் விலை (அதிக விலை) என்னும் உபாயம், பழங்களின் சேமிப்பக மற்றும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை சமாளித்து, லாபம் பார்க்க வழி வகுக்கும். 

# ஒரு வருஷம் பழங்கள் கெடாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அதற்கான செலவு லானத்தைப்   போல பல மடங்காக இருக்கும்.  ஆனாலும் பல நாட்கள் கெடாமல் வைத்திருக்க ரசாயனம் குளிர் பதனம் என்று தந்திரங்கள் செய்யப் படுகின்றன என்று தான் தோன்றுகிறது. 

(இப்போதெல்லாம் பச்சை வாழைப்பழங்கள்  கண்ணில் படுவதில்லை என்பதன் காரணம் என்னவாக இருக்கும்?)

வழுக்கை உள்ளவர்கள் (சிறிய வயதில்...mid age) மிக புத்திசாலியாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? மூளையின் அதீத வேகம் காரணமாக தலைமுடி காணாமல் போய்விடுகிறதோ?

# இது சிறு வயது வழுக்கைக்காரர்களின் சின்ன  சந்தோஷம்.  " பொய்மையும் வாய்மை  யுடைத்து புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் "

உங்களுக்கு எரிச்சலூட்டும் விஷயம் எது?  

# எரிச்சலுக்கான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. இப்போது சமீபத்திய எரிச்சல்  வாக்காளர்களுக்கு ஆயிரக்  கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது  என்றாலும் அது குறித்து யாரும் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத சூழல்தான்.

& எரிச்சல் வருவது இல்லை என்றாலும், என் உதவியாளர் எப்போதும் செய்யும் ஒரு விஷயம் என்னை அதிகம் பாதிக்கும். அவர் எண்ணெய் முதல் உப்பு வரை எந்த பாக்கெட் பிரித்தாலும், பாக்கெட்டின் மேல் பகுதியை கத்தரித்துத் திறக்காமல், பாக்கெட்டை தலைகீழாகப் பிடித்து, (அடிப்பகுதியைத்தான்)  கத்தரித்துத் திறப்பார்! எப்போதும் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றும் எனக்கு, அவரின் இந்தப் பழக்கம் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்படுத்தியது. அப்புறம் இப்போது பழகிவிட்டது! 

ஏதோ..பசிக்கு எதையாவது சாப்பிடுவோம்னு பெரும்பாலும் தோன்றுமா இல்லைனா, இதைச் சாப்பிடணும் என்று விரும்பிச் செய்து சாப்பிடுவீர்களா (பெரும்பாலும்)  

# நானே விரும்பி, அதை நானே செய்து .. இது எனக்கு பரிச்சயமில்லை. 

நான் ஆசைப்பட்டு வீட்டில் செய்து கொடுத்த சில சம்பவங்கள் நிறைவைத் தந்ததுண்டு. 

இவர் வருகிறார் எனவே இதைத் தயார் செய்து அவருக்கு அளிப்போம் என்ற விருந்தோம்பல் நமக்கு நடந்தால் அதன் மதிப்பு மிக அதிகம்.

& வாழ்க்கையில் பசி என்ற ஒன்றை இதுவரை உணர்ந்தது அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தடவை இருந்திருக்கும். எதையாவது சாப்பிடுவது என்பதெல்லாம் கிடையாது. பிடித்த விஷயம் மட்டுமே சாப்பிடுவேன். 

தவறாகப் பேசாத ஒருவருக்கு அதீத எதிர்ப்பு வருவதற்குக் காரணம், அவர் வளர்கிறார் என்ற பயமா?

# எதிரி பலசாலியாக இருந்தாலோ, அல்லது பலசாலி ஆகி விடக் கூடும் என்ற அச்சம் எழுவதோதான்  பலத்த எதிர்ப்புக்கு (தற்சமயம்) முதல் காரணம்.

== = = =

KGG பக்கம் : 

அவ்வப்போது நினைவுக்கு வரும் சில சிறிய வயது சம்பவங்கள்: 

ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு முன்பு வீட்டில் இருந்த நாட்கள். 

எண் அம்மா ஒரு ஸ்வீட் பிரியை. சர்க்கரை டப்பாவை எதற்காவது திறக்கும்போதெல்லாம் ஒரு ஸ்பூன் சர்க்கரையை சாப்பிடுவார். (எனக்கு இப்போதும் அந்தப் பழக்கம் இருக்கு. என்னுடைய மகள், 'அப்பா இதெல்லாம் ரொம்பக் கெட்டப் பழக்கம் - சர்க்கரை சாப்பிடாதே என்று அடிக்கடி சொல்லுகிறாள்.) 

அம்மா சர்க்கரை சாப்பிடுவது மட்டும் அல்ல, கொஞ்சம் கடலை மாவு இருந்தால், மைசூர் பாகு கூட கொஞ்சமாக செய்து, தானும் சாப்பிட்டு, எனக்கும் கொடுப்பார். தேங்காய் இருந்தால், தேங்காய் பர்பி. 

