10.3.26

பெருங்கதை :: அஞ்சலை - பழனி 1/2 -- துரை செல்வராஜூ



அஞ்சலை 1
- துரை செல்வராஜூ -
******




***
  பழனி -

 

துள்ளலுடன் வந்து நின்ற வண்டியில் இருந்து உற்சாகமாக குதித்து இறங்கி மாடுகளை அவிழ்த்து கட்டுத் தறியில் கட்டி விட்டு வைக்கோலை உருவி இரண்டுக்கும் போட்டு விட்டுத் திரும்பிய பழனி -


"யக்கா!... அவ எம் பொண்ணு..க்கா... பேரு அஞ்சலை!.. " என்றார்  பெருமையுடன்..

முரட்டு மீசை... இருந்தாலும் கள்ளங்கபடமற்ற முகம் பழனியின் மனதைப் பறை சாற்றியது...

"அங்கே நிக்கிறது யாரு?... வேலி ஓரமா!.." - என்று கேட்க நினைத்த பெரியம்மா 

"அப்படியா!..." - என்றார் பிரியத்துடன்..

பெரியம்மா இந்த வீட்டுக்கு -  அதாகப்பட்டது தன்னோட தங்கச்சி வீட்டுக்கு வர்றது இது தான் முதல் தடவை.. 

பெரியம்மாவுக்கு தஞ்சாவூர் ல பெரிய வீடு.. திருவையாத்துக்கு பக்கத்து ல  தோப்பு துரவு...

பெரியம்மாவின் தங்கச்சி முப்பது மைல் தள்ளியிருக்கிற இந்தக் கிராமத்துல வீட்டை வாங்கி  - ஆச்சு அதுவும் பத்து வருசம்... 

வீட்டுக்காரருக்கு சர்க்கார் ஆபீஸ்.. ல உத்யோகம்...

அந்த ஊர்ல ரெண்டு வருசம்.. இந்த ஊர்ல மூணு வருசம்.. ன்னு காலம் எல்லாம் போனதுக்கு அப்புறம் யாரோ சொன்னதைக் கேட்டு - இங்க  வந்து இந்த வீட்டைப் பார்த்ததுமே எல்லாருக்கும் பிடித்து விட்டது..


அஞ்சு ஏக்கர் தென்னந் தோப்பு.. அதுக்கு நடுவால தெற்கு பார்த்த வீடு.. அந்தப் பக்கமா வருண மூலையில நல்ல தண்ணிக் கேணி.. கூடவே  தண்ணி இறைக்கிற பம்பு...

எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்... மெடிக்கல் காலேஜ் ரோட்ல இருந்த ரெண்டு  மனைக் கட்டையும் வித்துட்டு -

அப்படி இப்படி ன்னு  இன்னுங் கொஞ்சம் பணத்தைப் புரட்டிப் போட்டு வீட்டைக் கிரயம் செஞ்சாங்க..

இந்த வீட்டை வாங்கினது - பத்து வருசத்துக்கு முன்னால..பத்து வருசத்துக்கு முன்னால..ங்கிறதால வெண்ணெய் வெட்டுற மாதிரி அவ்வளவு சீக்கிரம் வேலை முடிஞ்சது...

இப்போ...ன்னு வெச்சுக்கோங்க வேலி ஓரத்தில கூட நெருங்க முடியாது... 

பெரியம்மா கேட்டார்கள்..

"அது ஏன் பழனி.. உம் பொண்ணு வேலி ஓரமா நிக்கிறா... உள்ளே வர வேண்டியது தானே!... இங்கே வாம்மா அஞ்சலை!..." - என்று கை நீட்டி அழைத்தார்கள்.. 

எளிமையிலும் செம்மை.. என்பது இது தான் என்று அஞ்சலையைப் பார்த்ததுமே யாருக்கும்  புரியும்..

புன்னகையும் வெட்கமும் முகமெல்லாம் பரவிக் கிடக்க மெல்ல நடந்து வந்தாள் - அஞ்சலை..

"வாம்மா.. வா!. ஏன் அங்கேயே நிற்கிறே!.. "

பெரியம்மாவைப் பார்ப்பதும் அந்தப் பக்கம் தகப்பனைப் பார்ப்பதுமாகத் தடுமாறினாள் அந்தச் சிறு பெண்..

