17.3.26

நெடுங்கதை :: அஞ்சலை 2/2 - ரை செல்வராஜு

 

 அஞ்சலை 2

துரை செல்வராஜு

*****************

 - பெரியம்மா -

***********************

அன்று வெள்ளிக்கிழமை..

பழனியின் குடும்ப விசயம் தெரிஞ்ச  ரெண்டாம் நாள்...

உள் முற்றத் திண்ணையில் ஆசுவாசமாக சாய்ந்திருந்த பெரியம்மா-

'பழனி மாதிரி நம்பிக்கையான ஆள் நம்ம தோட்டத்துக்குக் கிடைப்பது கஷ்டம்... '

உள்மனதுடன் பேசிக் கொண்டிருந்த வேளையில் -

சிலுசிலுக்கும் பாவாடை தாவணியும் கூடை நெறைய மருதாணியுமாக அஞ்சலை வந்தாள் ... 

பிள்ளைகள் பெரியவர்கள் எல்லாருக்கும் மருதாணி இலைகளைக் கண்டதும் சந்தோஷம்..

கொப்பும் குலையுமா இருந்த மருதாணியை சுத்தமாக ஆய்ந்தெடுப்பதற்கு முனைந்த பெரியம்மா சொன்னார்கள்..

"மருதாணிய நான் அறைச்சுடறேன்.. சீக்கிரமா சாப்பிட்டு வாங்க எல்லாரும்.. "

குறுக்கிட்ட அஞ்சலை -

"நான் அறைச்சுத் தர்றேம்மா!.. " - என்றாள்.. 

மெல்லச் சிரித்த பெரியம்மா,

"இல்லடா அஞ்சலை...  மருதாணி அறைக்கிறப்போ கையெல்லாம் சிவப்பாயிடும்.. அதுக்கு மேல மருதாணி வைச்சா எடுப்பா இருக்காது!.. " - என்றபடி,

அவளது கன்னத்தை வருடிய பெரியம்மாவின் மனம் ஏதேதோ பாச உணர்வின் அதிர்வுகளால் தள்ளாடியது...

'தென்மலையின் சந்தனமே

தேன்வழியும் செண்பகமே

பொன்னி நதிப் பூங்காற்றே

வந்திடம்மா பூ முடிக்க..


பொன்னிறத்துப் பூவரும்பே

நன்னிலத்து செங்கரும்பே

தங்கநிறத் தாமரையே

வந்திடம்மா மை எழுத..

 

முத்து முத்துப் புன்னகையே

முத்தமிழின் இன்சுவையே

நெத்திச் சுட்டி சூடிடவே

வந்திடம்மா வான்மதியே...


மல்லிகையும் பூத்திருக்க

மங்கலங்கள் காத்திருக்க

மஞ்சள் முக நித்திலமே

மருதாணிச் சித்திரமே!.. '

மெலிதாகப் பாடிய படி  பிள்ளைகளுக்கும் தனது தங்கைக்கும் மருதாணி வைத்து விட்ட பெரியம்மா கடைசியாக தனக்கும் வைத்துக் கொண்டார்கள்...

கை விரல் சிவப்பைக் காட்டுவதற்காக பொழுது விடிவதற்கு முன் ஓடி வந்த அஞ்சலை உறக்கத்தில் இருந்த பிள்ளைகளை எழுப்பி விட்டாள்...

கண் விழித்து கைகளைக் கண்ட பிள்ளைகளின் முகம் கீழ் வானச் சிவப்பாகியது.. பிள்ளைகளின் புன்னகையைக் கண்டு பெரியவர்களுக்குப் பூரிப்பு...

இதெல்லாம் இன்னும் சில நாட்கள் தான்.. பெரியம்மா ஊருக்குச் சென்று விடுவார்கள்...

அன்று ஞாயிற்றுக் கிழமை..

மதியப் பொழுதுக்கு மேல் ஈரமான  சாக்குச் சுருளுடன் வந்தாள் அஞ்சலை..


