புதன், 27 நவம்பர், 2019

புதன் 191127 :: குடும்பத்தை நல்லபடி நடத்தத் தெரிந்தவர்கள் ஆண்களா? பெண்களா?


சென்ற வார புதன் பதிவில், பெருமளவில் பங்கேற்று, கருத்துகளைப் பதிந்த எல்லோருக்கும் எங்கள் நன்றி. கலந்துரையாடல், கருத்துரையாடல் எல்லாமே எங்களுக்குப் பிடிக்கும். தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம். 

கேள்வி கேட்டவர்களுக்கு எங்கள் நன்றி. 




அதிரா : 

1. கொன்றால் பாவம் தின்றால் போச்சு.. என்பதன் சரியான அர்த்தம் என்ன?

# கொன்றால் பாபம். ஐயமில்லை.
தின்றால் போயிற்று. உணவுக்காகக் கொல்வதும் இரையைத் தின்பதும் இயற்கையின் நியதி.
எனவே உணவுக்காகக் கொல்வது பாபமில்லை. 
ஆனால் ருசிக்காகக் கொல்வது ? சிந்திக்க வேண்டிய கேள்வி.
(இயற்கையில் violence இருக்கும் violation இருக்காது)



இதற்கு கிருபானந்த வாரியார் தனது சொற்பொழிவு ஒன்றில் கூறியதை பார்ப்போம்,

உயிர்களைக் கொன்ற பாவிகளை அவர்களின் இறப்பிற்குப் பிறகு எம தூதர்கள், நரகத்திற்குக் கொண்டு போய் கிடத்துவார்கள். அங்கு அந்தப் பாவிகளின் மாமிசத்தை அறுத்து, அவர்கள் வாயில் ஊட்டி, மாமிசத்தை உண்டவனே! உன் மாமிசத்தை நீயே சாப்பிடு’ என்று சாப்பிட வைப்பார்கள். உயிர்களை வதைத்துத் தின்ற பாவமானது, தன் சதைகளை தின்றால்தான் தீரும். இதுதான் அந்தப் பழமொழியின் உட்பொருள். அதனால் தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்று கூறி வைத்தார்கள்.

2.குடும்பத்தை நல்லபடி நடத்தத் தெரிந்தவர்கள் ஆண்களா? பெண்களா?

# குடும்பத்தை நடத்துவது பெண்கள் மட்டுமே. ஆண்கள் இப்போதுதான் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கிறார்கள்.

& இதிலென்ன சந்தேகம்? நிச்சயம் பெண்கள்தான். 

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:56)

பொழிப்பு (மு வரதராசன்): கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
      
3.தன் பிள்ளையைக் எங்காவது கூட்டிச் செல்லும்போது, கண்ணின் மணிபோலவும், அடுத்தவர்[நண்பர்கள்] பிள்ளையைக் கூட்டிச் செல்லும்போது ஏனோதானே எனப் பொறுப்பில்லாமலும் பலர் இக்காலத்தில் இருக்கிறார்கள், அவர்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?

# இது பொதுவாகக் காணப்படாத பாங்கு. எனவே இப்படி இருப்பதை ஒரு பிறழ்வு அல்லது முரண் என்று தான் பார்க்க வேண்டும்.

& எனக்கு அப்படித் தோன்றவில்லை. அப்படி யாரும் உள்நோக்கோடு செயல்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. மேலும் நம் குழந்தைகள் எப்படி நடந்துகொள்வார்கள், அவர்களுக்குப் பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன என்பதெல்லாம் நமக்குத் தெரியும். மற்றவர்களின் குழந்தைகள் என்றால் அந்த விவாரங்கள் தெரியாததால் தடுமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

4.கண்ணன் என்றாலே பெண்கள் கூட்டத்துள் இருப்பவர் எனும் கருத்து ஏன் வந்தது?..

# கோபியருடன் கண்ணன் எனும் சித்திரம் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதும் ஜயதேலர் அஷ்டபதியின் தாக்கமும்தான் காரணம்.

& எனக்கு கண்ணன் என்றால் பகவத் கீதை ஞாபகம் மட்டும்தான் வருகிறது.  


5. பல ஆண்களுக்குப் பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது எனப் பொதுவான கருத்து நிலவுதே அது உண்மையோ?:) இல்ல தப்புவதற்காகச் சொல்லப்படும் சாட்டோ?:).