"யக்கா.. நாந்தான் சொல்லியிருக்கேன்.. வெளக்கு வெக்கிற நேரத்தில பொட்டப் புள்ள வீட்டை விட்டு அங்கிட்டு இங்கிட்டு  வரப்படாது.. ன்னு.. "

"அதான்.. நீ சொன்னதை எப்படிச் சொல்றது..ந்னு யோசிச்சுக்கிட்டு நிக்கிறாளா!..  அஞ்சலை!..

அப்பா சொல்றது நல்லதுக்குத் தான்.. இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வர்றது ல உனக்கு என்ன பயம்?.. அப்புறம்.. இப்படி வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடந்தா தைரியம் வர்றது எப்படி?.. பொம்பளைப் புள்ளைக்கு தைரியம் தானே முக்கியம்!.. "

-விஸ்தாரமாகப் பேசியவர் அருகில் வந்த அஞ்சலையை ஆதரவாக அணைத்துக் கொண்டார்..

"என்னம்மா படிக்கிறே?... "

"பத்தாம்..ப்பு!... "

"நல்லாப் படி... டைப் அடிக்க கத்துக்க... எனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வேல வாங்கித் தர்றேன்... " 

"அதுக்கெல்லாம் பெரும்படியா பணப் புழக்கம் இருக்கணுமே அக்கா!.. " -  பழனியிடமிருந்து விரக்தியின் வெளிப்பாடு..

"அதெல்லாம் வேணாம் பழனி... சர்க்கார் எவ்வளவோ நல்லது செய்றாங்க... அதெல்லாம் ஒனக்குத் தெரியாதா!.. நீ எதுக்கும் கவலைப் படாதே!... அஞ்சலை படிக்கட்டும்.. அது போதும்!.. " - என்ற பெரியம்மா அஞ்சலையைப் பார்த்து,

"நீ என்னம்மா சொல்றே!.. " - என்றார்கள்..

தலையைக் குனிந்தபடி புன்னகைத்த அஞ்சலை -

"அப்பா என்ன சொல்றாங்களோ அதான்!.. " - என்றாள்..

"பழனி சொல்றதுக்கு  என்ன அர்த்தம்... ன்னா - அவுங்களுக்கு ஏன் சிரமத்தைக் கொடுப்பானேன்.. நடக்குறது நடக்கட்டும்... ங்கறது தான்... என்ன பழனி..  சரி தானே!... "

பதில் சொல்வதில் பழனிக்குத் தடுமாற்றம்... 

அதற்குள் வீட்டுப் பெண்கள் எல்லாரும் கூடி விட , பேச்சும் சிரிப்புமாக கலகலத்தது அந்த இடம்... 

வீட்டினுள்ளிருந்து வந்த ராதிகா, 

"காஃபி குடிக்கிறியா அஞ்சலை!.. " என்றாள்..

"வேணாங்..க்கா!.." - அஞ்சலை சொல்வதற்குள் வார்த்தைகள் பளிச்சிட்டன பெரியம்மாவிடம் இருந்து..

"சாப்பிடுறதுக்கு குடிக்கிறதுக்கு... ன்னு தெரிஞ்சவங்க எதையும் கொடுக்கறப்போ வேணாம்... ன்னு சொல்லக் கூடாது!.. " - என்றபடி திரும்பியவர்,

" அஞ்சலை நம்ம வீட்டுப் பொண்ணு..  காஃபி வேணுமா ன்னு அவ கிட்ட கேக்கணுமா?.. காஃபி எடுத்துட்டு வா ராதிகா!... பழனி உனக்கு?.. " - என்று புருவங்களை உயர்த்தினார்..

"யக்கா.. நான் அப்பவே குடிச்சிட்டேன்.. கள்ளிச் சொட்டு மாதிரி காப்பி.. ரொம்ப ஜோர்!.. கும்மோணம் மடத்துத் தெரு காப்பிய எல்லாம் தூக்கி அடிச்சிடும் நம்ம ஊட்டுக் காப்பி!.. "

காபியின் மகத்துவத்தைப் பழனி  பேசவும் எல்லாரும் சிரித்தார்கள்...

