புதன், 6 நவம்பர், 2019

புதன் 191106:: ஆழ்துளைக் கிணறும், அரசும், மீடியாவும் !


கீதா சாம்பசிவம் :

ஆழ்துளைக்கிணற்றில் அடிக்கடி குழந்தைகள் விழுவதும், அதற்கு அரசையும் இஸ்ரோவையும் குற்றம் சொல்லுவது சரியா?





# ஆழ்துளைக் கிணறுகள் பயனின்றிக் கிடந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாணை முன்னரே பிறப்பிக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அவை பின்பற்றப் படுவதில்லை என்று நன்றாகவே தெரிகிறது. 
அண்மை நிகழ்ச்சியில் உயிரிழந்த பிள்ளையின் வீட்டாரே தோண்டி சரியாக மூடத் தவறியதாகச் சொல்கிறார்கள். மாபெரும் துரதிருஷ்டம்.

& முன்பு அரசியல்வாதிகள் மட்டும் அரசியல் பேசி வாழ்ந்தார்கள். இப்போ மீடியாக்கள் பெருத்துவிட்டதால், மக்கள் எல்லோரும் அரசியல் பேசத் தொடங்கிவிட்டார்கள். வெறும் பேச்சு வேலைக்கு ஆகாது என்பதை மக்கள் உணரவேண்டும். 

இதை நேரடி ஒளிபரப்புச் செய்ததும் சரியானதா? மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதாக இல்லையா?
சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சிகளும் தங்கள் தொண்டர்களை இத்தகைய ஆழ்துளைக்கிணறுகள் திறந்திருந்தால் அவற்றை மூடுவது என ஓர் இயக்கம் ஆரம்பித்து நடத்தினால் நல்லது எனத் தோன்றுகிறது! இல்லையா?


# எல்லாம் அரசு மட்டுமே செய்யவியலாது. மக்களும் பொறுப்புடனும் புத்தியுடனும் செயல்பட வேண்டும். 
இந்த நிகழ்ச்சியை ஊரறியச் செய்த ஊடகங்களின் செயல்முறை சலிப்பூட்டியது.  காண்போரைக் கட்டிப் போடுவது மட்டுமே குறியாக இருக்கிறார்கள். உயிருக்குப் போராடும் சிறுவனைக் காட்சிப் பொருளாக்கும் அவலம் எரிச்சலூட்டுகிறது. நீங்கள் சொல்வது போல ஒரு இயக்கம் நடத்தினால் நல்லதுதான். 
இவ்வகை இடர்களை எதிர்கொள்வதில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை அறிந்திருக்கவில்லை என்பதும் ஒரு சோகம். 

& மீடியாக்கள் செய்தது / செய்வது தவறுதான். இதையே தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்கள் என்றால், இந்த வகை செய்திகள், ஒளிபரப்புகள் எதிர்காலத்தில் மக்கள் கவனத்தை ஈர்க்காது. 

இப்போது வரும் தமிழ்ப்படங்களில் பாடல்கள் புரியும்படி இருக்கிறதா? அவற்றில் அர்த்தம் உள்ளதா? எனக்கென்னமோ ஒரே இரைச்சலாகத் தெரிகிறது!

# படப்பாடல்கள் பலவும் வெறும் இரைச்சலும் கொட்டுமாக இருக்கின்றன.

& என்னத்தையோ பண்ணி காசு சம்பாதிப்போம் என்றுதான் படம் எடுப்பவர்கள் நினைக்கிறார்கள். 


ஸ்ரீராம் இப்போதைய தமிழ்ப்படங்களின் பாடல்களைப் பகிராமல் பழைய பாடல்களையே பகிர்வது ஏன்?


 # ஶ்ரீ விடைதரட்டும்.

ஶ்ரீ விடைதரட்டும்.

* யாரு அந்த ஸ்ரீ? 
    
 கதையம்சம் நீதிகளைச் சொல்லுவதாக அமையாமல் எதிரிடையாகவே ஏன் சொல்லுகிறார்கள்?

# வசூல் மட்டும் குறியாக நட்சத்திர பலத்தை நம்பித் தயாரிக்கப்படும் படங்களில் நாயகனை எல்லாம் தெரிந்த எம்டனாகக் காட்டுவது ஒரு வியாதி.

ஒரு பக்கம் வாயுள்ள பிள்ளை பிழைக்கும்! என்று சொல்லுகிறோம். இன்னொரு பக்கம் "எம்புட்டு வாய்!" என்கிறோம். அப்போ என்னதான் செய்வது?

# நான் வாயுள்ள பிள்ளைகள் ஆதரவாளன். மரியாதைக் குறைவாக இல்லாதவரையில்,  பிள்ளைகள் வாயாடுவது தவிர்க்க வேண்டியதில்லை.


இப்போதைய பெண்கள்/பிள்ளைகளில் நிறைய முதிர்கன்னர்கள்/முதிர் கன்னிகள் இருந்தாலும் நான் பார்த்தவரையில் பெற்றோர் இன்னமும் இந்த நக்ஷத்திரம் வேண்டாம். அந்த நக்ஷத்திரம் சரியா வராதுனு சொல்லுகிறார்களே! அது சரியா? 

# ஜாதகம் பொருத்தம் எல்லாம் நம்பிக்கை சார்ந்த விஷயம். விவாதித்துப் பயனில்லை. 


முற்காலங்களில் ஜாதகப் பொருத்தமே பார்க்க மட்டார்கள் என என் பெற்றோர் சொல்லிக் கேட்டிருக்கேன். அப்படி இருந்தும் இன்னமும் ஜாதகத்தை நம்பிப் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் கல்யாணம் செய்து வைக்காமல் இருப்பது சரியா?

ஜாதகம் அல்லது ஜோஸ்ய நிபுணரின் கருத்து என்பது எல்லாம் மற்ற கல்வி,சம்பாத்தியம்,சொத்து, வசிக்கும் நாடு இவை பொறுத்து செய்யப்படும் தேர்வுகளை நியாயப்படுத்தவே உபயோகமாகிறது.

# இந்தக் காலத்தில் வயது ஏறினாலும் மணமாகாத பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. அதில் எவ்வளவு பெற்றோர் மறுப்பு காரணமாக இருக்குமோ தெரியவில்லை. அது சரியில்லை என்பது சரிதான்.


பெண்ணும் பிள்ளைக்கும் ஒருவருக்கொருவரைப் பிடித்து விட்டால் கல்யாணம் செய்து கொள்வதில் தவறு ஏதேனும் தெரியவில்லை. ஆனால் இன்னமும் பெரும்பாலான பெற்றோர் இதை ஏற்கவில்லை, இது சரியா?