# பாசத்தை வெளிப்படையாகக் காண்பிப்பது மட்டுமல்ல நெகிழ்ச்சியும்கூட  "ஆண்மை"யல்ல  என ஒரு மனோபாவம் பரவலாக உண்டு.

& பாசத்தை வெளியே வெளிப்படையாகக் காட்ட, எல்லோரும் பாசமலர் சிவாஜியாக ஆகிவிட்டால், எங்கு பார்த்தாலும் ஆண்கள் தாடியுடன், கிழிந்த கோட்டுடன் அலைந்துகொண்டிருக்க வேண்டியதுதான்! பார்க்க சகிக்காது! 



6. எப்படியும் வாழலாம்.. பொழுதைக் கழிச்சால் சரி, எனும் மனநிலையோடு இருப்போர் எப்படிப் பட்டவர்கள்?

 # உல்லாசிகள்.

& அப்படியும் சிலர். ஆனால் அது சரியா அல்லது தவறா என்று யாரும் சொல்ல முடியாது. 

ஏஞ்சல் : 

1,குழந்தையை தூளியிலோ அல்லது கால்களிலோ தோளிலோ போட்டு ஆராரோ பாடி கஷ்டப்பட்டு தூங்க வைப்போம் ..அப்பாடான்னு அரை டு ஒரு மணிநேர போராட்டத்தின் பின் பெருமூச்சு விடும்போது கண்ணை சிமிட்டி சிரிக்கும் நண்டு சிண்டுகளின் ஏமாற்று வேலைகளை ரசித்ததுண்டா ?அனுபவித்திருக்கிறீர்களா ?

# நிறைய.

& நான் தூங்க வைக்கும்பொழுது, கர்ண கடூர குரலில் தாலாட்டு பாடுவேன் என்பதால், முழித்துக் கொண்டிருக்கும் குழந்தை கூட, தப்பித்துக்கொள்வதற்காக, தூங்குவது போல ஆக்ட் பண்ணும். 

2, டெய்லி காலை 8 மணி வேலைக்கு அலாரம் வச்சி எழும்பறோம் ஆனா அலார்ம் வைக்காத நாளிலும் அதே டைமுக்கு முழிப்பு வருதே ! அந்த அனுபவங்கள் எல்லாருக்கும் இருக்கா ?

# பயோ கடிகாரம் அலாரம் அடிக்கிறது. சித்திரம் போல் நித்திரையும் ஒரு மனப்பழக்கம்.

& பள்ளி, கல்லூரி நாட்களிலும் சரி, அலுவலகத்தில் வேலை பார்த்த நாட்களிலும் சரி, அலாரம் வைத்து எழுந்த பழக்கம் இல்லை. பள்ளி நாட்களில், காலை ஆறுமணி சுமாருக்கு அக்கா எழுப்பி விட்டுவிடுவார். எழுந்திருக்கவில்லை என்றால், முகத்தில் தண்ணீர் தெளிப்பார். 
கல்லூரி நாட்களில் காலை ஐந்தே முக்கால் ஆகின்ற சமயத்தில் எழுந்துவிடுவேன். இல்லை என்றால் அம்மா எழுப்பிவிடுவார்கள். 
அலுவலக நாட்களில் காலை ஏழரைக்கே தொழிற்சாலையில் இருந்தாகவேண்டும். காண்டீனில் காலை டிபன் சாப்பிடவேண்டும் என்றால், அதற்கும் முன்பே தொழிற்சாலையில் இருக்கவேண்டும். சென்ட்ரல் ஸ்டேஷனில் கும்மிடிப்பூண்டி லோகல் வண்டி ஆறு முப்பத்தைந்துக்கு (என்று ஞாபகம்) அதைப் பிடிக்க புரசவாக்கத்திலிருந்து ஐந்தே முக்கால் மணிக்கே கிளம்பிவிடுவேன். ஐந்து மணிக்கு எழுந்தால்தான் இது சாத்தியம். அப்போ ஆரம்பித்த பழக்கம் எல்லா நாட்களிலும் ஐந்து மணிக்கு எழுந்துவிடுவேன். சில நாட்களில் தூங்கினேன் என்றால், பெரிய அண்ணன் ஒரு கிள்ளு கிள்ளி எழுப்பிவிட்டுவிடுவார். 

