24.3.26

பொக்கிஷம் சிறுகதை :: மனம் எனும் ரசாயனம் - அநுத்தமா

மனம் எனும் ரசாயனம் - அநுத்தமா 

என் மனைவியும் நானும் நாடகம் பார்த்து விட்டு வீட்டுக்குத் திரும்பினோம். நம் ஊர்ப் பிள்ளைகளே சேர்ந்து ஆடிய ஆட்டம்.  கதையும் அவர்களே எழுதிக் கொண்டார்கள், மிகவும் ரசமாகத்தான் இருந்தது. "சின்ன ஊர், இங்கே என்ன இருக்கப் போகிறது?" என்ற அலட்சியத்துடன்தான் நாங்கள் சென்றேம். பதினைந்து வருடங்கள் கல்கத்தாவில் இருந்து வங்காள நாடகங்களைப் பார்த்து, மேனாட்டு நாடகக் குழுவினரைக் கண்டு களித்து, ஏன், நாங்களே கூடத்தான் நாடக மண்டலிகளை நடத்திப் பார்த்து அனுபவித்த எங்கள் இருவருக்கும் ஊர்க்காரப் பிள்ளைகளின் ஆட்டத்தைக் காண வேடிக்கையாகத்தான் இருந்தது.  ஆனால் போய் பார்த்துவிட்டு வந்த பிறகு தான் யோசிக்கிறேன். நடிப்பு,உ த்தி எல்லாமுமே நன்றாக அமைந்திருந்தன.

திருப்தியுடன் நான் என் மனைவியிடம் "என்ன நாடகம் பிரமாதமாக அமைத்து விட்டது இல்லையா?" என்று கேட்டேன்.

சப்புக் கோட்டி விட்டாள் அவள். " என்ன ஜோடனை:  என்ன ஜோடனை"அதை மெச்சுவதா? உங்கள் ரசனையை மெச்சுவதா!" என்று அடியோடு ஒரு போடு போட்டு என்னையும் என் அபிப்பிராயத்தை யும் தள்ளி விட்டாள்.

நான் அதைச் சுவைத்து ரசித்துக் கொண்டேன்.  நாங்கள் இருவரும் ஏகமனதாக ஒப்புக்கொண்ட விஷயங்களை விரல்விட்டு  எண்ணி விடலாம். எங்கள் திருஷ்டித் கோணங்களிலேயே வேறுபாடு.  மன பேதங்கள், நிற பேதங்கள், கொள்கை வேறுபாடுகள் அபிப்பிராய மாறுதல்கள், இன வித்தியாசங்கள்.  இவைகளின் கலவைதானே உலகம்!

"என்ன சிரிக்கிறீர்கள்?  நான் அழுகிறேன். 'நாடக விமர்சகர்' என்று பெயர் வாங்கியவரின் ருசி இப்படித் தரைக்கு இறங்கி விட்டதே என்று நான் உள்ளூர வருத்தப்படுகிறேன்" 

"சீர்தூக்கும் மனப்பான்மையும், இடம் பொருள் கண்டு மதிப்பிடும் புத்தியும் இவ்லையே உனக்கு? எனக்கு அது வேதனையாக இருக்கிறது" என்று மறுமொழி தந்து விட்டு மீண்டும் உரக்கச் சிரித்தேன் நான். 

எங்கள் வாக்குவாதம் நீண்டு, சாப்பாடு, உறக்கம் யாவும் முடிந்து, விழிப்புக்கும்  காப்பிக்கும் பிறகும் கூட நடப்பது உண்டு. ஆயினும் இன்று வீட்டுக் குறட்டை மிதிக்கும் முன்பே எங்கள் கவனம் வேறு பக்கம் சென்றுவிட நேர்ந்தது.   வீட்டு வாசலில் ஒரு புதுக் கார் நின்றிருந்தது. அதன் மீது உட்கார்ந்துகொண்டு எங்கோ பார்த்தவண்ணம் காக்கிக  காக்கி உடை அணிந்த டிரைவர் இருந்தான்.  வண்டியின் பின்புறம் சாமான்கள் வைக்கும் இடம் திறந்து கிடந்தது. குழந்தைகளை வைத்துத் தள்ளும் வண்டி காரின் மேலே  சாய்த்து வைக்கப்பட்டிருத்தது.  துல்லிய வெள்ள உடுத்திய ஆயா ஒருத்தி சாமான்களை இறக்கிக் கொண்டிருந்தாள். செல்வச் சின்னங்களாகிய  பற்பல சாமான்கள் வண்டியினின்று இறங்கிக் கொண்டிருந்தன. 

"மஞ்சுளா வந்திருக்கிறளாக்கும்?" என்று கேட்டாள் என் மனைவி.

"யாரு? சிகப்பியா?" என்று கேட்டேன் நான்.

"உஷ்..  அப்படியெல்லாம் அசட்டுப் பிசட்டென்று பேசாதீர்கள். சின்ன வயசிலே ஏதோ பெயர் இருந்தால் அதையே இப்பொழுதும் சொல்லக்கூடாது" என்று என்னை உடனே அடக்கி விட்டாள் என் சகதர்மிணி. 

'சிகப்பி', 'கறுப்பி' என்றுதான் அந்த இரு குழந்தைகளையும் நாங்கள் அழைப்பது, தெருவிலே பாண்டி கிழித்து விளையாடிய குழந்தைகள். நானே அவர்கள் கண்ணாமூச்சிக்குத் 'தாச்சி'யாக இருந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் பெரியவள் சிகப்பி, சின்னவள் கறுப்பி. 