# பெண், பையன் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போனால் அதை மறுத்தால்  பயனின்றிப் போகும்.

& "ஆணும் பெண்ணும் ஒப்புக்கொண்டால் அம்மா அப்பா யாரு? இது ஆண்டு அறுபத்தாறு .... " என்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு வந்த சினிமா (மோ சு பி?) பாடல் உள்ளதே! 

அதிரா :

1.வாய் இருந்தால் வங்காளம் போகலாம்[எதையும் சாதிக்கலாம்] என்பது உண்மையோ?

# நன்றாக வாய்பேசும் திறன் ஒரு வரம். சாதனைக்குப் பேருதவி.

& உண்மைதான். 'வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்னும் தெனாலிராமன் கதை நினைவுக்கு வருகிறது. 
                           
2.எந்தவித கெட்ட பழக்கமுமில்லாதவர்கள், நல்லவர்களாகவே இருப்பவர்கள் அகாலமரணமடைவது ஏன்?


# பிறப்பு, திருமணம், இறப்பு இவை லாஜிக்குகளை மீறிய விஷயம். இவற்றில் ஏன் இப்படி என்று கேட்கவியலாது.

3.முயற்சி செய்தால் எதையும் அடையலாம் என்பது உண்மையோ?


# முயற்சி வெற்றி தரும் என்ற உத்தரவாதம் இல்லை எனினும் முயற்சி இல்லாத வெற்றி அசாத்தியம். அமைந்தால் குருட்டு அதிருஷ்டம்.
   
4.பாத்திரமறிஞ்சு பிச்சை இடு.. என்பதன் அர்த்தம் என்ன?


# செய்யும் உதவி விழலுக்கு இறைத்த நீர் ஆகக் கூடாது என்பதுதான்.

& நடிகர்கள் படத்திற்கு ஒப்பந்தம் ஆவதற்கு முன்பு, தயாரிப்பாளரிடம் தனக்கு என்ன கதா'பாத்திரம்' என்று கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். இங்கே பாத்திரம் என்றால், வேடம் என்று பொருள். கர்ணனிடம் பிட்சை கேட்டு வந்த இந்திரன், ஏழை அந்தணன் வேடம் ஏற்று கர்ணனின் கவச குண்டலங்களை வாங்கிச் சென்றான் என்று கதை சொல்வார்கள். அந்த நேரத்தில், கர்ணன் - இது இந்திரன் போடும் கபட வேடம் என்று அறிந்திருந்தால், தன்னைக் காக்கும் கவச குண்டலங்களை இழந்திருக்கமாட்டான். கர்ணன் மற்றும் மஹாபலி சக்ரவர்த்தி வாக்குக் கொடுக்கு முன்பாக(வாமன அவதாரம் ) தன்னிடம் வேடம் போடுபவர் யார் எந்த (கதா) பாத்திரம் என்று அறிந்து பிச்சை இட ஒப்புக்கொண்டிருந்தால் தப்பித்திருப்பார்கள். 
                       
5.பேய்க்கு ஏன் கால்கள் இருக்காது என்கிறார்கள்?


# அது மட்டுமா சொல்கிறார்கள் ?

(கால்கள் இல்லாததால்தான் அப்படிச் சொல்கிறார்கள்.)

& 'கால்கள் இல்லாமல், வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா?' என்று பாடிய கவிஞரைப் போல, நானும் சொல்வதென்றால், 

'புட் (foot) இல்லாமல் பேய் இரவில் 
புளியமரத்தில் தொங்குவதில்லையா !' 
என்று பாட வேண்டும்.  

சின்னக் குழந்தைகளை அந்தக் காலத்துப் பெண்கள், வீட்டில் தனியே படுக்கவைக்கமாட்டார்கள். பக்கத்தில் ஒரு பழைய செருப்பு, விளக்குமாறு போன்ற பொருட்களைப் போட்டு வைப்பார்கள். அப்போ அந்தக் குழந்தையை காத்து, கருப்பு, பேய், பிசாசு, பூதம் போன்றவை அண்டாது என்று கூறுவர். பேய்க்குக் கால் இருந்திருந்தால், அந்தப் பழைய செருப்பை எடுத்துக்கொண்டு ஓடியிருக்கும்! 


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

ஒற்றை ஆடைதான் அணிவது என்ற முடிவெடுத்த பின் அந்த அரையாடையுடனேயே லண்டன் வட்ட மேஜை மாநாட்டிற்கும் சென்ற காந்தி, எந்தெந்த இடத்திற்கு செல்கிறாரோ அந்தந்த இடத்திற்கு ஏற்றார்போல டைப்பு டைப்பாக உடையை மாற்றும் மோடி... ஒரு ஓப்பீடு ப்ளீஸ்.

# அவர் (காந்தி) அரசியல்வாதியல்ல. 

உலகத்தொடு ஓட்ட ஒழுகல் பல கற்றும்...
என்ற அடிப்படையில் ஒரு பெரிய குடியரசின் பிரதமர் என்ற வகையில் மோடி இந்த விஷயத்தில் செய்வது ஏற்புடையதே.

& ஒற்றை ஆடைதான் அணிவது என்று மோடி எதுவும் முடிவெடுக்கவில்லையே! மோடியை விடுங்கள்; காந்தி காலத்தில் வாழ்ந்த நேரு கூட, ஒற்றை ஆடை அணிந்து வலம் வரவில்லையே. 

===================================



காடராக்ட் அறுவை(!)  4 


சிங்கம்மா கிளப் ஹவுஸ் நோக்கி செல்வதைப் பார்த்தவுடன், வேக வேகமாக அபார்ட்மெண்ட் டெரஸ் பகுதிக்கு விரைந்து அங்கிருந்து கிளப் ஹவுசை நோட்டமிட்டேன். 


நல்லவேளை - நான் பயந்ததுபோல ஒன்றும் இல்லை. சிங்கம்மா, கிளப் ஹவுசுக்குள் குழந்தையுடன் சென்று, சிங்கப்பாவிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, அவர்களின் அபார்ட்மெண்ட் நோக்கி சென்றார். அப்புறம் ஏதும் நிகழவில்லை. சிம்ம சொப்பனத்திலிருந்து தப்பினேன்! 


கண் அறுவை சிகிச்சைக்கு முன்பு, இரத்தப் பரிசோதனையும், இதயப் பரிசோதனையும் (வேறொரு இடத்தில்) செய்துகொள்ளவேண்டும் என்று சொன்னார்கள். (கண் பரிசோதனை மையத்தில் அதற்கான கருவிகள் இல்லை)  இ + இ பரிசோதனை முடிவுகள் தெரிந்ததும், கண்புரை அறுவைக்கு நாள் குறித்துவிடலாம் என்றும் கண் டாக்டர் கூறியிருந்தார். மேலும் ஒரு சோதனையாக, கண்களில் உப்புத் தண்ணீரை ஒரு ஊசி மூலம் ஸ்ப்ரே செய்து அது தொண்டையில் இறங்குதா என்று டெஸ்ட் செய்து, திருப்திப் பட்டுக்கொண்டார்கள். 


