ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை– பகுதி 10

ஜ்வாலா நரசிம்மர் ஆலயத்தை நோக்கிய நம் மலைப்பயணம் தொடர்கிறது. பாவநாசினி ஆற்றின் வழியாக வரும்போது ஓரிடத்திலிருந்து மேலே பார்த்தால் உக்ரஸ்தம்பம் தெரிகிறது.

உக்ரஸ்தம்பத்தைப் பார்த்தவுடன், மனம் கொஞ்சம் மகிழ்ச்சி அடைகிறது. ஒரு சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டவுடன், மலையேற்றம் தொடர்கிறது



டோலியைத் தூக்கிச் செல்பவர்களும் இந்தக் கடினமான பாதையில்தான் பயணிக்கணும். அவ்வப்போது குரல் கொடுப்பார்கள். மற்றவர்கள் ஒதுங்கி வழிவிடுவர். ஒரு நாளைக்கு அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு யாத்ரீகர்கள் கிடைத்தாலே அதிகம். அவர்கள் யாராவது நிலைதடுமாறிவிட்டால், டோலியில் பயணிப்பவர் பாடு, அதோகதிதான். அவ்வளவு ஜாக்கிரதையாகச் செய்யவேண்டிய பணி இது.



ஜ்வாலா நரசிம்மர் கோயிலுக்கு 100 மீட்டருக்கு முன்னால், உக்ரஸ்தம்பத்திற்குச் செல்லும் மலைப்பாதை பிரிகிறது. இதற்கு படி மாதிரி அமைப்பு இல்லை. மலையில் மெதுவாக ஏறவேண்டியதுதான். இன்னுமே கடினமான பாதையாக இருக்கிறது. நாங்கள் யாரும் இந்தப் பாதையில் செல்லவில்லை.

மலைப்பாதையில் படிகளில் நடந்துகொண்டிருக்கும்போது, ஜ்வால நரசிம்மர் கோவிலிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலிருந்து பார்த்தால் ஜ்வாலா நரசிம்மர் கோவில் தெரியும். வெளியில் கோவில் போன்ற அமைப்பு இருந்தாலும் இதுவும் மலையின் பிளவில்தான் அமைந்துள்ளது. மழைக்காலத்தில் மலை உச்சியிலிருந்து வெகு வேகமாக பாறைகள் வாயிலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுமாம். அந்தச் சமயங்களில் இந்தப் பாதையில் கோயிலைச் சென்றடைவதற்காக இரும்பினாலான தடிமனான சங்கிலிகளை பாதையின் ஓரமாகக் கட்டி வைத்திருக்கின்றனர். அதனைப் பிடித்துக்கொண்டு இந்தப் பகுதியைக் கடந்து கோயிலை அடைவதற்காக. நாங்கள் சென்றிருந்த ஜனவரியில் நீர்வீழ்ச்சியெல்லாம் இல்லை. நீர்வீழ்ச்சி போல வருவதை ஆகாச ஜோதிர் கங்கை என்று அழைக்கிறார்கள்.



குறுகலான பாதை. இடது புறம் கிடுகிடு பள்ளம். வலதுபுறமோ, பாறைகளிலிருந்து தண்ணீர் பெரும் மழைத்துளியைப்போல விழுந்துகொண்டே இருக்கிறது இருந்தாலும், இன்னும் சில மீட்டர்களில் ஜ்வால நரசிம்மர் கோவில் இருக்கிறது என்ற எண்ணமே நம் களைப்பைப் போக்கப் போதுமானதாக இருக்கிறது.