இருபது ஆண்டுகள்ஓடி விட்டன. சிகப்பி மஞ்களாவாக, முப்பது வயது நிரம்பிய பெண்மணியாக, பணக்காரியாக இன்று வந்து இறங்கி இருக்கிறாள்.  அவள் கணவர் ஒரு பருத்தி ஆலையின் அதிபராம்.   . டிரைவரின் உடையும் நடை யுமே ராஜ கம்பிரமாக இருக்கும்போது எஜமானனின் உயர்த்தியைக் கேட்க வேண்டுமா?

என் மனைவி கதவைத் திறக்கும் திறக்கும் வரை நான் காரையும், அதிலிருந்து இறங்கும் சாமான்களையும் கண்ணுற்றவாறு இருந்தேன், குழந்தையின் பால் சீசாவை ஊறப்போடும் பேஸின் முதல் விளயாட்டுப் பொம்மைகள் வரை அதனின்று இறங்கின.  உடுப்புக் கலையாமல் அப்படியே மாட்டிய 'பிளாஸ்டிக் வார்ட்ரோப்'   ஊ..ம்..  செல்வம் என்னதான் செய்யாது!

"உள்ளே வாருங்கள். ஏன் வைத்த கண் வாங்காமல் பட்டிக்காடு மாதிரி பார்க்கிறீர்கள்?" என் மனைவி என்னை அவசரமாக உள்ளே அழைத்தாள்.

நான் உள்ளே வந்து விட்டேன்.  அவர்கள் வீட்டை நோக்கினேன்.  நான் முன்பு இந்த ஊரில் கல்லூரி ஆசிரியனாக இருந்தபோது அந்த வீட்டைக் கட்டினேன்.  பிறகு இப்போது நாங்கள் இருக்கும் சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டேன்.  அந்த நாட்களில் அந்த வீட்டிலேயே ஒரு பகுதியில் சிகப்பியின் குடும்பம் இருந்தது.  மற்றொன்றில் நாங்கள் இருந்தோம்.

"சிகப்பி நல்ல பணக்காரியாக்கும்?" என்று நான் கேட்டேன்.  

 "புதிதாகக் கேட்பீர்கள்!  அவள் பெயரில்தானே "மஞ்சுளா மில்ஸ் அவளுக்கெள்ள, பிறவியிலேயே பணக்காரி. அழகுத் தெய்வம் அவள் அங்கங்களிலே குடிகொண்டதாலே, அதுவே லட் கமி கடாட்சம்" என்றாள் என் மனைவி. 

சிகப்பி பிறவியிலேயே அழகிதான். அவர்கள் எங்கள் வீட்டுக்குக் குடி வந்த போது சிகப்பிக்கு பத்து வயக, கறுப்பிக்கு எட்டு வயது.  எங்கள் கல்லூரியில் கணக்கு ஆசிரியராக வந்தார் மஞ்சுளாவின் தகப்பனார் குப்புசாமி.  அவருக்கு இந்த இரண்டே பெண்கள் தாம்.  

சிகப்பி கடைந்தெடுத்த தந்தப் பொம்மைதான். அவன் பள்ளிக்கூடம் போக வீதியில் இறங்கினாலே போதும், எல்லோர் கண்களும் அவளையே தொடரும்.  கூடவேதான் அவள் தங்கை குந்தளா போவாள். அவள்தான் கறுப்பி. அவள் தன் தமக்கைக்கு நேர்மாறான நிறம், நடை, உடை, பாவனை யெல்லாம் தான். சிகப்பி, கறுப்பி என்று யார் பெயரிட்டார்களோ தெரியாது. எல்லோருக்கும் அதுவே பழக்கமாகி விட்டது.  சிகப்பி தன் மேனி அலுங்காமல் மெதுவாகத் தன் கண்களால் இரு புறமும் நோட்டம் விட்டுக் கொண்டே நடப்பாள்.  சுறுப்பியும் அவளோடு கூடவேதான் கிளம்புவாள், ஆனாம் பத்தடி கூட நேரே நடக்க மாட்டாள்.  வீதியின் ஓரத்தில் சாக்கடையில் தண்ணீர் ஓடினால் அதில் ஒரு காகிதக் கப்பல் செய்து போட்டுவிட்டு, அதன் கூடவே கரையில் ஓடுவாள், புத்தகங்கள் நழுவி நழுவிக் கீழே விழுந்து கசங்கிப் போகும்.  பாவாடை அள்ளிப் பிடிக்கப்பட்டு, அலங்கோலமாகக் காட்சி தரும்.  தலைமயிர் இலேசாகப் பறக்கும். மூச்சு முட்ட முட்டப் பள்ளிக்கூட  வாயிலை அடைவாள் பெண்.   அதே முன் வாயிலைத் தாண்டித்தான் நானும் கல்லூரிக்குப் போயாக வேண்டும். ஒரே ஸ்தாபனத்தாரின் கல்விக்கூடங்கள்தாம் அவர்கள் பள்ளியும், எங்கள் கல்லூரியும்.  

"சிகப்பி எங்கே!" என்று கேட்பேன். "அதோ!" என்று கட்டிக் காட்டி விட்டுத் தமக்கைக்காகக் காத்து நிற்பாள் சிறுமி. அந்தச் சமயம் அவள் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாகக் காட்சியளிப்பாள். எதிரே ஒயில் நடை போட்டு வரும் தன் அக்காவின் அழகையும் தன் அலங்கோலத்தையும் ஒப்பிட்டும் பார்ப்பாள் போலும்!  இதுவரை காகிதக் கப்பலின் வேகத்தில் ஒன்றி ஓடிய உற்சாகம் இப்போது எங்கு போகுமோ?  கவலை தோய்ந்து, சிறிதே அவமானம் தலைகாட்ட, கலைந்த புத்தகங்களுடனும் கசங்கிய உடையும், அலைந்த கேசமுமாக நிற்பாள் தங்கை.

"சிகப்பி, எனக்குத் தலையைச் சரியாகக் கோதிவிட்டு விடேன். இல்லையென்றால்  வாத்தியாரம்மா முட்டி போடச் சொல்லுவார்கள்!!" என்று மஞ்சுளாவைக் கெஞ்சுவாள் குந்தளா. 