இதயத்தைப் பரிசோதித்த டாக்டர் அலுவலகத்தில் ஒருவர், 'கண்புரை அறுவை சிகிச்சை என்றால், நான் சொல்லுகின்ற இடத்தில் உள்ள டாக்டரைப் போய்ப் பாருங்க. மிகவும் திறமையான டாக்டர்' என்றார். 


'அதுவும் சரி, அறுவைக்கு முன்பு ஒரு செகண்ட் ஒபினியன் பெற்றதுபோலவும் இருக்கும்' என்று நான் அபிப்பிராயப்பட்டேன். 


ஆனால், சோதனைக்குச் சென்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாளும்,' போப்பா ஐ டோன்ட் கேர் ' கண் நிலையத்திலிருந்து  எஸ் எம் எஸ் அனுப்பி, என்னைத் துன்புறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். " சார், எப்போ வரீங்க? கத்தியோடு காத்திருக்கிறோம்" 
ஒவ்வொரு நாளைக்கும் நான் " இன்றைக்கு ஜலதோஷம், பிரதோஷம், சகவாசம்" என்று ஏதேதோ சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன். 

பிறகு, ஒரு வாரக்கடைசி சனிக்கிழமையன்று, புதிய ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். 


அங்கே மீண்டும் கண்பார்வைப் பரிசோதனைகள். 


எல்லா கண் ஆஸ்பத்திரியிலும், ஒரு மேஜை மீது ஒரு பயாஸ்கோப் இருக்கும். அதன்வழியே பார்க்கச் சொல்வார்கள். நாம் கொஞ்சம் யோசனை செய்தால், ஒரு ஆயா அல்லது ஆயான், நம் தலையைப் பிடித்து அழுத்தி, தவடையை ஒரு பள்ளத்தில் இருத்தி, பயாஸ்கோப் பார்க்க வைப்பார்கள்.


சென்னை துறைமுகத்தில் 60 களில் தூரத்தில் தரைதட்டி நின்ற ஸ்டமடிஸ் கப்பலைப் பார்ப்பது போல ஒரு படம் தெரியும். கப்பல் ஏன் சிவப்பு நிறமாக இருக்கு என்று நாம் யோசிப்பதற்குள் அந்த பரிசோதனை முடிந்துவிடும். அப்புறம் இன்னொரு பயாஸ்கோப் மெஷினில் படம் பார்க்கச் சொல்வார்கள். அதில் என்ன படம் என்று ஆவலோடு பார்க்க முற்படுகையில் நம் கண்ணில் ஒரு மெஷின் உஃப் என்று காற்று ஊதும். அந்த நேரத்தில் நாம் கண்ணை மூடிக்கொள்வோம். அதே நேரத்தில் உள்ளே ஒரு காமிரா நம் கண்ணை படம் எடுக்கும். அந்த நேரத்தில் கண்ணை மூடிக்கொள்ளக்கூடாதாம்.

திரும்பத் திரும்ப காற்று ஊதி, படம் எடுப்பார்கள். நான் விடாமல், ஒவ்வொருமுறையும் காற்று அடிக்கும்போது கண்ணை மூடிக்கொண்டுவிட்டேன்.

சின்ன வயதில், பள்ளியில் நண்பர்கள், நம்மிடம் வந்து ஒருகேள்வி கேட்பார்கள். " நீ எனக்கு பயப்படுவியா இல்லாங்காட்டி சாமிக்கு பயப்படுவியா?"

" சாமிக்குதான். "

உடனே கேள்வி கேட்டவன், தன் கை விரலை நம் கண்ணை நோக்கி கொண்டுவருவான். அல்லது நம் கண் மீது 'ஃபூ' என்று காற்று ஊதுவான். நாம் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டால், " ஹா ஹா ஹா! நீ எனக்கு பயந்துட்டியே !" என்று கேலி செய்வான்.

இந்த கண் பரிசோதனை எந்திரத்துக்குள்ளும்  அப்படி ஒரு நண்பன் உட்கார்ந்து என்னை ஒவ்வொருமுறையும் கேலி செய்ததுபோல இருந்தது!

எப்படியோ அட்ஜஸ்ட் செய்து ஒருவழியாக அந்த சோதனையை செய்துமுடித்தார்கள்.

அடுத்து எழுத்துகள் படிக்கும் சோதனை.


தலையில் 'பல் ஆடி நோக்கி' (அப்பாடி தமிழ் வளர்ச்சிக்கு  என்னுடைய சிறிய பங்கை செலுத்திவிட்டேன்.) ஒன்றைப் பொருத்தி, " எதிரில் இருக்கும் திரையில் உள்ள எழுத்துகளைப் படிங்க " என்றார் கண் மருத்துவர். ப ஆ நோ வைப் பொருத்திய உதவியாளர், தவறுதலாக, என் கண்களுக்கு நேரே ஆடி எதுவுமில்லாத இல்லாத ஆ(வ)ணி வருமாறு அமைத்திருந்ததால், எதுவுமே தெரியவில்லை.

" திரை எங்கே இருக்கு? " என்று கேட்டு, கண் மருத்துவரைக் கலவரப்படுத்தாமல், நான் " E , F     P,  T O Z, L P E D, P E C F O, E D F C Z P, F E L O P Z D,   "  என்று வேக வேகமாக சொன்னேன்.

அப்பொழுதுதான் என் கண்கள் மறைக்கப்பட்ட நிலையில் இருப்பதை மருத்துவர் பார்த்தார். " அட! கண்ணால் பார்க்காமலேயே எப்படி எல்லாவற்றையும் சரியாகப் படித்தீர்கள்?" என்று கேட்டார்.

" ஹி ஹீ ! 'கொலுவுக்கு யார் வீட்டுக்குப் போனாலும் கொண்டைக்கடலை சுண்டல்' என்பது போல, கடந்த ஒருமாதகாலமாக எந்த ஆஸ்பத்திரிக்குப் போனாலும் இதே எழுத்துகள்தான். படித்துப் படித்து நெட்டுரு ஆயிடுச்சு " என்றேன்.

============================================

அடுத்த வாரம் பார்ப்போம் 

============================================

104 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்.

    ஆழ்துளைக் கிணறு பிரச்சனையும் சரி எல்லாப் பிரச்சனைகளுமே இங்கு ஊதிப் பேசப்படுகிறதே தவிர தீர்வுகள் நல்ல தீர்வுகளுக்கு முனைவதில்லை. மக்களுக்கு விழிப்புணர்வு, பொறுப்புணர்ச்சி என்று மாறாத வரையில் ஒன்றும் பயனில்லை. எல்லாவற்றிற்கும் அரசை சாடிக் கொண்டிருப்பது மக்களின் பொறுப்பற்ற தன்மையைச் சொல்லுகிறது மீடியாக்களூம் தான். டிஆர்பி ரேட்டில் சிக்கியவை.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. காட்டராக்ட் தொடரை முந்தைய பகுதியும் வாசித்துவிட்டு வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தனி மனிதன் செய்கிற தவறுக்கெல்லாம் இயக்கம் ஆரம்பித்து நேரத்தைப் பாழடிக்க வேண்டுமா...