பத்து வருசமா இந்த வீட்டோட நம்பிக்கைக்கு உரிய பணியாளர் பழனி..

வடக்குத் தெருவில் சாதாரண ஓட்டு வீடு.. இருந்தாலும் அந்த வீட்டில் இருந்த நேரத்தை விட இங்கே -  அதாவது இந்த வீட்டில் - பணியாளராகக் கழித்த நேரம் தான் அதிகம்...

மாடு கன்னு பார்த்துக்கிட்டு ரெண்டு வேளையும் பால் கறக்கணும்...  புண்ணாக்கு பருத்திக் கொட்டை .. ன்னு வாங்குறதுக்கு  வாரச் சந்தைக்கு வண்டி கட்டணும்.. எல்லாத்துக்கும் மேல தோப்பு..ல இளநி, தேங்கா, மட்டை, பாளை, கீத்து.. ன்னு எல்லாத்தையும் காபந்து பண்ணிக்கணும்..

வருசத்துக்கு பன்னிரண்டு மூட்டை நெல்லும் மூவாயிரம் ரூபாய் பணமும்... தோப்புல வருசத்துக்கு நாலு வெட்டு தேங்காய்...

ஒவ்வொரு வெட்டுக்கும் அம்பது தேங்கா பழனிக்கு.. மரத்துல இருந்து பழுத்து விழுற மட்டையும் பழனிக்குத் தான்... இதுபோக பொங்கல் தீவாளி ந்னா பழனிக்கு வேட்டி துண்டு... அஞ்சலைக்கு பாவாடை தாவணி...

இப்படி சம்பளம் பேசிக்கிட்டாலும் அதுக்கு கணக்கு வழக்கு.. ன்னு எதுவும் கிடையாது.. 

'மூனு வேளையும் வயிறார சோறு போட்டு காப்பி குடுத்து மக படிப்புக்கும் ஒத்தாசை பண்ற மகராசன் வீட்டுல சம்பளத்துக்குக் கணக்கு பார்த்தா சாமி கண்ணைக் குத்திடும்...' ங்கிறது பழனியோட கட்சி..

அதனால எந்தக் குறையும் இல்லாம இத்தனை வருசம் ஓடிடுச்சு...

"தோப்புக்குள்ளேயே வீடு கட்டித் தாறோம்.. இங்கேயே வந்துடேன்... பழனி!.. " - என்று அழைத்தார்கள் ஒருமுறை..

"அரும்பு வாழ்ந்த வீடுங்க அது .. விட்டுட்டு வர்றதுக்கு மனசு இல்லிங்க!.." - பழனியின் கண்கள் கலங்கின..

பத்து வருசத்துக்கு முன்னால் சீட்டு, குடி, கூத்து இவை தான் பழனியின் அடையாளங்கள்.. பழனியை மீட்பதற்காகவே மகள் பிறந்தாள்.. 

புது உறவின் பூ முகத்துப் புன்னகை - பழனியை புது மனிதனாக உரு மாற்றிய வேளையில் - 

ஏதோ பேர் தெரியாத நோயின் வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்து விடை பெற்றுக் கொண்டாள் பழனியின் மனைவி..  

உறவுக்காரர்கள் எவரும் ஆதரவு காட்டுவதற்கு முன் வராத நிலையில் அன்புக் கரம் நீட்டியது - அந்த ஊருக்கு புதிதாய் வந்திருந்த இந்தக் குடும்பம் தான்...

அதிலிருந்து பழனிக்கு கோயில் குளம் எல்லாம் இவர்களது வீடும் தென்னந் தோப்பும் தான்...

இந்த நாலு வருசமா  பழனி கைச் சம்பளம் வாங்காததால அது பெரிய ரொக்கமா அவங்க வீட்லயே சேர்ந்திருக்குது - அஞ்சலை கல்யாணத்துக்கு... ன்னு...

'எனக்கு எல்லாமும் நீங்களே!... ' ன்னு சொல்லாமல் சொல்லி விட்டார் பழனி..

இதுதான் இந்தக் குடும்பத்துக்கும் பழனிக்குமான நல்லுறவு..