"நீ புத்தி கெட்டு ஓடு, உன்னை என்னால் தொட முடியாது. அழுக்கு வழிகிறாய்" என்பாள் பெரியவள்.

நான் சில விநாடிகள் நின்று பார்ப்பேன்:  குந்தளாவின் கண்களில் நீர் தளும்பும். நான் அருகே சென்று கைக் குட்டையால் அவள் கன்னத்தில் இருக்கும் மண்ணைத் துடைத்து, தெரிந்த மட்டும் தலையைக் கோதிவிட்டு, முதுகில் தட்டி உள்ளே அனுப்புவேன். அவள் கவலையுடன் "மாமா, தல பறக்கிறதா? டீச்சரம்மா முட்டி போடச் சொல்லுவாங்களா!" என்று வினவுவாள். "ரொம்பப் பறக்கவில்லை. இனிமேல் கவனமாக இரு" என்று நான் அவளைச் சலுகையுடன் கண்டித்து அனுப்புவேன். மஞ்சுளா ஒரே நிதானமாக நடந்து சென்று கொண்டிருப்பாள்.  குந்தளா அவளைத் தாண்டி ஓடும்போது பாவாடை நுனியில் கால் வைத்து, விழும் தறுவாயில் சமாளித்து நின்று போவதைப் பார்ப்பேன். சிரிப்பு மேலிடும்.  போய் விடுவேன். மாலையில் நான் வீடு திரும்பினவுடன் இது விஷயமாக என் மலைவியிவிடம் பேசினால் அநுதாபம் கிடைக்காது, "ஆமாம்! அதன் உருவத்துக்கு ஏற்றமாதிரிதான் புத்தியும் இருக்கிறது. அதே வயித்தில் பிறந்து, அதே தாயார் வளர்த்த பெண்தானே சிகப்பி!  எவ்வளவு  தந்துலக்கமாய், எழிலுருவாய், நாசூக்காக இருக்கிறாள்" என்பாள் அவள்.

என் மனைவி என்ன, அந்தக் குழந்தையின் பெற்றேர்கள் கூடத்தான் பாரபட்சம் காட்டினார்கள். அழகான புதுப் புது உடைகள் தைத்துப் பெரியவளுக்குப் போட்டார்கள். அவளுக்கு அளவு குறைந்து விட்டதும் அவைகளைச் சின்னவளுக்குத் தந்தார்கள். சிலசமயம் குந்தளா அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள். அதே போல் தைத்துப் போட்டாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்துப்  பேசாமல் இருந்தார்களா?  'அதே உடை மஞ்களாவுக்கு அழகுக்கு அழகு செய்கிறது. குந்தளாவுக்கு நன்றாகவே இல்லை' என்பார்கள். குழந்தை முகம் சுண்டி விடும்.

யார் வீட்டு விவகாரத்துக்கு யார் பதில் சொல்ல முடியும்? அல்லது உலகத்தின் நாவைத்தான் அடக்க முடியுமா?

த்தனை வருடங்களுக்குப் பிறகு அவ்விரு பெண்களின் நினைவு என் மனத்தில் இன்றும் பளிச்சென்று இருந்தது. அவர்கள் இப்பொழுது எப்படியெல்லாம் . மாறி விட்டிருப்பார்களோ?  மனம், குணம், நடை, பேச்சு எல்லாமே மாறி விட்டிருக்குமோ?

அவர்கள் இல்லத்தை நோக்கினேன். வெய்யிலில் கட்டப்பட்டிருந்த கம்பிக் கொடி நிறையக் குழந்தைச் சட்டைகளை உலர்த்திக் கொண்டிருந்தாள் ஆயா, "சிகப்பிக்கு ஒரு குழந்தைதானே என்று நான் என்னுடைய மனைவியைக் கேட்டேன்.

"ஆமாம். அதற்கு மேல் இருக்குமோ அவளுக்கு?  நிறைய செல்வம் இருக்கிறது. குழந்தைகள் இல்லை.. கறுப்பிக்குப் பிறந்திருக்கிறதாம் மூன்றோ நான்கோ!" 

இவளுக்கு ஏனோ வேதனை?  சிகப்பிக்கு ஒரே குழந்தை. அதற்காக, பத்துக் குழந்தை துணியையும் அதற்கே போட்டு விட வேண்டுமா? 

''சின்னவள் இங்கே வருவதில்லையா?" 

"இப்பொழுதேல்லாம் வருகிறாளாம். முன்புதான் இரண்டு வருடங்கள் வராமலே இருந்தாளாம்... 

நான் சற்றைக்கெல்லாம் கிளம்பி என் நண்பரைக் காணச் சென்றேன். 'சிகப்பி சிறு வயதிலிருந்த அதீதமான அழகுடனே இன்றும் விளங்குகிறாளா?  வயதும் வாழ்க்கையும் அவள மாற்றி விட்டனவா?  அவள் செல்வத்தில் இருப்பவள்.  இயற்கை அழகைச் செயற்கையால் அதிகரிக்க வசதியுள்ளவள்.  சின்னவளுக்கு  இயற்கை சதி செய்துவிட்டது.  செயற்கைக்கும் செயல் போதாது' என்றேல்லாம் சிந்தித்தது என் மனம்.

என்னைக் கண்டதும் நண்பர் ஓடோடியும் வந்து வரவேற்றார். பணக்காரியான பெண், காக்கி உடுப்பு அணிந்த கார் டிரைவரும் குழந்தை எடுக்க ஆயாவும், பெரிய காரும், வீடு கொண்ட சாமானுமாக வந்து இறங்கியிருப்பதைக் கண்டு ஒரு தந்தையின் உள்ளம் களிப்படைவதில் வியப்பென்ன இருக்கிறது? எனக்கே பெருமையாக இருக்கிறதே? 

