24.1.26

நம்பிள்ளை வரதாச்சார்யார் & நான் படிச்ச கதை

 

 நாலாயிர திவ்யப் பிரபந்தம் வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

முன்னுரை பகுதி 4

 நாம் நாலாயிர திவ்யப்பிரபந்தங்களில் திருவாய்மொழிக்கு விரிவுரை வந்த கதையைப் பார்த்துக்கொண்டுவருகிறோம். 

நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட நாலாயிர திவ்யப்பிரபந்தங்களில் திருவாய்மொழிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. சாம வேதத்தை அடியொற்றியது என்பர். இதனுடைய பொருள் அல்லது திருவாய்மொழியைப்பற்றிய விளக்கவுரைகளை பகவத் விஷயம்என்றே கூறுவர். திருவாய்மொழியைக் கற்றுத் தருவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் சம்ப்ரதாயம் உண்டு. எல்லோருக்கும் கற்றுத் தந்துவிடமாட்டார்கள். அதற்கு நியமங்கள் உண்டு. அதாவது ஒரு ஆச்சார்யாரைக் கொண்டிருக்கவேண்டும் என்பது போன்று. 

இராமானுஜர் காலத்திற்குப் பிறகு வைணவ சம்பிரதாயத்தின் தலைமையை கூரத்தாழ்வரின் திருக்குமாரரான பராசர பட்டர் ஏற்றார். இராமானுஜரே பராசர பட்டரை நியமித்தார். (பொதுவாக நூல்களில் பட்டர் என்றே குறிப்பிடுவர். ஆனால் நான் புரிதலுக்குச் சுலபமாக இருக்கும் என்று நம்புவதால் முழுப் பெயரையும் ஒவ்வொரு முறையும் குறிப்பிடுகிறேன்)  இராமானுஜரின் விருப்பத்தின் பேரில், மேல்நாட்டில் (கர்நாடகாவில் இருக்கும் திருநாராயணபுரத்தை, அதாவது மேல்கோட்டையை மேல்நாடு என்று அக்காலத்தைய இலக்கியங்கள் கூறின) வாழ்ந்து வந்த மாதவாச்சார் என்ற அத்வைத வேதாந்தியை, வாதத்தில் வென்று, வைணவ சம்ப்ரதாயத்துக்குத் திருப்பினார். மாதவாச்சார் திவ்யப் பிரபந்தங்களைக் கற்றுக்கொண்டு, தன்னுடைய சொத்தில் பாதியை தன்னுடைய இரு மனைவிகளுக்கும் கொடுத்துவிட்டு, சன்னியாச தர்மத்தை ஏற்றுக்கொண்டு, திருவரங்கத்துக்கு வந்து பராசர பட்டரின் முதன்மைச் சீடரானார். சன்னியாசிகளை ஜீயர் என்று அழைப்பது மரபு. தனக்கு உகந்த சீடர் என்பதால், நம் ஜீயர் என்றே மாதவாச்சாரை பராசர பட்டர் அழைப்பர். அதனால் அவருடைய பெயரே நஞ்சீயர் என்று ஆகிவிட்டது.  பராசர பட்டர், நஞ்சீயருக்கு திருவாய்மொழி பாசுரங்களின் முழுமையான அர்த்த விசேஷங்களைக் கற்றுக்கொடுத்தார். இது தவிர மற்ற பிரபந்தங்களின் அர்த்தங்களையும் முழுமையாகச் சொல்லிக்கொடுத்தார். நஞ்சீயர் தொடர்ந்து பராசர பட்டரின் திருவாய்மொழி காலக்ஷேபங்களையும் கேட்டுவந்தார். பராசர பட்டரின் விருப்பத்திற்கிணங்க திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்றொரு உரை எழுதினார். உரை எழுதினார் என்பதை பட்டோலைப் படுத்தினார் என்று குறிப்பர். (அதாவது First Script).

 படி என்றால் என்ன என்பதை முன்னமே எழுதியிருக்கிறேன். 

ஒரு நூலுக்கு இப்படி ஏடுகளின் அளவீட்டுப் படியா பெயர் வைப்பார்கள் என்ற சந்தேகம் வரும். அகநானூறு, புறநானூறு என்று பாடல்களின் அளவீட்டிலும் நூல்கள் உள்ளன. நான்கு அடிகளைக் கொண்டதினால் நாலடியார் என்றும் பெயர் உண்டு. வெண்பா, குறள் வெண்பா, விருத்தம் போன்ற தமிழ் யாப்பிலக்கணத்திலுள்ள பாடல் வகையினாலும் ஒரு நூல் குறிப்பிடப்படுவதுண்டு. யாப்பெருங்கலக்காரிகை என்ற நூல், நூலின் பெயரை கிரந்தம் (படி) என்னும் அளவீட்டால் சொல்லுவர் என்று வரையறைக்கிறது. 

இந்நூல் எவ்வளவைத்தோ?’ எனின், ஒத்து வகையால் மூன்றும், காரிகை வகையால் நாற்பத்து நான்கும், கிரந்த வகையால் தொண்ணூறு கிரந்தமும்  இருபத்தெட்டெழுத்தும் எனக்கொள்க. அவற்றுள், ஒரு கிரந்தமாவது, ஒற்றொழித்து உயிரும் உயிர் மெய்யுமாகிய முப்பதிரண்டெழுத்தும் எனக்கொள்க,” என்பது யாப்பருங்கலக் காரிகைப் பாயிர உரை. 

திருவரங்கத்தின் அக்கரையில் இருந்த (காவிரிக்கு அந்தப் பக்கம்) நம்பூர் என்ற கிராமத்திலிருந்த வரதாச்சார்யார் (வரதராஜன்) என்பவர் தமிழில் நல்ல புலமை பெற்றவர். இவர் பராசரபட்டர் காலத்திலும் காலக்ஷேபம் கேட்டிருக்கிறார். பிறகு நஞ்சீயர் காலத்திலும் திருவாய்மொழி விளக்கவுரைகள் பல தடவைகள் கேட்டிருக்கிறார். நஞ்சீயர், தான் பட்டோலைப் படுத்தியதை அழகாக யாரேனும் ஏடுபடுத்தித் தருவார் உண்டோ என்று ஒரு முறை கேட்டு, வரதாச்சார்யாரிடம் தன்னுடைய ஒன்பதினாயிரத்தைக் கொடுத்து ஏடுபடுத்தித் தரச் சொன்னார். தன்னுடைய தமிழ்ப்புலமையால் இன்னும் சிறிது மெருகேற்றி அதனை நஞ்சீயரிடம் அளித்தார் வரதாச்சார்யார். அதனால் மகிழ்வுற்ற நஞ்சீயர், நம்முடைய பிள்ளையோ இவன் என்ற பொருளில், நம்பிள்ளை என்று அவரை அழைக்க ஆரம்பித்தார். அன்றிலிருந்து நம்பூர் வரதராஜர், நம்பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.  நஞ்சீயர், திருவாய்மொழிக்கு நூறு தடவை பொருள் விளக்கம் (காலக்ஷேபம்) செய்தார். இது அசாதாரண விஷயம். 95 வயது வரை வாழ்ந்தார் நஞ்சீயர். 

