திங்கள், 17 பிப்ரவரி, 2014

திங்க கிழமை 140217:: சேமியா பாத்.


சேமியா, 'பாத்' செய்யும்பொழுது பார்க்கலாம். அதாவது, சேமியா பாத் செய்து பார்க்கலாம். பிறகு சாப்பிடலாம்! 

ஒரு லிட்டர் பால் எடுத்துக்குங்க. 
    

பால் பொங்கும் வரைக் காய்ச்சுங்கள். 

பால் பொங்கும் பருவத்தில் அடுப்பை அணைத்து, பால் ஆறி ரூம் டெம்பரேச்சருக்கு ஐந்து டிகிரி மட்டுமே அதிகம் இருக்கின்ற நிலையில், அந்த வெது வெதுப்பான பாலில், பத்து கிராம் தயிர் இட்டு, ஒரு ஸ்பூனால் கலக்கி அப்படியே இருபத்துநான்கு மணி நேரம் அதை தொந்தரவு செய்யாமல் விட்டு விடவும். இப்போ ஒரு லிட்டர் புளித்த தயிர் தயார். 
           

அரை கிலோ சேமியாவை எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில், நான்கு கரண்டி நெய் விட்டு, அதில் சேமியாவை ஒவ்வொரு பீசும் ஒரு சென்டிமீட்டர் அல்லது இரண்டு சென்டிமீட்டர் நீளம் இருக்கின்ற அளவில் நொறுக்கிப் போட்டு, பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். 

பன்னிரண்டு முந்திரி பருப்புகள் எடுத்து, அதை வறுத்த சேமியாவுடன் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் போதிய அளவு தண்ணீர் விட்டு, சேமியாவையும் மு பருப்பையும் வேகவைத்து, பிறகு தண்ணீரை வடித்து விடவும். 

மீண்டும் பால், கால் லிட்டர் எடுத்துக் கொள்ளவும். நன்றாகக் காய்ச்சி, ஆற விடவும். ரூம் டெம்பெரேச்சருக்கு பால் வந்துவிடட்டும். 

ஏற்கெனவே செய்து வைத்த ஒரு லிட்டர் புளித்த தயிரில், இந்தக் கால் லிட்டர் பாலைக் கலந்து, சேமியாவையும் முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கிளறி விடவும். 

சிறிதளவு பெருங்காயப் பொடி அல்லது கட்டிப் பெருங்காயத்தை ஐந்து மில்லி நீரில் கரைத்து அதை சேமியா தயிரில் சேர்க்கவும். 

ஒரு கன சென்டிமீட்டர் இஞ்சியை பொடிப்பொடியாக நறுக்கி சேமியா பாத்தில் சேர்க்கவும். 
                
இரண்டு கரண்டி நெய்யை வாணலியில் விட்டு, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, ஒரு மிளகாய் வற்றல், பன்னிரண்டு கறிவேப்பிலை இலைகள் இவற்றைப் போட்டு, தாளித்து சேமியா பாத்தில் கொட்டி, கிளறி, மூடி வைக்கவும். 
               

இப்போ போயி, இரண்டு மணி நேரம், தொலைக்காட்சியில் மாமியார் கொடுமை, மருமகள் பொறுமை, நாத்தனார் பொறாமை, கள்ளக்காதல், பழிக்குப்பழி, வெட்டுக்குத்து இல்லாத நிகழ்ச்சிகள் ஏதேனும் இருந்தால் அவற்றைப் பார்த்து இரசித்துவிட்டு வாருங்கள். நிகழ்ச்சி முக்கியமில்லை, நேரம் முக்கியம்.
              

சேமியா பாத் நீங்கள் சாப்பிட ரெடி! 
          

24 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா..

    நீங்கள் சொல்லும் செய்முறை குறிப்பு எடுத்தாச்சி நாங்களும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது.... இறுதில் உள்ள படத்தை பார்த்தால் உடனடியாக சாப்பிட சொல்லுது மனம். பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. சேமியாவை நொறுக்கிட்டு ஏன் கஷ்டப்படணும்? எம்.டி.ஆர். சேமியாவோ, பொம்பினோ சேமியாவோ வாங்கினால் நொறுக்கியே கிடைக்கும். இதே முறையில் எலுமிச்சை சேமியா, தேங்காய் சேர்த்து தேங்காய் சேமியா, காய்கள் சேர்த்து வெஜிடபிள் சேமியானும் செய்யலாம் தெரியும் இல்ல? சேமியாவோடு உ.கி. ப்ரெட் சேர்த்து கட்லெட், டிக்கி செய்யலாம். இது போதுமா, இன்னும் வேணுமா? :))))))))

    பதிலளிநீக்கு
  3. வீட்டில் செய்த தயிரே வேண்டுமோ...? எப்படியும் 2 நாட்களில் செய்து விடுகிறோம்...!

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப துல்லியமான சமையல் குறிப்புகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  5. #சேமியா, 'பாத்' செய்யும்பொழுது பார்க்கலாம்#
    சேமியா பாத் சாப்பிடும்போது மட்டுமே பார்ப்பது என் பாணிங்க !

