வெள்ளி, 7 ஏப்ரல், 2023

வெள்ளி வீடியோ : அழகு கண் கொண்டு உலகை நீ கண்டு தினம் அனுதினம் கவி பாடிட வா

 என்னுடைய நண்பர்களில் சிலபேர்- சிலபேர் -

என்று சொல்வதைவிட பலபேர் - பாடல்கள் கேட்கும் பழக்கமோ, புத்தகம் படிக்கும் பழக்கமோ இல்லாதிருக்கிறார்கள்.  அவர்களில் சிலர் சினிமா கூட பார்க்கும் பழக்கம் இல்லாதிருக்கிறார்கள்.  கேட்கும்போது ஆச்சர்யமாக இருக்கும்.  பிறகு எப்படிதான் பொழுதைப் போக்குவீர்கள்?  கொஞ்ச நேரம் நியூஸ் சேனல், அப்புறம் ஊர் சுற்றுவது, தூக்கம்..  இப்படி சொல்வார்கள்.  சிலபேர் சீரியல் பார்ப்பார்கள்.  பலபேர் அதுவும் இல்லை.  வெறுமனே வெளியில் நின்று தம்மடிப்பது, அந்தப் பழக்கம் இல்லாதவர்கள் சும்மா வேடிக்கை பார்ப்பது..

கல்லூரியில் படிக்கும், பள்ளியில் படிக்கும் இளைஞர்களுக்கு சினிமா பாடல்கள் தெரிந்த அளவு கர்னாடக சங்கீதம் தெரிவதில்லை; நாட்டமில்லை.  அவர்கள் கேட்கும் சினிமா சங்கீதத்துக்கும் கர்னாடக சங்கீதம்தான் அடிப்படை என்பது தெரியாது.  முன்பு என் மகன்களே கூட "ஐயோ..   அப்பா கிட்ட ரிமோட்டைக் கொடுக்காதே..  தத்தரின்னா ன்னு வச்சுடுவார்" என்பார்கள்.  இப்போதும் அவர்கள் அதைக் கேட்பதில்லை என்றாலும் நான் கேட்கும்போது கமெண்ட் செய்வதில்லை, தடை செய்வதில்லை.  இதுவே முன்னேற்றம் என்று தோன்றும்.  ஒரு காலத்தில் அப்பா ரசித்த பாடல்கள் என்று அவர்கள் நான் ரசித்த பாடல்களைக் கேட்கக்கூடும்!  முயற்சித்துப் பார்க்கக் கூடும்.

இந்தச் சூழ்நிலையில் இன்னொரு பக்கம் நிறைய குழந்தைகளும், இளைஞ, இளைஞிகளும் கர்னாடக சங்கீதம் படித்து அதில் எக்ஸெல் ஆவது சந்தோஷத்தைக் கொடுக்கும்.  பாரம்பரியக்கலை விட்டுப் போகக்கூடாது அல்லவா..

அந்த வகையில் இன்றிருக்கும் இளைஞர்களில் நான் ரசித்துக் கேட்கும் இளைஞர்களில் முதன்மையானவர் அபிஷேக் ரகுராம்.  எனக்கு மிகவும்  பிடித்த ராகங்களில் ஒன்று ஸ்ரீரஞ்சனி.  எனக்கு கர்னாடக சங்கீதத்தில் பாண்டித்யம் எல்லாம் கிடையாது.  சரிகம கூட வராது.  ஆரோகணம், அவரோகணம் தெரியாது.  ஷட்ஜமம், சரளி வரிசை, தாளம் எதுவும் அறியேன்.  ஆனால் ரசிக்கத் தெரியும்.   

இந்த தற்கால இளைஞரின் திறமையையும், பாண்டித்யத்தையும் பாருங்கள்.  குரல் இனிமையில் ராகத்தை ரசியுங்கள்.  இன்றைய இளைஞர்கள் ஏ ஆர் ரெஹ்மான், வித்யாசாகர், குத்துப்பாடல் என்று அலைய இவர் இதில் கை(குரல்)தேர்ந்திருக்கிறார்.