மகளை இந்த நேரத்தில் கண்ட பழனி,

"என்னம்மா இது!.. "  - என்றார்... 

ஒன்றும் பேசாமல்  புன்னகைத்த அஞ்சலை கையிலிருந்த சுருளை விரித்துப் போட்டாள்.. வெளிர் நிற மஞ்சள் மடல்களுடன் தாழம்பூக்கள்...

"தாழங்காட்டுக்குள்ளே போய் யாரு பறிச்சது ?.. "  - 

பழனியின் கேள்விக்குப் பதிலாக - " அத்தான்!.. " - என்றாள் ஒற்றை  வார்த்தையில் ..

திண்ணையும் முன் வாசலும் தாழம்பூக்களின் நறுமணத்தால் நிறைந்தன...

பிள்ளைகளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை...

கொல்லையில் அரும்பியிருந்த மல்லிகை மொட்டுகள் கூடத்தில் குவிந்தன.. கொஞ்ச நேரத்தில்  ஊசியும் பட்டு நூலும் ரிப்பன் நாடாக்களும் குஞ்சங்களும் வந்து சேர்ந்தன..

இதெல்லாம் சின்னவளுக்கு சடங்கு சுத்துனப்போ வர்றவங்களுக்கு மஞ்ச குங்குமம் தாம்பூலத்தோட கையில் வச்சிக் கொடுக்கிறதுக்காக வாங்குனது...

தாழம்மடல்களைப் பிரித்து ஓரத்து முட்களை நறுக்கி விட்டு பிள்ளைகள் அனைவருக்கும் ஜடை பின்ன ஆரம்பித்தார் பெரியம்மா..

முதலில் அமர்த்தப்பட்டவள் அஞ்சலை..

சூரியப் பிரபை  ஜடைப் பில்லையுடன் மல்லிகை மொட்டுகளையும் பட்டு நூல் ஜரிகை இழைகளையும் சேர்த்துச் சேர்த்து தைத்து முத்துக் குஞ்சத்துடன் ஜடையைப் பின்னி முடித்ததும் தேவதைகள் நடமாடும் திருமாளிகை ஆனது வீடு..

வீட்டுப் பிள்ளைகள் மூவருடன் அஞ்சலையையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து நெற்றியில் பொட்டு வைத்த பெரியம்மா முகத்தைத் துடைத்தபடி முற்றத்துத் தூணில் சாய்ந்த போது அருகில் வந்த அஞ்சலை,

"உங்க தோள்..ல சாஞ்சுக்கவா அம்மா!.. " என்றாள்...


"தோள்..ல யா?.. எம் மடியிலயே சாஞ்சுக்கடி செல்லம்!.. " -  என்றபோது தாயில்லாத அந்தப் பிள்ளையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது..

சிறகுகள் படபடக்க தேவ கன்னியர்  வானில்  நின்று சந்தோஷப் பூக்களை வாரியிறைத்துக் கொண்டிருந்தனர்...

ஃஃஃ


கூட்டு வண்டி தயாராக இருந்தது... பழனியும் அருகே...

கலங்கிய முகத்துடன்  பிள்ளைகள்.. அஞ்சலையும் நிற்கின்றாள்... 

எல்லாரையும் வாரியணைத்து முத்தமிட்ட பெரியம்மாவின் முகத்தைப் பார்த்தபடி பழனி பேசினார்...

"யக்கா.. அரும்போட தம்பி   கார்மேகம்... அஞ்சலைக்கு  மாப்பிள்ளை.. நல்ல பையன்..  தோட்டத்து வேலை.. டவுன் வாசனை இதுகள் ல பிரியம் ஜாஸ்தி ... ஒரு வழி காட்டுங்களேன்... "

" என்ன படிப்பு ... ? "

" பத்தாங் கிளாஸ்.. புத்திசாலி..   "

அன்றைக்கு - 

சிறகுகள் படபடக்க தேவ கன்னியர்  வானில்  நின்று சந்தோஷப் பூக்களை வாரியிறைத்ததன் காரணம் இப்போது புரிந்தது பெரியம்மாவிற்கு...