கல்யாணம் ஆன பின்பு, ஐந்து மணிக்கு நான் எழுந்திருக்காவிடில், மனைவி என்னை எழுப்பியதில்லை. 'பாவம் தூங்கட்டும் - ஒருநாள் ஆபீஸ் போகாவிட்டால் லீவு போட்டுக்கொள்ளலாம் ' என்று சொல்லி பேசாமல் விட்டுவிடுவார். பல நாட்கள் நான் முன்பே எழுந்திருந்து, மனைவியை எழுப்பி, டிபன் காபி தயார் செய்யச் சொன்னதும் உண்டு. 

(இப்போ எல்லாம் காலை நாலு மணிக்கே எழுந்து விடுகிறேன்!) 

3, ஒருவர் நல்லது செய்யும்போது எதையும் ஆராயாமல் பாராட்டி  ஏற்கும் உலகம் அதே அவர்  ஒரு தவறு சின்னதா செஞ்சாலும் உடனே அவரின்  ஹிஸ்டரி ஜியோகிராஃபி anthropology என கிளறுவதேன் ?

# நல்லதைப் பாராட்டுவதை ஏற்பவர் அல்லாததை மறுப்பதையும் ஏற்பது அழகு. இங்கு ஏற்பது இகழ்ச்சி அல்ல நேர்மையான விமர்சனம்.

& அதானே இது ரொம்ப அநியாயமுங்க. இதனால்தான், நான் நல்லதும் செய்வதில்லை, கெடுதலும் செய்வதில்லை! 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

என்ன இப்படி இருக்கிறார்கள்? என்று இந்தக்ககால இளைஞர்களைப்பார்த்து நீங்கள் சந்தோஷப்படும்,வருத்தப்படும் விஷயங்கள் எவையெவை?
 
# கொஞ்சம் விழிப்புணர்வு இருக்கும் குடும்பங்களில் உள்ள இளைய தலைமுறையினர் படிப்பில் சாதிக்கிறார்கள்.  வாழ்க்கையில் நல்ல குறிக்கோளுடன் இருக்கிறார்கள். பந்த பாசம் நன்றாக இருக்கிறது.
இதெல்லாம் பிளஸ்.

மாற்றம் என்பதால் மட்டுமே தலைமுடியை கோரம் செய்து கொள்வது, பேசும் மொழியில் அழுத்தம் என்ற பெயரில் ஆபாசம், அதீத பணச் செலவில் ஆடம்பரத்தில் நாட்டம், அடுத்தவரிடம் இருப்பதெல்லாம் தனக்கும் வேண்டும் என்ற பேராசை, பெண்கள் / பையன்கள் பால் நெருடல் விளையும் அளவுக்கு அன்யோன்யம், வயசுக்கு மதிப்பு தராமல் கண்ணியம் மீறிய பேச்சு.
இதெல்லாம் மைனஸ்.

இந்த வருடம் சங்கீத கலாநிதி விருது வாங்கும் செளம்யா குறித்து நாலு வார்த்தைகள் என்ன, அதற்கு மேலும் கூறுங்களேன்.

# சௌம்யா விருதுக்கு முற்றிலும் தகுதி படைத்தவர். அடக்கம் இன்முகம் அபார வித்வத் அவர் சொத்து. 
சம்பிரதாயமான அதே சமயம் மனதைத் தொடக் கூடிய சுஸ்வரமான இசை அவரது தனிச்சிறப்பு.

போக்குவரத்து நெரிசலில் டூ வீலரில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு யாருமே ஹெல்மெட் போட்டுக்கொள்ளாமல் வேகமாக பயணிக்கிறார்களே.. இந்த தைரியம் எப்படி வருகிறது?

# "அதெல்லாம் நமக்கு நடக்காது" என்ற அசட்டு தைரியம் சராசரி மனித இயல்பு.
       
=================================================

காடராக்ட் அறுவை முடிவுப் பகுதி. 

அறுவை சிகிச்சை முடிந்த மறுநாள், தயக்கத்துடன் இடது கண் பார்வை எப்படி இருக்கிறது என்று இருட்டு அறையில் இருந்தவண்ணம் நோட்டமிட்டேன். 

இடது கண்ணுக்கு நேரே சிலந்திக்கூடு, ஒட்டடை, பிகாசோ ஓவியம் எல்லாம் டிஸ்கோ டான்ஸ் ஆடின. 

ஒருவேளை மருத்துவர் அறுவை சிகிச்சை எதுவும் செய்யாமல், சும்மா eye wash செய்து அனுப்பிவிட்டாரோ என்று கூட சிறிய சந்தேகம். 

தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு, இதே நிலைமைதான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டடை குறைந்தது. 

ஒரு வாரம் கழித்து மீள்பார்வைக்குப் போனபோது, பயாஸ்கோப் வைத்துப் பார்த்த கண் மருத்துவர், " எல்லாம் சரியாக இருக்கு. இனிமே ஆப்பரேஷன் செய்துவிடலாம்" என்றார். 

திடுக்கிட்டு, பயந்து, திகைப்பூண்டை மிதித்து அவரைப் பார்த்து மலங்க மலங்க விழித்தேன். 

" இன்னொரு கண்ணுக்கு இன்னும் மூன்றே  நாட்களில் ஆப்பரேஷன் செய்துவிடலாம்" என்றார். 

" ஏன் டாக்டர்? அந்தக் கண்ணுல பார்வை சரியாத்தானே இருக்கு?" என்று கேட்டேன். 

" இல்லை, இல்லை - அந்தக் கண்ணுல மைனஸ் பாயிண்ட் ஃபைவ். " என்றார். 

எனக்கு வந்த கோபத்துக்கு அவரைப் பார்த்து நெற்றிக்கண்ணைத் திறந்திருப்பேன். அப்போ அவர், 'நெற்றிக்கண்ணுக்கும்  ஆப்பரேஷன் செய்கிறேன்' என்று கிளம்பிவிடுவாரோ என்ற பயத்தில் சும்மா இருந்தேன். 

இன்று வரை, ஆப்பரேஷன் செய்யப்பட்ட இடது கண்ணை விட ஆப்பரேஷன் செய்யப்படாத வலது கண் பார்வை கூர்மையாகத்தான் உள்ளது. 

ஓய்வு காலம் முடிந்து வந்த பிறகு, பக்கத்து ஃப்ளாட் நண்பர் கேட்டார் - " சிகிச்சைக்கு முன்பு இருந்த பார்வை நிலைக்கும், சிகிச்சைக்குப் பின் இப்போ இருக்கும் பார்வை நிலைக்கும் வித்தியாசத்தை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?"

" அதுக்கு நான் ஒரு சூப்பர் ஐடியா செய்துள்ளேன் சார்!"

" என்ன அது?"

" ஆப்பரேஷனுக்கு முன்பு, என் மொபைலில், இடது கண்ணால் பார்த்து, இடது கண்ணுக்கு நேரே லென்ஸ் பிடித்து சில ஃபோட்டோக்கள் எடுத்து சேமித்து வைத்திருக்கிறேன். அதை இப்போது பார்த்தேன் என்றால், சரியாக எந்த அளவுக்கு பார்வை தெளிவடைந்திருக்கு என்று தெரிந்துகொள்வேன் " என்றேன். 

சரிதானே? 

===========================
கும்மி அடிப்போருக்கு, ஒரு பிடி அவல் : 

1) 


 2) 
3) 

(எதை என்று தெரியவில்லை. ஏதோ ஒரு  கோவிலில் எப்பவோ கொடுக்கப்பட்ட விபூதியை மடித்து வைத்திருந்த பேப்பரில் இருந்த வாசகம் !)

===================================================

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!

===================================================
                        

62 கருத்துகள்:

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப....

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இன்றைய நாள் நன்மைகள் நிறைந்த பொன்னாளாக பிரகாசிக்கவும் ஆண்டவனை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கம்.   இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. பிரார்த்தனை என்பது, நமக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள, புலனறிவுக்கு அப்பாற்பட்ட பாலம். (சுவாமி கௌதமானந்தா !)

      நீக்கு
  3. இளங்காலைப் பொழுதில் அனைவருக்கும்
    அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  4. எல்லா பதில்களிலும் சுவாரஸ்யம் ஜி

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  6. “தன் பிள்ளைகளை எங்காவது கூட்டிச்” - இதற்கு மிகச் சரியான பதிலை அளித்துள்ளீர்கள். நமக்குச் சம்பந்தமில்லாத்து நம்மிடம் ஒப்படைக்கப் பட்டால் நாம் கூடுதல் கவனத்துடன் இருப்பது இயல்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்தவரை தன் குழந்தைகளுக்கு எனில் நல்ல உணவாகக் கொடுப்பார்கள். சிநேகிதர்களின் குழந்தையானாலும் சரி, மற்ற உறவினர் குழந்தையானாலும் சரி, கொஞ்சம் ஆறிய உணவையே கொடுப்பார்கள். பால் கூட இதில் விதிவிலக்கல்ல. எங்க பையருக்கு ஒருமுறை நெருங்கிய உறவினர் வீட்டில் இப்படி நடந்தது என் கண்ணெதிரேயே! :)))))) மற்றபடி வெளியே அழைத்துச் செல்லுதல் வேறே, இது வேறே என நினைக்கிறேன்.

