வியாழன், 13 ஜூன், 2019

யமுனா நதி இங்கே... கங்கா நதி அங்கே... சரஸ்வதி போனதெங்கே...


பொதுவான நடைமுறை விவரங்களை சென்றவாரம் சுருக்கமாகப் பார்த்தாயிற்று.  சரி...  இனி தினசரி நிகழ்ச்சிகளுக்கு வருகிறேன்!  (சென்று வாரத்துடன் கா ப ப க முடிந்து விட்டது என்று சந்தோஷப்பட்டவர்கள் கையைத் தூக்குங்கள்!)

இரவு மூன்றரை மணிக்கு தூங்கச் சொல்லிவிட்டு ஆறுமணிக்கு காஃபி வரும், ஆறரை மணிக்குக் கிளம்புகிறோம்  என்று சொல்லிச் சென்றார் நிகழ்ச்சி அமைப்பாளர்.

எங்கிருக்கிறோம், என்ன என்று குழப்பமுறுபவர்களுக்கு -  ப்ரயாக்ராஜ் அதுதான் அலஹாபாத் ப்ரயாக் ஹோட்டலில் இருக்கிறோம்.  ரயிலிலிருந்து இறங்கி பஸ் பிடித்து மூன்றரை மணிக்கு கொண்டு வந்து விட்டார்கள்.  அவர்கள் சொன்ன பொருட்களை சின்ன பையில் செட் செய்து வைத்துக்கொண்டு,  ரூபாயையும் தேவையான அளவு மட்டும் எடுத்துப் பையில் வைத்து விட்டுப் படுத்துத் தூங்கி....குவதற்குள் காலை வந்து விட்டது!  நான்கு நான்கரை மணிக்கே எழுந்து வழக்கம் என்பதால் தூக்கம் சரியில்லை.  மேலும் என் மூத்தவன் வேறு அந்த நாளில் ஒரு பயிற்சிக்காக அவன் அலுவலகத்திலிருந்து பெங்களூரு அனுப்பப் பட, அவன் சென்னையில் அதிகாலை நான்கு மணிக்கு பெங்களூரு கிளம்பும் நிகழ்ச்சி பாஸ் வாயிலாக என்னையும் பாதித்தது!

அப்புறம் நான் குளித்துக் கொண்டிருந்த நேரம் காஃபி வர,  நான் கொண்டு போயிருந்த புதிய டம்ளர் எடுக்காமல் ஹோட்டலின் கண்ணாடி டம்ளரிலேயே எனக்கு காஃபி வாங்கி வைத்தார் என் மாமா - என் ரூம்மேட்!  ஒருவகையில் அதுவும் நல்லதற்கே என்றானது.  பின்னர் ஆற்றங்கரையில் ஒரு உறவுக்கு அது அவசரத்துக்கு நியமங்கள் செய்ய உதவியது.  காலைச் சிற்றுண்டி அங்கே கடற்கரையில்...   ச்சே...   ஆற்றங்கரையில் என்று சொல்லி இருந்தார்கள்.  

ஆறரை மணிக்குக்கிளம்பவேண்டும் என்று சொல்லி இருந்ததால் நாங்கள் ஆறு இருபதுக்கு கீழே ஆஜர்.  ஆனால் ஒவ்வொருவராக வந்து பேருந்தில் ஏறியும் மூன்று பேர்கள் காணோம்.  அவர்களைத் தேடிக்கொண்டு பாலாஜி அவர்கள் ரூமுக்குச் சென்றார்.  அவர்களையும் அழை(இழு)த்துக்கொண்டு வந்து பஸ் புறப்படும்போது மணி ஏழேகால்.


பாலத்தின் அடித் தூணில் ஓவியம்.  கொஞ்சம் அஜித் ஜாடையாக இல்லை?!!



வழி முழுவதும் எடுத்த போட்டோக்களை நீங்கள் பார்க்கும் வண்ணம் முன்னரே செலவு செய்து விட்டேன்.  


அந்தக் கோட்டையைத் தாண்டி ஆற்றங்கரை மணலில் மெல்ல ஊர்ந்து ஒரு இடத்தில நிறுத்தினார்கள்.  சூழ்ந்துகொண்ட வியாபாரிகளைக் கடந்து முன்னேறினோம்.  கூரை போட்டிருந்த ஓரிடத்தில் செருப்புகளையும் பைகளையும் விடச் சொன்னார்கள்.  பார்த்துக்கொள்ள அவர்கள் குழு ஆள் நின்றுகொண்டார்.

ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு கங்கை நீர் சேகரம் செய்துகொள்ள வேண்டுமானால் இங்கு - திரிவேணி சங்கமத்தில்தான் - எடுத்துக்கொள்ள வேண்டும்.  எனவே இரண்டு பெட்ஜார் கொண்டு போயிருந்தேன்.  அது போதாது என்று சொல்லி, கேன் வாங்கிகொள்ளச் சொன்னார்கள்.  அவரவர்கள் பெரிய கேன்கள் வாங்கிக்கொண்ட பின்னர் ஃபிளைட்டில் அதைத் திரும்ப எடுத்துச் செல்லும் சிரமங்கள் பற்றிச் சொல்லி, சற்றே சிறிய கேன் எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள்.

ரகவாரியாக, சைஸ்வாரியாக கேன்கள் விற்றுக்கொண்டிருந்தவரிடம் இரண்டு சிறிய கேன், ஒன்று இருபது ரூபாய் என்று வாங்கிக்கொண்டேன்.  நான் சேகரிக்கும் கங்கைநீர் மாமாவுக்கும் சேர்த்து!

படகுகள் தயாராகக் காத்திருக்கின்றன.


கரையில் பை, செருப்பு, செல் முதலானவற்றை வைத்தோம்.  பிறகு படகுத்துறை நோக்கி நடந்தோம்.  படகுக்குத் தனியாகக் காசு கொடுக்கவேண்டும்.  170 ரூபாய்.  அதை எடுத்து வைத்துக் கொண்டோம்.  அங்கும் இரண்டு மூண்டு குடும்பங்கள் வர மிகவும் தாமதம் செய்ய, .காத்திருக்க வேண்டியதாயிற்று.  அவர்கள் வழக்கப்படி மொட்டை போட்டுக்கொண்டு வர தாமதம்.  முணுமுணுத்தவர்களை பாலாஜி அடக்கினார். 'அது அவர்கள் நம்பிக்கை...  நாம் என்ன சொல்வது' என்றார்.

எனக்கு ஆற்றில் இறங்கி நீராடவேண்டும் என்கிற பதட்டமும், படகில் செல்லவேண்டும் என்கிற பதட்டமும் இருந்தது.  படகில் எப்போதோ கன்யாகுமரியில் சென்றது!  அதேபோல ஒருமுறை ஆற்றில் முங்கியிருக்கிறேன்- உறவினர் ஒருவரை "வழியனுப்பி வைத்து விட்டு" வரும்பொழுது.  அப்படி முங்கும்பொழுது மூச்சுத் திணறிப்போனேன்.  எனவே இப்போது ஒரு பயம் இருந்தது.

இரண்டு படகுகளில் எங்கள் குழு அமர்ந்தது.  நான் முதலில் ஏறிட்டேன்!


ஒரு படகுக்கு  35 அல்லது 40 பேர்கள்.  ஒன்று கைகளால் துடுப்புப் போடும் படகு.  எங்களுடையது மோட்டார்ப்படகு.  கைகளால் துழாவிய படகு எங்களை விட வேகமாக சென்றது.  

மோட்டாரப்படகு என்பதால் எஞ்சின் ஸ்டார்ட் செய்யும் பையன்.


"போலோ கங்கா மாதா கி....."  கங்கையின் பெருமைகளை சற்று எடுத்துரைத்துவிட்டு இபப்டிக் சொன்னார் படகுத் தலைவர்.

மோட்டாரை இழுத்து ஸ்டார்ட் செய்யும் நேரம் படகின் தலைவர் போன்று இருந்த பெரியவர் "போலோ...   கங்கா மாதா கி...." என்று கூவினார்.  படகே "ஜெய்..." என்று ஆர்ப்பரித்தது.  சிலபலமுறை இதைத் திரும்பித் திரும்பிச் சொன்னார் அவர்.  நாங்களும் ஜெய் போட்டோம்.  படகில் ஏறும்போதும் இறங்கும்போதும் செருப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள் படகைச் சேர்ந்தவர்கள்.  தப்பி செருப்போடு வந்தவர்களை  செருப்பைக் கழட்டி  கையில் வைத்துக்கொள்ளச் சொன்னார்கள்.  தப்பித்தவறிக்கூட கங்கை ஆற்றில் செருப்புப்படாமல் பார்த்துக்கொண்டார்கள்.

