செவ்வாய், 8 அக்டோபர், 2024

ரீட்டா & மீட்டா 12 : அபிமன்யு

 

சென்ற வார ரீ மீ - பகுதி 11 சுட்டி. 

.. பிளாக் மெயில் செய்யப்பட்ட ஒருவர், சட்ட ரீதியாக ரீட்டாவை எதிர்கொள்ள, போலீஸில் புகார் செய்தார். 

அந்தப் புகார் பற்றி விசாரிக்க, ரீட்டாவின் அப்போதைய விலாசத்திற்குச் சென்றவர் .. அருண். 
.. 
அருணுக்கு ரீட்டாவை முதல் சந்திப்பிலேயே மிகவும் பிடித்துவிட்டது.  ரீட்டாவின் அழகு, அவள் பேசிய ஆங்கிலம், போலீஸ் அதிகாரியான அருணுக்கு  அவள் கொடுத்த மரியாதை, புன்னகையுடன் அவள் கூறிய பதில்கள் எல்லாமே அருண் மனதில், ரீட்டாவை மிக நல்ல இடத்தில் வைத்தன. அருண், ரீட்டா வீட்டிற்குச் சென்ற சமயத்தில், ரீட்டாவின் பெரியம்மா அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றிருந்ததால் அருண் பெரியம்மாவை சந்திக்கவில்லை. 

ரீட்டாவுக்கு சட்ட ரீதியாக உதவி செய்ய அருண் தன்னுடைய லாயர் நண்பர்  ஒருவரை அனுப்பி வைத்தான். அந்த லாயர் நண்பரின் உதவியால், ரீட்டா நிரபராதி என்று விடுவிக்கப்பட்டாள். 

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ரீட்டா ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அருணுக்கு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தாள். பார்ட்டி முடிந்து அருண் அங்கிருந்து கிளம்ப எழுந்தபோது, ரீட்டா, " என்னை இக்கட்டிலிருந்து மீட்க உதவிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்று சொல்லி,  எதிர்பாராத வகையில், அருணைக் கட்டிப் பிடித்து, அவன் கன்னத்தில் முததமிட்டதுடன் அதை தன்னுடைய போனில் படமும் எடுத்துக்கொண்டாள். 

அந்த நேரத்தில், அதை இயல்பான நிகழ்வாகத்தான் எடுத்துக்கொண்டான் அருண். 

ஆனால் - ரீட்டா அடுத்தடுத்து தனக்கு போலீஸ் சிக்கல் வரும்போதெல்லாம், அதிலிருந்து தப்பிக்க - அருணின் (போலீஸ்) உதவியைப் பெற அந்தப் படத்தைக் காட்டி அருணை பிளாக் மெயில் செய்ய ஆரம்பித்தாள். அருணுக்கு இது பெரிய தலைவலியாகப் போயிற்று. இதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்தான். 

இது எதுவரை போனது என்றால் - ஒருநாள் அருணின் மேலதிகாரி, அருணை அழைத்து, அவனிடம் " நீங்கள் யாரோ ஒரு பெண்ணுக்கு உதவுவதற்காக, out of the way சென்று, சில தலையீடுகள் செய்வதாக புகார்கள் அரசல் புரசலாக வருகின்றன. இது விரும்பத்தக்க நிலை அல்ல. இந்த வகை புகார்கள், உங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்; பதவி உயர்வை பெரிதும் பாதிக்கும். " என்று சொன்னார். 

அப்பொழுது அருணுக்கு, போலீஸ் ஜர்னல் பத்திரிக்கையில் படித்த CV235 ஜாடி நினைவுக்கு வந்தது. அந்த ஜாடி ஒன்றை, அருண் வாங்கினான். ஆனால் ரீட்டாவின் வீட்டுக்கு அருண் சென்றபோது, ரீட்டா அந்த வீட்டைக் காலி செய்துகொண்டு சென்றுவிட்டதாகத் தெரிந்துகொண்டான். 

* * * * * 
அதுவரை BMC (Business Management Consultant) ஆக இருந்த ரீட்டா, பிறகு BMW (Business Management Wizard) என்று தன்னைத் தானே அழைத்துக்கொள்ள அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. 

