வியாழன், 26 மார்ச், 2020

விசு - ஜேக்கப் வயிரம்!



எதற்கோ எதையோ தேடப்போய் வேறெதுவோ சிக்க, அதைப் பிடித்துக்கொண்டு இறங்கிய இடத்தில் சிக்கிய வைரம்!  

"வைரம் போல் ஜொலித்தது!"    "வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்!"  இதெல்லாம் வைரம் பற்றிச் சொல்லப்படும் வார்த்தைகள்.

வைரம் என்றொரு மொழி மாற்றப் படம் - ஹிந்தியிலிருந்து - தமிழில் வந்தது.  ஹிந்தியில் அது விக்ட்டோரியா நம்பர் 203!

பொதுவாக ஒருவரிடம் எவ்வளவு திறமைகள் இருந்தாலும் அவருக்கு இருக்கும் பிரபல்யத்தைவிட வேறொருவருக்கு பிரபல்யம் அதிகமாய் இருக்கும் - பொது வாழ்வில், திரை வாழ்வில்...  

காரணம் வெவ்வேறாய் இருந்தாலும் இந்த முரண்பாட்டை சாதாரணமாக நாம் பார்த்திருப்போம்.

அதுபோல, 

உலகிலேயே பெரிய வைரம் எது என்றால் கோஹினூர் என்போம். அதைத் தோற்கடிக்கும் வைரம் ஒன்று இருந்திருக்கிறது, இருக்கிறது.  ஜேக்கப் வைரம் என்றும் சபிக்கப்பட்ட வைரம் என்றும் அறியப்படும் அதன் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறும் இருக்கிறது!



அதை விற்க முயற்சித்த ஜேக்கப் என்பவர் பற்றியும் சுவாரஸ்யமான கதைகள் உலவுகின்றன.   அவர் வைர வியாபாரியா, மேஜிக் நிபுணரா, உளவாளியா என்பதிலேயே விவாதம் அல்லது மர்மம் இருந்திருக்கிறது.  உளவாளி என்பதற்கு எந்தச் சான்றும் கிடைக்கவில்லை போலும்.  எது எப்படியோ, இந்த சபிக்கப்பட்ட வைரம் அவர் கைக்கு வந்ததும் கொஞ்ச வருடங்களில் அவரை அதன் ராசி ஒன்றுமில்லாமல் செய்து விட்டது என்று தெரிகிறது!  



பதினான்கு வருடங்கள் அவருக்குக் கண் வேறு தெரியாமல் போனதாம். பெரிய அளவில் பேசப்பட்டு வந்த வசதியான வியாபாரியான இவர் 1921 இல் மிகச் சாதாரணமான மனிதராக சிம்லாவில் ஒரு ஒற்றை அறையில் வாழ்ந்து முடிந்து போனார்.  



வைரத்துக்கு ராசி பார்த்து வாங்கவேண்டும் என்பார்கள்.   அது எப்படிப் பார்ப்பார்களோ...   அதையும் தேடிப் பார்த்தால் வைரத்தை எப்படி மதிப்பிட்டு வாங்குவது என்று விகடன் சொல்லியிருப்பதைப் படிக்க முடிகிறது.   "வைரத்தை ரிஷபம், துலாம் ராசிகளில் பிறந்தவர்களும் சுக்கிரன் சுபராக இருந்து சுக்கிர திசை நடப்பில் உள்ளவர்களும் 6,15,24 ம் எண்ணில் பிறந்தவர்களும் அணிவது சிறப்பு. வைரத்தை தங்கம் அல்லது பிளாட்டினத்தில் பதித்து மோதிர விரல் அல்லது நடு விரலில் வெள்ளிக்கிழமைகளில், சுக்கிர ஓரையில் அணிந்து கொள்வது நல்லது" என்று சொல்கிறது தமிழ் சுரங்கம் தளம்.அதே தளத்தில் "வெண்மையாகவும் தீவு போன்ற வடிவம் கொண்ட வைரம் தோஷமுள்ளதாகவும் இதை அணிவதால் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.' என்கிற விவரமும் காணக்கிடைக்கிறது. 