படகில் அமர்ந்தபின் படம் எடுக்காவிட்டால் எப்படி?!!




படகுப்பயணம் காலை எட்டரை மணி இளம் வெயிலில் ஆனந்தமாய் இருந்தது.  கொஞ்ச தூரத்திலேயே திரிவேணி சங்கமம்.  அங்கு படகுகளை வரிசையாக நிறுத்தி, கயிற்றால் கட்டி மேடை ஏற்படுத்தி இருந்தார்கள்.  அங்கு சென்று முழுக்குப்போட்டு வரும்படி சொன்னார்கள்.



கையில் கேன்களுடன் இறங்கிச் சென்றோம்.  ஆற்றில் இறங்கும் வரை பயம் இருந்தது.  இறங்கி ஆழம் உணர்ந்து மெதுவாய் நகர்ந்து மூன்று நதிகள் சேரும் இடத்தை அடைந்தோம்.  அங்கு  கங்காமாதாவை வணங்கி நீர் ஆவாஹனம் செய்து வணங்கிக் கொண்டேன்.  பின்னர் முழுகி எழுந்தோம்.. மூன்று முங்காவது போடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.  ஆனால் எழுந்து வரவே மனசில்லாமல் போனது.



படகிலிருந்தே ஃபோட்டோகிராபர்கள் துரத்திக்கொண்டு வந்தவண்ணம் இருந்தார்கள்.  போட்டோ எடுத்து அங்கேயே தந்துவிடுவார்கள்.  முப்பது ரூபாய் ஒரு காபி.  நாம்தான் செல் வைத்திருக்கிறோமே என்று முதலில் நினைத்தேன்.  ஆனால் கங்கையில் முழுகும்பொழுது போட்டோ எடுக்க ஆர்வத்தைத் தூண்டினார்கள்.  வென்றார்கள்.  முங்கிய இடத்திலிருந்து சற்றுத் தள்ளி கங்கை (மட்டும்) வந்து சேரும் இடம் நோக்கி தண்ணீருக்குள்ளேயே நடந்தோம்.  இந்தக் குறிப்புகள் கூட அங்கு இருந்த அந்த போட்டோ வியாபாரிகள்தான் சொன்னார்கள்.  அங்கு சென்றுதான் கேனில் தண்ணீர் எடுக்க வேண்டும். அதுதான் கங்கை நீர்.



மீண்டும் படகுக்கு வந்து மற்றவர்களுக்காகக் காத்திருந்து கரைசேர்ந்தோம். அருகில் ஒரு வியாபாரப்படகு வந்தது.  அதில் கூல்ட்ரிங்க்ஸ், தண்ணீர் பாட்டில் எல்லாம் இருந்தன.  இளம் வியாபாரிகள் படகு படகாய்த் தாவி பூக்கள்,தீபங்களை வியாபாரம் செய்தனர். அவற்றை வாங்கி சிலர் நதியில் விட்டனர்.  இருபது ரூபாய்!  முப்பது ரூபாய்.



நாங்கள் பார்த்த இடத்தில் ஆறு சுத்தமாக இருந்தது.  பயந்தபடி 'எதுவும்' கண்ணுக்கெட்டிய தூரம் வரை மிதக்கவில்லை.  படகிலிருந்து இறங்கும்போது 170 ரூபாய் எல்லோரிடமு கலெக்ட் செய்துகொண்டிருந்தார்கள் பாலாஜி மற்றும் பிரசாந்த்.  எங்கள் குழுத்தலைவர் எங்களிடம் மொத்தமாக வாங்கி பாலாஜியிடம் கொடுத்தார்.  அப்படிக் கொடுத்தது தவிர டிப்ஸ் கொஞ்சம் கேட்டார்கள் படகை ஓட்டியவரும் உடன் இருந்த இளைஞர்களும்.  படகிலிருந்து கரைக்கு மாறும் இடத்தில கைகொடுத்து இறங்க உதவிக் கொண்டிருந்தவர்களிடம் ஆளுக்கு இருபது ரூபாய் எங்கள் குழுவினர் கொடுத்தோம்.

கரைக்குச் சென்றதும் உடை மாற்றி காலைச் சிற்றுண்டி பொங்கல், கொத்ஸு சாப்பிட்டோம். ஒரு காஃபி போனஸ்!  பின்னர் அங்கிருந்த ஒரே ஒரு பண்டிட்டுக்காகக் காத்திருந்து அவர் (இன்னொரு குழுவை முடித்து) வந்ததும் சங்கல்பம், வேணி தானம், ஸ்ராத்தம் முதலானவை முடித்தோம்.  




தம்பதிகளாக வந்திருந்தவர்கள் வேணி தானம் செய்தார்கள்.  இவை எதுவும் செய்யாதவர்கள் டூர் அமைப்பாளர்கள் சொல்படி மெதுவாக அறைக்குக் கிளம்பினார்கள்.  ஸ்ராத்தம் செய்தபோது என் அருகில் இருந்தவர் என் பெயர், என் கோத்திரம் சொல்லி தர்ப்பணம் செய்தபோது புன்னகை வந்தது!  அது அவர் சம்பந்தி பெயராம்!  அவரவர்கள் சமூகத்துக்கு ஏற்றவாறு ஆட்களை வைத்து நியமங்கள் செய்யப்பட்டன. எங்கள் 'வாத்தியார்' சட்டை போட்டிருந்தார்.  "உங்கள் ஊர் சாஸ்திரங்கள், கண்டிஷன்கள் எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்...  இங்கு எல்லாமே வேறு..   இங்கு சட்டமே தனி...." என்றார்.   பலபாஷை பேசினார்.

திரைப்படக் காட்சி அல்ல!  தொலைக்காட்சியும் அல்ல?  என்ன இது?  அடுத்த படத்துக்கு அடுத்த படத்தில் விடை!





"உண்மையில் நீங்கள் ஒன்று, மூன்று ஐந்து ஏழு என்று ஏதாவது ஒரு எண்ணிக்கையில் பிராமணர்களை உட்காரவைத்து போஜனம் செய்விக்க வேண்டும்.  அப்போதுதான் உங்கள் முன்னோர்களுக்கும் புண்ணியம்.  அப்படிச் செய்ய முடியாததால் அதற்கான காசை (ஒருபோஜன எண்ணிக்கைக்கு இருநூறு ரூபாய்) மூன்றோ, ஐந்தோ ஏழோ..  எண்ணிக்கைக்கு ஏற்றவாறு காசு நீங்கள் என்னிடம் தரலாம்"  என்றார்.  எங்கள் குழு தலைக்கு நூறு ரூபாய் என்று தனித்தனியாய் அவரிடம் கொடுத்து கொடுத்து ஆசி வாங்கியது. உடுத்தி இருந்த வேட்டியை விட்டு வந்தால் விசேஷம்தான்.  நாங்கள் செய்யவில்லை.

சிட்டுக்குருவி கண்ணுக்குத் தெரிகிறதா?

இதோ...   பயமில்லாமல் அருகில்...


நாங்கள் இந்த நியமங்கள் செய்த கூரையில் ஏகப்பட்ட சிட்டுக்குருவிகள் கண்ணில் பட்டன.  பறந்து, பறந்து அருகில் வந்து அமர்ந்து அரிசி உண்டு சென்றன.





எங்களுக்காக பாலாஜி காத்திருந்தார்.  அறைக்குத் திரும்பிச் செல்ல ஷேர் ஆட்டோதான் என்றார்.  பஸ்கள் கிளம்பிச் சென்று விட்டனவாம்.  

நாங்கள் பார்க்காமல் விட்ட கோட்டை.  ஏக்க போட்டோ!



 வழியில் நான் ஏற்கெனவே சொன்னபடி அந்தக்கோட்டைக்குள் செல்லவில்லை.  முன்னாலேயே சென்ற அந்தக் குழுவும் உள்ளே செல்லவில்லை என்று பின்னர் தெரிந்தது..  அங்குதான் அட்சய வடத்தின் அடிப்பாகம் மற்றும் சில பெரிய கடவுளர் சிலைகள் இருந்த இடம்.  பின்னர் நாங்கள்  சயன ஆஞ்சநேயர் பார்க்க சென்றோம்.  



இறுக்கமான முகங்களுடன் சில இளைஞர்கள் கதவுகளை அடைத்துக் கொண்டிருந்தனர்.  ஆனாலும் உள்ளே சென்று தரிசனம் செய்து விட்டோம்.  உள்ளே புகைப்படம் எடுக்க முடியவில்லை.  ஒரு சுற்றுச் சுற்றித் திரும்பி வந்து செருப்பை எடுக்க பக்கத்துக்கு கதவுகளை அடைத்துக் கொண்டிருந்த இறுக்க இளைஞர்களிடம் "Bபையா Bபையா என்று கெஞ்சி,  பயனில்லாததால் சுற்றி வந்து செருப்பை எடுத்தோம்.