சிறிய வயதில் எனக்கு அந்த இனிப்புப் பண்டங்களின் பெயர்கள் தெரியாது. அம்மாவிடம், அம்மா செய்யும் திண்பண்டத்தின் பெயர் என்ன என்று கேட்பேன். 

ஆனால், அம்மா அவர் செய்த பொருளின் பெயரை சொல்லவே மாட்டார். காரணம் என்ன என்றால், அது பர்பி, லட்டு என்றெல்லாம் சொல்லி - நான் அதன் பெயரைத் தெரிந்துகொண்டுவிட்டால், வீட்டிற்கு யாராவது விருந்தாளிகள், நண்பர்கள் வந்திருக்கும் சமயம் - " அம்மா எனக்கு பர்பி வேண்டும் ; லட்டு வேண்டும் " என்று அடம்பிடித்து, எல்லோர் முன்னிலையிலும் அம்மாவை தர்மசங்கடப்படுத்திவிடுவேன் (ஏழ்மைக் காலத்தில், கொஞ்சம் மட்டுமே செய்யப்பட்ட பண்டம், அம்மாவுக்கும் எனக்கும் மட்டுமே ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரும்.) 

இந்த தர்மசங்கட நிலையைத் தவிர்க்க அம்மா ஒரு உபாயம் செய்தார். என்ன பொருள் செய்தாலும், நான் கேட்கும்போது - அதன் பெயர் 'வஸ்த்ராகுட்டி' என்று சொல்லிவிடுவார். சிறிய வயதுப் பையனாகிய எனக்கு அவ்வளவு பெரிய பெயர், மற்றும் ஸ் என்ற எழுத்தெல்லாம் வாயில் நுழையாது. மேலும்  வஸ்த்ராகுட்டி என்ற என் அகராதியில் இல்லாத பெயரை நினைவில் வைத்திருப்பதும் கடினம். 

என் அம்மாவுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அது, சிறுமியர், சிறு பெண்கள் பெயருடன் செல்லமாக ஒரு குட்டி சேர்த்து சொல்வார். உதாரணமாக சுப்புலக்ஷ்மி என்ற பெயரை 'சுப்புக்குட்டி' என்பார். சுஜாதாவை சுஜிக்குட்டி என்பார். 

அம்மா ஒரு தடவை வஸ்த்ராகுட்டி செய்து சமையலறை அலமாரி மேல் தட்டில் ஒரு ஓவல்டின் டப்பாவில் வைத்திருந்தார். 

அப்போது தெருவில் இருந்த ஒரு பணக்காரர் வீட்டு கல்யாணம் நடைபெற இருந்தது. நாங்கள் இருந்தது மூன்று குடித்தனங்கள் இருந்த பெரிய வாடகை வீடு. ஒவ்வொரு குடித்தன வீட்டிலும் குறைந்தது ஏழு பேர். ஒவ்வொரு நாளும் அரட்டை அரங்கத்தில், தெரு பணக்காரர் வீட்டு கல்யாணம் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் 

அப்படி ஒரு இனிய மாலை வேளையில், அந்தப் பணக்காரர் வீட்டுப் பெண்கள் பட்டுப் புடவைகள் ஜ்வலிக்க, வெள்ளித் தட்டு, பழம், பூ, சந்தனம்,  வெற்றிலை, அட்சதை இவைகளோடு கல்யாணப் பத்திரிக்கைகளை எடுத்துக்கொண்டு, கல்யாணத்திற்கு அழைக்க வந்திருந்தனர். 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பத்திரிக்கை கொடுத்து, எல்லோருக்கும் அழைப்பு விடுத்தார்கள். 'கல்யாணத்திற்கு முன் தினம், மற்றும் கல்யாண நாள் இரண்டு நாட்களிலும் உங்கள் வீடுகளில் யாரும் எதுவும் சமைக்கவேண்டாம், எல்லாமே எங்கள் வீட்டில்தான் ' என்று சொன்னார்கள். 

நடுக் குடித்தனவீட்டு மாமி, அழைக்க வந்தவர்களிடம், " ரிசப்ஷனில் யாரு கச்சேரி ? " என்று கேட்டார். 

வந்தவர்கள், " நம்ம ஊர் வத்சலா பாட்டுக் கச்சேரி " என்றார்கள். 

அம்மா உடனே, " அட நம்ம வத்சலாகுட்டியா" என்றார். 

கல்யாண வீட்டில் நான் சாப்பிடப்போகின்ற இனிப்பு வகைகளைப் பற்றி நினைத்து, சந்தோஷக் கனவுகளில் மூழ்கியிருந்த என் காதில்  ' வத்சலாகுட்டி' என்று விழுந்ததுதான் தாமதம் - உடனே எனக்கு அலமாரி மேல்தட்டில் இருக்கும் ஓவல்டின் டப்பா ஞாபகம் வந்துவிட்டது. 

