20.3.26

ஒரு 15,000 ரூபாய் தர முடியுமா? ரெண்டு நாள்ல தந்துடறேன்...

 

நண்பன் ஃபோன் செய்தான்.  பணியில் இருந்தபோது எங்களுக்கு அடுத்த நிலை சீனியராக இருந்த ஒருவரைக் குறிப்பிட்டு - பெண் - "உனக்கு ஏதும் ஃபோன் வந்ததா?" என்று கேட்டான்.  அவர் எனக்கு ஃபோன் செய்ய மாட்டார் என்றேன்.  காரணம் கேட்டான்.  சுமார் ஒரு வருடத்துக்கு முன் அவர் என்னிடம் அவசரம் என்று சொல்லி ஒரு தொகை கடன் வாங்கியதையும், இரண்டு நாட்களில் பென்ஷன் வந்தததும் திருப்பித் தந்து விடுகிறேன் என்றும் சொல்லி இழுத்தடித்ததையும், அப்புறம் விட்டேனா பார் என்று மீண்டும் மீண்டும் என்னென்னமோ பேசி, கடுமையாகப் பேசி, அவர் வீட்டுக்கு நானே கிளம்பி வரப்போகிறேன் என்றெல்லாம் பயமுறுத்தி சுமார் இரண்டு மாதங்களில் பணத்தைத் திருப்பி வாங்கிய கதையைச் சொன்னேன்.

"அதற்குதான் கேட்டேன்..   கொஞ்ச நேரம் முன்னால் எனக்கு ஃபோன் செய்து ஆரம்ப குசல விசாரிப்பு, ஐஸ் வைத்தல்களுக்குப் பின் 'ஒரு உதவி செய்ய முடியுமா' என்று கேட்க, நானும் நீ கேட்டது போல IT போல ஏதாவது சந்தேகம் இருக்கும் என்று நினைத்து 'உங்களுக்கில்லாத ஹெல்ப்பா' என்று சொல்ல, உடனே ஒரு 15,000 ரூபாய் கடன் கேட்டார்.  நீ மாட்டிகிட்டு முழித்த உன் அனுபவம் என்னிடம் சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது" என்றான்.

"எப்படி சமாளிச்சே?" 

"பொண்ணு டெலிவரிக்கு வந்தது, நகையை வச்சேன், பழைய வீட்டை விட்டு புது வீடு கட்டிக் கொண்டு வந்திருக்கேன், எனக்கே கடன்னுல்லாம் சொல்லி நழுவிட்டேன்!  நீ உஷாரா இரு"

"நிச்சயம் இந்த முறை என்னிடம் வரமாட்டார்" என்று சொன்னேன்.  அதுபோலவே வரவில்லை.  

இவரிடமாவது என்னமோ பேசி எப்படியோ கொடுத்த கடனை திருப்பி வாங்கி விட்டேன்.  அப்படி திருப்பி வாங்க முடியாத கொடாக்கண்டர்கள் சிலர் இருக்கிறார்கள்.  "ஏன் கொடுத்தே?" என்று கேட்கலாம்.  கொஞ்ச நாட்கள் முன்பு வரை அது என் பலவீனமாக இருந்தது.  

பரஸ்பர நம்பிக்கைதான்.  அவர்கள் சொல்லும் அவர்கள் நிலைகண்டு இரக்கம்தான்.  இவர்கள் கூட இப்படி ஏமாற்றுவார்களா என்று அதிர்ச்சியாக இருந்தது.  அதென்னவோ என்னைப் பார்த்தால்தான் அவர்களுக்கு "புன்னகை முகமா"க தெரிகிறது போலும். அவர்கள் எதிர்பார்ப்பை நானும் ஏமாற்றவில்லை இதுவரை.  இனி ஏமாறுவதில்லை என்று முடிவு.

வாங்கும்போது கல்லும் கரையும் வண்ணம் பேசி, அண்ணா, கண்ணா, நண்பா என்று வாங்குகிறார்கள்.  திருப்பிக் கேட்கும்போது அவர்களுக்கு நமக்கில்லாத சிரமங்கள் எல்லாம் வரிசை கட்டி நின்று விடுகின்றன.  கேட்காமலேயே கொடுத்தவர் இதுவரை எவருமில்லை.  இப்போதெல்லாம் இரக்கமே படுவதில்லை.  இதுவரை என்னை ஏமாற்றியவர்கள் புன்னகைப்பார்கள்.  இறைவன் அவர்களை ரட்சிப்பாராக.

இன்னும் சில விஷயங்கள் இந்த கடன் சம்பந்தமாக..   அடுத்த வாரம் சொல்கிறேனே...

=========================================================================================

பிரயாண அனுபவம் - பழைய விகடனில் வந்த ஒரு ஏமாந்த அனுபவம்.  இதே போன்ற ஒரு சம்பவம் நான் அலுவலகம் செல்ல ஆரம்பித்த நாட்களில் மதுரை பேருந்து நிலையத்தில் வத்ராப் செல்லக் காத்திருந்தபோது நிகழ்ந்தது.  அதை முன்னர் பகிர்ந்திருக்கிறேன்!