புன்னகைத்தார்...

தூரத்தே ரயில்வே ஸ்டேஷன்... 

கழுத்து மணிகள் அசைய காளைகள் விரைந்து கொண்டிருந்தன..

ஃஃஃ


========================================================================================================================================



எம்.ஆர். ராதா பேசுகிறார்!

1971ம் ஆண்டு மே1ந் தேதி, ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் வெறிச்சோடிக் கிடந்த சென்னை தேனாம்பேட்டை போயிஸ் ரோட் வீடு கலியாண வீடுபோல் 'கலகல' வென்று காட்சியளிக்கிறது. வெளியே பல கார்கள் நிற்கின்றன. சில கார்கள் வருவதும் போவதுமாயிருக்கின்றன. ஆணும் பெண்ணுமாக மக்கள் அங்கங்கே சிறு சிறு கூட்டமாக நின்று, மாடியைப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதுமாக இருக்கிறார்கள். மேலேயும் கீழேயுமாகச் சிலர் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து நானும் போகிறேன். ராதாவின் குரல் ஒலிக்கிறது:

"என்னைப் பார்க்கவா இத்தனை பேரு? நான் என்ன, ராஜாஜியைப் போல, பெரியாரைப் போல, காமராஜைப் போல பெரிய மேதையா ? சாதாரண நடிகன்தானே? என்னைப் பார்க்க ஏன் இப்படி விழுந்தடிச்சிக்கினு வர்றீங்க?... சரி, பார்த்தாச்சா ?... போங்க மாலை வேறே கொண்டாந்து இருக்கீங்களா?... ஐயோ, ஐயோ சரிசரி, போடுங்க... போட்டாச்சா?... போயிட்டு வாங்க!" ... ...
ராதாவின் குரலா இது, இத்தனை யிருக்கிறதே'... சன்னமா
வியப்பு அடங்கு முன் இன்னொரு குரல் கேட்கிறது:

"உங்கள் குரல் முன்னைப் போல்..."

"அஞ்சி வருஷமாப் பேசாம இருந்த குரல் இல்லையா? அப்படித்தான் இருக்கும்; கொஞ்சம் கட்டினாச் சரியாயிடும்!" என்கிறார் ராதா.

மேலே செல்கிறேன். ராதா தம் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். "உங்கள் உறவினர்களோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது; நான் டிஸ்டர்ப் செய்ய வந்துவிட்டேனோ?" என்கிறேன்.

"டிஸ்டர்ப் என்ன, டிஸ்டர்ப்? நான் என்ன, பெரிய ஸயன்டிஸ்ட்டா? விண்வெளி ஆராய்ச்சி சேஞ்சிக்கிட்டு இருக்கேனா? சாதாரண ஆக்டர்!' நீங்களெல்லாம் பேசற பேச்சுக்குக் கொஞ்சம் பாலிஷ் கொடுத்து மேடையிலே பேசறவன். அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். ஆக்டர்னா நீங்க ஓவரா நினைச்சிடாதீங்க... ஆ!... தொண்டை கட்டிக்கிச்சி... இப்ப நான் 'ரத்தக் கண்ணீர் ராதா' வாயிட்டேன் ... ஏய், காந்தா!... யார் அங்கே...?"

ராதா சிரிக்கிறார். அப்போது அவர் மகன் வாசு வருகிறார். அவரைப் பார்த்ததும், "வாசு உங்களை விட நன்றாக நடிக்கிறார் என்று சினிமா ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்களே ?" என்கிறார் டாக்டர்.