உண்மையில் இதை தமிழில் வயிரம் என்றுதான் சொல்ல வேண்டுமாம்.  பட்டைத்தீட்டத் தீட்ட பளிச்சிடும் கரிமமான வயிரம் உறுதிக்குப் பெயர் போனது.  வயிரம் பாஞ்ச கட்டை என்று சில மர வகைகளைக் குறிப்பிடுவார்கள், கேட்டிருப்போம்.  

ஆதி வயிரம் அகண்ட பாரதத்தில்தான் முதலில் கண்டறியப்பட்டதாம்,  எனினும் இப்போது தென் ஆப்பிரிக்காவின் கிம்பர்லியில்தான் 96 சதவிகித வயிரம் கிடைக்கிறது.  நீரால் ஈரமாகாத வயிரம் எண்ணெயால் ஈரமாகுமாம்!

கிரேக்கர்கள் வைரத்தை கடவுளின் கண்ணீர்த்துளி என்பார்களாம்.  ரோமானியர்கள் விண்ணிலிருந்து விழுந்த நட்சத்திரத் துண்டுகள் என்பார்களாம்.  எகிப்தியர்கள் வைர மோதிரத்தை நான்காவது விரலில்தான் அணிவார்களாம் - அந்த விரலிலிருந்து நேராக இதயத்துக்கு நரம்பு செல்வதாக நம்பிக்கை, அதை அன்பின் நரம்பாக நம்பினார்களாம்.

முன்னொருகாலத்தில் கரோப் மரத்தின் விதைகளை வைத்து அளவிட்டதால், வைரங்களை அளவிடும் முறைக்கு கேரட் என்று பெயர் வந்ததாம்.  ஒரு கேரட் என்பது 0.2 கிராம்.

இதெல்லாம் இங்கு படிக்கலாம்.



 ஜேக்கப் பற்றி எழுதப்பட்டிருக்கும் புத்தகத்தில் (அமேசானில்கிடைக்கிறது)  The plot thickens when Jacob attempts to trick the opium-addicted ruler into purchasing the diamond for an amount that far exceeds its real value.   என்கிறது அன்றைய டெலிகிராப் இந்தியா. 

இவ்வளவு உயர்ந்த வைரம் யாரிடம் இருக்கும்?  பெரிய பணக்காரரிடமிருக்கும்.  ஆம், அப்படிதான் இருந்தது-  ஆனால் பேப்பர் வெயிட்டாக!    அதிகப்படியான பணம் செய்த மாயமா, அல்லது அறியாமையா தெரியவில்லை! 

1884 ஓ; தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லி சுரங்கத்தில்கிடைத்த இந்த வைரம் வழக்கம்போல இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து விற்பனைக்கு மறுபடி இந்தியாவுக்கு வந்திருக்கிறது!



ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மேதகு ஒஸ்மான் அலிகான்  புகழ்பெற்ற ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தை நிறுவியவர்.  அவர் காலத்தின் மிக உயர்ந்த பணக்காரர்களில் ஒருவராக அறியப்பட்டவர்.  22 பிப்ரவரி 1937 இல் டைம் இதழில் குறிப்பிட்டுள்ளபடி, உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரர், இந்தியாவின் முதல் பணக்காரர்!  இங்கிலாந்து ராணி திருமணத்துக்கு மிக உயரிய நெக்லெஸ் பரிசளித்தாராம்.  இவருக்கும் ராக்பெல்லருக்கும் 140 பில்லியன்தான் வித்தியாசம்!  ராக்பெல்லர் என்றால் எனக்கு வாஷிங்டனில் திருமணம் நினைவுக்கு வருகிறது!

இவர் உலகின் ஐந்தாவது பெரிய வைரம் ஒன்றை பேப்பர் வெயிட்டாக உபயோகித்தாராம்.  அதை அவர் கண்டெடுத்த இடமோ அவர் அப்பாவின் செருப்பில்!  அந்த அளவு அதை மதித்திருக்கிறார் அவர் அப்பா!  இலை, மிதித்திருக்கிறார்!  அவர் அப்பா இறந்தபிறகு ஒருநாள் அவர் அப்பாவின் அரண்மனையிலிருந்து அப்பாவின் செருப்பில் கண்டெடுத்தாராம்.  வைரமாய் இருக்காது என்று நம்பி பேப்பர் வெயிட்டாக உபயோகித்தாராம் அவர்.   கோஹினூர் வைரத்தை விடப் பெரிதான இது இரண்டு கைகள் மட்டுமே மாறிய வைரம்!