" அம்மா - எனக்கு இப்போவே வச்சலாகுட்டி வேண்டும்" என்றேன். 

சுற்றி இருந்தவர்களும், கல்யாணத்திற்கு அழைக்க வந்திருந்தவர்களும் திகைத்தார்கள். 

அப்புறம் அடம் பிடித்து, புரண்டு புரண்டு அழுதபடி 'எனக்கு இப்போவே வச்சலாகுட்டி வேண்டும்' என்ற என்னைப் பார்த்து பயந்துபோய் வந்திருந்தவர்கள் எல்லோரும் வேகமாக வெளியேறிச் சென்றனர். 

= = = = =

அப்பாதுரை பக்கம். 

தெரிசாவுக்கு ஜே! 

முதுநிலை தடகள  (masters athletics தமிழ்ச் சொல் இதான்னு கூகில் சொல்லிச்சு, அய்யா என்னை விட்டுருங்கய்யா)  போட்டிகள் வரும் நவம்பர் மாதம் பிலிபின்ஸ் நாட்டில் நடக்கவிருக்கின்றன. அதில் இந்தியா சார்பில் 400மீ ஓட்டப்பந்தயத்தில் போட்டியிட தமிழகப்பெண் தெரிசா ஆரோக்கியசாமி தேர்வு பெற்றிருக்கிறார். 

புலிய விரட்டின பொண்ணுங்கவேய் நாங்க.. தெரிசாவுக்கு இதென்ன பெரிசானு கொஞ்சம் அசால்டா படிச்சவன் அப்படியே ஷாஆஆக்காயிட்டேன். 

- தெரிசாவுக்கு வயது 87

- 2000 ஆண்டில் கேன்சர்

- 2016ல் சிறுநீரக அழிவு

- 2017ல் கணவர் மறைவு

- 2018ல் இருதய நலிவுக்காகச் சோதித்த ஸ்டான்லி மருத்துவர்கள் தெரிசாவுக்கு நாள் குறித்தனர். 

தெரிசா என்ன செஞ்சாரு? கூடிக்கிழப்பருவமெய்திக் கொடுங்கூற்றுக்கிரையென மாயும் வேடிக்கை மனிதரென்று நினைச்சிங்களாடானு ஒரு கூச்சல் போட்டார்.

முதுநிலை தடகள பெரம்பூர் கிளை நிர்வாகி வால்டரிடம் சென்று "2022 முதுநிலை போட்டிக்குப் போகணும்"னாரு.  "அதனாலென்ன போலாமே? போய்வர செலவு முப்பதாயிரமாவும்.. போய் பாத்துட்டு வாங்க"ன்னாரு. தன் நிலையில் சற்றும் தளராத தெரிசா, "வால்டரு கண்ணா நல்லா கேட்டுக்க, நான் ஒரு தடவை சொன்னா.." விஷ்க் என்று விரல் உயர்த்தி "நான் ஓடணும்.. போட்டில" என்று ஒரு குட்டு வைத்தார். 

குலைந்த வால்டர் தெளிந்து தெரிசாவின் ஆசான் ஆனார். மூன்று வருடங்களில் 17 உள்ளூர் உள்நாட்டு போட்டிகளில் ஓடி வெற்றி பெற்ற தெரிசா 2022ல் தேர்வு பெறவில்லையெனினும் 2023 போட்டிகளுக்கு தேர்வானார். நிச்சயம் ஒரு பதக்கம் வெற்றி பெறுவார் என்கிறார்கள்.

படம் இணையத்திலிருந்து.

"Unstoppable Miss Theresa" மார்ச் 19 TOI செய்தி.

நல்லவரெல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இவர் வரவேண்டும் புகழ் பெற வேண்டும் என்று ஆசை துடிக்கிறது.

வால்:

இது நாள் வரை தன்னை வந்து பார்த்த ஆவடி, தாம்பரம், கும்மிடிபூண்டியில் வசிக்கும் பிள்ளை குடும்பங்களை இப்போதெல்லாம் தெரிசாவே சென்று பார்க்கிறார்.  மகளிர் பஸ், ஆட்டோ, ஓலாவென்று நிற்காமல் நிமிஷமாக ஓடிப் போய் பார்த்து வருவார் போல.

கொசுறு:

- தமிழக அரசு இதுவரை தெரிசாவை கவனிக்கவில்லை. திராவிட மாடலில் இடமில்லையோ என்னவோ?

- எபி குழும 60 வயதுக்காரர்களுக்கு ஒரு கூவல்: நாளைலந்து எழுந்து ஓடணும், சொல்லிட்டேன்.