"அதை நான் ஒத்துக்க முடியாது. டி.வி.எஸ்.ஸை எடுத்துக்குங்க; அவருடைய பையனுங்க அந்த ஸ்தாபனத்தை இப்ப பிரமாதமா முன்னுக்குக் கொண்டாந்திருக்காங்க. அதை வெச்சி ஆதியிலே அதுக்குக் காரணமாயிருந்த டி.வி.எஸ். திறமையிலே குறைஞ்சவருன்னு சொல்லி விட முடியுமா?" என்கிறார் ராதா.

"அது எப்படிச் சொல்ல முடியும்?" என்கிறேன் நான்.

சக பத்திரிகையாளர் ஒருவர், "உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக் கொள்கிறேன்", என்கிறார் வினயத்துடன்.

"என் மனைவியை எதுக்குக் கூப்பிடறது ? நான் மட்டும் பார்க்கத் தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லே!" என்று ராதா 'பட்'டென்று பதிலளிக்கிறார்.

"ஜெயில்லே..." என்று நான் மெல்ல ஆரம்பிக்கிறேன். ராதா குறுக்கிட்டுச் சொல்கிறார்:

"எனக்குத் தெரிஞ்ச வரையிலே ரோசமுள்ளவனும் மானமுள்ளவனும் ஜெயில்லே இருக்கான்!... அங்கே வேலை கெடைக்குது, கூலி கிடைக்குது, இட்லிசாம்பார், சாப்பாடு எல்லாம் கெடைக்குது... 'இன்னிக்கு உனக்கு ஜெயிலர் சொன்னாக்கூட விடுதலைடா'ன்னு 'அதுக்குள்ளேயா, இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போறேனே!'ங்கிறான்... அதைப் பத்தியெல்லாம்தான் உங்க கதிர்லே தொடர்ந்து வரப் போவுதே?... அப்போ சொல்றேன்!"

சொன்னபடி அவர், 'கதிரு'க்காக வாரா வாரம் என்னிடம் சொல்லிக் கொண்டு வந்ததைத்தான் நீங்கள் இப்போது புத்தக வடிவில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

விந்தன்

சென்னை-30
15.3.72.


========

பதிப்புரை

1971-ல் 'தினமணிகதிரி'ல் நடிகவேள். எம்.ஆர். இராதா வைப் பேட்டி கண்டு அமரர். விந்தனா'ல் தொடராக எழுதப் பட்ட இந்நூல், தற்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூலின் சிறப்பம்சம் கலையுலக விற்பன்னரும், இலக்கிய விற்பன்னரும் இணைந்து தமிழ் மக்களுக்கு இதை வழங்கி யிருப்பது.
இச்சுயசரிதத்தை அமைத்திருக்கும் விதம் வாசகர்களைச் சட்டெனக் கவரும் என நம்புகிறோம். 

இந்நூலைப் படிப்பவருக்கு நடிகவேள். எம்.ஆர். இராதா, தன் சுயசரிதத்தைத் தானே சொல்லக் கேட்பது போன்ற அனுபவம் ஏற்படும். படித்து முடித்த பின்னரும் அவரது குரல் வெகுநேரம் நம் காதுகளில் ஒலிப்பது போன்ற பிரமை ஏற்படும்.

உள்ளது உள்ளபடி, கிட்டத்தட்ட மகாத்மா காந்தியின் 'சத்திய சோதனை போன்று வெளிவந்திருக்கும் இந்நூலை வாசகர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. 

- பதிப்பகத்தார் -

===================

22 கருத்துகள்:

  1. /சிறகுகள் படபடக்க தேவ கன்னியர் வானில் நின்று சந்தோஷப் பூக்களை வாரியிறைத்ததன் காரணம் இப்போது புரிந்தது பெரியம்மாவிற்கு/
    நல்ல சுபமான முடிவு...துரை செல்வராஜ் அவர்களின் ட்ரேட்மார்க். ...வெகு நன்று!