      நீக்கு
  7. தமிழகத்தில் ஒரு காலத்தில் பெளத்த,சமண மதங்கள் கோலோச்சின. அவர்களுக்கு குறிப்பாக பெளத்தர்கள் உணவுக்காக உயிரைக்கொல்வது பாவம். ஆனால் மற்றவர்களால் கொல்லப்பட்டதை சாப்பிடலாம் என்னும் கொள்கையை கடை பிடித்தார்களாம். அவர்களை குறித்து கேலியாக கூறப்பட்ட வாசகம்தான் கொன்றால்தான் பாவம்,தின்னால் போச்சு என்ற ஒரு விளக்கத்தையும் திருச்சி கே.கல்யாணராமன் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெளத்தவர்கள் மற்றவர்களால் கொல்லப்பட்டதை சாப்பிடவில்லை, தானாக் இறந்த உயிர்களை உண்டார்கள்.
      சமணத்தில் கொல்லாமை மிக கடுமையாக கடைபிடிக்க பட்டது.

      நீக்கு
    2. புதிய தகவல்கள் அளித்த இருவருக்கும் நன்றி!

      நீக்கு
  8. இதனால் சகலமானவர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால்...

    மேற்படி பின்னூட்டம் இடுபவர், பெட்ரோமாக்ஸ் படம் சமீபத்தில் பார்த்ததிலிருந்து “த” கழகத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். இதற்குக் காரணம் “த”, இவரைவிட மிகப் பெரியவராக வயதான மூஞ்சி ஆகிவிட்டதே காரணம்.

    இனி, மன்றத்தில் பொறுப்பு வேணும், கலாய்ப்போம் என்றெல்லாம் பின்னூட்டமிடுபவரை அணுக வேண்டாம். ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...   ஹா...   நேற்றுவரை பாதி படம் பார்த்திருக்கிறேன்!

      நீக்கு
    2. பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்(டா/டு)மா!

      நீக்கு
  9. திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளது அறிவுரையை மேற்கோள் காட்டியதற்கு மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லாக் கேள்விகளுக்கும் நல்ல பதில்கள் கொடுத்திருக்கிறீர்கள். நாளைக்கு வரேன்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. கேள்விகளும், பதில்களும் மிக அருமை.

    //கண்ணை சிமிட்டி சிரிக்கும் நண்டு சிண்டுகளின் ஏமாற்று வேலைகளை ரசித்ததுண்டா ?அனுபவித்திருக்கிறீர்களா ?//

    எல்லோரும் அனுபவித்து இருக்கிறோம்.
    உங்கள் பதில் சிரிப்பை வரவழைத்து விட்டது. சங்கீதத்தை ரசித்து கேட்பவர் குரல் கர்ண கடூரமா?


    பதிலளிநீக்கு
  13. @ஏஞ்சல் ///டெய்லி காலை 8 மணி வேலைக்கு அலாரம் வச்சி எழும்பறோம் ஆனா அலார்ம் வைக்காத நாளிலும் அதே டைமுக்கு முழிப்பு வருதே ! அந்த அனுபவங்கள் எல்லாருக்கும் இருக்கா ?///


    இப்ப்டி லேட்டா (8 மணிக்கு ) வேலைக்கு போறவங்கதான் அலாரம் எல்லாம் வைக்கிறாங்க போல இருக்கு..... நான் எப்போதும் அலாரம் வைப்பதில்லை....இப்போது எல்லாம் காலை 4 மணிக்கு என்னாதான் குளிரு என்றாலும் எழ்ந்து ஒரு காபி சாப்பிட்டுவிட்டு அதன் பின் நாயய்குட்டியுடன் வாக்கிங்க போகிவிட்டு அதன் பின் குளித்துவிட்டு 5;20 க்கு சென்றுவிடுவேன் 6 மணிக்கு வேலை இடத்தில் இருப்பேன்+ விடுமுறை நாட்களி கொஞ்சம் அதிகம் தூங்க வேண்டும் என்று நினைத்தாலும் வழக்கம் போல காலை 4 மணிக்கு முழித்துவிடுவேன்

    பதிலளிநீக்கு
  14. இங்கு அதிராவின் பெயரில் வெளி வந்து இருக்கும் கேள்விகள் எல்லாம் அதிரா கேட்டதுதானா இல்லை அவரின் அட்மின் கேட்டதா?

