16.7.14

ப்ளாக் மேஜிக்




                                                           
                                                    
சின்ன வயசுல லீவு நாள்னா எப்பப் பார்த்தாலும் வெளில வெளில ஓடிடுவோம். வீட்டுல தங்கற நேரம் கம்மி. 'அவன எங்கடா காணும்?' னு அம்மா கேட்டா,  அடுத்தவன்,  'வெளாடப் போயிருக்காம்மா' ம்பான்... 'நீ போவலையாடா'ன்னா  'ந்தா.. நானு பம்பரம் எடுக்க வந்தேன். போயிட்டே இருக்கேன்' ம்பான் அவன். 


                                                         
நாடா வச்ச டிராயர் போட்டிருப்பேன். எனக்கு என்ன எரிச்சல்னா என்னோட வலது பக்க நாடா தோள்ளேருந்து நழுவி நழுவி விழுந்துகிட்டே இருக்கும். அதை ஒரு கையால புடிச்சுகிட்டே வெளாடறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா...அதோட நெத்தில வந்து விழுந்து கண்ண மறைக்கும் முடியை ஒதுக்கிக்கணும்.. இருந்தா செந்தில் மாதிரி இருக்கணும்... அவன் எப்பவும் மொட்டை..
ஆனா செஞ்சேனே... அதுவும் செஞ்சேனே...

ஒருவாட்டி அண்ணன் கூட ஒரு அல்ப மேட்டர்ல பெட்டு வச்சு தோத்துட்டேன். தோத்தா மொட்டையடிக்கணும்னு சொல்லியிருந்தான். நாங்கள்லாம் என்ன மாரி பரம்பரை... பெட்டு வச்சா ஏமாத்த மாட்டோம்ல.... செந்தில் ஞாபகத்துல மொட்டை அடிச்சிட்டேன். 
                                                                  
                                        
 நான் மொட்டை அடிச்சேன். அப்பா என்ன அடிச்சார்! சும்மா பின்னு பின்னுன்னு பின்னிட்டார். 50 பைசாவுக்கு (அப்போ) ஒரு தொப்பி வாங்கி முடி வளர்ற வரைக்கும் போட்டுக்கிட்டிருந்தேன்! அப்பாதான் வாங்கிக் கொடுத்தார். ஹலோ ப்ரதர்... 50 பைசால்லாம் அப்போ பெரிய அமௌன்ட்டாக்கும்!

                                            
வெய்யில் காலத்துல மதியானத்துல வெளில வெளாடப் போமுடியாம கதவப் பூட்டிடுவா அம்மா. உள்ளேயே கிடக்கணும். மழ வந்தாலும் கஷ்டம்தான். அப்போல்லாம் ஆடு புலி ஆட்டம், புள்ளி வச்சு கட்டம் போடறது (கட்டத்துக்குள்ள எங்க இன்ஷியல் எழுதுவோம்), திருடன் போலீஸ் -நோட்டுல பேர் எழுதி விளையாடுவோம், பரமபதம், பல்லாங்குழி, செஸ்  இப்படி விளையாடி பொழுது போகும். இல்லாட்டி ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்குவோம். சண்டை மண்டை உடையும். ஒரே களேபரம்தான்! 

                                                      
அம்மா மூஞ்சில துண்டப் போட்டுக்கிட்டு 'எப்படா இந்த சனியன் பிடிச்ச ஸ்கூல் தொறக்கும்'னு மனசுக்குள்ள நொந்துகிட்டு படுத்திருப்பா.... இந்த  களேபரத்துல எங்க தூங்கறது?
 

                                                                     

அப்பப்போ ஊர்லேருந்து மாமாக்கள் வரும்போது புதுசு புதுசா கத்துக் குடுத்துட்டுப் போவாங்க.. ஹலோ சிஸ்டர்.... கத்துக் குடுக்கறதுன்னா உக்கார வச்சு கிளாஸ் எடுக்கறதில்ல... எங்கள கேள்வி கேப்பாங்க... கேள்வி கேக்கறதுன்னா சும்மா இல்லங்க.. அந்தக் கேள்விக்கான பதிலை அவங்க சொல்ல மாட்டாங்க... கேள்வி மட்டும்தான்.  சந்தேகம்னா 'அஞ்சு சான்ஸ்' பதிவு படிச்சுப் பாருங்க.. அந்த மாரி நேரத்துல பெரும்பாலும் தப்பிச்சி வெளில தெறிச்சு ஓடிடுவோம்னு வச்சுக்குங்க...

