வதம்
பானுமதி. ந
காலையிலேயே மிகுந்த கோபத்துடன் உதித்த ஆதவன் நாள் முழுதும் தன் கிரணங்களை வாரி இறைத்துக் கொண்டிருந்தான். அவனின் தேர் உழுத வான வெளியில் துல்லிய நீல மேகங்களை உண்ணும் ஆசையில் பதுங்கிப் பதுங்கி வந்த வெண் மேகங்கள் அவனது சாரதியின் சவுக்கு பட்டு வீறிய வடிவங்களுடன் ஒதுங்கி ஒதுங்கி அசைவற்று சோர்வுடன் படுத்திருந்தன. தன் கோபம் எதனால் என்று அறியாமல் அவன் கடலுக்குள் தன்னையே தனக்கு ஒளித்துக் கொண்டு மறைந்தான். காற்று அவன் சினத்தில் தானும் கட்டுப்படுவது போல் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டது.
வழி தப்பிய தவிட்டுக் குருவி அந்த மொட்டை மாடியில் உயர்ந்திருந்த குடிநீர் குழாயின் வளைவில் அமர்ந்து குரல் எழுப்பிப் பார்த்து பின்னர் சோகமாக அலைக்கழிந்தது. அத்தனை பறவைகள் சுகமாக இருப்பிடம் சேர இது மட்டும் தன் வழி மறந்த விதியை சாகேதராமன் நோக்கினான். ’ஒருக்கால் உன்னை அழுத்தும் பாரத்தை நீ தனியேதான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறதோ?’ அதன் கூட்டுப் பறவை வந்து அதை அழைத்துச் சென்றால் தனக்கு இந்தப் பிரச்சனையிலிருந்து விடிவு கிடைக்கும் என்றும் அப்படி எதுவும் நடக்காவிடில் தான் அந்தப் பிரச்சனையை எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவன் உளம் பதைத்தான். அதன் சினேகிதப் பறவையை அந்தப் பறவையைவிட இவன் எதிர்பார்க்கத் தொடங்கினான்.இருள் கவிந்து பெருகியது. குரல் எழுப்பாமல் அந்தப் பறவை பறந்துவிட்டது. இவனை ஏமாற்றம் கவ்வியது. சலித்து நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். மிகத் தேசலான தேங்காயின் கால் ஓட்டில் ஒட்டியிருப்பது போல் நிலா காட்சியளித்தது. ’இன்று நாலாம் பிறையா? நாய் படாத பாடு படப் போகிறேன்.’
தன் எதிர்மறை எண்ணங்களும், அறிவிற்கு உடன்பாடில்லாத சிந்தனைகளும் அவனுக்கு வியப்பாகவும் இருந்தன. ஆனாலும் தன்னைக் குத்திக் கிழித்து, அந்த வதையில், வாதையில் தன்னை வாட்டிக் கொள்ளவே அவனுக்கு விருப்பம் மிகுந்தது.
வீணையில் அன்று ‘சலமேல ரா, சாகேத ராமா’ என்ற பாடலை அக்காவிற்கு அவளது வாத்தியார் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாராம். இரவு 3 மணிக்கு இவன் பிறந்ததால் இவன் ‘சாகேத ராமன்’. அந்த மார்க்க இந்தோளத்தை இன்று கேட்டாலும் இவனுக்கு மனதைப் பிசையும். பள்ளியில் இவனை ‘சாகேது பிஸ்கோத்து’ என்று கேலி செய்வார்கள். ’சாது கேது சூது’ என்று பாடுவார்கள். தன்னை ஏன் ‘ராமன்’ என்றோ, ‘ராமா’ என்றோ, ‘ராம்’ என்றோ கூப்பிட மறுக்கிறார்கள் இவர்கள் என்றெல்லாம் தோன்றும் இவனுக்கு. ஆனால் சொல்ல பயம். நிலையான தோழமையற்ற தனிமை அவனை படிப்பில் முன்னேறச் செய்தது. பேராசிரியர்கள்கூட இவனிடம் சந்தேகம் கேட்பார்கள். உடன் படிப்பவர்கள் விளக்கங்கள் கேட்பார்கள். ஆனால், யாருமே ஒட்டி உறவாடியதில்லை. தன்னை ஒரு சினிமா பார்க்கக்கூட ஏன் அழைத்ததில்லை யாரும்? ஏன் கர்ப்பக்கிரஹத்துக் கடவுளாக தன்னை ஒதுக்கி விட்டார்கள்? வேண்டிக் கொள்ள மட்டும்…. ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ பிரச்சனைகளைத் தீர்க்க மட்டும்… அசடு என்று என் முகத்தில் எழுதியிருக்கிறது போலும்!
சோபையற்ற நிலவைச் சுற்றி வெண்கரடி என மேகங்கள் சூழ்வதை சாகேத ராமன் பார்த்தான். ஆம், ஆம்.. கரடிதான். இவனின் சிறு வயதில் ஒருவன் கரடி வேஷம் கட்டிக் கொண்டு தெருவில் திடீரென வந்தான். பெரியவர்கள் பயந்து கொண்டே பார்க்க, குழந்தைகள் அலறிக் கொண்டே ஓடின. இவன் நினைத்தான், ’நான் எந்த வேஷம் போட்டு மனிதர்களை நெருங்கவிடவில்லை? நான் மனிதனா, கரடியா, குழந்தையா, பெரியவனா? என் அறிவின் தகிக்கும் நெருப்பில் நானென்னையே வார்த்துக் கொண்டிருக்கிறேன் போலும்.’
‘யாருடன் நான் சாதாரணமாகப் பேசியிருக்கிறேன்? இல்லை, என்னிடம் தப்பில்லை. உலகில் பெரும்பான்மையினர் முட்டாள்கள். நான் என் தொழிலில் மேம்பட்டவன். எனக்கு என்ன குறை?’
‘குறைதான், என் மேதமை அடிபடப் போகிறது. என்னை கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்கப் போகிறார்கள். நிமித்தங்களில் மட்டும் அறிவைச் செலுத்தாத தான் தான் இன்று நாலாம் பிறையையும், தனித்த பறவையையும் எண்ணிக் கலங்குகிறேன்.’