    தவறு செய்தவனைக் ஈவு இரக்கமின்றி தண்டிக்காதவரை தீர்வு கிடையாது...

    சமுதாயத்துக்குப் பயப்படுவது சாமானியனுக்கும் அற்றுப் போனது..

    ஆனாலும்

    ஊரிலிருந்த நல்ல தண்ணீர் கிணறுகளை எல்லாம் மூடிய போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இந்த சமுதாயம் தானே!...

    ஒவ்வொருவரது கடமையிலிருந்தும்
    அவரவரை வெளியேற்றியது தான் திராவிடங்களின் வெற்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூற்றுக்கு நூறு உண்மை.

      நீக்கு
    2. நீங்க சரியாப் புரிஞ்சுக்கலை துரை. நான் இயக்கம் ஆரம்பிக்கச் சொன்னது ஆழ்துளைக்கிணறுகள், தெருவில் பாதாளச் சாக்கடை மூடிகள் போன்றவற்றை மக்கள் அரசு உதவியின்றி தாமாக முன்வந்து மூடுவதற்குச் சொன்னேன். ஜல்லிக்கட்டுக்கு, அதுக்கு இதுக்குனெல்லாம் போராடியவர்கள் இதற்குப் போராடக்கூடாதா? உயிர் போகும் விஷயம் ஆச்சே!

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைக்கு நன்றி! எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்போம்! 🙏

      நீக்கு
  5. ஆ... எனக்குப் பயந்துட்டியே!...

    என்ன ஒரு ஆனந்தமான நாட்கள்!..

    அதிலும்
    அந்த ரெட்டை ஜடைகள் வந்து மின்னல் மாதிரி விரலை நீட்டும்போது!..

    கௌதம் ஜி அவர்களை இந்த மாதிரி ரொம்பவும் மிரட்டியிருப்பார்களோ!...

    /// நாரதா.. இன்று உனக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா!..

    சிவ..சிவா!..///

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் எல்லாம் ரெட்டை ஜடை, ஒத்தை ஜடை எல்லோருமே எதிர் வரிசையில்தான். (ஹூம்! பெருமூச்சு!) பக்கத்தில் இருக்கும் மூக்குக் குத்திய பரமசிவம் மற்றும் ஒற்றை சடை கார்த்திகேயன் இருவரும்தான் கண் அருகே வந்து பயமுறுத்துவார்கள்.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ரொம்ப நாட்கள் கழிச்சு வந்திருக்கும் தி/கீதாவுக்குச் சிறப்பு வரவேற்பு. பிரச்னைகள் தீர்ந்து தொடர்ந்து இணையத்தில் வலம் வரவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. கேள்விகள் அனைத்திற்கும் பொறுமையாகவும் நன்றாகவும் பதில் அளித்ததற்கு நன்றி. ஆனால் விளக்குமாறு, பழைய செருப்பு ஆகியவற்றைப் போட்டு நம்ம பேயாரை வர விடாமல் பண்ணிட்டீங்க! பயந்துட்டு ஓடிட்டார் போல!

    பதிலளிநீக்கு
  8. //அந்த நேரத்தில், கர்ணன் - இது இந்திரன் போடும் கபட வேடம் என்று அறிந்திருந்தால், தன்னைக் காக்கும் கவச குண்டலங்களை இழந்திருக்கமாட்டான். கர்ணன் மற்றும் மஹாபலி சக்ரவர்த்தி வாக்குக் கொடுக்கு முன்பாக(வாமன அவதாரம் ) தன்னிடம் வேடம் போடுபவர் யார் எந்த (கதா) பாத்திரம் என்று அறிந்து பிச்சை இட ஒப்புக்கொண்டிருந்தால் தப்பித்திருப்பார்கள். // கர்ணனுக்கு சூரியனும், மஹாபலிக்கு சுக்கிராசாரியாரும் வந்திருப்பவர் யார், அவரின் நோக்கம் என்ன என்பதைத் தெளிவாகவே சொல்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சுக்கிராசாரியார் தாரை வார்க்கும் பாத்திரத்தின் கண்ணை வண்டு உருவில் அடைத்துக் கொண்டு நீர் வராமல் இருக்க முயற்சி செய்து அதனால் ஒரு கண்ணை இழந்தார். சூரியனும் கர்ணனிடம் வந்திருப்பது கண்ணன் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறான். கண்ணனே என்னிடம் பிக்ஷைக்கு வந்திருக்கையில் / யாசகத்துக்கு வந்திருக்கையில் அது எனக்குப் பெருமை எனக் கர்ணன் சொல்லுகிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மீகத்தில் நீங்களும், திவாண்ணாவும் எனக்கு குரு ஸ்தானத்தில் இருக்கிறீர்கள். அதனால், நீங்க சொல்வதுதான் சரி.

      நீக்கு
    2. தி.வா.வோடு என்னை ஒப்பிடலாமா? எவரெஸ்ட் சிகரத்துடன் குன்றை ஒப்பிடுவது போல அது! அவர் எங்கே! நான் எங்கே!

      நீக்கு
    3. சூரியனும் கர்ணனிடம் வந்திருப்பது *கண்ணன்* என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறான். // ஆமா, இது எந்த கதை?

      நீக்கு
    4. //சூர்ய பகவான் இந்திரனின் நோக்கத்தைக் கூறி எச்சரித்து, அவரது கவசம் மற்றும் குண்டலங்களை அவரிடம் கொடுக்கவேண்டாம் என்று அறிவுரை கூறினார். கர்ணன் சூரியனுக்கு நன்றி சொல்லி அவர் தனது வார்த்தையால் கட்டுண்டுள்ளதை விவரித்தார் மேலும் அவர் தன்னை சந்திக்க வந்தவர்களை வெறும்கையுடன் தான் செத்தாலும் அனுப்ப முடியாது என்றும் கூறினார். // தம்பி தி.வா.வுக்கு. இப்போதைக்கு இந்த பதில் விக்கி பீடியாவிலிருந்து அவசரத்துக்கு எடுத்தேன். விக்கியை முழுசும் நம்ப முடியாது என்பதை அறிவேன். விரைவில் தக்கபதிலுடன் வருவேன். ஹரிகி எழுதி இருந்த நினைவு. எதுக்கும் மஹாபாரதத்தையும் பார்த்துட்டு, இது யாருடைய பார்வையில் யாரால் எழுதப்பட்டது என்பதற்கான ஆதாரங்களைத் தேடி எடுத்துட்டு வரேன். நன்றி.