நெடு மூச்சுடன் பழனி அண்ணாந்து ஆகாசத்தைப் பார்க்கவும்  - 

பெரியம்மா முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு கண்ணாடியைப் போட்டுக் கொள்ளவும் சரியாக இருந்தது...

======================================================================================


வரலாற்றின் பக்கங்கள் -  முகில்  -  விகடன் தீபாவளி மலர் 2015 
.


திருவாங்கூர் அரண்மனையில் பின்கட்டில் சிவப்புநிற நீர் கொதிக்கிறது என்றால், மகாராணி சேது லட்சுமிபாய் குளிக்கப்போகிறார் என அர்த்தம். பணிப்பெண்கள் கையில் வெள்ளிக் கிண்ணங்களோடு, மகாராணி குளிக்கும் இடம் நோக்கி அணிவகுப்பார்கள். நான்கு பெரிய பித்தளைக் கொப்பரைகளில் நீர் வகைகள் தயாராக இருக்கும். அதாவது கூந்தலை அலச ஒருவித நீர். அலசிய பின் தலைக்கு ஊற்ற ஒன்று. உடலுக்கு ஊற்ற மற்றொன்று. ஒவ்வொன்றுமே விதவிதமான மூலிகைகள் கலந்து கொதிக்கவைக்கப்பட்டது. மகாராணி சேது லட்சுமிபாய் வந்து உட்கார்ந்ததும் அரை மணி நேரத்துக்கு கூந்தலில் தேங்காய் எண்ணெய் மசாஜ். பின் சில மூலிகைப் பச்சிலைகளால் தயார்செய்த கலவையைத் தடவுவார்கள். கூந்தலை அலசி முடித்த பின், உடலுக்கு எண்ணெய் மசாஜ். அடுத்ததாக சீயக்காய் மற்றும் இதர வாசனைப் பொருட்கள் கலந்த பொடிகளால் தேகாபிஷேகம். இன்னும் சில அபிஷேகங்கள். இப்படி மகாராணி குளிரக் குளிரக் குளித்து முடிக்க மட்டும் இரண்டு மணி நேரம் பிடிக்கும். அடுத்து கூந்தலை சாம்பிராணி, இதர வாசனை வஸ்துக்கள் எல்லாம் சேர்த்து புகைபோட்டு உலர்த்த மேலும் அரை மணி நேரம். இப்படி திருவாங்கூர் மகாராணியின் குளியல் சேவை செய்வதற்கு என்றே பிரத்யேக வேலைக்காரப் பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

குளித்தாயிற்று. காலை உணவுக்கு ஹைதராபாத் சமஸ்தான அரண்மனைக்குப் போகலாம்.

அது 20-ம் நூற்றாண்டின் இறுதி. வைஸ்ராய் கர்ஸன், ஒரு நாள் காலை உணவுக்காக ஹைதராபாத் அரண்மனைக்கு வருவதாகச் சொல்லியிருந்தார். அப்போதைய நிஜாம் மெஹபூப் அலி கான், கர்ஸனை அசத்துவதற்குத் தயார் ஆனார். இந்த நிஜாமும் ஒப்பனைப் பிரியரே. தன் வாழ்வில் ஒரு முறை அணிந்த உடையை இன்னொரு முறை தொட்டுக்கூடப் பார்க்காதவர். நாளரு உடையும் பொழுதொரு பெர்ஃப்யூமாகத்தான் வலம் வருவார். அவருக்கும் பிற மனிதர்களைப் போல இரண்டே கால்கள்தான் இருந்தன. என்றாலும், ஆயிரக்கணக்கான அடுக்கிவைத்திருந்தார். ஜோடி காலணிகளை வாங்கி உடையும் செருப்பும் புதிது புதிதாகத் தேவைப்பட்டதுபோல அந்தப்புரத்தில் பெண்களும்... ம். வைஸ்ராய் கர்ஸன் வருகிறார் என்றதுமே, மெஹபூப் அரண்மனைச் சமையல் நிபுணர்களை முடுக்கிவிட்டார். நிற்பன, நடப்பன, பறப்பன, ஊர்வன, தவழ்வன, நீந்துவன என விதவிதமான ஜீவராசிகள் எல்லாம், வைஸ்ராயே வந்து தங்களுக்கு இறுதி மரியாதை செய்யவிருக்கிறார் என்ற இறுமாப்புடன், பதார்த்தங்களாக டைனிங் டேபிளில் மல்லாந்து கிடந்தன. வந்தார் வைஸ்ராய். வரவேற்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். டைனிங் டேபிள் முன் பசியுடன் அமர்ந்தார். அங்கே குவித்துவைக்கப்பட்டிருக்கும் பதார்த்தங்களைக் கண்டதும் அவருக்கு அஜீரணமாகிவிட்டதுபோல. இதெல்லாம் யாருக்கு என்பதுபோல நிஜாமை நோக்கினார்.

