24.11.25

"திங்க"க்கிழமை : காராசேவு - துரை செல்வராஜூ ரெஸிப்பி

 வெகு நாட்களுக்குப் பிறகு எழுதியுள்ள பதிவு...

 காராசேவு 
தேவையான பொருட்கள்:-
கடலை மாவு 250 gr
அரிசி மாவு 50 gr
மிளகுத்தூள் அல்லது ஓமம்
ஒரு tsp
மஞ்சள் தூள் சிறிதளவு
உப்புத்தூள் தேவைக்கு
வெண்ணெய்  ஒரு Tbsp
பூண்டு மூன்று பற்கள் 
கடலெண்ணெய் தேவையான அளவு
கடலைப் பருப்பை வாங்கி சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து அரைத்து மாவு தயாரித்துக் கொள்வது சிறந்தது..

அரிசியையும் நாமே அரைத்து மாவு தயாரித்துக் கொள்வது நல்லது..

வெளியில் வாங்குகின்ற மாவு வகைகளில் சுத்தம் என்பது சந்தேகத்திற்குரியது..

இருப்பினும்,

வீட்டிலேயே மாவு தயாரித்துக் கொள்வது சிரமம் என்றால் வெளியில் தான் மாவு வாங்கிக் கொள்ள வேண்டும்

செய்முறை:

பூண்டு பற்களை சுத்தம் செய்து பசை போல அரைத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரம் ஒன்றில் மேற்கூறிய பொருட்களைச்  சேர்த்து. நன்றாக கலந்து கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு  பிசைந்து கொள்ளவும்.

வாணலி ஒன்றை அடுப்பில்  வைத்து அவற்றில் தேவையான அளவு கடலெண்ணெய் ஊற்றி, பிசைந்த மாவினை முறுக்கு உரலில் (சேவை பிழிவதற்கான  ஒற்றைத் துளை அச்சில்) வைத்து எண்ணெயில்  பிழிந்து பக்குவமாக பொரித்து எடுத்தால் சுவையான மிளகு காராசேவு..

இந்த மாவை இதே பக்குவத்தில் (முறுக்கு உரலின் பட்டைத் துளை அச்சினைப் போட்டு) ஓலை முறுக்கு ஆகவும் பிழிந்தெடுக்கலாம்..

இதெல்லாம் உங்களது சாமர்த்தியம்.. 

இதில் ஆப்பச் சோடா, அந்தச் சோடா இந்தச் சோடா - என்று எவ்வித இரசாயனக் கலப்பும் இல்லாதது சொல்லத்தக்கது.. 

சுத்தமான கலனில் வைத்து பாதுகாத்துக் கொண்டால் ஐந்து  நாட்களுக்குக் கெடாது..

நமது நலம் நமது கையில்..

18 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கமும் பிரார்த்தனையும்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில், சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் காராசேவு பக்குவம், படமும், செய்முறையும் நன்றாக வந்துள்ளது. நாங்கள் வீட்டில் செய்யும் போது இதில் பூண்டு சேர்த்ததில்லை. மற்றபடி இதே பக்குவமுள்ள மாவினால் ரிப்பன் பகோடா போன்று செய்துள்ளோம் .

    /வெகு நாட்களுக்குப் பிறகு எழுதியுள்ள பதிவு.../

    ஆம் அவர் சமையல் பதிவுகள் எழுதி வெகுநாட்கள் ஆகி விட்டது. அதைப்போல் செவ்வாய் கதைகளும். விரைவில் அவர் நல்ல ஆரோக்கியம் பெற்று, கதை பகுதிக்கு நல்ல கருத்துள்ள கதைகளை எழுதித் தர வேண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. காராசேவு என்ற தலைப்பைப் பார்த்ததும் சாத்தூர் நினைவுக்கு வந்துவிட்டது.

    சென்றவாரம் மதுரை பிரேமா விலாசில் 100 கிராம் மாத்திரம் வாங்கினேன்.

    உங்கள் செய்முறை நன்று. பூண்டு வாசனையுடன் காராச்சேவு சாப்பிட்டு எத்தனை நாட்களாகிவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... நான் பூண்டு வாசனையுடன் நல்ல காராபூந்தி சாப்பிட்டு ரொம்ப நாட்களாகி விட்டது!

