13.3.26

எனக்கும் வேறு வழி இல்லை உன்னிடம் ஒளிவதைத் தவிர

 வரலாற்றுக் கதை எழுதத் தேவையானவை என்று சுஜாதா இடும் பட்டியல்!

....... கரிய கண்களுடைய அழகான ராஜகுமாரிகளை நீண்ட வாக்கியங்களில் வருணிக்க வேண்டும்..
அடிக்குறிப்புகள் தாராளம் வேண்டும்.
சோழனாக இருந்தால் நல்லது. பாண்டியன் பரவாயில்லை.
தமிழ்ச் சாதியின் மேம்பாடு கடல் கடந்த நாகரீகம், இவைகளை சொல்வது உத்தமம்.
குதிரைகள் தங்கத் தேர்கள் முத்துக்கள் உறைந்திருக்கும் வீதிகள், யவன வியாபாரிகள், யாழ் இன்ன பிறவும் வேண்டும்......
- சுஜாதா -

==============================================

சாண்டில்யன் பக்கங்கள் :

சாண்டில்யன் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது யவனராணிதான்.  அதையே சாண்டில்யனும் முன்னுரையில் சொல்லி இருக்கிறார்!  படிக்காத புத்தகங்கள் எவ்வளவோ இருக்க, இதை ஒரு Fast Reading விடலாம் என்று எடுத்து படித்துக் கொண்டிருக்கிறேன்.  சில முக்கிய விவரங்களை FaceBook கிலும் பகிர்ந்து வருகிறேன்!  சாண்டில்யன் முன்னுரை கீழே...  இந்தக் கதை குமுதத்தில் வந்தபோதே எடுத்து பைண்ட் செய்யப்பட்டு எங்கள் வீட்டில் இரண்டு பாகங்களும் இருந்தன.  லதா ஓவியங்களுக்காக அடஹி இப்போது தேடித்தேடி அலுத்துப்போனேன்.  என்ன ஆனதோ..  எங்கே போனதோ...  வருத்தமாக இருந்தது.
முன்னுரை

'யவன ராணி' நான் இதுவரை எழுதிய சரித்திரக் கதைகளுக்குள் சிறந்தது என நினைக்கிறேன். அது சிறப்பாய் அமைந்ததற்குத் தமிழ்ப் பெருமக்களின் உற்சாகத்தான் மூல காரணம், கதையில் காணப்படும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி, அவர்களின் சுக துக்கங்களை அனுபவித்து அவ்வப் பொழுது 'குமுதம்' காரியாலயத்துக்கும், நேரிடையாக எனக்கும் கடிதங்களை எழுதிய ஏராளமான வாசகர்கள் இத்தக் கதையின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்னால், அது சம்பிரதாயத்துக்காகவோ, அவையடக்கத்தின் அவசியத்தை முன்னிட்டோ சொல்லும் வார்த்தையல்ல. முக்காலும் உண்மை.

யவன ராணி, பூவழகி-இவர்களின் அழகைப் பற்றியும் இளஞ்செழியன் வீரத்தைப்பற்றியும் இலி ஆஸுவின் பயங்கரத்தைப்பற்றியும், டைபீரியஸின் கடமை உணர்ச் சியைப் பற்றியும் மற்றும் பலப் பல அம்சங்களைப் பற்றியும் அவ்வப்பொழுது பாராட்டுக் கடிதங்களை எழுதினார்கள். கதையை இப்படித் திருப்பினால்தான் சரியாயிருக்கும் என்று குக்கிராமங்களிலிருந்து கடிதம் எழுதி யோசனை சொன்னவர்கள் உண்டு. யவன ராணி மாண்டுவிடுவாள் என்பதை முன்கூட்டியே அறிந்து, "எங்கள் ராணியைக் கொல்ல வேண்டாம்" என்று தடுத்தவர்கள் உண்டு முன் பின்னாக ஏதாவது கதையில் வந்திருப்பதாகத் தெரிந்தால், அந்த முரண்பாட்டை எடுத்துக் காட்டியவர்களும் உண்டு. வாசக அன்பர்கள் எழுதிய ஒவ்வொரு கடிதமும் எனக்கு எழுத உற்சாகமூட்டியது. அவர்கள் அன்பு என்னை ஆட் கொண்டது என் பேனாவுக்கு வலுவூட்டியது. சிந்தனையைத் துரிதப்படுத்தியது.

