6.4.12

எனக்கு வேண்டும் - பாஹே

                                 
                              எனக்கும் கூட 
                              காணி நிலம் வேண்டும் - 

                              பால்கனியுடன் ஒரு மாடி அறை 
                              அட்டாச்டு பாத்ரூமுடன்,

                              கீழே மெஸ் நடத்தும் மாமி -
                              இரு வேளை காபி, மதிய சாப்பாடு 
                                        
                              இரவு டிபன், பால்
                              அப்பப்போ செகண்ட் டோஸ் காபி - 
                              மாமி தந்து விட வேண்டும் (விலைக்குத்தான்)
                              
                              பத்திரிகைக் கடை ஒன்று மஸ்ட்.
                              ஒரு நூலகம் கூட ரொம்ப ரொம்ப அவசியம். -
                              எல்லா லேட்டஸ்ட் வெளியீடுகளுடனும்.

                              மாமிக்கு ஒரு பள்ளிப் பையன்    
                              சைக்கிளுடன் இருக்க வேண்டும்.
                              மருந்துக் கடை பத்திரிகைக் கடைகளுக்குப்
                              போய் வருபவனாக அவன் -

                              ஒரு கல்லூரி மாணவி
                              மாமிக்கு இருக்கட்டுமே - 
                              மறந்து விட்ட ஒண்ணா
                              மாமி இரண்டாம் தாரமாக 
                              இருந்தால் பெட்டர் - 

                              குடியிருப்பு ஒழுங்கான வீதியாக
                              எல்லையில் ஓடும் ஆறு -
                              குளிக்க வசதியான படிக்கட்டுடன் -
                              ரொம்ப முக்கியம்
                              கரையில் ஒரு படர்ந்து விரிந்த ஆலமரம்.
                              தலைவைத்துப் படுக்க வேர்கள் புடைத்து -
                                      
                              இந்த சொர்க்கம்
                              எங்கே கிடைக்கும் -
                              எனக்கு வேண்டுமே.......  

                              வேண்டவே வேண்டாம்
                              எனக்கு எப்போதும் -

                              ஒரு கடப்பாடு போல
                              வேளா வேளைக்கு 
                              கட்டாய உணவு.

                              பேசத் தெரியாத,
                              படித்ததைப் பகிரத் தெரியாத
                              நட்பு, உறவு.

                              விஜய்களும், தனுஷ்களும், ரஜினிகளும் 
                              அழையா விருந்தாளிகளாய்
                              தினம் தினம் வந்துபோகும்
                              முட்டாள் பெட்டி
                              வார, மாத பருவ ஏடுகள். 
                                               

5.4.12

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் .. படப்புதிர்!


இந்த தடவை ரொம்ப சிம்பிள் கேள்விகள் கேட்டு விடுகிறோம். கீழே, மூன்று படங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அனைத்துமே நெட்டிலே சுட்டவைகள்தான். 

ஒவ்வொரு படத்தின் மீதும் ஆங்கிலத்தில் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ப் படங்கள்தான். அநேகமாக பாடல் காட்சிகள் என்று தோன்றுகிறது. 

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் இவ்வளவுதான்: 

ஒவ்வொன்றும் என்ன (தமிழ்) பாடல் என்று எழுதவேண்டும். இங்கே காணப்படுவது எந்த வரிகள் என்று எழுதினாலும் ஓ கே. ஒவ்வொரு படத்தைப் பற்றியும் சுவையான மேலதிக தகவல்கள் பகிர்வோருக்கு சி சி சி பட்டம் அளிக்கப்படும். (சி சி சி = சினிமா உலக சிந்தனை சிற்பி!) 

பங்கு பெறுங்கள்; பட்டம் பெறுங்கள்! வாழ்த்துகள்! 

1) 

2)

3) 

                                      

4.4.12

இந்தப் படத்தில் ஒரு தவறு ...


இந்தப் படத்தில் ஒரு தவறு இருக்கின்றது. 
என்ன என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!