சயன ஆஞ்சநேயரின் பெருமையை வெங்கட் தளத்தில் படித்திருப்பீர்கள்.  


திரும்பும் வழியில் எதிரே தெரிந்த பாதை...  வண்டி பிடிக்க நடந்து கொண்டிருக்கிறோம்!


வண்டி பிடித்ததும் அங்கிருந்து தெரிந்த காட்சி...


இந்த மாதிரி இரண்டு மூன்று இடங்களில் கண்ணில் பட்டது.  என்ன இது?  பறவைகளுக்கு உணவோ?! தங்கும் வசதியோ?


வழியில் பழ வியாபாரம்...

ஹோட்டலுக்குத் திரும்பியபோது கீழ்த் தளத்திலேயே அமரவைத்து மதிய உணவு கொடுத்தனர்.  மணி மூன்று இருக்கும் என்று நினைவு. 

சாப்பிடும் இடம் தயாராகிறது.  டீஷர்ட்டுடன் இருப்பது பிரஷாந்த்.

வெண்டைக்காய் சாம்பார், கீரை, வடை, பாயசம், உப்பில்லாத ( ! ) ரசம், மோர்.    மதியம் மூன்று மணி நெருக்கம் என்பதால் பசி...   ருசி அறியாது!சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்றோம்.

திரும்பி வரும் வழியில் இன்னும் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன்.  அவற்றை எங்கே நுழைப்பது என்று தெரியவில்லை.  பார்ப்போம்!

மதியம் .மொட்டை மாடியில் உடைகள் காய வைப்பதில் குழுவினர்களுக்குள் சிறு சலசலப்பு...   "சாத்வீகமான" வார்த்தைப் பரிமாற்றங்கள்..  மாலை நாம் விரும்பும் இடம் எங்காவது சென்று வரலாம்.  அவர்கள் ஷேர் ஆட்டோ போகவர ஏற்பாடு செய்து கொடுப்பார்கள் என்று சொன்னார்கள்.  இந்த இடத்தில் பயணம் ஏற்பாடு செய்தவர்கள் பற்றிச் சொல்ல வேண்டும்.  எங்களுக்கு அட்சயவடம் அங்கு பார்க்கவேண்டும் என்று தெரியாது.  அவர்களும் சொல்லவில்லை.  மறைத்து விட்டார்கள்.  அது மட்டுமின்றி அங்கிருந்து தங்கியிருந்த இடத்துக்கு எங்கள் செலவில் ஷேர் ஆட்டோ ஏற்பாடு செய்துகொண்டு வரவழைத்தார்கள்.  மாலையும் ஊர் சுற்றிப்பார்க்க 'நீங்களே காசு கொடுத்து ஊர் சுற்றிப்பார்த்துக் கொள்ளுங்கள்...  சகாய விலையில் ஏற்பாடு செய்து தருகிறேன், இடங்களும் நாங்களே அவர்களிடம்  சொல்லி அனுப்புகிறோம்' என்று சொன்னது நியாயமாகப் படவில்லை.

=============================================================================================================================


"என்னை ஃபோட்டோ  எடுக்க ஆசைப்பட்டே இல்லை?  இதோ என் கடைசி நிமிடங்கள்...  ஃபோட்டோ எடுத்துக்கொள்..." என்று என் வீட்டுக்குள் வந்து அமர்ந்திருந்த செண்பகப்பறவை.    அங்கு வந்து ஓரிரு மணி நேரங்களில் உயிரிழந்தது.  பறவைகள், விலங்குகள் போன்றவை தான் உயிர் விடப்போகிறோம் என்று தெரிந்ததும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாம். ஃபேஸ்புக்கில் கோமதி அக்கா இதைப் பற்றி பல தகவல்கள் அளித்திருந்தார்.




அப்படிதான் அது இங்கு வந்திருக்க வேண்டும் என்றார் கீதா ரெங்கன்.  அவரும் இதைக் காப்பாற்ற பெங்களூருவிலிருந்து எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார்.  பயனில்லாமல்போனது.  "அது உங்கள் கிட்ட ஏதோ சேதி சொல்ல வந்திருக்கு" என்றார் கீதா.  என்ன சேதியாயிருக்கும்? 





இறந்தபின் அதைச் சோதித்ததில் அதற்கு எங்கும் அடிபடவில்லை.  காயம் எதுவும் இல்லை. 

======================================================================================================

இந்த வார சுகி சிவம் பதில்...  




================================================================================================


ஞாயிறு மாலை ஒரு முக்கியப் பயணம்.  கவலைகளுக்கு நடுவில் வானம் காட்டிய காட்சிகள் கண்ணைக் கவர்ந்தன.  இதற்கு முன் அது காட்டிய சில அற்புதக்காட்சிகளை படம் எடுக்க முடியாமல் போக, இதையாவது படம்பிடிப்போம் என்று எடுத்த படம். சென்னை வாசிகள் யாராவது இது எந்த இடம் என்று சொல்லமுடியுமா?  வானம் எனும் மெகா திரையில் ஓடிக்கொண்டிருந்த படத்தின் காட்சி போலும்!




======================================================================================================

Justice delayed is Justice denied என்கிற வார்த்ததைதான் கேள்விப்பட்டிருக்கிறேன். திரு எம் எம் இஸ்மாயில் சொல்லி இருக்கும் இந்த வார்த்தை இப்போதுதான் கேட்கிறேன்!



நான் பேனாவில் சும்மா எழுதிப் பார்ப்பதும், புதிய பேனாவில் முதலில் எழுதிப் பார்ப்பதும் "ஓம்" என்கிற வார்த்தையைதான்!  நீங்கள்?


=========================================================================================

இவர்தான் ....      அன்று 'சம்பவம்' நடப்பதற்கு முதல் நாள் எடுத்த புகைப்படம். 




=================================================================================================

101 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இனி வரப்போகும் மற்றும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு வணக்கமும் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும் வந்திருக்கும் ஸ்ரீராமுக்கும், இனி வரப்போகும் அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா. நல்வரவும், வணக்கமும்

      நீக்கு
  2. காலை வணக்கம். இடுகையைப் படித்துவிட்டேன். பிறகு வருகிறேன்.

    ப்ரக்யாராஜில் நிறைய பார்க்கவில்லை போல் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  3. 20 வருஷங்களுக்கு முன்னர் நாங்க போனப்போ இத்தனை படம் எடுக்கும் நபர்கள் எல்லாம் இல்லை. அதோடு திரிவேணி சங்கமத்தில் தான் வேணி தானமும் செய்தோம். ஆற்றின் உள்ளே அங்கேயே படகில் உட்கார வைத்து எல்லா நியமங்களையும் செய்து வேணி தானம் செய்து அது சுழித்துக் கொண்டு ஓடும் கங்கை+யமுனை+சரஸ்வதி நதி நீரில் உள்ளே போய் மறைவதைக் காட்டினார் சாஸ்திரிகள்! அங்கேயே பித்ருக்களுக்கான காரியங்களையும் செய்தோம். கரைக்கு வந்து உடை மாற்றிக்கொண்டு காமகோடி பீடம் கட்டி இருந்த கோயில், கோட்டைக்குள் அக்ஷய வடம், பார்த்த பின்னர் ஆஞ்சநேயரைப் பார்த்தோமானு நினைவில் இல்லை. ஆனால் ஆனந்த பவன் போனோம். அங்கே போய் நேரு தூங்கிய, சாப்பிட்ட இடங்களை எல்லாம் பார்த்துட்டு சிவ மடம் திரும்பி அங்கே மதிய உணவு. காலை உணவெல்லாம் எங்களுக்கு ஒரு நாளும் கொடுக்கவில்லை ஆனால் நாங்க குழுவாகப் போகவும் இல்லை. தனியாகத் தான் போனோம்/போகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது திரிவேணி சங்கமத்தில் யாரும் அப்படிச் செய்யவில்லை - நாங்கள் பார்த்து. அங்கு தடுப்பு போல படகுகளைக் கட்டி நிறுத்தியிருக்கிறார்கள். தனியாய் செல்வதில் பல சௌகர்யங்கள் இருக்கின்றன. நம் இஷ்டத்துக்கு செய்யலாம், செல்லலாம். அதே சமயம் நமக்கு எங்கு செல்லவேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்படி என்றெல்லாம் விவரம் தெரிந்திருக்க வேண்டும்.