ரீட்டா குடியிருந்த பகுதியில் நடந்த கொடி ஏற்று விழா ஒன்றில், அந்தப் பகுதியின் பிரபல பெண்மணி என்ற வகையில் பங்கேற்று மேடையில் இடம் பெறும் வாய்ப்பு ரீட்டாவுக்குக் கிடைத்தது. அதே மேடையில், ஒரு அரசியல் பிரமுகரின் மகனும் பங்கேற்க வந்திருந்தார். அரசியல் பிரமுகர் கட்சியில் மிக முக்கியமான பதவியில் இருப்பவர். அவர் தன்னுடைய மகனை பிரபலப்படுத்த, உள்ளூர் விழாக்கள், பாராட்டுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுப்புவது வழக்கம். 

அந்த அரசியல் பிரமுகரின் மகன் பெயர் அபி என்கிற அபிமன்யு. அபிமன்யுவின் பார்வை, ரீட்டா மேல் விழுந்தது. ரீட்டாவின் பார்வை அபிமன்யுவின் நீலக் கலர் BMW கார் மீது விழுந்தது. 

விலையுயர்ந்த கார், பெரிய பங்களா, நிறைய வேலையாட்கள், நினைத்ததை எல்லாம் வாங்கக்கூடிய அளவுக்குப் பணம் என்றெல்லாம் கனவுகளைக் கொண்டிருந்த ரீட்டாவுக்கு அபிமன்யுவின் நட்பு கிடைத்தது அரிய வரமாக அமைந்தது. மகாபலிபுரம் ஹோட்டல் ஒன்றில் அடிக்கடி அபிமன்யு, ரீட்டா இருவரும் ரூம் எடுத்துத் தங்கினார்கள். 

அந்த நேரத்தில் ஆனந்த் & ரீத்திகா பேட்டி பிசினஸ் இந்தியா பத்திரிக்கையில் பார்த்தவுடன் ரீட்டா ஆனந்தை பிளாக் மெயில் செய்து லட்சக் கணக்கில் பணம் சேர்க்கத் திட்டமிட்டாள். அபிமன்யுவிடம் தானும் ஒரு பணக்காரி என்பதைக் காட்டிக்கொள்ள அவள் போட்ட திட்டம் அது. கேட்டதுமே பத்து லட்ச ரூபாய் ஆனந்த் அனுப்பியவுடன், ரீட்டாவுக்கு சந்தோஷமாக இருந்தது. இன்னும் இருபது லட்ச ரூபாய் கேட்டு கடிதம் அனுப்பினாள்.  

அப்புறம் என்ன? ஆயிரக் கணக்கில் பணம் சம்பாதிக்க சில பிசினஸ்மென், லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்க ஆனந்த், அவ்வப்போது போலீஸ் கெடுபிடியிலிருந்து விடுபட அருண் என்று இருந்த ரீட்டா - அபி மூலமாக ஊரப்பாக்கத்தில் ஒரு பங்களாவை தன்னுடைய பெயருக்கு வாங்கிக்கொண்டு, அங்கு தன் பெரியம்மாவுடன் குடியேறினாள். அபி தன்னைத் திருமணம் செய்துகொள்வான் என்று ரீட்டா மிகவும் நம்பினாள். அதனால் அபியுடன் மிகவும் நெருங்கிப் பழகினாள். 

ஆனால் - அரசியல்வாதிகளின் நட்பு ஆபத்தானது என்று அவள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் சோகமான உண்மை. 

* * * * * * 
அருணின் மேலதிகாரி, அருணைக் கூப்பிட்டு ஒருநாள் காலையில், " ஊரப்பாக்கத்தில் யாரோ ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டுவிட்டாள் என்று அவளுடைய உறவுக்காரப் பெண்மணி தகவல் கொடுத்துள்ளார். நீ அங்கு சென்று விசாரித்து - தற்கொலையா அல்லது கொலையா என்று விஜாரித்து, அந்தக் கேஸை உடனடியாக முடித்து வை" என்று சொல்லி அனுப்பினார். 

ஊரப்பாக்கம் சென்ற அருண், இறந்துபோனது ரீட்டா என்று தெரிந்தவுடன் அதிர்ந்து போனான். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்த அருணின் அதிர்ச்சி இன்னும் பலமடங்காகியது. 

அதிர்ச்சி 1: மரணத்தின் காரணம் CV235 விஷ வாயு. 

அதிர்ச்சி 2 : ரீட்டா கர்ப்பமாக இருந்தாள். கர்ப்பத்தின் ஆரம்ப நிலை என்றது ரிப்போர்ட். 

அருண் உடனடியாக, interpol வழியாக சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்குள் யார் எல்லாம் CV235 ஜாடி வாங்கினார்கள் என்ற தகவலை சீனா கம்பெனியிலிருந்து வாங்கினான். 