‘சாகேதன், உங்களுக்கு நெறையா வேலை. ஆனா, இந்த ப்ரபோசலை உங்களை விட்டா யாரும் புரிஞ்சிக்கக்கூட முடியாது. ஒரு ரெண்டு நாள்ல .. பிளீஸ் மேலேந்து ப்ரஷர்ப்பா’
தான் ஒரு கரடிதான் என இவன் மேலும் நினைத்தான். தேன் குடிக்க ஓடும், மதி மயங்கிய கரடி. ’உங்களை விட்டா யாரும் புரிஞ்சிக்கக்கூட முடியாது’ இது போறும் முட்ட முட்ட தேன் குடிக்க
இவன் சிந்தனையைக் கலைப்பது போல் மெட்டி ஒலி. ரமணி ஏன் இங்கே வருகிறாள் இப்போ? என் டேபிளைக் கொடைஞ்சிருப்பாளோ? என் வாதையை கொண்டாடப் போறா. அவளை மனசால வதச்சது தெரியாத மாதிரி நான் நடந்துக்கறேன்னு சொல்லுவோ.. எல்லார்ட்டயும் சாதாரணமா இல்ல, ரணமாத்தான்… என்று முடிக்காம விடுவோ…
“ஏன் இங்க தனியா உக்காந்துண்டு இருக்கேள்? சாப்பிடக்கூட வல்லியே?”
இவன் பதில் சொல்லவில்லை. ”என்ன பிராப்ளம், சொன்னாத்தானே தெரியும்?”
‘உனக்கு என்ன சொல்லணும் இப்போ? நீயும், சங்கரும் சாப்பிட்டாச்சோல்யோ? நை நைன்னு புடுங்காம போய்த் தூங்கு’
“எதுக்கு எரிச்சல் படறேள்? வாய் விட்டு சொன்னாத்தானே சல்யூஷன் சொல்லலாம்.”
அவளை எரிப்பது போலும் இழிவாகவும் இவன் பார்த்த பார்வை அவளை காயப்படுத்தியது. அப்படிப் பார்த்த பிறகு இவனையும் இவன் மனம் சாடியது. அவள் சொல்வது சரிதான்; ‘வதையும், வாதையுமான குணம் எனக்கு.’
“எனக்கு ஆப்பிள் க்ரீனும் தெரியும். பேரியம் நைட்ரேட்டின் ஃப்ளேமும் தெரியும். இன்னிக்கு உங்களுக்கு சி.பி.ஐயிலிருந்து வந்த நோட்டீசும் தெரியும்” என்றாள் ரமணி.
பளாரென கன்னத்தில் அறை வாங்கியது போல் இவன் உடல் அதிர்ந்தது. அவர்கள் தேன் நிலவில் நடந்த விஷயத்தை எத்தனை ஞாபகமாக இப்போ சொல்கிறாள்?
திருமணம் முடிந்த அன்றே அவர்கள் தேன் நிலவு பயணம். தனி கூபே அவளை நன்றாகப் படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு இவன் தன் வேலையில் மூழ்கி விட்டான். ரமணிக்கு தானாகப் பேசவும் தயக்கம். ஆனாலும், மறுநாள் மாலையில் வெளியே போக இவன் அழைத்தபோது அவள் மகிழ்ந்து போனாள். நீலத்தகடு போன்ற ஏரியில் வண்ண வண்ண நிறப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைக் கூடாரம் போல் தொங்கவிட்டிருந்த ஹனிமூன் படகுகள். ஏரியில் கரைகளிலிருந்தும் நீரூற்றிலிருந்தும் நலுங்கும் மின் சிதறல்கள். இனிமை இனிமையென மெருகூட்டிக்கொண்டெ மயக்கும் மாலை. அதற்குப் போட்டியாக மேற்கில் மறையும் கதிர்கள் மேகங்களில் எழுதும் காதல் கவிதைகள். வண்ண வண்ண நெசவுகள், நொடியில் நிறம் மாறும் கலவைகள். அப்பொழுதுதான் அவன் கேட்டான். ”அதோ, அந்த மேகத்தோட கலரை நீ என்னன்னு சொல்வ?”
அவள் சிரித்துக் கொண்டே ‘ஆப்பிள் க்ரீன்’ என்றாள்.
’நீஎன்ன கெமிஸ்ட்ரி எம்.ஃபில்? பேரியம் நைட்ரெட்ன்னு உனக்குத் தோண வேணாம்?’
”இயல்பா எல்லாரும் சொல்ற மாதிரிதானே நானும் சொன்னேன். பேச்சில எல்லாம் இப்படி வராது எனக்கு” என்றாள். அன்று இவன் அலட்சியமாக சிரித்த சிரிப்பு இன்றுவரை அவளுக்கு நெருஞ்சி முள். இன்று அதைப் பிடுங்கி இவனைக் குத்திவிட்டாள்.
இதைப் போல் எத்தனையோ? காயப்படுத்திய பிறகு தன்னை நினைத்து தானும் காயப்படுவான். இது என்ன வதம்? ஏன் அனைவரையும் சொல்லால் அடித்துக்கொண்டே இருக்கிறேன்? உன்னைவிட எனக்கு எல்லாம் தெரியும் என்று ஏன் உணர்த்திக்கொண்டே இருக்கிறேன்? நான் அப்படி மேம்பட்டவன் என்றால் இந்த கோர்ட் நோட்டீசுக்கு ஏன் உளைகிறேன்?
இவளை கரடியெனவே பயம் காட்டுகிறேன். அதன் இளிப்பை, முகச் சுளிப்பை சாமா போன்ற அண்டியவர்களிடம், தன் அறிவை வியக்கும் மேலதிகாரிகளிடம் ஆட்டுவிக்கும் கயிற்றையும் கொடுத்துவிட்டு அதை உணராத மௌடீகமாக மிதப்பில் நான் நடக்கும் நடப்பு.. அடேயப்பா! எல்லாவற்றிற்கும் தன்னையே சொல்லிக் கொள்வதில் இல்லை, தன்னையே கொல்வதில் மனிதனும், மிருகமுமாக… வாதை.
“உங்கள் மனம் கண்ணாடி போல் எனக்குத் தெரியறது. என்னை யாரும் குறை சொல்ல முடியாது என்ற உங்கள் மனப்பிம்பம் இன்று உடைந்துவிட்டது. நோட்டீசைவிட அதுதான் உங்களை பாதிக்கிறது. எம் பி எ கோல்ட் மெடலிஸ்ட் அதுவும் ஃபினான்ஸில் என்பதால் உங்கள் கிரெடிட் தீர்மானங்கள் தவறே ஆகாது என்ற ஆதர்சம் இன்று சிதைகிறது”
‘மேலே பேசாதே. நான் ரெகமண்ட் செய்தபடி நடந்திருந்தா இன்னிக்கு இந்த நோட்டீஸ் வர அவசியமில்லை.ஆனா, பாவிகள்…’
“உங்க பேர்ல தப்பு இல்லைன்னு எனக்குத் தெரியும். அதை க்ளியரா சொல்றதுக்கு வழி வகை செய்யணும் இப்பொ. அதை விட்டுட்டு சாப்பிடாம கொள்ளாம உக்காந்திருந்தா வந்த கடிதாசு இல்லன்னு ஆயிடுமா?”