நஞ்சீயருக்குப் பிறகு, நம்பிள்ளை, வைணவ ஆச்சார்யராகப் பரிமளித்தார். (இங்கு ஆச்சார்யார் என்பதற்குப் பொருள், நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை விரிவாகப் பொருள் சொல்லி உபந்நியாசம் நடத்தி அதனைப் பரவலாக்குதல்). திருவரங்கம் கோயிலில் சந்தன மண்டபத்துக்குப் பக்கத்தில், அரங்கநாதர் திருவடிவாரத்தில் தினமும் காலக்ஷேபம் நடத்தினார். அவரது விரிவுரையைக் கேட்பதற்கு ஏராளமான மக்கள் தினமும் கூடினர். (அவரது காலத்தில் அவர் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கினார். அவரது பேருரையைக் கேட்பதற்கு தினமும் பெரும் கூட்டம் கூடுமாம், திருவரங்கம் கோயிலில்)

திருவரங்கம் கோயிலின் அமைப்பு, இணையம்

இன்றும் நம்பிள்ளை அமர்ந்து காலக்ஷேபம்செய்த இடம் பித்தளைத் தகட்டினால் காப்பிடப்பட்டு இருக்கிறது. கோயிலுக்கு வரும் ஸ்ரீவைணவர்கள், முதலில் இந்த இடத்தை நோக்கிச் சேவித்துவிட்டு பின்புதான் அரங்கநாதரைச் சேவிக்கச் செல்வார்கள்.

பித்தளைப் பகுதி, நம்பிள்ளை காலக்ஷேபம் செய்த இடம்

 தொடர்வோம்...

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் படிச்ச கதை - JKC

விநோத ரச மஞ்சரி

மகா பண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது

அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள் இயற்றிய 

விநோதரச  மஞ்சரியில் இருந்து ஒரு கதை.

கதை tamil digital library யில் இருந்து எடுக்கப்பட்டது.

வீராசாமி செட்டியார்

பதிப்பாளர்

M. R. அப்பாதுரைப் பிள்ளை : சென்னை

பதிப்பு ஆண்டு 1953

முகவுரை

பின்வரும் கதையின் நடை வித்தியாசமானது. முற்றுப்பெறாமல் நீளும் வாக்கியங்கள், ஒவ்வொரு வாக்கியத்தில் ஒரு உவமை, சமஸ்க்ரித வார்த்தைகள் கலந்த தமிழ், என்று பலவகையிலும் தற்போதைய தமிழ் கதை வடிவில் இருந்து மாறு பட்டதாக தோன்றிமையால் ‘நான் படிச்ச கதை’ யில் ஒன்றாகிறது.

கதையின் ஆசிரியர் வீராசாமி செட்டியார் ஒரு அஷ்டாவதானி. அஷ்டாவதானம் என்பது ஒரே சமயத்தில் எட்டு விதமான கேள்விகளுக்கு அல்லது புதிர்களுக்கு தீர்வு காண்பது. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு அஷ்டாவதானியின் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கணிதத்தில் ஒரு magic square, ஒரு வெண்பா இயற்றுதல், பொது அறிவு கேள்விகளுக்கு பதில் என்று எட்டு வகுப்புகளை வகைப்படுத்தி அதன் பிரகாரம் அரங்கம் அமையும் என்று விளக்கம் கூறப்பட்டது. அரங்கம் சீராக சென்று கொண்டிருந்த வேளை. எங்கள் தமிழ் ஆசிரியருக்கு அஷ்டாவதானியை மடக்க வேண்டும் என்ற ஒரு இறுமாப்பு. அஷ்டாவதானியைப் பார்த்து ‘ஆணுக்கு அணி’ என்று முடியும் வெண்பா ஒன்றை இயற்றச் சொன்னார். நிகழ்ச்சி முடியும் போது அஷ்டாவதானி, “செய்யுள் இயற்ற முடியவில்லை, ‘ ஆணுக்கு அணி’ என்ன என்பதை வரைமுறை செய்ய முடியவில்லை” என்று ஒத்துக்கொண்டார். அப்படி ஏதும் கூற முடியுமா எண்றதற்கு தமிழாசிரியர் ‘மீசையே ஆணுக்கு அணி’ என்று கூற ஒரு பட்டிமன்றமே உருவாயிற்று.

கதை என்பதை விட வைணவ சரித்திரத்தின் ஒரு பங்கு வகிக்கும் சான்று என இக்கதையை கூறலாம். நாதமுனிகள் பேரன் யமுனாசிரியன் என்ற யமுனைத்துறை தலைவர்/யமுனாரியர் குரு பாஷியாசாரியாரிடம் குருகுல வாசம் செய்யும் காலம். அவர் வித்துவ ஜன கோலாகலன் என்ற பண்டிதனை வாதில் வென்று ஸ்ரீ ஆளவந்தார் என்று அரசனாய் ஆனார் என்பதை இப்பகுதியில் காணலாம். இதன் இரண்டாவது பகுதியில் ஸ்ரீ ஆளவந்தார் எப்படி ரங்கநாதனுக்கு அடிமையாகி வைணவத்தை நெறிப்படுத்தினார் என்பதை காணலாம்.

https://www.facebook.com/watch/?v=728153860188988

கதை இரண்டு பகுதிகளாக இரு வாரம் வரும்.