நீர்நிலைகளில் காசை விட்டெறிவது, உடுத்திக்கொண்டிருந்த பழைய துணிகளைப் போட்டுவிடுவது என்றெல்லாம் நடைமுறைகள் எப்படித்தான் வந்ததோ. பழைய துணிகளைப் போட்டுவிடுவதால், நீர்நிலை அடைத்துக்கொள்ளும், பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். காசை விட்டெறிவதால் யாருக்கு லாபம்? உண்டியலிலாவது போட்டுவிடலாம். இங்கும் ரத்த குண்டத்தில் காசை விட்டெறிவதால் அதற்கு இரும்பினாலான கதவைப் பொருத்தியிருக்கின்றனர். திருப்பதியில் புஷ்கரணியில் பெரும்பாலும் ஐயப்ப சீசனில், பக்தர்கள் பழைய துணிகள், மாலைகள் போன்றவற்றைப் போட்டுவிடுவதால், நீர் வரும் பகுதி அடைத்துக்கொள்கிறது என்று அதனை அடிக்கடி பராமரிக்கிறார்கள். சில நேரங்களில் முழுமையாக நீரை வெளியேற்றிவிட்டுச் சுத்தம் செய்கின்றனர் (அந்தப் புகைப்படங்களையும் நான் எடுத்திருக்கிறேன். பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்). பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் ஏனோ இல்லை.

குறுகலான மலைப்பாதையின் முடிவில் 15 படிகள் ஏறினால் ஜ்வாலா நரசிம்மரின் ஆலயம் வருகிறது. பக்கவாட்டில் வாயிற்கதவு அமைத்திருக்கிறார்கள். ஆறுபேர்கள் மாத்திரமே உள்ளே நிற்க முடியும். சிறிய குகை போன்ற அமைப்பில், தூணைப் பிளந்துகொண்டு வந்த நரசிம்மரும், அருகிலேயே ஜ்வாலா நரசிம்மர் என்று சொல்லப்படுகிற, ஹிரண்யகசிபுவை மடியில் கிடத்தி சம்ஹாரம் பண்ணும் நிலையில் தரிசனம் தருகிறார்கள்.




நரசிம்ம மூர்த்திகளைத் தரிசனம் செய்து, தீர்த்தம் சடாரி பிரசாதங்களை வாங்கியபிறகு சந்நிதியைவிட்டு வெளியில் வந்தோம். சில படிகள் இறங்கியவுடனேயே ஓரத்தில், சிறிய கடையில் பானகம் தந்தனர். எலுமிச்சம்பழம் வேறு அதில் பிழிந்திருந்ததால் மிக நன்றாக இருந்தது. இவ்வளவுதான் என்று சொல்லாமல் எவ்வளவு கேட்டபோதும் சிரித்த முகத்துடன் கடையில் இருந்த சிறுவர்கள் தந்தனர். கொடுத்த அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டனர். நடந்த களைப்புக்கு மிகவும் தெம்பு தருவதாக அந்தப் பானகம் இருந்தது. (அவர்களை, அந்தச் சிறிய கடையைப் படம் எடுக்கவில்லை. சேவை மனப்பான்மையும் இருப்பவர்களுக்கு நம்மால் ஏதேனும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்ற எண்ணம்தான் காரணம்)

குழுவாக எங்களில் சிலர் படங்கள் எடுத்துக்கொண்டோம். எங்களுடன் வந்தவர்களில் சிலர், வருடாவருடம் அஹோபிலத்திற்கு வருகின்றனர். எனக்கும் இனி முடிந்த அளவு வருடா வருடம் அஹோபிலம் செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

ஜ்வாலா நரசிம்மர் கோவில் பகுதியில் அரைமணி நேரம் போன வேகமே தெரியவில்லை. தரிசனம் நன்றாக அமைந்துவிட்டதால், மலையிலிருந்து கீழிறங்க ஆரம்பித்தோம். பாதை ரொம்பவும் கடினமாக இல்லை. ஆனால் படிகள் முடிந்தும் வரும் நீரோடை மற்றும் பாறைகள் இருந்த பகுதிகளைக் கடப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. காரணம், சில கற்கள் வழுக்கும் தன்மை, நகரும் தன்மை கொண்டவைகளாகவும், சில இடங்களில் பாறைகளில் ஏறி இறங்குவது கடினமாகவும் இருந்ததால்தான்.










11:20க்கு ஏற ஆரம்பித்த நாங்கள் ஒரு மணி நேரம் கழித்து ஜ்வாலா நரசிம்மர் சன்னிதியை அடைந்தோம். அங்கிருந்து 1 மணிக்கு இறங்க ஆரம்பித்து 2 மணிக்கு வராஹ நரசிம்மர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். வேகமாக யாருக்காகவும் நிற்காமல் நடந்து சென்றால் 40 நிமிடங்களுக்குள்ளாகவே சென்றடைந்துவிடலாம்.

