நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 10
சென்ற வாரம் ஆளவந்தார், தன் சிஷ்யர்களைக் கூட்டிக்கொண்டு திருவனந்தபுரத்திலிருந்து மீண்டும் திருவரங்கத்துக்கு பயணப்பட்டார் என்று எழுதியிருந்தேன். ஆளவந்தார் திருவனந்தபுரத்திற்கு அவசர அவசரமாகப் பயணப்பட்டபோது தன்னுடைய சீடர்களுள் ஒருவரான தெய்வவாரியாண்டான் என்பவரை திருவரங்கத்திலேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தார். ஆச்சாரியாரின் பிரிவைத் தாங்கவொட்டாமல் தெய்வாரியாண்டானுக்கு உடல் நலம் குன்றிற்று. வைத்தியங்கள் பலிக்காததால், ஆளவந்தாரைப் பிரிந்ததால்தான் இந்த நோவு என்பதைப் புரிந்துகொண்டு, அவரை திருவனந்தபுரத்துக்கே போகச் சொன்னார்கள். தெய்வவாரியாண்டானும் சந்தோஷத்துடனே திருவனந்தபுரத்தை நோக்கிச் சென்றார். அந்தச் சமயத்தில் ஆளவந்தார், திருவனந்தபுரத்தைவிட்டுப் புறப்பட்டு கரமனை ஆற்றுப் பக்கத்தில் வந்துவிட்டார். தெய்வாரியாண்டானும், ஆளவந்தாரை அங்குச் சந்தித்து மிக்க மகிழ்ச்சியுற்றார். ஆளவந்தார், தெய்வவாரியாண்டானை, போய் அனந்த பத்மனாபரைச் சேவித்துவிட்டு வாரும், நாம் காத்திருக்கிறோம் என்று சொல்ல, அதற்கு தெய்வவாரியாண்டான், அடியேனுடைய தெய்வம் நீர் இருக்க, அனந்த பத்மனாபரை நான் சேவித்து என்ன செய்யப்போகிறேன் என்று சொல்லிவிட்டார். இதுதான் அப்போது இருந்த ஆச்சார்யார்-சிஷ்ய உறவு.
இதுபோல பல உதாரணங்களை குருபரம்பரையில் நாம் காண முடியும். அவற்றைத் தகுந்த இடங்களில் எழுதுகிறேன்.
ஆளவந்தார் குருகைக்காவலப்பனிடமிருந்து தியான வழிமுறையைக் கற்றுக்கொள்ள முடியாததைச் சென்ற வாரமே பார்த்துவிட்டோம்.
திருவரங்கம் திரும்பிய பிறகு தொடர்ந்து வைணவத் தலைமைப் பீடத்தை ஆளவந்தார் அலங்கரித்துக்கொண்டிருந்தார். தமக்கு அடுத்து தலைமைப் பீடத்திற்குத் தகுந்தவரைக் காண வேண்டுமே என்று அவர் உள்ளம் தவித்துக்கொண்டிருந்தது.
சென்றவாரம், இளையாழ்வார் எனப் பெயர் பெற்ற இராமானுஜரின் பிறப்பையும் கல்வி கற்க ஆரம்பித்ததையும் காணத் தொடங்கிவிட்டோம். அவருடன் கூடவே, அவருடைய சித்தி மகனான கோவிந்தனும் திருப்புட்குழியில் யாதவப் பிரகாசர் என்ற அத்வைதியிடம் கல்வி கற்கத் தொடங்கியிருந்தார்.
ஆளவந்தார் அவருடைய காலத்தில், எட்டு வடமொழி ஸ்தோத்திரங்களை எழுதினார். அவற்றில் சதுஸ்லோகி மற்றும் ஸ்தோத்திர ரத்னம் மிகவும் புகழ் பெற்றவை. அவர் எழுதிய சித்தித்ரயம், இராமானுஜர் எழுதிய ஸ்ரீபாஷ்யத்துக்கு அடிப்படை என்று கூறுவர். கீதாத்ர சங்கிரகம் என்ற நூல், இராமானுஜர் எழுதிய கீதா பாஷ்யத்திற்கு ஆதாரமாக அமைந்தது என்று கூறுவர்.
சித்தி-Sidhdhi என்பதன் பொருள் சாதனை, வெற்றி, தன்மை என்று சொல்லலாம். இந்த மந்திரோபதேசம் எனக்கு சித்தித்துவிட்டது என்று சொல்வர். இதுபற்றி பரமாச்சார்யார் என்று சொல்லப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதி அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒரு மந்திர ஜெபம் சித்தித்துவிட்ட து என்பதை எப்படி அறிந்துகொள்வது என்று ஒருவர் கேட்க, (அவர் வேறு ஒரு ஆச்சார்யார் மந்திர ஜெபம் செய்து சித்தியடைந்துவிட்டார்-அந்த மந்திரத்தில் எனச் சொன்னபோது எழுந்த கேள்வி), நெல்களின் மீது அமர்ந்தால் நெல்கள் பொரிந்துவிடும், அதுவே ஒருவர் செய்யும் மந்திரஜெபம் சித்தியாகிவிட்டது என்பதைக் காட்டும் கருவி, அதற்காக என்னை நெல்லின்மீது உட்கார்ந்து நிரூபிக்கச் சொல்லாதீர்கள் என்று வேடிக்கையாகச் சொன்னாராம்.
சிDHத்தித்ரயம், ஆத்ம சித்தி (ஆத்மாவின் உண்மைத் தன்மை), சம்வித் சித்தி (ஞானத்தின் தன்மை) மற்றும் ஈஸ்வர சித்தி (இறைவனின் மேன்மை) ஆகியவற்றை தர்க்க ரீதியாக நிரூபணம் செய்கின்றன. இவையே விசிஷ்டாத்வைத தத்துவத்தின் அடிப்படை.
ஆத்ம சித்தி, ஆத்மா உடலிலிருந்து வேறுபட்டது, நித்தியமானது மற்றும் அறிவுடன் கூடியது என்பதை நிலைநாட்டுகிறது. சம்வித் சித்தி என்பது, ஆத்மாவின் குணம் மற்றும் அது சுயமாக ஒளிரக்கூடியது (தனக்குரிய ஞானத்தால்) என்பதை விளக்குகிறது. ஈஸ்வர சித்தி என்பது, நாராயணனான இறைவன் கல்யாண குணங்கள் நிறைந்தவன், அனைத்தும் அறிந்தவன், பரம்பொருள் என்பதை விளக்குகிறது.
வைணவ சமயத்தின் ஸ்தோத்திரங்களில் முதலாவதாக உள்ள (காலத்தால் முற்பட்டது) ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னத்தின் சில ஸ்தோத்திரங்களின் அர்த்தத்தை இந்த வாரமும் அடுத்த வாரமும் காண்போம்.
நமோ நமோ வாங், மநஸாதி பூ4மயே*
நமோ நமோ வாங், மநஸைக பூ4மயே |
நமோ நமோ’அநந்த, மஹா விபூ4தயே*
நமோ நமோ’அநந்த த3யைக ஸிந்த4வே ||
தன்னுடைய முயற்சியால் உன்னை அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உன்னை வணங்குகிறேன். உன்னுடைய கருணையினால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு என்னுடைய வணக்கங்கள். எல்லையில்லாத செல்வத்தின் அதிபதியான உனக்கு என்னுடைய வணக்கங்கள். கருணைக்கடலான உன்னை வணங்குகிறேன்.
ந த4ர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ3*
நப4க்தி மாம் ஸ்த்வச் சரணாரவிந்தே3 |
அகிஞ்சநோ’அநந்யக3திஶ் ஶரண்ய!*
த்வத் பாத3 மூலம் ஶரணம் ப்ரபத்3யே ||
நான் கர்ம யோகத்தில் (எனக்குள்ள தர்மத்தில்) நிலையாக இல்லை. என்னிடம் ஆத்ம ஞானமும் இல்லை. எனக்கு உன்னிடம் பக்தியும் இல்லை. இப்படி எதுவுமே இல்லாத நான், வேறு உபாயமும் இல்லாத நான், உன்னுடைய திருவடியையே சரணாகப் பற்றுகிறேன்.
தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய திருமாலையில் வரும் பாசுரமான, “குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன்” என்ற பாசுரத்தின் கருத்தை ஒட்டியது ஸ்தோத்திர ரத்தினத்தின் இந்த ச்லோகம்.
குளித்து மூன்று அனலை ஓம்பும், குறிகொள் அந்தணமை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை, நின் கணும் பத்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பீ, கடல் வண்ணா, கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய், அரங்க மா நகருளானே
திருமாலையில் வரும் 25ம் பாசுரம் இது.
இந்தப் பாசுரத்தில், ஆழ்வார், தான் பிராமணனாகப் பிறந்திருந்தும், கர்மயோகம் செய்வதற்குத் தரும் தகுதிகளைத் தான் இழந்துவிட்டதாகவும், ஆத்ம ஞானம் தனக்கு இல்லை என்றும், பரமாத்மாவான அரங்கனிடம் தனக்கு உண்மையான பக்தி இல்லை என்றும், அதனால் தான் சந்தோஷமாக இருப்பதற்கு யாதொரு காரணமும் இல்லை, அதை நினைத்து நான் கதறுகிறேன், எனக்கு தகுதி முதலிய அனைத்தையும் அருளி அரங்கன் அருள் செய்யவேண்டும் என்கிறார். இந்தப் பாசுரத்தின் முழுமையான பொருளை பின்பு காண்போம். இங்கு இந்தப் பாசுரத்தைக் குறிப்பிட்டதன் காரணம், ஸ்தோத்திர ரத்னத்தில் வரும் ச்லோகம் இதையொட்டியது என்பதைச் சொல்ல.
தொடர்வோம்...
##########################################################################################
நான் படிச்ச கதை
மனமும் மணமும்
கதையாசிரியர்: கு.ப.சேது அம்மாள்
தமிழில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் கு.ப. சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவர் கு.ப.ரா. எனப்பட்ட கு.ப. ராஜகோபாலன். அவருடைய தங்கைதான் சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை உலகில் காலடி எடுத்து வைத்த பெண் எழுத்தாளர்களுக்கு அவர் முன்னோடி
கு.ப.சேது அம்மாள் கு.ப.ராஜகோபாலனுக்கு உதவியாக இருந்தார். ராஜகோபாலனுக்கு கண்புரை நோய் வந்து பார்வை மங்கலான போது அவர் கதைகளைச் சொல்ல சேது அம்மாள் எழுதினார்.
500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 'ஒளி உதயம்' என்னும் முதல் சிறுகதைத் தொகுதி 1946-ல் வெளியாகியது. 13 சிறுகதைகள் கொண்ட இத்தொகுதியை தன் அண்ணன் கு.ப.ராஜகோபாலனுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். 1962-ல் இவருடைய முதல் நாவல் 'அம்பிகா' வெளியாகியது.
புதுமைப்பித்தனின் அகலிகை சிறுகதைக்கு மாற்றாக அதே சம்பவத்தை மையமாக வைத்து இந்திரனின் மனைவி, இந்திராணியின் பார்வையில் அவரது உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பிடும் கதையை எழுதி அக்காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். "அகலிகை கல்லான கதையின் காரணகர்த்தா தேவேந்திரன். அவனைப் பற்றி அவன் மனைவி இந்திராணியின் எண்ண அலைகளைச் சித்தரிக்கும் இக்கதை அகலிகை கதையை பல்வேறு விதமாகப் பேசியும் பாடியும் தீர்த்து வருவதற்கு ஒரு மாற்று" என்கிறார் இரெ.மிதிலா.
கு.ப.சேது அம்மாள் வீணைக்கலைஞர். சமையல்கலை நூல்களை எழுதியிருக்கிறார். சுஜாதா ஆசிரியராக இருந்த அம்பலம் மின்னிதழில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சமையல் தொடரை எழுதினார்.
கு.ப.சேது அம்மாள் நவம்பர் 5, 2002-ல் தனது 94-வது வயதில் சென்னையில் காலமானார்.
நன்றி : தமிழ் விக்கி
(1954ல் கல்கியில் வெளியான சிறுகதை)
மனமும் மணமும்
“ஜயராமன் இருக்கிறானா?” என்று வாசலில் நின்ற கீதாவைக் கேட்டுக் கொண்டே வந்தான் ரங்கநாதன்.
“இருக்கிறான்” என்று கீதா சொன்னதும் மாடிக்குச் சென்றான் ரங்கநாதன்.
பத்திரிகையைப் படித்துக் கொண்டு அங்கே உட்கார்ந்திருந்த ஜயராமனிடம் நெருங்கி அவன் கையிலிருந்த பத்திரிகையை எடுத்துக் கொண்டு, ஜோபியிலிருந்த கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான். கடித உறையை ஒரு தரத்துக்கு இரண்டு தரமாகத் திருப்பிப் பார்த்தான் ஜயராமன்.
ரேவதியின் கையெழுத்து! ரங்கநாதன் விலாசத்துக்கு எழுதுவானேன் என்று கலவரத்துடன் கடிதத்தை உடைத்துப் பார்த்தான். கடிதத்தின் மீது இன்னொரு முறை ஏறி இறங்கியது அவன் பார்வை. முகம் பொலிவிழந்து சுண்டி விட்டதைக் கண்ட ரங்கநாதன் “என்ன எழுதி இருக்கிறாள்?” என்று கேட்டான்.
கடிதத்தை நண்பன் கையில் கொடுத்து விட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தான் ஜயராமன். கடிதத்தின் வாசகத்தை எழுதிய ரேவதியின் எழிலுருவம் அவன் கண் முன் நின்றது!
கடிதத்தைப் படித்து முடித்த ரங்கநாதன், “வீட்டு விலாசத்துக்கு எழுதினால் உன் தாயார் கையில் அகப்படக் கூடும்; அகப்பட்டால் உனக்குக் கிடைக்காது என்று தான் என் விலாசத்துக்கு எழுதி இருக்கிறாள். இப்பொழுது என்ன செய்யப் போகிறாய் ஐயராம்?”
“இனிமேல்தான் யோசிக்க வேண்டும்.”
“எனக்குத் தோன்றிய யோசனையைச் சொல்லி விட்டுப் போகிறேன். அதையும் ஆலோசனை பண்ணி முடிவு செய். அம்மாவிடம் நயமாகக் கேட்டுப் பார். சம்மதிக்க வில்லையானால் இருக்கவே இருக்கிறது பதிவுத் திருமணம்! கொஞ்சம் நாள் போனால் தன்னாலே சரியாக வந்துவிடுவார்கள்! நான் வரட்டுமா? அவசர வேலை கொஞ்சமிருக்கிறது; மாலை சந்திப்போம்” என்று கூறி நண்பனிடம் விடைபெற்றுச் சென்றான் ரங்கநாதன்.
சாய்மானத்தில் சாய்ந்து கொண்டு யோசனையில் ஆழ்ந்தான் ஜயராமன்.
“ஏண்டா, விடுமுறை நாளானால் காலாகாலத்தில் சாப்பிடக் கூடாதா…?” என்று கேட்டவாறு அங்கே வந்தாள் அவன் அம்மா ஜானகி அம்மாள். பிள்ளை எங்கேயோ நிலைத்த நினைவில் தான் சொன்னதைக் காதில் வாங்காமலிருந்ததைக் கண்டு “ஏனிப்படி பிரம்மமாக உட்கார்ந்திருக்கிறாய்?” என்று அருகில் வந்து கேட்டாள். அவன் கையில் கடிதம் இருப்பதைக் கண்டு “யாருடைய கடிதாசி?” என்று அதைக் கையிலெடுத்தாள்.
“ரேவதி எழுதி யிருக்கிறாள் ” என்று சொன்னான் ஜயராமன்.