'சாப்பிடுங்கள் வைஸ்ராய்' என்றார் நிஜாம் பெருமிதத்துடன்.
'பிரட் பட்டர் ஜாம் கிடைக்குமா?' என கர்ஸன் கேட்கவும், 'போடா வெண்ணெய்' எனச் சொன்னதுபோலவே கேட்டது நிஜாமுக்கு.

இப்படி வைஸ்ராயிடம் அசிங்கப்பட்ட நிஜாமும் மெஹபூபும் லேசுப்பட்டவர் அல்ல. அவர், எங்கேயாவது விருந்துக்குச் செல்கிறார் என்றால், விருந்து கொடுப்பவர்களை எந்த விதத்தில் திணறடிக்கலாம் என யோசித்தபடிதான் செல்வார்.

- "அகம் புறம் அந்தப்புரம்" -  

==========================================================================================

ஒரு மாடு மிரளும் காட்சியை ஒரு ஓவியரால் எப்படி வரைய முடியும்?  இதோ இப்படி...  !  வர்ணமோ?

48 கருத்துகள்:

  1. இன்றைய கதை கிராமத்தை, வெள்ளந்தி மனிதர்களை, அவர்களின் எளிமையை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டது.

    பழனிக்கும் பெரியம்மாவிற்கும் உள்ள உறவு முறைதான் கடைசியில் புரிந்தது.

    இன்றைய படங்கள் மிகவும் அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...

      செல்வாண்ணா கதை நீங்கள் ஆர்வமாக எங்கே எங்கே என்று கேட்டுக் கொண்டிருப்பீர்கள். அது அவர் காதில் விழுந்து விட்டது.

      // இன்றைய படங்கள் மிகவும் அருமை. பாராட்டுகள். //

      Credit goes to Geetha Rengan.

      நீக்கு
    2. நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நன்றி

      நீக்கு
    3. நன்றி நெல்லை, ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. பணம் என்ற ஒன்று பிரதானமாக ஆனபிறகு நம் வாழ்க்கை முறை தவறிவிட்டது.

    மற்ற சௌகரியங்களும் நம் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் பதிலாக இன்னும் சிக்கலானதாகவும் சுயநலமானதாகவும் மாற்றிவிட்டது.

    பதிலளிநீக்கு
  3. மகாராணி விஸ்தாரமாக குளித்து உடையணிந்து.... என்னவோ இன்றைய இந்தப் பகுதியைப் படிக்கும்போது எகிப்து அரச குடும்பப் பெண்களின் ம்ம்மி முகத்தில் நிழலாடுகிறது.

    மருந்து சாப்பிடும்கோது குரங்கை நினைக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடாது.. கூடாது.. ஆனால் அப்படியா நினைவுக்கு வருகிறது?!

      நீக்கு
  4. சில உணர்ச்சிகளை, நிகழ்வுகளை ஓவியத்தில் கொண்டுவருவது கடினம். மாடு மிரள்வது அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. உண்மை.. நான் உணர்ந்தேன். பகிர்ந்தேன். நீங்களும் உணர்ந்தது கண்டு மகிழ்கிறேன்.

      நீக்கு
  5. 'சொல்லாதே' ! ஆஹா.. எங்கள் ஆசான் எஸ்.ஏ.பி. அவர்களின் அற்புத நாவல்.
    மனம் பழைய நினைவுகளை மீட்டியது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. எனது ஆக்கத்தினைப் பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு
    நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  7. கதைக்கான சித்திரங்கள் அழகோ அழகு..
    நன்றி சகோதரி கீதா...