‘என் காலம் பாத்தியா? உங்கிட்ட எல்லாம் பேச்சு கேக்க வேண்டியிருக்கு’
“விதி சேத்துப் போட்டிருக்கே! ஒண்ணு பண்ணுங்கோ! சாமி அலமாரி முன்னாடி நின்னு இவளை சீக்கிரம் அழைச்சுக்கோன்னு வேண்டிக்கோங்கோ. இதையும் கேட்டுட்டு ருத்ரம் ஆடலாம். நாளைக்கு காத்தால என் அண்ணா வரார். இந்த கோர்ட் சமாசாரமெல்லாம் பாக்கறத்துக்காக”
அவளை அப்படியே தரையில் சாய்த்து வதைக்க எழுந்தவன் அழுது கொண்டே அவளை அணைத்துக் கொண்டான். கரடிக்குப் பயந்த குழந்தை.
*************
========================================================================================
பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்த மகன் கடோத்கஜன் இறக்கும்போது பீமன் மனம் உடைந்துபோய் கதறும் மனைவியைத் தேற்றி, தானே சடலத்துக்கு எரியூட்டுகிறான். அர்ஜூனனுக்கும் சுபத்ரைக்கும் பிறந்த அபிமன்யூ மரித்தபோது துடிக்கும் அர்ஜூனன், மனைவியை சமாதனம் செய்கிறான்.
ஆனால் ஐந்து உப பாண்டவர்கள் இறக்கும்போது திரௌபதி பிள்ளைகளின் சடலங்கள் மேல் விழுந்து கதறுகையில் ஐந்து பாண்டவர்களும் சமமான தொலைவில் நின்று மௌனம் காக்கிறார்கள். எந்தப் பிள்ளை என்னுடையது
என்கிற சந்தேகம் எழுப்பிய மௌனம்தானே அது? அத்தருணத்தில் திரௌபதி அவரவர் பிள்ளை மரித்தபோது கதறி மாய்ந்துபோன நீங்கள் என் பிள்ளைகள் இறந்த சமயத்தில் ஊமைகளாக நிற்கிறீர்களா, கடவுளே, என்ன மாதிரியான மணவாழ்க்கை எனக்கு வாய்த்து விட்டது' என்று வெகுண்டு கதறுகிறாள்.
-எஸ்.எல்.பைரப்பா சிவசங்கரி நேர்காணலில் - கந்தசாமி ஸார் FaceBook
இந்த பேட்டியின் முழு விவரங்கள் கிடைக்குமா என்று தேடிப்பார்த்தேன். ஊஹூம். எங்கிருந்து எடுத்தாரோ நண்பர் திரு கந்தசாமி!
இணையத்தில் தேடியதில் இப்படி விடை கிடைத்தது :
"எழுத்தாளர் சிவசங்கரி கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பாவை நேர்காணல் செய்ததற்கான குறிப்பிட்ட தேதியோ ஆண்டுகளோ தேடல் முடிவுகளில் கிடைக்கவில்லை. இருப்பினும் சிவசங்கரி தனது 'இலக்கியம் மூலம் இந்தியா இணைப்பு' (Ilakkiyam Moolam India Inaippu) திட்டத்திற்காக பல்வேறு இந்திய எழுத்தாளர்களை நேர்காணல் செய்துள்ளார். எஸ். எல். பைரப்பா கர்நாடகாவின் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார். சிவசங்கரி அவர்களின் இலக்கியப் பங்களிப்புகள் மற்றும் நேர்காணல்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் குவிகம் மின்னிதழ் மற்றும் சாகித்ய அகாடமி ஆவணங்களில் காண கிடைக்கின்றன.
அட போங்கப்பா... முக்கியமான விஷயங்களை எல்லாம் காப்பாத்தி வைக்க மாட்டீங்களா? தேடினால் உடனே கிடைக்கற மாதிரி வைக்க மாட்டீங்களாப்பா?!


வர்ணனைகளுடன் ஆழமான வார்த்தைகளும் வரிகளும் கொண்ட ஆழமான எழுத்தை ரசிக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
நானும்
நீக்குஏன் கர்ப்பக்கிரஹத்துக் கடவுளாக தன்னை ஒதுக்கி விட்டார்கள்? வேண்டிக் கொள்ள மட்டும்…. ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ பிரச்சனைகளைத் தீர்க்க மட்டும்… அசடு என்று என் முகத்தில் எழுதியிருக்கிறது போலும்!//
பதிலளிநீக்குவரிகளை ரொம்ப ரசித்தேன்.
கூடவே சொல்லிவிடுகிறேன்....இதே போன்ற வரியை நான் எழுதும் கதையில் பயன்படுத்தியிருக்கிறேன். அதை எடுத்து வேறு விதமாகக் கையாள வேண்டும் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட இப்படியான மனம் சார்ந்த கதை தான்....
கீதா
அசாத்தியமான கதை. லா ச ரா எழுத்து போன்று...
பதிலளிநீக்குநல்ல உளவியல் சார்ந்த கதை. அருமை.
பாராட்டுகள் வாழ்த்துகள் பானுமதி ந அவர்களுக்கு.
நான் எழுதும் ஒரு கதையும் கிட்டத்தட்ட இதே போன்றான மனம் சம்பந்தப்பட்ட கதை.
மனித மனங்கள் தான் எத்தனை எத்தனை! விசித்திரமானவையும் கூட.
கதையின் கதாபாத்திரமான சாகேதராமனுக்குச் சிறு வயது சரியாக அமையவில்லை. அவனுக்குத் தேவையான அரவணைப்பும் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.
கீதா
//அசாத்தியமான கதை. லா ச ரா எழுத்து போன்று...// அட்! எனக்கும் இதுதான் தோன்றியது. நன்றி கீதா.
நீக்குகதை தலைப்பு 'வதம்' என்பதற்கு பதிலாக வாதம் என்று வந்திருக்கிறது.
பதிலளிநீக்குநான் நினைத்தேன் கதையின் தலைப்பில் வதம் என்று போட்டு இருக்கே என்று
நீக்குஇருந்தாலும் கதைக்கு அந்த தலைப்பும் ஒத்து வருகிறது பானு
சாகேதராமன் வாதம் தான் செய்கிறான் பேச்சில் தான் சொல்வதுதான் சரி நான் பெரிய மேதாவி, அவன் மனைவியை வதம் செய்கிறான்.