காசிப்புடவை -

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் நானும், உறவினர்களும் டில்லி, ஆக்ரா, ஹரித்வார் முதலிய இடங்களுக்குப் போய் வந்தோம். டில்லியிலிருந்து அலகாபாத் போய், அங்கிருந்து இரவு ஒரு மணிக்குக் காசி போய்ச் சேர்ந்தோம். மறு நாள் காலை. காசியில் சில கடைகளுக்குப் போய் விட்டு ஸ்டேஷனுக்கு வந்தோம். . ரயில் வந்ததும் எல்லோரும் ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டோம். அதில் ஒரு புடவை உட்கார்ந்திருந்தார்." 

அவர் எங்களைக் கண்டதும், "ஒரு (புட்வை 'ஆட் ரூப்யா' என்று கூறிக் கொண்டே எங்களை அணுகினார்.

காசியிலிருந்தாலென்ன, ராமேஸ்வரத்தில் இருந்தாலென்ன! பெண்கள் பெண்கள்தானே! புடவை என்றதும் நான், நீயென்று போட்டி போட்டுக் கொண்டு விலை பேசினோம் ! நான் ஒரு புடவை 'தோ ரூப்யா' என்றேன். என்னுடன் வந்த ஒருத்தி "ரெண்டு ரூபாய் கேட்பது ரொம்ப அநியாயம்" என்று எங்களிடம் கூறியபடி, புடவைக்காரரைப் பார்த்து 'சார் ரூப்யா' என்றாள்.

கோடை மழை எதிர்பாராது கொட்டுவது போல் அந்த வியாபாரி, "சார் ரூப்யா சீக்கிரம் எடுங்கள்... ஐந்து புடவைகள் இருக்கின்றன.  20 ரூபாய்..சீக்கிரம் கொடுங்கள். ரயில் புறப்படப் போகிறது என்று துரிதப் படுத்தினார். புடவைகள் நன்றாகவே இருந்ததால், நாங்கள் பெருமிதத்துடன் ஒருவரே எல்லோருக்குமாக 20 ரூபாயைக் கொடுத்துப் புடவைகளை வாங்கிக் கொண்டோம். ரயிலும் நகர்ந்தது. பெண்களுக்கே உரிய ஆவலுடன் அவரவர் புடவையை எடுத்து ஆராய ஆரம்பித்தோம்.

அந்தோ! அக் காட்சியைப் பார்க்கப் பதினாயிரம் சுண்கள் கூடப் போதாது. எட்டு முழம் வேஷ்டியை அழகாகக் கிழிசல் ஒட்டிச் சாயம் தோய்த்துப் பிரிண்ட் செய்திருந்தது. எட்டு முழக் கிழிசல் வேஷ்டியை எப்படித் தான் தைத்தாரோ? அதை மடித்தார்! சாயம் தோய்த்தார்! கொடுத்தார் ! பிடித்தார் ஓட்டம்!... இந்த அக்கிரமம் காசிக்குத்தான் அடுக்கும் போலும்!

* காசிக்குப் போனாயே எதை விட்டாய்?" என்றாள் என் மூத்த மகள். நான் என்னத்தைச் சொல்ல அவளிடம்! காசைச் கோட்டை விட்டேன். என்றேன்! 

- திருமதி ஏ. ஜகன்னாதன்.

==========================================================================

படப்பிடிப்புக்கு தாமதமாக வந்த ரகுவரன் மேல் கடுப்பில் இருந்த இயக்குனர் ரவிக்குமார் ரகுவரனுக்காக வைத்திருந்த 10 பக்க டயலாக்கை தூக்கி எரிந்து விட்டு நீ இந்த ஒரு டயலாக்கைச் சொல் போதும் என்று சொன்ன சம்பவமும், ரகுவரன் செய்த சம்பவமும்...  அப்போதைய புகழ்பெற்ற காட்சி இதும் புரியாத புதிர் படத்தில்.  கே எஸ் ரவிக்குமாருக்கு முதல் படம்.  ஆரம்ப கால ரகுவரன்.  கடைசியில் ரகுவரன் அலுத்துப்போய் சிகரெட்டைத் தூக்கிப்போட்டு காட்சியை முடிக்க அங்கேயும் ஒரு I Know சேர்த்தாராம் ரவிக்குமார்.





==========================================================================================

சாண்டில்யன் :  

பைண்டிங் புத்தகம் கைக்கு கிடைத்தால் அதிலிருந்து சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு லதாவின் ஓவியங்களை பகிர்ந்து விடுவேன்.  எங்கோ ஒளிந்துகொண்டு ஆட்டம் காட்டுகின்றன அவை!

சாண்டில்யன் பெண் வர்ணனை.

விசாலமான அந்த அறையின் நடுவில் போடப் பட்டிருந்த மஞ்சத்தில் கையில் அதுகாறும் தாங்கி வந்த அந்தப் பெண்ணைக் கிடத்தி, யவன வீரனை விளித்து விளக்குகளையும் தூண்டச் சொன்ன பின்புதான் கடற்கரையில் விதி தன் காலடியில் வீழ்த்தியவளின் வனப்பு எத்தன்மையது என்பதை இளஞ்செழியன் பூரணமாகப் புரிந்து கொண்டான்.