மிகுந்த எச்சரிக்கையுடன் கதையை எழுதினேன். இந்தக் கதை எழுதுங்காலத்தில் வந்த கடிதங்களிலிருந்து, ஒன்று 4

தெரிந்து கொண்டேன். தமிழ் மக்கள் விழித்துக் கொண்டிருக்க கிறார்கள், கண்டதை எழுதி அவர்கள் தலையில் திணிக்க முடியாது என்பதுதான் அது. பிரச்சாரமும் பத்திரிகை விளம்பரங்களும் மட்டும் மக்களிடம் செல்லாது என்பதையும் அறிந்து கொண்டேன். வருங்காலத்தில் எழுதும்போது கண்டிப்பாய் இதை நினைவில் வைத்துக் கொள்வேன்.

கதை எழுதுங்காலத்தில் வந்த கடிதங்களைவிடப் பன் மடங்கு அதிகப் பாராட்டுக் கடிதங்கள், கதை முடிந்த பின் 'குமுதம்' காரியாலயத்துக்கு வந்ததாகக் காரியாலயத்திலிருந்து செய்தி கிடைத்தது. அதைக் கேட்டதும் பெரும்பாரம் தலையி லிருந்து இறங்கியது போலிருந்தது எனக்கு. ஒரு பொறுப்பை மக்களுக்குத் திருப்தியாகச் செய்து முடித்த பெருமிதத்தையும் தந்தது. இப்படி என்னைப் பலவிதத்திலும் ஊக்கிய தமிழன்பர் களுக்கு என் மனமார்ந்த வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

யவன ராணியின் கதை சரித்திர ஆதாரமும், இலக்கிய ஆதாரமும் கலந்தது. சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப்பற்றிய கதை இது. தமிழர்கள் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பொற்காலம் அது. வெள்ளைக்காரர்களான யவனர்கள் தமிழர்களிடம் சேவகம் செய்த காலம். தமிழர் திரை கடலோடி வாணிபம் செய்து, பொன்னைக் கொண்டு வந்து தமிழகத்தில் குவித்த காலம். தமிழர் நாகரிகம் மேல் திசை நாடுகளிலெல்லாம் பரவிக் கிடந்த காலம். அந்தக் காலத்தைப் பற்றி ஒரு கதை எழுத வேண்டுமென்ற ஆசையால், என் சொந்தக் கற்பனையில் கதாபாத்திரங்களை எழுப்பி, அந்தப் பாத்திரங்களுடன் சரித்திரப் பாத்திரங்களை இணைத்தும் மோத விட்டும் இந்தக் கதையை உருவாக்கினேன்.

இதில் கதையை மட்டும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பது எனது விருப்பமல்ல. நமது வரலாற்றுப் பெருமைகளையும், இலக்கியச் சான்றுகளையும் பொது மக்கள் குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் அறிய வேண்டு மென்ற விருப்பத்தால், இலக்கியத்தையும் சரித்திரத்தையும் 5

பெரும்பாலும் இணைத்தே கதையை ஓட்டியிருக்கிறேன். அந்த ஆதாரப் புத்தகங்களை மாணவர்களும் படிக்க வேண்டு மென்ற நோக்கத்துடன், அந்தப் புத்தகங்களின் பட்டிய லொன்றையும் முன்னுரையை அடுத்துத் தந்திருக்கிறேன்.