ஆனால் ரொம்ப நேரம் முன்னாலேயே அதை மாற்றி சரிசெய்து விட்டேனே...
நீக்குநான் முன்பே படித்து விட்டேனே
நீக்கு:))
நீக்குதிரௌபதி பற்றிய பகுதி கருப்பு எழுத்துகள் என் மனதில் அடிக்கடி எழும் கேள்வி. மனதிற்குள் இப்படிச் சிந்தித்துப் பார்த்ததுண்டு. எதை வாசித்தாலும் அதன் பல்வேறு கோணங்களையும் மன ரீதியாகவும் புத்தி ரீதியாகவும் யோசிப்பதால் கேள்விகள் எழுவதால்...எந்தப் புராணத்தையும் கண்மூடித்தனமாகப் பார்க்காததால்.....ஹிஹிஹி...
பதிலளிநீக்குகீதா
வியாசர் அதை நியாயப்படுத்தாமல் நம்மை அதை இப்படி உணரும்படி கொடுத்திருக்கிறார் பாருங்கள்...
நீக்குஸ்ரீராம் நாம் வியாசரைப் படிக்கலை என்றும் சொல்லலாமா?
நீக்குகீதா
அட போங்கப்பா... முக்கியமான விஷயங்களை எல்லாம் காப்பாத்தி வைக்க மாட்டீங்களா? தேடினால் உடனே கிடைக்கற மாதிரி வைக்க மாட்டீங்களாப்பா?!//
பதிலளிநீக்குஅதேதான்....எனக்கும் தோன்றியது நீங்க அதைச் சொல்லிட்டீங்க ஸ்ரீராம் கடைசில!!!
கீதா
எம்புட்டு நேரம் தேடிப்பார்த்தேன் தெரியுமா கீதா? நேற்று மாலையெல்லாம் களைப்பு வேறு...
நீக்குநானும் உங்க கேஸு என்பதால் உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது ஸ்ரீராம்.
நீக்குகீதா
லா.ச.ரா.வை நினைவு படுத்தும் ஆழமான, அழகான நடை! அவரைப் போலவே பூடகமாக கூறும் விதம்,ஆஹா! பானு நட்ராஜ் நமக்கு இன்னும் இது போன்ற கதைகளை நமக்குத் தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குமனித மனமே விசித்திரமானதுதான்.
பதிலளிநீக்குஇயலாமையே கோபமாக, சுடுசொல்லாக விளைகிறது போலும். ஆனாலும் அந்த மனத்திற்குள்ளும் தன் இயலாமையைப் புரிந்துகொண்ட குழந்தை மனம் இருக்கும்.
நல்ல கதை.
நன்றி நெல்லை.
நீக்குஇந்த பானுமதி ந.... நீங்களா?
நீக்குஇல்லை, நான் பா.வெ. இவர் பானு நட்ராஜ். குவிகம் குழு மூலம் அறிமுகமானவர். இவருக்கு கண்ணில் பிரச்சனை இருப்பதால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் போட முடியாது என்பதால் தன் கதைகளை எ.பி.க்கு அனுப்பத் தயங்கினார். நாந்தான் நாங்களெல்லாம் பரந்த மனம் கொண்டவர்கள் என்று கூறி(ஆப்படித்தானே?) கூறி அவர் எனக்கு அனுப்பிய கதையை, எ.பி.க்கு அனுப்பினேன்(அவர் அனுமதியோடுதான்). அவருக்கும் இன்று எ.பி.யில் அவரது கதை பகிரப்பட்டிருக்கும் செய்தியை அனுப்பியிருக்கிறேன்.
நீக்குஉப்பாண்டவர்கள் இறந்தபோது திரௌபதிக்கு ஆறுதல் சொல்லவில்லையா? அல்லது அதிர்ச்சியில் செயலற்றிருந்தார்களா? யார் யாருக்குப் பிறந்தது என்ற சிந்தனையே கொச்சையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅப்போது மீடியாக்கள் இல்லாததால் க்ளோசப் ஷாட்கள் வைக்க முடியவில்லை!!! வியாசர் நம்மை அப்படியும் நினைக்க வைக்கிறார்.
நீக்கு//யார் யாருக்குப் பிறந்தது என்ற சிந்தனையே கொச்சையாக இருக்கிறது.// அதுதான் திரௌபதியின் பரிதாபம். அவளைப் போல பாவப்பட்ட வேறு ஒரு பெண்ணை பார்க்க முடியாது. சுற்றியிருந்தவர்களின் சுயநலத்திற்கு பலியான பரிதாப ஜீவன். அவளிடமிருந்து எதியும் எதிர்பார்க்காமல் அன்பு காட்டிய ஒரே ஆத்மா, அந்த பரமாத்மா கண்ணன் மட்டுமே.
நீக்குவாதை என்பது தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வது அது புரிகிறது.
பதிலளிநீக்குஒரு வேளை தன் வாதையால் பிறரையும் வதம் செய்வதால்? தலைப்பு இப்படி இருக்கிறதோ ஆனால் வாதம் என்றால் வாதிப்பது இல்லையா?
இப்படியான மனப் பிரச்சனை உடையவர்கள் அகத்தளவில் கொஞ்சம் பயம் அதாவது அவர்களுக்கு எதிராக வருவதை எதிர்கொள்ள முடியாத வீக்னெஸ். அவனால் எதிர்கொள்ள முடியாததை மனைவியின் சகோதரன் வருகிறார் என்றதும் அவனின் மாற்றம்...
கீதா
இதுகூட சுயநலம் தான்......
நீக்குகீதா
ஆனால் மன ரீதியாகப் பார்த்தால், அவன் ஒரு மனநோயாளி
நீக்குகீதா
எனக்கும் அப்படி தோன்றியதால்தான் ரமணி பாவம் என்று சொல்லி இருக்கிறேன்! பொறுமை!
நீக்கு//ஆனால் மன ரீதியாகப் பார்த்தால், அவன் ஒரு மனநோயாளி// ஒரு வகையில் எல்லோருக்கும் ஒரு வகை மனோவியாதி இருக்கிறது. அடுத்தவருக்கு பெரிய அளவில் பாதிப்பை தராத வரை பிரச்சனை இல்லை. சரியா?
நீக்குஆமாம் பானுக்கா அதே
நீக்குகீதா
இதை ஜெயகாந்தன் தான் எழுதிய ஒரு கதைத் தலைப்பிலேயே சொல்லி இருக்கிறார். "அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்"
நீக்குவள்ளுவர் வேறு வார்த்தைகளில்... "குணம் நாடி குற்றமும் நாடி.."