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. அஞ்சலை, பழனிகதை மிக அருமையாக தொடங்கி இருக்கிறது.
    படங்கள் மிக அருமையாக கதையை சொல்கிறது.

    அந்தக்கால அன்பான மனிதர்கள், அவர்களிடம் உண்மையாக உழைக்கும் அன்பான மனிதர்கள் என்று கதையை கொண்டு செல்கிறார் சகோ. கண் முன் கதை மாந்தர்கள் உலா வருகிறார்கள்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய அன்பின் கருத்திற்கு
      மிக்க மகிழ்ச்சி...
      நன்றியம்மா...

      நீக்கு
  10. பட தயாரிப்பு கீதாரெங்கனா மிக அருமை கீதா, பாராட்டுக்கள் .
    சகோ துரை செல்வாராஜூ அவர்கள் உயிரோட்டமான கதைக்கு பொருத்தமாக மிக அழகாய் படம் இருக்கிறது கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ கீதாவின் படங்கள் அருமை
      நன்றியம்மா..

      நீக்கு
    2. நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  11. வரலாற்றின் பக்கங்கள் - முகில் - விகடன் தீபாவளி மலர் 2015 ல் வந்த அகம் புறம் அந்தபுரம் பகிர்வு அருமை.

    //ஒரு மாடு மிரளும் காட்சியை ஒரு ஓவியரால் எப்படி வரைய முடியும்? இதோ இப்படி... ! வர்ணமோ?//

    வர்ணம் அவர்கள் ஓவியம் போலதான் இருக்கிறது.மாடு மிரள்வது தத்ரூபமாக இருக்கிறது. உடல் அதிர்வு அந்த முகத் தூக்கல், வால் மேலே எழுப்பி இருப்பது வாய் திறந்து விதிர் விதிர்த்து இருப்பது எல்லாம் அருமை.
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியரின் திறமை வெளிப்பட்டிருக்கிறது. நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  12. சிறப்பான கதை. கிராமத்து வீட்டினைக் கண் முன் நிறுத்திய படம் - ஏஐ படமாக இருந்தாலும் இந்தப் படம் சிறப்பாக வந்திருப்பதற்குக் காரணம் கீதா ஜி... அவர்களுக்கும் பாராட்டுகள்.

    மாடு மிரள்வதற்கான ஓவியம் - சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய அன்பின் கருத்திற்கு
      மிக்க மகிழ்ச்சி வெங்கட்...

      நீக்கு
    2. நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  13. கதைக்கான படங்கள் சூப்பரோ சூப்பர்!

    பதிலளிநீக்கு
  14. இரு வாரங்கள் எபியின் செவ்வாய் கிராமத்திற்கு மாறியிருக்கிறது. அடிக்கிற வெயிலுக்குக் கொஞ்சம் சிலு சிலு!

    துரை அண்ணா கதை நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தாங்கள் கொடுத்திருக்கின்ற
      படங்கள் அழகு..
      மகிழ்ச்சி..
      நன்றி சகோ...

      நீக்கு
  15. துரை அண்ணா, 5 ஏக்கரா தென்னந்தோப்பு எல்லாம் இப்பவும் தஞ்சையின் அருகில் கிராமங்களில் இருக்கிறதோ? இருந்தால் ரொம்ப சந்தோஷம். ஏன்னா இப்பலாம் எல்லா நிலங்களும் பலியாகுதே அதான்,...

    எங்க ஊரில் தேர்கால் வாய்க்கால் ஓரமா, வீரநாராயணமங்கலம், பீமனேரி போகும் வழியில் எம் சி பாலன் அவரின் பெரிய நீளமான தென்னந்தோப்பு உண்டு. இப்பவும் அவர் பெயரில்தானா என்பது தெரியலை. முன்ன எல்லாம் அடையாளமாகச் சொல்லப்படும். எம் சி பாலன் தோப்பு தாண்டி என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நாகர்கோவில்/கன்னியாகுமரியும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்தானே இருந்தது. எனவே நாரோயிலில் SLB ஆண்கள் உயர்நிலைப்பள்ளி சேது லக்ஷ்மி பாய் பெயரில்.