= = = =

79 கருத்துகள்:

  1. நாம் ஆர்வத்துடன் தேடாத்து எதுவும் மார்க்கெட்டில் வழக்கொழிந்துபோகும், பச்சை வாழைப்பழம் நாட்டுத்தக்காளி உட்பட. இப்போது வரும் வாழைப்பழங்கள் 20 நாட்கள் வரை இருக்கிறது. மஞ்சள் பிடி வாழைப்பழம் ஒரு வாரம் வரை. அப்போ பச்சைப் பழம் காணாமல்போகாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே அபூர்வமாகப்பச்சை வாழைப்பழம் கிடைக்கும். புள்ளிப் பழமும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும்.

      நீக்கு
  2. வத்சலாக்குட்டிக்கு நீங்கள் அழுத்தைப் பார்த்து இன்விடேஷனைத் திருப்பி வாங்கிச் சென்றிருப்பார்களே

    பதிலளிநீக்கு
  3. 1992-ல் அதாவது பாபர் மஸ்ஜித் இடித்தபோது மும்பை கலவரத்தில் சவூதி அரேபியா போக முயன்று கலவரத்தில் "குய்யோ முறையோ" என்றலறி சென்னை வந்து விட்டேன்.

    மும்பை திடீர் நண்பரது தம்பியின் முகவரியில் வந்து பேருந்துக்கு பணம் வாங்கி தேவகோட்டை வந்து பணம் திருப்பி அனுப்பினேன். (கூகுள் பேயில் அல்ல)

    அன்றிரவு அவர் வேலை செய்யும் பழக்குடோனில் அவரோடு தங்கினேன் . உரிமையாளர் சேட்டு.

    அன்று நான் நிறைய ஆப்பிள் பழங்களை சாப்பிடக் கொடுத்தார் அது எனது வாழ்நாளில் சாப்பிடாத சுவையாக இருந்தது. வீட்டுக்கும் கொடுத்து அனுப்பினார். அவர்களும் ருசித்து விட்டு மிரண்டனர்.

    காரணம் கேட்டேன் இதுதான் உண்மையான காஷ்மீர் ஆப்பிள்கள் என்றார்.

    இதுவும் விற்பனைக்குதானே வந்து இருக்கு ? என்றேன்.

    இதை தமிழ்நாட்டில் எந்த மூலையிலும் வாங்க முடியாது காரணம் ஒரு ஆப்பிளின் விலை முப்பது ரூபாய் வரை வரும்.

    இது எங்கு போகிறது ?
    எல்லாமே பேக்கிங் ஸ்டைல் மாற்றி வெளிநாட்டு போகிறது.

    கையால் தொடமாட்டோம் க்ளவுஸ் அணிந்து மாற்றுவோம்.

    உண்மையில் தமிழகத்தில் இன்றுவரை காஷ்மீர் ஆப்பிள்கள் ஊடுருவவில்லை.

    எனக்கு மீண்டும் இன்று வரையில் அந்த சுவை கிடைக்கவில்லை.

    இன்று காஷ்மீர் ஆப்பிள் விலை எவ்வளவு இருக்கும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு நீண்ட பின்னூட்டம். இன்று புயலடித்து மழை பெய்யுமோ?

      நீக்கு
    2. இதுபற்றி இன்று எழுதறேன் கில்லர்ஜி. பணத்துக்கேற்ற சரக்கு

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
    4. நல்ல உயர்ந்த பொருட்கள் மிகவும் விலை அதிகம். ஃப்ரான்ஸில் ஒரு முறை சூப்பர் மார்க்கெட்டில் (இடம், படங்களைப் பார்த்தால் நினைவுக்கு வரும். அந்தப் பகுதியில் திராட்சைத் தோட்டங்கள் இருக்கலாம்) கருப்பு திராட்சை சாப்பிட்டேன். அதன் ருசி சூப்பர். தாய்வானின் பழங்கள் விலை அதிகம் ஆனால் அதன் ருசியை எதனாலும் நெருங்க முடியாது. அங்கு எனக்கு ஸ்ட்ராபெர்ரி பாக்ஸ் தந்தார்கள். மிகுந்த ருசி. அவர்கள் சொன்னார்கள், இது அமெரிக்காவிலிருந்து இம்போர்ட் செய்வது என்று. அது போல ஜப்பானீஸ் பழங்கள் விலை அதிகம் ருசி அதிகம். கலிஃபோர்னியா டேட்ஸ்தான் உலகத்தில் சிறந்தது. சில உயர்ந்த ரக அரபு தேச டேட்ஸ்களை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது (சாதாரணமா இவை மார்க்கெட்டில் கிடைக்காது. நான் ருசித்தது ஃபுஜைரா நிதி அமைச்சர் ஆபீஸில்)

      நமக்கெல்லாம் சாதாரண வெரைட்டிதான். காசை அள்ளிவிட யோசிக்கறவங்களாச்சே நாம

      நீக்கு
    5. //கலிஃபோர்னியா டேட்ஸ்தான் உலகத்தில் சிறந்தது//

      உண்மை நான் ஏற்கனவே இதைப்பற்றி எழுதி இருக்கிறேன்.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. கேள்விகளும் பதில்களும் அருமை.
    KGG சார் பக்கம் அருமை. குழந்தை பருவ அனுபவ பகிர்வு அருமை, நல்ல சிரிப்பு.வச்சலாகுட்டி இனி மறக்காது.