6.1 மகா பண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது

பூமிதேவியின் முகதிலகம் போன்ற (நீராரும் கடலுடுத்த நிலமங்கைக்கு …..) செந்தமிழ்ப் பாண்டிநாட்டின் ராஜதானியாகிய மதுரைமாநகரத்தில் எழுநூறு வருடத்திற்கு முன்பு அரசாண்ட பாண்டியகுலத்தரசன் ஒருவனுடைய சம்ஸ்தானத்தில் வித்துவஜன கோலாகலன் என்று எண்டிசையிலும் பிரசித்தமாகப் பெயர் பெற்ற சம்ஸ்கிருத வித்துவான் ஒருவனிருந்தான். அவன் தர்க்கம், வியாகரணம், மீமாஞ்சை, தர்மசாஸ்திரமென்கிற நான்கிலும் பூரண பாண்டித்தியமுளவன். மற்ற வித்துவஜனர் யாவரும் அவனைக் காணுமிடத்திற் கருடனைக் கண்ட பாம்பு போலவும், யமனைக் கண்ட உயிர் போலவும் நடுங்குவார்கள். அவன் அத்தகைய வித்தியா சாமர்த்தியமுடையவனாதலால், பாண்டியன் அவனைச் சன்மானித்துத் தன்னருகில் அதிக கௌரவமாக வைத்துச் சம்ரட்சணை செய்து வந்தான். அவ்வித்துவான் தனக்குண்டான வித்தியா கர்வத்தினாலும் 'கொண்டவன் பலமிருந்தாற் குப்பையேறிச் சண்டை செய்யலாம்' என்பதற்கிசைய, அரசன் தன்மேல் வைத்த தயையினாலும் ஒருவரையும் மதிக்கிறதேயில்லை. பச்சோந்தியைக் கண்டு பயந்து மயில் தன் கண்ணை அதனிடத்திற் கொண்டு கொடுப்பது போலப் பலதேசங்களிலும் இருக்கின்ற கவிஜனர்களெல்லாம் அவனுக்கு அஞ்சி வருஷாந்தரம் கப்பங்கொடுத்து வந்தார்கள். கையில் ஏடும் எழுத்தாணியும் எடுத்தவர்கள் இடத்திலெல்லாம் அவன் கப்பம் வாங்கி வருகையில், ஸ்ரீ வைஷ்ணவ சமயாசாரியர்களுக்குள் மகிமை தங்கிய யமுனைத்துறைவர் என்றும் யாமுனாரியர் என்றும் ஸ்ரீ ஆளவந்தார் என்றும் திருநாமமுடைய அவதார புருஷரொருவர், ஏறக்குறையப் பத்துப் பன்னிரண்டு வயதுள்ள சிறுபிள்ளையாய்ப் பாஷியாசாரியார் என்னும் உபாத்தியாயருடைய பள்ளிக்கூடத்தில் வாசித்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாட்காலையில் ஏழெட்டு நாழிகைக்கு அப்பள்ளிக்கூடத்தில் இப்பிள்ளையைக் காவலாக வைத்துவிட்டு, மற்றப்பிள்ளைகளும் உபாத்தியாயரும் போஜனத்திற்குப் போயிருந்தார்கள். அத்தருணத்தில் அந்த உபாத்தியாயர் நாலைந்து வருடத்து வரிகொடுக்கவில்லை என்று அதைக்கேட்டு வாங்கிவர வித்துவஜன கோலாகலன் அனுப்பிய தண்டற்காரன் வந்து, 'உபாத்தியாயர் எங்கே போனார்?' என்று கேட்க, காவலாயிருந்த யமுனைத்துறைவர், எங்கள் உபாத்தியாயரைத் தேடுகிற விதம் என்ன?' என்று கேட்டார். அச்சேவகன், 'வித்துவஜன கோலாகலர்' என்னும் எங்கள் வித்துவ சிரோமணி உங்களுபாத்தியாயரிடத்தில் கப்பம் வாங்கிவரச் சொன்னார். அது நிமித்தம் அவரைத் தேடுகிறேன்,', யாமுனாரியர், 'வரி வாங்குவது ஏதுக்காக?' என்ன, அவன், எங்கள் வித்துவான் சகல பண்டிதர்களுக்கும் சிரேஷ்டராகையால், அவருக்கு ஏடுமெழுத்தாணியும் பிடிக்கிறவர்கள் எல்லாம் வரிகொடுக்கிறது வழக்கந்தான்' என்றான்.

https://srirangapankajam.net/archives-alavandar

அதைக்கேட்ட யமுனைத்துறைவர், 'இதென்ன வழக்கம்! நியாயவிநோதமாயிருக்கின்றதே! பிடித்தவருக்கெல்லாம் பெண்டுபோல, உலகாள்பவர்களுக்கும் வரிகொடுக்கிறது, இவனுக்கும் வரி கொடுக்கிறதா? நன்றாயிருக்கிறது!' என்று அதிசயித்து, 'வரி கொடுக்கிறதில்லை எனப் போய்ச் சொல்' என்றார். அச்சமயத்தில் உபாத்தியாயர் வந்து, அதை அறிந்து 'சிம்ம சொப்பனங் கண்ட யானையைப் போலக் கைகால் விலவிலக்கக் 'குடிமுழுகிப் போயிற்றே! சுபாவத்திலேயே அவன் கொடியவன்; அப்படியிருக்க, இதைக்கேட்டால் அவன் சும்மா விடுவானோ? அந்த யமகண்டனை ஆர் வெல்லுகிறது!' என்று பயந்தார். யாமுனாசிரியர், 'தேவரீர் அதைப் பற்றிக் கண்கலக்கங்கொள்ள வேண்டுவதில்லை. வெந்நீரில் வீடு வேகுமா? இருப்புத்தூணைச் செல்லரிக்குமா? அப்படியே வருமானால், நீவிரொன்றும் சிந்தியாமல் அடியேனை ஏவினால், நான் போய் உமது கடாக்ஷத்தினால் ஜயிக்கிறேன்!' என்று விண்ணப்பம் செய்தார். இவர் எத்தனை விதத்திற் சொன்னாலும், அவைகளை உபாத்தியாயர், 'கண்ணைப் பிடுங்கி முன்னே எறிந்தும் கண்கட்டு வித்தை' என்பார் போல, நம்பவில்லை.

இப்படி வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் போய் இங்கே நிகழ்ந்தனவெல்லாம் சொல்ல, அவ்வித்துவான், 'கொட்டினால் தேளும் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியுமா?' என்று கோபித்துக்கொண்டு, அந்தச் செய்தியை அரசனுக்கறிவித்து, அவனுடைய அனுமதிப்படி வாதுக்கு வரச்சொன்னான். அதுகேட்டு, உபாத்தியாயர் மனங்கலங்கி, 'ஐயையோ! யாமுனாரியா, நீ என் தலைமேலே கல்லைப் போட்டாயே! இனி நான் எப்படித் தலை எடுப்பது?' என்று துக்கித்தார்.

யமுனைத் துறைவர், அவருக்கு நிர்ப்பயமாகும்படி தைரியஞ்சொல்லிச் சேவகனைப் பார்த்து, 'வாது செய்கிறதற்கு உங்கள் வித்துவானை இங்கே வரச்சொல். அல்லவென்று நம்மை அழைப்பிக்கிறதானால், மரியாதைப்படி நடந்துகொள்ளச் சொல்,' என்றார். உடனே சப்பரம் சாமரம் முதலிய பரிவட்டணைகளோடு பல்லக்குவர, அதன்மேலேறிச் சென்று மதுரையில் ராஜவீதியிற் பிரவேசிக்கும்போது, உப்பரிகைமேல் உலாவிக்கொண்டிருந்த பாண்டியராஜன், மிகவும் ஆச்சரியங்கொண்டு, கைகொட்டிச் சிரித்தான். அங்கிருந்த இராணியானவள், 'மகாபிரபு, நீர் நகைக்கின்ற காரணமென்ன?' என்றாள். மகாராஜன், 'பெண்ணே, இதோ பார் வீதியிற் பல்லக்கில் வருகிற இந்தக் குழந்தை நம் வித்துவஜன கோலாகலருடனே வாது செய்ய வருகிறதாம்,' என்றான். ராஜபத்தினி அக்குழந்தையின் தேஜஸை நன்றாய் உற்றுப் பார்த்து, அதிக மகிழ்ச்சி கூர்ந்து,'இவர் வாது செய்வதன்றி நம் வித்துவானையும் அவருக்கு மேலானவர்களையும் ஜயிப்பதும் அருமையல்ல,' என்றாள். அரசனுக்கு அந்தச்சொல், 'புண்ணிலே கோலிட்டது போல' வருத்தத்தை விளைக்க, அவன் 'போ போ! நீயென்ன பேதையாயிருக்கிறாய்! நம் வித்துவானுக்கு மேலானவர்களும் உண்டென்று சொல்வது, 'பெட்டைக்குதிரைக்கு இரட்டைக்கொம்பு முளைத்தது,' என்பது போலிருக்கிறது! இச்சிறு பிள்ளையும் அவரை வெல்லுமா? காலில்லாத முடவனுங் கடலைத் தாண்டுவானா? மண்பூனையும் எலியைப் பிடிக்குமா? இது சொப்பனந்தான்,' என்றான். ராஜமஹிஷி, 'வித்துவான் தோற்பது நிச்சயமே! இது இவர் முகக்குறியால் எனக்கு உள்ளங்கைப் பொருள்போல விளக்குகின்றது; சந்தேகமில்லை,' என்றாள். இவ்வாறு இருவரும் சம்பாஷிக்கையில் அரசன், 'நீ இந்தப் பிள்ளையை எவ்வளவு சிறப்பித்துச் சொன்னாலும் நான் நம்பமாட்டேன்! 'விரல் உரலானால், உரல் எப்படியாக மாட்டாது!' நம் வித்துவானே ஜயிப்பார். இவர் ஆரம்பத்திலேயே தோற்றால் நீ என்ன செய்வாய்?' என இராணி, 'மெய்யாக இவர் தோற்றாரானால், நாம் உம் தாசிக்குத் தாதியாகி, அவளிட்ட வேலை செய்வேன்,' என்றாள். வேந்தன், 'பைத்தியக்காரி! 'மண் குதிரையை நம்பி ஆற்றிலிறங்குவார் போல' நீ யோசியாமற் பேசுகிறாய்! உன்சொற்படியே இவர் ஜயித்தால், நான் இவருக்கு எனது இராச்சியத்திற் பாதி பகிர்ந்து கொடுப்பேன்,' என்றான்.