க்ளூ: விஜயகாந்த். 
      

3.4.12

எட்டெட்டு பகுதி 12:: மாயா கேட்ட உதவி!



(மாயா ஆவி, கே வி க்குக் கூறிய கதை தொடர்கிறது.)
     
வீட்டில் நடந்த நாடகக் காட்சிகள், மிகவும் திறமையாகக் கையாளப்பட்டன. என் உடலை, ஒரு சேலைத் துணியில் தூக்கு மாட்டி, அதை சீலிங் ஃபேனில் தொங்கவிட்டு, என்னுடைய அப்பாவுக்கு, (குழந்தை பிறக்காத ஏக்கத்தால்) நான் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் கொடுத்து, அவரை உடனே கிளம்பி வரக் கேட்டுக் கொண்டார் என் கணவர்.
   
போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டருக்கு ஒரு லட்சம். தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ் அதிகாரிக்கு ஒரு லட்சம். இன்னும் பலருக்குப் பல லாபங்கள். மறுநாள்தான் ஊருக்கு வந்து சேர்ந்தார் என் அப்பா. ஒன்றுமே பேசாமல், என் உடலைப் பார்ப்பது, கண்ணீர் விடுவது என்று இருந்து கொண்டிருந்தார். அதற்குப் பின் தகவல் அறிந்து அங்கு வந்த காலுசிங் அழுது புரண்டதைக் கண்ட எல்லோர் கண்களும் கலங்கிவிட்டன. காலு சிங், நான் ஹோட்டலில் ஓ ஏ வையும், பிங்கியையும் பார்த்துப் பேசி, அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றதும், வீட்டுக்கு வந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டேன் என்று நினைத்தது போலத் தெரிந்தது. என்னால் யாருடைய நினைப்பையும் மாற்ற முடியவில்லை.
   
என்னுடைய உடல் தீயிடப் பட்டதும், 'இனி என்ன?' என்று ஓர் எண்ணமும் வெறுமையும் வந்தது. ஆனால் உடனேயே, வான வெளியில் மிதக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் மெதுவே மேலே செல்ல ஆரம்பித்த நான் பிறகு படிப்படியாக மேலே மேலே வேகமாக நகர்ந்து, முடிவே இல்லாத ஒரு சுரங்கப் பாதையில் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தேன். அந்த சுரங்கப் பாதையின் முடிவில், ஒரே ஒளிவெள்ளம்! முதலில் கண்கள் கூசுகின்ற அந்த வெளிச்சத்தில், எதுவுமே பார்க்க முடியவில்லை. வெகு நேரம் அந்த வெளிச்சம் ஒருவாறு கண்களுக்கு அல்லது மனதுக்கு பரிச்சயமானவுடன், அங்கு சில உருவங்கள் புலப்பட்டன.
  
'மாயா - வந்துவிட்டாயா? உனக்காகத்தான் இங்கே காத்திருக்கின்றேன்.'

'நீங்க யாரு?'

'உனக்கு ஞாபகம் இருக்காது; நாந்தான் உன் அம்மா.'
    
என்னை அதுவரைப் பிடித்திருந்த சோகம் உடனே விலகியது. 'அம்மா! அம்மம்மா!! நான் பிறந்து வளர்ந்த இவ்வளவு வருடங்களில், அப்பா அதற்குப் பின் ஓ ஏ தவிர வேறு யாரையும் உறவாக நினைத்ததே இல்லையே! ஆஹா நான் இந்த உறவை இதுவரை நினைத்துப் பார்த்ததே இல்லையே!' "அம்மா நீ ஏன் என்னை விட்டுப் போனாய்? நீ இல்லாமல் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?"

"பழசை எல்லாம் மறந்துவிடு மாயா! இனி உன்னைப் பிரிய மாட்டேன்"

"அம்மா நான் உன்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா?"

"உம். சர்வம் பிரம்ம மயம். இந்த ஆவி லோகத்தில், நீ என்ன நினைக்கின்றாயோ அது பௌதிகமாக நிகழாமலேயே - நிகழ்ந்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அது ஏற்படும்."