    அப்பாதுரை சார் பக்கம் அருமை.
    //நல்லவரெல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இவர் வரவேண்டும் புகழ் பெற வேண்டும் என்று ஆசை துடிக்கிறது.//
    தன்னம்பிக்கை வெற்றியை தேடி தரும். வெற்றி பெறவில்லையென்றாலும் புகழ்பெறுவார்.87 வயதில் ஓட ஆசை படுவது முடங்கி கிடப்பவர்களை உற்சாகப்படுத்தும்.

    பதிலளிநீக்கு
  6. கணபதி சோதர வருக.. வருக..
    கந்தா முருகா வருக.. வருக..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. அவரவர்க்கு வாய்த்தது அவரவருக்கு..

    கானகத்து மயில் ஆடினால் ஆடட்டும் என்று காட்டுக் கோழி நடையைக் கட்ட வேண்டியது தான்..

    பதிலளிநீக்கு
  8. குளிர் அறைக்குள் குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது இருப்பு வைக்கப்படுகின்றன பழங்கள்.. குறிப்பாக ஆப்பிள்.. அது தான் அதற்கு தலையெழுத்து.. மேலே மெழுகுப் பூச்சுடன் கூடிய ஆப்பிள்களைப் பார்க்கலாம் அரபு நாடுகளில்!..

    An apple a day keeps the doctor away..

    இது மேலை நாட்டு சொல் வழக்கு..

    அங்கே தான் ஆப்பிளை அவித்துத் தின்னும் வழக்கம் எல்லாம் உண்டே...

    அப்படியானால் ஏன் அங்கே ஆசுபத்திரிகளை இழுத்து மூட வில்லை?..

    சும்மா ஊரை ஏமாத்திண்டு இருக்கிறான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்பிள் சாப்பிட வசதி இல்லாதவர்களுக்கு ஹாஸ்பிடல் !

      நீக்கு
    2. //ஆப்பிள் சாப்பிட வசதி இல்லாதவர்களுக்கு// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தினம் உருப்படியான நாட்டு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதும். ஆப்பிளுக்கும் ஆரோக்கியத்துக்கும் இந்தியாவைப் பொருத்தவரையில் கரண்டிக்கும் பாதாள கரண்டிக்கும் உள்ள நெருக்கம்தான்.

      நீக்கு
    3. இந்தக் கருத்துக்கு அர்த்தம் புரியலையே!..

      நீக்கு
    4. @ கௌதமன்

      /// ஆப்பிள் சாப்பிட வசதி இல்லாதவர்களுக்கு ஹாஸ்பிடல் !///

      இந்தக் கருத்துக்கு அர்த்தம் புரியலையே!..

      நீக்கு
  9. UK ஹோட்டல்களில் ரிசப்ஷனில் ஆப்பிள் basket வைத்திருப்பார்கள். நாம் எடுத்துக்கொள்ளலாம் (நம்ம வேலையைக் காண்பித்து 5-6 லவட்டக்கூடாது). அதெல்லாம் ஓரளவு புதிய ஆப்பிள்கள். மிடில் ஈஸ்டில் சில ஆப்பிள்கள் ஒரு வருடத்துக்கும் மேலானதாம். மெழுகுப் பூச்சினால் அவை கெட்டுப்போவதில்லை.

    நம்ம ஊரிலயும் தற்போது கிடைக்கும் திராட்சை குறைந்த பட்சம் 2 மாதங்களுக்கு முன்பு பறிக்கப்பட்டது.

    மெலன் எல்லாவற்றிலும் மேற்பகுதியில் பூச்சி மருந்து மெழுகும் உட்பகுதியில் ஊசிபோட்டு கெமிக்கலும் செலுத்தப்படுகிறது. இது பற்றி நிறையவே எழுதலாம். உங்களுக்கு நான் சொல்வதில் சந்தேகம் வந்தால் ஒரு மஸ்க் மெலென் வாங்கி அப்படியே வைத்திருங்கள். ஒரு வாரம் கழித்துப் பாருங்கள். கட் பண்ணிப் பார்த்தாலும் உள்ளே வரும் கெமிக்கல் வாடையைப் பாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///உங்களுக்கு நான் சொல்வதில் சந்தேகம் வந்தால் ///

      சந்தேகம் தீர்வதற்காக பணத்தைப் பாழாக்குவதா?..