பின்பு யமுனைத்துறைவர் அவ்வரசன் சமூகத்தில் வந்தார். அப்போது அங்கு வந்த வித்துவஜன கோலாகலன், அவர் வடிவைப் பார்த்து வயதைக் குறித்துக் குலுங்க நகைத்து, 'நெடிய மகா மேருவுடனே அற்பமாகிய ஒரு திரணமானது எதிர்ப்பது போல, சுண்டு விரலத்தனை சிறு பயல் நம்முடனே வாது செய்ய வந்தானே!' என்று அலட்சியம் பண்ணி மிகவும் கர்வத்தோடே அவரை நோக்கி, 'ஓய், சிறுபிள்ளாய்! நீ ஹரிச்சுவடி வாசித்தாயா? உனக்கு எழுத்துக் கூட்டத் தெரியுமா? உன் பெயரைப் பிழையில்லாமலெழுதுவாயா? ஒரு பூனைக்குட்டியானது வேங்கைப்புலியை வெல்ல வருவது போலக் கவிச்சிங்கமாகிய நம்முடன் வாதுக்கு வந்தவன் நீதானா?' என்றான்.

யாமுனாரியர், 'இவன் ஆரம்ப சூரத்துவமாய்ப் பேசுகிறான்,' என்று புன்னகை புரிந்து, 'நீர் பெரியவராயும் நாம் சிறுபிள்ளையாயுமிருப்பதைப் பற்றி நம்மை அவமதிக்கிறீர். யானை எத்தனை பெரிது! அதைக் கண்டவுடனே உக்கிரங்கொண்டு விசையாய் எழும்பிப் பாய்ந்து அதன் மஸ்தகத்தைப் பிளக்கின்ற சிங்கக்குட்டி எத்தனை சிறிது! மலை பிரமாண்டமானதாயிருந்தும், அதை ஒரு விரலளவான சிற்றுளி சக்கை சக்கையாகப் பெயர்த்தெறியவில்லையா? அறுகம்புல் நுனியில் தங்கி நிற்கின்ற தினையளவாகிய பனித்துளி, பெரிய பனையளவையும் தனக்குள் அடக்கிக் காட்டவில்லையா? ஒரு பயறளவாகிய நெருப்புப் பொறியுமல்லவோ, ஆகாசமளாவிய வைக்கோற் போரைச் சுட்டெரிக்கின்றது! சிறிய மீன் சினையிலும் அதிநுட்பமாகிய வித்திலிருந்து வெகுதூர மட்டும் கிளைத்து நன்றாய்த் தழைத்து ஓங்கி மேலெழுந்து வளர்ந்து பூமியின்கீழ் இரண்டு மூன்று புருஷபாகம் வேர் வீழ்த்து அடர விழுதுவிட்டு மட்டற்ற யானை சேனைகளோடு அரசர்களுக்கு இருக்க நிழல் கொடுக்கின்ற ஆலவிருக்ஷம் உற்பத்தியாகின்றதே! பெருந்தாழி நிறையப் பூரிக்கப்பட்ட பாலைத் துளி மோர்ப்பிரையானது தயிராய்ப் பரிணமிக்கப் பண்ணுகின்றதே! உலகமெங்கும் வியாபிக்கின்ற சூரியனை ஒரு கைக்குடையுமல்லவோ மறைக்கின்றது! இருபத்தொரு நிலைக் கோபுரம் போன்ற உயர்ந்த தேரை நடத்துவது இறையத்தனை அச்சாணியல்லவா? அன்றியும், அங்குஷ்ட பிரமாண தேகத்தையுடைய அகஸ்திய முனிவர், அண்டத்தை முட்டிய விந்திய பர்வதத்தை அடக்கி, மகாசமுத்திரத்தையும் உட்கொள்ளவில்லையா? இவைகளை எல்லாம் ஆலோசியாமல், இளையரென்றும் முதியரென்றும் விவகரித்துக்கொண்டு வீண் காலம் போக்குவானேன்? எடுத்த காரியத்தை நடத்தத் துணிவதே யுக்தம்,' என்றார்.

வித்துவான் அப்பொழுதும் இறுமாப்படங்காமல், அவரைக் கிள்ளுக்கீரையாக நினைத்து, முட்டைப் பணியாரம் போலக் குதித்தெழும்பித் தன் அறிவின்மையால் ஆழமறியாமல், 'இவனுக்கும் சாஸ்திரத்திற்கும் எவ்வளவு தூரம்! 'கிணற்றுத்தவளைக்கு நாட்டு வளப்பம் தெரியுமா?' நாம் இது வியாஜமாக வேறெதையாவது பேசி அரைக் கணத்தில் விரட்டித் துரத்தி விடலாம்!' என்று அவருடனே தர்க்கம் முதலிய சாஸ்திரவிஷயத்தைப் பற்றிச் சிலநேரம் சம்வாதித்து, அதனால் அசைக்கக் கூடாமை கண்டு அவரை நோக்கி, 'சாஸ்திர வாதம் செய்யத்தொடங்கினால், வெகுநாட் செல்லும்; நீரும் சிறுபிள்ளை; 'குருவியின் தலைமேலே பனங்காயை வைப்பது போல' உமக்கு அதிக பிரயாசத்தைத் தர நமக்குச் சம்மதியில்லை; ஆகையால், அது நிற்க; 'மற்றெந்த விஷயத்தையாவது நீரே பேசும்; பார்ப்போம்! என்று கபடமாகச் சொன்னான்.