கடிதம் முழுவதையும் படித்துவிட்டு, “நன்றாக இருக்கிறது” என்று கடிதத்தை அவன் மடியில் போட்டாள் ஜானகி அம்மாள்.
“எது நன்றாக இருக்கிறது என்கிறாய்?”
“அவர்களுடைய கேவலமான பிழைப்பைத்தான் சொல்லுகிறேன்…”
“அவர்கள் பிழைப்பு கிடந்து விட்டுப் போகட்டும்; ரேவதி விஷயமாக உன் அபிப்பிராயம் என்ன?”
“எதுக்கு, உனக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக்கவா?”
“ஏன், கூடாதா?”
“ஐயோ, போதுமடா அப்பா! உங்கள் அத்தைகள் வகையறா சம்பந்தமே நமக்கு வேண்டாம், வேண்டாம்!…”
“காரணம்?”
“அதெல்லாம் வெளிப்படையாகச் சொல்லப்படாது. நான் பொல்லாதவள், என் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு…”
“இந்த உதவாக்கரை சமாசாரங்களையும், மனஸ்தாபங்களையும் தூர விலக்கி விட்டு மனுஷத்தனமாக நடந்து கொண்டால் எல்லாருக்கும் நல்லது…”
“இந்த உபதேசத்தை உன் அத்தைக்குப் போய்ப் பண்ணு!”
“அவள் யதார்த்தவாதி. அதனால் அவளைக் கண்டால் உனக்குப் பிடிக்காது. அது இப்பொழுதைய சமாசாரத்துக்குப் பிரதானமில்லை. பெண் நல்லமாதிரி. என் மனசுக்குப் பிடித்திருக்கிறது.”
“ஏண்டா வரவர உன் புத்தி இப்படி…”
வெற்றிலைப் பொட்டலத்துடன் அங்கே வந்த வரதய்யர் ” என்ன, என்ன சமாசாரம்?” என்று விசாரித்தார்.
“ஒன்றுமில்லை. உங்கள் மருமாள் ரேவதி கடிதாசு எழுதி இருக்கிறாள்.”
“என்ன?”
“ரேவதியின் படிப்புக்காக அவள் தகப்பனார் அனந்த கிருஷ்ணய்யரிடம் நிலத்தை அடமானம் வைத்துப் பணம் வாங்கினாராம். அது இப்பொழுது வட்டிக்கு மேல் வட்டியாக வளர்ந்து சொத்தின் பெறுமானத்துக்கு மேலே போய்விட்டதாம். நிலத்தை வாங்குவாரில்லை. பணம் கொடுக்க முடியவில்லை. அனந்த கிருஷ்ணய்யரிடம் வந்து ‘உம் பெண்ணைக் கொடு’ என்கிறாராம்.”
” அட பாவமே!”
“பாவமாவது புண்ணியமாவது! தன் ஸ்திதி தெரியாமல் நிலத்தை வைத்து, அப்படியாவது படிக்க வைக்காவிட்டால் என்ன?”
“அதையெல்லாம் நாம் எதற்கு இப்பொழுது கேட்க வேண்டும்?”
“முழுக்கக் கேளுங்கள். நம் குழந்தைக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேணுமென்று இருக்கு…”
“அது அவன்பாடு, உன்பாடு, அவர்கள் பாடு. ஆனால் ஒன்று நிச்சயம். பணம் இல்லாவிட்டால் ‘பெண்ணைக் கொடு’ என்கிற அந்தக் கிழக்கோட்டானுக்கு அந்தக் குழந்தையைப் பலி கொடுக்க முடியாது. என் வயிற்றில் பிறந்தால் என்ன, என் தங்கை வயிற்றில் பிறந்தால் என்ன?” என்று மனம் குமுறினார் வரதய்யர்.
“சொல்லுவது புரியவே இல்லை எனக்கு!” என்று விழித்தாள் ஜானகி அம்மாள்.
“புரியும்படியாகச் சொல்லுகிறேன். அந்த நாலாயிரம் ரூபாய் சொச்சத்தைக் கொடுத்துக் கடனை ஒருமாதிரி அடைத்து…”
அவர் வார்த்தையை முடிக்கு முன்பே, ஜானகி அம்மாள் ஆத்திரம் பொங்க, “அதைத் திருப்பி அவர்களிடமிருந்து எப்படி வாங்குகிறது?” என்று கடுமையாகச் சீறினாள்.
“அந்த யோசனை இருக்கட்டும், அப்புறம்.”
“எக்கேடும் கெட்டு ஒழியுங்கள். வீடு உருப்படப் போறதில்லை” என்று இரைந்து விட்டுக் கோபாவேசத்துடன் கீழே சென்றாள் ஜானகி அம்மாள்.
அவள் அங்கிருந்து நகர்ந்ததும் வரதய்யர் மகனிடம் வந்து, “என்னடா அது? கடிதத்தை இங்கே கொண்டு வா, பார்க்கலாம்!” என்று கடிதத்தை வாங்கிப் படித்து, சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டு, “சரி, உங்கம்மா குணம் தெரிந்ததுதான். வாயால் ‘லொட லொட லொட’வென்று வார்த்தைகளைக் கொட்டி விடுவாளே தவிர மனத்தில் ஒன்றும் களங்கம் கிடையாது, அதனாலே ஒன்று செய்…” என்று கூறிவிட்டுக் கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.
“என்ன?” என்பது போல ஆச்சரியத்துடன் பார்த்தான் ஜயராமன்.
“இன்றைக்கென்ன தேதி பதினேழா. இருபத்திரெண்டாம் தேதி தொகையை அவருக்குக் கொடுத்து விடலாம். அதைப் பற்றி நான் விவரம் கேட்டு நாணாவுக்கு எழுதுகிறேன் இன்று. இருபத்தோராம் தேதி ராத்திரி புறப்பட்டு விளாங்குடிக்குப் போ. நாணாவிடம் சொல்லி – நானும் எழுதுகிறேன் – கோபு சாஸ்திரிகளிடம் ஒரு முகூர்த்தம் பார்க்கச் சொல்லு. நாணா, ஜகதம், ரேவதி மூவரை மாத்திரம் அழைத்துக் கொண்டு ரங்கநாதன் வீட்டில் இறங்கு. இங்கே நான் ஏற்பாடெல்லாம் பண்ணி வைக்கிறேன். சரியாக முகூர்த்த நேரத்துக்கு ரிஜிஸ்டர் ஆபீஸுக்குப் போறது, பதிவு செய்து கொண்டு லட்சணமாக அகத்துக்கு வந்து விடுகிறது.
அம்மா மனசிலே ஆயிரமிருந்தாலும், மாலையும் கழுத்துமாகப் பிள்ளை நாட்டுப் பெண்ணுடன் உள்ளே நுழைந்ததும் பறக்கப் பறக்க ஆரத்தி சுத்திக் கொட்டி அழைத்து விட்டு ஒரு மூச்சு சண்டை பிடிப்பாள். அதோடு சரி! ரேவதியோ ‘தக்காருக்கு தக்கபடி’ நடந்து கொள்ளும் பெண். இந்தக் கடிதாசு எழுதி நம்மைக் கவர்ந்தது போல, மாமியாருக்கு நல்லதனமாக நடந்து கொண்டு அவளை நல்லவளாக்கி விடுவாள். இதுதான் சரி!” என்று அநாயாசமாக யோசனை செய்து முடித்து விட்டு வெற்றிலைக் கட்டைப் பிரித்து வெற்றிலை போட்டுக் கொண்டார் வரதய்யர்!
இருபத்திரண்டாம் தேதி ஓடி வந்து நின்றது!
விளாங்குடியில் தன் அத்தை வீட்டில் ஜயராமன் ரேவதியுடன் பேசிக் கொண்டிருந்தான். “உன் யோசனை எனக்கு உசிதமாகப் படவில்லை, ரேவதி!” என்று கலவரத்துடன் கூறினான் ஜயராமன்.
“நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். அப்புறம் அவர் மனசை இளக்குவதை விட முன்னாடி இளக்கி விடுவது தான் உசிதம், அதுதான் நியாயம். என் வாழ்வைப் பரிமளிக்க வைக்கும் அன்புக்குரிய தங்களைப் பெற்ற தாயில்லையோ அவர்?”
“ரேவதி…!”
“தாங்கள் கூறப் போவதை நான் அறிவேன். மாமாவின் ஆக்ஞைப்படி செய்யலாம். அம்மா மனசில் கபடு இல்லை என்பதெல்லாம் சரி. ஆனால்… சமயம் நேர்ந்த போதெல்லாம்… ‘திருட்டுத் தாலி கட்டிக் கொண்டு வந்தவள் தானே, நீ?’ என்று படக்கென்று கேட்பார். அது எதற்கு? நல்லதைச் செய்து நடு வழியில் செல்ல வேண்டும். நம் விருப்பத்தை மாமா அங்கீகரிப்பது போல, அம்மாமியும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளும் வகையில் கடிதம் எழுதுகிறேன். பார்ப்போம். நான் பாக்கியசாலியானால் அவர் மனம் மாறட்டும்.”
“இல்லாவிட்டால்?” என்று இடைமறித்துக் கேட்டான்.
“அதை இப்பொழுது நினைப்பானேன்?”
” உயிருக்குத் துணிந்து விட்டாய்! அது தானே?” என்று ரேவதியைக் கேட்டான்.
ரேவதியின் கண்கள் ஜயராமனை நெடு நோக்காக நோக்கின. கண்ணீர் மல்க, “ரேவதி…!” என்ற தொனியுடன் ஜயராமன் நிறுத்தினான். கண்கள் பேசின. உள்ளங்கள் உறவாடின. உடல்கள் விதிர்த்தன.
அந்த விதித்திர வேதனையிலிருந்து முன்னதாக உதறிக் கொண்ட ரேவதி, “கலங்காதீர்கள். நம் அன்பு சத்தியமா யிருக்கும் பட்சத்தில் உங்கள் தாயார் மனம் மலர்ந்து என்னைத் தம் குமாரனுக்குப் பெற்றுக் கொள்ளட்டும் என்று ஈசுவரன் மீது பாரத்தைப் போட்டு எழுதுகிறேன்” என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
இருபத்திரண்டாம் தேதி பொழுது விடிந்தது. வரதய்யர் தாம் நிச்சயித்தபடி நாராயண சுவாமி அய்யர் வாங்கின கடன் தொகை முழுவதற்கும் ‘செக்’ அனுப்பி விவரமான கடிதமும் எழுதினார்.
சந்தோஷ மிகுதியால் நாராயணஸ்வாமி அய்யர் கண்களில் நீர் நிரம்பியது. சங்கதி தெரிந்த ஜகதாம்பாளும், “எல்லாருக்கும் தமையன், எனக்கும் தமையனா என்ன? நான்தான் அப்பவே கேளுங்கள், கேளுங்கள் என்று படித்துப் படித்துச் சொன்னேன். ஒருத்தரும் கேட்கவில்லை!”
“சரிதாண்டி, எல்லாம் இப்பொழுது சொல்லுவாய், நீ!” என்று சமாளித்துக் கொண்டு உள்ளே சென்றார் அய்யர்.
“பழிகாரன் கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல், மனம் துணிந்து எப்படித்தான் கேட்டானோ, பெண்ணை…”
“பணக் கொழுப்பு கொழுத்துக் கிடக்கிற போது, அங்கே, ஈவு ஏது, இரக்கமேதடீ!” என்று கூறிக்கொண்டே ‘செக்’கைப் பெட்டியில் வைத்தார் அய்யர்.
“முன்னாடி அவன் மூஞ்சியில் எறிந்து விட்டு வாருங்கள் பணத்தை” என்று சொன்னாள் ஜகதாம்பாள்.
“அப்பா” என்று அழைத்தாள் ரேவதி.
“என்னம்மா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்றார் அய்யர்.
“பணம் இருக்கட்டும் அப்பா, நான் அம்மாமிக்குக் கடிதாசு எழுதி இருக்கிறேன். பதில் வரட்டும். அப்புறம் கொடுக்கலாம். கெடுதான் முப்பத்தொரு தேதி வரைக்கும் இருக்கிறதே?” என்று தணிந்த குரலில் சொன்னாள் ரேவதி.
அய்யர் திடுக்கிட்டார். திகிலுடன், “என்ன எழுதி இருக்கிறாய்?” என்று கேட்டார்.
“அப்பா, நான் காலமெல்லாம் அம்மாமியிடம் காலம் தள்ள வேண்டும். அதுவே இல்லை என்றாலும், அவள் பெற்ற பிள்ளையை அவளறியாமல் கல்யாணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டமில்லை. அவள் ‘சம்மதம்’ என்று எழுதட்டும்.”
“அடி அதிகப் பிரசங்கி, உன்னை யார் எழுதச் சொன்னார்கள்?”
ரேவதி நிமிர்ந்து பார்த்து “யாரா? அந்தக் கடிதம் யார் எழுதச் சொல்லி எழுதினேன்? அது நல்லதாக மாறினபடி இது மாறினால் சந்தோஷம். இல்லை, கிழவன் தான் பிராப்தி யென்று வாழ்க்கைப் படுகிறேன்…”
தலையிலடித்துக் கொண்டார் அய்யர்.
ரேவதியின் மனம் வேதனைப்பட்டது. “அப்பா, நேர்மையும், கௌரவமும்தான் மனுஷனுடைய தன்மைக்குப் பூஷணம். இது உங்களுக்குத் தெரியாததன்று…” என்று ஆரம்பித்தாள் ரேவதி.
கோப மேலீட்டால் அங்கிருந்து வெளியே சென்றார் அய்யர். கோபம் அடங்கிய பிறகு எது சரி என்று ஆராயத் தொடங்கினார்.
ரேவதியும் அதைத் தான் நினைத்தாள்!
நடந்தது ஒன்றுமே அவளுக்குத் தெரியாது. அவள் பாட்டில் பொழுதைப் போக்கிக் கொண்டு ஒரு கவலையுமின்றி நிம்மதியாகத் தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாள் ஜானகி அம்மாள்!
வாசலில் தயிர் வாங்கச் சென்ற கீதா, தபால்காரன் கொடுத்த கடிதத்துடன் உள்ளே வந்தாள். பிரித்துப் படித்துவிட்டு, சந்தோஷத்தால் குரல் தழு தழுக்க “அம்மா, ரேவதி உனக்குக் கடிதம் எழுதி இருக்கிறாள்” என்று சொன்னாள்.
கவலையில்லாமல் காராபூந்தியை மென்று கொண்டு, “என்னவாம்? படி பார்ப்போம்” என்றாள் ஜானகி அம்மாள்.
அம்மாமி அவர்களுக்கு, அனேக நமஸ்காரம்.
நான் அம்மாஞ்சிக்கு எழுதிய கடிதத்தை நீங்கள், மாமா, எல்லாரும் பார்த்து யோசித்தீர்கள் என்றும், என்னை மருமகளாக ஏற்பதில் தாங்கள் சம்மதப்படவில்லை என்றும் தெரிகிறது. நான் தங்களிடம் நாலு வருஷங்களாக இருந்து பழகி இருக்கிறேன். தங்கள் மனம் எனக்குத் தெரியும். மாமா அவர்கள் வேறுவிதமாக யோசனை சொன்னார். என்னையும், என் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்து, சத்தப்படாமல் பதிவுக் காரியாலயத்தில் பதிவுத் திருமணம் செய்வித்து வீட்டுக்கழைத்து வந்து விட்டால் அப்புறம் தாங்கள் மனம் திரும்பி விடுவீர்களாம்! இந்த உத்தேசத்துடன் அம்மாஞ்சி இங்கு வந்து நாலு நாட்களாகின்றன.