    பதிலளிநீக்கு
  2. /தென்மலையின் சந்தனமே

    தேன்வழியும் செண்பகமே/
    அருமையான வரிகள். பாடலை வெகுவாக ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  3. எம்.ஆர். ராதாவின் பற்றிய செய்தி படிப்பதற்கு சுவையாக இருந்தது. என்னதான் அவர் கருத்துகள் நமக்குப் பிடிக்காமல் இருந்தாலும், எம்ஜியாரை அவர் சுட்டிருந்தாலும், அவரை வெறுப்பது கஷ்டம். எம்.ஆர்.ஆர்.வாசு வேறு டைப். அவருடைய நடிப்பையும் ரசித்திருக்கின்றேன். என்னைக் கேட்டால் அவரால் எம்.ஆர்.ராதாவின் பக்கத்தில் கூட வர முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா..   சரியாக சொன்னீர்கள்.  'அவரே அவருக்கு என்றும் இணையானவர்' என்று பாடலாம்!

      நீக்கு
  4. விந்தனின் புத்தகத்திலிருந்து அவ்வப்போது ஏதாவது எடுத்து விடுங்களேன் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் எடுத்து வைத்திருக்கிறேன். கண்டிப்பாக பகிர்கிறேன்.

      நீக்கு
  5. ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  6. படங்கள் மனதில் நிறைகின்றன...

    பதிலளிநீக்கு
  7. துரை அண்ணா, கதை. எல்லோரும் நல்லவர்களே என்று இனிய குணங்களுடன் சுப முடிவோடு நன்று,

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஓ எம் ஆர் ராதா! இவருடைய நக்கல் நையாண்டி வசன உச்சரிப்பு ஏற்ற இறக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய தனிப்பட்ட விஷயங்களைத் தவிர்த்துப் பார்த்தால். பார்த்த சில காட்சிகளை வைத்துச் சொல்கிறேன்.

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்.....மா மா மாப்ளே!!!! அந்தப் பாடல் காட்சியையும் பாடலையும் மறக்க முடியுமா? நான் எப்பவும் ரொம்ப ரசிக்கும் காட்சி மற்றும் பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   அதைதான் 'அவரே அவருக்கு என்றும்' என்று பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன்!

      நீக்கு
  9. அதில் சிவாஜி பாடலைத் தொடங்கும் போது - நீயே உனக்கு என்றும் நிகரானவன் - என்று தொடங்கும் போது கையை, எம் ஆர் ஆரின் பக்கம் காட்டுவார்!! அது ரொம்பப் பொருத்தமாக இருப்பது போன்று எனக்குப் படும். ஒரு தனி பாணி எம் ஆர் ஆர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாஜி அவர்மேல் ஏகப்பட்ட மதிப்பு வைத்திருந்தார்.

      நீக்கு
  10. சிறுகதை மிகவும் நன்று.

    கிராமத்து மக்களின் வெள்ளந்தியான குணம், எல்லோரும் நல்லவரே என்ற எண்ணம்.

    கதை மிகவும் பிடித்திருந்தது. இருந்தாலும் இன்னும் திருப்பங்களுடன் கொஞ்சம் நீட்டி ஒரு சில வாரங்கள் அதிகரித்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. கதையின் ஊடாக வந்த கவிதை அருமை.

    படங்கள் வெகு அழகு. நன்றாக முயற்சித்திருக்கிறார் அக்கா கீதா ரங்கன்.

    பதிலளிநீக்கு
  12. எம் ஆர் ராதா... இந்தப் புத்தகம் படித்திருக்கிறேன். அவருடைய திறமை, கர்வம், சுய மரியாதை எல்லோரும் அறிந்ததுதான்.

    பலர் சேர்ந்து வளர்த்த மாமரத்தை ஒருவன் சொந்தம் கொண்டாடித் தள்ளிக்கொண்டுபோய் அனுபவிக்கிறார்கள். வளர்த்தவர்களுக்குப் பயனில்லாமல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!