கோவித்துக்கொள்ளாதீர்கள், ஒண்ணுமே சரியா புரியலை..கதையைத்தான் சொல்கிறேன். விவரணங்கள் உள்ளன, விவரங்கள் இல்லை. சிபிஐ நோட்டிஸ் என்கிறீர்கள், அதுவே பின்னர் கோர்ட் நோடீஸ் ஆகிறது. என்ன ப்ரோபோசல், ராமன் என்ன செய்தார் என்பது போன்ற விவரங்கள் இல்லாமை ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
பதிலளிநீக்குJayakumar
இந்தக் கதையில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது தன்னை ஒரு அறிவுஜீவியாக கருதிக் கொண்டு எப்போதும் அந்த அறிவினாலேயே செயல்படும் ஒருவனுக்கு, அந்த அறிவினாலேயே பிரச்சனை வரும்பொழுது என்னவாகும் என்பதுதான். இத்ர்கு விவரங்கள் அதிகம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சரியாக புரிந்து கொண்டிருக்கிறேனா என்பதை கதாசிரியரோ, மற்றவர்க்ளோ தெளிவு படுத்த வேண்டும்.
நீக்குஜெ கே அண்ணா...கதையின் சாராம்சமே பானுக்கா சொன்னதுதான். மற்ற விஷயங்கள் இதற்குத் தேவையில்லை சுஜாதா அவர்கள் சொல்வது போல்.
நீக்குமனம் சார்ந்த கதை. அந்தக் கேரக்டரைச் சொல்லும் கதை. அதனால்தான் தலைப்பு
கீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்கு//’ஒருக்கால் உன்னை அழுத்தும் பாரத்தை நீ தனியேதான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறதோ?’ அதன் கூட்டுப் பறவை வந்து அதை அழைத்துச் சென்றால் தனக்கு இந்தப் பிரச்சனையிலிருந்து விடிவு கிடைக்கும் என்றும் அப்படி எதுவும் நடக்காவிடில் தான் அந்தப் பிரச்சனையை எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவன் உளம் பதைத்தான். அதன் சினேகிதப் பறவையை அந்தப் பறவையைவிட இவன் எதிர்பார்க்கத் தொடங்கினான்.//
பதிலளிநீக்குஅவன் எதிர்பார்ப்பாக வந்து விட்டாளே ! அவன் கூட்டு இணை பறவை
//அவளை அப்படியே தரையில் சாய்த்து வதைக்க எழுந்தவன் அழுது கொண்டே அவளை அணைத்துக் கொண்டான். கரடிக்குப் பயந்த குழந்தை.//
இனி அனைத்தையும் தனியாக சுமந்து கொண்டு தவிக்க வேண்டாம் பகிர்ந்து கொள்ள புரிந்து கொண்ட இணை இருக்கே!
கதை நன்றாக இருக்கிறது.
‘வதையும், வாதையுமான குணம் எனக்கு.’//
நீக்குதன் குணத்தை தெரிந்து கொண்டவன்
//“எனக்கு ஆப்பிள் க்ரீனும் தெரியும். பேரியம் நைட்ரேட்டின் ஃப்ளேமும் தெரியும். இன்னிக்கு உங்களுக்கு சி.பி.ஐயிலிருந்து வந்த நோட்டீசும் தெரியும்” என்றாள் ரமணி.//
கணவனை நன்கு புரிந்து கொண்ட துணை.
அதுதான் தன் சகோதரனை துணைக்கு அழைத்து இருக்கிறார்.
கணவனை இக்கட்டிலிருந்து மீட்டு விடுவார்.
சரியாக அவதானித்திருக்கிறீர்கள். நன்றி.
நீக்கு//அட போங்கப்பா... முக்கியமான விஷயங்களை எல்லாம் காப்பாத்தி வைக்க மாட்டீங்களா? தேடினால் உடனே கிடைக்கற மாதிரி வைக்க மாட்டீங்களாப்பா?!//
பதிலளிநீக்குஅதற்குதான் ஸ்ரீராம் இருக்கிறார் என்று விட்டு விட்டார்கள் போலும்
ஹா.. ஹா.. ஹா... எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லையே
நீக்குசட்டென ஒரு மாற்றம். மாற்றங்கள் அரைநொடியில் நிகழ்கின்றன. சில சமயங்களில்தான் மனம் அதை செயல்படுத்துகிறது.
பதிலளிநீக்குபடிப்படியாக சொல்லிக் கொண்டு வந்து குறை யாரிடம் என்று உணர்த்திய விதம் நன்றாயிருந்தது. இணையைத் தேடும் குருவியின் மனதுடன் இவனும் அதன் துனையை எதிர்பார்க்கும் மனம் கொண்டவன் தன் துணையை இப்படி வதைக்கிறானே என்று எண்ணம் வரும்போதே அவன் மனம் அழுது பணிந்து விடுகிறது. இனி மேலாவது குத்தல்கள் குறையவேண்டும்.
பதிலளிநீக்குவார்த்தைகளில் குத்துபவர்களை நானும் சந்திக்கிறேன். மாறுவது கடினம். தன் பிரச்னை தீர்ந்த உடன் சாகேதராமனும் பழைய குருடியாகலாம்!
பதிலளிநீக்குநாயகனுக்கு சாகேதராமன் என்று பெயர் வைத்ததற்கு ஏதும் காரணம் உண்டா என்று கதாசிரியரைக் கேட்க ஆசை. இங்கு பதில் சொல்ல மாட்டார்.
சாகேதராமன் இசைக்கலைஞர் பற்றி ஒரு பகிர்வு எடுத்து வைத்திருந்தேன். அதை நேற்று தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. நேற்று அம்மா ஸ்ராத்தம் வேறு. அதனால் ரொம்ப மெனக்கெட முடியவில்லை!
வார்த்தையில் குத்துபவர்கள்..... ஸ்கார்பியோ ஸோடியாக்... அப்படித்தான் இருப்பாங்க. நவம்பரில் பிறந்தவர்களும். அதனால் அவங்களைக் குறை சொல்லாமல் அவங்க பெற்றோரைத்தான் நொந்துகொள்ள வேண்டும். இது எப்படி இருக்கு?
நீக்குதன் பிரச்னை தீர்ந்த உடன் சாகேதராமனும் பழைய குருடியாகலாம்!//,ம ஸ்ரீரா
நீக்குசாத்தியக் கூறுகள் நிறைய ஸ்ரீராம்
கீதா
//வீணையில் அன்று ‘சலமேல ரா, சாகேத ராமா’ என்ற பாடலை அக்காவிற்கு அவளது வாத்தியார் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாராம். இரவு 3 மணிக்கு இவன் பிறந்ததால் இவன் ‘சாகேத ராமன்’. //
பதிலளிநீக்குபெயர் காரணம் சொல்லி விட்டாரே கதையில்.