எல்லோரும் ஜ்வாலா நரசிம்மரைச் சேவித்துத் திரும்ப, வராக நரசிம்மர் ஆலயம் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். வந்து சேர்ந்ததும், யாத்திரை நட த்துபவர், எங்கள் எல்லோரையும் திரும்ப, இலவச பேருந்து இருக்கும் இடத்திற்கு நடந்து சென்று விடுமாறும், பேருந்துக்குக் காத்திருக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள், அப்படியே நடந்து காரஞ்ச நரசிம்மர் கோயில் பக்கத்தில் உள்ள நம் பேருந்துக்குச் சென்றுவிடும்படியாகவும் சொன்னார். எனக்கு அன்றைய ஸ்டெப்ஸ் 9000ஐத் தாண்டிவிட்டாலும், வேக வேகமாக தொடர்ந்து நடக்காத தால், heart points 1ஐக் கூட த் தாண்டவில்லை. அதனால் வராஹர் கோயிலிலிருந்து மற்றவர்களுக்குக் காத்திராமல் விறு விறு என்று நடந்து பைரவ குண்டம் வந்து அங்கிருந்து எங்கள் பேருந்துக்கு காட்டுப் பாதையில் (தார்ச்சாலை) நடந்து பேருந்து இருந்த இட த்தை அடைந்தேன். அப்படியும் 25 pointsக்கு மேல் வராததால், அங்கேயே தொடர்ந்து 200 மீட்டர் மேலும் கீழுமாக நடந்து 45 heart points வரவும், மற்றவர்கள் பேருந்துக்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.

இன்று பதிவு படங்களால், நீண்டு விட்டதால், அடுத்த வாரம் தொடர்வோம்.


39 கருத்துகள்:

  1. ஸ்ரீநரசிம்மா
    ஜெய நரசிம்மா..
    ஜெய ஜெய நரசிம்மா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். இந்த அஹோபில யாத்திரைக்குப் பின், பல நரசிம்ஹர் கோவில்களுக்குச் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது. அதில் ஒன்று மிதில சாளக்கிராம்ம் என்ற ஶ்ரீங்கபட்டினத்திலிருந்து மேல்கோட்டை செல்லும் வழியில் மாண்டியாவில் அமைந்த கோயில். இங்கு முஸ்லீம் பெண்களும் கோயிலுக்கு வழிபாடு செய்ய வருவதைப் பார்த்தேன்.

      நீக்கு
  2. நாரணன் மருகா
    வருக வருக..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தைப் படித்ததும், ஏனோ எனக்கு, வரம் தருவாய் முருகா என்ற சீர்காழி பாடல் நினைவுக்கு வந்தது

      நீக்கு
  3. படங்கள் வழக்கம் போல அருமை தமிழரே...

    டோலியில் போவது எனக்கு உடன்பாடு இல்லாத விடயம். யாராவது ஒருவர் சிறிய தவறு செய்தாலும் நமது கதி ?

    இறைவனை தொழ வேண்டுமெனில் தவழ்ந்தாவது முயற்சிக்கலாம்.

    உண்மையான பக்தி நம்மை சேர்த்து விடும். தூரம், உயரம் பிரச்சனை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... டோலி பயணம் ஆபத்துதான். இருந்தாலும் பல இடங்களில் (வட நாட்டில் சார்dhதாம் எனப்படும் யாத்திரையில்) டோலி பயணம் பலருக்குத் தேவையாக இருக்கிறது.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. பயண அனுபவம் கடினம் என்றாலும் நரசிம்மரை பார்க்க போகிறோம் என்பதே களைப்பை போக்கும் சாதனம்.
    படங்கள் எல்லாம் மிக அருமை.

    //(வட நாட்டில் சார்dhதாம் எனப்படும் யாத்திரையில்) டோலி பயணம் பலருக்குத் தேவையாக இருக்கிறது.//

    ஆமாம். நாங்கள் டோலியில் தான் பயணம் செய்தோம். என்ன செய்வது ! அவர்கள் பத்திரமாக கூட்டி போய் வந்தார்கள்.
    இறைவன் அவர்களுக்கு பலத்தை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ஏறினோம்.