      நீக்கு
  10. ஆப்பிள் உடலுக்கு நன்மையளிக்கும் என்பது வெறும் புரட்டு..

    நான் நம்பியதே இல்லை..

    பதிலளிநீக்கு
  11. @ கௌதமன்...

    /// ஆப்பிள் சாப்பிட வசதி இல்லாதவர்களுக்கு ஹாஸ்பிடல்.. ///

    மேலை நாடுகளில் தர்ம ஆசுபத்திரிகளும் இருக்கின்ற்னவா?...

    பதிலளிநீக்கு
  12. @ நெல்லை..

    //இந்தியாவைப் பொருத்த வரையில் கரண்டிக்கும் பாதாள கரண்டிக்கும் உள்ள நெருக்கம் தான்.//

    ஆகா!...

    பதிலளிநீக்கு
  13. அந்தக காலத்து வஜ்ரதந்தி விளம்பரத்துல ஆப்பிளப் பறிச்சி "கடேர்.. முடேர்.. ன்னு" கடிக்கிற மாதிரி காட்டியிருப்பானுவோ!..

    அதுகூட பழசோ.. புதுசோ..

    இப்ப சந்தேகம் வருது..

    பதிலளிநீக்கு
  14. எதற்காகவோ புறப்பட்டு எங்கேயோ போய்ச் சேர்ந்த கொலம்பஸ் போய்ச் சேர்ந்த இடத்து மக்களுக்கு செவ்விந்தியன் என்று பேர் வைத்து விட்டு அங்கிருந்து புகையிலையைக் கொண்டு வர - அது உலகம் முழுவதையும் கெடுத்தது..

    அதற்கு நிகரானது ஆப்பிள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகில உலக ஆப்பிள் எதிர்ப்பாளர் சங்க தலைவர்!

      நீக்கு
    2. எங்களுக்கும் ஆப்பிள் பிடிக்காது. வடக்கே இருந்தப்போச் சாப்பிட்டிருக்கோம். வாங்கியும் போயிருக்கோம். அங்கே ஷிம்லா ஆப்பிள், ஹிமாசல் ஆப்பிள்னு வரும். காஷ்மீரி ஆப்பிள் சாப்பிட்டுப் பார்க்கலை. எங்க வீட்டிற்கு வரவங்க பெரும்பாலும் ஆப்பிள்கள் தான் வாங்கி வராங்க. சொல்ல/மெல்ல முடியாது. அதிலும் குறைந்த பட்சமாக நான்காவது இருக்கும். ஒரே ஒரு ஆப்பிளை மட்டும் அவர் வைத்துக் கொண்டு மிச்சத்தை வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துவிடுவார். எனக்கு ஒரு துண்டை வாயில் போட்டாலும் போதும். இருமல் துளைத்து எடுத்துவிடும். நாங்க ஆப்பிளை எல்லாம் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைப்பதில்லை. பொதுவாகப் பழங்களையே வைப்பதில்லை.

      நீக்கு
    3. எனக்கு ஆப்பிள் மீது விருப்பும் கிடையாது; வெறுப்பும் கிடையாது.

      நீக்கு
  15. //வழுக்கை உள்ளவர்கள் (சிறிய வயதில்...mid age) மிக புத்திசாலியாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?// நெல்லையின் கூற்றுப்படி இப்போது நம் நாட்டில் பலரும் அதி புத்திசாலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))) எந்த வயதில் விழுந்த வழுக்கை என்று எப்படி தெரிந்துகொள்வது?

      நீக்கு
  16. //வழுக்கை உள்ளவர்கள் (சிறிய வயதில்...mid age) மிக புத்திசாலியாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?// நெல்லையின் இந்த ஸ்டேட்மென்ட் எனக்கு சில சந்தேகங்களை கிளப்புகிறது..
    1. நெல்லையும், அவர் மகனும் சொ..
    2. ஒரு நல்ல வரனை அவர் மகள் வழுக்கை என்பதற்காக மருதலிக்கிறாள், அவளை கன்வின்ஸ் பண்ண..
    3. நெல்லையிடமிருந்து அடுத்து வரப்போகும் ஸ்டேட்மெண்ட்"இதிலிருந்தே தெரியவில்லையா பெண்களை விட ஆண்கள் புத்திசாலிகள்.." அப்படித்தானே :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சீரியஸ் கேள்வி. அதில் உண்மையும் இருக்கிறது. ஆனால் வழுக்கை உள்ளவர்கள் ரொம்பவே அதை மறைக்க மெனெக்கெடுவாங்க.

      அறிவில் பெண்கள் ஆண்களைவிட சிறந்தவர்கள். focus மற்றும் நுண்ணுணர்வு காரணமாக. ஆனால் ஆண்கள் புத்திசாலிகள், குதிரையை அடக்கி, அதன் மீதும் சவாரி செய்வதால் ஹா ஹா

      நீக்கு
    2. சிங்கத்தையும்தான் மனிதன் அடக்கி விடுகிறான்.