அப்படியும் அவ்வப்போ உக்காரவச்சி கேக்க ஆரம்பிச்சுடுவாங்க.. ஒரு வாட்டி இங்கிலிஷ்ல Aல ஆரம்பிக்கற வார்த்தைகள் வரிசையாச் சொல்லணும்னு... A ன்னு இல்ல.. ஏதாவது ஒரு எழுத்து.. அப்புறம் ஒரே மீனிங்க்ல வெவ்வேறு வார்த்தை.. இப்படி!

சொல்லப்போனா சினிமாப் படம் பேரு முதலெழுத்தும் கடசி எழுத்தும் சொல்லி என்ன பேருன்னு கேக்கற வெளாட்டு கூட அவங்க சொல்லிக் குடுத்ததுதான். அட, இப்படில்லாம் சுவாரஸ்யமா எல்லாம் இருக்கான்னு அப்பப்போ அவங்க சொல்றதை கவனிக்க ஆரம்பிச்சோம்.

                                                          
அப்போ இந்த கட்ட விரல் மேஜிக் செய்வாங்க.. ஆன்னு பாப்போம். 'ஐயோ'ன்னு அலறுவோம். இந்த ஆடியன்ஸ் வேல எல்லாம் நமக்கு நல்லா வரும்ங்க... செய்யறவங்களையும்  உற்சாகப்படுத்தணும் பாருங்க.... இப்படி இருக்கச் சொல்ல, ஒரு வருஷம்,  இப்போ சொல்றேனே, இந்த ப்ளாக் மேஜிக் விளையாடினாங்க.

                                                                   
ஒரு மாமா தூரத்துல இருப்பார். இன்னொரு மாமா நம்ம கிட்ட இருப்பார். நம்ம ஒரு பொருளை இவர்கிட்ட காதுல சொல்லணும். உதாரணமா 'பாம்பு'ன்னு சொல்றோம்னு வைங்க.. அவர் தூரத்துல இருக்கற மாமாவப் பார்த்து 'ரெடியா'ம்பார்.  அவரும் 'ரெடி'ம்பார்.  உடனே வரிசையா ஏதாவதொரு பொருள்கள் சொல்லி 'அதுவா, அதுவா?' என்று கேட்டுகிட்டே இருப்பார். "இல்லை" "இல்லை" ன்னு சொல்லிகிட்டே வர்ற அந்த மாமா சரியா 'பாம்பா'ன்னு இவர் கேட்டதும் மட்டும் "ஆமாம்" என்பார்!


                                                        
நாங்களும் இவர் ஏதோ அவருக்கு சிக்னல் கொடுக்கறார் என்றும், சரியா இத்தனாவது நம்பர் கேள்வியா கேக்கறார் என்றும் இன்னும் விதம் விதமாகவும் சந்தேகப் பட்டோம். ஆனா அவங்க வெவ்வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்துகிட்டு எல்லாம் சொல்வாங்க.... அப்பவும் சரியா இருக்கும்.  நாங்கள் சொல்லும் எண்ணிக்கையில் எல்லாம் கேட்பார்கள். அப்பவும் சரியாச் சொல்வாங்க. ஆனா ஒண்ணு, எடுத்தவுடனே மட்டும் சரியான விடையைக் கேட்டதில்லை.


                                                                      

எங்களோட ஆச்சர்யம் தீர கொஞ்ச நாளானது. அவங்கதான் எப்படின்னு வேற சொல்லித் தர மாட்டாங்களே.... திரும்பத் திரும்ப விளையாடி ஒரு வழியாக் கண்டு பிடிச்சோம்.
                                                              
                                                                                
அப்புறம் என்ன.... எங்க ஃபிரெண்ட்சை உட்காரவைத்து ப்ளாக் மேஜிக் விளையாடத் தொடங்கி விட்டோம்!
அவ்ளோதான்... கதை முடிஞ்சிடுச்சிங்க.... இனி நீங்க கமெண்ட் போடலாம்.