"சிகப்பி வந்திருக்கிறாளாமே? இப்பல்லாம் சிகப்பி என்று சொல்லக் கூடாதோ?  மஞ்சுளா என்றுதான் அழைக்க வேண்டுமாக்கும்! என் மனைவி என்னை எச்சரித்துத்தான் அனுப்பியிருக்கிறாள்" என்று கூறிக் கொண்டே நான் அவர் எதிரே அமர்ந்தேன்.

"சிகப்பிதான் மஞ்சுளாவாக ஆகி விட்டாள். கறுப்பி இன்றும் முக்கால் வாசிப் பேர்களுக்குக் கறுப்பிதான். அவள் கணவனும் அப்படித்தான் அவளை அழைக்கிறான்".

"குந்தளா செளக்கியமாக இருக்கிறாளா?

"இப்பொழுது சுகமாகத்தான் இருக்கிறாள்.  இரண்டு குழந்தைகள். மூன்றாவது பிறக்கப்போகிறது." 

"ஏன் 'இப்பொழுது சுகம்' என்று பொடி வைத்துச் சொல்கிறீர்கள்" என்று நான் கேட்டேன்.  என் மனைவியின் சொற்கள் என் நினைவில் இருந்தன. முன்பு இரண்டு வருடங்கள் பிறந்தகமே வராமல் இருந்ததாகச் சொன்னாளே?

"ஆமாம், சார், குழந்தை இரண்டு, மூன்று வருடங்கள் இங்கே மிகவும் கஷ்டப்பட்டதாக இப்பொழுது தெரிகிறது, பிறகு திடீரேன்று ஒரு நாள் அவளும் அவள் கணவனுமாக வந்தார்கள். இன்று வரையில் அவர்கள் வீட்டில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. -  கறுப்பியும் அடித்துப் பேசுகிறாள் ஒன்றுமே நடக்கவில்ளை என்று.  எப்படியோ கணவனோடு புக்ககம் போனாள். அவனோடேயே  பிறந்தகம் வந்தாள். இடையில் இரண்டு, மூன்று வருட காலம் இருவரும் இங்கு வரவில்லை  நாங்கள் போனாலும் மாப்பிள்ளை பேச மாட்டான்.  குந்தளாவும் எங்களை வரவேண்டாம் என்றுசொல்லி  விட்டாள். அதை மீறி நாங்கள் போனால் என்ன கஷ்டம் நேருமோ என்று போகாமலே இருந்து விட்டோம்."

இன்று அந்தப் பழைய நாட்களை நினைத்து ஒரு கணம் வருத்தப்பட்டார் தந்தை.  அவர் கண்களில் நீர் துளிர்த்தது.  அந்தச் சமயத்தில் மேலும் குத்திக் குத்திப் பேசு மனமில்லாமல் நான் மௌனம் சாதித்தேன்.  இதற்குள் மஞ்சுளா தன் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்தாள்.

''வா, அம்மா! கொண்டுவா இங்கே என் பேரப் பிள்ளையை" என்று சொல்லிக்கொண்டே கையை நீட்டினேன். 

குழந்தை தன் தாயைப் போலவே வெள்ளை வெளேரென்று அழகாக இருந்தது. மஞ்சுளா எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். அப்பொழுதுதான் நான் அவளை நிமிர்த்து நோக்கினேன். என் எனம் 'திக்'கென்றது. ஏதோ ஒரு குளிர் படர்ந்து என் அடி வயிற்றில் அமர்ந்த மாதிரி இருந்தது. மஞ்சுளாவா இவள்?  தெய்வத் சிற்பியின் கைவண்ணமெல்லாம் அமைந்த அற்புத எழில் சிலையாக இருந்த சிகப்பியா இவள்?"  சிவப்புத் தோல் மட்டும்தான் இருந்தது, என் அற்புத வெண்கலச்சிலையை யாரோ தேய்த்து விட்ட மாதிரி இருந்தது. தீர்மை மழுங்கி விட்ட மெழுகு பொம்மையாக அவள் என் எதிரே நின்றாள்.  ஏமாற்றத்தை வெளியே காட்டாமல், அவள் குழந்தையையே கவனித்துப் பேசி விட்டு என் வீடு திரும்பினேன்.

"நாளைக்குச் சின்னவளும் அவள் கணவலும் வருகிறார்கள்"  என்றார் நண்பர் கிளம்பும்போது. 

"பெரிய மாப்பிள்ளை  ஏன் வரவில்லை?" 

"இன்று மாலை வருகிறார்!" என்று மஞ்சுளா பதிலளித்தாள்.  நான் அவள் முகத்தைப் பார்த்தேன்.  ஒருவித உணர்ச்சியும் எடுத்துக் காட்டப்படவில்லை அங்கு.  அந்தப் பெண்ணின் வதனத்தில் ஜீவ களையே காணோம். 

தான் ஆசையோடு வரைந்த சித்திரம் மழையில் நனைந்து விட்டால் ஓர் ஓவியன் வருத்தப்பட மாட்டானா?'   அது போல் பெரியதோர் ஏமாற்றத்துடன் நான் வீடு திரும்பினேன்.

வீட்டில் என் மனைவியுடன் பேச்சும் கொடுத்தேன்.  என்னவோ ஒரு வேதனை என்னை வாட்டியது.  "என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்! கடையிலிருந்து ஏதாவது சாமான் வேண்டுமா?' என்று கேட்டேன். 

சீறினாள் என் மனைவி. அவளுக்குப் பல குறைகள்.  தீபாவளிக்கு அழைத்ததற்கு பெண்ணும் மாப்பிள்ளையும் வரவில்லை.  மருமகள் பிரசவத்துக்காக போய் விட்டாள். பிள்ளை வெளியூர் போய் விட்டான் வேலை நிமித்தமாக.   பேரனும் இங்கு நிற்க மாட்டேன் என்று தன் தாயிடம் ஓடி விட்டது.