      ஆனால் சவாரி செய்வதில்லையே... ?

      நீக்கு
    3. நெல்லை பெண்களும் தான் குதிரையை அடக்கி சவாரி செய்திருக்காங்களே...ராணிகள்....செய்யயறாங்களே!!

      கீதா

      நீக்கு
  17. (இப்போதெல்லாம் பச்சை வாழைப்பழங்கள் கண்ணில் படுவதில்லை என்பதன் காரணம் என்னவாக இருக்கும்?)//

    ஹை! ஆசிரியரே கேள்வி கேட்டிருக்கிறார்!!!

    அடுத்த புதன் கேள்வியா!!?

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கௌ அண்ணா - வத்சலா குட்டியைச் சொல்லி அழுது தடகளம் பண்ணி இப்படி ரெண்டு நாள் கல்யாணச் சாப்பாட்டை மிஸ் பண்ண வைச்சிட்டீங்களா?!! இல்லைனா அவங்க சொல்லிருப்பாங்க நீங்க வாங்க மாமி ஆனா இந்தப் பையன மட்டும் கூட்டிட்டு வந்துடாதீங்கன்னு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருமே போனோம். கல்யாண சாப்பாட்டில் நிறைய வஸ்த்ராகுட்டிகள் - ஒவ்வொரு வேளையும் கிடைத்தது. ஆனந்தமயமாக கழிந்த இரண்டுநாட்கள் !

      நீக்கு
  19. உங்கள் அம்மா போல எனக்கும் இந்தப் பழக்கம் உண்டு...பெயரோடு குட்டி சேர்த்துச் சொல்வது. வெங்கட்ஜி யின் மகள் ரோஷ்ணியைக் கூட ரோஷ்ணிக்குட்டி என்றே கருத்தில் குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. அப்புறம் அதைக் கஷ்டப்பட்டு அப்படிச் சொல்வதை நிறுத்திக் கொண்டேன்.

    ஆனால் வீட்டில் அப்படி குட்டி சேர்த்துச் சொல்வது வழக்கம்..எங்க ஊர்ப்பக்க வழக்கம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பெரிய மாமா எங்களை எல்லாம் குட்டிகளா என்றே அழைப்பார்.

      நீக்கு
    2. ஆமாம் கீதாக்கா எங்கள் வீட்டிலும் பாட்டிகள், மாமாக்கள் இப்படி அழைபப்துண்டு..

      கீதா

      நீக்கு
    3. ஆ! கீதா குட்டிகளின் மலரும் நினைவுகள்!!

      நீக்கு
  20. எங்க வீட்டிலும் வதசலாக்குட்டி என்றே சொல்லுவார்கள். ஆனால் இப்படி எல்லாம் அழுது அடம் பிடித்ததில்லை. கற்பனை பண்ணிப் பார்த்துக் கொண்டேன். எல்லோர் முகமும் அசடு வழிஞ்சிருக்குமோ? கடைசியில் கல்யாணத்துக்குப் போனீங்களா இல்லையானு தெரியலை. !:)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்களின் எக்ஸ்பிரஸன்ஸ் ஞாபகம் இல்லை. கல்யாண விருந்து இரண்டு நாட்கள், எல்லா பொழுதும் - இலையில் பரிமாறப்பட்ட எல்லா வ. குட்டிகளையும் ஆசை தீர சாப்பிட்டு, சிலவற்றை கையிலும், சிலதை சட்டைப் பையிலும் போட்டுக்கொண்டு சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தேன்.

      நீக்கு
  21. ரொம்ப எரிச்சல்னா இப்போதைய வெத்துவேட்டு மந்திரிகளுக்கும்/தலைவர்களுக்கும் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடிப் போய்க் காட்டும் அதீத மரியாதை! பொன்னாடைகள் அளிப்பது எல்லாமுமே! ஒரு துரும்பைக் கூட நகர்த்தாமல் நோகாமல் அவங்க ராசிக்கு இதெல்லாம் நடக்குது! இதை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கே என எரிச்சல் தான் வருது.