இந்தக் கதையால் மற்றவர்களுக்கு லாபம் ஏதாவது உண்டோ, எனக்குத் தெரியாது. எனக்கு நல்ல லாபந்தான். இந்தக் கதை எழுதுவதற்காகவே பல தமிழ் இலக்கியப் புத்தகங் களையும், சரித்திரப் புத்தகங்களையும் துருவித் துருவிப் படித்தேன். ஆழ்ந்த தமிழ்ப் புலமையில்லாத எனக்கும், ஓரளவு தமிழ் இலக்கிய அறிவு ஏற்பட்டது. தவிர, நான் முன்பின் கண்டிராத வரலாற்றுப் புத்தகங்கள் பலவற்றையும் பார்வை யிடும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்தக் கதையைக் ‘குமுத'த்தில் வெளியிட்டு ஆதரித்தது மட்டுமன்றி, நான் சந்தேகப்பட்ட சமயங்களிலெல்லாம் "சந்தேகமே வேண்டாம். கதை பிரமாதமாயிருக்கிறது" என்று என்னை அடிக்கடி ஊக்குவித்த 'குமுதம்' ஆசிரியர் திரு. எஸ். ஏ. பி. அண்ணாமலை அவர்களுக்கும், பிரசுர கர்த்தர் திரு. பார்த்தசாரதி அவர்களுக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். கதை 'குமுத'த்தில் வந்து கொண்டிருந்தபோதே, 'இதை எப்பொழுது புத்தகமாகப் போடலாம்?' என்று துடித்தது மட்டுமல்லாமல்,கதை முடிய ஒரு மாதமிருக்கும் போது, அதைப் புத்தக வடிவில் தயாரிக்கவும் முற்பட்ட வானதி பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கதை 'குமுத'த்தில் வந்தபோது ஆதரித்ததைப் போலவே, புத்தக வடிவில் வரும்போதும் ஆதரவளிக்க வேண்டுமென்று தமிழ்ப் பெருமக்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

சாண்டில்யன்

==========================================================================================================

யவனராணி முதன்முதலில் புத்தகமாக வந்தது 1963 ஆம் வருடம்.  இதுவரை 32 பதிப்புகள்..   எத்தனை பதிப்புகள் 2009 ஆம் வருடத்துக்கு அப்புறம் அச்சிட்டார்களோ...


===================  ====================  =====================   ============ ===========


பொன்னியின் செல்வன் முதன் முதலில் தொடராக வெளிவந்தபோது மணியம் வரைந்த படங்கள்...   இதே கதாபாத்திரங்கள் பின்னர் சற்றே ஜாடை மாறி இருந்தன..  என்ன சொல்கிறீர்கள்?








=============================================================================================



"மணிக்கொடி பத்திரிகையை எப்படி நடத்தினார்கள் என்ற விஷயத்தை புதுமைப்பித்தன் என் னிடம் ஒருநாள் ரசமாகச் சொன்னார்.

பத்திரிகை எங்கள் ராஜ்ஜியத் துக்கு வந்தது. வரும்போது அச்சடிக் கிறவனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பாக்கி பதினெட்டே முக்கால் ரூபாய். வரவேண்டிய பணமும் அதிகம் ஒன்றுமில்லை. ஒழுங்காக வருவதுமில்லை. பசி, பட்டினி என்பவை பிரச்னைகள் அல்ல, பழகிப்போன விவகாரம். இந்தச் சமயத்தில் கி.ரா.வும் எங்களோடு வந்து சேர்ந்து இலக்கியச் சேவைக்குத் துணிந்துவிட்டார். பிரஸ்காரனோ பணத்துக்கு நெருக்குவான். ஆபீஸ் நாற்காலி, மேசை அத்தனையும் வாடகைக்கு. வாடகை என்பது பெயரளவில்.

நடைமுறையில் அனுபோக பாத் தியதை கொண்டாடுவதுதான் எங்களால் முடிந்த காரியம்.

நாங்களோ பத்திரிகை அச்சாகிப் போனால்தான் பணம் புரளும் என்று பிரஸ்காரனை மிரட்டுவோம். அச்சடித்துக் கொடுப்பான். என்றைக்கா வது எங்கிருந்தாவது ஒரு நாணயஸ் தனான ஏஜெண்டோ அல்லது அப் பாவிச் சந்தாதாரரோ மூன்று அல்லது நான்கு ரூபாய் மணியார்டர் அனுப்பி விடுவான். மணியார்டர் வந்துவிட் டால் உடனே நாங்கள் எல்லாம் குபேரப் பிரபுக்கள்தான். நேரே ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோமுக்குப் போவோம். திரும்பி வந்து இலக்கியச் சேவையில் ஈடுபடுவோம்.