      நீக்கு
    2. போய்ப் பார்க்கணும். ஒருவேளை சமீபகால அரசியல் மாற்றங்கள் காரணமாகத் தடை செய்யப்பட்டிருக்கலாம். கங்கை+யமுனை+சரஸ்வதி சங்கமத்தில் சுழித்துக் கொண்டு ஓடும் சங்கமத்தில் தான் வேணி தானம் செய்தோம்! நன்றாக நினைவில் இருக்கிறது. சந்தேகத்தை மாமாவிடமும் கேட்டுக் கொண்டேன். அவரும் ஆமோதித்தார்.

      நீக்கு
    3. இல்லை. நான் பார்த்து அங்கு யாருமே செய்யவில்லை.

      நீக்கு
    4. //காலை உணவெல்லாம் எங்களுக்கு ஒரு நாளும் கொடுக்கவில்லை // - இந்த மாதிரி குழுக்களில், மதியம் 3 மணி வரைல சாப்பிடாம இருந்தால் வயசானவங்க மயக்கம் கியக்கம் போட்டுட்டாங்கன்னா என்னாறது. அதுனால ஒருவேளை காலை உணவைக் கொடுத்திருக்கலாம். வரும் நாட்களில் தெரியும், இவங்க எப்போதும் 8 மணிக்கு டிபன் கொடுக்கிறாங்களா என்று...

      நீக்கு
  4. அதோடு உள்ளூர், வெளியூர் சுற்றிப் பார்க்கவும், வாராணசியில் இருந்து பிரயாகை சென்று வர, கயா சென்று வருவது எல்லாமும் நாங்கள் தொடர்பு கொண்டு ஏற்பாடுகள் செய்திருந்த சுவாமிமலை கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் ஏற்பாடு. உள்ளூரில் சுற்றிப்பார்க்க ஆட்டோ ஏற்பாடு செய்து தந்ததோடு ஒரு உள்ளூர் ஆசாமியைத் துணைக்கும் அனுப்பி வைத்தார். அதே போல் பிரயாகை செல்ல அவங்க வானை ஏற்பாடு செய்து கொடுத்தார். அங்கெல்லாம் சமைக்க, உதவிகள் செய்ய ஒரு தனியான ஆள் எங்கலுடன் வந்தார். கயாவிலும் அப்படியே! இனி போனால் எப்படியோ தெரியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கோட்டை பார்க்கவில்லையென்று அப்போதே தோன்றினாலும் அதற்குள்தான் அட்சயவடம் இருக்கிறது என்பது ஊர் சென்று திரும்பிய பின் தான் தெரிந்தது. போகுமிடம் பற்றி முன்னதாகவே ஒரு தெளிவான ஐடியா இருந்தால் நாமே கூட சில விஷயங்கள் முடிவு செய்யலாம். என்னிடம் அப்போது அது இருக்கவில்லை. காசியிலும் அட்சய வடம் பார்த்த கதை வினோதம்! மொத்தத்தில் குழு சரியில்லை. இனி ஒருமுறை செல்லும்பட்சத்தில் நமக்கே சில ஐடியாக்கள் கிடைக்கும்.

      நீக்கு
  5. செம்போத்து அடிபட்டு விழுந்ததுமே எஸ்.பி.சி.ஏ.வுக்குத் தொலைபேசி இருந்தால் யாரானும் வந்திருப்பாங்களோ என்னமோ! அல்லது வனத்துறையில் யாரையேனும் நாடி இருக்கலாம். ஆனால் அது உங்க வீட்டில் வந்து உயிர் விடணும்னு இருந்திருக்கு போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம்போத்து அடிபட்டதும் ஒரு எண்ணுக்கு தொலைபேசிய போது அதை அப்படியே ஒரு பெட்டியில் வைத்து வண்டலூர் கொண்டு வரச் சொன்னார்கள். ஆனால் அது ஒன்றிரண்டு மணி நேரமே உயிர் வாழ்ந்தது.

      நீக்கு
  6. ஈஸ்வரா...
    செம்போத்து நல்லகதியை அடையட்டும்...

    பதிலளிநீக்கு
  7. படங்களும் அனுபவமும் அருமை
    உடன் வந்த உணர்வு
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  8. படங்களும், விளக்கங்களும் நன்று ஜி

    பதிலளிநீக்கு
  9. சாதம் போடும்வரை காத்திருந்து படம் எடுத்தீர்கள். சாம்பார் வந்ததும், பசியில் படம் எடுப்பது மறந்துபோயிற்றா?

    அக்பர் கோட்டையைப் பார்க்காமல் வந்துவிட்டீர்களே.... ஒருவேளை வேணி தர்ப்பணம் போன்றவற்றால் அளவுக்கு அதிகமான நேரமாகிவிட்டதோ? நாங்கள் செல்லும் குழுவில் பெரும்பாலும் 10 மணிக்கு சாப்பாடு, இரவு 7 மணிக்கு சாப்பாடு, 4:30க்கும் காலை 6 மணிக்கும் காபி/டீ/பால். நீங்க யமுனா நதிக்கரையிலேயே டிபன் சாப்பிட்டுட்டீங்க.

    மாலை உங்களையே எங்காவது போகச்சொன்னாங்களா? எங்களை, வேணி மாதவன் கோவிலுக்கு நடத்தியே கூட்டிச் சென்றனர். எங்கள் குழுவில், வைணவக் கோவில்களை விடாமல் கூட்டிச்சென்றுவிடுவார்கள். நாந்தான் மதியம் சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுக்கும் நேரத்தில் கொண்டுவந்திருந்த கங்கை ஜலத்தை, பக்கத்துத் தெருவிலேயே சொம்பில் வைத்து, அதை மூடித்தரச் சொன்னேன். அங்க லஸ்ஸி சாப்பிட்டீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. சாம்பார் போடும் முன்னரே படம் எடுத்து விட்டு சாப்பிடத் தொடங்கி விட்டேன். மணி மூன்றைத் தாண்டி விட்டது. இரண்டரை மணிக்குமேல் சாப்பிட உட்கார்ந்தும் கூட, பஸ்ஸில் வந்தவர்கள், ஷேர் ஆட்டோவில் வந்தவர்கள் எல்லோரும் அறைக்குச் சென்று சிரமபரிகாரம் செய்து திரும்ப தாமதமாகிவிட்டது. அவர்களும் ஓரளவு அந்த ஹால் நிறைந்ததும்தான் பரிமாறத் தொடங்கினார்கள்.

      உண்மையில் சங்கல்பம், தர்ப்பணத்துக்கு முன் சாப்பிடவே கூடாதுதான். ஆனால் அங்கு குழுவில் அதெல்லாம் சரிவரவில்லை. அதுதான் அந்த பண்டிட் சொல்லி விட்டாரே... இங்கு எல்லாமே தனி ரூல்தான் என்று! அதைஎடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

      ஆம், மாலை வேறு இடங்களுக்கு செல்லச் சொன்னார்கள். அதைதான் சொல்லி இருக்கிறேனே... எங்கள் காசில் அவர்கள் பேசிவிட வெனிமாதவர் கோவில் எல்லாம் சென்று வந்தோம். நாம் போகும் குழுவைப்பொறுத்தது வைணவக்கோவில்களை தவற விடாமல் அழைத்துப் போவது.

      லஸ்ஸி இந்த ஊரில் சாப்பிடவில்லை. அது அன்கேஸ்பெஷல் என்றே எனக்கு சென்னை வந்ததும்தான் தெரியும்! ஹிஹிஹி....

      நீக்கு
  10. பழ வியாபாரம் என்று சொல்றீங்க...எனக்கு இலையைத்தவிர வேறு ஒன்றும் தெரியலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திராட்சை மாதிரி ஏதோ பழம் தெரிந்துதானே போட்டோ எடுத்தேன். ஏதோ இருக்கிறது பாருங்கள்.

      நீக்கு
    2. பெங்களூரிலும் இதுபோல பார்த்து ஏமாந்திருக்கேன். ஏதோ இலை (வித்தியாசமான சிறிய சிறிய கொத்துகொத்தான இலைகள்) வியாபாரம் செய்யறாங்க. மருதாணி அல்லது வேற ஏதேனும் வாசனை இலையா இருக்குமோ?

      நீக்கு
    3. ஜூம் செய்து பார்த்தால் தெளிவான குழப்பமாக இருக்கிறது. பஸ்ஸிலிருந்து திருப்பத்தில் அவசரமாக எடுத்த புகைப்படம்!