 ஸ்ரீரஞ்சனியில் 'சொகசுகா மிருதங்க தாளமு எனும் பாடல்'.  எவ்வளவு பேர் இதை முழுமையாகக் கேட்பீர்கள் என்று தெரியாது.  கேட்பவர்கள் பாக்கியவான்கள்.

கர்னாடக சங்கீதம் தெரியாது என்றெல்லாம் விடாமல் இதைக் கேட்டு ரசிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.  ரசிக்கத் தெரிந்தால் போதும்.


ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் இயற்றிய பாடல்கள் எல்லாம் பிரபலம்.  அலைபாயுதே, தாயே யசோதா, ஸ்வாகதம் கிருஷ்ணா, குழலூதி மனமெல்லாம் போன்ற பாடல்கள் நிறைய பேர் கேட்டு ரசித்திருப்பீர்கள்.  குழலூதி மனமெல்லாம் பாடலை காம்போதி ராகத்துக்கும், அலைபாயுதே பாடலை கானடா ராகத்துக்கும் முத்திரைப் பாடலாய் ஆரம்பத்தில் வைத்துக் கொண்டிருந்திருக்கிறேன்!  கேட்கும் பாடலில் இந்த வாசனை வந்தால் ராகம் சொல்லி விடுவேன்!  அப்படி ஒவ்வொரு ராகத்துக்கும் ஒவ்வொரு பாடல் என் மனதில் இருக்கும்.  சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடல்கள்.  நிறைய MKT பாடல்கள் இந்த வகையில் எனக்கு உதவி இருக்கின்றன.  அப்பா எம் கே டி, டி ஆர் எம், பி யூ சி ரசிகர்.

வீட்டில் அப்பா அம்மா இது மாதிரி பாடல்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலோ, சுவாரஸ்யம் இருந்தாலோ குழந்தைகளும் ஈடுபடுவார்கள் என்று சொல்வார்கள்.  என் வீட்டில் அப்பா, அம்மா இருவருமே கர்னாடக சங்கீதம் கேட்காதவர்கள்தான்.  என் (தாய்) மாமாக்களும், அம்மா வழி தாத்தா, பாட்டியும்  கர்னாடக சங்கீதப் பிரியர்கள், அறிந்தவர்கள்.  பாண்டித்யம் மிக்கவர்கள்.  ஆனால் அவர்களோடும் நான் அதிகம் சேர்ந்து வாழ்ந்ததில்லை.  என் நண்பர் சுகுமார் பயங்கர கர்னாடக சங்கீதப் பிரியர்.  அவர் மூலம் கேட்டிருக்கிறேன், கலெக்ஷன் வைத்திருந்தேன் எனினும் அதற்கு முன்னரே எனக்கு இவ்வகைப் பாடல்களில் எப்படியோ சுவாரஸ்யம் இருந்தது.  அப்பா விரும்பிக் கேட்ட எம்கேடி பாடல்களாலோ, அதன் வாசனை மற்ற பாடல்களில் தெரிந்ததாலோ மெல்ல மெல்ல சுவாரஸ்யம் உருவாகி இருக்கலாம்.  சுய அலசலை நிறுத்திக்கொண்டு பாடலுக்கு வருகிறேன்.

'நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்' என்கிற சுவாரஸ்யமான பாடல்.  என்ன எதற்கெடுத்தாலும் சுவாரஸ்யம்?  சுவாரஸ்யம் இல்லா விட்டால் ஈடுபாடு வராதே..  அதனால்தானே பிடிக்கிறது..  இல்லையா?  குட்டிக் கிருஷ்ணனின் தாய் யாரோ ஒருவரிடம் தன் மகனின் விஷமங்களை சொல்லி 'என்னவோ போ' என்று அலுத்துக் கொள்வது போல கொஞ்சிக்கொள்ளும் பாடல்.  

பக்கத்து வீட்டு மாது அல்லது மூன்று வீடு தள்ளி இருக்கும் பாட்டி கிருஷ்ணனின் தாயிடம் வந்து "உன் பிள்ளை சமர்த்துடி அம்மா..." என்று பூரித்துப் போயிருக்க வேண்டும்.  அதற்கு யசோதையின்பதில் இது  'நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்..'  மனதுக்குள் சந்தோஷமும், குதூகலமும் பொங்கினாலும் காண்பித்துக் கொள்ளாமல் அலுத்துக் கொள்ளும் அம்மா..  இரவு சுற்றி போடவேண்டாம் பாருங்கள்!