அம்மாமி, நான் கைப்பிடிக்கப்போகும் கணவன் தங்கள் மகன், அவரைப் பெற்ற தாய் தாங்கள். தாங்களறியாமல் தங்கள் குமாரனை மணக்க நான் இஷ்டப்படவில்லை. இஷ்டப் பட்டாலும் அது தர்மமன்று, மாமி, அவர்கள் சொல்வது ஒரு வகையில் நியாயமாக இருந்தாலும், நான் அதை விரும்பவில்லை. தங்கள் விருப்பத்துக்கு மாறாகத் தங்கள் குமாரனை மணந்து நான் அடையும் சந்தோஷத்தை விட, ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட இடத்தில் வாழ்க்கைப்பட்டுப் பெற்றோர்களுடைய கௌரவத்தை நிலை நிறுத்திவிட்டு, வாழ்விலிருந்து தப்பிச் சென்று விடுவேன்!
அம்மாமி, நான் நல்ல பெண் என்று தங்கள் மனம் ஒப்பி, சந்தோஷத்தோடு என்னை மருமகளாக ஏற்றுக் கொண்டால், ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையானால் – அடுத்த ஜன்மத்திலாவது தங்கள் குமாரனை அடையப் பிரார்த்தனை செய்து கொண்டு இவ்வாழ்க்கையைத் துறப்பேன்.
இது என் அபிலாஷை.
நமஸ்காரம்,
ரேவதி.
கண்ணீர் மல்க அந்தக் கடிதத்தைப் படித்து முடித்துவிட்டுத் தலைநிமிர்ந்தாள் கீதா.
“‘உன் கடிதாசு கிடைத்தது. கவலைப்பட வேண்டாம். எல்லாருமாகப் புறப்பட்டு வரும்படி அம்மா எழுதச் சொன்னாள்’ என்று ஒரு கடிதம் எழுதிப் போடு, அவளுக்கு” என்று உணர்ச்சி பொங்கக் கூறி விட்டுக் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டாள் ஜானகி அம்மாள்.
கடிதத்தைப் படித்ததும் நொடி நேரத்தில் தன் தாயின் மனம் இளகிய விசித்திரத்தைக் கண்டு ஸ்தம்பித்து நின்றாள் கீதா!
– கல்கி, 1954-08-01.
என்னுரை
கதைச் சுருக்கம்
வரதய்யரின் மனைவி ஜானகி, மகன், மகள் கீதா, வரதய்யரின் தங்கை ஜகதம்மாள், ஜகதம்மாளின் கணவர் நாராயணன். இவர்களது மகள் ரேவதி. ரேவதியும் ஜெயராமனும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். மணம் செய்வதில் ஒரு சிக்கல். நாராயணன் அனந்த கிருஷ்ணய்யர் என்பவரிடம் அவருடைய நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர் கடனை திரும்பக்கட்டு அல்லது உன் பெண்ணைக் கொடு என்று நெருக்குகிறார்.
ரேவதி ரங்கநாதன் மூலமாக ஜெயராமனுக்கு கடிதம் எழுகிறாள். மணம் செய்து கொள்ளலாம் ஆனால் அது 2 வீட்டார் முழு சம்மதத்துடன் நடக்க வேண்டும் என்பதே சாராம்சம். இந்தக்கடிதத்தை ஜெயராமன் மட்டுமல்ல, அப்பா வரதய்யர், அம்மா ஜானகி எல்லோருமே வாசிக்கின்றனர். வரதய்யர் இளகிய மனதுடன் கடனை அடைக்க 4000 ரூபாய் செக் நாராயணய்யருக்கு அனுப்பி வைக்கிறார். கூடவே ரெஜிஸ்டர் மேரேஜுக்கும் ஒரு திட்டம் சொல்லுகிறார்.
ரேவதிக்கு இத்திட்டம் பிடிக்கவில்லை. அம்மாமி ஜானகியின் பூர்ண சம்மதம் இல்லையேல் இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி அம்மாமிக்கு அவருடைய சம்மதத்தைக் கேட்டு கடிதம் எழுதுகிறாள். சம்மதம். சுபம்.
கதை வெளியான ஆண்டு 1954. அன்றைய வாழ்க்கையை நினைத்து பாருங்கள். 3 நாள், 5 நாள் என்று கல்யாணம் சுற்றம், நட்பு, ஊர் மக்கள் என்று எல்லோரும் கலந்து திருவிழா போல் நடக்கும். ரெஜிஸ்டர் மேரேஜ் என்பது அருவருக்கத்தக்க ஒன்று.
அன்றைய நாளில் வரதட்சிணை என்பது வரனுக்கு கொடுப்பது. அது இல்லாமல் கல்யாணம் இல்லை பெருமையும். கூட. . இக்கதையில் வரதட்சிணை இல்லை வது தட்சிணையாக 4000ரூ கொடுக்கிறார் அய்யர்!
இவ்விரண்டு செயல்களும் (ரெஜிஸ்டர் மேரேஜ், வர தட்சிணை) இரண்டுமே புரட்சி தானே?
=====>கதையின்சுட்டி<=======
காலை வணக்கம்
பதிலளிநீக்குஇறைவன் பெருமைகளைப் பேசப் பேச எழுத எழுத மன அஞ்ஞான இருட்டுகள்
பதிலளிநீக்குஅகலும். ஞானம் மலரும். அதனால் எதையும் குறைக்க வேண்டாம்.
இன்னும் இன்னும் விரிவாக எழுதினாலும் நாங்கள் வாசிக்கத் தயார், நெல்லை.
வாங்க ஜீவி சார். மிக்க நன்றி.
நீக்குகதைக்கு இடையில் முன்னுரையின் ஒரு பகுதி ரிபீட் ஆகி தலையைச் சுத்த வைக்கிறது
பதிலளிநீக்குஆமாம், மீண்டும் வந்து இருக்கும் பகுதிகளை நீக்கினால் நல்லா இருக்கும் ஸ்ரீராம்.
நீக்குசரி செய்தாச்சு. அந்த அழகான கதை இப்போ சரியா இருக்கு!
நீக்குநன்றி
நீக்குரெஜிஸ்தர் மேரேஜ் புரட்சிதான். வது தட்சிணை என்று இதனைச் சொல்ல முடியாது. தன் சகோதரிக்கு ஆபத்துக் காலத்தில் கொடுக்கும் பணம், உதவி எப்படி தட்சணையாகும?
பதிலளிநீக்குநிறைவான கதை.
அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். அங்கிருந்து இங்கு பணம் கைமாறுவதற்கு பதில் இங்கிருந்து அங்கு. எனவே கொள்ளலாம்! ரேவதியின் வ்டிவில் கதாசிரியரின் முன்னெடுப்பு நன்றாயிருக்கிறது.
நீக்குகு.ப. சேது அம்மாள் பற்றிய விவரக் குறிப்பு முதல் பாரா மூனறாவது வரியில் கு.ப. ராஜகோபாலனுடைய தங்கை தான் சேது அம்மாள் என்று திருத்தி விட்டால் வார்த்தைகள் அமைப்பு சரியாக வரும்.
பதிலளிநீக்குஇல்லை, கொஞ்சம் நிறையவே திருத்தம் வேண்டி இருந்தது. இப்போது செய்தாச்சு.
நீக்குகரமனை ஆற்றுப் பக்கத்தில் வந்துவிட்டார்.//
பதிலளிநீக்குகரமனை ஆறு அப்போது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவ்வளவு செழிப்பாகத் தூய்மையாக இருந்திருக்கும்.
குருவின் மீதான பிரியமும், பக்தியும் மனதை நெகிழ்ச்சியடையச் செய்வதோடு பல விஷயங்களைச் சொல்கிறது
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. நாற்பது வருடங்களுக்கு முன்னால் தாமிரவருணி ஆறு எப்படி இருந்தது இப்போ எப்படி இருக்கு என்று பார்த்தாலே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கரமனை ஆறு ஆஹா ஒஹோ என்று இருந்திருக்கும்
நீக்குமரியாதைக்குரிய கு.ப. சேது அம்மாள், கி.வா.ஜ. அவர்கள் கலைமகள் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் கலைமகளில் நிறைய எழுதியிருக்கிறார். அந்நாளைய பெண் எழுத்தாளர்களில் திலகம் போலத் திகழ்ந்தவர் இவர்.