    பதிலளிநீக்கு
  22. நல்ல பச்சையாக இருக்கும் ஆப்பிளில் தோல் சீவித்துருவிக் கொண்டு மாங்காய்த் தொக்கு போலப் போடலாம். ரொம்பவே நன்றாக இருக்கும். அம்பேரிக்கா போன முதல் வருஷமே இதைப் பண்ணினதும் எல்லோருக்கும் ஆச்சரியம். துண்டங்களாக நறுக்கிக் கொண்டு துண்டம் மாங்காய் போலவோ அல்லது ஆவக்காய் போலவோ போடலாம். சீக்கிரம் செலவு செய்யணும். சிவப்பு ஆப்பிள்களைத் துருவிப் பச்சடி, பஜ்ஜி, கேசரியோடு சேர்த்து எனப் பண்ணலாம். பச்சை ஆப்பிளிலும் பஜ்ஜி பண்ணலாம். ஆப்பிள் மட்டும் போட்டு மாதுளை முத்துக்களோடு உலர்ந்த திராக்ஷை, பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்துக் கொண்டு காஷ்மீரி புலவ் மாதிரியும் பண்ணலாம். ஒரே ஒரு தரம் பண்ணினேன். அவ்வளவாப் பிடிக்கலை. நெய் அதிகம் என்பதாலோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே கீதாக்கா...பச்சை ஆப்பிள் தொக்கு சூப்பரா இருக்கும். சிம்லாவில் கிடைக்கும் இங்கும் கூடச் சிலசமயம் கண்ணில் படும்.

      நீங்கள் சொல்லிருக்கற ரெசிப்பிஸ் ஆமாம் நிறைய செய்யலாம். நம் வீட்டில் காஷ்மீரி புலவ் ரொம்பப் பிடிக்கும்..நெய் கம்மியாகத்தான்.

      ஆப்பிள் ஜாம், பச்சையிலும் செய்தால் நல்லாரும். ஆப்பிள் பை, கேக், மஃபின்ஸ், ப்ரெட்டிற்கு உள்ளெ வைத்து சாப்பிட, பராத்தா... காரட் ஹல்வா பண்ணுவது போல.. செய்யலாம். பச்சை ஆப்பிள் சின்னதும் கிடைக்கும் அது கொஞ்சம் விலை குறைவாக இருக்கும் நேரத்தில் சென்னையில் அதை வைத்து இப்படி ஓட்டியதுண்டு

      கீதா

      நீக்கு
    2. நிறைய 'திங்க' பதிவுகள் கிடைக்கும் போலிருக்கே!

      நீக்கு
    3. //ஒரே ஒரு தரம் பண்ணினேன். அவ்வளவாப் பிடிக்கலை// கீசா மேடம் எப்போதும் உண்மையை டக்குன்னு எழுதுவாங்க. நிறைய வேரியேஷன் ட்ரை பண்றாங்க. நான்கூட ஒரு முறை (பிஸினஸ் மீட்டில்) மாதுளை முத்துக்கள் உலர்ந்தது போட்ட ரைஸ் இருந்தது (நிறைய போட்டது). நான் ரொம்ப நல்லா இருக்கும் என்று எடுத்துக்கொண்டேன். எனக்குப் பிடிக்கலை.

      நீக்கு
  23. தெரேஸா பாட்டி அதகளம்!!!! (இவங்கள பத்தி வாசித்த நினைவு)

    நிஜமாகவே நல்ல உதாரணம்!

    நான் 60 ஐ எட்டலையாக்கும் சின்னக் குழந்தை,... நடைப்பயிற்சி செய்யறப்ப தினமும் கொஞ்ச தூரம் ஓடுகிறேன்!

    நெல்லைக்கு 60 ஆகிடுச்சுல்ல!!! அவரு ஓடுவார் நாளைலருந்து!! அதான் தினம் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்கிறாரே அதை ஓடி சமப்படுத்திடுவார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்(க்கா) வுக்கு 60ம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் சில வருடங்கள் கழித்துத்தான் நான் 60ஐத் தொடுவேன். (என்ன எங்கிட்டயேவா?)

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் நன்றாக உள்ளது.

    கௌதமன் சகோதரரின் பக்கம் அவரின் சின்னவயது நினைவலைகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. இனிப்புக்கு அவர்கள் அம்மா வைத்த பெயர் நன்றாக உள்ளது. ஆமாம்.. அப்போது பெரியவர்கள் குழந்தைகள் எல்லோரது பெயருடன் ஒரு குட்டியும் சேர்த்து விடுவார்கள்.:)) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. பின்னூட்டப் பெட்டியைக் கவனியுங்கள், ப்ளீஸ்.
    நேற்றைய என் பதிவுக்கு பதிலளிக்க நான் முயன்றால் முடியவில்லை. அனுமதிக்குப் பின் என்று கடந்த எட்டு மணி நேரமாக அடம் பிடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  26. தெரசா பற்றிய செய்தியை நானும் படித்து அதை பாசிடிவ் செய்திகளுக்கு அனுப்பலாம் என்ரு நினைத்தேன். அதி இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதிய அப்பாதுரைக்கு பாராட்டுகள்!
    வத்ஸலா குட்டி.. ஹஹஹா! QFR பார்ப்பீர்களா? அதில் கஞ்சிரா நம் லட்சு குட்டி என்பார் சுபஸ்ரீ தணிகாசலம்.

    பதிலளிநீக்கு
  27. பழங்கள் பற்றிய கருத்துக்கள் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!