    திருவனந்தபுரத்தில் பத்மனாபர் கோவிலில் சேது லஷ்மிக்குப் பின்னான ராணிகள் வந்ததை பல வருடங்களுக்கு முன் பார்த்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. ​படங்கள் பொருத்தமாக உள்ளன AI க்கு நன்றி. AI க்கு சரியாக புரியவைத்து படம் கேட்டவருக்கு பாராட்டு.

    ​மஹாராணி பத்மநாப சாமி கோயிலுக்கு விஜயம் செய்கிறார். போட்டோ அதுதான்.
    திருவனந்தபுர பழைய கதைகளை ஹிந்து பேப்பர் பிரசரித்த https://sharatsunderrajeev.blogspot.com
    என்ற சுட்டியில் காணலாம்

    Jayakumar

    பதிலளிநீக்கு
  18. ஹூம் ராணிக்கு அமைந்த மாதிரி நமக்கும் இப்படிக் குளிப்பாட்ட பணிப்பெண்கள் இருந்திருந்தா நானும் கிராப் வெட்டாம நிறைய முடி வளர்த்திருப்பேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. தன் வாழ்வில் ஒரு முறை அணிந்த உடையை இன்னொரு முறை தொட்டுக்கூடப் பார்க்காதவர். நாளரு உடையும் பொழுதொரு பெர்ஃப்யூமாகத்தான் வலம் வருவார். அவருக்கும் பிற மனிதர்களைப் போல இரண்டே கால்கள்தான் இருந்தன. என்றாலும், ஆயிரக்கணக்கான அடுக்கிவைத்திருந்தார். ஜோடி காலணிகளை வாங்கி உடையும் செருப்பும் புதிது புதிதாகத் தேவைப்பட்டதுபோல அந்தப்புரத்தில் பெண்களும்...//

    அது சரி இத்தனைக்கும் துட்டு எங்கிருந்து வரும்? ஆச்சரியம்.

    இப்ப சொல்றோமே அரசியல்வாதிகள் கொள்ளை அடிச்சு சுகபோக வாழ்க்கைன்னு அப்ப இப்படியானது வழி வழியாய் வருதுன்னு சொல்லலாம் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  20. 'சாப்பிடுங்கள் வைஸ்ராய்' என்றார் நிஜாம் பெருமிதத்துடன்.
    'பிரட் பட்டர் ஜாம் கிடைக்குமா?' என கர்ஸன் கேட்கவும், 'போடா வெண்ணெய்' எனச் சொன்னதுபோலவே கேட்டது நிஜாமுக்கு.//

    ஹாஹாஹா....அப்படிப் போடு!! சிரித்துவிட்டேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. கடைசி பாரா - ச்சே என்றாகிவிட்டது. அது சரி நம்ம ராஜாக்கள் எல்லாம் நல்ல யோக வாழ்க்கைதான் வாழ்ந்திருக்காங்கன்னு தோன்றுகிறது. பெண்களுக்குத்தான் சிரமங்கள் நிறைய இருந்திருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. மாடு மிரளும் படம் அட்டகாசம்.! செமையா வரைஞ்சிருக்கார் ஓவியர். சான்ஸே இல்லை.