      நீக்கு
  11. Happy morning all. toomuch weather change here. Meendum naalai paarkkalaam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு
  12. செம்போத்து பறவையா? எனக்கு 'திருத்தாய் செம்போத்தே திருமாமகள் தன் கணவன்' என்ற பெரிய திருமொழி பாசுரம் நினைவுக்கு வருகிறது.... எதற்கும் ஒரு காரணம் இருக்கும். உங்கள் கையால் தண்ணீர் பெறவேண்டியதிருந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? எனக்கு பாசுரம் எல்லாம் தெரியாது. ஃப்ளூ ஜுரம்தான் தெரியும்!! ஸாரி, ஜோக்! எனக்கும் அதற்கு என் கையால் கடைசித்தண்ணீர் விடும் வாய்ப்பு கிட்டியதற்கு ஏதோ காரணம் இருந்தது என்று தோன்றியது.

      நீக்கு
    2. அந்தப் பாசுரத்தின் தமிழ் எனக்குப் பிடிக்கும். பல்லி சத்தம் போடுவதற்கு தமிழ் 'கொட்டுவது' கிளிக்கு 'சொல்லுவது, கோழி 'கூவுவது', குயில் 'கூவுவது'. ஆனால் இந்த செம்போத்துப் பறவையை, "கடவுளை நீ திருத்தாய்' (இங்க வருமாறு வற்புறுத்துவாய்" என்று சொல்கிறார். செம்போத்து சிறப்புள்ள பறவைகளுள் ஒன்று. பருந்து, கிளி, செம்போத்து, காக்கை, குயில், கோழி...போன்றவை தமிழ்ப்பாடல்களில் காணப்படுகின்றன. ஒருவேளை இவைகள்தாம் அந்தக் காலத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தனவோ?

      நீக்கு
    3. சில புதியதகவல்களுடன்செம்போத்து, பாசுரங்கள் எல்லாம் அருமை நெ.த சார்! நீங்கள் சொன்ன மாதிரி ஸ்ரீராமிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பதற்காகத்தான் செம்போத்து அங்கே வந்து சேர்ந்ததோ என்னவோ?

      நல்ல கதிக்குப்போய்ச் சேரட்டும்!

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. விரிவான பயண அனுபவங்கள், படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    சிட்டுக்குருவியை பார்த்தது மகிழ்ச்சி.
    பிரம்பு கூடை உயரத்தில் தொங்குவது இங்கு பூஜை சாமான்கள் கிடைக்கும் என்று எங்கிருந்து பார்த்தாலும் தெரிவதற்கோ!

    செம்போத்து பறவை வெயிலின் கொடுமையால் உயிர்துறந்து இருக்கும் என்று நினைக்கிறேன். கோடை காலத்தில் வெம்மை தாங்காமல் பறவைகள் இறப்பதை போன முறை கோடையில் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

    நம் வீட்டில் வந்து இறந்து போகிறது என்றால் மனது கஷ்டபடும் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயண அனுபவங்கள் படங்களை ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.

      //பிரம்பு கூடை உயரத்தில் தொங்குவது இங்கு பூஜை சாமான்கள் கிடைக்கும் என்று எங்கிருந்து பார்த்தாலும் தெரிவதற்கோ!//

      இல்லை. இது கடைகள் இல்லாத சாலையோரங்களில் மிக உயரத்தில் இருக்கிறது. அதில் ஏதோ சணல் போல வஸ்து கண்ணுக்குத் தெரிவதால் பறவைகளுக்கு சஹாயமென்றே தோன்றியது.

      செம்போத்து மனதை வருத்தியது.

      நீக்கு
    2. பறவை கூடு என்றால் மகிழ்ச்சியே!

      நீக்கு
    3. ஆம், அங்கு சென்றவர்கள் சொல்வார்களே.. அதற்காகத்தான் காத்திருக்கிர்றேன்.

      நீக்கு
  15. அருமையான அனுபவம். தப்பித்தவறிக்கூட கங்கை ஆற்றில் செருப்பு விழாமல் பார்த்துக்கொண்டார்கள்...இதுதான் நம் பெருமை.

    பதிலளிநீக்கு
  16. //வானம் எனும் மெகா திரையில் ஓடிக்கொண்டிருந்த படத்தின் காட்சி போலும்!//

    காட்சி நன்றாக இருக்கிறது.

    //அன்று 'சம்பவம்' நடப்பதற்கு முதல் நாள் எடுத்த புகைப்படம்.//

    இந்த படம் எடுக்க காரணம்? முகம் காட்டாமல் முதுகு காட்டுவதை தவறுதலாக எடுத்து விட்டீர்களா?
    சம்பவத்தை வீட்டில் எல்லோரிடமும் சொன்னபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்து இருக்குமில்லையா?
    பயந்து இருப்பார்கள், கடவுள் காப்பாற்றினார் என்று மகிழ்ச்சியும் அடைந்து கடவுளுக்கு நன்றி சொல்லி இருப்பார்கள் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இந்த படம் எடுக்க காரணம்? //

      மிக யதேச்சையாக எடுக்கப்பட்ட படம். ஒருவேளை அதுதான் தவறோ!! அவருடைய பாஸ் அவர்கள் பெண்ணோடு சேலத்தில் மாசக்கணக்கில் இருந்துகொண்டிருந்தார்கள். அழைத்து அழைத்துப் பார்த்து வெறுத்துப் போயிருந்தார். இப்போ இது கேள்விப்பட்டதும் ஓடிவந்துவிட்டார்!

      நீக்கு
    2. நடப்பது எல்லாம் நன்மைக்கே ! என்று தெரிகிறது

      நீக்கு
    3. தீமையிலும் நன்மை ..

      நீக்கு
  17. திரிவேணி சங்கம தரிசனம்...
    மனம் அமைதியில் ஆழ்ந்தது..

    படங்கள் காணக் கிடைக்காதவை...

    எங்கும் நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  18. நிறைய எழுதியிருக்கிறீர்கள். ஏகப்பட்ட கருத்துக்கள் வந்துவிட்டன. கிரிக்கெட்டின் இடையே, நானும் மெல்ல வருகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் ஸார்... மெதுவா வாங்க.. மழை இல்லையாமா அங்கு? ஆட்டம் உண்டா?

      நீக்கு
    2. Cloudy in Nottingham. Rain stopped for the time being! You never know about English weather!

      ஒருவேளை பெருமழை தொடராவிட்டால், 20-ஓவர் கேமிற்கு சான்ஸ் உண்டோ.. சொல்வதற்கில்லை.

      நீக்கு
    3. ஏகாந்தன் சார்... 20 ஓவர் கேமுக்குப் பதில், இருவருக்கும் தலா 1 பாயிண்ட் கொடுத்துவிடலாம். இனி 4 போட்டிகளுக்கு மேல் மழையினால் ஆட்டம் தடை ஏற்பட்டால் போட்டி நடத்தும் நாடு, ஒவ்வொரு மேட்சுக்கும் இவ்வளவு பணம் கொடுக்கணும் என்று சட்டமும் போட்டுவிடலாம்.

      நீக்கு
    4. ஆட்டம் கைவிடப்பட்டது! நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் கிரிக்கெட் திருவிழாவை வடிவமைக்கத் தெரியாத, திட்டமிடத்தெரியாத புத்திசாலிகள்!

      நீக்கு
  19. //எங்களுக்காக பாலாஜி காத்திருந்தார். அறைக்குத் திரும்பிச் செல்ல ஷேர் ஆட்டோதான் என்றார். பஸ்கள் கிளம்பிச் சென்று விட்டனவாம். // எல்லோருக்காகவும் காத்திருந்த பேருந்துகள், நீங்களும் மற்றவர்களுக்காகக் காத்திருந்தீர்கள். அவை இப்போது உங்களை விட்டுக் கிளம்பிச் சென்றிருக்கின்றன. சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் எப்படி அனுமதித்தார்? நீங்கள் எல்லோரும் ஏன் பேசாமல் இருந்தீர்கள்? !!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.நாங்கள் சங்கல்பம், ஸ்ராத்தம் செய்யும்போதே, அது தேவையில்லாத க்ரூப் கிளம்பி பஸ்ஸில் சென்று விட, நாங்கள் தாமதமாகத்தான் கிளம்பினோம். ஒருங்கிணைப்பாளரின் ஏற்பாடுதான் அது. பஸ் அவர்களை விட்டு விட்டு எங்களுக்காக வந்திருக்கும் என்று நான் நினைத்தேன். அப்படி(யும்) இல்லை.

      நீக்கு
    2. நல்லவேளை ஸ்ரீராம்.... முன்பே சென்றவர்களுக்கு முதலில் பந்தியை முடித்துவிடவில்லை....... பொதுவா இந்த மாதிரி சிலர் 'சங்கல்பம்/ச்ராத்தம்' தேவையில்லை என்று சொன்னால், அவங்களை கோட்டை மற்ற இடங்களை சுற்றிப் பாருங்கள், இல்லைனா, ஆட்டோல போய்க்கொள்ளுங்கள் என்று சொல்வதுதான் முறை. ஒருவேளை பெரும்பாலானவர்கள் இதெல்லாம் செய்யவில்லையோ?