    பதிலளிநீக்கு
  6. பாத் எடுக்கும் போது பாத் பார்க்கலாம். பாத் செய்த சேமியா பார்க்க அழகாக இருக்கிறது. நெய் செலவாகும் வேகத்தைப் பார்த்தால் கொலெஸ்ட்ரல் எகிறும் என்று பயம் வருகிறது}}}} அருமையான விளக்கங்களுடன் சூப்பர் தயிர் சேமியா.மிக நன்றி எபி.

    பதிலளிநீக்கு
  7. டிடி வீட்டில தயிர் தோய்ப்பதில்லையா. என்ன இப்படிக் கேட்கிறார். ஓஒ இப்பதான் டப்பா டப்பாவாத் தயிர் வந்துவிட்டதே.

    பதிலளிநீக்கு
  8. SUN பாத் கேள்விபட்டிருக்கிறேன் SAND பாத் கேள்விபட்டிருக்கிறேன் இன்றுதான் உப்பு மிளகா இஞ்சி புளி பால் எல்லாம் சேர்த்த சேமியா பாத் இன்றுதான் கேள்விபடுகிறேன் :-)

    பதிலளிநீக்கு
  9. பார்க்கும் போதே எச்சில் ஊறுதே!!

    பதிலளிநீக்கு
  10. சேமியா பகாளா பாத்- ஆ?
    நீங்கள் முதலில் ஆரம்பத்தில் பாயசம் செய்யப் போகிறீர்கள் என்று நினைத்தேன். (சேமியா+முந்திரி வறுத்தல்+வேகவைத்தல்) எதற்கு தயிர் என்று யோசித்தேன். கடைசியில் பகாளா பாத் செய்திருக்கிறீர்கள்.

    மாமியார் கொடுமை etc etc சீரியல்கள் பார்த்தால் சேமியா பாத் சரியாக வராதா?

    புகைப்படத்தில் சேமியா பாத் குளுகுளுவென்று இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. பிரமாதமான சேமியா பகாளாபாத்! நானும் பாயசம் என்று தான் முதலில் நினைத்தேன். அப்புறம் தயிர் பார்த்து தான் தெரிந்தது..

    செய்முறை விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  12. ஆஹா... சூப்பர்...
    செய்து பார்த்திடலாம் அண்ணா...

    பதிலளிநீக்கு
  13. ஆஹா... சூப்பர்...
    செய்து பார்த்திடலாம் அண்ணா...

    பதிலளிநீக்கு
  14. //மாமியார் கொடுமை, மருமகள் பொறுமை, நாத்தனார் பொறாமை, கள்ளக்காதல், பழிக்குப்பழி, வெட்டுக்குத்து இல்லாத நிகழ்ச்சிகள்//

    இந்த மாதிரி நிகழ்ச்சிகள் எந்த சேனலில் வருகிறது என்று தயவு செய்து சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  15. சாருக்குத் தொழில் நெய் வியாபாரமா?

    பதிலளிநீக்கு
  16. பழனி கந்தசாமி ஐயா, இந்தியா முழுவதும் எல்லா சானல்களிலும் பார்க்கலாம். பகல், இரவு, மாலை என எப்போதும், எங்கேயும் காணமுடியும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விளக்கு ஏற்றும் நேரத்தில் யாரையாவது சாகடித்துக் கடைசி கர்மாக்கள் நடக்கும், அல்லது அழுது அமர்க்களம் பண்ணுவாங்க, தாலியைக் கழட்டுவது, வளையலை உடைப்பது என மங்களகரமான நிகழ்ச்சிகளையும் காட்டி ரசிகர்களை மெய்ம்மறக்கச் செய்வாங்க. நீங்க தொலைக்காட்சின்னா என்னனு கேட்கும் நபர் போல் தெரியுது! :)))))))

    நாம நம்ம வீட்டிலே போடணும்னு அவசியமெல்லாம் இல்லை. எதிர் வீடு, பக்கத்து வீடு, கொல்லைப்பக்கத்து வீடுனு போட்டு சத்தமும் பெரிசா வைச்சுக் கேட்பாங்களா! உங்களுக்குப் பிடிக்கலைனாக் கூட காதில் விழுந்தே தீரும்!

    பதிலளிநீக்கு
  17. @அப்பாதுரை, உங்களுக்கு மட்டும் ஒரு டிப்ஸ், இந்த சேமியா பகாளாபாத்துக்கு நெய்யில் தாளிக்காதீங்க. நல்ல சுத்தமான நல்லெண்ணெயில் தாளிச்சுட்டு, அதிலே சாப்பிடும்போது மோர் மிளகாய் வறுத்துச் சேர்த்துட்டுச் சாப்பிடுங்க. சொர்க்கம் உங்களிடம் தான். தயிரும் நல்லா குளிர் பெட்டியிலோ, பானையிலோ உறை ஊத்திக் குளிர்ச்சியா இருக்கணும். :))))))))

    பதிலளிநீக்கு
  18. நன்றி. அருமையான குறிப்பு. அதை நீங்கள் வழங்கும் விதம் இரசிக்கவும் வைக்கிறது:)!

    பதிலளிநீக்கு
  19. மோர்மிள்காய் முன் ஜென்மத்தில் சாப்பிட்டது..

    பதிலளிநீக்கு
  20. ம்ம்ம்ம்.... பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருக்கிறது....

    சாப்பிட்டுப் பார்க்க உங்க வீட்டுக்கு வந்துடலாம்னு யோசனை! என்ன சொல்றீங்க!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!