மஞ்சத்தில் கிடத்திவிட்ட அந்த நேரத்திலும் மூர்ச்சை முழுதும் தெளியாமலிருந்தாலும், இளஞ்செழியன் கடற்கரையிலிருந்து அவளைத் தூக்கி வந்தபோது ஏற்பட்ட அசக்கலில் அவள் குடித்திருந்த கொஞ்ச நீரும் வாய் வழியாக வெளிவந்து விட்டதால் அவள் ஓரளவு சுரணை வரப்பெற்றுப் பஞ்சணையில் மெள்ள அப்புறமும் இப்புறமும் அசைந்தாள். புஷ்பக் கொத்துகளுடன் காற்றிலாடும் பூஞ்செடியைப் போல் அவள் மெள்ள அசைந்தபோது ஈர உடை சற்றே நெகிழ்ந்ததால் லேசாக வெளிப்பட்ட அவள் தேக லாவண்யங்களின் வெண்மை புதுத் தந்தத்தையும் பழிக்கும் தன்மையைப் பெற்றிருந்ததைக் கண்ட இளஞ்செழியன், இப்படியும் ஒரு வெண்மை படைப்பில் இருக்க முடியுமா? என்று பிரமித்துப் போனான். 

அதிக வெண்மையான வெள்ளத்தில் புஷ்பத்தையும், செவ்வரி ஓடாத அல்லி மலரின் உள்ளிதழ்களையும்கூட உவமை சொல்ல முடியாத அத்தனை வெண்மை வாய்ந்த அந்தக் கட்டழகியின் அழகிய வதனத்தைச் சூழ்ந்த ஈரத்தால் கன்னத்தில் ஒட்டிக்கொண்டிருந்த கூந்தல் லேசாகப் பொன்னிறம் பெற்றிருந்ததாலும் நெற்றியின் விசாலத்தில் படர்ந்திருந்த அயல்நாட்டுச் சாயையாலும் தான் தூக்கி வந்தது ஒரு யவனப் பெண்மணிதான் என்பதை நிர்ணயித்துக் கொண்ட இளஞ்செழியன், இயற்கை மிகவும் செழுமையாக்கி யிருந்த அவள் வசீகர எழிலனைத்தையும் பருகிக் கொண்டு நின்றான்.

பிரதி தினம் காவிரிப்பூம்பட்டினத்தில் எத்தனையோ நாடுகளின் அழகிகளைப் பார்த்து அலட்சியத்துடன் அசட்டை செய்து சென்றிருக்கும் அவன் கண்கள் கடலில் கண்டெடுத்த அந்தக் கட்டழகியின் இணையற்ற பேரெழிலில் சிக்கி மீளமாட்டாமல் தவித்தன. 

கிரேக்க நாட்டின் சலவைக் கல்லால் செதுக்கப்பட்ட தெய்வ மங்கையரின் முகத்தைப் போல உயிருள்ள பெண்மணிகளுக்கும் முகம் இருக்க முடியும் என்று அவள் முகத்தை அன்று கண்ட பின்புதான் இளஞ் செழியன் நம்ப முற்பட்டான். வெள்ளை நுதலைக் கண்களி லிருந்து தடுத்து நின்ற அவள் கரிய புருவங்கள் வேண்டு மளவுக்குத் திட்டமாக வளைந்திருந்தன. சற்றுக் கீழேயிருந்த கண்ணிமைகள் சங்கு மலரின் மேல் மூடியைப்போல் வெண்மையுடனிருந்ததன்றி இமை ரோமங்களும் சங்கு மலரின் நுனிக் கறுப்பைப் பெற்றிருந்ததால் இயற்கை அவள் கண்ணுக்கென்று பிரத்தியேகமாக வகுத்த சிமிழ் போல் கண்களை மூடியிருந்த மெல்லிய சருமங்கள் காட்சியளித்தன. 

கடல் சில சமயம் விசிறிபோல் ஒதுக்கும் கிளிஞ்சலின் வேலைப்பாடு உயர்ந்ததா அல்லது அவற்றைப் போலவே கண்களை மூடிக்கிடந்த இமைகளின் அழகு உயர்ந்ததா என்பதை அறியமாட்டாமல் திணறினான் இளஞ்செழியன். இயற்கையின் அந்தச் சிமிழுக்கு அப்பால் வழவழப்பாக எழுந்து சற்றே குழி விழுந்து கிடந்த அவள் கன்னங்களில் சமுத்திர மணல் உறுத்தியதால் புள்ளிப் புள்ளியாக எழுந்திருந்த ரத்தச் சிவப்புகள் வைரத்தில் இழைக்கப்பட்ட சிவப்புக் கற்கள்போல் தீபத்தில் பிரகாசித்ததைக் கண்ட இளஞ்செழியன், 'இதைப் பார்த்துத்தான் அன்னை பூமி தன் கர்ப்பத்தில் வைரங்களையும், நீரோட்டமுள்ள சிவப்புக் கற்களையும் சிருஷ்டித்துக் கொண்டிருக்க வேண்டும்' என்று எண்ணினான். ஆனால், மணல் உறுத்தியதால் கன்னத்தில் தெரிந்த அந்தப் புள்ளிகள் அதிகச் சிவப்பா, அல்லது நீர் தழுவியதால் பளபளத்துச் செம்பருத்தி மலரின் இதழ்களைப் போல் மிக மிருதுவாகத் தெரிந்த உதடுகள் அதிகச் சிவப்பா, என்பதை மட்டும் பல நூல்களையும் கற்றுத் தெளிந்த அந்தப் பாண்டிய நாட்டு வீரனால் நிர்ணயிக்க முடியவில்லை.