      நீக்கு
    3. செய்தவர்கள், செய்யாதவர்கள், வேணி தானம் மட்டும் செய்தவர்கள் என்று அந்தப்பக்கமும் அதிக கூட்டம்! என்ன செய்வது... அவ்வளவுதான்! விவரமான டிராவல்ஸ்.

      நீக்கு
  20. கோமதி அரசு அம்மா அவர்களின் தளமா...?

    வெங்கட் நாகராஜ் ஜி அவர்களின் தளமா...?

    அட...! எங்க(ள்) blog...!!!

    பதிலளிநீக்கு
  21. மூன்று முங்காவது போடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் எழுந்து வரவே மனசில்லாமல் போனது.//இது தான் கங்கையின் மகிமை. இந்த வாழ் நாளில் நான் கங்கை போவேனா
    என்று தெரியாது. நீங்கள் அழைத்துச் சென்று விட்டீர்கள்.
    படங்கள் ஊர்வலமாக எல்லாக் காட்சிகளையும் கொடுத்தன.
    சில இடங்கள் பார்க்காமல் விட்டது வருத்தமாக இருக்கிறது.
    அழைத்துச் செல்பவர்களுக்கு இந்த அலட்சியம் கூடாது.
    கங்கை நீர் மீதி இருக்கிறதா.

    அந்த செம்போத்து தி.ஜா கதைகளில் நிறைய வரும். எத்தனை அழகான பறவை. ஏதொபூர்வ
    ஜன்ம வாசனையாக உங்கள் வீட்டுக்கு வந்து மோக்ஷம் அடைந்திருக்கிறது.
    பாவம் உங்களுக்கு அதைப் பார்த்து மன்ம் மிக வருந்தி இருக்கும். ஏதோ சரணாகதி வேண்டுவது போல அது கிடக்கிறது.

    சம்பவம் நினைத்தாலே பதறுகிறது. பத்திரமாக இருக்கப்
    பிரார்த்தனைகள்.
    இன்னும் நிறையப் படங்களோடு அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... நீங்கதான் போட்டோக்கள் நிறைய வேண்டும் என்று கேட்டதாய் நினைவு! அதனால் சந்தோஷப்பட்டு பாராட்டியதோடு இனியும் நிறைய போட்டோஸ் வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். பார்க்கிறேன்.

      //இந்த வாழ் நாளில் நான் கங்கை போவேனா
      என்று தெரியாது.//

      சீக்கிரம் உங்களுக்கு வாய்ப்பு அமையட்டும் அம்மா.

      //கங்கை நீர் மீதி இருக்கிறதா.//

      இருக்கிறது அம்மா.. சிறிய சொம்புகளாகப் போட்டு எடுத்து வந்தேன்!

      நன்றி அம்மா.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    காசிப்பயணத்தின் நோக்கத்தை, (திரிவேணி சங்கமத்தில், நீராடி, பிதுர் காரியங்களை நல்லபடியாக முடித்து, கங்கையில் ஜலம் எடுத்தக்கொண்டு என) நல்லபடியாக முடித்துக்கொண்டு வந்து விட்டீர்கள். நல்ல விபரங்களோடு அழகான பதிவாக தந்திருக்கிறீர்கள். ஆனாலும், உங்களையெல்லாம் அவர்களே ஏதாவது ஏற்பாடு செய்து முக்கியமான இடங்களுக்காவது, கூட்டிச் சென்று காண்பித்திருக்கலாம். அவ்வளவு தூரம் பயணம் செய்யும் போது, பார்க்க வேண்டிய இடங்களை பார்க்காமல் தவற விட்டால் மனதிற்கு ஒரு மாதிரியாக இருக்கும். முதலிலேயே அதற்கெல்லாம் எனச் சொல்லி பணம் வாங்கவில்லையோ? இல்லை அழைத்துச் செல்லும் போது எந்தந்த இடங்கள் என சொல்லித்தான் அழைத்துச் சென்றார்களா? நாங்கள் இந்த மாதிரி குழுவாகவெல்லாம் எங்கும் பயணப்பட்டதில்லை. அதனால் எனக்கு அனுபவங்கள் ஏதுமில்லை.

    படகு பயணங்கள். படங்கள் என நன்றாக வந்திருக்கின்றன மிகவும் அழகான கங்கையை தரிசிக்கும் வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது. எல்லாப் படங்களும் மிகவும் அழகாக உள்ளது.

    சிட்டுக்குருவியும் அழகாக உள்ளது. முன்பு நீண்ட நாட்களாக இந்த இனத்தை பார்க்க முடியவில்லை. அதன் சின்ன வயிற்றுக்கு அங்கிருக்கும் உணவுகளே போதுமென்று அங்கேயே இத்தனை நாட்கள் பல வருடங்களாக இந்த குருவிகள் இருந்திருக்கிறது போலும். ரொம்ப காலமாக இந்த இனத்தை காணாமல் போக்கிய பாவத்திற்கு பல கதைகள் படித்தோம். ஆனால் நடுவில் நிறைய நாள் கண்களில் தென்படாதிருந்த இந்த குருவி இனம் இப்போது கொஞ்ச நாட்களாக இங்கேயும்,பார்க்க முடிகிறது.

    தங்கள் வீடு தேடி வந்து தன் இறுதி நேரத்தை கழித்த அந்த பறவை.. பறவையானலும் ஒரு உயிர்தானே .! அதை பார்த்த தங்களுகெல்லாம் மிக பாவமாக இருந்திருக்கும். படிக்கும் எனக்கே கஸ்டமாக இருந்தது. என்ன செய்வது? அதன் விதி. அடுத்தப்பிறவியில் அதற்கு அனைத்தும் நலமாக கிடைக்கட்டும்.

    சுகிசிவம் பதில்கள் நன்றாக உள்ளன.
    வானம் தன் நிறுத்தினால் செய்து காட்டும் ஜாலங்களும் அருமை.அதற்கு தாங்கள் கொடுத்துள்ள வரிகளையும் ரசித்தேன். பேனா வரிகளும் நன்றாக உள்ளது.
    எதிர்பாராத சம்பவங்கள் நடந்து விட்டால், அது நம் நினைவுகளிலிருந்து எளிதில் விலக மறுக்கிறது உண்மைதான்.கதம்ப பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /காசிப்பயணத்தின் நோக்கத்தை, (திரிவேணி சங்கமத்தில், நீராடி, பிதுர் காரியங்களை நல்லபடியாக முடித்து, கங்கையில் ஜலம் எடுத்தக்கொண்டு என) நல்லபடியாக முடித்துக்கொண்டு வந்து விட்டீர்கள்// - இல்லை இல்லை கமலா ஹரிஹரன் மேடம்.... காசிப்பயண நோக்கம் கயா ச்ராத்தம். இது ப்ரக்யாராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது, அங்கு வேணி தானம் என்ற ப்ரொசீஜர்.

      நீக்கு
    2. வணக்கம் நெ.தமிழன் சகோதரரே.

      தங்கள் பதிலில் விபரம் அறிந்து கொண்டேன். எனக்கு இந்த அலஹாபாத், புதுப்பெயரான ப்ரக்யாராஜ் இந்த குழப்பங்களே இன்னமும் தெளிவாகவில்லை. இந்த வேணிதானம் பற்றி பல பதிவுகளில் படித்து ஒரளவு தெளிவாக்கி கொண்டேன். காசிப்பயண நோக்கம் கயா ச்ராத்தம்.. புரிந்து கொண்டேன். தங்களின் விளக்கத்திற்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வாங்க கமலா அக்கா...

      //அவ்வளவு தூரம் பயணம் செய்யும் போது, பார்க்க வேண்டிய இடங்களை பார்க்காமல் தவற விட்டால் மனதிற்கு ஒரு மாதிரியாக இருக்கும்//

      அதற்குதான் முன்னரே பெருமாள் என்னைப் பழக்கி விட்டாரே....!!!

      பயண திட்டங்கள் முன்னால் சொல்லும்போது அலஹாபாத், நைமிசாரண்யம், அயோத்தி ராமஜென்மபூமி, காசி, கயா, புத்தகயா என்று சொன்னார்கள். மற்றபடி ரொம்ப நுண்ணியமாக எல்லாம் சொல்லவில்லை.

      படங்கள் பாராட்டுக்கு நன்றி. கொஞ்சம் ஓவர்டோசாகப்போய்விட்டதோ என்று தோன்றியது. சிட்டுக்குருவியின் மகிழ்ச்சியில் அனைவரும் பங்குபெறுவோம்!

      சுகிசிவம், செம்போத்து, வானம் படம் என்று எல்லாவற்றையும் கவர் செய்து கமெண்ட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  23. பயண விபரங்கள், பட நுழைப்புகள் நன்றாக இருக்கின்றன.