    எத்ற்கு கேட்கிறேன் என்றால் கேள்விகளில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருக்கிறேதே அதனால் எழுந்த சந்தேகம் தான்

    பதிலளிநீக்கு
  15. @// ஏஞ்சல் :

    1,குழந்தையை தூளியிலோ அல்லது கால்களிலோ தோளிலோ போட்டு ஆராரோ பாடி கஷ்டப்பட்டு தூங்க வைப்போம் ..அப்பாடான்னு அரை டு ஒரு மணிநேர போராட்டத்தின் பின் பெருமூச்சு விடும்போது கண்ணை சிமிட்டி சிரிக்கும் நண்டு சிண்டுகளின் ஏமாற்று வேலைகளை ரசித்ததுண்டா ?அனுபவித்திருக்கிறீர்களா ?


    ஏஞ்சல் உங்களின் குழந்தை இப்படி கண்ணை சிமிட்டி தூங்காமல் சிரித்ததால்தான் 2 வது குழந்தைக்கு வழி இல்லாமல் போய்விட்டது என்று வாட்ஸ்ப்பில் ஒருத்தர் வந்து சொல்லுகிறார் அது உண்மையா?

    பதிலளிநீக்கு
  16. காடராக்ட் அறுவை சிகிட்சை ஒரு கண்ணுக்கு செய்தால் அடுத்த கண்ணும் செய்துவிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். நன்றாக இருக்கும் கண்ணை ஏன் செய்ய வேண்டும்.?

    எனக்கு அடுத்த மாதமே இன்னொரு கண்ணில் அறுவை சிகிட்சை செய்ய வேண்டும் என்றார்கள் என் மாமியார் ஒரு வருடம் கழித்து செய்து கொள்ளலாம் என்றார்கள். நானும் அப்படி யே செய்து கொண்டேன்.

    என் அண்ணிக்கு முதல் கண் செய்து அடுத்த மாதம் இன்னொரு கண்ணும் செய்து விட்டார்கள். அரவிந்த் கண் மருத்துவ மனையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு கண்ணிலும் என்ன குறைபாடு, எந்த அளவுக்கு + அல்லது - என்பதைப் பொருத்த விஷயம் அது என்று நினைக்கிறேன். கண் மருத்துவர்கள் கொஞ்சம் over cautious ஆக இருந்தால், இரண்டு கண்களுக்கும் சில நாட்கள் இடைவெளியில் சிகிச்சை செய்துகொள்வதைப் பரிந்துரைப்பார்கள். சிகிச்சை செய்துகொள்பவர் என்ன வகையாக உணர்கிறார் என்பதை சில கண் மருத்துவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள இயலும்.

      நீக்கு
  17. ரொம்ப நாளைக்கு அப்புறம் வர்றேன். இதென்ன கேள்வி பதில் செஷன்? அப்போ காவிய புதன், அதிரடி வியாழன் எல்லாம் இப்போ இல்லையா? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன? காந்திய சுட்டுட்டாங்களா! இதென்ன கேள்வி ஆவி ! புதன் புதிர் - கேள்வி பதிலாக மாறி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிவிட்டது! நிற்க. நலமாக இருக்கிறீர்களா? பெங்களூர்ப் பக்கம் வந்தால் சொல்லுங்க, புதிய விலாசம் தருகிறேன்.

      நீக்கு
  18. //குடும்பத்தை நல்லபடி நடத்தத் தெரிந்தவர்கள் ஆண்களா? பெண்களா? //

    'நல்லாபடி' என்பதெல்லாம் முக்கியமில்லை.

    தங்கள் விருப்பப்படி குடும்பம் நடக்க வேண்டும் என்று விரும்புவர்கள் பெண்கள் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
      எல்லாம் சுவாரஸ்யமான கேள்விகள். யோசிக்க வைத்த பதில்கள். தூளிக்குழந்தை அனுபவங்கள் எல்லோருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
      படா சுட்டிகள் அவைகள்.
      என் மாமா பையன் இன்னோரு பாட்டு பாடு என்று கேட்டே
      இரண்டு மணி நேரம் தூங்காமல் இருப்பான்.