    நம்மை சுமந்து போகிறார்களே என்று அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும் சொல்லி ஏறி போய் வந்தோம்.

    பத்திரமாக சேர்த்தற்கு இறைவனுக்கும், அவர்களுக்கும் நன்றி சொன்னோம்.

    டோலியில் அமர்ந்து இருப்பது நீங்கள்தானா?
    அவர் சொன்னது போல டோலி உதவி இல்லாமல் உடல் நலத்தோடு மலை ஏறி தரிசனம் செய்து வாருங்கள் அடிக்கடி உங்கள் விருப்பம் போல.

    //எங்களுடன் வந்தவர்களில் சிலர், வருடாவருடம் அஹோபிலத்திற்கு வருகின்றனர். எனக்கும் இனி முடிந்த அளவு வருடா வருடம் அஹோபிலம் செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.//

    நரசிம்மர் அருள்வார், சென்று வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப கடினமாக அமைந்துவிடுமோ எனத் தோன்றும் பயணம்.

      டோலியில் நான் படத்தை விரும்பி எடுத்துக்கொண்டேன். உட்கார்ந்ததே பயமுறுத்துஙதாக இருந்தது.

      அடுத்த முறை பயணம் வாய்க்கிறதா எனப் பார்க்கவேண்டும்.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவருக்கும் நலமே விளைக. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    பதிவும் படங்களும் அருமை. நரசிம்ஹரை தரிசித்து கொண்டேன். இறைவனை தரிசிக்க பல சிரமங்களுடன் கூடிய சில கோவில்களுக்கு செல்லும் போது உடல் களைப்படைந்தாலும் மனம் ஒன்றிய நிலையில் சென்றால் உடலிலும் நல்ல பலம் வந்து விடுகிறது உண்மை தான். உங்கள் தயவில் எங்களுக்கு அஹோபிலம் நரசிம்மர் தரிசனங்கள் கிடைத்து வருகிறது. படங்களை பெரிதாக்கி பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் எங்க ஒன்றுது? ஏதோ போகிறோம், தரிசிக்கிறோம். அவ்ளோதான் கமலா ஹரிஹரன் மேடம். நிறைய பேர் ரொம்பவே பக்தியா இருக்காங்க. பக்தி வருவதற்கும் அவன் அருள் வேண்டும் இல்லையா?

      நீக்கு
  8. கடினமான பயணத்தை நன்றாக விவரித்து உள்ளீர்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
  9. கடினமான மலைய் பாதையில் சென்று நாமும் நரசிம்மர்கள் தரிசனம் பெற்றோம்.

    படங்கள் பலவும் நேரில் தரிசித்த உணர்வை நமக்கு தருகின்றது .நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி. எனக்கும் அங்கு சென்ற உணர்வை மீண்டும் தருகிறது.

      நீக்கு
  10. வார்த்தைகளில் எந்த செயற்கைப் பூச்சும் இல்லாமல் மனசின் வெளிப்பாடாய் பதிவு அமைந்திருக்கிறது.
    அதுவே வாசிப்பதற்கு ரம்யமாக இருந்தது.
    படங்கள் பரவசமூட்டுகின்றன.
    நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

      நீக்கு
  11. டோலியில் நான் என்று அந்தப் படத்தை மட்டும் கட் பண்ணி தனியாகப் போட்டிருக்கலாம்.
    உங்கள் முக மலர்ச்சியும் அளவான சிரிப்பும் அந்தப் படத்தில் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றன. வேஷ்டி கட்டிக் கொண்டா மலைப்பாதைகளில் ஏறினீர்கள் என்ற நினைப்பு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே எப்படி கோயிலுக்குப் போவார்களாம்? - என்று கேட்டு விடாதீர்கள். டீ ஷர்ட்
      ஒரு முரண்.