மஞ்சத்தில் கிடந்த அந்த யவன மங்கையின் உடல், சிறுக்க வேண்டிய இடங்களில் சிறுத்து எழுச்சி பெற வேண்டிய இடங்களில் நன்றாக எழுச்சி பெற்றிருந்ததால் யௌவனத்துக்கு இலக்கணம் வகுக்கவே இயற்கை அவளை உருவாக்கியது போல் தோன்றியது இளஞ்செழியனுக்கு. தன் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் கடலரசன் தன் அலைக்கரங் களால் அவள் ஆடையில் விளைவித்த அலங்கோலத்தினால் மறைவு குறைந்து அழகு எழுந்து நின்றதன் விளைவாகப் பார்த்த இடங்களிலெல்லாம் பல வாளிகளால் தாக்கப்பட்டு, புயலில் அகப்பட்ட மரக்கலம்போல அல்லாடும் மன நிலைக்கு வந்துவிட்ட இளஞ்செழியன் பக்கத்திலிருந்த யவன வீரனை நோக்கித் திரும்பி, “இந்தா! ஒரு சீலையை எடுத்து வந்து இவள் உடலை மூடிவிடு" என்று பதறிக் கூறினான்......

=======================================================================================

மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர்.  "யாயும் ஞாயும் யாராகியரோ" என்பது சங்க இலக்கியமான குறுந்தொகையின் (பாடல் 40) புகழ்பெற்ற காதல் பாடலை இவர் பாணியில் 

உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவநல்லூர் 
நீயும் நானும் ஒரே மதம்
திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட  உன்றன் தந்தையும் என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
மைத்துனன்மார் எனவே செம்புலப் பெயல்நீர் போல
அன்புடைய நெஞ்சம் கலந்தனவே. 

என்று எழுதியவர்.


துயிலும்பொழு திசைக்கும் இளந் 
தோகைமொழி கேட்டுப் 
பயிலும் ஒரு கிளியின் மொழி 
பண்யாழ்மொழி எல்லாம் 
உயிரில் எமதுளத்தில் உரம் 
ஊட்டும் தமிழாமோ?

சந்த இனிமைக்கும் பா நடைக்கும் ஒரு காட்டாகத் தக்க இப்பாட்டுப்போல, இத்தொகுப்பில் உள்ள பல பாக்கள் சுவைஞனின் உள்ளத்தைத் தொடத்தக்கன.

மீரா மிகமிக அடக்கமானவர். அதனால் இன்றைய அரசியலாரால் கண்டு கொள்ளப்படாதவர். 'சினிமா' வெளிச்சத்தில், துள்ளித் திரியும் விட்டில்களிடையே, இவர்தம் பாடல்கள் 'கற்று அடங்கல், ஆற்றுவானது செவ்வி உடையன.

அறம் காத்திருந்து பார்ப்பதுபோல இக்கவிதைகளும் காலம் கடந்தாலும் மக்களால் கண்டு கொள்ளப்படும் என்பது உறுதி.

தமிழண்ணல்
ஏரகம்
சதாசிவ நகர்
மதுரை


மீராவின் முன்னுரையில் (21 பக்கங்கள்) சிறு பகுதி.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்.

இலக்குமி அம்மாளும் எஸ்.மீனாட்சி சுந்தரமும் என் மாதா பிதாக்கள்.  புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்குரு. மகாகவி பாரதி என் தெய்வம்.
என் குருவின் மூலமே என் தெய்வத்தை தரிசித்தேன். பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசன் ஆனேன்.

பாவேந்தரை ஒரே ஒருமுறை தான் பார்த்திருக்கிறேன். சிவகங்கை அரசர் பள்ளிக்கு திரு. நாராயணன் சேர்வை தலைமை ஆசிரியராய் இருந்தபோது வந்திருந்தார். நான் அப்போது மன்னர் கல்லூரி மாணவன்.

பாவேந்தர் பேச்சைக் கேட்கப் பள்ளிக்குப் போனேன். பாவேந்தர் பேசினார். இராசகம்பீரத்தோடு பேசினார். தமிழ் உணர்ச்சி பொங்கி வழிந்தது. மொழிப் பற்றும் இனப்பற்றும் மேலோங்க முரசறைந்தது போல் இருந்தது.