    வைதீக கார்யங்கள் செய்வதற்குமுன் (குறிப்பாக அதற்காகவே போயிருக்கையில்), சாப்பாட்டில் கவனம் செலுத்துவது சரியில்லை. வருஷம் முழுக்க சாப்பிட்டுக்கொண்டுதானே இருக்கிறோம், வேளாவேளைக்கு. ஒரு சாப்பாடு தவிர்க்கப்பட்டால்தான் என்ன ! Anyway, அவரவர் மனோதர்மம்..

    சிட்டுக்குருவி ப்ரயாக்ராஜில் தரிசனம் தந்திருக்கிறது. படம் பார்ப்பதே சுகமாக இருக்கிறது. நீங்கள் காரியம் செய்த இடத்தில் அரிசி பொறுக்கித் தின்றது இன்னும் விசேஷம்.
    அடுத்த பறவை சோகத்தைத் தந்துவிட்டதே. கீதா ஜூனியர் சொன்னதில் அர்த்தம் இருக்கக்கூடும்..

    சுகி சில விஷயங்களை ஆழமாகச் சொல்கிறார்.

    வானத்தையும் கொஞ்சம் கவனித்து எடுத்த படம் நன்றாக இருக்கிறது. அவ்வப்போது வானம் ஏதேதோ கானம் படிக்கிறது. நாம்தான் கேட்பதில்லை. மேலேயே பார்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சாப்பாட்டில் கவனம் செலுத்துவது சரியில்லை.// - ஏகாந்தன் சார்...நான் அனுமானிக்கிறது... இந்த பயணக் குழுக்கள், அன்று என்ன என்ன செய்யப்போகிறோம், எவ்வளவு நேரம் ஆகலாம், ஒருவேளை நேரமானால் என்ன என்ன மிஸ் ஆக வாய்ப்பு இருக்கு, எத்தனை மணிக்கு உணவு என்றெல்லாம் விலாவாரியாகச் சொல்வதில்லை. 'சரி வாங்க..திரிவேணி சங்கமத்துக்கு போகலாம்...இதை இதை எடுத்துக்கோங்க' என்று மட்டும் சொல்லுவதால், அவங்க 'சாப்பாடு' தரும்போது டபக் என்று சாப்பிட்டுவிடத்தான் தோன்றும். ஆனா சரியா நடத்தறவங்க, 'முடியாதவங்க இப்போ டிபன் சாப்பிடலாம்...இல்லை.. 3 மணி வரை பட்டினியாக இருக்க முடியும்னு நினைக்கறவங்க சாப்பிடாம ச்ராத்தம்லாம் முடிங்க. எமெர்ஜென்சிக்கு வேணும்னா கொஞ்சம் வைத்திருக்கோம்' என்று சொல்லுவாங்க. இவங்க அதைச் செய்யலை போலிருக்கு.

      நீக்கு
    2. இந்த டிராவல்ஸ் பற்றி ரொம்பக்குறை சொல்ல முடியாது. பாராட்டவும் முடியாது. பயணக்கட்டுரை எழுத விஷயங்கள் சேகரித்தபோதுதானேஇழந்தவை, அதாவது பார்க்க விட்டவை தெரிந்தன.

      நீக்கு
    3. // ஒரு சாப்பாடு தவிர்க்கப்பட்டால்தான் என்ன ! //

      செய்திருக்கலாம். அப்போது தோன்றவில்லை. கன்னாபின்னா பயண நேரங்களும் காரணங்களாயிருந்திருக்கலாம். குற்ற உணர்வுதான்.

      //பயண விபரங்கள், பட நுழைப்புகள் நன்றாக இருக்கின்றன. /

      நன்றி ஏகாந்தன் ஸார்.

      ஏனோ சுகி சிவம் விஷயம் பற்றி யாருமே பேசவில்லை. பயணக்கட்டுரையும் படங்களுமே ஆக்கிரமித்து விட்டதோ? அது மட்டுமே போட்டால் போதுமோ?

      நீக்கு
    4. நீங்கள் சொல்வது இந்த மாதிரி நெடுந்தூர டூர்களில் பலருடன் சேர்ந்துபோகையில் ஏற்படக்கூடிய சிரமங்கள். சில தவிர்க்கக்கூடியவை. சில முடியாதவை. அவை ஒருபுறம்.

      காரியத்துக்கு முன் சாப்பிடக்கூடாது எனப் புரிந்துகொண்டு, ஒருவர் அவ்வாறான வைராக்யம் கொண்டிருந்தால், இந்த சாப்பாடை மிஸ் செய்தால் இனி 7 மணிக்குத்தான் என்றாலும், அவர் சாப்பிடாமல் தான் இருப்பார். அவருக்கு சரியாக தர்ப்பணம் செய்த நிறைவிருக்கும். தர்ப்பணத்திற்குப்பின் முறையான சாப்பாடு கிடைக்காவிட்டால், வயிறு பசிக்கத்தான் செய்யும். சோதிப்பதுபோல் நிறையவே பசிக்கும். வேறுவழியில்லாததால், பழமோ, பாலோ, காப்பி, டீயோ குடித்துக் காலத்தை ஓட்டிவிடுவார். நான் அத்தகையோரைப் பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன்.

      அதற்காக எல்லோரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என சொல்ல, நான் யாருமில்லை. ’மத்தியானம் ஒருமணிக்கு மாத்திரை சாப்பிடவேண்டும். சாப்பிட்டபின் தான், டாக்டர் மாத்திரை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்’ என்பார்கள் சிலர். ஏதேதோ பயங்கள், கஷ்டங்கள் இருக்கும்தான்.

      எவரால் முடிகிறதோ அவர்கள், வெறும் வயிறோடு தர்ப்பணம் செய்யவேண்டும். அதுவே சரி.

      நீக்கு
    5. ஏகந்தன் அண்ணா கீதா ஜூனியர் என்று சொன்னதுக்கு ஹையோ சந்தோஷம் பொயிங்கிடுச்சே!!!ஹா ஹா ஹா ஹா நன்றி நன்றி நன்றி!!!

      கீதா

      நீக்கு
    6. தி/கீதா, அவர் எப்போதுமே என்னை கீதா சீனியர் என்றும் உங்களை கீதா ஜூனியர் என்றும் சொல்லுவார். இந்தப் பதிவில் மட்டும் சொல்லலை. பல முறைகள் சொல்லி இருக்கார். நீங்க கவனிக்கலை போல! :)))))

      நீக்கு
  24. சுத்தமான நீரும் ஆறும்...பார்க்கவே ஆசையாக உள்ளது ...

    சிட்டுக்குருவி படங்கள் மிக மகிழ்ச்சி ..ஆனால் செண்பகப்பறவை சில விசயங்களில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அனு பிரேம். சிட்டுக்குருவிகள் சத்தத்துடன் அந்த இடமே ரம்யமாக இருந்தது.

      நீக்கு
  25. ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்.

    முதலில் என் கண்ணில் பட்டவை சிட்டுக் குருவிகள். சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு! அங்கு அவற்றிற்கு தானியங்கள் கிடைப்பதால் கூட்டமாக வாழ்கின்றன போலும். அழகா இருக்கு ஸ்ரீராம். அதன் கலர் காம்பினேஷனே என்ன அழகு இல்லையா...ரசித்தேன் ஸ்ரீராம்

    கூடவே செம்போத்தின் கடைசி நிமிடங்கள் உங்கள் வீட்டின் முன்னால். விலங்குகள் பறவைகல் எல்லாமே தனது கடைசி நிமிடத்தில் எதுவும் உண்ணாது தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்.

    நான் சொன்னதை இங்கு சொன்னமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      புகைப்படத்தில் பார்க்கும்போதே சிட்டுக்குருவிகள் இப்படிக் கவர்கிறதே... நேரில் பார்த்துக்கொண்டிருந்த - அதுவும் கூட்டம் கூட்டமாய் , அதன் சத்தங்களுடன் - எனக்கு எப்படி இருந்திருக்கும்?

      நீக்கு
  26. கங்கையா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ!கடல் போன்று இருக்கிறதே! தண்ணீரின் ஆழம் நன்றாகவே தெரிகிறது.

    கண்டிப்பாக ஸ்ரீராம் ஆற்றில் இறங்கிவிட்டால் அவ்வளவுதான் விட்டு வரவே மனது இருக்காது. அத்தனை சுகம்...

    முதலில் தயங்கிய உங்களுக்கும் பின்னர் பாருங்கள் உங்களையே மயக்கிவிட்டாள்! கங்கை! ரசிச்சுருக்கீங்க...