      நீக்கு
    2. 2008ல் முக்திநாத் சென்றிருந்தபோது, நான் ஹாஃப் டிரௌசர் மற்றும் ஷூவுடன் சென்றிருந்தேன். கோவிலுக்கு உள்ளேயும் அதே கோலத்தில் (மைனஸ் ஷூ) சென்றேன். அப்போ யாத்திரை நடத்தியவர் ஒன்றும் சொல்லவில்லை (என்னுடன் மாமனார்/மாமியாரும் வந்திருந்தார்கள்). இந்தியா வந்தபிறகு எப்போதுமே கோவில்களுக்கு வேஷ்டி, டி.ஷர்ட்/ஷர்ட்தான். பாண்டிய நாட்டு மற்றும் மலைநாடு கோவில்களில் சட்டை கூடாது என்பதால், பனியன் அணிவதில்லை. அங்கவஸ்திரம் உபயோகப்படுத்துவேன். கோவில் கைங்கர்யங்களின்போது பஞ்சகச்சம், அங்கவஸ்திரம்.

      முக்திநாத்துக்கு சரியான உடையுடன் செல்லாததால் இன்னொரு முறை அந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன், 2024ல்.

      நீக்கு
  12. கடினமான மலைப்பயணம்.. பிரமிப்பாக இருக்கின்றது.. எல்லாம் ஸ்வாமியின் அருள்..

    உறுதுணை அவனன்றி வேறு யார்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைக்கும் அளவு கடினம் கிடையாது. பொறுமையாகச் சென்றால் நன்றாகவே அமைந்துவிடும். இருந்தாலும் கோவில் தரிசனத்துக்கு, அவன் கூப்பிட்டால்தான் நடக்கும்.

      நீக்கு
    2. எங்களுக்கும் அஹோபிலப் பயணம் வாய்த்திருக்கிறது. ஆனால் ஒரே முறை தான் போனோம். இன்றைய பதிவு என் நினைவுகளைத் தூண்டி விட்டது. அப்போ எங்களிடம் டிஜிடல் காமிரா/மொபைல் எதுவும் இல்லாததால் சாதாரணமாக ஃபில்ம் மாற்றும் கானன் காமிராவில் எடுத்த படங்களே உள்ளன. ஆல்பமாக வைச்சிருக்கோம். ஆனால் 13 ஆண்டுகள் முன்னர் போனது. அதே போல் முக்திநாத்தும் 2006 ஆம் ஆண்டில் போனோம். இரண்டாம் முறை எல்லாம் போக வாய்க்கவில்லை. :(

      நீக்கு
    3. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். அப்போ ஜுவாலா நரசிம்மர் கோவிலுக்குச் சென்றீர்களா (மலையேறி)? அடுத்த முறை சந்திக்கும்போது ஆல்பம் பார்க்கிறேன். முக்திநாத் அடுத்த வருடம் செல்லலாம் என்று நினைத்திருக்கிறேன். பத்ரியும் இன்னொரு யாத்திரைக் குழுவின் மூலமாக இன்னொரு தடவை செல்லலாமா என்று யோசிக்கிறேன். சோழ நாடு யாத்திரை (40 திவ்யதேசங்கள்) இரண்டாம் முறையாக இன்னொரு குழு மூலமாகவும் செல்லலாம் என்று எண்ணம். மனைவியிடம் அனுமதி வாங்கணும்.

      நீக்கு
    4. நவநரசிம்மர்களையும் பார்த்தோம். உக்ரஸ்தம்பம் பாதி தூரம் போனால் தூண் பிளந்திருப்பது தெரியும் என்றார்கள். அது வரையும் போனோம். படங்கள் இருக்கின்றன. எல்லா இடங்களுக்கும் மலை ஏற வேண்டியவற்றில் ஏறித்தான் போனேன். முன்னரே சொன்னேன். நான் கொஞ்சம் மெதுவாகத் தான் ஏறியதாகவும் எங்கள் ஒருங்கிணைப்பாளர் எனக்குத் துணையாகப் பின் தங்கி என்னோடு வந்ததாகவும் பல முறை சொல்லி இருக்கேன். கீழ் அஹோபிலத்திலேயே என்னை உட்காரச் சொல்லியும் நான் மறுத்துவிட்டேன். 13 ஆண்டுகளுக்கு முன்னர் கால்கள் இவ்வளவு மோசம் இல்லை என்றாலும் மத்தவங்க யோசிச்சாங்க என்னால் ஏற முடியுமா என்று.