      நீக்கு
    5. ம்ம்கும்! கத தெரியும். வந்திருக்கறது இந்திரன்தானே? ஏன் கண்ணன்னு சொல்றீங்கன்னு கேட்டேன்!

      நீக்கு
    6. எங்கும், எதிலும், எவரிலும் காண்பதெல்லாம் கண்ணனே! :))))))))) தம்பி, கவனக்குறைவு, இப்படியா விடாமல் ஸ்கையைக் கப்பலேத்துவீங்க? :P:P:P :P :P:P

      நீக்கு
  9. கிட்டத்தட்ட 3 கண் மருத்துவரைப் பார்த்திருப்பீங்க போல! கடைசியில் ஜெயிக்கப் போவது யாரு? அதாவது உங்கள் கண்ணை அறுவை சிகிச்சை செய்து ஜெயித்தது எந்த மருத்துவர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடை தெரிய காத்திருங்கள்!

      நீக்கு
    2. ஹாஹா, இதையும் புதன்கிழமைக் கேள்விகளில் ஒன்றாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள் போல!

      அது சரி * ஸ்ரீராம் ஏன் பதிலே சொல்லவில்லை? ஸ்ரீ யாருனு கேட்டுட்டுப் போயிட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. அதையும் அவர் கேட்கவில்லை!

      நீக்கு
    4. OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    5. ஸ்ரீராம் பாஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிசியாக இருப்பாராக இருக்கும். 

      நீக்கு
    6. பாஸுக்குப் பிறந்த நாளா? ஸ்ரீராம்! சொல்லவே இல்லையே! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நோய், நொடி இல்லாமல் இதே உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் அனைவரையும் வரவேற்று உபசரித்து நீங்களும் மகிழ்ந்து அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  10. இந்திரா காந்தி, நேரு போன்றோர் அரசுப் பணத்தில் செலவு செய்ததெல்லாம் ஏற்றவர்கள் இப்போது மோதி சொந்தப் பணத்தில் உடைகள் வாங்கி அணிவதை விமரிசிப்பது ஏன்?

    ஒரு நாட்டின் பிரதமர் என்னும் முறையில் ஓரளவுக்குத் தரமான ஆடையை அவர் அணியவேண்டும் என்பதைப் பலரும் உணராதது ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரத்துக்கான கேள்விகளா?

      நீக்கு
    2. //ஒரு நாட்டின் பிரதமர் என்னும் முறையில் ஓரளவுக்குத் தரமான ஆடையை அவர் அணியவேண்டும் என்பதைப் பலரும் உணராதது ஏன்?// 
      இதை யாரும் மறுக்கவில்லை. நேரு, இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., மட்டுமல்ல அப்துல் கலாம் உள்பட பலரும் உடை அணிவதில் தங்களுக்கென்று ஒரு தனி பாணியை பின் பற்றினார்கள். ஏன் மோடி சூட் என்று கூட இப்போது பலரும் திருமணங்களுக்கு அணிகிறார்கள். அது எப்போதும் ஒரே மாதிரி இருந்தால் பேச்சில்லை. தமிழ் நாட்டுக்கு வரும் பொழுது வேட்டி,சட்டை, ராணுவ வீரர்களை சந்திக்கும் பொழுது அவர்களைப் போன்ற உடை அணிவது  போன்ற செயல்கள் அவர் மீது இருக்கும் மரியாதையை குறைக்கிறது. வைர ஊசி என்பதால் கண்ணில் குத்திக்கொள்ள முடியுமா?

      நீக்கு
    3. காஷ்மீரி, நாகாலாந்து உடை அணிந்த நேருவையும், மேகாலயாப் பழங்குடி மக்களுடன் அவர்கள் பாரம்பரிய நடனம் ஆடும் நேருவையும், காஷ்மீர்ப் பெண்கள் உடை அணிந்த இந்திராகாந்தியையும், ராஜீவ் காந்தி, சோனியா காந்தியையும் நீங்கள் இவ்வளவு விரைவில் மறக்கலாமா? நாட்டுக்குள் எப்போதும் பஞ்சகச்சத்துடன் காட்சி அளித்த நரசிம்மராவ் கூட வெளிநாட்டுப் பயணங்களில் சூட் அணியும் கட்டாயம் நேர்ந்தது. அந்த மாநிலத்து உடையை அணிகிறார் எனில் அந்த மாநிலத்தை மதிப்பதாகவும் அந்த உடைக்குக் கொடுக்கும் கௌரவமாகவும் தான் பார்க்க வேண்டும். குற்றம் பார்த்தால் குற்றமே. இல்லை எனில் இல்லை!

      நீக்கு
    4. இன்னும் சொல்லப் போனால் குடியரசுத் தலைவர்கள் உள்பட வடகிழக்கு மாநிலங்களின் உடைகளை அணிந்து, ஹிமாசல் பிரதேச உடை அணிந்து, காஷ்மீரி உடை அணிந்து படங்கள் எடுத்துக்கொண்டு பத்திரிகைகளில் வரும். இதனால் அந்த அந்த மாநிலப் பாமர மக்கள் மகிழ்ச்சி அடையலாம். இதுவரை எந்தப் பிரதமரும், எந்தக் குடியரசுத் தலைவரும், (வெங்கட்ராமன் தவிர்த்து) வேட்டி அணியாததால் இது கொஞ்சம் அனைவருக்கும் உறுத்தலைக் கொடுத்திருக்கிறது. குடகில் கூர்க் மாநில உடை அணிந்து நேருவைப் பார்த்திருக்கிறீர்களா? நேருவோ, இந்திராகாந்தியோ, ராஜீவ் காந்தியோ எது செய்தாலும் சரி என்பவர்கள் இதைக் குற்றம் சொல்லத்தான் செய்வார்கள்.