எழிலுறு மங்கையர் மனைதொறும் புகுந்து களவாடிடும் எனதாருயிர் மகனை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும்...! 

இந்தப் பாடல் அதே ஸ்ரீரஞ்சனி ராகம்.  மேலே பாடலில் கேட்ட ராகம் இதில் தெரிகிறதா என்று பாருங்கள்.  முன்னாலேயே சொல்லி விடுகிறேன், தைரியமாக கேளுங்கள்..  இதில் ஸ்வர வரிசை, ஆலாபனை எல்லாம் கிடையாது.  மெல்லிசை போல பாடல் மட்டும்தான்.

இந்தப் பாடலை யேசுதாஸ், எம் எஸ், நித்யஸ்ரீ, டி எம் கிருஷ்ணா என்று பலரும் பாடி இருந்தாலும் எனக்கென்னவோ BHAAவத்துடன்  பாடி இருப்பது மகாராஜபுரம் சந்தானம் மட்டும்தான் என்று தோன்றும்.  என்ன, 'ச' வை 'ஷ'  என்பார்! 

ராகம்:- ஸ்ரீரஞ்சனி
தாளம்:- ஆதி

பல்லவி

நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும் எங்கள்
நீல நிறமேனி மாதவன் செய்வது
நிமிஷம் போவது யுகமாய் ஆகுது

அனுபல்லவி

காதாரக் குழலூதி கன்றோடு விளையாடி
கண்முன்னே வந்து நின்று ஆட்டமும் ஆடி
ஏதேதோ ஜாலங்கள் செய்வதும் ஓடி ஓடி
எழிலுறு மங்கையர் மனைதொறும் புகுந்து
களவாடிடும் எனதாருயிர் மகனை (நீ)

சரணம்

செய்யும் துஷ்டத்தனத்திற்கு எல்லையே இல்லை
தேடிப் பிடிக்க என்றால் சக்தியும் இல்லை
கையும் களவுமாக்க காலமும் வல்லை –
காலம் தவறாது கோள் சொல்ல வந்து நின்ற
மாதர்க்கு விடை சொல்ல நேரமுமில்லை (நீ)

கட்ட எண்ணிக் கயிற்றைத் தேடியும் காணோம்
கைக்கான கயிறெல்லாம் அளவாகக் காணோம்
மட்டமென உரலொடு கட்டிடத் தோணும் ஆனால்
மட மட வெனும் ஒலி செவிபுக வந்தால்
மருத மரமிரண்டைக் காணவே காணோம் (நீ)


இனி மூன்றாவதாய் வரும் பாடல் அதே ஸ்ரீரஞ்சனி சினிமா பாடல்.  அப்பாடி என்கிறீர்களா?!  

முன் அறிவிப்பு, பெரிய அளவில் விளம்பரம் ஏதுமின்றி திடீரென 1991 ல் வெளியானது 'கோபுர வாசலிலே' என்னும் கார்த்திக் , பானுப்ரியா நடித்த படம்.  ஒளிப்பதிவு P C ஸ்ரீராம் என்பதால் படம் ஒரு பார்வையைப் பெற்றது.  முன்னரே ஒரு படம் ப்ரியதர்ஷன் தமிழில் ஒரு படம் இயக்கி இருந்தாலும், அது வெளிவராத காரணத்தால் இது தமிழில் அவரின் இயக்கத்தில் முதல் படமாக வந்தது.  மோகன்லால் கூட ஒரு பாடல் காட்சியில் சில நொடிகள் வருவார்.  படத்தையும் ரசிக்கலாம்.  இளையராஜாவுக்காகவும், கார்த்திக் பானுப்ரியா, நாசர் போன்றோருக்காகவும், P C ஸ்ரீராம் ஒளிப்பதிவுக்காகவும்...

படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன்.  இளையராஜா இசையில் தூள் கிளப்பி இருப்பார்.  இதில் வரும் 'தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா' எனும் பாடல் சிம்மேந்திர மத்திமம் என்று சொல்லும் விக்கி, இன்று நான் பகிரும் 'நாதம் எழுந்ததடி' எனும் அற்புதமான பாடல் ஸ்ரீரஞ்சனி என்று இயம்பவில்லை!  ஓரவஞ்சனை!

பிறைசூடன் வரிகளை யேசுதாஸ் ஜானகி பாட, காட்சியில் கார்த்திக், பானுப்ரியா. 

என்ன இனிமையான பாடல்..  இதுபோன்ற பாடல்கள் எல்லாம் இளையராஜாவுக்கு லட்டு போல...   அதகளப்படுத்தி ரசிக்க வைத்து விடுவார்.  யேசுதாஸ் பாடும் முதல் சரணத்தின் இறுதியில் ஆலாபனையாக வரும் வரிசையை, ஜானகி பாடும் இரண்டாவது சரணத்தில் அதே இடத்தில் வரிகளால் அலங்கரித்திருப்பார் இளையராஜா.

'நீதான் மெச்சிக்கொள்ளவேண்டும்' பாடலின் முதல் சரணத்தை நினைவுபடுத்திப் பாருங்கள்.  'காதாரக்குழலூதி...  கன்றோடு விளையாடி...'  இந்தப் பாடலின் முதல் சரண வரிகளைக் கேளுங்கள் 'தா என்ற சொல்லில் இன்பம் வந்து தாவ' ஒத்து வருகிறதா?!

பாடலில் யேசுதாஸ் ராகத்துடன் சேர்ந்து இழைந்திருப்பார்.  'காற்று வான் கூறும் கருணையின் கவிதை' என்று சொல்லும் வரி, 'தனிமையில் தனிமையில் பரதம்தான்' வரி..அவர் பாடும் 'நாதம் எழுந்ததடி' வரியில் இழையும் மென்மை, அழகு..  

ரசிக்கக் காது கோடி வேண்டும்.

நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி

தா என்ற சொல்லில் இன்பம் வந்து தாவ
தா என்ற சொல்லில் இன்பம் வந்து தாவ
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட

மோகனம் பாடும் கீர்த்தனம் நூறு
மூழ்கிடும்போது பேதங்கள் ஏது

 ஊடலில் தானாட பேரின்ப வெள்ளம்
ஆடலில் நாம் காண தானாகத் துள்ளும்

ஸா நி த நி ச ச ச நி ச ச நி த ம நி த ம
ம நி த ம ம நி த ம நி த ம க ரி ச
த நி ச த நி ச த நி ச ரி க ச ரி க
ச ரி க ம த ம த நி ரீ ச
நி நி த த ம ம க க ரி
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி நாதம் எழுந்ததடி

அழகு கண் கொண்டு உலகை நீ கண்டு
தினம் அனுதினம் கவி பாடிட வா

ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ
இனிய கற்கண்டு இளமை கண் கொண்டு
சுகமொடு சுகமென தேடிட வா

காற்று வான் கூறும் கருணையின் கவிதை

ஏற்றுக் கொண்டாடு கலைமகள் உறவை

காற்று வான் கூறும் கருணையின் கவிதை

ஏற்றுக் கொண்டாடும் கலைமகள் உறவை

தனிமையில் தனிமையில் பரதம்தான் பயில
கண்ணன் விழி உன்னைத் தொடும் சுகமடி

கனவிலே நினைவிலே மலர்ந்தது
மகிழ்ந்ததே இளம் மனம் உறவினில்
கனவிலே நினைவிலே இரு மனம் உயிரிலே
மலர்ந்தது மகிழ்ந்ததே
கலந்தது கரைந்ததே
விழிகளில் ஆசையும் விலகிடவே
உடலும் உயிரும் உறவில் உருகும் தினம் தினம்
மனதில் இதமும் பதமும்
பெருகும் அனுதினம்
உருகி உருகி பருகி பருகி கனிந்திட

நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி  
நாதம் எழுந்ததடி 

45 கருத்துகள்:

  1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனகவேல் காக்க ...