      நீக்கு
    5. 2003 ஆம் ஆண்டில் பத்ரிநாத் போனோம். அப்போ மானாவுக்கு நடந்தே மேலே ஏறிச் சென்றோம். நான் மட்டும் அங்கே உள்ள தேநீர்க்கடையில் உட்கார்ந்துட்டேன். மாமா மட்டும் பீமன் பாலம் வரை பார்த்துட்டுத் திரும்பினார்.

      நீக்கு
    6. நான் உக்ரஸ்தம்பம் மற்றும் பிரகலாதன் மெட்டுக்காக, இன்னொரு யாத்திரைக் குழுவுடன் செல்லலாம் என்று நினைத்திருக்கிறேன். உங்களுக்கு மன உறுதியும் அப்போது இருந்திருக்கிறது. பாராட்டுகள்

      நீக்கு
    7. இன்னொரு தடவை பத்ரி யாத்திரை இன்னொரு குழுவுடன் செல்லலாம் என்று நினைத்திருக்கிறேன் (மனா கிராமம் சரஸ்வதி நதி போன்றவற்றைக் காண). அதுவும்தவிர சார்தாம் (chardham) எப்படி செல்வது என்றும் யோசிக்கிறேன் (ஆதி பத்ரி பவிஷ்ய பத்ரி போன்றவையும்). பார்க்கலாம் அவன் அனுமதி இருக்கிறதா என்று

      நீக்கு
  13. மரமேறிப் பறித்த பழங்களைப் பகிர்ந்து கொண்டாற்போல பதிவு..

    காலையில் முதல் ஆளாகப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குமே என் நினைவுக்கான பதிவாக இருக்கும். என்ன ஒண்ணு.. பசங்கதான் தமிழ் இவ்வளவு பெரிய பதிவு (document) படிக்க மாட்டாங்க ஹா ஹா ஹா

      நீக்கு
  14. ஒரு வேலையின் காரணமாக எனது மகன் தற்போது சென்னையில்..

    எதிர்பாரா விதமாக வெள்ளி இரவு வீட்டுக்கு வந்து நேற்று காலை மாமணிக் கோயிலுக்குச் சென்றபோது அங்கே மணிக் குன்றத்தில் திருக்கல்யாண வைபவம்..

    திருக்கல்யாணம் என்று ஏதும் எங்களுக்குத் தெரியாத நிலையில் பெருமாள் கருணை கூர்ந்தருளினார்..

    கல்யாண பிரசாதம் வீட்டுக்கு வந்ததே!..
    பெருமாளின் நல்லருள் தொடர்ந்தே வருகின்றது..

    இப்போது கூட அங்கு தான் சென்றிருக்கின்றார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
      நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன்
      நாராயணா என்னும் நாமம்

      என்ற திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி பாசுரம் நினைவுக்கு வருகிறது. எது நடந்தாலும் காரண காரியத்தோடுதான் நடக்கும். அதனைத்தான் விஷ்ணு சஹஸ்ரநாமமும், 'கரணம் காரணம் கர்த்தா' என்று அவனது குணங்களை வைத்துச் சொல்கிறது. கோவில் தரிசனம், நம் கெட்டுப்போன பேட்டரிக்கு சார்ஜ் போடுவதைப் போல.

      நீக்கு
  15. வணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரரே.

    படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பதிவை படிக்கும் போது அஹோபிலம் மலையேற்றம் கடினமான தோன்றுகிறது ஆனாலும், நீங்கள் சொல்வது போல கால்களில் பலமிருந்தாலும், மனதில் உறுதியிருந்தாலும் இறைவனை இன்னமும் கொஞ்ச நேரத்தில் தரிசித்து விடலாம் என்ற ஆவல் இருந்தாலும் மெள்ள, மெள்ள ஏறிச் சென்று விட்டு திரும்பி விடலாம்.