"ஒரு சாமானும் வேண்டாம். இங்கே வீடு நிறைய மனிதர்கள் வரப் போகிறார்களாக்கும்!  பட்டும், பீதாம்பரமும் சேகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாக்கும்!  கேள்வியைப் பார், கேள்வியை!" என்று சரமாரியாக மொழிந்து கொண்டே, இயந்திரத்தின் அச்சின் மீது குண்டுக் கல்லால் அவள் நறுக்கென்று ஒன்று வைத்தாள்.

சாதாரணமாக நான் வாய் விட்டுச் சிரித்திருப்பேன். இன்று எனக்கும் ஏதோ மனம் படுத்து விட்டது.  சூள் கொட்டி விட்டு நான் முன் பக்கம் போய் விசுப் பலகையில் படுத்து விட்டேன், மஞ்களாவின் முகம் அடிக்கடி என் மனத்தின் முன் வந்து வந்து துன்புறுத்தியது.

தான் வெடிப்பாக பேசியதை நினைத்து வருந்தினாள் போலும் என் மனைவி!   கையில் ஒரு கோப்பை பழரசத்துடன் வந்து நின்றாள்.  "களைப்பாக இருக்கிறதா, என்ன?" என்று மிகுந்த பரிவுடன் கேட்டாள். 

"நீ போட்ட ராம பாணத்தினால் அடியுண்டு கிடக்கிறேன்"என்றேன் நான் ஹாஸ்யமாக.

அவள் முகம் களித்துக்கொண்டது. 

நான் அதைப் பார்த்து விட்டுப் பேச்சில் இறங்கினேன். "சிகப்பியைப் பார்த்தாயா?  எப்படி மாறி விட்டாள்!" 

"நீங்கள் தலையில் கைவைத்துக் கவலைப்படுகிற மாதிரி என்ன மாறுதல் வந்து விட்டது?  முன்பு குழந்தையாக இருந்தாள். இப்பொழுது வயதின் முதிர்ச்சி தெரிகிறது"

அவள் சுலபமாக அடித்துப் பேசி விட்டாள். நானும் பேசாமல் இருந்து விட்டேன். ஆயினும், அவ்வளவுதானா தெரிகிறது?  கலை நுட்பமெல்லாம் மிகுந்த தேர்  ஒன்றை உப்புக் காகிதத்தால் யாரே தேய்த்து விட் டால், வயதின் மூப்பு போன்று காட்சியளிக்குமா? 

மாலை பெரிய மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார் நண்பர், பணக்காரனாக இருந்தாலும் வினயத்தோடும் பண்போடும் பழகினான் அவன்.  கறுப்பானாலும் லட்சணம் இருந்தது. அவனைக் கண்டதும்தான் எனக்கு நினைவு வந்தது. அவர்கள் கல்யாணம் நாங்கள் கல்கத்தா போன பிறகுதான் நடத்தது.  பெரியவளுக்குக் கறுப்பான கணவனும், சின்னவளுக்குச் சிவப்பான புருஷனும் கிடைத்ததைப் பற்றி அப்பொழுது நிறைய பேச்சுதான் எழுந்தது. 

இப்படித்தான் வாழ்க்கையில் நடந்து விடுகிறது.  நான் வியந்து கொண்டே அன்றைய நாளைக் கடத்தினேன்.

று நாள் காலை நான் தோட்டத்தில் பூண்டுகளைக் களைந்து கொண்டிருந்தேன். திடீரேன்து, "மாமா!" என்ற ஓர் உற்சாகமான குரல் என்னைத் தட்டி எழுப்பியது. சுறுசுறுப்பும் மகிழ்ச்சியும் தெறித்த அந்தக் குரல் பழக்கப்பட்ட குரல்தான்.  நான் சட்டென்று எழுந்து பார்த்தேன்.  யார்? சுறுப்பிதான். 

இடுப்பில் மூன்றுவயதுப் பெண் குழந்தையுடன் நின்றாள் அவள்.  நான்  வைத்த வாங்காமல் அவளையே பிரமிப்புடன் நோக்கினேன். ஆம், பழைய குந்தளாவா இவள்?  என்ன மாறுதல், என்ன வித்தியாசம்!  எனக்கு வியப்பு மேலிட்டது. காண்போரைக் கவரும் ஒரு தனிக் கலை, ஒரு சோபை மிளிர்ந்தது அவளிடம்.

"என்ன மாமா பழைய மனிதர்களே மறந்து விட்டதா உங்களுக்கு?" என்று கேட்டு விட்டுச் சிரித்தாள் அவள்.  கலகலவென்ற வெள்ளிமணிச் சிரிப்பு.

"தெரியாமல் என்ன, அம்மா? உங்களையெல்லாம் பார்த்து வெகுநாட்களாகி விடவே,  நான் நேற்றுப் பார்த்த குழந்தைகளை இப்படி வளர்ந்து விட்டீர்கள்' என்று ஆச்சர்யபப்டுகிறேன்" என்றேன் ஒருவாறு என்னைச் சமாளித்துக் கொண்டு. 

"உங்கள் பெண் மட்டும் அப்படியே இருக்கிறாளோ?  போங்கள், மாமா. எனக்குத் தெரியும், உங்கள் ஆச்சரியத்துக்குக் காரணம், 'பழைய சுறுப்பியா இப்படி அழகாக இருக்கிருள்? என்று விழிக்கிறீர்கள்.  நீங்கள் மட்டும் என்ன. மாமா உலகமே  அந்தக் கேள்வியைதான் கேட்கிறது" என்று கூறினாள் அவள், அதரங்களில் குறுப்புச் சிரிப்பு மிளிர,

"நீ சொல்லலும் உண்மைதான், அம்மா.  நான் மறுக்கவில்லை" என்று நான் அசடு வழிய ஒப்புக் கொண்டேன்.  அவள் என் முன்னால் நடந்து எங்கள் வீட்டுக்குள் நுழைத்தாள்.  "மாமீ.. மாமீ!" என்று அவள் கூவுவது சங்கீதம் போல் ஒளித்தது.