யமுனைத்துறைவர், 'ஏது! இவன் நம்மிடத்திற் பரிவுள்ளவன் போலப் பேசுகிறானே! இது உண்மையா? 'ஆடு நனைகிறதென்று ஓநாய் குந்தியழுமா?' இது, ஜாலமேயல்லாமல் வேறன்று' என்று நினைத்துக்கொண்டு, அவனை, 'நீர் பார்க்கிறதென்பதென்ன? உமது அனுமதிப்படியே செய்வோம்; அதிகமாய்ப் பேசவேண்டுவதில்லை. நாம் 'ஆம்' என்கிற மூன்று கேள்வியை மாத்திரம், 'அல்ல' என்று நீர் மறுப்பீரானால், நம்மை ஜயித்ததாக ஒப்புக்கொள்ளுகிறோம், உமக்குச் சம்மதம்  தானா?' என்றார். அதற்கு அவனும் அரசனும் 'சரிதான்' என்று சம்மதித்து, உடன்படிக்கை செய்தார்கள்.

முதற்கேள்வி

சிறு குழந்தையாகிய யாமுனாரியர் அவ்வித்துவானையே குறித்து, 'ஐயா, உம் தாய் புத்திரவதி என்கிறோம். நீர் உம்முடைய வாக்குவல்லமையால் அவள் புத்திரவதி அல்லளென்று மறுத்துவிடும், பார்ப்போம்!' என்று கேட்டார்.

அது கேட்டு வித்துவான் நெடுநேரமாகப் பலவிதத்திலும் ஆராய்ந்து, மறுக்கக் கூடாமையால், 'என்னைப் பெற்ற தாய் மலடிதான்!' என்று வீண் குதர்க்கம் செய்வேனானால், கேட்பவர் பார்ப்பவர் அனைவரும், 'என்னகாணும்! நீ அவள் கர்ப்பத்திலிருந்து கொழுக்கட்டை போலப் பிறந்து குட்டிச் சுவர் போல நட்ட நடுவிலிருந்து கொண்டு வாய் கூசாமல் அவளை மலடியென்று பிரத்தியட்ச விரோதமாக விதண்டாவாதம் செய்கிறாயே? என்பார்களே! அதற்கு என்ன உத்தரம் சொல்லுகிறது? இதேது! 'முதற்கோணல் முற்றுங் கோணலாய்' முடிவது போலக் காண்கிறதே! இப்படி இறங்குந் துறையிலேயே நீச்சலாயிருந்தால், எதிர்கரை ஏறுவதெப்படி?' என்று மயங்கினான்.

இரண்டாவது கேள்வி

யமுனைத்துறைவர் வித்துவானைப் பார்த்துப் பாண்டியனைக் குறித்து, 'இந்த அரசர் தர்மவான் என்கிறோம், எதோ! நீர் மறுக்கக் கூடுமானால், மறுக்கலாம்,' என்றார்.

வித்துஜன கோலாகலன் தன் கருத்தினாற் கூடியவரையில் எட்டிப்பார்த்தும் எட்டக் கூடாமற் கடினமாயிருந்ததனால், அவன், 'ராஜா தர்மவானல்லன்,' என்போமானால், அரசனே நம்மைப் பகைத்து, 'அடா நன்றிகெட்ட பாதகா,  என்னுடைய சொத்தை உன் இஷ்டப்படி கைகொண்ட மட்டும் கொள்ளைகொண்டு, ஆயுட்காலமெல்லாம் அனுபவித்து, இப்பொழுது என்னைப் பாவியென்று சொல்லி எனக்கே துரோகம் செய்கிறையா!' என்று உடைவாளை உருவி ஒரே வீச்சாக வீசிவிடுவானே! என்ன செய்வது!' என்று தயங்கினான்.

மூன்றாவது கேள்வி

யமுனைத்துறைவர், 'இந்த ராஜபத்தினி பதிவிரதை' என்றார்.

இது வித்துவான் செவியில் நுழைந்தவுடனே அடிவயிற்றில் இடிவிழுந்தது போல அவனுக்கு யாதொன்றும் தோன்றாமையால், அவன், 'இவரை நீறு பூத்த நெருப்பென்று நினையாமல் எளிதாகச் சிறுபையலென்று அவமதித்தோமே; நமக்கென்ன! கிரகசாரந்தான் போதாதோ! இத்தனை காலமாய் மகா வித்துவான்கள் அனைவரையும் அவர்கள் தலைக்குப் போட்டால் நாம் காலுக்கும், நாம் காலுக்குப் போட்டால் தலைக்கும் போட்டு ரசாபாசப்படுத்திப் பட்டி மிரட்டு மிரட்டிச் சயித்து வந்தோமே! இப்பொழுது ஒரு குழந்தையின் கேள்விக்கு உத்தரம் சொல்ல வகை தெரியாமல், கற்றறி மூடனாய் விட்டோமே! இனி நமக்கென்ன பெருமை! பண்டிதனென்னும் பட்டமும் பறந்துபோம்! முதற்கேள்வி ஒன்றுக்காவது உத்தரம் சொன்னோமா? இல்லையே! ஆயினும் அது ஒருவேளை 'ஆனைக்கும் அடிசறுக்கும்' என்பதாகத் தவறியதென்று நினைக்கவுங்கூடும். ஆதலாற் பெரிதன்று. இரண்டாவதற்காவது சொல்லவேண்டுமே! அதுவும் ஈடேறாமற் போயிற்றே! போனாலும் போகட்டும்! மூன்றாவதற்காவது சொல்லலாமென்றால், ராஜபத்தினி வியபிசாரி என்றல்லவோ சொல்ல வேண்டும்? எவ்விதத்தில் நாவெழுந்து சொல்லுகிறது! சொன்னாற் பக்கத்தார் பல்லை உதிர்க்கார்களா! மேல் அரசனைக் குறித்துப் பிறந்த இரண்டாங் கேள்வியிலும் இம்மூன்றாங் கேள்வியும் பழியும், பாவமும், விரோதமும் விளைக்கத் தக்கதாய் இருக்கின்றதே! இதைக்குறித்து உத்தரஞ்சொல்ல வாயைத் திறக்கவுங்கூடுமோ! இந்த விஷயம் கையுமெய்யுமாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், வெளியிலே சொல்லத்தக்கதல்லவே! அரசன் மனைவி நிர்தோஷியியாயிருக்க அவளைத் தோஷமுடையவள் என்று சும்மா அவள் தலையில் வியபிசாரிப்பட்டம் கட்டலாமா! அது பெண்பாவமல்லவா! 'மண்ணின்மேல் நின்று பெண்ணோரம் சொல்வது' எப்படி? ஒருவர் தலையில் மாணிக்கமிருக்கிறதென்று அவர் தலையை வெட்டலாமா! நிமித்தமாகக் கங்கை கொதித்ததென்றால், நம்புதற்கு இடமுண்டோ! நாம், ஓட மருந்துண்டு உறங்கி விழுந்தாற் போல ஆனோமே! 'தன்வினை தன்னைச்சுடும்,' என்பதாக நம்முடைய மதமே நம்மை அழித்தது! நமக்கு அடக்கமென்பது சற்றுமில்லாமற் கல்வியில் நாமே பெரியமென்று அகங்கரித்துப் பிறரைப் பொருள் செய்யாமல், அரசனது சலுகையிலே அவர்களை அவமானப் படுத்திவந்த அந்தக் கொடுமையல்லவோ இப்படி விளைந்து நமது வாயைக் கட்டியது!' என்று எண்ணாததும் எண்ணி ஏங்கியிருந்தான்.