இராமநாதபுரத்தில் பள்ளியில் படிக்கும் போதே அவரைப் படித்து மயங்கிய நான் அவர் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டிருக்கிறேன். அந்த வாய்ப்பு சிவகங்கையில் கிடைத்தது. கூட்டம் முடிந்ததும் அவரை உணவுண்ண அழைத்துச் சென்றார்கள். அவருக்கு வணக்கம் தெரிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் என் கூச்ச சுபாவம் அவரை நெருங் விடவில்லை.

அப்புறம் கடைசிவரை அவரைப் பார்க்க முடிய வில்லை. கவிஞர்கள் முருகுசுந்தரம், தமிழன்பன், பொன்னடியான் போல் பார்க்க, பழகக் கொடுத்து வைக்க வில்லை.

அவர் சின்ன வயது முதல் எழுபது தொடக்கம் வரை நான் திராவிட இயக்கத்தில் ஒன்றியிருந்ததற்கு அண்ணாவைப் போல பாவேந்தரும் மற்றொரு காரணம். கவிதைகளைப் படித்துச் சுவைத்த நெஞ்சம், அவரைப் போலவே என்னையும் திராவிட இயக்கப்பாடல்களைப் புனையத் தூண்டியது.
முரசொலி முதலிய பத்துக்கு மேற்பட்ட தி.மு.க இதழ்களில் அறுபதுகளின் ஆரம்பத்தில் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். மதுரையிலிருந்து வெளிவந்த கருமுத்து தியாகராசனாரின் 'தமிழ்நாடு' நாளிதழின் ஞாயிறு மலர்களில் அரசியல் அல்லாத பொது நிலைக்கவிதைகளை வெளியிட்டிருக்கிறேன்.

இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, தனித்திராவிட நாடு தமிழ் மறுமலர்ச்சி, சாதி மதொழிப்பு, கடவுள் மறுப்பு, சமூக சீர்திருத்தம், சமத்துவ சமுதாயம், கலப்புத் திருமணம் முதலியவை என் பாடுபொருள்களாயின. கவிஞன் என்றால் காதலுக்குக் குறைச்சல் இருக்காது. (அறிஞர் தமிழண்ணல் காதலை ஒரு பக்தி இயக்கமாக வளர்த்தவன் நான் என்கிறார்.) இயற்கைப் புனைவும் இருக்கும்.
59, 60, 61 ஆண்டுகளில் தியாகராசர் கல்லூரியில் முது கலை படிக்கும் போது இத்தகைய கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். பத்திரிகைகளில் அவ்வப்போது வருவதைப் பார்த்துப் பரவசப்படுவேன்.

அப்போது கவிக்கோ அப்துல் ரகுமான் என் வகுப்புத் தோழர். நான் பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்கு முன் சில கவிதைகளை அவரிடம் கொடுப்பேன். அவர் என்னுடைய பச்சையான அரசியல் கவிதைகளை வெளியிடாதீர்கள் என்று தடுப்பார். எதிர்ப்பார். அவருக்கு சுத்தக் கவிதை தான் (Pure Poetry) பிடிக்கும்..........

காக்கைக்கு.....!

தன்சாதி என்று தமிழ்க்கவிஞன் பாரதியும் 
உன்சாதி யைக்கண்(டு) உவகையுடன் பாட வைத்தாய்; 
பாடத் தெரியாப் பறவையே! காக்கையே! 
காடு மலையெங்கும் கண்டபடி சுற்றிப்பின் 
பாட்டுக் கலைஞானப் பண்டிதன் நான் வாழுகின்ற 
வீட்டுச் சுவர்மீது வேந்தனைப்போல் வீரமுடன் 
வந்தே அமர்கின்றாய்; வந்தவே கத்தில்நீ 
முந்தி எழுப்புகின்றாய் காகா எனும்முழக்கம்!

என்ன கருத்தில் நீ காகாகா என்கின்றாய்? 
'என்னைக்கா' என்றோ இயம்புவாய்? மாட்டாயே! 
எண்ணம் புரிகிறது; சூழ்ந்துவரும் ஏழ்மையினால் 
உண்ண உணவின்றி வாடும் உயிர்களைத்தான் 
கா என்பாய் போலும்! கவிதைத் திருநாட்டைக் 
கா என்பாய் போலும்! 
கருங்குயிலின் அண்ணனே!

நீ நன்றாய்ச் சொல்கின்றாய்; நீ வாழ்க! உன்கருத்தை 
என்மக்கள் உணர்ந்தே எழும்நாள்தான் எந்தாளோ? 
பொன்னாள், புதுநாள் புவனத்தில் அந்நாளே!

தான்மட்டும் தின்கின்ற தன்னலமில் லாததனால் 
வான்தொட்டு மீள்கின்ற வல்லமைநீ பெற்றாயோ? 
உன்னைக்கண் டிந்த உலகம் திருந்தாதா? 
என்ன உலகம் - இதில்நான் பிறந்தேனே ....!

அன்னத்தைத் தூதாய் அனுப்பினனாம் ஓர் அரசன்; 
உன்னை நான் தூதனுப்ப உத்தேசம்; நீ உதவு! 
சேரி குறைவற்ற சென்னையில் என்இன்ப 
வாரிதியாள் ஏக்கம் வளர்ப்பாள்; அவளிடம் 'உன் 
சிந்தைக் குரியான் சிவகங்கை யில் இருந்து 
வந்துகொண் டுள்ளான்; வருந்தாதே;' என்று நீ 
கூறு! புறப்படு! கூறினால் கூட்டோடு 
சோறு படைப்பாள், சுவை!