இல்லை கோமதி அக்கா... கதையில் அவன் பெயருக்கு அது காரணம். கதாசிரியர் அந்தப் பெயரை தெரிவு செய்ததற்கு காரணம் அது. கதாசிரியர் இந்தப் பெயரை தெரிவு செய்ய என்ன காரணம் என்பதே என் கேள்வி? அதாவது சும்மா ஜஸ்ட் லைக் தட்டா, எதேச்சையா, இல்லை குறிப்பிடத்தக்க காரணம் உண்டா என்று கேள்வி. சாதாரணமாக ரகு ராமு சோமு என்று பெயர் இருந்தால் கடந்து விடலாம். ஸ்பெஷல் பெயர் என்பதால் கேட்டேன்!!
நீக்குஅப்...... பாடி மூச்சு வாங்குது..!!!
அயோத்தியாவிற்கு சாகேதம் என்ற பெயரும் உண்டு. ஆனால்
நீக்கு//இரவு 3 மணிக்கு இவன் பிறந்ததால் இவன் ‘சாகேத ராமன்’. //
இப்படி ஒரு காரணம் ஆசிரியர் சொல்லிருக்கிறார்.
ஆனால் ராமன் பகல் உச்சிப் பொழுது.
//வீணையில் அன்று ‘சலமேல ரா, சாகேத ராமா’ என்ற பாடலை அக்காவிற்கு அவளது வாத்தியார் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாராம். இரவு 3 மணிக்கு இவன் பிறந்ததால் இவன் ‘சாகேத ராமன்’. //
இதன் அர்த்ஹம் மட்டும் தான் எனக்கு சற்றுப் புரியலை
கீதா
ஸ்ரீ ராமனை யார் எப்படி தூஷித்தாலும் மனம் பொறுக்குதில்லை. அதனாலேயே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்தப் பெயைர்லேயே தொங்கும்படி ஆயிடுத்து. மன்னிப்பு வேண்டுகிறேன். திரௌபதி வாழ்க்கையில் பட்ட அவமானங்கள் போதாமல் இங்கேயும் அவளைப் பந்தாடவே மனம் வருந்தியது. இத்தனைக்கும் கதாசிரியர் சங்கீத ஞானம் நிறைந்தவர் என்கிறார்கள். இந்தப் பெயருக்கு அவர் களங்கம் கற்பிக்கும்படி எழுதலாமா?
நீக்குகதை ஆசிரியர் அதை தேர்ந்து எடுத்த காரணம் சக தோழர்கள் அந்த பேரை கிண்டல் செய்ய வேண்டுமே அது மாதிரி பேரை தேர்ந்து எடுத்து இருக்கிறார். கதை நாயகன் தனக்குள் ஒடுங்க இந்த பேரும் ஒரு காரணமாய் இருக்கே!
பதிலளிநீக்குஊஹூம்.. கிண்டல் செய்யவும் இன்னும் வாகாக வேறு பெயர்கள் கிடைக்குமே.. !!
நீக்குஇது வித்தியாசமான பேர் சங்கீத ஞானம் நிறைந்தவர் கதை ஆசிரியர் அவர் வீட்டில் இப்படி அந்த பாடலை பாடும் போது பிறந்து இருக்கலாம் அதனால் அந்த பேரை வைத்தோம் என்று சொல்லி இருக்கலாம்.
நீக்கு//சாகேத ராமன்’. அந்த மார்க்க இந்தோளத்தை இன்று கேட்டாலும் இவனுக்கு மனதைப் பிசையும். பள்ளியில் இவனை ‘சாகேது பிஸ்கோத்து’ என்று கேலி செய்வார்கள். ’சாது கேது சூது’ என்று பாடுவார்கள். தன்னை ஏன் ‘ராமன்’ என்றோ, ‘ராமா’ என்றோ, ‘ராம்’ என்றோ கூப்பிட மறுக்கிறார்கள் இவர்கள் என்றெல்லாம் தோன்றும் இவனுக்கு. ஆனால் சொல்ல பயம். நிலையான தோழமையற்ற தனிமை அவனை படிப்பில் முன்னேறச் செய்தது.//
பதிலளிநீக்குகதநாயகனின் குண நலத்துக்கு இந்த பேர் ஒரு காரனம் என்று வலுவாக நிறைய இடங்களில் சொல்கிறார். தோழமையற்ற தனிமை அவரை அப்படி அடுத்தவரை வதைப்பவாராக மாற்றி இருக்கு.
மிகவும் சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் கோமதி அக்கா. என் அண்ணாவின் பள்ளித் தோழனுக்கு சாகேதராமன் என்றுதான் பெயர். எல்லோரும் சாகேத் என்றுதான் அழைப்பார்கள். நீங்கள் சொல்லியிருப்பது போல் அந்தப் பெயரை வைத்து அவன் நண்பர்கள் கேலி செய்ததால் அவன் தனிமையில் தள்ளப்பட்டான் என்று கூறுவதற்காகவே அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தார் என்று தோன்றுகிறது.
நீக்குஅது எல்லாமே புரிகிறது. படித்துக்கொண்டு வரும்போது தெரிந்து விடுகிறது. நான் கேட்க வந்த கேள்வியை எல்லோருக்கும் புரியும்படி கேட்க எனக்குத் தெரியவில்லை என்றும் கூடவே தெரிகிறது!!
நீக்குஇது வித்தியாசமான பேர் சங்கீத ஞானம் நிறைந்தவர் கதை ஆசிரியர் அவர் வீட்டில் இப்படி அந்த பாடலை பாடும் போது ஒரு குழந்தை பிறந்து இருக்கலாம் அதனால் அந்த பேரை வைத்தோம் என்று சொல்லி இருக்கலாம்.
நீக்குஅந்த பேரை வைத்து கொண்டவர் கேலிக்கு ஆளாகி இருப்பதை அவர் பார்த்து இருப்பார் என நினைக்கிறேன். அதனால் அந்த பேரை கதைக்கு எடுத்து கொண்டார் .