"ஆமாம் அம்மா ஆமாம். எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா!" 

"ஆமாம் மாயா - இந்த உலகில் எல்லாமே சந்தோஷம்தான். பசி, துக்கம் தாகம், வருத்தம், சோகம் எதுவும் கிடையாது. வெளிச்சம் உண்டு ஆனால் வெப்பம் கிடையாது! நீ பூவுலகில் வாழ்ந்தவரையில், எந்த உயிர்க்கும் எந்த தீங்கும் செய்ததில்லை. ஆகையால் உனக்கு இங்கு சலுகைகள் நிறைய உண்டு." 

"அம்மா பூவுலகில் நான் வாழ்ந்த வாழ்க்கை பற்றி நீ ஒன்றுமே கேட்கவில்லையே!" 

"தேவையே இல்லை மாயா. உன் பக்கத்திலேயே, இன்னும் சொல்லப் போனால், சில கட்டங்களில் நீ எடுத்த முடிவுகளைக் கூட உன் மனதுக்குள் புகுத்தி, உன்னை வழி நடத்தி இருக்கின்றேன். எனக்கு, நடந்தவை எல்லாமே தெரியும்." 

"அம்மா ஓ ஏ மிகவும் நல்லவர்." 

"அப்படி நீ நினைத்தால், அதுவும் சரிதான்." 

"அந்த பிங்கியின் பிடியிலிருந்து அவர் விலகி வந்தால் அது போதும் எனக்கு. மகளாக நினைக்கவேண்டிய ஒருத்தியை அவர் மனைவியாக்கிக் கொள்ள நினைக்கின்றாரே, அது என் மனதை மிகவும் பாதிக்கின்றது. அவர் வேறு யாரையாவது திருமணம் செய்துகொண்டு, சந்தோஷமாக வாழவேண்டும். அதுதான் என் ஆசை." 

"மாயா - இது எல்லாம் இந்த உலகத்திற்கு வந்த பிறகு தேவை இல்லாத பிரச்னைகள். அது அது விதிப் படி எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடக்கும். இதையும் மீறி, நீ ஏதாவது முயற்சி செய்ய விரும்பினால், இந்த உலகின் தலைவர் 'பரம்' இருக்கின்றார். நீ அவரை சந்திக்க நான் வழி காட்டுகின்றேன். " 

"சரி அம்மா." 
           
அம்மாவுடன் சென்று 'பரம்' ஆவியை சந்தித்தேன். அந்தப் பரம் ஆவி, நான் இறந்த நாளில், இறந்த இடத்துக்குச் செல்ல அனுமதி உண்டு என்றும், மேலும் சில நிபந்தனைகளையும் உணர்த்தியது. 
          
சென்ற வருடம் (2007) ஆகஸ்ட் எட்டாம் தேதி இங்கே வந்தபோது இந்த அறையில் யாருமே இல்லை. எனக்குப் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. ஆனால், இந்த அறை அப்பொழுது காலு சிங் அறையாக இல்லை என்பது தெரிந்தது. அத்துடன், நான் இறந்த அன்று பூட்டப் பட்ட இந்த மேஜை இழுப்பறை, அதற்குப் பிறகு திறக்கப்படவில்லை என்பது தெரிந்தது. அந்த இரும்புச் சாவி இரண்டாவது இழுப்பறையின் ஒரு பிளைவுட் விரிசலுக்குள் மாட்டிக் கொண்டிருக்கின்றது என்ற விவரமும், அந்த சாவியிலிருந்து வந்த கதிர்களை வைத்துத் தெரிந்துகொண்டேன். 
   