    கதையின் ஆரம்பமே அட்டகாசமாக இருக்கிறதே. கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. அந்தக் காலத்துக் குளியல். ரொம்பவே விஸ்தாரமாக இருந்திருக்கு. பகிர்வுக்குப் பாராட்டுகளும் நன்றியும். ஹைதராபாத் நிஜாம் பற்றி (கடைசியாக இருந்தவர்) இங்கே வந்திருக்குனு நினைக்கிறேன். இந்த இந்திய ராஜாக்கள், ராணிகளின் வாழ்க்கை முறை பற்றி ஜான் மாஸ்டர்ஸ் என்னும் எழுத்தாளர் எழுதி இருக்கும் புத்தகங்களைப் படித்துப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம். பிரமிப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  24. எனக்குத் தெரிந்து ஓரிரு வருடங்கள் கழித்து நல்லதொரு கிராமத்துக் குடும்பக் கதையை துரை பகிர்ந்திருக்கார். வாழ்த்துகள். கதைக்குப் பொருத்தமான படங்களைத் தேர்வு செய்த தி/கீதாவின் தொண்டுக்கு நன்றி. துரை கதையை எப்படிக் கொண்டு போகப் போகிறார் என்பது தான் கதையின் முத்தாய்ப்பாக இருக்கும்னு நினைக்கிறேன். கதை மாந்தர்கள் அனைவருமே நல்லவர்களாக மிக மிக நல்லவர்களாக இருக்கின்றனர். ஆகவே கதையின் போக்கு எப்படினு யோசிக்கிறேன். இதுவும் ஒரு வகை ஆவலான எதிர்பார்ப்புத் தான்.

    பதிலளிநீக்கு
  25. "சொல்லாதே" நாவல் படிச்ச நினைவு இருக்கு. ஆனாலும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. படம் அருமையாக வரைந்திருக்கும் ஓவியருக்குப் பாராட்டுகள். எனக்கு அதிகம் நினைவில் இருக்கும் எஸ்.ஏ.பியின் நாவல்களில் "காதலெனும் தீவினிலே" தான்.முழு நாவலையும் ஒரே மத்தியானத்தில் படிச்சு முடிச்சிருக்கேன், பதின்ம வயது காலத்தில். பி.எம்.கண்ணன் என்பவரும் "குமுதம்" எழுத்தாளர் தான். இவர் எழுதிய பல நாவல்களைப் படிச்சிருந்தாலும் ஒன்றே ஒன்றைத் தவிர்த்து மற்றவை நினைவில் இல்லை. குங்குமமோ என்னமோ பெயர். கதாநாயகி பெயரே கொஞ்சம் புதுமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் தந்திருக்கும் இன்றைய செவ்வாய் கதை பகிர்வு மிக அருமையாக உள்ளது. அழகான கிராமம். அதிலுள்ள அருமையான மனங்கள் அமைந்த கதை மாந்தர்கள் என எப்போதும் துரை செல்வராஜ் சகோதரரின் கதைகளை படிக்கும் ஒரு மன நிறைவுடன் அழகாக நகர்ந்து செல்கிறது. பழனி, அஞ்சலை என்ற பெயர்களே மனதிற்கு ஒரு நிறைவை தருபவை. இதன் அடுத்தப்பகுதியையும் விரைவாக, உடனடியாக படிக்கத்தூண்டும் ஆவலும், தொற்றிக் கொள்கிறது. ஆனாலும், அடுத்த செவ்வாய் கிழமைக்காக காத்திருக்கிறேன்.

    கதைக்கேற்றபடி கிராமிய சூழலில் படங்களை தேர்ந்தெடுத்த சகோதரி கீதாரெங்கன் அவர்களின் திறமைகளை கண்டும் வியக்கிறேன். மகிழ்கிறேன். அருமையான படங்களை தந்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி.

    கதைப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே. தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    அந்தக்கால ராஜா, ராணிகளின் தினசரி வாழ்க்கை முறைகள் வியப்பைத் தருகின்றன இவைகளை தினமும் ஒருநாளைப் போல செய்து கொள்வதற்கே அவர்களுக்கு பொறுமை வேண்டும். குறிப்பாக அவர்களை கவனிக்கும் அந்த பணியாளர்களுக்கும். பிறகு இவர்கள் அரசாட்சியை எப்படி திறம்பட செய்வார்களோ. ?

    மாடு மிரளும் ஓவியமும் நன்றாக தத்ரூபமாக உள்ளது. கதையும் படித்தேன். ஆரம்பமே நன்றாக போகிறது. இன்றைய பகிர்வு அத்தனைக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  28. எஸ் ஏ பி அவர்களைப் பற்றி இன்று பதிவில் வந்திருப்பதால், அவரைப் பற்றி சில்கான் ஷெல்ஃபின் பார்வையை வாசித்த நினைவு வந்தது. சுட்டி இதோ

    https://siliconshelf.wordpress.com/tag/s-a-p-annamalai/

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!