      நீக்கு
    5. @ Geetha Sambasivam: இது இது..இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.; 

      நீக்கு
    6. ???????????????????????????????????????? If you know the answer, then why the question? முன்னெல்லாம் நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு விருந்தாளிகளில் பெண்களுக்குக் காஞ்சிபுரம் பட்டுப்புடைவை கொடுப்பது உண்டு. அவர்களும் அதைக் கட்டிக்கொண்டு வந்து நடக்கத்தெரியாமல் நடந்து வந்து பத்திரிகைகளுக்குக் காட்சி கொடுப்பார்கள். காஞ்சிபுரம் பட்டுப்புடைவை என்பது இந்தியா முழுமைக்கும் ஆன உடை இல்லை. தமிழ்நாட்டில் தயாராவது தான்! அப்போ அந்தக் காலங்களில் யாரும் இதை ஆக்ஷேபிக்கவில்லை. ஆனால் அதே மோதி யாருக்கானும் இந்தியப் பாரம்பரியப் பொருட்களைப் பரிசாகக் கொடுத்தால் ஆக்ஷேபிப்பார்கள்! :))))) எல்லாம் ராசி! எனக்கும் அந்த ராசி தான்! எங்க வீட்டிலும் இதே கதை தான் நடந்தது. நடக்கிறது. நடக்கும்! :))))))))

      நீக்கு
    7. நம்ம ராஹுல் அவர்கள் பொதுத்தேர்தலில் அதிக எண்ணிக்கையில் ஓட்டு வாங்குவதற்காகப் பஞ்சகச்சத்துடனும் நான் தத்தாத்ரேய பிராமணன் என்றும் சொல்லிக்கொண்டு இருந்ததை அனைவரும் மறந்து விட்டார்கள் போல! அப்போ யாரும் ஏதும் சொல்லவில்லை. ஆனால் ஓர் வெளிநாட்டுத் தலைவருக்கு இந்தியாவின் ஓர் மாநிலத்தில் வரவேற்புக் கொடுக்கையில் அந்த மாநில உடை அணிந்து கௌரவித்தது மட்டும் தப்பு!

      நீக்கு
  11. காவி என்பது பொதுவானதொரு நிறம். நம் நாட்டில் ஆதிசங்கரர் காலத்துக்கு முன்னிருந்தே இருந்து வந்திருக்கிறது. அப்படி இருக்கையில் இப்போது மட்டும் காவி நிறத்தைப் பார்த்து எல்லோரும் கலங்குவது ஏன்? புத்த பிக்ஷுக்கள் உள்படக் காவி/மஞ்சள் சேர்த்த காவி நிறத்தில் உடை அணிவது உண்டு. அப்படி இருக்கையில் அதை ஒரு கட்சிக்கு ஏற்றிவிட்டு ஏன் கலங்க வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவின் தர்மசாலாவில் வசிக்கும் ‘தலாய் லாமா’ (திபேத்திய பௌத்தர்களின் மதகுரு) மரூன் மற்றும் காவி உடைகளில், சில சமயம் முழு காவி உடைகளில்தான் தரிசனம் தருகிறார். அவரைப்பற்றி நமது தமிழ் மேதாவிகள் ஒன்றும் சொல்லவில்லையே!

      நீக்கு
    2. @ஏகாந்தன், என் வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கினீர்கள் என்று சொல்லலாம். அதைக் கேட்கத் தான் வந்தேன். நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.

      நீக்கு
  12. நம் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் பேசிய சங்கரரும், ராமாநுஜரும் இந்தியா முழுக்கச் சுற்றி அநேக சீடர்களைச் சம்பாதித்ததோடு இருவரையும் காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையிலும் உள்ள மக்கள் தங்கள் குருவாக வணங்குகிறார்கள். வடமாநிலங்களில் ஆதிசங்கரருக்கும், ராமாநுஜருக்கும் உள்ள மரியாதையையும், மதிப்பையும் கண்டிருக்கிறேன். அங்கே உள்ள சாமானிய மக்கள் கூட இருவரையும் குரு என வணங்குகிறார்கள். அப்படி இருக்கையில் ஏன் வடக்கு, தெற்கு பேதம்?

    இப்போதைய தமிழ்நாட்டில் அப்படி ஒருத்தர் இன்னும் ஏன் தோன்றவில்லை என வருந்துவேன்! ஆனால் இருப்பவர்களும் குரு என வட மாநிலங்களில் வணங்கும் சங்கரரையும், ராமாநுஜரையும் ஏன் மதிப்பதில்லை? ராமாநுஜருக்காவது வைணவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால் சங்கரர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் எங்களுக்கு தர்ம அடி வாங்கிக் கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டீர்களா?

      நீக்கு
    2. இஃகி,இஃகி,இஃகி,இஃகி, ஜாலியா இருக்கு கௌதமன் சார். :)))))))))

      நீக்கு
    3. சவ்வ்வ்வ்வாலே, சமாளி! :))))))

      நீக்கு
    4. //இப்போதைய தமிழ்நாட்டில் அப்படி ஒருத்தர் இன்னும் ஏன் தோன்றவில்லை என வருந்துவேன்!// காஞ்சி மஹா பெரியவரை மறந்து விட்டீர்களே? உலகமே வணங்கிய யதி ராஜர் அல்லவா அவர்?

      நீக்கு
    5. அவரை மறக்கலை. ஆனால் நான் சொன்னவர்கள் நாட்டில் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர்கள். காஞ்சி பரமாசாரியார் குறிப்பிட்ட அளவு மனிதர்களிடமே மாற்றங்களைக் கொண்டு வந்தார். இப்போது நாடு இருக்கும் நிலைமையில் வலுவானதொரு வழிகாட்டி/குரு நம்மிடை இல்லை என்பதே உண்மை.அடித்தட்டு மக்கள் வரை சென்று மாற்றங்களைக் கொண்டு வரும் தலைமை/ஆன்மிகத்திலோ மற்ற எதிலோ நம்மிடம் இல்லை. உண்மையை உண்மை எனச் சொல்பவர்களைக் குற்றம் சொல்லுபவர்களுக்கு அவர்கள் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டும் வல்லமை மிகுந்த தலைமை நம்மிடம் இல்லை.

      நீக்கு
  13. கௌதமன் சார், இன்னிக்கே பயந்துண்டு ஒளிஞ்சுட்டீங்க போல! இன்னும் இருக்கே! பின்னர் வரேன். :))))))

    பதிலளிநீக்கு
  14. கேள்வி பதில்கள் அருமை...

    முடிவில் மருத்துவருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அதிர்ச்சி... ஹா.... ஹா....

    பதிலளிநீக்கு
  15. கேள்வி பதிலை ரசித்தேன்.

    கண் ஆபரேஷன் அனுபவம், ஒன்றிர்க்கு மூன்று டாக்டர்களையாவது கன்சல்ட் செய்யணும், நீலக் குயில்களிடம் மயங்கி ஒரே மருத்துவரிடம் செல்லக்கூடாது என்பதைச் சொல்லியது.

    புதுப் பாடல் என்பது 1990-2005 என்று சொல்லியிருக்கணும். அப்படி இல்லாமல் புதுப் பாடல் ஏன் போடலை என்றால் அவர் என்ன பதில் சொல்லுவார்?லேடஸ்ட் பாடல்கள்தான் போடணும்னா ஓரிரு வாரங்களில் சரக்கு தீர்ந்து வெள்ளிக்கிழமைக்கு வேறு தீம் கண்டுபிடிக்கணும்.

    பதிலளிநீக்கு
  16. கேள்வி பதில் நன்று.

    நெட்டுரு ஆகிய எழுத்துகள்... ஹாஹா... டாக்டர் ஆடிப்போயிருப்பாரே!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.