பதிலளிநீக்குஇவங்க காலத்தைச் சேர்ந்தவர்கள் தான் எழுத்தாளர் "குமுதினி" மற்றும் அவர் மருமகள் ஆன முனைவர் பிரேமா நந்தகுமார் ஆகியோர் ஆவார்கள். குமுதினியின் எழுத்தை அதிகம் ஆரம்ப கால ஆனந்த விகடனில் பார்த்தும் படிச்சும் இருக்கேன். பிரேமா நந்தகுமார் திருநெல்வேலிக்காரர் அநேகமாக நம்ம ரேவதிக்குத் தெரிஞ்சிருக்கலாம். ஸ்ரீரங்கத்தில் தான் இருந்தார்/இருக்காரானு தெரியாது. பிரபலமான தாத்தாசாரியார் குடும்பம். என்னைப் பல முறை என் நண்பர் திரு மஹாலிங்கம் அவர்கள் பிரேமா நந்தகுமாரிடம் அழைத்துச் செல்ல விரும்பி முயன்று பார்த்தும் ஏனோ முடியலை. திரு மகாலிங்கம் அவர்கள் இப்போ இல்லை. அவர் மகள் மாதங்கி வெளிநாட்டில் வசிக்கிறாற்னு நினைக்கிறேன். இவங்கல்லாம் என் ஆரம்ப கால எழுத்துக்கு உரம் சேர்த்தவர்களில் முக்கியமானவர்கள்.
நீக்குபாசுரம், ஸ்லோகம் விவரங்கள், பொருள் எல்லாம் நல்லாருக்கு நெல்லை.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா ரங்கன். உங்களை மாதிரி ஒவ்வொருவரும், ஏகப்பட்ட ஈமெயிலை வைத்துக்கொண்டால் எங்களை மாதிரி அப்பாவிகள்லாம் என்ன செய்யறது?
நீக்குஇது ஒண்ணும் புதுசெல்லாம் இல்லை. என்னிடம் 3 இ மெயில் ஐடிக்கள் இருக்கின்றன. அதைத் தவிர்த்து யாஹூ வேறே. இப்போல்லாம் அதைப் பார்ப்பதே இல்லை என்பதால் அநேகமாக டெலீட் ஆகி இருக்கும்.யாஹூ மெசெஞ்சரில் எல்லாம் அப்போ சாட் பண்ணி இருக்கேன். அப்புறமாத்தான் கூகிளில் சாட், கூகிள் மீட், google buzz, கூகிளில் பேசுவது வீடியோ கால்னு எல்லாமும் வந்தன.
நீக்குசும்மா கலாய்த்தேன் கீசா மேடம். கீதா ரங்கன் ரொம்ப சுறுசுறுப்பு, ஆர்வம், கிடைக்கும் நேரத்தில் நட்புடன் இருக்கும் தன்மை, நிறைய வேலைகளுக்கிடையில்்ரிலாக்ஸாக மனதை வைத்துக்கொள்ள நேரம் செலவழிப்பது என பலவற்றையும் அவரிடம் பார்த்து வியக்கிறேன். அவர் கணவருக்கு நான் சொல்லும் கான்சப்டான, பொடி வகைகள் மற்றவை சிறப்பாகச் செய்யத் தெரிந்த கீதா ரங்கன் க்கா, சந்தைப் படுத்தலாமே எனப் பலமுறை சொல்லுவது, ஏற்புடையதல்ல, உணவை விற்கக் கூடாது என்ற உயர்ந்த குணம் கொண்டவர் அவர் கணவர்..
நீக்குஅவள் யதார்த்தவாதி. அதனால் அவளைக் கண்டால் உனக்குப் பிடிக்காது. //
பதிலளிநீக்குயதார்த்தமாக இருப்பவர்களுடன் இப்பவும் கூடப் பலருக்கும் பிரச்சனைகளி வரும். ரொம்ப அழகான வரி மன ரீதியான உறவுக்கான வரியைச் சொல்லியிருக்கும் ஆசிரியரை அதுவும் எழுதப்பட்ட காலம்....அட என்று சொல்ல வைக்கிறது
கீதா
ஜெ கே அண்ணா சொல்லியிருப்பது போல் அக்காலகட்டத்தில் இது மிகவும் வித்தியாசமான சிந்தனைகளுடனான கதை. அதுவும் கதையில் ரேவதி மிகவும் தெளிவான சிந்தனை உடைய பெண்ணாகக் காட்டியிருப்பதும் தைரியமான பெண் என்று காட்டியிருப்பதும் புதுமைப் பெண் கதாபாத்திரமாக மிக அழகாகச் சித்தரித்து எழுதியுள்ள கதை மனதை ரொம்பவே கவர்ந்தது.
பதிலளிநீக்குஆசிரியரின் பரந்த சிந்தனைகளை வெளிப்படுத்துவதாகவும் பார்க்கிறேன்.
கீதா
பெண் எழுத்தாளர் திலகம் எனலாம்.
பதிலளிநீக்குஇவரு எழுதியிருக்கும் வேறு கதைகளையும் வாசிக்க வேண்டும்.
கீதா
இவரு - இவர். தட்டச்சுவது ரொம்ப சிரமமாக இருக்கிறது keys,
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க மோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்
நீக்கு//ஆளவந்தார், தெய்வவாரியாண்டானை, போய் அனந்த பத்மனாபரைச் சேவித்துவிட்டு வாரும், நாம் காத்திருக்கிறோம் என்று சொல்ல, அதற்கு தெய்வவாரியாண்டான், அடியேனுடைய தெய்வம் நீர் இருக்க, அனந்த பத்மனாபரை நான் சேவித்து என்ன செய்யப்போகிறேன் என்று சொல்லிவிட்டார். இதுதான் அப்போது இருந்த ஆச்சார்யார்-சிஷ்ய உறவு. //
பதிலளிநீக்குசிறந்த குருபக்தியை காட்டுகிறது.
ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினத்திலிருந்து ஸ்தோத்திர பகிர்வும் அதற்கு விளக்கமும் அருமை.
ஸ்தோத்திர ரத்னத்தில் வரும் ச்லோகம் இதையொட்டியது என்பதைச் சொல்ல தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய திருமாலையில் வரும் பாசுரபகிர்வும் அருமை.
நிறைய படித்து அதை எங்களுக்கு பகிர்ந்து புரியும்படி விளக்கி வருவதற்கு நன்றி நெல்லைத் தமிழன்.
மிக்க நன்றி கோமதி அரசு மேடம்... எனக்கு எழுதும்போது, இதையெல்லாம் சேர்த்து எழுதணும் என்று தோன்றியது.
நீக்குசர்வதேச மகளிர் தினம் இன்றும், நாளையும் கொண்டாடபடுகிறது.
பதிலளிநீக்குஅதை பெருமை படுத்தும் விதமாக ரோஜா முத்தையா நூலகத்தினர் பெண் எழுத்து என்று கண்காட்சி நடத்த போவாதக படித்தேன் முகநூலில்.
//தமிழில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் கு.ப. சேது அம்மாள்.//
அவர்களின் எழுத்து அருமையாக இருக்கிறது.
ரேவதியின் இரு கடிதங்கள் வாழ்க்கையை கொடுத்து இருக்கிறது.
அருமையாக இருக்கிறது கடிதம்.
மனித மனங்களை அழகாய் படித்து இருக்கிறார்.
அதை அழகாய் கதையில் கொண்டு வந்து இருக்கிறார்.
கதை பகிர்வுக்கு நன்றி.