அதிலிருந்து, CV235 வாங்கப்பட்ட விலாசங்கள் அருணுக்குத் தெரியவந்தது. 

ஆனந்த் : ரீத்திகா கெமிக்கல்ஸ், 
அருண் (அவனுடைய விலாசம்) 
மற்றும் இருந்த ஒரு பெயர் மதிவாணன் - அண்ணா நகர். 

அருண், ரீட்டாவின் பெரியம்மாவிடம், கடந்த நான்கைந்து நாட்களுக்குள் வழக்கமாக வீட்டிற்கு வந்து செல்லும் பால்காரர், வேலை ஆட்கள் தவிர்த்து யார் எல்லாம் வந்து சென்றார்கள் என்று கேட்டான். 

பெரியம்மா: " மூன்று நாட்களுக்கு முன்பு ஊரப்பாக்கம் நர்சரியிலிருந்து ஒருவர் ரோஜாச் செடி தொட்டி ஒன்றை பரிசாகக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றார். "   

அ : " அது எங்கே? " 

பெ : " ரீட்டாவுக்கு  ஃபோன் செய்து, கேட்டபோது, அவள் ' தான் மகாபலிபுரத்தில் இருப்பதாகவும், வீட்டிற்கு வர இரண்டு நாட்கள் ஆகும்' என்று சொல்லி, 'அந்தத் தொட்டியை மொட்டை மாடியில் கொண்டு போய் வைத்து, தண்ணீர் விடும்படியும் சொன்னாள்' ரீட்டா சொன்னதுபோல அதை மொட்டைமாடியில் கொண்டுபோய் வைத்தேன். ஆனால், அப்போது மழை பெய்ய ஆரம்பித்ததால்,செடிக்குத் தண்ணீர் விடவில்லை. மாடி செல்லும் கதவை மூடி, பூட்டுப் போட்டுவிட்டு வந்துவிட்டேன். " 

அ : " பிறகு யார் வந்தார்கள்? " 

பெ : " ரீட்டா ஊரிலிருந்து திரும்பி வருவதற்கு முன்பு, அவளுடைய படுக்கை அறை ஏர் கண்டிஷனர் சர்வீஸ் செய்ய மெக்கானிக் வந்தார். தனக்கு ரீட்டா ஃபோன் செய்து, தனது அறை ஏர் கண்டிஷனரிலிருந்து அதிகமாக சத்தம் வருவதாகவும், மேலும் ஏதோ கிரீஸ் வாடை வருவதாகவும் புகார் அளித்திருந்ததால், அதை சரி செய்ய அந்தக் AC கம்பெனி அனுப்பி வைத்திருப்பதாகவும் சொன்னார். " 

அ : " பிறகு?" 

பெ : " சுமார் அரைமணி நேரம் ஏர் கண்டிஷனரைப் பிரித்து உள் பாகங்களை சுத்தம் செய்து ஏதோ சில பாகங்களை மாற்றிவிட்டு, 'எல்லாம் சரியாகிவிட்டது' ரீட்டா அம்மா வந்தால் சொல்லிடுங்க. AC வாரண்டி பீரியட்ல இருப்பதால் ரிப்பேர் சார்ஜ் எதுவும் கொடுக்கவேண்டாம்' என்று சொல்லி சென்றுவிட்டார். " 

அருண், அதன் பிறகு, பெரியம்மா மாதுரியிடம்,  ரீட்டாவின் பாங்க் அக்கவுண்ட் பற்றியும், ரீட்டா, மாதுரி இவர்களின் பின்னணி பற்றியும், ரீட்டாவின் பழக்க வழக்கங்கள், பிசினஸ் வாடிக்கையாளர்கள் பற்றியும், மாதுரியின் எதிர்கால திட்டம் என்ன என்பதைப் பற்றியும் பல தகவல்கள் கேட்டுத் தெரிந்துகொண்டான். ரீட்டாவின் சமீப கால நடவடிக்கைகள் பற்றியும் பல கேள்விகள் கேட்டு விவரங்கள் தெரிந்துகொண்டான். 

மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த ரோஜாத் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த CV235 ஜாடியை ஜாக்கிரதையாக விரல் ரேகை அழியாமல் பாதுகாக்கும் வகையில் கைப்பற்றி, அதை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டான். பெட்டி மீது 'Flower pot' என்று எழுதினான். 