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமே வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.ராகங்களைப்பற்றி ரசித்து ரசித்து, ரசிக்கும்படி எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    கிருஷ்ணனை பற்றிய பாடல்கள் எப்போதுமே இனிமைதான். குழலூதி மனமெல்லாம் பாடல் பாடகர்கள் அனேகம்பேர் பாடி, அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். அதே போல் தான் அலை பாயுதே பாடலும்.

    தாயே யசோதா உந்தன் பாடலும், மாடு மேய்க்க கண்ணே.. நீ போக வேண்டாம் சொன்னேன் என்ற பாடலும், கேட்கும் போது நாம் யசோதையாகவே மாறி விட்டோமோ என்று நினைக்கும் அளவுக்கு மனம் உருகி விடும்.

    நீங்கள் பகிர்ந்த பாடலும் மனதை மயக்குவதுதான். பாடலுக்கு உங்கள் விளக்கங்களை ரசித்தேன். எல்லாவற்றையும் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்திருப்பதற்கு நன்றி கமலா அக்கா.  இன்னும் பாடல்களைக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.  கேட்டு விட்டு சொல்லுங்கள். கண்ணன் பாடல்கள் என்றாலே தனி சுவை. இன்னும் அஷ்டபதி கேட்டால் சுவையோ சுவை!

      நீக்கு
  5. மூன்று பாடல்களுமே அருமையான செலெக்‌ஷன்.

    நான் நிறைய தடவை கேட்டது கர்நாடிக் பாடல்கள் என்றாலும் அதன் சாரத்தை, நாதம் எழுந்ததடி பாடலில் அருமையாக்க் கொடுத்திருப்பார் இளையராஜா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  ரீதிகௌளை என்று நினைக்கிறேன்.  அந்த ராகத்தை முதன்முதலில் திரையில் கொடுத்தது இளையராஜாதான் என்று படித்த நினைவு.

      நீக்கு
  6. கர்நாடக சங்கீத்த்தில் எல்லாப் பாடல்களையுமே ரசிக்கலாம், குறையொன்றுமில்லை பாடலைத் தவிர.

    ரெண்டு லேடீஸ் சேர்ந்தாலே உடனே இந்தப் பாட்டைப் பாடி ரம்பம் போட்டுப் போட்டு இந்தப் பாடலைக் கேட்டாலே கர்ர்ர்ர்ர்ர்ர்ர். தான்.

    உங்கள் விளக்கம் ரசிக்கும்படி இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..   ஆமாம்.  அந்தப் பாடல் ரொம்ப ரொம்ப பிரபலம் ஆகிவிட்டது.

      நீக்கு
  7. இந்தக் காணொளிகளை இன,று மீண்டும் கேட்பேன். ரொம்பவே மெனெக்கெட்டிருக்கீங்க. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ மூன்று பாடல்களையும் ஒருதரம் கேட்டுட்டீங்கன்னு வச்சுக்கலாமா?

      நீக்கு
  8. ரசனை என்பது காலத்துக்கு காலம் மாறுகிறது.

    நானும் கூட எம்.கே.டி யை-விட்டு இன்னும் நகரவில்லை.

    பதிலளிநீக்கு
  9. கோபுர வாசலிலே - அதிக முறை பார்த்த படங்களில் ஒன்று...

    பதிலளிநீக்கு
  10. புதுமையான பகுதியுடன் பதிவு பொலிவு..

    என்றாலும்
    தெய்வீக இசைப் பாடல் பகுதியை மாற்றி விட வேண்டாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் இரண்டாவது பாடலை அப்படி வைத்துக் கொள்ளலாமே...

      நீக்கு
  11. அபிஷேக் ரகுராமின் குரல் கம்பீரமும் இனிமையும் இழைந்து மயங்க வைக்கிறது. ஒரு அருமையான பாடகரை அறிமுகம் செய்து அவரது குரலை ரசிக்க வைத்ததற்கு அன்பு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அக்கா... அபிஷேக் ரகுராம் அருமையான பாடகர். ரசித்ததற்கு நன்றி. மற்ற பாடல்களும் கேட்டீர்களா?

      நீக்கு
  12. இனிய மயக்கும் பாடல் பகிர்வு. கேட்டு மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
  13. அபிஷேக் ரகுராமின் பாடல் பகிர்வு அருமை.