அதுகண்டு ராஜபத்தினி மனமுருகி, 'நான் செய்த பிரதிக்கினையை முடித்து, என் மூக்கை முன்னுக்குக் கொண்டு வந்தாரே!' என்று பெருமகிழ்ச்சி கூர்ந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக, அக்குழந்தையாகிய யமுனைத் துறைவரைத் தன்னிரு கையாலும் இறுகத் தழுவிக்கொண்டு, 'இவர் என்னை ஆள வந்தாரோ! என்று வியந்தாள். அன்றுமுதல் அவருக்கு ஆளவந்தார் என்ற திருநாமம் வழங்கத் தலைப்பட்டது.

அத்தருணத்தில் ஆனை   போல இருந்த வித்துவஜன கோலாகலன் பூனை போல ஒடுங்கிச் சிவுக்கென்றெழுந்து, 'ஓட்டை நாழிக்குப் பூண் கட்டுவதுபோல' வித்துவஜன கோலாகலன் என்னும் இத்தனை பெரியபெயர் எனக்கேன்? 'அம்மாள் கெட்ட கேட்டுக்கு முக்காடு கூடவா!' என்பது போல, 'என் திறமைக்கு விருதுகளும் வேண்டுமா?' என்று சலிப்புற்றுத் தன் விருதுகளையெல்லாம் வாங்கி அவருக்கு முன்பாக வைத்து, அவரை வணங்கி நின்றான்.

அரசன் இவைகளையெல்லாம் கண்ணாரக் கண்டு, காதாரக் கேட்டுப் பிரமிப்படைந்து, ஆளவந்தாரை விழி களிக்க நோக்கி, 'சுவாமி, தேவரீர் கேட்ட மூன்று கேள்விகளுள் ஒன்றையாவது நம் வித்துவான் மறுக்கச் சத்தியில்லாமல் தோற்றது வாஸ்தவமே! அம்மூன்றுள் ஒன்றேனும் இரண்டேனும் தேவரீரால் மறுக்கக் கூடுமோ?' என, அவர் 'மூன்றும் மறுக்கக்கூடும்,' என்று உத்தரிக்கின்றார்.

முதலாவது, 'உமது தாய் புத்திரவதி' என்றதற்கு மறுப்பு: 'வாழையானது ஒரே குலை ஈனுவது போல, இந்த வித்துவானுடைய தாய் இவரொருவரை மாத்திரம் பெற்றதனால், 'ஒரு பிள்ளையும் பிள்ளையல்ல; ஒரு மரமும் தோப்பல்ல' என்ற பழமொழிப்படியே அவள் வாழை மலடியாதலால், புத்திரவதி யல்லள்,' என்றார்.

இரண்டாவது, 'ராஜா தர்மவான்,' என்றதற்கு மறுப்பு: 'ராஜா ராஷ்டிர கிருதம் பாபம்' என்ற நீதி வாக்கியப்படியே, 'தேசத்தார் செய்த பாவம் அரசனை அடையும்,' என்பதனால், ராஜா தர்மவானல்லன்,' என்றார்.

மூன்றாவது, 'ராஜபத்தினி பதிவிரதை,' என்றதற்கு மறுப்பு உற்பத்தியாற் சந்திரனுக்கும், விளையாட்டாற் கந்தருவனுக்கும், தீபனவிர்த்தியால் அக்கினிக்கும் முன்பே சுவாதந்தரியப்பட்டுப் பின்பு மணஞ்செய்து கொள்பவனுக்கு உரியவளாகின்ற காரணத்தால், நான்கு பதிகளையுடையவளாதலாலும்,

அன்றியுங் கனலி சான்றா யல்லது வதுவை யாற்றற்

தோன்றுமோ? வருண னொவ்வா துதகமோ டளிக்குந் தூய

மன்றலெவ் வாறுமுற்றும்! வானவ ரருளில் லாமல்

துன்றுநீர்ப் புவியில் யார்க்குஞ் சூழ்வினை முடிக்க லாமோ?'

- என்றவாறே, மணஞ்செய்யுங் காலத்தில் அக்கினி, வருணன் முதலிய பஞ்ச தேவர்களுக்கும் அவள் சமர்ப்பிக்கப் படுதலாலும் ஸ்திரீக்குப் பதிவிரதா பங்கம் வருகின்றது.' என்றார்.

இவ்வண்ணமாக ஆளவந்தார் வித்துவஜன கோலாகலனை முன்பு கேட்ட மூன்று கேள்விகளையும் பின்பு தாமே சாஸ்திர சம்மதமாகவும், உலகத்தாருக்கு அங்கீகாரமாகவும் மறுத்துரைக்கக் கேட்டு, பாண்டிய ராஜனானவன், சிறு பாலராகிய இவர் இத்தனை அருமையும் பெருமையுமாகிய கேள்வி உத்தரங்களையெல்லாம் எப்படி உணர்ந்துரைத்தார்! தாமுரைத்தவைகளைத் தாமே மறுக்கவும், மறுத்தவைகளை ஸ்தாபிக்கவும் தக்க பரமசத்தி இவருக்கு எங்கிருந்து உற்பத்தியாயிற்று! மேலும், நம் வித்துவான் தாய்க்கு ஏகபுத்திரரென்பது எவ்விதத்தில் தெரிய வந்தது? அது ஜோதிஷத்தினால் அறியலாமென்றால், அவர் ஜாதகத்தையும் இவர் பார்க்கவில்லையே! ஆதலால், அசாத்தியம்! அசாத்தியம்!, என்று பலமுறையும் நினைத்து, ஆச்சரிய வெள்ளத்தில் மூழ்கி, 'பூர்வம் போஜராஜ சம்ஸ்தானத்திலிருந்து காளி தாசன், தண்டி, பவபூதி முதலாகிய சம்ஸ்கிருத வித்துவான்களும் இந்த மதுரையில் தமிழ்ப்புலமை செலுத்திய தெய்விகம் வாய்ந்த சங்கப்புலவர்களும் இவருக்கு ஒப்பல்லர்! இவர் சரஸ்வதி விக்கிரகமாயும், அவதார புருஷராயும் இருக்கின்றார்!' என்று பரமானந்த மடைந்து, இரகசியத்தில் தன் பத்தினிக்கெதிரே தான் நிர்ணயித்தபடி தன் இராச்சியத்திற் பாதி கொடுத்தான்.

பின்னுரை

மேற்கண்ட கதையில் உவமைகள், உருவகங்கள் ஆகியவை மாறுபட்ட வண்ணத்தில் இருப்பதை காணலாம். உவமைகள் உருவகங்கள் பழமொழிகள் அன்றைய உரைநடையின்  முக்கிய அம்சம். 

Turncoat debate என்பது இதுதான். ஆடிட்டர் ஜோக் ஒன்றும் இதன் அடிப்படையில் உண்டு. பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

வக்கீல்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல கூறுவார்கள். இவற்றை loaded questions என்று கூறுவார்கள். ஆம் அல்லது இல்லை என்று சொல்ல முடியாத கேள்விகள்.