ஸ்ரீராமன் நீதிமானாக இருந்ததற்கும் அவன் நீதி பரிபாலனை செய்ததற்குச் சாட்சியாகவும் இருந்த இடம் தான் "சாகேத்" என அழைக்கப்பட்டது. தமிழும் தெரியாமல், சம்ஸ்கிருதமும் தெரியாமல் சாகேத் என்பதற்குப் பொருளும் தெரியாமல் பலரும் இந்தப் பெயரை அவமதித்திருப்பாங்க போல. ஆனால் எனக்கு இந்த அவமதிப்ப்ய்ச் செய்வார்கள் என்னும் நிகழ்வு இன்னிக்குத் தான் கேள்விப் படுகிறேன். எங்க குடும்ப உறவினர்களில் பலருக்கும் "சாகேத் ராமன்" என்னும் பெயர் உண்டு. மேம்போக்காகத் தெரிஞ்சு வைச்சுண்டு கேலி செய்பவர்கள் எந்தக்காலத்திலும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
நீக்குIn Sanskrit, Saketh means "heaven" or "the abode of God." It can also be translated as "a place of power" or "a high place." In Hindu mythology, Saket is believed to be another name for the celestial city of Ayodhya, which is said to be the birthplace of Lord Rama. It means Saketh Raman, is Ayodhya Raman one and only. So nomore bad feelings or no more disgracefulness.
நீக்குசாகேத ராமா க்ருதி சலமேலரா சாகேத் ராமா என்னும் இந்த க்ருதி தியாகராஜ ஸ்வாமிகளால் இயற்றப்பட்ட ஒரு க்ருதி. சௌம்யா இதைப் பிரபலப்படுத்தின நினைவு அரைகுறையாய் இருக்கு. ஹிந்தோளம் அல்லது மார்க்க ஹிந்தோளம். சரியாத் தெரியாது. சங்கீத அறிவே இல்லையே! :(
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குஸ்ரீரம் அவர்களது பொறுமையை சகிப்புத் தன்மையை எதையும் தாங்குக் இதயத்தை பாராட்டியே ஆக வேண்டும்...
பதிலளிநீக்குசிறப்பு...
எதனால் ஸ்ரீராமின் பொறுமையை பாராட்டுகிறீர்கள் என்று தெளிவாக்கினால் நாங்களும் பாராட்டுவோம்.
நீக்கு///ஸ்ரீரம்///
நீக்குஸ்ரீராம்!....
ஆசிரியருக்கு நல்ல சங்கீத விஷயங்களும் நிறைய தெரிந்திருக்கிறது.
பதிலளிநீக்குகீதா
நான் படுத்துக் கொள்ளச் செல்கிறேன். காலையில் பார்க்கலாம்.
பதிலளிநீக்குஉபபாண்டவர்கள் (Upapandavas) இந்து காவியமான மகாபாரதத்தில் தோன்றும் பாண்டவர் ஐவருக்கும் திரௌபதிக்கும் பிறந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர். இவர்களில் பிரதிவிந்தியன் யுதிர்ஷ்டிரனுக்கும், சுதசோமன் வீமனுக்கும், சுருதகீர்த்தி அர்ச்சுனனுக்கும், சதாநீகன் நகுலனுக்கும், சுருதகர்மன் சகாதேவனுக்கும் மகனாய்ப் பிறந்தவர்கள்.[1] இவர்கள் ஐவருக்கும் திரௌபதியே தாயாவாள்.
பதிலளிநீக்குஆளுக்கு ஒரு பிள்ளை!
நீக்குஉப பாண்டவர்கள் யாருக்கு யார் பிறந்தார்கள்?
பதிலளிநீக்குதிரௌபதியையும் அவள் பத்தினித்துவத்தையும் முட்ட முழுதாகக் கேவலப்படுத்தும் விதமாக அவளுக்கே அவள் பிள்ளைகள் யார் யாருக்குப் பிறந்தார்கள் எனச் சொல்லுவதே ஆகும். திரௌபதி கர்ப்பத்தில் இருந்து பிறக்கவில்லை என்பதும் அவள் தகப்பன் செய்த யாக அக்னியில்லிருந்து தோன்றும்போதே இளம்பெண்ணாகத் தோன்றினாள் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்? அவள் அக்னி சொரூபம். அவள் தன் முற்பிறப்பில் நளாயினி என ஒரு செவி வழிக் கதை உண்டு. அதை ஒட்டி அவள் ஐந்து முறை நல்ல கணவன் வேண்டும் எனக் கேட்டதாகவும் அதனால் தான் மறு பிறப்பில் ஐந்து கணவர்கள் எனவும் சொல்லப் படுவது உண்டு. உண்மையில் அவள் பிறப்பின் உண்மையான தத்துவமே கௌரவர்களின் அழிவை அடிப்படையாகக் கொண்டது ஆகும். மேலும் தத்துவார்த்தமாகப் பார்த்தோமானால் திரௌபதி ஜீவாத்மா. பஞ்ச பூதங்களாகிய பஞ்ச பாண்டவர்களின் துணையோடு அவள் பரமாத்மாவுடன் ஐக்கியம் ஆவதாகவும் மிகவும் தேர்ந்த தத்துவ ஞானிகள் கூறுவார்கள். இந்தக் கதையில் தேவையில்லாமல் அவளை உள்ளே புகுத்தி இருப்பதாக என்னோட அரைப் பைசாக் கருத்து.
தத்துவம் நன்றாய் இருக்கிறது.
நீக்குதிரௌபதியையும் அவள் பத்தினித்துவத்தையும் முட்ட முழுதாகக் கேவலப்படுத்தும் விதமாக அவளுக்கே அவள் பிள்ளைகள் யார் யாருக்குப் பிறந்தார்கள் என்பது தெரியாது எனச் சொல்லுவதே ஆகும்.
பதிலளிநீக்கு:((
நீக்குபைரப்பா... இப்படி என்னை மாட்டி விட்டாயேப்பா...!
நான் இல்லை!