மாதுரியிடம், அந்தத் தொட்டியை மாடியில் வைத்த இரவில் மழை பெய்தபிறகு, ஏதேனும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்ததா என்று கேட்டான். மாதுரி, 'மறுநாள் காலையில் தோட்டத்தில் இரண்டு காக்கைகள் இறந்து கிடந்தன' என்று கூறினாள். 

அதே போல, ஏர் கண்டிஷனர் 'Fresh air inlet ' பகுதியில் வைக்கப்பட்டிருந்த CV235 ஜாடியையும் ஜாக்கிரதையாக எடுத்து, வேறு ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து, பெட்டி மீது 'AC' என்று எழுதினான். 

பிறகு, ரீட்டாவின் ஃபோன், லாப்டாப் எல்லாவற்றையும் வேறு ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டான். 

****** 
இதன் பிறகுதான் அருண், ரீத்திகா கெமிக்கல்ஸ் சென்று அதன்பின் ஆனந்தை விசாரிக்க ஹைதராபாத் கிளம்பிச் சென்றான். 

**********

திரும்ப வந்தபின் CV235 வாங்கப்பட்ட அண்ணாநகர் விலாசம் சென்று விசாரணை செய்வோம் என்று புறப்பட்டான். 

= = = = = = = = = = =

( இந்த வாரம் கதையை முடிக்க இயலவில்லை. சில வாசகர்கள், இந்தக் கதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இதைத் தொடரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பலர், கதை புரியவில்லை என்று எழுதியுள்ளனர். சிலர் கதை போரடிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். - எனவே கதையை தொடர்வதா வேண்டாமா என்று சில வாரங்கள் யோசிக்க வேண்டியுள்ளது. அது வரை, வேறு சிறுகதைகள் வெளி வரும். கதையைத் தொடரவேண்டுமா வேண்டாமா என்பது பற்றி வாசகர்கள் கருத்து பதியவும். நன்றி.) 

(தொடருமா ? )

= = = = = = = = = = = = = ===

46 கருத்துகள்:

  1. கதையைத் தொடர்வதில் என்ன சிக்கல்?
    A) எதிர்ப்பு தெரிவித்து
    B) கதை புரியவில்லை
    C) கதை போரடிக்கிறது
    எதற்கும் காரணம் (எனக்கு) தெரியவில்லை.
    அதனால் தொடரவும். யோசிக்கையில் இந்த என் Vote-ஐ கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  2. மலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. "கயறு". தகழி சிவசங்கர பிள்ளை எழுதிய நாவல். நீண்ட நாவல். ஒன்றிலிருந்து அடுத்ததுக்கு தாவி என்று தாவித்தாவி செல்லும் கதை. அது போன்று தான் இந்த ரீட்டா கதையும். ஜாவர் போல எழுத முயன்று ..... !!!!
    ஆக இது போன்று நீட்டிக்கொண்டு போகும் கதைகளை
    கயறு என்று சொல்வார்கள்.

    அருண் ரீட்டா வேற, ஆனந்த் ரீட்டா வேற, என்றெல்லாம் சமாளித்து எப்படியோ அருண் இறந்தது எந்த ரீட்டா என்று கண்டுபிடிப்பதாக, எப்படி தற்கொலை செய்துகொண்டாள் என்று கதையை முடிக்கலாம். .

    பதிலளிநீக்கு
  3. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு.

    இக்குரளை பின்னூட்டமாக இடுவது இரண்டாம் முறை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. கௌ அண்ணா, கதையைத் தொடர வேண்டுமா இல்லையா என்பதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் மூன்று காரணங்களும் என் தரப்பில் இல்லை.

    எனக்கு suspense, investigation, thriller கதைகள் பிடிக்கும் என்பதால் மட்டுமில்லை நீங்கள் இக்கதையில் கொண்டு வந்திருக்கும் ஒரு புதிய கெமிக்கல். அதைப் பற்றி நீங்கள் நிறைய தரவுகள் எடுத்துக் கொண்டு எழுதியிருப்பதைப் பாராட்டுகிறேன். ஒரு வேளை அது நெகட்டிவ் என்று சிலர் எதிர்த்திருக்கலாம். ஆனால் அப்படிப் பார்த்தால் உலகில் இப்படியனா நெகட்டிவ் நடக்காமல் இருக்கிறதா என்ன? இதைவிட இன்னும் அட்வான்ஸ்ட் நடக்கிறது. நீங்கள் கதையில் சொல்லாமல் இருந்தாலும் இது தெரியாமல் போகப் போவதில்லை அந்த அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.