மணியார்டர் பியூன் வராத நாட்களில் இன்னொரு நண்பரை எதிர்பார்ப்போம். மணிக்கொடியில் எழுதி வந்தவர்களில் சிதம்பர சுப்பிரமணியன் வேறு இடத்தில் வேலை பார்த்து மாதாமாதம் சம்பளம் வாங்கும் ஆசாமி. அவர் வந்தால் ஏதாவது காசு புரளும். காபி உண்டு, சாப்பாடு உண்டு. ஒருசமயம் இந்தத் தொழிலை விட்டுவிட்டு பெப்பர் மிண்ட் விற்கலாமா, பீடி விற்கலாமா என்று கூட யோசித்ததுண்டு.


(ரகுநாதன் எழுதி மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்ட புதுமைப்பித்தன் வரலாறு நூலிலிருந்து.)

=======================================================================================






ஒளிதல்

கொளுத்தப்பட்ட கற்பூரம் போல் 
உன் காதலால் 
நான் அழிந்துபோவேன் என்று 
எனக்குத் தெரியும்

அதனால் உன்னிடமிருந்து தப்ப 
இருள்களுக்குள் ஓடினேன் 
நீ புன்முறுவல் செய்தாய்

நான் உறக்கத்தில் ஒளிந்தேன் 
நீ கனவாக வந்தாய்

நான் விதையில் ஒளிந்தேன் 
நீ நீராக வந்தாய்

நான் வீணையில் ஒளிந்தேன் 
நீ விரலாக வந்தாய்

நான் மொட்டுக்குள் ஒளிந்தேன் 
நீ சூரிய கிரணமாய் வந்தாய்

நான் பாவத்தில் ஒளிந்தேன் 
நீ மன்னிப்பாய் வந்தாய்

நான் பொய்யில் ஒளிந்தேன் 
அது என் முகத்திரை' என்றாய்

நான் சந்தேகத்தில் ஒளிந்தேன் 
அது என் விளக்கடி நிழல்' என்றாய்

நான் 'இல்லை' என்ற பாலையில் 
ஒளிந்தேன் 
'சிலந்திப் பூச்சியே! 
என் வீட்டு மூலையில் 
வலை பின்னுகிறாய்' என்றாய்

என்னை விட்டு நீ 
எங்கே ஓட முடியும்?

நான் இல்லாத இடம் ஏது 
என்றாய்

நீ என்னை விட்டு ஓடவில்லை 
உன்னை விட்டு ஓடுகிறாய் 
உன் பயமும் நானே 
உன் ஓட்டமும் நானே 
நீ ஒளியும் இடமும் நானே 
என்றாய்

பனித்துளி 
வேறெங்கே ஒளிய முடியும்? 
வெயிலைத் தவிர.
எனக்கும் 
வேறு வழி இல்லை 
உன்னிடம் ஒளிவதைத் தவிர

- பறவையின் பாதை - கவிக்கோ அப்துல் ரகுமான் - 

=================================================================================


காளிதாசனின் காலம்

காளிதாசனின் காலம் குறித்து நீண்ட காலமாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன. கி. மு முதல் நூற்றாண்டு முதல் குப்தர்களின் காலமான நான்காம் நுற்றாண்டு வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல தேதிகளைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அவைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நல்ல சான்றுகள் சங்கத் தமிழ் இலக்கியத்தில் கிடைத்துள்ளன. இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்க காலத்துக்கு முன் என்பது தெள்ளத் தெளிவாகிறது. புகழ்பெற்ற வரலாற்று நிபுணரும் கலைத்துறை வல்லுனருமான சிவராம மூர்த்தி போன்றோர் காளிதாசனை விக்ரமாதித்தன் காலத்தில் வைத்தனர். சங்க இலக்கியமும் அவர் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது. டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி சந்திரா ராஜன் வெளியிட்ட Penguin publication காளிதாசர் நூல்களின் மொழிபெயர்ப்பில் கூட அவரை சங்க காலத்துக்கு முன்னரே வைக்கின்றார்

காளிதாசன் ஒரு மாமேதை. அவன் பேசாத பொருள் இல்லை. அவனுடைய பூகோள அறிவோ மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் உள்ளது. இமய மலையை பூமியை அளக்கவந்த அடிக் கோல் என்கிறார். வரை படம் இல்லாத காலத்தில் 1500 மைல் நீளமுள்ள இமயமலையை அவர் எப்படி இப்படி வருணித்தார் என்பது ஆச்சரியமே.