மூன்று கேள்விகளும் அது போல் இல்லாவிட்டாலும் யமுனாரியர் கூறிய விளக்கமான பதில் போன்றே பதில் சொல்ல முடியும். ஆம் அல்லது இல்லை என்று ஒற்றை வார்த்தையால் மட்டும் பதில் சொல்ல முடியாது. 

ஞான சம்பந்தர் சமணரை வாதில் வென்ற கதை பொருத்தம் ஆகிறதா? வைணவத்திற்கு பதில் சைவம்.

தெனாலி ராமன் "திலகாஷ்ட மகிஷ பந்தனம்" என்று ஒரு கட்டை வைத்துக்கொண்டு கிருஷ்ண தேவராயர் சபையில் வாதுக்கு வந்த வித்யா சாகர் என்ற பண்டிதனை விரட்டிய கதை நினைவில் வருகிறதா?

ஒரு சுட்டி சென்று பாருங்கள்.

https://srirangapankajam.net/archives-alavandar/

25 கருத்துகள்:

  1. ஆளவந்தாரின் வரலாற்றையும் இன்னும் பல நிகழ்வுகளையும் படித்திருக்கிறேன். இந்தச் சம்பவத்தை அவர் கூறிய சமஸ்கிருத வாக்கியங்களுடன் எழுதினால் படிப்பதற்கு நன்றாக இருக்காதோ என்று நினைத்து அந்தச் சம்பவத்தை எழுதவில்லை.

    வீராசாமிச் செட்டியார் எவ்வளவு அழகான நடையில் எழுதியிருக்கிறார் என வியக்கிறேன். எழுத்தாளனின் நடை, கதை சொல்லும் பாங்குதான் வாசகனைக் கட்டிப் போடும் என்பது எவ்வளவு உண்மை. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. இன்றும் நம்பிள்ளை அமர்ந்து காலக்ஷேபம்செய்த இடம் பித்தளைத் தகட்டினால் காப்பிடப்பட்டு இருக்கிறது. கோயிலுக்கு வரும் ஸ்ரீவைணவர்கள், முதலில் இந்த இடத்தை நோக்கிச் சேவித்துவிட்டு பின்புதான் அரங்கநாதரைச் சேவிக்கச் செல்வார்கள்.//

    இப்படி அறிந்ததில்லை. அதுவும் முதலில் இந்த இடத்தை நோக்கிவிட்டுச் செல்வது எல்லாம்.

    நெல்லை, நல்ல தகவல்கள் அடங்கிய பதிவு. சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அக்காலத்துக் கதை. அக்காலகட்டத்துக்கு ஏற்றாற் போல மொழி நடையும், உவமைகளும் என்று அம்சமான நடை. இந்த நடையில் பின்னாளில் வந்த எழுத்தாளர்கள் எழுதியதை வாசித்த நினைவு. டக்கென்று எழுத்தாளர்/கள் நினைவுக்குக் கொண்டுவர இயலவில்லை. யோசித்துப் பார்க்கிறேன்.

    கல்கியின் சில கதைகளில் இத்தனை என்றில்லை என்றாலும் இந்த நடையைப் பின்பற்றியதைப் பார்க்கலாம் என்பது என் சிற்றறிவு.

    கதையில், குறிப்பாக ஆளவந்தார் சொல்லும் விடைகளில் கேள்விகள் எழுகின்றனதான். ஆனால் நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சாஸ்திரங்களில் நுழையணுமே என்ற தயக்கத்தில்தான் ஆளவந்தார் சரித்திரத்துக்குள் செல்லவில்லை கீதா ரங்கன்.

      நீக்கு
  4. ஜெ கே அண்ணா பின்னுரையில் சொல்லியிருப்பது அதே தோன்றியது எனக்கும். கதையை வாசித்த போது.

    முட்டைப் பணியாரம் போலக் குதித்தெழும்பித்//

    இதை வாசித்ததும் எனக்குப் புன்சிரிப்பு வந்தது. அப்பவே முட்டைப் பணியாரம் என்றெல்லாம் இருந்திருக்கு பாருங்க என்று!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹப்பா என் ஐடி பிரச்சனை பண்ணியது இப்ப மீண்டும் சரியாகிவிட்டது

      கீதா

      நீக்கு
    2. ​முட்டை பணியாரம் என்பது முட்டை வடிவில் உள்ள பணியாரம். அல்லாது முட்டை சேர்த்த பணியாரம் அல்ல.
      முஸ்லிம்கள் முட்டை சேர்த்த ஜிலேபி போன்று, அச்சப்பம் போன்ற இனிப்பு வகைகள் செய்வார்கள். கிறிஸ்துவர் முட்டை சேர்த்து கேக் உண்டாக்குவார்.

      Jayakumar

      நீக்கு
    3. முட்டைப் பணியாரம் என்பது இனிப்பு சேர்த்து உருண்டையாகச் செய்யப்படும் போண்டா அளவிலான இனிப்பு. இப்போதும் கடைகளில் கிடைக்கும். நீங்க கோழி முட்டையை நினைத்துக் குழப்புக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

      நீக்கு
  5. //இன்றும் நம்பிள்ளை அமர்ந்து காலக்ஷேபம்செய்த இடம் பித்தளைத் தகட்டினால் காப்பிடப்பட்டு இருக்கிறது. கோயிலுக்கு வரும் ஸ்ரீவைணவர்கள், முதலில் இந்த இடத்தை நோக்கிச் சேவித்துவிட்டு பின்புதான் அரங்கநாதரைச் சேவிக்கச் செல்வார்கள்.// ஸ்ரீரங்கத்திலேயே பல வருடங்கள் வசித்தாலும், பலமுறை திருவரங்கம் கோவிலுக்குச் வைணவர்களொடு சென்றிருந்தாலும் இந்த விஷயத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அடுத்த முறை ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்லும் பொழுது பார்க்க வேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவேரிக்கு அந்தப் பக்கம் என்று கூறுவதை விட, காவேரிக்கு வடக்கே, அல்லது தெற்கே என்று குறிப்பிடுவது நல்லது. நீங்கள் சொல்லியிருப்பது காவேரிக்கு தெற்கே என்று நினைக்கிறேன். ஏனென்றால் காவேரிக்கு வடக்கில் இருப்பது ஸ்ரீரங்கம். கொள்ளிடத்தை வட காவேரி என்பார்கள்.

      நீக்கு
    2. நீங்கள் 100 ரூ வரிசைக்குள் நுழையுமுன் அப்பிரதட்சணமாகச் செல்ல நினைத்துச் சென்றால் கியூவின் அருகிலேயே சோழர்களின் கல்வெட்டு இருக்குறது. அதையும் பாருங்கள். உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன், மூலவர் சன்னிதிக்கைப் பின்புறம் நாம் செல்லும் பிரகாரத்துக்கு (அங்கிருந்துதான் விமானம் பார்ப்போம்) உட்புறம் இன்னொரு பிரகாரம் உண்டு. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அத்தகைய பிரகாரம் திருமலையிலும் உண்டு. எனக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது.