    ஒரு வேளை எபி யில் அறம் சார்ந்தவை மட்டும் தான் வர வேண்டும் என்று வாசகர்கள் நினைப்பதால் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

    என்னைப் பொருத்த வரை கதையைத் தொடர்ந்து முடித்துவிடுங்கள். ஆனால் அதற்காகச் சப்பைக்கட்டு, சமாளிப்பு, வேக வேகமாக முடித்தல் சப்பென்ற முடிவு எதுவும் கதையில் இல்லாமல் நீங்கள் எப்படி முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தீர்களோ அப்படி முடித்துவிடுங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உற்சாகமூட்டும் கருத்துரைக்கு நன்றி. நான் கதையை இந்த வாரம் ஒரு கேள்வி கேட்டு அதற்கு அடுத்த பதிவில் முடிக்க எண்ணியிருந்தேன். அடுத்த வாரம் ஒரு இனிப்பு கதை ஷெட்யூல் செய்துவிட்டோம். அதனால் அதற்கு அடுத்த இரண்டு வாரங்களில் கதையை முடித்து விடுகிறேன்.

      நீக்கு
    2. இனிப்புக் கதை யார் எழுதியிருப்பாங்க என்று ஊகிக்க முடிகிறது!!!!

      கீதா

      நீக்கு
    3. ஆஹா. நீங்கள் துப்பறியும் நிபுணி!

      நீக்கு
  5. போரடிக்கிறது - இதற்கான காரணங்கள் என் அனுமானத்தில் இப்படியான தொடர்கதைகள் தொடர்ந்து வந்தால் அல்லது முழுவதும் இருந்தால் நன்றாக இருக்கும் ஒரு வாரம் காத்திருந்து தொடர்வது என்பதால் நூலறுந்து போகும் ஒரு நிலையால் இருக்கலாம்.

    கூடவே investigation என்பதாலும் சில உரையாடல்களும் சுத்த தமிழில் நீங்கள் எழுதுவதால் இருக்கலாம். பொதுவாக இப்படியானவை எப்படி யதார்த்தத்தில் பேசப்படும் என்பது போன்று உரையாடல் தமிழில் எழுதினால் இன்னும் கவர்ந்திருக்குமோ என்றும் தோன்றியது.

    போர் என்று சொன்னவர்களுக்கு இதனாலா என்று தெரியவில்லை ஆனால் நான் போர் என்று சொல்லமாட்டேன் என்றாலும் இந்த எண்ணம் தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. trending என்று சொல்கிறார்களே அப்படியான உரையாடல்கள்!!! ஹிஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  6. கதை புரியவில்லை என்பதற்கும் மேலே கருத்தில் சொன்ன காரணமாக இருக்கலாம் கௌ அண்ணா. அதாவது ஒருவாரம் காத்திருக்க்க வேண்டிய தொடர் என்பதால்.

    ரீட்டா, ரீத்திகா பெயர் குழப்பம் இருக்குமோ? அல்லது முதலில் தொடங்கிய போது டிட் பிட் போன்று கொடுத்ததால் இருக்குமோ?

    எனக்குக் குழப்பம் எதுவும் இல்லை. நன்றாகப் புரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    அட… இப்படி பாதில விட்டா எப்படி? ஒரு முடிவுக்கு வரவேண்டாமா? :) விரைவில் அடுத்த பகுதிகளை எழுதி வெளியிடுங்கள். காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. /// கதைக்கு எதிர்ப்பு தெரிவித்து///

    மகா பிரபுக்கள் அங்கேயும் வந்துட்டாங்களா!?..

    பதிலளிநீக்கு
  10. எக்காரணம் கொண்டும் க்தையை இடை நிறுத்தி மீண்டும் தொடர வேண்டாம்... தங்களது விருப்பப்படி தொடர்ந்து எழுதி நிறைவு செய்யவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் பாயாசம் சாப்பிட்ட பின்பு, இரண்டே பதிவுகளில் முடித்து விடுகிறேன்.

      நீக்கு
  11. // கதைக்கு எதிர்ப்பு தெரிவித்து///

    தளத்தின் கருத்துரையில் அப்படி எதையும் கண்டதில்லை யே..

    வேறு வழி எதுவாக இருக்கும்?..

    பதிலளிநீக்கு
  12. இந்த வாரம் அபிமன்யு புதிய கேரக்டர் அறிமுகம். அதுவும் அரசியல் பின்புலம்.