நான் என் விகப் பலகையில் அமர்ந்தேன்.  குந்தளா குழந்தையையும் தூக்கிக் கொண்டு என் மனைவியுடன் வந்தாள்.  குழந்தை, என் நீட்டின கரங்களைப் பார்த்துத் தாவி வந்தது. அழகுப் பிம்பமாக இருந்தது மகவு.

"குந்தளா!  சரி, இப்ப மாமாவுக்கும் சொல், பார்க்கலாம். நீ எப்படி அழகியாக மாறி விட்டாய் என்று!" 

"அது பெரிய கதை, மாமா. அது கிடக்கட்டும்.  நீங்களும் இருக்கிறீர்கள், என் அப்பாவும் இருக்கிறார். நீங்கள் உங்களுக்காக ஒரு வீடு, வாடகைக்காக ஒரு வீடு கட்டி விட்டீர்கள். எங்கள் அப்பாவோ, தான் இருப்பதற்குக்கூட ஒரு வீடு கட்டிக் கொள்ளவில்லை.  வாடகையே தந்து கொண்டிருக்கிறர். இருவருக்கும் ஒரே மாதிரி குடும்பம், ஒரே சம்பளம்"  என்று சம்பந்தம் இல்லாமல் பேச்சை மாற்றினாள் குந்தளா. 

"உன் அப்பா எதற்கம்மா வீடு கட்ட வேண்டும்? அவருக்குச் சொத்து நிறைய இருக்கிறது, என்றும் வாடகை கொடுத்து எந்த வீட்டிலும் இருக்கலாம்.  எனக்கு அப்படி இல்லையே?  இந்த வீடு தானே எனக்குச் சொத்து?  ஓய்வு பெற்று வந்து விட்டேன்.  இந்த வீட்டு வாடகை ஒரு பாதுகாப்பாக எனக்கு வேண்டாமா?  இன்று இவ்வாறு நல்ல பதவியில் இருப்பேன் என்று அப்பொழுது எப்படி எனக்குத் தெரியும்?   இருக்கிறதற்குள் சௌகரியம் தேடிக்கொண்டேன்"

"அதேதான் மாமா, நானும் செய்தேன். நான் அழகற்றவளாக புக்ககம் போனேன்..  அவள் குரல் கம்மி விட்டது. பழைய நினைவுதான் என்றாலும் புண்பட்ட உள்ளம் சிறிது வலித்தது போலும். 

"மிகவும் கஷ்டப்பட்டாயா அம்மா" என்று நான் பரிவுடன் கேட்டேன். 

சிறு குழந்தையாக இருந்த போது அவள் ஒருநாள் ஓடிவந்து என் மடியில் அழுதது எனக்கு நினைவு வந்தது,  பள்ளிக்கூட நாடகத்தில் அவளை அழகில்லை என்று எடுக்காமல், அதே பாத்திரத்தைச் சிகப்பிக்குத் தந்து விட்டார்கள்.  "அவளை விட எனக்குத்தான் மாமா, சம்பாஷணை நன்றாக வரும், சங்கீதம் வரும். . என்னை எடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்களே!" என்று குழந்தை விம்மி விம்மி உள்ளம் வெடிக்க அழுதது இன்று போல் பளிச்சென்றிருந்தது.

குந்தளா நிமிர்ந்தாள். அவள் முகம் மீண்டும் தெளிந்து விட்டது. "மாமா! நான் கஷ்டப்பட்டேன். யாரும் துன்புறுத்தவில்லை. . என் கணவருக்கு மட்டும் மனக் குறை. தம் பெற்றோருக்காக என்னை மணந்து கொண்டு விட்டார். ஆனால் அவருக்கு என்னைப் பார்க்கக் கூட கூச்சம்.  ஊரிலும் பலர் அவரைப் பார்த்து அதுதாபமாகப் பேச ஆரம்பித்து விட்டனர்.  "இவ்வளவு அழகாக இருக்கிறவனுக்கு ஒரு அவலட்சணமான ஒரு பெண்ணா!" என்ற  சொல்லும், பார்க்கும் பார்வையும் அவரை மேலாகக் குத்தின. எனக்கும் கூட அவரைக் கண்டால் பரிதாபமாக இருந்தது. 

"என்னிடம் பராமுகமாக அவர் இருப்பதைச் அவர் இருப்பதைக் கண்டு என் மாமியார் அடிக்கடி என்னிடம் , 'பிறந்த வீட்டுக்காவது போய் இரண்டு மாதங்கள் இருந்து விட்டு வா' என்று சொல்லுவார். இங்கே வந்து மட்டும் என்ன செய்வது மாமா?  மறுபடியும் பழைய பல்லலி, அதே இழி சொற்கள்தானே? 'நன்றாக இல்லாத பெண்ணுடன் யார் வாழ்வார்கள்?' என்று ஊர் சுடும். வாழாவெட்டி என்று என்னைப்பற்றிப் புறம் பேசுவார்கள். அது என் பெற்றேர்களுக்கு வேதனையாக இருக்கும். அதைவிட அங்கேயே இருப்பது கெளரவம் என்று பேசாமல் இருந்து விட்டேன்.. 

+"பாவம்,உனக்கு இவ்வளவு பொறுமை எப்படி வந்தது!"..