==================

பெண்ணாகப் பிறந்தேனா?

பிறந்ததுதான் பிறந்தேன் நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?

துகிலுக்குள் மூடுபடாத் 
தூயமுகம் காட்டித்தான் 
முகிலுக்குள் போய்நிலவை 
முகம்மூடச் சொன்னேனா? 
பிறந்ததுதான் பிறந்தேன் நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?

முள்ளில்லாத முல்லைப்பூ 
முறுவலிக்கும் போதில்என் 
வெள்ளைப்பல் வெளிச்சமிட்டு 
'வெவ்வெவ்வே' என்றேனா? 
பிறந்ததுதான் பிறந்தேன்நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?

தீந்தேனைச் சிந்துகின்ற 
தென்னாட்டுப் பூக்களைஎன் 
கூந்தலிலே சிறைவைத்துக் 
குதூகலம்தான் அடைந்தேனா? பிறந்ததுதான் 
பிறந்தேன் நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?

பலாச்சுளைபோல் மின்னும்என் 
பாதநடம் பார்த்துமயில் 
கலாபத்தை விரித்தாடக் 
கற்றுத்தான் கொடுத்தேனா? 
பிறந்ததுதான் பிறந்தேன்நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?

மரக்கிளையில் அமர்ந்திருக்கும் 
மாங்குயில்கள் மயக்கும்என் 
குரல்கேட்டுப் பின்கூவக் 
குருவாய்நான் ஆனேனா? 
பிறந்ததுதான் பிறந்தேன்நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?

நள்ளிரவு நாடகத்தின் 
நகைச்சுவையாய் வந்துதித்த 
பிள்ளைக்குப் பாலூட்டும் 
பெரும்பேறு பெற்றேனா? 
பிறந்ததுதான் பிறந்தேன்நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?


- மீரா கவிதைகள் -
14.10.63

=========================================================================================

பாஹே பக்கம்!
அம்மா மார்ச் 27, 2002 ல் மறைந்ததும் அப்பா மிகவும் மனமொடிந்து போனார்.  உடனடியாக அம்மாவின் நினைவுகள் பற்றிய புலம்பல்களாக ஒரு தொகுப்புஇ தயார் செய்து 'ஹேமாஞ்சலி' என்று தலைப்பில் புத்தகமாக்கி உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் தந்தார், அனுப்பினார்.  இலக்கிய ரீதியாக அப்பாவை நன்கு அறிந்திருந்த, கி ராஜேந்திரன், திருப்பூர் கிருஷ்ணன், திலகவதி ஐ பி எஸ் ஆகியோருக்கெல்லாம் அனுப்பினார்.  அதில் திலகவதி அவர்களிடமிருந்து வந்த கடிதம் 


மனதளவில் அவர் எவ்வளவு தனிமைப்பட்டுப் போயிருந்தார் என்பது அப்போது புரிந்ததை விட இப்போது அதிகம் புரிகிறது.

இரண்டு மாதங்களுக்குப் பின் எங்களுக்கு அவர் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள்...  அவர் எப்போதுமே சுருக்கமாக, கொஞ்சமாக எதுவும் எழுத மாட்டார். அதேபோல அவர் கையெழுத்தைப் புரிந்து கொள்வதும் சற்று  சிரமமாக இருக்கும்.

எவ்வளவோ சொல்ல வேண்டும்.  எங்கே ஆரம்பிப்பது?  ஏதாவது ஒரு இடத்தில்.  கடித புல்லட்டீன்ஸ் இனி என்னிடமிருந்து உங்கள் நால்வருக்கும் என் எண்ணங்கள் கருத்துக்கள் திட்டங்களைச் சொல்ல  - பக்கத்தில் இருக்கும் பாரதிக்கும் (பாரதி என் அண்ணன்.  ஸ்டோர் போன்ற குடித்தனத்தில் அந்தப் பக்கக் குடித்தனத்தில் மனைவி, மகனுடன் வசித்தார்) சேர்த்து - அவ்வப்போது எழுத அனுப்ப நினைக்கிறேன்.   ஒரு கடிதம் இம்மாதிரி எழுதுவது, ஜெராக்ஸ் நாலு பிரதிகள் எடுத்து நால்வருக்குமே அனுப்புவது என்று திட்டம்.  கம்யூனிகேஷன் கேப் என்பது நம் எல்லோரிடம் எப்போதும் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. அது இனி கூடாது. 

இவ்வரிசையில் முதல் ஒன்று அல்லது இரண்டு கடிதங்களை சில நாட்களுக்கு முன் ஸ்ரீராம், உஷாவுக்கு (என் தங்கை) அனுப்பி இருக்கிறேன்.  அவற்றின் ஜெராக்ஸ் நகல்களை மற்ற மூவருக்கும் அனுப்ப நினைக்கிறேன். என்ன எழுதினோம் என்று மறந்து விடுவதால் என்னிடமும் ஒரு காப்பி இருக்கும்.  