    அருண் அந்த கெமிக்கலை பின்னர்தான் வாங்குகிறான் அதாவது அவன் அதை வாங்கிய லிஸ்ட் எடுத்து இன்வெஸ்டிகேட் செய்யத் தொடங்கிய பின்.

    இன்வெஸ்டிகேஷன் செய்யும் போலீஸுக்கு டக்கென்று எப்படி இந்த ரீட்டா மீது ஆர்வம் ஈர்ப்பு தோன்றுகிறது? வேறு ஒரு பெண் மீது என்றால் ஒகே. ஆனால் துப்பறியும் நேரத்தில் சந்தேகப் பார்வையுடன்தானே எல்லோரையுமே அணுகுவார்கள்! அதுவும் அவன் அவளுக்கு உதவி செய்வது என்பதெல்லாம் தான் கொஞ்சம் கதையில் உதைக்கிறது. அவன் மீதும் சந்தேகத்தை எழுப்புகிறது. அருணும் தானே அந்தக் கெமிக்கலை வாங்கினான் அவன் பெயர் அந்த லிஸ்டில் இல்லையா? ஆனந்த், மதிவாணம் மட்டும் தானா?

    அருணுக்கு உதவலாம் என்று நினைத்தேன் ஹாஹாஹாஹா ஆனா, இப்ப அந்த எண்ணம் மாறிடுச்சு!!! ஏன்னா அவனும் தானே அந்த கெமிக்கல் வாங்கியிருக்கிறான்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லிஸ்டில் இரண்டாவது பெயர் அருண்.

      நீக்கு
    2. ஆமாம் கௌ அண்ணா பார்த்துவிட்டேன்!!! இரண்டாவது பெயர்.

      இந்தக் கருத்து போட்ட பிறகு எனக்குத் தோன்றியது....கௌ அண்ணா இத்தனை தரவுகள் எடுத்திருக்கிறார், ஒவ்வொன்றையும் சரியாக நகர்த்துகிறார் அவர் எப்படி இதை விட்டிருப்பார் என்று தோன்றி இங்கு வந்து மீண்டும் கதைக்குள் சென்று பார்த்து சொல்ல வந்தேன் நீங்களும் இங்கு சொல்லிவிட்டீர்கள்

      இப்ப மூன்று பேர் சந்தேக லிஸ்டில்....ஆனந்த், அருண், மதிவாணன்...ஆனந்த் இல்லை என்பதை அருண் முன்பு சொல்லிவிடுகிறான்...அருணும் ரீட்டவைப் பார்க்க அந்த கெமிக்கலோடு சென்ற போது ரீட்டா அந்த வீட்டில் இல்லை...என்றாலும் இன்னும் சந்தேகம் முழுவதும் நீங்கலை. கூட்டு சேர்ந்து? லிஸ்டில் இல்லாத அபிமன்யுவாக இருக்கலாம்..இதற்கான ஊகம் எனக்கு எழுந்தாலும், அண்ணா க்ளிஷே பாணியில் முடிக்காம இருக்கணுமே என்ற எண்ணமும் கூடவே வருது!!!!!!!

      கீதா

      நீக்கு
  13. நல்லா இல்லை.. உடனே நிறுத்து ன்னு நாலு பேர் வந்து மிரட்டியிருப்பங்களா..

    அப்போ நீங்களும் சிறந்த எழுத்தாளர் தான்..

    1950 களில் இப்படித்தான் நடந்ததாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1950? அது என்னுடைய முந்தைய பிறவி. அப்போது கூட என்னை மிரட்டியிருக்கிறார்கள் பாருங்க!

      நீக்கு
  14. நீங்கள் நினைப்பது போல் இரண்டு வாரத்தில் கதையை
    முடித்து விடலாம்
    கே.சக்ரபாணி
    .

    பதிலளிநீக்கு
  15. பாயசம் பாயசம் என்கின்றீர்களே

    " இவனுக்கும் ஒரு பாயசத்தைப் போட்டுற வேண்டியது தான்.. "

    என்கிற மாதிரி சினிமா பாயசமா!?..

    பதிலளிநீக்கு
  16. கதையை இடையில் நிறுத்த வேண்டாம் தொடர்ந்து செல்லுங்கள் .

    வித்தியாசமான கதைகள் எ.பி இல் வருவதும் நல்லதுதானே.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக பரபரப்புடன் செல்கிறது. தொடர்ந்து எழுதி முடிவை தெளிவுபடுத்துங்கள். நீங்கள் இந்த சஸ்பென்ஸ் கதையை எழுதி முடிக்க வேண்டுமென்பதே என் விருப்பம். எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!