// இந்தப் பகுதியின் அளவு அதிகமாகத் தோன்றுகிறது என்று நினைத்தால் எழுதவும். அடுத்த பகுதிகளின் நீளத்தைச் சரி செய்ய அது உதவும். //
பதிலளிநீக்குநீளமாகத்தோன்றவில்லை என்பதுடன் இதெல்லாம் இந்தத் தொடருக்கு மிக அவசியம். எனவே இப்படியே தொடரலாம் நெல்லை.
மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஆமாம், என்னதான் சுருக்கினாலும் தேவையான செய்திகளைக் கொடுத்துத் தானே ஆகணும்! நீளமெல்லாம் இல்லை. முன்னால் எல்லாம் வாரப்பத்திரிகைகளில் புத்தாண்டுச் சிறப்பிதழ், தீபாவளிச் சிறப்பிதழ், பொங்கல் சிறப்பிதழ்களில் குறு நாவல் என ஒண்ணு போடுவாங்க. இப்போல்லாம் எப்படினு தெரியலை. ஆனால் அந்த மாதிரி இப்போ எழுதினோம்னா படிக்க ஆள் இருக்காது. இப்போல்லாம் சுருக்கித் தான் சொல்ல வேண்டி இருக்கு. ஆனாலும் இங்கே நெல்லை சுருக்கி இருந்தால் அதன் உண்மையான பொருள் மாறிடலாம்.
நீக்குஇப்போவும் குறு நாவல்லாம், முன்பு போல யாரும் படிப்பதில்லை என நினைக்கிறேன். பயணங்களில்கூட காணொளிகள் பார்ப்பவர்கள்தாம் அனேகர். நான் தினமும் வளாகத்தில் நடக்கும்போது எதிரில் வருபவர்களில் பலர் மொபைலில் காணொளியைப் பார்த்துக்கொண்டு வந்து என்னை எரிச்சலூட்டுவார்கள், இருக்கும் மூண்டிப் பாதையில் குடிகார்ரைப்போல ஒழுங்கில்லாமல் நடந்துவந்து.
நீக்குதிருவள்ளுவர் மனைவி வாசுகி கணவரை தெய்வமாக நினைத்தார். இங்கு சீடர் குருவை தெய்வமாக நினைக்கிறார். தெய்வத்துக்கு வடிவம் நாம் கொடுப்பதுதானே..
பதிலளிநீக்குஸ்ரீராம் டிட்டோ!
நீக்குகீதா
கணவரை தெய்வமாக நினைப்பதும், ஆசிரியரை தெய்வமாக நினைப்பதும் ஒன்றா ஸ்ரீராம்? அறியாத பச்சை மண்ணை, ஒரு வடிவமாகச் செய்வதாலும், ஆன்மா மேன்மைக்கு வழிகாட்டுவதாலும் குரு தெய்வமாகிறார். கணவர் அப்படியா? அவர், வெறும் வாழ்க்கைக்குத்தானே உதவுகிறார். இல்லையா?
நீக்குஆசிரியர் வேறே, குரு வேறே, தெய்வம் வேறே இல்லையோ? ஆசிரியர் மூலம் குருவை அடையாளம் கண்டு அவர் மூலம் இறைவனைச் சரண் அடைவதும் ஒரு வழி. இவங்க யாரும் இல்லைனாலும் கணவனையே ஆசிரியராகவும், குருவாகவும் எண்ணிக் கொண்டு தெய்வமாக நினைத்துச் சரணாகதி அடைவதும் ஒரு வழி இல்லையா நெல்லை? சாரதாமணி அன்னையைப் போல். இவரைப் போல் இன்னும் சிலர் இருக்காங்க.
நீக்குகணவனை ஆசிரியராகவும் குருவாகவும் எண்ணுபவர்கள் அரிதிலும் அரிது இல்லையா கீதா சாம்பசிவம் மேடம்? இருந்தாலும் நீங்கள் சொல்லியுள்ளது போல் உண்டு.
நீக்குசர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு, சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மார்ச் 7 முதல் மார்ச் 15 வரை, 2026 ஆம் ஆண்டுக்கான பெண்ணெழுத்து இதழ்கள் மற்றும் நூல்களின் கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சியில் அரிய பெண் எழுத்தாளர்களின் படைப்புகள், இதழ்கள் மற்றும் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பதிலளிநீக்குஅதான் இன்னிக்கு ஆரம்ப கால எழுத்தாளப் பெண்மணியின் கதையை வெளியிட்டு எ.பி. சிறப்புச் செய்திருக்கா?
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சரணம்
நீக்குஅன்பின் நெல்லைத் தமிழன்
பதிலளிநீக்குஅவர்களது பணி சிறப்புடையது,..
வாங்க துரை செல்வராஜு சார். மிக்க நன்றி
நீக்குகண்ணாடி குறைபாட்டின் காரணமாக வாசிப்பது
பதிலளிநீக்குசிரமமாக உள்ளது...
புரிகிறது துரை செல்வராஜு சார்... எல்லாம் சரியாகணும் என்று பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
நீக்கு//.நெல்களின் மீது அமர்ந்து... ///
பதிலளிநீக்குநெல்லின் மீது அமர்ந்து என்பதே....
ஆமாம் துரை செல்வராஜு சார். எழுதும்போது பிழைகள் தெரிவதில்லை. என்னுடைய தமிழ் ஆசிரியர் கிரகோரி (பாளை தூய சவேரியார் மேநிலைப்பள்ளி) நினைவுக்கு வருகிறார். ஸ்கேலால விரல் ஜாயிண்ட்களிலேயே படபடவென அடிப்பார்.
நீக்குமிகவும் எளிமையாகவும், சிறப்பாகவும் எழுதுகிறீர்கள் நெல்லை. கட்டுரை சரியான அளவில் இருக்கிறது. நீட்டவோ,குறைக்கவோ வேண்டாம். முடிந்த பொழுது விசிஷ்டாத்வைதத்தையும் விளக்குங்கள். மிக்க நன்றி.
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்... மிக்க நன்றி. எல்லாம் மெதுவாக வரும் என்று நினைக்கிறேன்.
நீக்குஎன்ன இருந்தாலும் கு.ப.ரா.வின் சகோதரி அல்லவா? கதை சிறப்பு! ரேவதியின் பாத்திரப் படைப்பு அருமை. தன்மானமும், நியாயமும் உள்ள பெண். "எனக்கு பிறந்தால் என்ன? என் தங்கைக்கு பிறந்தால் என்ன?" என்று கேட்டு, தங்கை வீட்டு கடனை அடைக்க முன்வந்ததோடு, தங்கை மகளையும் தன் மருமகளாக ஏற்றுக் கொள்ள நினைக்கும் பெருந்தன்மை மிக்க மாமா.. ஆஹா! கதை எழுதப்பட்ட காலத்தை நினைக்கும் பொழுது பதிவுத் திருமணத்தை ஆதரித்து எழுதிய பெண்ணை அந்தக் கால சமூகம் சும்மா விட்டதா? என்ற கேள்வி வருகிறது.
பதிலளிநீக்குபானுக்கா எனக்கும் இது தோன்றியது. அந்தக் கடைசிக் கருத்து
நீக்குகீதா
விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் வெகு அருமை நெல்லை! நன்றி
பதிலளிநீக்கு/Note: இந்தப் பகுதியின் அளவு அதிகமாகத் தோன்றுகிறது என்று நினைத்தால் எழுதவும். அடுத்த பகுதிகளின் நீளத்தைச் சரி செய்ய அது உதவும். /
எனக்கு அப்படி ஒன்றும் நீளமாகத் தோன்றவில்லை.
வாங்க சூர்யா சார். மிக்க நன்றி
நீக்கு/இந்தப் பாசுரத்தில், ஆழ்வார், தான் பிராமணனாகப் பிறந்திருந்தும், கர்மயோகம் செய்வதற்குத் தரும் தகுதிகளைத் தான் இழந்துவிட்டதாகவும், /
பதிலளிநீக்குதொண்டரடிப் பொடியாழ்வாரே இப்படிக் கூறினால் மற்றவர்கள் எங்கே போவது?