இங்கே திரௌபதியைப் பற்றிச் சொல்லியிருக்கும் அபத்தமான கருத்து பீமனுக்கும் வந்ததாகவும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் தன்னுடைய சந்தேகத்தை அவன் கேட்டதாகவும் அப்போது பகவான் அவனுக்கு உண்மையை எடுத்துச் சொன்னதாகவும் சொல்லுவார்கள். ஒவ்வொரு முறையும் வெவேறு கணவனுடன் வசிப்பதற்காகச் செல்லும் முன்னர் அவள் அக்னிப்ரவேசம் செய்து கொண்டு தன்னைச் சுத்திகரித்துக் கொள்வதாகவும் சொல்லுவார்கள். இன்றளவும் நம்ம தமிழகத்தில் திரௌபதி அம்மன் கோயில் எனில் நிச்சயமாகத் தீமிதியும், பூச்சட்டி எனப்படும் தீச்சட்டி எடுக்கும் வழக்கமும் இதனால் தான் வந்தது என்பார்கள். தற்சமயம் சில புத்தகங்கள் சில விபரங்கள் இந்தியாவில் இருப்பதால் இது பற்றி மேலும் சொல்ல முடியலை. ஆனால் இது பற்றிப் பதிவு ஒன்று போட்ட நினைவு. தேடிப் பார்த்தால் கொடுக்கிறேன். நாம் நினைக்கும் பத்தினிப் பெண்கள் அனைவருக்குமே இத்தகையதொரு குற்றச் சாட்டு உண்டு. மண்டோதரியைத் தவிர்த்து. அகல்யா, தாரா(குருவின் மனைவி தாரா என்பவர்கள் உண்டு, வியாழ பகவான் தேவகுரு )ஆனால் பெரும்பாலானவர்கள் சொல்லுவது வாலியின் மனைவி தாரை. வாலி இறந்த பின்னர் சுக்ரீவன் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ளுவான். இன்னும் சொல்லப் போனால் வாலி குகையிலிருந்து வெளிவரும் முன்னரே சுக்ரீவனுடன் வாழ்ந்தவள் என்றே சொல்லுவார்கள். அகல்யா, தாரா, சீதா, திரௌபதி, மண்டோதரி பஞ்ச கன்னியர்
பதிலளிநீக்குஇப்போது நீங்கள் எழுதி இருக்கும் எல்லா விஷயங்களையும் இப்போது படித்து தெரிந்து கொண்டேன் கீதாஅக்கா.
நீக்குசாகேத்ராமன் என்னும் பெயர் வந்ததுக்குக் காரணமே வேறே. இது ராமனைப் பற்றியும் அவர் அரசாட்சி குறித்தும் நற்சான்றுகள் வழங்கும் ஒரு பெயர். அதனாலேயே பலரும் முன் காலத்தில் அதாவது ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பெயரை அடிக்கடி வைத்துக்கொள்வார்கள். சாகேத் ராமன் பற்றி ஹிந்தியில் பல கவிதைகள் உண்டு என்பதோடு ஒரு கீர்த்தனையும் இருக்கு. மறந்து விட்டது. தஞ்சை மாவட்டத்தில் இந்தப் பெயர் அதிகம் காணப்படும். எங்கள் உறவுகளிலே பலருக்கு இந்தப் பெயர் உண்டு. இப்போவும் வைச்சிருக்காங்க.
பதிலளிநீக்குசாகேத் ராமன் (Saketha Rama) என்ற பெயர், அயோத்திக்கு அருகில் சரயு நதிக்கரையில் ராமன் அமைத்த புதிய அரச சபையான 'சாகேத்'திற்கு (Saket) எப்போதும் தலைமை தாங்கி, மக்களைத் தாராளமாகச் சந்தித்து நீதியைப் போதித்த மன்னன் என்பதைக் குறிக்கிறது Quora. 'சாகேத்' என்றால் அயோத்தி என்று பொருள்படும், மேலும் இப்பெயர் அவர் மக்களின் குறைகளை 24/7 கேட்கும் அரசனாகத் திகழ்ந்ததைக் குறிக்கிறது.
பதிலளிநீக்கு__/\__
நீக்குகதையைப்பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. பொதுவாக அதிகம் படிச்சவங்களே கொஞ்சம் இல்லை நிறையவே மத்தவங்களை விட்டு விலகித் தான் தனி என்னும் எண்ணத்துடன் தான் இருப்பாங்க. மனைவியைத் துச்சமாகக் கருதுவதும் இதில் அடக்கம். ஆனால் இம்மாதிரிப் பிரச்னைகள் வரும்போது அவர்களால் சமாளிக்க முடியாமல் போகையில் தான் அவங்களுக்குத் தானும் ஒரு சாதாரணன் என்பதே புரியும். எல்லோரையும் போலத் தான் தானும் என்பதைப் புரிஞ்சுப்பாங்க. அதான் இங்கேயும். கதாசிரியரின் எழுத்து நடை நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குதிரௌபதி பத்தின பதிவைத் தேடினேன்.கிடைக்கலை. மறுபடியும் தேடணும். பார்க்கிறேன்.
பதிலளிநீக்குகீதா அக்கா உங்கள் கருத்துகள் எல்லாமேவாசித்துத் தெரிந்து கொண்டேன்.
நீக்குகீதா
சாகேத்ராமன் என்னும்
பதிலளிநீக்குபெயர் வந்ததற்கான அக்காவின்
விளக்கம் அருமை...
சாகேதம் என்பது தனி நாடு என
நினைத்திருந்தேன்...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
சகோதரி பானுமதி நட்ராஜ் அவர்கள் எழுதிய இன்றைய கதை பகிர்வு நன்றாக உள்ளது. தன்னைத் தானே அறிவில் சிறந்தவர்களாக நினைப்பவர்களின் மன நிலையை நன்றாக உணர்த்தியிருக்கிறார். கதையின் நாயகன் மற்ற ஜீவன்களின் நிலையுணர்ந்தும் கவலை கொள்கிறார் . அத்தோடு தன்நிலையை ஒப்பிட்டுப் வேதனை கொள்கிறார்.
இயற்கையின் வர்ணனைகள் மிக அமர்க்களமாக இருந்தது. முன்பே இவரின் சிறுகதை ஒற்றை நம் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் இங்கு பகிர்ந்திருந்தார்கள். அதையும் இவ்வாறாகவே ரசித்தேன். இப்போதும் இந்தக்கதையையும் படித்து ரசித்தேன். இரு பானுமதி சகோதரி களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். நன்றிகள்.
காலையில் எப்போதும் போல் படிக்க இயலாமல் "என் கைப்பேசிக்கு அதற்கே உரிய தருணங்கள்" வந்து விட்டது. பிறகு வேலைகள் வந்து விட்டன. எனவே இப்போதுதான் படித்து ரசித்தேன். தாமதமானதிற்கு மன்னிக்கவும்.
திரௌபதி பற்றிய செய்தியையும் வாசித்தேன். திரௌபதி ஐந்து கணவர்களுடன் வாழ்ந்தாலும், ஒவ்வொருவருடனும் வாழும் போது, தீயில் இறங்கி தன்னை பவித்திரமாக்கியப் பின்தான் தன்னை தூய புஷ்பமாக்கிக் கொண்டுதான் ஒவ்வொருவருடனும் வாழ்ந்தாள் . அதனால் இந்த களங்கம் அவள் நிலையை உணராது சுமத்துவது.
இன்றைய கதையும் திரௌபதி செய்தியும் ஒன்றுக்கொன்று மனம் சம்பந்த பட்ட வகையில் இணையானது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.