    உங்கள் இந்த யாத்திரையின் மூலம் நானும் அங்குள்ள நரசிம்ஹர்களை தரிசித்துக் கொண்டேன். நானெல்லாம் எப்போது அங்கு செல்வதெனபது தெரியாது. எனவே உங்கள் பயணத்தின் மூலமாக இறைவனைப்பற்றி அறிந்து மகிழ்ச்சி கொண்டேன். நேற்று யதேச்சையாக ராஜாஜி நகர் கோவில் நரசிம்ஹர் தரிசனம் கிடைத்தது. உங்கள் பதிவை காலையில் படித்தததினால் , இறைவன் தரிசனம் மாலையில் நல்லபடியாக கிடைத்தது. இரவு திரும்ப தாமதமாகி விட்டது. அதனால் கருத்துத் தர தாமதமாகி விட்டது.

    டோலி பயணம் கொஞ்சம் ஆபத்தானது என்று தோன்றுகிறது. ஆயினும் வயதானவர்கள் மேலேறிச் செல்லும் ஆவலினால் ஒரு நம்பிக்கையுடன் அவ்விதம் பயணித்து செல்லுகிறார்கள போலும்.அவர்களை சுமந்துச் செல்பவர்களும் தங்கள் உயிரை பணயமாக வைத்துதானே பயணிப்பார்கள். எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.

    டோலியில் அமர்ந்து பார்ப்பது தாங்கள்தானா? இனி புல் டெம்பிள் பக்கம் தாங்கள் வரும் சமயம் கூட்டத்துக்குள் சுலபமாக அடையாளம் கண்டு கொள்வேன். ஹா ஹா ஹா.

    உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். நீங்கள் புல் டெம்பிள் பக்கம் வருவதானால், 3 கிமீ தூரம் இருந்தாலும் நடந்து வந்து உங்களைப் பார்க்க வருகிறேன். அது நான். ஹா ஹா. (இருந்தாலும் நான் கீதா ரங்கன் அக்காவை விடச் சின்னப் பையன்)

      டோலி பயணம் ஆபத்து. இதெல்லாம் ஒரு மனத் திருப்திக்காகச் செல்வது என்றே எனக்குத் தோன்றும்.

      நரசிம்மர் தரிசனம் உங்களுக்குக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. தொடரைப் படிப்பதை நினைத்தும் சந்தோஷம்தான். நீங்களும் இப்போல்லாம் ரொம்பவே பிஸியாக இருக்கீங்க. தொடர்ந்து ஏதேனும் வேலை இருந்தால் இணையத்துக்கு வருவது கடினமாகிவிடும்)

      நீக்கு
  16. படங்கள் எலலம் அட்டகாசம் நெல்லை. செமையா இருக்கு. எல்லாமே நல்லா எடுத்திருக்கீங்க.

    இதைவிடக் கடினமான மலை ஏற்றம் பர்வதமலை ஏற்றம். ஆனால் அதுவும் கூட எனக்குக் கடினமாகத் தெரியவில்லை. அது 4, 5 மணி நேரம் ஆகும்.

    ஜ்வால நரசிம்மர் ஏறியதும் எளிதாக இருந்தாப்லதான் தோணிச்சு. அப்பவே. உக்ரஸ்தம்பம் ஏறியதும் கூட கடினமாகத் தெரியவில்லை.

    பர்வதமலை ஏறியது 6/7 வருடங்கள் ,முன்பு.....ஒரு வேளை இப்ப இந்த இரண்டுமே ஏறிப் பார்த்தால்தான் தெரியும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்(க்கா). பர்வதமலை ஏற்றம் கடினம் என்று நீங்கள் முன்னமே சொல்லியிருக்கிறீர்கள். நானும் இங்கு ஒரு மலையேற்றத்திற்குச் சென்றிருந்தேன். காலை 9 மணிக்கு வெயிலில்தான் ஏற ஆரம்பித்தோம். மதியம் 2 மணிக்கு இறங்கும்போது என் எனர்ஜி சுத்தமாகக் காலி. கீழே வந்ததும் 40 ரூ இளநி (நிறைய சுவையான நீர்) இரண்டு சாப்பிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். அப்புறம்தான் உயிர் வந்தது (உண்மையிலேயே). என் பசங்க செல்வதற்கு முன்னமே சொன்னாங்க, நீங்க வீம்புக்கு முழுதும் ஏறி இறங்குவீங்க என்று.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!