      நீக்கு
  4. முன்பெல்லாம் காராசேவை அச்சில் பிழிவதில்லை. ஓட்டையுள்ள தட்டில் மாவை கையால் தேய்த்துத்தான் செய்வார்கள். அச்சில் பிழிந்தால், பெயர் மாத்திரமே மிஞ்சுகிறது. அதிலும் கடைகளில் பாக்கெட்டில் இஷ்டப்படி ஒல்லியாக, சிறிது தடிமனாக என்றெல்லாம் பிழிந்து காராச்சேவு என்றல்ல, சாத்தூர் காராச்சேவு என்ற பெயரிட்டு விற்கிறாங்க.

    நீங்க எழுதியிருப்பதுபோல், வீட்டில் தயாரித்துக்கொள்வதே சிறப்பு.

    ஓம்ம் உபயோகித்துப் பார்த்ததில்லை. கரகர மிளகு, பூண்டுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சாத்தூரில் கொஞ்ச காலம் வேலை செய்திருக்கிறேன்.  பஸ் ஸ்டாண்டைத் தாண்டி அந்த மெயிட்னரோடிலேயே அலுவலகம் அமைந்திருந்தது.  பபஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இவ்வகை சேவுகள் இனிப்புகள் அடுக்கடுக்காய் உயரமாய் வைத்திருப்பார்கள்!

      நீக்கு
  5. ஏன் இப்போதெல்லாம் கடலை எண்ணெயில் பொரிப்பதை விட்டுவிட்டு, ரிபைன்ட் ஆயில் எனப்படும் பெட்ரோல் எண்ணெயில் பொரித்துத் தள்ளுகிறார்கள். உடலுக்கு என்னெல்லாம் கெடுதியோ. பெங்களூர், கர்நாடகாவில் பாமாயிலிலும் பொரிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. துரை அண்ணா, சூப்பர் செய்முறை. எனக்கு ரொம்பப் பிடிக்கும் காரச்சேவு அதுவும் பூண்டு மிளகு போட்டதுதான் என் முதல் சாய்ஸ். அதன் பின் தான் வெறும் மிளகு போட்டு செய்வது நம்ம வீட்டுல பூண்டு எல்லாம் சேர்க்க மாட்டாங்களே வீட்டிலும் சரி விசேஷங்களிலும்.

    முன்ன ஊரில் இருந்தப்ப இது தேய்ப்பதற்கு என்று ஒரு பெரிய கரண்டி ஓட்டைகளும் பெரிசா இருக்கும் நீளமான கரண்டி அதில்தான் தேய்ப்பாங்க.

    நானும் வைத்திருந்தேன் முன்ன. இப்ப இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... நீங்கள் சொல்லும் கரண்டியில் தேய்த்தால் காராபூந்திதானே கிடைக்கும்?!

      நீக்கு
    2. இல்லை ஸ்ரீராம், சின்ன சின்னதாக நீட்டமாக விழும். நாம இப்ப கூட பட்சணங்கள் பொரிக்கும் கரண்டி வீட்டில் கொஞ்சம் பெரிசா ஒட்டையோடு இருக்குமே அதில் கூட செய்யலாம். மாவு பிசையும் முறையில் - பதம் - அது நன்றாக வரும் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  7. சமீபத்தில் காரச்சேவு சில மாதங்களுக்கு முன் உறவினர்களுக்காகச் செய்தேன். கரண்டி இல்லையே....அப்ப முழுவதும் பிழியாமல் கொஞ்சம் பெரிய ஓட்டை உள்ள (மனோஹரம்) செய்யும் அச்சில் போட்டு கொஞ்சமாக அழுத்தம் கொடுத்து சின்ன சின்னதாக வரும்படி பிழிந்தேன். உறவினர்களுக்கு ரொம்பப் பிடித்தது. என் தங்கை வீட்டில் ஹை நம்ம ஊரு தின்னவேலி சேவு என்று சொல்லிச் சாப்பிட்டாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. சென்னையிலிருந்து திருநெல்வேலி/நாகர்கோவில் அலல்து இங்கிருந்து அங்கு போறப்ப ரயிலில் கோவில்பட்டி, சாத்தூர் பகுதிகளில் விப்பாங்க. அப்படி முன்ன வாங்கியதுண்டு. ஆனால் இப்பலாம் வாங்குவதில்லை.

    தெனாலி போன்று எண்ணை பயம்....மாவு பயம், உப்பு பயம்....சுத்தம் பயம் என்று!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....

    காரா சேவு செய்முறை நன்று. பூண்டு சேர்த்து செய்வது எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை.... ஆனாலும் பூண்டு சேர்ப்பது உடல்நலனுக்கு நல்லது என்பதால் சேர்த்துக் கொள்ளலாம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்...  பூண்டு நல்ல ஆன்ட்டி ஆக்சிடன்ட்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!