இதோ இந்த வருடம் ஆகஸ்ட் எட்டாம் தேதி இங்கே வந்துவிட்டேன். பரம் கூறிய சில தகவல்களை வைத்து, உங்களுக்கு 'ராமாமிர்தம்' உதவுவார் என்று சொன்னேன். நீங்கள் எனக்கு செய்யவேண்டிய உதவி ரொம்ப சிறிய உதவிதான். பிங்கியும் ஓ ஏ வும் இதுவரையில் திருமணம் செய்துகொள்ளவில்லை. மும்பை ஹோட்டல் திட்டம் முடிவடைந்தவுடன் திருமணம் செய்துகொள்வது என்று முடிவெடுத்துள்ளார்கள். அதற்குள் ஓ ஏ தன்னிலை அறிய வேண்டும். 
      
நாளைக்கு காலு சிங், ஓ ஏ வுக்கும், பிங்கிக்கும் காலை எட்டு மணிக்கு முன்பு கோக்க கோலாவும், ஆரஞ்சு ஜூசும் கொண்டுவருவான். நீங்க இந்த இரண்டாவது இழுப்பறையில் மாட்டிக் கொண்டிருக்கும் இரும்பு சாவியை எடுத்து, முதல் இழுப்பறையில் உள்ள நீல நிற பாட்டிலை எடுத்து, அதிலிருந்து ஒரே ஒரு காவிக் கலர் மாத்திரையை, கோக்க கோலா உள்ள டம்ப்ளரில் போட்டுவிட வேண்டும். மீதி உள்ள ஒரு மாத்திரையை, பாட்டிலுடன், உங்கள் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். அதை என்ன செய்வது என்று சந்தர்ப்பம் வாய்த்தால் பிறகு சொல்கின்றேன். 
   
இதை சொல்லிவிட்டு, மறைந்துவிட்டது அந்த ஆவி உருவம். 
             
(தொடரும்) 
                         

2.4.12

மணிக்கொடி காலம்

         
சமீபத்தில் படித்த புத்தகம். 'மணிக்கொடி காலம்' - பி எஸ் ராமையா எழுதியது. அதில் படித்ததிலிருந்து இங்கு கொஞ்சம் பகிர்வு.      
மணிக்கொடிக்கு அந்தப் பெயர் வரக் காரணம் பற்றி பி எஸ் ராமையா குறிப்பிட்டுள்ளதாவது ...
              
"......சென்னைக் கோட்டைக்கு எதிரில் கடற்கரை மணலில் அமர்ந்து சீனிவாசன், வ.ரா, சொக்கலிங்கம் மூவரும் ஆரம்பிக்கப் போகும் பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மாலை மணி ஆறு.  கோட்டை மதில் மேடை மேல் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கொடி தினசரி வழக்கப் படி இறக்கப்பட்டது அவர்கள் கண்ணில் பட்டது. "அந்நிய ஆட்சிக் கொடி விழுந்தது. கம்பத்தின்மேல் நமது கொடி ஏறும் வேளை வந்து விட்டது" என்று ஒருவர் சொன்னார்.  பத்திரிகைக்குக் கம்பத்தில் ஏறப்போகும் புதிய பாரத சக்திக் கொடிப் பெயராகவே வைக்கவேண்டும் என்ற கருத்து எழுந்தது.  சீனிவாசன் கம்பன் கவிதையில் திளைத்தவர்.  ராமகாதை பாலகாண்டத்தில் கோசிக முனிவனைத் தொடர்ந்து ராமனும் இலக்குவனும் மிதிலை நகருக்குள் நுழைந்தபோது அந்தக் கடிநகரின் கோட்டை மதில்கள் மீதும், மாடங்களின் மீதும் கொடிகள் பறந்து ஆடியது, ஐயனை 'வருக வருக' என்று அழைப்பது போல இருந்தது என்கிறான் கம்பன்.

                                        "மையறு மலரின் நீங்கி
                                          யான் செய்மா தவத்தின் வந்து 
                                          செய்யவள் இருந்தாள்....."