14.7.14

வருத்தப்படுகிற வயோதிகர் சங்கம்



அன்றாட தினசரிகளைப் புரட்டினால்
முன்பக்கத் தலைப்புச் செய்திகளாக
முழுப் பக்கங்களிலும்
முக்கியச் செய்திகளாக 

எங்கெங்கு எத்தனை எத்தனை
கற்பழிப்புகள்
அப்புறம் அந்தப் பெண்கள்
கொலையாவது 

வங்கியிலிருந்து ஓய்வூதியம் எடுத்து வரும்
வயோதிகரை வழிமறித்து
பணப்பையைப் பிடுங்கிக் கொண்டு
ஓடிப்போகிற வன்முறைகள்
 
வழிப்பறிகள் பஸ்கள் மோதல் - பலிகள்
நின்று கொண்டிருக்கிற பேருந்து மீது
பின்னாலிருந்து வந்து மோதும் இன்னொரு
பேருந்து - உயிர்ச்சாவுகள்
அரசு அலுவல்களில் எல்லாம்
லஞ்சக் கோரிக்கைகள்
 
பட்டப் பகலிலும்
பக்கத்து வீட்டைச் சூறையாடும்
பேட்டை ரௌடிகள்
 
பட்டப் பகலில் நகையணிந்து
பயமின்றி தெருவில்
இளம்பெண்கள் நடந்து செல்லும்
காந்தி கண்ட ராமராஜ்யக் கனவு
 
என்றிப்படியாக
எத்தனையோ கொடுஞ்செய்திகள்
இல்லாமல் தடுக்கிற
இயலாமையை எண்ணி எண்ணி
வருத்தப் படுகிறது வயோதிகர் சங்கம்.

( இதை எழுதியது நானல்ல.. ! )

12.7.14

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1) எதுவும் தெரியாத தொழிலில் களமிறங்கி வெற்றி பெற்ற ஜானகி ரவிச்சந்திரன்
 

 
 

 
3) விபத்தில் இறந்த மகன் பெயரில் தந்தையின் சேவை.
 


4) (படம் கிடைக்கவில்லை)
கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.  கோவையில் இறந்தவர் வீடுகளுக்கு தானாகச் சென்று இலவசமாக அமரர் ஊர்தி சேவை ஏற்படுத்திக் கொடுக்கும்   மாற்றுத் திறனாளியான இவர் கிருஷ்ணசாமி நாயுடு நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
 

5) நாணல் நண்பர்கள் குழு.





6) ‘பசுமை மனிதர்' ஆசிரியர் கே.பி. ரவீந்திரன் 




                                               

7) நல்ல காரியம் நடக்குது..




8) வாசமல்லி 




9) இமைகள் சுந்தரராஜன் 



10) மதுரை சபரி சங்கரன் 






11) எது வெற்றி? இவானைக் கேளுங்கள். (நன்றி ராஜலக்ஷ்மி மேடம்)




12) ஆதரவுக் கரம் கொடுக்கும் செல்வா கோமதி. 

 






8.7.14

ஆவி கேட்ட பதில்கள்

                                    
   
பதில் சொல்லவந்தேன் பாப்பு! 
பத்து கேள்வி கொண்ட கோப்பு 
பதில் எல்லாமே டாப்பு 
என்று நான் சொன்னா தப்பு, 
நீங்க சொன்னா அது சோப்பு!  
     
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?  
     

வழக்கம் போல மனைவி - பகல் பன்னிரண்டு மணிக்கு - 'அட ஆமாம் - உங்களுக்குப் பிறந்தநாள் என்பதையே மறந்துவிட்டேன். எங்க வீட்டுல எல்லாம் பிறந்தநாள் கொண்டாடும் வழக்கமே கிடையாது. அதனால எனக்கு இதெல்லாம் ஞாபகம் இருப்பதில்லை. உங்களை கிரீட் செய்யவில்லை என்று நினைக்காதீர்கள். எனக்கு கிரீட் செய்வதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது!' (அம்மா நீ திட்டாமல் இருந்தால் போதாதா!) 