''அவசியம் வந்தால் எதுவும் வருகிறது. என் கணவர் நிலையைப் பார்த்து எனக்கு வேதனையாக  இருந்தது. என் அக்கா அப்படித்தானே?   தன் அழகுக்கு ஏற்ற அழகு மாப்பிள்ளை கிடைக்கவில்லையே என்று அப்படியே மழுங்கி, ஒளி மங்கிப் போய் விட்டாளே?  அதே நிலையில்தான் என் கணவரும் நான் அவருக்கு ஏற்ற அழகியாக இல்லையே என்று வேதனையில் நொந்து கொண்டிருந்தார். அவர் மனக்குறையைப் போக்குவது என் கடமையல்லவா?"

"அது கிடக்கட்டும். நீ எப்படிக் கடைசியில் அழகாகும் ரகசியம் கண்டு பிடித்தாய்?"

"அவர் வீட்டில் தங்குவதே அரிதாகி விட்டது. இருந்த நேரத்திலும் என் திக்கே பார்க்கவில்லை.  அதனால் நான் ஒரு வேலயில் அமர்ந்து கொண்டேன். என் நாத்தனாரும் நானும் ஒரே அலுலகத்தில் வேலை செய்தோம். அப்பொழுது எனக்கு பல பெண்களின் தொடர்பு கிடைத்தது . என் கவலையை மறக்க அவர்களிடம் ஒன்றிப் பழகினேன். அவசியத்தினால் அவர்களைப் போலவே அழகாக ஆடைகள் அணியக் கற்றுக் கொண்டேன். இயற்கையிலே அழகில்லாதவர்கள் எளிய செயற்கை முறைகளால் எப்படிப் பிறர் கவனத்தைக் கவருவது என்ற கலையைக் கற்றுக் கொண்டேன். என் எண்ணமெல்லாம் என் கணவரின் மனக்குறையைப் போக்கி அவர் உள்ளத்தில் எப்படி இடம் பெறுவது என்ற ஒன்றிலேயே லயித்திருந்தது. அழகுக்கு அங்க அமைப்பு மட்டுமே தேவையில்லை, அகத்தின் அமைப்பும் வேண்டும் என்று புரிந்து கொண்டேன், அதனால், கண்ணீர் சிந்தலை நிறுத்தினேன். ஆரோக்கியமாக இருக்கப் பயின்றேன். மனசை எப்பொழுதும் வேலையில் ஈடுபடுத்தினேன்.  இரவு படுக்கையில் விழுந்ததும் கேவலம் அசதி மேலீட்டில் உறங்கி விடுவேன். இப்படி ஒரு நிர்ப்பந்தம் வைத்துக் கொண்டேன்...

"தபசு செய்தாய்?"

"அப்படித்தான் இருக்கட்டுமே?" என்று கூறி விட்டுச் சிரித்தாள் குந்தளா. "தவம் பலித்து விட்டதே. மாமா!"

"எப்படிப் பலித்தது?  அதுதானே சுவாரசியமான கட்டம்?" என்று கேட் டேன் நான், ஆவல் மேலீட்டுடன்.

"கொஞ்சம் கொஞ்சமாக அவர் என்னைக் கவனிக்க ஆரம்பித்தது எனக்குத் தெரியவில்லை. ஏகாக்ர சித்தத்துடன் நான் நடத்திய சோதனைகள், என் எளிய அலங்கார முறைகள் அவர் கவனத்தை எப்படியோ கவர்ந்திருக்கின்றன.  எங்கள் வீட்டில் என் அத்தை பெண்ணுக்குக் கலியாணம்,  நான் வருவதாக இல்லை, அன்று மாலை அவர், வீட்டுக்கு வந்து, வழக்கத்துக்கு மாறாக வீட்டிலேயே சுற்றிச் சுற்றி வந்தார். பிறகு தன் தாயாரைப் பார்த்து, சாவதானமாக, 'அம்மா, கல்யாணத்துக்குப் போகவில்லயா உன் மாட்டுப் பெண்?" என்று கேட்டார்.

''நானும் தைரியம் கொண்டு, மாமியார் பதில் சொல்வதற்கு முன் 'எதற்கு?' என்று கேட்டேன். உடனே அவர். 'நானும் வருகிறேன், இருவருமே போகலாமே?' என்றார்...

"ஒன்றுமே சலனமில்லாமல் சகஜமாகப் பேசி விட்டாராக்கும்."

"ஆமாம். மாமா! என்னுடன் வந்தார். பிறகு, அவரைப் போல் அன்பான மனிதரே உலகில் இல்லை என்றபடி இருக்கிறார்."

அதைக் கேட்கும் போது தேன் பாய்ந்தது என் செவிகளில், "என் மனமார்ந்த ஆசியும், பாராட்டும் உனக்கு. எவ்வளவு அதிருஷ்டசாலி உன் கணவன்!"

'அப்படித்தான் அவர் நண்பர்கள் சொல்லுகிறார்களாம். அவருக்கேற்ற அழகியாம் நான்! உலகம் குருடர் மாமா?"  அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். என் மடியில் இருந்த அவள் குழந்தையும் அவளுடன் சேர்ந்து சிரித்தது.

"கட்டாயம் நீ அழகியாகி விட்டாய், ஆனாய் என் வரை நீ கறுப்பிதான். சிகப்பியைப் பார். எப்படி ஆகி விட்டாள்!"

"அவள் அழகினால் உலகமே அவன் காலடியில் விழுந்து பழக்கமாகி விட்டது அவளுக்கு.  தானாக இன்பத்தைத் தேடிப் போய், அதைச் சேகரித்துக் கொள்ளத் தெரியவில்லை. கொஞ்சம் மனம் சோர்ந்ததும் களையிழந்து விட்டாள். நானோ ஒவ்வொரு நிமிஷமும், ஏழைச் சிறுமிகள் தெருவில் சுள்ளி சேர்ப்பது போல, அவர் மதிப்பைச் சேர்த்து வைக்கும்படி ஆகி விட்டது என் நிலைமை. என்னிடம் நிறையச் சேர்ந்தும் விட்டது."