என்று சேதி சொல்லி ராமனை அழைத்த அக்கொடிகளைக் கம்பன் 'செழுமணிக் கொடிகள்' என்று குறிப்பிட்டிருப்பது சீனிவாசன் நினைவுக்கு வந்தது. அவர் அதைச் சொன்னவுடன் வ.ரா. "கம்பன் மட்டுமென்ன? பாரதியாரும் 'தாயின் மணிக்கொடி' என்றுதானே பாடியிருக்கிறார்?"  என்றார்.
          
அந்த மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் புதுப் பத்திரிகைக்கு 'மணிக்கொடி' என்று பெயர் சூட்டப்பட்டது..........".
                  
இந்தச் சம்பவங்கள் நேரில் பார்த்தது போல பி எஸ் ராமையா சொல்லியிருந்தாலும் இதற்குப் பிறகு வெகுநாட்கள் கழித்தே அவர் இவர்களுடன் இணைகிறார். அதுவும் எழுத்தாளராக இல்லாமல், விளம்பரப் பொறுப்பாளராக!
                 
அந்த நாளில் லண்டனில் இருந்து ஞாயிறன்று மட்டும் வெளிவரும் 'சண்டே அப்சர்வர்' என்ற பத்திரிகையின் பாதிப்பில் இதையும் ஞாயிறன்று மட்டும் வெளிவரும்படி, தொடங்கப் பட்ட மணிக்கொடி இதழ் முதன் முதலாக 1933 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியானது. அதைப் படித்து விட்டு முதன் முதலாகச் சென்று பாராட்டியவர் கல்கி. 
அவர் அதில் உடனடியாக இணைய முடியாமல் அப்போதுதான் விகடனில் இணைந்திருந்ததால் (அதுவரை நவசக்தியில் பணியாற்றிக் கொண்டிருந்தாராம்) இதில் அவரால் இணைய முடியாமல் போனதாகக் குறிப்பிடுகிறார் பி எஸ் ராமையா. இரண்டாவதாகச் சென்றவர் இவர்தானாம்.  கல்கி அப்போது "இந்தத் தமிழ் மாதிரி யாரால் எழுத முடியும்? இந்த மாதிரி வேறு யாரால் மொழி பெயர்க்க முடியும்" என்று தமது உள்ளப் பரபரப்பையும், உவகையையும் கொட்டினாராம். அதற்குக் காரணமாக இருந்த வரி,
             
"A thing of beauty is a joy for ever" என்ற ஆங்கில வாக்கியத்துக்கு மணிக் கொடி கொடுத்திருந்த "அழகிய ஒரு பொருள் அழியா இன்பம்" என்ற தமிழ் வாக்கியம்தானாம்.
         
1900 த்தின் ஆரம்பங்களில் சென்னையிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த விவேக சிந்தாமணி என்ற தமிழ் மாதப் பத்திரிகையில்தான் பி ஆர் ராஜம் ஐயர் தமது கமலாம்பாள் சரித்திரத்தைத் தொடர்கதையாக எழுதினாராம். 
                 
பின்னாளில் தினமணி ஆசிரியரான ஏ என் சிவராமனுடனான தன் அனுபவங்களையும் அங்கங்கே சொல்கிறார் ஆசிரியர். 
                
அன்றைய ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவே செய்திகளைத் திரட்டித் தந்து கொண்டிருந்த ராய்ட்டருக்கும், அசசோசியேட்டட் பிரஸ்சுக்கும் நடுவே உண்மைச் செய்திகளை செய்தி நிறுவனங்களுக்குக் கொடுக்க 'ஃப்ரீ பிரஸ்' என்ற ஒன்றைத்  தொடங்கிய வரலாறையும் எழுதி இருக்கிறார். தொடங்கியவர் மணிக்கொடி நிறுவனர்கள், ஆசிரியர்களில் ஒருவரான கு சீனிவாசனின் கல்லூரிப் பருவத் தோழர் சதானந்த்.
                 