      காடராக்ட் செய்து கொண்டு, மற்றோரு கண்ணுக்கு செய்து கொள்ள மறுத்தவர் எங்கள் சிங்கம்.

      வைத்தியரிடம் நம்பிக்கை இல்லாமையும், தன் கண்ணின் மேல் அதிக நம்பிக்கையும் வைத்ததே காரணம்.

      நீக்கு
    2. நன்றி ஜீவி சார். நன்றி வல்லிசிம்ஹன்.

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.

    கொன்றால் பாவம், தின்றால் போச்சு.. என்பதற்கு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் உரை நன்றாக உள்ளது.வந்த
    கருத்துக்களில் விபரங்களும் அருமை.

    இன்றைய தலைப்பு பட்டிமன்றத்தை நினைவூட்டுகிறது. இருவரும் சேர்ந்து ஆலோசனை செய்து நடத்தினால் குடும்பம் நன்றாக இருக்கும்.எனினும் இருவரில் யாராவது ஒருவர் அக்கருத்துக்கு உடன்பட வேண்டுமே...!அங்குதான் பிரச்சனையே..!

    ஆண்களின் பாசம் கண்களில் கண்ணீருடன் கொப்பளிக்காது. உண்மையான பதில்கள். ஆனால், பாசமலரை காட்டி எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்:)

    தன் குழந்தைகளை விட மற்ற குழந்தைகளுக்கு அதன் சுபாவங்களை அவ்வளவாக தெரியாததால் முக்கியத்துவம் கொடுப்போம். அழகான பதில்..

    அனைத்து கேள்வி பதில்களும் தெளிவாக அருமையாக இருந்தன.

    கண்புரை சிகிச்சைக்கு பின் உடனே மற்றொரு கண்ணும் ஆப்பரேஷன் செய்யச் சொல்கிறார்கள். இப்படி நம் விருப்பத்துக்கு தள்ளிப் போடலாம் என இன்று தெரிந்து கொண்டேன்.

    /எனக்கு வந்த கோபத்துக்கு அவரைப் பார்த்து நெற்றிக்கண்ணைத் திறந்திருப்பேன். அப்போ அவர், 'நெற்றிக்கண்ணுக்கும் ஆப்பரேஷன் செய்கிறேன்' என்று கிளம்பிவிடுவாரோ என்ற பயத்தில் சும்மா இருந்தேன்./

    ஹா ஹா ஹா. அப்படி நெற்றிக்கண் எல்லோருக்கும் இருந்து விட்டால் மூன்று கண்களை வைத்துக் கொண்டு இந்த கண் ஆப்பரேஷன் பிரச்சனை இன்றி வாழ்க்கையை எப்படியோ ஒப்பேற்றி விடலாமே எனத் தோன்றுகிறது.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும், இரசிப்புக்கும் நன்றி சகோதரி!

      நீக்கு
  20. அடுத்த வாரத்துக்கான கேள்வி,
    உலகத்துக்கு இத்தனை ஆனந்தாக்களும்,சாமியார்களும் தேவையா.

    2, அவர்கள் இல்லாமல் நாம் வழி தவறி விடுவோமா.

    பதிலளிநீக்கு
  21. 1.இறந்த பின்னர் செய்யும் உறுப்பு தானம் குறித்து உங்கள் கருத்து என்ன?

    2.சாஸ்திர, சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாத பெற்றோருக்கு நேர்மாறாகக்குழந்தைகள் இருப்பதும், கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும் பெற்றோரின் குழந்தைகளுக்கு நம்பிக்கை இல்லாததற்கும் என்ன காரணம்?

    பதிலளிநீக்கு
  22. 3.திருமணம் முதல் எல்லாவற்றிலும் சடங்குகள், குறிப்பாக வைதிகக் காரியங்கள் என்பது தற்காலங்களில் பொருள் இல்லாமல் செய்யும் ஒன்றாக ஆகி விட்டது. காசி யாத்திரை என்பதன் பொருளே யாருக்கும் தெரியவில்லை என்னும்போது அதற்கு முன் வரும் சமாவர்த்தனம் என்றால் என்ன தெரியப் போகிறது. எல்லாம் ஓர் இயந்திரகதியில் நடக்கிறது. இது எதிர்காலத்துக்கு நல்லதா?

    4.கலப்புத் திருமணங்கள் பெருகி வருவதற்கு என்ன காரணம்? இது நல்லதா? கெட்டதா?