உயிர் நண்பன் அப்பப்போ (நான் அவன் பிறந்தநாளுக்கு ஃபோன் செய்து வாழ்த்தும்பொழுதெல்லாம்) என்னுடைய பிறந்தநாளை தவறாக நினைவு கூர்ந்து - அதுதானே உன் பிறந்தநாள் என்று கேட்பான். நான் இல்லை என்று சொன்னதும், ஒன்றும் பேசாமல் வைத்துவிடுவான். 
   

இப்போ , முகநூல், நண்பர்கள் எல்லோரிடமும் என் பிறந்தநாளை போட்டுக் கொடுத்துவிடுகிறது. பார்ப்போம் என்னுடைய நூறாவது பிறந்தநாள் வரை முகநூல் உயிரோடு இருக்கின்றதா  என்று! 

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? 
     

இதுவரை கற்றுக்கொண்டது எல்லாவற்றையும் மறந்து வருகின்றேன். புதிதாக எதையும் கற்றுக்கொண்டு, பிறகு அதை மறந்து - எதற்கு இந்த வேலை எல்லாம். சித்தம் போக்கு சிவம் போக்கு. சத்தம் போடாம இருந்தா செல்வாக்கு! 

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?  
       

எனக்கு புன்னகை மன்னன், இளிச்சவாயன் என்றெல்லாம் பெயர் உண்டு. வாழ்க்கையில் நான் (அட்லீஸ்ட் மனதிற்குள்ளாகவாவது) சிரிக்காத தருணங்கள் இல்லை. பேரனை சிரிக்க வைக்க, பேரனுக்கு விளையாட்டுக் காட்டி, பேரனோடு சேர்ந்து, நான் அடிக்கடி பெரிதாக சிரிப்பது உண்டு. 

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?  
    

இருப்பது பெங்களூரில் என்பதால் இரவு தூங்குவதற்கு மின்விசிறி, குளிர்சாதனங்கள் வேண்டியது இல்லை. தினமும் எட்டு மணி நேர தூக்கம் இரவு பத்து தொடங்கி காலை ஆறு மணி வரை. மற்ற நேரங்களில் யு பி எஸ் தயவால் மின் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்வேன். இண்டக்ஷன் ஸ்டவ்வில் காபி போட்டுக் குடிக்கமுடியாது என்பதால் காஸ் ஸ்டவ்வில்தான் எல்லாம் செய்து கொள்ளவேண்டும். காலை நேரங்களில் கரண்ட் கட் என்றால் காஸ் ஸ்டவ்தான் கடவுள்.  
   
தொலைகாட்சி, சீரியல்கள் - எதுவும் பார்ப்பதில்லை. நெட்டில் நியூஸ், பார்ப்பது / படிப்பது எல்லாம் செய்துவிடுவேன். கரண்ட் இல்லை என்றால் ஓவர்ஹெட் டான்க் நிரம்பாது என்பதால் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவேன். வாஷிங் மெஷினுக்கு ஒருநாள் ஓய்வு. 

கரண்ட் கட் ஆனதால், லாப் டாப் சார்ஜ் ஆகவில்லை என்றால் வாழ்க்கை ரொம்ப போர் அடித்துவிடும்.  மற்றபடி பவர்கட்டால் எனக்கு அதிக பிரச்னைகள் கிடையாது. 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?  
     

திருமணநாள் மட்டும் அல்ல - எல்லா நாளிலும் சொல்லவிரும்புவது, கணவன் மனைவி இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சந்தோஷமாக வாழுங்கள். ஒருவரின் சுக துக்கங்களை மற்றவர் பகிர்ந்து கொள்ளுங்கள். 

சந்தோஷமே வாழ்க்கையின் குறிக்கோள். அம்மா அப்பா சந்தோஷமாக இருக்கும் வீட்டில் வளர்கின்ற குழந்தைகள், தன்னம்பிக்கையோடு வளர்ந்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். (ஆனால் பாருங்க - என்னிடத்தில் என் குழந்தைகள் யாரும் அட்வைஸ் கேட்பதில்லை;அடிக்கடி அவர்கள்தான் எனக்கு அட்வைஸ் வழங்குகிறார்கள்!) 

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?  
     