நமக்கு எல்லோருக்கும் பாரதிதாசனின் "தமிழுக்கும் அமுதென்று பேர்" பாடல் தெரியும். தெரியாத ஆட்களே இருக்க முடியாது. அந்தப் பாடலை வெளியிட்டது (முதன் முதலில்) மணிக்கொடி. அதுவும் தன் இரண்டாவது இதழிலேயே. அப்போது பாரதிதாசன் என்றால் நிறையப்பேர் யாரென்று அறிந்திருக்கவில்லை என்கிறா பி எஸ் ஆர். 
                             
மணிக்கொடிக் காலம், மணிக்கொடி இலக்கியம் என்றாலே எரிச்சல் அடைந்த எழுபதுகளின் பல எழுத்தாளர்களைப் பற்றியும் சொல்கிறார்!


ஆரம்ப காலங்களில் பி எஸ் ராமையா பக்கெட் ஷாப்பில்தான் வேலை பார்த்தாராம். 
             
ஆமாம், 'பக்கெட் ஷாப்' என்றால் என்னவென்று தெரியுமோ....?  
---------------------------------------------  
     
மணிக்கொடி காலம் (சாகித்ய அகாடெமி பரிசு பெற்றது)
ஆசிரியர் பி எஸ் ராமையா
மெய்யப்பன் பதிப்பகம்
முதற்பதிப்பு ஜூலை 1980
இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2004. 
விலை :  80.00
                     

31.3.12

நடக்கும் நினைவுகள்..... (5) பொம்மையைக் கண்டுக் கண்டு பயம் எதற்கு....?

               
முன்பு குமுதத்தில் மனிதன் என்ற பெயரில் ஒரு தொடர் பகுதி வந்து கொண்டிருந்தது. வித்தியாசமான முயற்சிகளை பொது மக்கள் மத்தியில் நடத்தி கிடைக்கும் ரீ ஆக்ஷன் பற்றிய தொடர் அது! வாரா வாரம் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.
                    
தற்சமயம் டிவிக்களில் கேண்டிட் கேமிரா என்ற பெயரில் சில அநியாய அகட விகடங்கள் நடக்கும். சமயங்களில் பார்க்கும் நமக்கு கோபம் கூட வரும். சில சுவாரஸ்யமாக இருக்கும்.
             
இப்போது நான் சொல்லப் போகும் சம்பவம் கண்ணெதிரே யதேச்சையாக ஆனால் நிஜமாக நடந்தது. மாலை வாக்கிங் வந்து கொண்டிருந்த போது கவனித்தது. ஓரமாக நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தபோது நடக்க ஆரம்பித்த சம்பவம் பார்த்து,  அதனால் கவரப்பட்டு, பேசி முடித்து விட்ட ஃபோனை,  பேசுவது போலவே கையில் வைத்தபடி, அதிலேயே படம் எடுத்தபடி கவனிக்கத் தொடங்கினேன்! 
               
பிரதான சாலை அல்ல அது, என்றாலும் பஸ் தவிர மற்ற வாகனங்கள் செல்லும் சாலை அது.  சில சிறுவர்கள் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சாலையோரத்தில் ஒரு பொம்மை கிடந்தது. ஏன் தூக்கிப் போட்டார்கள் என்று நினைக்குமளவு சேதமில்லாத,  ஓரளவு நல்ல பொம்மை. அதை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனுக்கு சடாரென ஒரு ஐடியா தோன்றியது. 
             
அந்த பொம்மையை எடுத்துக் கொண்டு போய் சாலையின் நடுவே நிற்க வைத்தான். நின்றது,  என்றாலும் அவ்வப்போது காற்றில் விழுந்தது. உடனே பொம்மையுடன் ஓரமாக வந்து சில குச்சிகளைச் சேகரித்துக் கொண்டு மறுபடி சாலை நடுவே சென்று பொம்மையை நிறுத்தி விட்டு மூன்று பக்கமும் குச்சிகளைத் தாங்கு கோலாகக் கொடுத்து நிறுத்தி விட்டு ஓரமாக வந்து கொஞ்ச நேரம் நின்று ஆராய்ந்து விட்டு....  சென்று விட்டார்கள்!   
அப்புறம் நடந்ததுதான் நல்ல வேடிக்கை. சாலையில் வாகனமோட்டி வந்தவர்களுக்கு சாலையின் நடுவே ரத்தச் சிவப்பில் உடையணிந்து நின்று முறைத்துப் பார்க்கும் பொம்மையைக் கண்டு என்ன தோன்றியதோ... நட்ட நடுவே நிற்கும் அந்த பொம்மையின் மேல் படாமல், மோதாமல் ஓரமாக ஓட்டிச் சென்றார்கள்.     