இனி கடித துவக்கத்தில் வரிசை எண் கொடுத்து விட்டால் மறுபடியும் நினைவூட்ட வசதியாக இருக்கும்.  இது இரண்டாவது கடிதம். 2 /2002.  எழுதுகிற எனக்கு இருக்கிற ஆர்வம், படிக்கிற உங்களுக்கு இருக்குமா, இதை ஒரு தொந்தரவாக நினைப்பீர்களா என்று தெரியவில்லை.  சென்ற கடிதம் பாரதி, உஷாவுக்கு, ஸ்ரீராம், உஷாவுக்கு தனித்தனியாக எழுதி மற்றவர்களுக்கும் நகல் தந்துவிட சொல்லி இருந்தேன்.  

ஃபோனில் ஸ்ரீராம் படித்து உஷா கேட்டு விட்டதாக என்னிடம் சொல்லப்பட்ட போது ஒரு அதிருப்தி தான் எனக்கு ஏற்பட்டது.  இருவர் தரப்பிலும் உள்ள அசிரத்தையே இதற்கு காரணம். வரிவரியாக படித்து மனசில் வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு தயாராக இல்லாவிட்டால் நான் சிரமப்பட வேண்டியிராது.  நான் எழுதுவதில் ரெகுலர் பீரியாடிசிட்டி இராது.  காஞ்சி நாராயணன் ( அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர், காஞ்சியில் வசித்தவர்) நடத்துகிற ஒரு பத்திரிகை தலைப்பில் 'நினைத்தபோது வரும் இதழ்' என்று போட்டிருந்தது.  அதுபோல என் கடிதமும் நினைத்த போது தான் வரும். 

என் மற்றொரு மன பலஹீனத்தையும் இங்கு சொல்லி விட வேண்டும்.  நேற்று செய்ய வேண்டும் என்று நினைப்பது இன்று வேண்டாம் என்றும் தோன்றுகிறது.  பல விஷயங்களை, பலவற்றை நினைத்து செய்யவில்லை. ஆனால் கடிதம் எழுதுவது அனேகமாக அப்படி விடாது.  என்ன...  ஜெராக்ஸ் தபால் OR  குரியர் செலவுகள் அதிகமாகும்.  முதலில் ஆரம்பிப்பதால் முன்னுரை இது பற்றி இப்போது நீண்டு விட்டது.  இனிவரும் கடிதங்களில் ஸ்டிரெயிட்டாக விஷயங்கள் மட்டுமே இருக்கும்.  நீங்கள் செய்ய வேண்டியது அடுத்தடுத்து வரிசையாக Tag கில் கோர்த்து. ஒழுங்காக பைல் செய்து வைப்பது. (நாங்கள் அதைச் செய்யவில்லை) எனக்கு ரகசியம் பிறருக்குத் தெரியக்கூடாது என்றெல்லாம் மறைக்க இதுவரை போல இனியும் இப்போது ஏதுமில்லை. எனவே நீ என் கடிதங்களை யாரிடம் வேண்டுமானாலும் காட்டலாம். 

முன்னுரையின் முக்கியமான இன்னொரு பகுதி - கடிதத் தலைப்பை பார்த்தீர்களா அல்லவா? -  இது அப்பா மட்டும் எழுதுவது அல்ல. அம்மா அப்பா எழுதுவது.  அப்படி நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.  என் குரலில் கை மூலம் ஹேமாவும் பேசுகிறாள் .  அவள் கருத்துகளே என் மூலம் சொல்லப்படுகிறது. அவள் விரும்பாதது, அவளுக்கு பிடிக்காதது எதுவும் நான் சொல்லவும் இல்லை, செய்வதும் இல்லை என்பதால். 

இப்படி ஒரு கடிதத் தொடரை ஆரம்பிப்பது என்பது சில வாரங்களாகவே என் மனதில் ஊறிக் கொண்டிருந்த விஷயம்.  நான்கு நாட்களுக்கு முன்பே இதன் இணைப்பாக சில பழைய, புதிய கவிதைகளை எழுதி வைத்திருக்கிறேன். கவரிங் லெட்டர் உடன் அவர்களுக்கு நகல் எடுக்க அவை காத்திருக்கின்றன. 'அன்று அப்படி'  - 'இன்று இப்படி' என்ற தலைப்பில் அக்கவிதைகள்.  என்னை ஒளித்துக் கொள்ள முடியாதவை ;  அன்றும் - இன்றும்.  'அன்றும்' ஒரே ஒரு டோஸ்தான் - ஒரு ஐந்து ஆறு.  இன்றும் ஹேமாஞ்சலி II  என்ற வரிசையில் இப்போதே 5, 6 - இனியும் தொடரக்கூடும்.  மனநிலையை பொறுத்தது. இவற்றோடு 'ஹேமாஞ்சலி'யில் விட்டுப் போன 'ஒரு மகாசமுத்திரத்தின் மேலும் சில துளில்கள்' என்றும் பல நினைவுகள் தொடரும்.