    இப்போதுள்ள பாடல்கள் உண்மையிலேயே வரிகள் புரிவதில்லை. நல்ல அருமையான இசையமைப்புடன் பாடல்களும் வருகின்றன. ஆனால், குத்துப் பாட்டுகள் அனைவரின் மனங்களையும் தாளம் போட வைக்கிறதோ என எண்ணவும் வைக்கிறது.

    பேய்களுக்கு கால் இல்லையோ என்ற கேள்விக்கு பதில்களை ரசித்தேன்.

    முயற்சி செய்தால் எதையும் அடையலாமா.. என்ற கேள்விக்கும் தந்திருக்கும் பதில் கவர்ந்தது. அதிர்ஷ்டவசமாக என்பது உண்மைதானே.. ! அதிர்ஷ்டம் நம் வசமாக இருக்க பிரியப்படும் போது நாம் எடுக்கும் முயற்சிக்கும் துணை புரிகிறது.

    கண் புரை கட்டுரை நன்றாக உள்ளது.
    எப்படியோ "சிங்"கிடமிருந்து தப்பினீர்கள்.
    அந்த சிங்கம்மாவுக்கும் கொஞ்சம் கண்களில் பிரச்சனை இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான அவர் எதையும் "கண்"எடுத்தும் நோக்கவில்லை.. ஹா. ஹா. ஹா..

    /திரை எங்கே இருக்கு? " என்று கேட்டு, கண் மருத்துவரைக் கலவரப்படுத்தாமல், நான் " E , F P, T O Z, L P E D, P E C F O, E D F C Z P, F E L O P Z D, " என்று வேக வேகமாக சொன்னேன்./

    நல்ல மனப்பாடம்:)..எதற்கும் இப்போது நானும் மனதில் இருத்த முயற்சிக்கிறேன்.

    /எப்போ வரீங்க? கத்தியோடு காத்திருக்கிறோம்" ஒவ்வொரு நாளைக்கும் நான் "இன்றைக்கு ஜலதோஷம், பிரதோஷம், சகவாசம்" என்று ஏதேதோ சொல்லி தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தேன்/..

    ஹா. ஹா. ஹா. நானும் எதற்கும் இப்படி தள்ளிப்போடும் ரகம்தான்..இறைவன் தந்த " அதே கண்களோடு" காலம் கழிய வேண்டுமெனவும் நினைத்துக் கொண்டே உள்ளேன்.

    நகைச்சுவையாக எதையுமே " நோக்கும்" போது மனது கவலைகளை சற்று தள்ளி விட்டு விட்டு லேசாகத்தான் இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அந்த சிங்கம்மாவுக்கும் கொஞ்சம் கண்களில் பிரச்சனை இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான அவர் எதையும் "கண்"எடுத்தும் நோக்கவில்லை.. ஹா. ஹா. ஹா..// அடேடே அப்படியும் இருக்கக்கூடும்!

      நீக்கு
  18. திரும்பத் திரும்ப காற்று ஊதி, படம் எடுப்பார்கள். // இல்ல சார். அது படம் எடுக்கறதில்ல. கண் ப்ரஷர் பாக்கறது. காத்து கண்ணுல பட்டு பௌன்ஸ் ஆகிறதல்லவா? அப்ப அது அளவு எடுக்கும். நீங்க கண்ண மூடறதுக்குள்ள அது எடுத்துடும். கன்சிஸ்டென்சிக்காத்தான 2-3 எடுக்கறது.

    பதிலளிநீக்கு
  19. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கு, முக்கியமாக என் கேள்விகளில் இருந்த பல டவுட்ஸ் கிளியர் ஆச்சு... சுக்கிரியா:).

    பதிலளிநீக்கு
  20. ஹி ஹீ ! 'கொலுவுக்கு யார் வீட்டுக்குப் போனாலும் கொண்டைக்கடலை சுண்டல்' என்பது போல, கடந்த ஒருமாதகாலமாக எந்த ஆஸ்பத்திரிக்குப் போனாலும் இதே எழுத்துகள்தான். படித்துப் படித்து நெட்டுரு ஆயிடுச்சு " என்றேன்.////
    ஹா ஹா ஹா டொக்டரையே பேய்க்காட்டிட்டீங்களே:)...
    இப்போ உங்கள் கண்ணின் நிலைமை எப்படி இருக்கு என அறிய மீ வெயிட்டிங்😺😺😺😺

    பதிலளிநீக்கு
  21. ஒரு சந்தேகம் எட்டங்குல விட்ட முள்ள ஆழ்துளைகிண்றில் எப்படி குழந்தைகள் விழுகிறார்கள்இப்போது வரும் தொலைக்காட்சி தொடர்களில்ஜோசியர் ஒருவர் அவசியம் வருகிறார் அவர் சொல்படி அனைவரும் கேட்கிறார்க்ள் அவர் சொல்படிதான் நிகழ்வுகளிருக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தொலைகாட்சி தொடர்கள் எதுவும் பார்ப்பதில்லை என்பதால் இதுபற்றிய விவரம் தெரியவில்லை. கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆழ்துளைக்கிணறு தோண்டும்போது கிட்ட இருந்து பார்த்ததில்லையா? ஆரம்பத்தில் கொஞ்சம் வட்டம் பெரிதாகவே இருக்கும். 30 அடிக்குப் பின்னரே குறையும். ஆகவே குழந்தைகள் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. மேலும் தண்ணீர் வரும் காலங்களில் மண் சரியும். அப்போது சரியும் மண்ணை எல்லாம் எடுக்க வேண்டும். அப்போது இன்னும் கொஞ்சம் துளை பெரிதாகும். சில சமயங்களில் போட்ட இடமே சரியில்லை என்று வேறோர் இடத்தில் தோண்டுவார்கள். அப்போது இதை மூட மறந்துவிட்டால்? ஆபத்துத் தானே!

      நீக்கு
    3. மற்றபடி ஜோசியர்களுக்கும் குழந்தைகள் பள்ளத்தில் விழுவதற்கும் இருக்கும் சம்பந்தம் என்ன என்று எனக்குப் புரியவில்லை.

      நீக்கு
    4. என் வீட்டிலேயே ஆழ்துளை கிணற்றில்தான் தண்ணீரே சமீபத்தில்தான் நீர் இல்லாததால் மூடினோம்

      நீக்கு
  22. கேள்விகளும் பதிலும் அருமை.

    //அப்பொழுதுதான் என் கண்கள் மறைக்கப்பட்ட நிலையில் இருப்பதை மருத்துவர் பார்த்தார். " அட! கண்ணால் பார்க்காமலேயே எப்படி எல்லாவற்றையும் சரியாகப் படித்தீர்கள்?" என்று கேட்டார்.