    5. காசிக்குச் சென்று திரும்புபவர்கள் இனிமேல் தாய், தகப்பன் ஸ்ராத்தமோ அமாவாசைத் தர்ப்பணங்களோ செய்ய வேண்டாம் என அவர்களாக முடிவெடுப்பது சரியா? அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா?

    6.எச்சல், பத்து போன்றவை பார்த்தால் அவர்கள் கடுமையான ஆசாரக்காரர்கள் என்று அனைவரும் அவர்களை விலக்கி வைப்பது ஏன்? சுகாதார ரீதியாகவே அது நல்லது இல்லை என்பது தெரியாதா?

    7. ஆடு, மாடு, நாய் போன்றவை தாகம் அதிகம் ஆனால் தண்ணீர்க்குழாய்களில் வாய் வைத்து நீரை உறிஞ்சும், பார்த்திருப்பீர்கள். அதன் பின்னர் அந்தக் குழாயைச் சுத்தம் செய்வது நல்லதா, இல்லையா? அதே போல் மனிதர் வாய் வைத்துக் குடித்தாலும் அப்படித் தான் அலம்புவோம். அதையும் குற்றமாகவோ குடித்தவர்மனதைப் புண்படுத்தியதாகவோ எடுத்துக்கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  23. 8.உணவைப் பகிர்ந்து உண்ணவேண்டும் என்பது சரி. ஆனால் ஒரே பாத்திரத்தில் இருந்து எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவது சரியா? தனியாகக் கிண்ணங்களில் போட்டுக்கொண்டால்/அல்லது போட்டுக்கொண்டு சாப்பிடச் சொன்னால் அது தப்பா?

    9.குழந்தைகள் மிச்சம் வைப்பதைப் பெற்றோர் சாப்பிடுவது சரியா?

    10. குழந்தைக்குத் தனியாக உணவைக் கொடுப்பது நல்லதா? அல்லது நம் தட்டிலிருந்து எடுத்து உண்ணப் பழக்கம் செய்வது நல்லதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்து கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். நன்றி. பதில் அளிப்போம்.

      நீக்கு
  24. ஆணோ பெண்ணோ பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும் ஆணும் பெண்ணும் சமம் சிதம்பரமா மதுரையா என்றெல்லாம் பார்க்கக்கூடாது

    பதிலளிநீக்கு
  25. மிக மிக தாமதமான என் வருகைக்கு மன்னிக்கவும் கெள அண்ணன், என் கேள்விகள் அஞ்சு மற்றும் அனைவருக்கும் கொடுத்த பதில்களை வியாழனே படித்து விட்டேன், நன்றி. ஆனா ஆறிய கஞ்சியாச்சே.. சனி ஞாயிறுக்குள் கொமெண்ட்ஸ் கொடுத்திடுவோம் என விட்டிருந்தேன்:)..

    ஆவ்வ்வ் கற்றரக் ஒரு மாதிரி முடிவுக்கு வந்துவிட்டதே. பொதுவாக ஒரு கண் மட்டும் எங்கும் செய்ததாக நான் கேள்விப்படவில்லை, ஒரு 6 மாத இடைவெளிக்குள்ளாக இரண்டையும் செய்வார்கள்.

    எங்கள் அப்பா, ஒபரேசன் முடிந்தபின் சொன்னது எனக்கு இப்பவும் காதில கேட்குது.. “இந்த சீப்பு பிளாக் கலர் என்றெல்லோ நினைச்சிருந்தேன் ஆனா இப்போ தான் தெரியுது பிறவுண்கலர் என்பது”.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா உண்மைதான்! ஆபரேஷனுக்கு முன்பு மங்கலாகத் தெரிந்தவை யாவும், ஆபரேஷனுக்குப் பிறகு மிகவும் பிரகாசாமாகவும், colorful ஆகவும் பார்க்கமுடிகிறது.

      நீக்கு
  26. //இதற்கு கிருபானந்த வாரியார் தனது சொற்பொழிவு ஒன்றில் கூறியதை பார்ப்போம்,
    //
    ஓ கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதற்குக் கிருபானந்த வாரியாரின் விளக்கம் ஒத்துப் போகிறது அருமை. மொத்தத்தில், உயிர்களை கொல்லாதே என்பதை இப்படி எல்லாம் மிரட்டிச் சொல்கிறார்கள்:)... ஹா ஹா ஹா ஆரு கேய்க்கிறா?:))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!