   

மங்கோலியப் பிரச்னை. அப்படி ஒரு பிரச்னை இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எனக்கும் தெரியாது. பிரச்னைகள் என்பதை யார் உருவாக்குகிறார்களோ அவர்களே உட்கார்ந்து பேசி பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். என்னால் உண்டான பிரச்னை ஏதாவது எனக்குத் தெரிய வந்தால் அதைத் தீர்க்க என்னால் முடியும். அதை விட்டு ஊரார் பிரச்னை, உலக பிரச்னை என்றால் நான் சென்றால் என்னுடைய நேரம்தான் வீணாகும். 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?  
      

சுருங்கச் சொன்னால் அட்வைஸ் கேட்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை. சில இக்கட்டான தருணங்களில் அப்பா, அண்ணன்கள் இவர்களிடம் அட்வைஸ் கேட்டதுண்டு. ஆனால் அவர்கள் சொன்னபடி நடந்திருக்கின்றேனா என்பது சந்தேகம்! 

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?  
     

அதை நம்புவதற்கு அதிக ஆட்கள் இருப்பார்கள். நம்பாமல் இருப்பவர்களும் இருப்பார்கள். எந்தத் தகவலாக இருந்தாலும் என்னிடம் உறுதி செய்துகொள்ள வருபவர்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் உண்மை நிலையை அல்லது உண்மை என்று நான் நினைப்பதை நிச்சயம் இதமாகக் கூறுவேன். நான் சாதாரணமாக 'உங்களைப்பற்றி அவர் இவ்வாறு கூறினாரே' என்று வருகின்ற தகவல்களை அப்படியே எடுத்துக்கொள்ளமாட்டேன். அவர் எந்த சந்தர்ப்பத்தில் எதற்காக அப்படிக் கூறினாரோ - அதைக் கேட்டவர் என்ன மனநிலையில் எப்படி அதைப் புரிந்துகொண்டார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது என்பதால், கூறப்படுவதை அப்படியே வாங்கி வைத்துக் கொள்வேன். பிறகு நேரம் கிடைக்கும்போது அதை அனலைஸ் செய்து பார்ப்பேன். (என் அலுவலக ட்ரைனிங் கிளாஸ் ஒன்றில் நான் தெரிந்துகொண்ட ஒரு விஷயமும் இதில் உள்ளது. அது பற்றி தனி பதிவு அலேக் அனுபவங்களில் பிறகு எழுதுகின்றேன்.) 
                 
என் மீது தவறு இருந்திருந்தால் அதை எதிர்காலத்தில் திருத்திக் கொள்வேன். தவறு இல்லை என்றால், 'அறியாத குழந்தைகள்' சொல்பவைகளை எப்படி புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்வோமோ  அதைபோல எடுத்துக் கொள்வேன். I am OK, You are OK புத்தகம் படித்த காலத்திலிருந்து இதைப் பின்பற்றி வருகின்றேன். 


9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?  
      

நண்பரின் மனைவி உயிரோடு இருக்கும் பொழுதே அவரிடம் (நண்பரின் மனைவியிடம்) நான் அதிகம் பேசியிருக்கமாட்டேன். அவர் இறந்தால் மட்டும் அவரிடம் என்ன சொல்லப் போகின்றேன். (இறந்தவர்களோடு பேசுவது எனக்கு பயம் அளிக்கும் சமாச்சாரம்!) 

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?  
      

இதோ 'சில' மட்டும்! 

# உரத்த குரலில் பாட்டுப் பாடுவேன். 
# டான்ஸ் ஆடுவேன். 
# ப்ளாக் எழுதுவேன். 
# எம் பி 3 ப்ளேயரில் உபன்யாசம் கேட்பேன். 
# புத்தகம் படிக்க நினைத்து, படிக்கும்போது தூங்கிடுவேன். 
Z Z Z Z Z Z ! 
        
(தொடர்பதிவுக்கு ஸ்ரீராம் அழைப்பு விடுப்பார். இந்தப் பத்துக் கேள்விகள் பிடிக்கவில்லை என்றால் கோக்கு மாக்காக புதியதாக ஐந்து கேள்விகள் உருவாக்குங்கள்! ஹ ஹ ஸ்ரீராமை கோர்த்துவிட்டாச்சு!)