==============================================================================================

வினுவின் ஓவியங்களை சரித்திரக் கதைகளுக்கு பார்த்திருப்பீர்கள்.  சமூகக் கதைகளுக்கு அவர் ஓவியங்கள் சில.. அப்படியும் ஒரு வரலாற்றுப் பாத்திரம் வந்து விடுகிறது!






===============================================================================================

கேட்டுப்பாருங்களேன்...  இளையராஜாவின் மேதைமையை டாக்டர் நாராயணன் எப்படி எடுத்து நமக்கு சொல்கிறார் கேளுங்கள்.  அவர் சொல்லும் 'என்னதான் சுகமோ' பாடல் எனக்கும் பிடிக்கும் என்றாலும் எப்போதாவது கேட்கும் லிஸ்ட்டில் வைத்திருந்தேன்.  அந்தப் பாடலின் அருமையை இவர் சொன்னபின் அதன் சிரமங்கள், கஷ்டங்கள், நுணுக்கங்கள், இனிமை தெரிகிறது.  ஸ்ரோதஸ்வினி அல்லது உதயசந்திரிகா ராகம். கூட கௌரிமனோகரியும் சேர்கிறது. 

"இளையராஜாடா" என்று மனம் விம்முகிறது. இவர்கள் எல்லாம் நம்மை பரவசத்தில் ஆழ்த்த வந்த எவ்வளவு பெரிய லெஜண்ட்ஸ் என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறது.

10 கருத்துகள்:

  1. கடன் என்றதும் நான் இளைஞனாக இருந்த காலத்திலேயே என் அப்பா சொன்ன அறிவுரை நினைவுக்கு வருகிறது. நண்பன் கேட்டால், வேறு வழியில்லை என்றால் இரண்டு ரூபாய் கொடு. திரும்பி வராது. கடன் கொடுக்கக்கூடாது என்ற அனுபவம் கிடைக்கும் என்றார். கடன் எப்போதுமே திரும்ப வராது. அப்போதிருக்கும் மனநிலை (வாங்கும்போது) காரியம் முடிந்ததும் மறைந்துவிடும்.

    இதுக்கு உதாரணம், நமக்கு எந்த அவசர உதவி தேவைப்படும்போது நமக்கு இருக்கும் அவசரமும், உதவி கிடைத்தவுடன் ஏற்படும் நன்றி உணர்ச்சியும் விரைவில் மறந்துபோய்விடும். அவருக்கே உதவி தேவைப்படும்போது அந்த நன்றியுணர்ச்சி இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.  ஆரம்ப காலங்களில் ரொம்ப எச்சரிக்கையாகத்தான் இருந்தேன். 20 ரூபாய், 50 ரூபாய் கொடுத்து, அது திரும்பாவிட்டால், அவர்களை புரிந்து கொண்டு அவர்களே மறுபடி கேட்டால் அந்த சின்னத் தொகையையே திருப்ப முடியாத நீங்கள் இதை எப்படி திருப்புவீர்கள் என்று மறுத்திருக்கிறேன்!  பின்னர் என் முகம் புன்னகைமுகமாகி விட்டது!

      நீக்கு
  2. தனிமை கொடிது. அதிலும் மனைவிக்குப் பின்னான வாழ்க்கை கஷ்டம்.

    உங்கள் அப்பாவின் உணர்வு புரிந்துகொள்ளக்கூடியது.

    அன்பு எப்போதும் கீழிருந்து மேல் செல்லாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் எங்களுக்கு அப்போது எழுதிய கடிதத்தின் சில உணர்வுகள் இப்போது புரிகின்றன.

      நீக்கு
  3. மீராவின் கவிதைகள் அருமை.

    நல்ல காலத்தையெல்லாம் அரசியல் சார்ந்த பயணத்தில் வீண்டித்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  திராவிட மாயையில் முழுகி விட்டார்.

      நீக்கு
  4. சாண்டில்யன் வர்ணனைகள், காதல் உரையாடல்களை நான் என்றுமே படித்ததில்லை. பக்கங்களைப் புரட்டிவிடுவேன்.

    இளஞ்செழியன் குதிரையில் காட்டுப் பாதையில் மாலை மங்கிய இரவுப் பொழுதில் வந்தான் என்பதை நாவல் ஆரம்பத்தில் மூன்று நான்கு பக்கத்துக்கு எழுதும் அவர் உத்தி பல சமயங்களில் கடுப்படிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளஞ்செழியன் குதிரையில் வரமாட்டான்.  நடந்துதான் வருவான்.  நீங்கள் அப்போது படித்திருக்க மாட்டீர்கள் என்றுதான் இப்போது கொடுத்திருக்கிறேன்...  ஹா..  ஹா..  ஹா..  சாண்டில்யப் பக்கங்கள் தொடரும்!

      நீக்கு
  5. போர் உத்தி, வர்ணனைகளை அவரைப்போல கண்ணில் கொண்டுவந்தவர்கள், இதிஹாசங்களைத் தவிர வேறு எவருமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  ஆஹா..  இதோ..  இப்போது யவனராணி மீள் வாசிப்பில்..  கொஞ்சம் கொஞ்சமாக ருசித்துக் கொண்டிருக்கிறேன்.  

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!