      நீக்கு
    3. எனக்கு நீங்கள் சொல்லுவது சரியாகப் புரியலை (திசை). ஆனால் திசையை எழுதாத்தன் காரணம் இதில் படிப்பவர்களுக்கு ஆர்வம் இருக்காது என நினைத்து. நம்பூர் கிராம்மே அழிந்துபட்டது என்கிறார்கள். நம்பிள்ளை, பட்டோலையைத் தலையில் கட்டிக்கொண்டு காவிரியை நீந்தி அக்கரையில் உள்ள தன் கிராமத்துக்குச் சென்றார் எனப் படித்திருக்கிறேன்.

      நீக்கு
  6. உங்கள் கட்டுரை மிகவும் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. அரங்கன் அருள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்.

      நீக்கு
  7. ஆளவந்தாரின் கதையில் குறிப்பிடபட்டிருக்கும் சம்பவம் ஒரு திரைப்படத்தில் வந்திருக்கிறது(ஸக்தி லீலை?) ஆனால் சைவப்பரமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீமஹா பக்த விஜயத்தில் வந்த பல கதைகள் திரைப்படத்தில், குறிப்பா எம் கே தியாகராஜ பாகவதர் படங்களில் வந்திருக்கின்றன.

      நீக்கு
  8. நெல்லையின் பதிவை மேலோட்டமாகப் படிச்சேன். இன்னமும் ஜேகேசி பகிர்ந்திருக்கும் கதையைப் படிக்கலை. பதிவில் நெல்லை இன்னமும் இருக்கும் நம்பிள்ளை காலட்சேபம் செய்த இடம் முதல்முறையாகக் கேள்விப் படுகிறேன். வழக்கம் போல் பதிவை கூடியவரை ரத்தினச்சுருக்கமாகவும் அதே சமயம் முக்கியமானவற்றை விட்டுவிடாமலும் எல்லாவற்றையும் சேர்த்திருக்கார் நெல்லை. பானுமதியின் பயிற்சி போல! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். ரொம்ப நீட்டினா படிக்க நல்லாருக்குமா என்ற சந்தேகம். சில சம்பவங்களை இப்போது நம்ப இயலாது.

      நீக்கு
  9. நேற்றைய பதிவிற்கு நேற்று பதிலளிக்க மறந்து விட்டேன். Better late than never என்பதால் இப்போது கருத்திடுகிறேன்.
    ஜே.கே.ஸி. சாரின் அலுவலகத்தில் ஒரு இரவை கழிக்க நேரிட்ட அனுபவம் படித்த பொழுது, அவருடைய கடமை உணர்ச்சியை பாராட்டத் தோன்றியது. என் கணவர் இப்படி அலுவலக பணிச் சுமை காரணமாக பல நாட்கள் இரவு 11.30க்கும், 12:00 க்கும் வந்தது நினைவுக்கு வந்தது. அவருடைய தங்க்லீஷ் நோ பிராப்லம்.
    ஸ்ரீராம் அப்பாவின் கட்டுரை சிறப்பு.
    அந்த ஓவியத்தில் எனக்கு கிழவனார்தான் தெரிந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஒய்யாரமாகப் படுத்திருக்கும் பெண் தெரிந்தாள். அதற்கு ஓவியக் கண் வேணும். சாதாரணமா தெரியாது என நினைக்கிறேன். ஶ்ரீராமுக்கு இன்று அனுப்பறேன்.

      நீக்கு
  10. இன்னிக்கு என்ன? இதுவரைக்கும் யாருமே வரலை? சனிக்கிழமையானாலும் நிறையப் பேர் வந்திருக்கணுமே! ஸ்ரீராம் இப்போவெல்லாம் தாமதமாய்த் தான் வரார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானுமிப்போ சிறிது நேரத்தில் பயணித்து திங்களுக்கு மேல்தான் வருவேன். ஆந்திரா பார்டர் கோயிலில் ரதோத்ஸவம் பிரபந்த பாராயணம் வீதியுலாக்களில்.

      நீக்கு
  11. விநோத ரசமஞ்சரி கதையையும் மேலோட்டமாய்ப் படிச்சேன். "உமது தாய் புத்திரவதி!" என்பதைப் படிச்சதுமே நினைவில் வந்தது சுஜாதா அவர்கள் எழுதின "கொலையுதிர்காலம்" நாவலிலோ அல்லது "கரையெல்லாம் செண்பகப் பூ" நாவலிலோ இந்தக் கவிதை ஆங்காங்கே இடம் பெற்றது தான் நினைவில் வந்தது. கொலையுதிர் காலம் எனில் குமுதத்தில் வந்ததுனு நினைக்கிறேன். "கரையெல்லாம் செண்பகப் பூ" நிச்சயமாய் விகடன் தான். மனக்கண்ணில் இரு புத்தகங்களும் ஜெயராஜின் படங்களோடு செண்பகப்பூவான வெள்ளியும், கொலையுதிர்காலத்தின் கதாநாயகியும் நினைவில் வருகின்றனர். கூடவே இந்தக்கவிதையும். அதிலும் இந்த உமது தாய் புத்திரவதி கதையில் அடிக்கடி வரும். கொலையுதிர்காலம் சென்னை தூர்தர்ஷன் மெட்ரோ சானலில் தொடராக ஒளிபரப்பப் பட்டது. நன்றாகவே எடுத்திருந்தார்கள். 95/96 களில் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. கல்கியின் இரங்கல் கூட்ட செய்தியை கஷ்டப்பட்டு படித்தால்.. அதை கீழே டைப் செய்திருக்கிறீர்கள்.
    கல்கி விகடனில் தியாக பூமி கதையை தொடராக எழுதிய பொழுதே அதன் ஸ்டில்களை படங்களாக் விகடனில் வெளியிட்டார்களாம். முடிவை வெளியிட்டு விட்டால் படத்திற்கு எதிர்பார்ப்பு குறைந்து விடும், அதன் வசூலை அது பாதிக்கும் என்று கருதிய வாசன், இறுதிப் பகுதியை வெளியிட மாட்டேன் என்று கூரி விட்டாராம். கல்கியோ, "தொடராக எழுதிய கதையின் இறுதிப் பகுதியை வெளியிடுவதுதான் முறை," என்று கூற, அதில்தான் இருவருக்கும் கருத்து வேற்றுமை வந்து பிரிந்தார்கள் என்று என் அப்பா சொல்லியிருக்கிறார்.
    இதே போன்ற பிரச்சனை பாரதிராஜாவுக்கும், கல்கி நிருவனத்திற்கும் வந்தது. ஆனால் இங்கே அப்படியே எதிர்பதம். படத்தின் கிளைமாக்ஸ் தெரிந்து விட்டால் மக்களுக்கு ஆர்வம் குறைந்து விடும் என்று பாரதிராஜா முடிவை எழுதித் தர மறுக்க, கல்கி நிறுவனத்தார் தொடர் கதை என்று எழுதும் பொழுது முடிவை எழுதத்தான் வேண்டும் என்றார்கள். அந்தப் படத்தில் நடித்த நடிகருக்கு சண்டைக் காட்சியில் நடித்தபொழுது விபத்து ஏற்பட்டு, பெரிய பாடிப்பு உண்டானது.

    பதிலளிநீக்கு
  13. நேற்றைய பதிவு சற்று நீளம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!