    இனி எங்கு அஆறு கண்டாலும், அருவி கண்டாலும் ஒரு முக்கு போட்டுருங்க...ஆனா குளித்துவிட்டு போகணும்!!!!!!!!!!!!!!!!!!!!!

    சரி இம்புட்டு தண்ணிய ஏக்கத்தோடு பார்த்திருப்பீங்களே!!! அப்படியே நைசா அடில ஒரு ஓட்டை போட்டு சென்னைக்கு கொஞ்சம் டைவெர்ட் பண்ணிட்டு வர வேண்டியதுதானே!!!!!!!!!!!ஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கிருக்கும் ஆறுகளையும் ஏப்ரலிலும் அங்கு தளும்பி நின்ற தண்ணீரையும் அதனால் எழுந்த பொறாமையையும் பற்றி பதிவில் குறிப்பிடவேண்டும் என்று எண்ணி இருந்தேன். எழுதும்போது மறந்து விட்டது!

      நீக்கு
  27. படங்கள் எல்லாம் அழகு! அதுவும் கங்கையின் பிரவாகம் மனதுள் நிறைந்து!!!

    நீதிபதி இஸ்மாயில் சொன்னவை 90% ற்கும் மேல் உண்மை. கண் கூடாகக் கண்ட ஒன்று.

    டூர் ஆர்கனைஸர்ஸ் இன்னும் பெட்டராக சேவை செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதென்னா ஒரு க்ரூப் விட்டு, மற்றவர்கள் பஸ்ஸில் என்று செக் செய்ய வேண்டாமோ?! இல்லை எல்லாம் கரெக்டாகச் சொல்லியிருக்க வேண்டாமோ.

    ஆனாலும் நல்ல அனுபவங்கள் தான் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல அனுபவங்கள்தான். அடுத்த முறை இன்னும் கவனமாக இருக்கவேண்டும் என்று பாடம் சொல்கிறதே...

      நீக்கு
  28. ஸ்ரீராம், பாலத்தின் அடி ஓவியம் எனக்கு டக்கென்று பாலகுமாரன் போன்று தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராம் படங்கள் போடுங்க. அதுவும் நதி, பறவைகள் வித்தியாசமான காட்சிகள் இடங்கள் என்னெல்லாம் க்ளிக்கினீங்களோ போடுங்க!! ரசிக்க நாங்க இருக்கோம்ல...!!! உங்கள் ரசிகர்களுக்காகவேனும்!!! போடுங்க...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்த படங்களை வெளியிடத்தானே வேண்டும்? அதற்காகத்தானே எடுத்திருக்கிறேன்... ஆனாலும் நிறைய இருக்கிறதோ என்கிற சம்சயம்!

      நீக்கு
  30. சுகி சிவம் அவர்களின் இந்தக் கருத்தை கன்னாபினாவென்று வழி மொழிகிறேன். நான் நினைப்பதும் அதுவே! நான் அப்படியே பெர்ஃபெக்ட் என்று சொல்லவில்லை ஆனால் எண்ண ஓட்டம் அதுவே. சென்ற வாரக் கருத்தை கொஞ்சம் ஏற்க கடினமாக இருந்தது. ஆனால் இந்த வாரக் கருத்து நான் டிட்டோ செய்வேன். அருமையான கருத்து....எனது தனிப்பட்ட எண்ணம் இது!
    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுகி சிவம் சொல்றது மனிதர்களுக்கு மாதிரி தெரியலை. இது ப்ராக்டிகலா?

      சும்மா கன்னா பின்னான்னு ஆதரிக்கலாமா?

      மனிதர்கள் எத்தனையோ முயற்சி எடுப்போம். அதில் தவறென்ன? எல்லாம் கடவுள் பாத்துப்பார், அவரே தக்க சமயத்தில் மாப்பிள்ளை கொண்டுவருவார், அவரே திருமண ஏற்பாடுகளைப் பார்த்துப்பார் என்று முழு நம்பிக்கையோடு வாளா இருக்கமுடியுமா?

      இருந்தாலும் சுகி சிவம் சொன்னது என் மனதிலும் தோன்றும். அந்த லெவலை அடைய எத்தனை ஜென்மங்களோ

      நீக்கு
    2. ஜோசியம் , ஜாதகத்தை நம்புகிறவர்களில் சிலர் எல்லாம் தானாக நடக்கும் என்றும் நம்புவார்கள். எங்க வீட்டிலேயே உதாரணங்கள் உண்டு. ஆனால் சுகி சிவம் சொல்லி இருக்கும் கஜ பூஜை, கோ பூஜை விஷயம் முற்றிலும் வேறு. ஆத்மார்த்தமாக ஸ்ரீவித்யையில் முழுகி இருப்பவர்களுக்கு வேண்டுமானால் அப்படி நடக்கலாம். முற்றும் துறந்த சித்தர்கள், பழுத்த ஞானிகளுக்கு அப்படி நடக்கலாம். மற்றபடி எனக்குத் தெரிந்து பல மடங்களில் கோ பூஜை, கஜபூஜைக்கென அங்கேயே வளர்க்கப்படும் பசுமாட்டையும், யானையையும் கொண்டு வந்து வழிபாடு நடத்தித் தான் பார்த்திருக்கேன். :)))))

      நீக்கு
    3. அப்பாடி... சுகி சிவம் கருத்து பற்றி வெளியிட்டதற்கு முதல் பலன்!

      நீக்கு
    4. நெல்லை நான் அந்த பூஜை பற்றி எல்லாம் சொல்லவில்லை....என் நம்பிக்கை இறைவனை நம்புவது. அதான் சொல்லிட்டேனே என் தனிப்பட்டக் கருத்து என்று...

      கண்டிப்பாக முயற்சிகள் செய்ய வேண்டும். இறைவனின் மீது முழு நம்பிக்கையுடன் என்பதே...மனம் சஞ்சலப்படும் விஷயங்களுக்குப் போகாமல். இதுவும் என் தனிப்பட்டக் கருத்து. மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இது என் தனிப்பட்டக் கருத்தைத்தான் சொல்கிறேன். மற்றவர்களின் நம்பிக்கையை சுட்டிக் காட்டும் எண்ணத்தில் அல்ல. எல்லாமே அவரவர் நம்பிக்கை என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு.

      கீதா

      நீக்கு
    5. தி/கீதா, இறைவனை நம்புவது வேறு. சுகி சிவம் சொன்னபடி நடக்கவேண்டும் என்று சொல்வது வேறு. நானும் இறைவனை முழுக்க முழுக்க நம்புகிறேன். அதுக்காக நான் கஜபூஜை, கோபூஜை செய்யும்போதெல்லாம் யானையும், பசுவும் தானாக வரணும்னு எதிர்பார்க்க முடியுமா? அதைத் தான் ஶ்ரீவித்யையில் முழுகி இருக்கும் தன்னை மறந்த ஞானிகளுக்கு மட்டும் அப்படி நடக்கும் என்றேன். சித்தர்களுக்கும் நடக்கலாம். மற்றபடி நமக்கெல்லாம் அதிசயம் என்பது நாம் எதையாவது நடந்தே ஆகணும்னு விரும்பிப் பிரார்த்திக்கையில் நாம் விரும்பும் வண்ணம் அந்தச் செயல்/காரியம்/நிகழ்வு அமைந்தால் அதுவே நமக்குப் பெரிய விஷயம்!

      நீக்கு
  31. அந்தப் பகுதி ஒன்னு உங்க ஏரியா அல்லது ஓஎம் ஆர்..???

    எதுவும் க்ளூ கண்ணுக்குத் தெரியலையே..நானும் பெரிதாக்கிப் பார்த்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  32. அனைத்தும் சிறப்பாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி.

    உங்கள் காசிப்பயணம் அனுபவப்பாடங்கள்.

    நீதிபதி இஸ்மாயில் சொன்னது நீங்கள் சொல்லியிருப்பது போல் வித்தியசமான கோணத்திலான கருத்து மற்றும் அவரும் நீதிபதியாக இருந்திருப்பதால் இருக்கலாம்.

    சுகிசிவம் கருத்து ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய கருத்து.

    படங்கள் அனைத்தும் அருமை. அந்தப் படம் பாலத்தின் அடியில் இருக்கும் படம் ஏதோ சாமியார் போன்று இருக்கிறாரே.

    நீங்கள் கடைசியில் சொல்லியிருக்கும் பறவை செம்போத்துப் பறவை எங்கள் ஊர்ப்பக்கங்களில் காணலாம். உங்கள் வீட்டு வாயிலில் வந்து உயிர் நீத்திருக்கிறது. பாவம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  33. படங்கள் தகவல்கள் சிறப்பு. காலையில் படித்தாலும் வருகையை பதிவு செய்யவில்லை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!