வேகமாக வந்த கார் ப்ரேக் பிடித்தவாறே ஓரம் வந்து பொம்மையைத் தவிர்த்துப் பறந்தது. இரு சக்கர வாகனங்கள் கவனமாக பொம்மையைத் தவிர்த்துப் பறக்க, அதன் ஓட்டுனர்களும் பில்லியன் ரைடர்களும் ஆர்வமாக பொம்மையைத் திரும்பி ஒரு லுக் விட்டு விட்டு,  பார்த்தாலே மந்திரம், தந்திரம் ஏதாவதில் மாட்டி விடுவோம் என்பது போல தலையைத் திருப்பிக் கொண்டு சென்றார்கள்.

இன்னும் பலர் அதைத் திரும்பிப் பார்ப்பதைக் கூடத் தவிர்த்தார்கள். இரு சக்கர வாகனத்தில் டபுள்ஸ் வந்த லேடி போலீஸ் ஜோடி ஒன்றும் ஓரம் கட்டிப் பறந்தாலும் ஓட்டுனப் பெண் போலீஸ் கையை நீட்டிக் காட்டி கோபத்துடன் சைகை காட்டிச் சென்றாரே தவிர அவரும் அதை எடுக்கவோ ஓரம் போடவோ முனையவில்லை. 
              
ஆட்டோக்களும் அதே வண்ணம் பறந்தன. நடந்து சென்ற சிலர் சுற்றுமுற்றும் பார்த்து யார் இப்படிச் செய்திருப்பார்கள் என்று ஆராய்ந்து விட்டு புன்னகையுடன், ஆனால் கவனமாக 'அதை'ப் பார்க்காமல் கடந்தனர். 
             
இதே போல நாம் செல்லும் போது பாதையில் இப்படி ஒன்று எதிர்ப் பட்டால் நாம் என்ன செய்வோம் என்று உள்ளே நினைப்பும் ஓடியது. ஆனாலும் மக்களை நினைத்து நிஜமாகவே ஆச்சர்யப் பட்டுக்கொண்டிருக்கும்போதே செல்ஃபோன் பேசியபடி வந்த ஒரு ஓட்டுனரின் டி வி எஸ் 50 பொம்மையை கவனிக்காமல் மோதி தட்டி விட்டுப் பறந்தது.
             
(புகைப் படம் எடுத்தால் பொம்மையை வைத்தது நாம்தான் என்ற எண்ணம் வந்து விடுமோ என்ற எண்ணம் வந்ததால் ஜாக்கிரதையாகப் படம் எடுக்க வேண்டியிருந்தது!! அப்புறம் நடையை விட்டு விட்டு ஓட்டம் எடுக்க வேண்டியதுதான்!!)
         
அப்புறமும் நடு ரோடில் பரிதாபமாகக் கிடந்த அந்த பொம்மையை வண்டிகள் கவனமாகத் தவிர்த்தே பறந்தது கண் கொள்ளாக் காட்சி. கட்டக் கடைசியாக ஒரு ஸ்கூட்டி தாண்டும்போது பொம்மையின் ஓரத்தில் தட்டப் பட்டு நெம்புகோல் தத்துவத்தில் பொம்மை எம்பி அந்த ஸ்கூட்டியின் முன்புறமே விழ, வண்டி கண்களிலிருந்து மறைய, காட்சி முடிவுக்கு வந்தது!