    " ஹி ஹீ ! 'கொலுவுக்கு யார் வீட்டுக்குப் போனாலும் கொண்டைக்கடலை சுண்டல்' என்பது போல, கடந்த ஒருமாதகாலமாக எந்த ஆஸ்பத்திரிக்குப் போனாலும் இதே எழுத்துகள்தான். படித்துப் படித்து நெட்டுரு ஆயிடுச்சு " என்றேன்.//

    நல்ல வேடிக்கையான பதில் .

    அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்வது நன்றாக இருக்கிறது. முன்பு நெற்றி பொட்டின் அருகே ஊசி போடுவார்கள் பயங்கரமாக வலிக்கும். இப்போது அந்த முறை இல்லை. (கண்விழிகள் ஆடாமல் இருக்க) ஆப்ரேஷன் ஆன பக்கம் படுக்க முடியாது வலிக்கும். இப்போது அப்படி இல்லை என்று கேள்வி பட்டேன். அறுவை சிகிட்சைக்கு பின் கண்ணாடியும் அணியவேண்டாம் இப்போது.

    நிறைய மாற்றங்கள் வந்து இருக்கிறது அவை எல்லாம் தொடரும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ரங்க்ஸுக்குக் கண் அறுவை சிகிச்சையின் போது நெற்றிப்பொட்டின் அருகே தான் ஊசி போட்டார்கள் சுமார் 2 வருஷங்கள் முன்னர்.

      நீக்கு
  23. கௌ அண்ணா முந்தைய காடராக்ட் பகுதிகளையும் வாசித்துவிட்டேன்!!!!

    டாக்டர், அனுஷ் போல இருந்தார்னு சொல்லிருக்கீங்க அப்ப கண்டிப்பா கலக்கல் கண்ணுதானோ?!! ஹா ஹா ஹா அப்ப அந்த சிங்க் அம்மா சிங்கமா தெரிஞ்சாங்களா?!!! அந்த சிங்கப்பா ஷேர் கா பத்தர்னு தன் புஜத்தைத் தட்டிட்டு வரலை நல்லகாலம்!!!!! புத்தூர் கட்டிலிருந்து தப்பிச்சுட்டீங்கனு தெரியுது!

    //ஜலதோஷம், பிரதோஷம், சகவாசம்//

    ஹா ஹா ஹா ஹா ஹா....அவங்க ரேட் தான் தோஷம்!!

    கண் மூடிக் கொண்டென்//

    கௌ அண்ணா கண்ணுக்கு ஒரே வெட்கம் பொல!! ஃபோட்டோ எடுத்தா கூச்சப்படுது!னு சொல்லிக்கலாம்...!!!!

    " அட! கண்ணால் பார்க்காமலேயே எப்படி எல்லாவற்றையும் சரியாகப் படித்தீர்கள்?" //
    " ஹி ஹீ ! 'கொலுவுக்கு யார் வீட்டுக்குப் போனாலும் கொண்டைக்கடலை சுண்டல்' என்பது போல, கடந்த ஒருமாதகாலமாக எந்த ஆஸ்பத்திரிக்குப் போனாலும் இதே எழுத்துகள்தான். படித்துப் படித்து நெட்டுரு ஆயிடுச்சு " //

    ஹா ஹா ஹா அதானெ! டாக்டரின் கேள்வியைப் படித்ததுமே அதான் எத்தனை டெஸ்ட் போயாச்சு....நு பதில் தோண அடுத்த வரி நீங்க சொல்லிருக்கறதும் அதே!!! ஹா ஹா ஹா...

    சரி கடைசில என்ன ஆச்சு எந்த டாக்டருக்கு அடிச்சுதோ லக்கி ப்ரைஸ்!!

    ஸ்வாரஸ்யமா எழுதிருக்கீங்க கௌ அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. நண்பர் லகலகலக பேயார் எங்கே/ காணவில்லை? பேயார் பற்றிய கேள்விகலுக்கு எல்லாம் பேயார் பதில் சொல்லலியெ!! அவருக்கும் காட்டராக்ட் வந்துருச்சா!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பௌர்ணமி நெருங்குகிறது என்பதால் காணாமல் போய்விட்டாரோ?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அமாவாசைக்குத்தான் பேயார் வருவார்...பௌர்ணமி என்றால் அவரை விரட்டிவிடுவார்களே!! ஓ அதான் ஒளிஞ்சுட்டாரோ?!!

      கீதா

      நீக்கு
  25. //" சார், எப்போ வரீங்க? கத்தியோடு காத்திருக்கிறோம்" //

    ஹஹ்ஹஹா.. ஆபரேஷன் என்றாலே கத்தியும் கூடவே வந்து விடுகிறது, போல..

    பதிலளிநீக்கு
  26. கேள்வி பதில்கள் நன்று.
    காட்ராக் செம சிரிப்பு. ....

    பதிலளிநீக்கு
  27. ஆழ்துளைக் கிணறு சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. ஏன் அந்தப் பெற்றோர் அதனை மூடாமல் இருந்தார்களோ? அதனைச் சுற்றி கம்பி வலைத் தடுப்பேனும் போட்டிருக்கலாம்.

    காட்டராக்ட் அறுவைசிகிச்சைக்கு நீங்கள் மிகவுமே அல்லல் பட்டிருக்கின்றீர்கள் என்று தெரிகிறது. ஆனால் அந்த அல்லலை நகைச்சுவையுடன் எழுதியிருப்பது அருமை சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  28. (துளசி நேற்றே மறதி குறித்துக்கேட்ட கேள்விகளையும் கருத்தையும் இங்கு போட மறந்து போனேன்!!! ஹிஹிஹிஹி....வியாழன் பதிவில் துளசி சொல்லியிருந்த ஒரு கமென்ட் தான் ஆஹா நேற்று போட மறந்து போனேனே என்று இதோ அந்தக் கேள்விகள்..ஸாரி ஸாரி..
    ---கீதா)

    1. மறதி என்பது நாம் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால் நிகழ்வது என்று நான் நினைப்பதுண்டு. பொருட்கள் உட்பட. உங்கள் அனுபவம்?

    2. ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போது வேறு ஒன்றை மனம் நினைப்பதாலும் மறதி ஏற்படும் அதாவது கான்செட்ரேஷன் இல்லாமை என்பது சரியா?

    3. நாம் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது தேர்வில் சில பாயின்ட்ஸ் எழுதாமல் விட்டு விடுவோம். இது அந்தப் பாயின்ட்ஸை முக்கியமாகக் கருதாமல் நிகழ்வதா? அல்லது நம் மூளைத் திறனைப் பொருத்ததா?

    4. நம் மறதியினால் நம்மைச் சுற்றி இருப்பவர்க்கு ஏதேனும் பாதிப்பு நிகழும் வாய்ப்பு உண்டு. அல்லது அவர்களின் மறதியினால் நமக்கு. அப்படியான அனுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!