    மகாராஜபுரம் சந்தானம் பாடலும் நன்றாக இருக்கிறது.
    'நாதம் எழுந்ததடி' பாடலும் பிடிக்கும் .
    மூன்று பாடல்களும் கேட்டேன்.
    பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  14. அடுத்த வெள்ளிக்கு என் நேயர் விருப்பம்.
    "சாந்தி நிலவ வேண்டும் எங்கும்
    சாந்தி நிலவ வேண்டும்
    ஆத்ம சக்தி ஓங்க வேண்டும் உலகிலே
    சாந்தி நிலவ வேண்டும்....."
    நித்யஸ்ரீ
    சுதா ரகு நாதன்
    இன்னும் பலர் மனமொன்றி பாடிய பாடல்
    முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    நீங்கள் பகிர்ந்த பாடல்கள் மூன்றையும் கேட்டு ரசித்தேன். சிறந்த பாடகர்களால் பாட பெற்ற பாடல்கள் மூன்றும் கேட்கும் போது மனதிற்கு இதமாக இருந்தது. அபிஷேக் ரகுராம் பாடிய பாடல் நன்றாக உள்ளது. நல்ல குரல் வளம். இந்த திரைப்படபாடலும் இப்போதுதான் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    முதுமை படிக்கட்டுகளில் ஒன்றில் நேற்று நான் ஏறியதால், குழந்தைகளுக்கு அவர்களுக்கு வேண்டியதை சமையல் செய்துதந்து, மாலை ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு என நேற்றைய பொழுது இரவு வரை சுலபமாக என்னை கடந்து விட்டது. இரவுதான் படுக்கும் முன்பாக பாடல்களை கேட்டேன். அதனால் பாடல்களை குறித்து கருத்து தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். (ஏதோ இதையும் சொல்லத் தோன்றியது.) நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.  திரைப்பாடல் கேட்டதில்லை என்பது ஆச்சர்யம்.  உங்களுக்கு சற்றே தாமதமான இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  16. அன்னிக்கே படிச்சுட்டேன். உங்கள் இசைப்புலமையைக் கண்டு வியந்தும் போனேன். ஆனால் அன்னிக்கும் சரி அதன் பின்னரும் சரி பாடல்களைக் கேட்க முடியலை. இன்னிக்கு இப்போத்தான் கேட்டுக் கொண்டே கருத்துச் சொல்கிறேன். அபிஷேக் ரகுராம் பாடல்களை யூ ட்யூப் தயவில் கேட்டிருக்கேன் என்றாலும் இந்தப் பாடல் இதான் முதல் தரம். அதே போல் சந்தானம் அவர்கள் பாடிய ஊத்துக்காடு பாடல்களின் வரிசையில் ஒரு இசைத்தட்டு/இசை நாடா? என்னிடம் இருந்தது. மிகப் பழைய பிசியில் அதை ரெகார்ட் பண்ணி வைச்சிருந்தேன். அதைப் போட்டுக் கேட்டுக்கொண்டே 2005/2006 ஆன் ஆண்டுகளில் கணினியில் வேலை செய்ததெல்லாம் இப்போ நினைவில் வந்தது. இந்த திரைப்படம் வந்ததும் தெரியாது. பாடலும் இப்போத் தான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் எப்படி இருந்தது என்று சொல்லவில்லையே!  ஒரொருவருக்கு ஓரொரு விருப்பம், ரசனை,...   எனக்கு இதில்!  புலமை எல்லாம் கிடையாது.  ரசனை மட்டும்தான்!

      நீக்கு
  17. உங்கள் இசைத்திறமையையும் அதை அலரி ஆராய்ந்து சொல்லி இருப்பதற்கும் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம் வெள்ளியே இந்த ப் பதிவு வாசித்துவிட்டேன்....உங்களுக்கு வாட்சப்பில் சொல்லியிருந்தேன் என்று நினைக்கிறேன்.

    அருமையான பதிவு....அபிஷேக் ரகுராம் ரொம்பப் பிடிக்கும்

    இந்தக் காணொளியைப் பார்த்துக் கேட்டிருக்கிறேன். அவர் குரல் அசாத்தியம். ....இசைக்குடும்பம். ரொம்ப ரசித்துக் கேட்டேன் ஸ்ரீராம்...அதுவும் இந்த ஸ்ரீரஞ்சனி!! இவர் குரலில் இன்னும் ரஞ்சிதமாக இருக்கோ என்றும் தோன்றும்.