தங்கப் பதக்கம் படத்தில் வரும் சிவாஜி - பிரமீளா பாடல் காட்சிதான் நினைவுக்கு வருகின்றது...
"மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா?
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா தெய்வமே கலங்கி நின்னா?அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?"
ஹா ஹா ஹா. நான் பதின்ம வயதில் இருந்தபோது இந்தப் பாடலும் இடையில் வரும் வசனமும் போட்டியில் பாடியிருக்கேன். எனக்கு guide பண்ண ஆட்கள் இல்லாததால் பாடும் திறமையை நான் இம்ப்ரூவ் பண்ணிக்கத் தெரியலை. இதுபோலவே வரையும் திறமையும். என் அப்பா சொல்லுவார், இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது, படி என்று.
நீக்குஆளவந்தாரே, தன்னைப் பற்றி, ந தர்மநிஷ்டோஸ்மி.. என்றெல்லாம் சொன்னால் நாமெல்லாம் எங்க போறது?
இம்மாதிரித் தனிப்பட்ட திறமைகளுக்கு நம்ம தமிழ் நாட்டு உறவுகள் ஆதாவு கொடுக்க மாட்டார்கள். படிப்பு மதிப்பெண், மேல் படிப்பு, சம்பாத்தியம் இவை தான். அதையும் தாண்டித்தான் சில,பல கலைஞர்கள் வந்திருக்காங்க. ஆனால் அவங்களும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் கிளம்பி இருக்காங்க. அதுக்கு முன்னால் பெயர் பெற்ற கலைஞர்கள்னு ஒரு சிலர் இருந்தாலும் பெண்களில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு யாரும் இருந்ததாய்த் தெரியலை.
நீக்குகடந்த நூறு வருடங்களில் மிகப் பெரிய முன்னேற்றம் நடந்திருக்கிறது. பாரதி கண்ட புது உலகு போல, பெண்கள் எல்லாத் துறைகளிலும் கோலோச்சி, ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்கின்றனர்.
நீக்குநெல்லை, கவலையே படாதீங்க. நீளமே இல்லை. நல்ல விஷயங்கள் வருவதற்கு நீளம் என்பது தடையாக இருக்கக் கூடாது என்பதோடு என்ன இப்ப மெதுவா கொஞ்சம் கொஞ்சமா வாசித்துக் கொள்ளலாமே.
பதிலளிநீக்குகீதா
ஆமாம் கீதா ரங்கன். அந்தப் பகுதிக்கு எவ்வளவு எழுதும்போது வருதோ அவ்வளவே இருந்துட்டுப் போகட்டும்.
நீக்குகோமதிக்கா சொன்னதிலிருந்து தெரிகிறது....இன்றும் நாளையும் கொண்டாடப் படுகிறதா சர்வதேச பெண்கள் தினம்.
பதிலளிநீக்குபாருங்க அப்ப எவ்வளவு பொருத்தமாக அமைந்துவிட்டது கதை. ஜெ கே அண்ணாவுக்கு credits!
அதுவும் நல்ல முற்போக்குச் சிந்தனைகளுடனான பெண்ணை மிகவும் புத்திசாலித்தனமான, குணச்சித்திரப் பெண்ணாக ரேவதியின் கதாபாத்திரத்தைப் படைத்திருப்பது. இதைத்தான் பொதுவாக மனம் சார்ந்த விஷயங்களில் கட்டுரைகளில் சொல்லப்படுவது.
emotional intelligence ரொம்ப அழகாகக் கையாளப்பட்டிருப்பது இன்றைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது!
கீதா
ஜெ கே அண்ணா என்ன இன்னும் காணலை உங்களை?
பதிலளிநீக்குகீதா
தலை சுற்றல். லோ ப்ரஷர் ரெஸ்ட். அடுத்த வாரத்திற்கான கதையை தேடிக்கொண்டிருக்கிறேன்.
நீக்குJayakumar
உடம்பை பார்த்து கொள்ளுங்கள்.
நீக்குதமிழ்த்தாத்தா உ.வே.சா. திருமணம் வரை மாப்பிள்ளை வீட்டார் தான் பெண் வீட்டிற்குக் கப்பம் கட்டி இருந்திருக்கின்றனர். சொல்லப் போனால் பிராமண சமூகத்திலும் அப்படித் தான் நடந்திருக்கு. உ.வே.சா. தன் கல்யாணத்திற்காகத் தன் தந்தை வாங்கிய கடனை அடைப்பதற்குப் பட்ட பாட்டை எல்லாம் அவரின்" என் சரித்திரம்" நூலில் விவரித்திருப்பார். எப்போது இது மாறியது என்பது தெரியவில்லை. இந்தக் கதை வந்த ஐம்பதுகளில் பெண்ணின் திருமணம் என்பது ஓர் கஷ்டமான வியாபாரமாகவே இருந்தது. இருந்திருக்கிறது.
பதிலளிநீக்குசென்ற (அதாவது 19ம் நூற்றாண்டு) நூற்றாண்டின் ஆரம்பம் வரை இப்படித்தான் இருந்திருக்கவேண்டும். என் அப்பா திருமணக் காலத்தில் பெண் வீட்டில்தான் நகை, பணம் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அதனால் ஆண்களுக்கு அரசு வேலை என்ற ஒன்று வந்த காலத்திற்குப் பிறகுதான் இந்த பெண்கள் வரதட்சணை தரும் வழக்கம் வந்திருக்கவேண்டும் (டிமாண்ட், சப்ளை. அரைக்காசு என்றாலும் அரசாங்க வேலை என்ற பழமொழி)
நீக்குநெல்லையின் ஆசார்யப் ப்ரபாவத்துக்குப் பின்னர் வரேன். இப்போ அவசர வேலை ஒண்ணு இருக்கு.
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம். மெதுவா வாங்க.
நீக்குஆழ்வார்கள் பாசுரங்கள் விளக்கங்கள் அறிகிறோம்.
பதிலளிநீக்குகு.ப. சேது அம்மாள் 500 கதைகள் எழுதியவர் என்பது வியக்க வைக்கிறது. இக் கதை அக்காலத்தில் புரட்சியாக இருந்திருக்கும்.
வாங்க மாதேவி அவர்கள். நன்றி
நீக்கு//களிப்பது என் கொண்டு நம்பீ, கடல் வண்ணா, கதறுகின்றேன்// தொண்டரடிப் பொடியாழ்வாருக்கும் ஆழ்வாருக்குமே இப்படி என்றால் நாமெல்லாம் என்னிக்குக் கடைத்தேறுவது? அருமையானதொரு பாசுரத்தையும் விளக்கத்தோடு கூடிய ஸ்லோகத்தையும் பகிர்ந்து கொண்ட நெல்லைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇந்தப் பதிவில் எதையுமே அதிகம், மிகைனு சொல்ல முடியலை. ஆகவே நீங்க எப்படி எழுதணுமோ எழுதுங்க. ஒண்ணும் பிரச்னை இல்லை.
மிக்க நன்றி கீசா மேடம்.
நீக்குகுரு, சிஷ்ய உறவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும் முதல் பத்தியை மட்டும் நாலைந்து முறை படித்தேன். இப்போல்லாம் அத்தகையதொரு உணர்வோ மனதில் நினைப்பதோ கூட இல்லை. கலாசாரச் சீர்கேட்டில் இதுவும் ஒண்ணு.
பதிலளிநீக்குஉண்மை கீசா மேடம். உணர்வு பூர்வமாக தங்கள் ஆசிரியரை மதிப்பது கூட மிகவும் குறைந்துவிட்டது. சக மனிதர்களாக்க் கருதி, அவர்கள் தவறுகளைப் பூதாகரமாக்கி இவரும் நம் போல்வர்னு நினைத்துவிடுகிறார்கள்.
நீக்குநெல்லை அவர்களின்
பதிலளிநீக்குபிரார்த்தனைக்கு நன்றி...