"அவள் கணவனும் மிகவும் நல்ல மாதிரியாக இருக்கிறானே?  இவள் இப்படிக் குறைப்பட்டுக் கொள்வது எனக்குச் சரியாகப்படவில்லை."

"அதெல்லாம் பிறவிக் குணம் மாமா. குழ்நிலை நெருக்கடி, அவள் எங்கள் அப்பாவைப் போல் சொத்தின் மதிப்பில் அலட்சியமாக இருந்து, இன்று ஒருவர் பார்த்து இரக்கப்படும் நிலைக்கு வந்து விட்டாள். நானோ உங்களைப் போல்...."

வெகு சாதாரணமாகப் பேசினாள் குந்தளா. ஆனால் என் மனசில் அவள் பெரிய உருவம் எடுத்து வியாபித்து விட்டாள். இன்பத்துக்கும் துன்பத்துக்குமிடையே மயிரிழைதான் இருக்கிறது. இன்பத்தைத் துன்பமாக்குவதும், துன்பத்தை இன்பமாக்குவதுமான ரசாயனம் நம் மனம்தான் என்று அழகாக எடுத்துக் காட்டி விட்டாள் அவள்.

"மாமா! உங்களுக்குத் தீபாவளிக்கு ஒரு பரிசு தரப் போகிறேன், எத்தனை வருஷம் கழித்து வந்திருக்கிறீர்கள்! உங்களுக்கு என்ன பிடிக்கும், சொல்லுங்கள்" என்று கேட்டாள் அவள்.

நான் பதில் சொல்வதற்குள் என் மனைவி குறுக்கிட்டாள்  "கறுப்பி! நீ ஒன்றும் தர வேண்டாம்.  நிறைவு உள்ளத்தில்தான் இருக்கிறது எனும் படிப்பினையைக் கற்றுக் கொண்டோமே. -  அதுவே போதும்" என்றாள்.

அவள் முகத் தெளிவைக் கண்டேன். எங்கள் தீபாவளியும் நிறைவு பெற்றது.

- 1964 கல்கி தீபாவளி மலர் -

======================================================================================

சில விளம்பரங்கள்...


இப்போதெல்லாம் மூட்டைப்பூச்சி என்கிற வஸ்துவே கண்ணில் படவில்லை போலவே..  இந்த மருந்துதான் காரணமோ..!  எதுவாக இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட பாடல் ஒன்று நினைவுக்கு வந்து விடும் எனக்கு!  மூட்டைப்பூச்சிக்கு பாடல் இருக்கிறதோ?!**


இது ஏதோ பூச்சி மருந்து விளம்பரம்தான் போல..  படம் ரசனையாக புன்னகைக்க வைத்தது!


ஆமாம்..  என்ன இது?  பத்திரிகையில் வந்த கவிதை போலிருக்கிறதே...  என்ன பத்திரிகை..   எழுதியவர் பெயர் என்ன போட்டிருக்கிறது...?  ஹிஹிஹி..  அதுதான்  மேல சொல்லி இருக்கேன்ல..  சில விளம்பரம்னு...


மேலே கவிதையை சரியாகப் படிக்க தனியாக...  இங்கே விளக்கத்துடன்..


வினோதமான பெயர்!  "லபோ லபோ லப் ஜனக்கா" என்று குணா படத்தின் ஒரு பாட்டின் இடையே வரும்.  அதுவும் 'லபோதிபோ என்று அடித்துக் கொண்டான்' என்று கதைகளில் வரும் வரியும் நினைவுக்கு வருவது என் குற்றமல்ல!


அட பாரேன்..  மூக்குப்பொடி விளம்பரத்துக்கு புராண, காவிய உவமை!  நளதமயந்தியை ஏனைய்யா அனாவசியமாக இதற்கு இழுத்திருக்கிறீர்கள்!!


ஓவல்டின் தெரியும், மால்டோவா தெரியும்.  அட, ராகிமால்ட் கூட தெரியும்.  இது கேள்விப்பட்டதில்லையாக்கும்!

இது எல்லா வீட்டிலும் சகஜம்தானே!


**இருக்கிறது!  என்ன பாடல் தெரியுமோ?!!

5 கருத்துகள்:

  1. கல்கி பத்திரிகையில் வெளிவந்த கதை.என்று தெரிகிறது. அநுத்தமா கதைக்கான விஜயாவின் அந்த பெண் ஓவியங்களின் முக வசீகரம் அழகோ அழகு. ஜெயராஜ் வந்ததும் தான் இந்த குடும்பப் பாங்கான தோற்றப் பொலிவுகள் சீர்குலைந்தது போலும். மாறிக் கொண்டே வரும் காலத்தின் கோலத்தில் நாமே அறியாமல் உள்ளார்ந்த பல சிறப்புகளை ஒரு ப்ச்க்க்ச்ம் இழந்து கொண்டே வந்து இம்னொரு பக்கம் புதுசுக்கு பழக்கப்பட்டு விடுகிறோம் என்பது எவ்வளவு உண்மை!..

    பதிலளிநீக்கு
  2. கதை அரும்சி என்ற ஒற்றை வரியைத் தவிர்ர்த்து விட்டு கதையை வாசித்த நேர்த்தியை யாரெல்லாம் பகிர்ந்து கொள்ளப் போகிறார்க்ள் என்ற எதிர்பாத்ப்பு எகிர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரும்சி அல்ல. கண்பார்வைப் பிழை. அருமை என்று திருத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

      நீக்கு
  3. ஓவோமால்ட்!.. அட!/அது ஒரு பெர்டிலைஸர்ஸ் (!) கம்பெனி தயாரிப்புங்க!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!