ஈரான் முதல் இந்தோனேஷியா வரை பல இடங்களை அவர் குறிப்பிடுகிறார். கப்பல் கவிழ்ந்தால் அந்த சொத்துயாருக்குப் போய்ச் சேரும் என்ற சட்ட விசயங்களை அலசுகிறார். ரகு வம்ச காவியத்தில் ஸ்வயம்வரத்துக்கு வந்த மன்னர்களை வருணிக்கையிலும் பாண்டிய மன்னனையும் ஆதித்ய முனிவரையும் குறிப்பீடுகிறார் ; தமிழ் இலக்கியத்தின் அஸ்திவாரமே அகத்தியர்தான்.

காளிதாசனின் வியப்பூட்டும் உவமைப் பட்டியல்!

காளிதாசனின் உவமைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. எண்ணிக்கையிலும் அதிகம்; தரத்திலும் அதிகம்; அவருடைய ஏழு நூல்களில் எங்கும் மிகப் பொருத்தமான உவமைகளைக் காணலாம். அவற்றில் இரு நூற்றுக்கும் மேலான உவமைகளை சங்கத் தமிழ்ப்புலவர்கள் எடுத்தாண்டதை, நான் எழுதிய இரண்டு தமிழ், ஆங்கில நூல்கள் மூலமாகவும் அறியலாம் சுமார் 1250 உவமைகளை அவர் பயன்படுத்தியதால் உபமா காளிதாஸஸ்ய – உவமைக்கு காளிதாசன் என்று சம்ஸ்க்ருத மொழியில் ஒரு பொன்மொழி உள்ளது .

அதனால்தான் அவரை உலக மஹா கவிஞன் என்றும் நாடக ஆசிரியன் என்றும் உவமைச் சக்ரவர்த்தி என்றும் இன்றும் அறிஞர்கள் போற்றுகின்றனர்.

;இந்த உவமைப் பட்டியலிலும் அவர் மன்னர்களை வேத கால தெய்வங்களுடன் ஒப்பிடுவதால் அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவர் என்று தெளிவாகிறது; சங்க நூல்களிலும் மன்னர்களை வேத கால தெய்வங்களுக்கும் பின்னர் முருகன் விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கும் ஒப்பிடுவது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது.

தமிழ்வேதா டாட்காம்

==============================================================================================

இவர் யாரென்று தெரிகிறதா?  

படத்துக்குக் கீழே சிலபல வரிகள் பின்னர் தோன்றலாம்!

4 கருத்துகள்:

  1. நான் தூய சவேரியார் மேநலைப்பள்ளி 75ம் ஆண்டு(?) விழாவில் மாவட்ட ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசு இவர் கையால் பெற்றேன் 1979ல்

    பதிலளிநீக்கு
  2. காளிதாசன் பற்றிய செய்தி அருமை. வரலாற்றில் புகுந்தால் படிக்க ரசனை, குழப்பும், ஆச்சர்யமாக இருக்கும். என்ன ஒண்ணு, ஒவ்வொரு வரலாற்றாசிரியர்களும் காலத்தை எழுதும்போது வேறுபடுவர்.

    பதிலளிநீக்கு
  3. எதனால் வறுமையில் இருந்தும் இலக்கியத்தை வளர்த்திருப்பார்கள்? தங்கள் படைப்புகளை எழுதும் தீராத ஆசையாலா?

    பதிலளிநீக்கு
  4. யவன ராணி..... தமிழகம் ஒரு காலத்தில் வெளி நாட்டவர் பலரால் ஆளப்பட்டது. முஸ்லீம்கள் அல்ல. அதற்கும் முந்தைய காலத்தில்... கிபி 1ம் நூற்றாண்டுக்கு முன்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!