    அபிஷேக்கும், குன்னக்குடி பாலமுரளி சேர்ந்து பாடிய ஒன்றில் ஸ்வரம் பின்னி எடுத்திருப்பாங்க. நீங்களும் கேட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  உங்கள் கணிணிப் பிரச்னை பற்றிச் சொல்லி இருந்தீர்கள்.  பாடல்களை என்னைப்போலவே ரசிக்கும் உங்கள் பின்னூட்டங்கள் இல்லாததால் சற்று ஏமாற்றமாகக் கூட இருந்தது!  இப்போது ஓகே!  அபிஷேக்கை முதல் முறை கேட்டபோதே ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. 

      நீக்கு
  19. ஸ்ரீரஞ்சனி ராகத்தில் நான் கற்றுக் கொண்ட முதல் பாடல் 'கஜ வதனா கருணா சதனா" எனக்கு ஏகப்பட்ட குருமார்கள்!! ஹாஹாஹா அதான் ஏதாவது காசெட்லருந்துதான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அதுதான் எனக்கும் முதலில் காதில் விழுந்த ஸ்ரீரஞ்சனி பாடல்.

      நீக்கு
  20. மாஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் ஊத்துக்காட்டின் பாடல்கள் பாடிய ஆல்பம்...அதில் அனைத்துமே அருமையாக இருக்கும். மஹாராஜபுரம் அப்படியே உணர்வுகளுடன் பாடியிருப்பார். ரொம்ப ரசித்துக் கேட்டதுண்டு. அதில் இதுவும் நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும்....அப்படியே கண்ணில் விஷுவலாக வரும்.

    நீங்கள் அதை விவரித்திருக்கும் வித்தத்தை ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம். அம்மாவுக்குள் மகனைப் பற்றிய மகிழ்ச்சியை இப்படிச் சொல்வது.,,(நானும் செய்ததுண்டே!!!!) ....ஊத்துக்காடு என்ன அழகாக எழுதியிருக்கிறார் இல்லையா?!!!

    ரொம்ப நாளைக்குப் பிறகு கேட்டேன் ஸ்ரீராம் உங்கள் உபயத்தால்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்ததற்கு நன்றி கீதா.  ஆம், ஊத்துக்காடு பாடல்கள் நிறையபேர்கள் பாடி இருந்தாலும் மகாராஜபுரம் ஸ்பெஷல்தான்.  உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ, யேசுதாஸ், சுரா  என எல்லோரும் பாடி இருக்கிறார்கள்.

      நீக்கு
  21. 'நீதான் மெச்சிக்கொள்ளவேண்டும்' பாடலின் முதல் சரணத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். 'காதாரக்குழலூதி... கன்றோடு விளையாடி...' இந்தப் பாடலின் முதல் சரண வரிகளைக் கேளுங்கள் 'தா என்ற சொல்லில் இன்பம் வந்து தாவ' ஒத்து வருகிறதா?!//

    ரொம்ப ரசித்து எழுதியிருக்கீங்க ஸ்ரீராம். ரசித்து வாசித்தேன் பாடலைக் கேட்டுக் கொண்டே

    கீதா

    பதிலளிநீக்கு
  22. என்ன இனிமையான பாடல்.. இதுபோன்ற பாடல்கள் எல்லாம் இளையராஜாவுக்கு லட்டு போல... அதகளப்படுத்தி ரசிக்க வைத்து விடுவார். //

    அதே அதே....அப்படியே டிட்டோ செய்கிறேன்

    இந்தப் பாடலை ரொம்ப ரசித்துக் கேட்டதுண்டு. இப்போதும். தாஸேட்டன் செமையா இழைத்துப் பாடியிருப்பார். ஜானகி அம்மாவும்...

    நாதம் எழுந்ததடி - வரியில் இழைவது...ஆமாம் நான் சொல்ல நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க...

    மூன்றையும் ரசித்துக் கேட்டேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!