அவர் அப்பா ஆறாம் நிஜாம்  அந்த வைரத்தைப் பெற்ற விதமோ மோசடி வகையைச் சேர்ந்தது!

மேலே சொல்லியுள்ள புத்தகத்தில் அந்த விவரமும் இருக்கிறது.  ஜேக்கபிடம் பாதி பணத்தை மட்டும் கொடுத்து, அவரை நம்பவைத்து, வேண்டாம் என்று சொல்லி வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று, இந்த மாதிரி மன்னர் பரம்பரைகள் நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அவர் போகாமலிருக்க, நீதிமன்றத்தில் இவர் பக்கமே தீர்ப்பாக, அரை விலையில் அதைப் பெற்றிருக்கிறார்.  

அதே சமயம் ஜேக்கப் வேறு இவரை அதிக விலை சொல்லி ஏமாற்றவும் முனைந்திருக்கிறார் என்கிறது டெலிகிராப்.

===================================================================================================

புத்தாண்டு எது என்கிற தொடரும் குழப்பம்...! அப்போது பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.

‘பிறை தெரிந்துவிட்டது... இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு’ - கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் புது தகவல் :

கி.பி. 6 - 7-ம் நூற்றாண்டின் மானசாரம் கட்டிடக் கலை மற்றும் சூரியனின் நகர்வு அடிப்படையிலான நாட்காட்டியைக் கொண்டு பழந்தமிழர் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு இன்று (ஜனவரி 5-ம் தேதி) பிறப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு எது?.. சித்திரை முதல் தேதியா, தை முதல் தேதியா என்ற சர்ச்சை ‘ஆட்சிக்கு ஆட்சி’ மாறிமாறி எழுந்துவரும் நிலையில், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் புதுத் தகவல் ஒன்று கூறுகின்றனர். இதுகுறித்து தமிழ் அறிஞரும் ஆய்வாளருமான தென்னன் மெய்ம்மன் கூறியதாவது:


சோழர் காலத்தில் பழந்தமிழர்கள் சூரியனை வழிபட்டு, அதன் அடிப்படையிலான நாட்காட்டியைப் பின்பற்றினர். அதன் அடிப்படையில் இன்று (5.1.2014) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. சூரியன் நகருவதால் ஏற்படும் நிழலை அங்குலம் அங்குலமாக கணக்கிட்டே சோழர்கள் நாட்காட்டியை நிர்ணயித்தார்கள். சூரியன் வடக்கில் ஆறு மாத காலமும் தெற்கில் ஆறு மாத காலமும் வலசை செல்லும் தன்மை கொண்டது. தமிழ் இலக்கியங்கள் இதை வட செலவு, தென் செலவு என்று குறிப்பிடுகின்றன.

அதன்படி மார்கழி மாதத்தின் அமாவாசை (ஜனவரி 1-ம் தேதி) முடிந்த மூன்றாம் நாள் (ஜனவரி 4-ம் தேதி) மாலை பிறை தெரியும். அதற்கு மறுநாள்தான் (ஜனவரி 5-ம் தேதி) தை முதல் நாள். ராஜராஜ சோழன் சதயம் தொடங்கி பூசம் வரை 12 நாட்கள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடினான்.

12-ம் நாள் முழு நிலவுடன் தைப்பூசத் திருவிழா நிறைவுறும். அதன் பெயர் ‘ஆட்டைத் திருவிழா’. இதற்கான ஆதாரங்கள் தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜன் திருவாசல் கல்வெட்டிலேயே இருக்கின்றன.

அதன் அடிப்படையில் இன்று மாலை பிறை தெரிந்த நிலையில், ஜனவரி 5-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.

இவ்வாறு தென்னன் மெய்ம்மன் கூறியுள்ளார்.

[தி இந்து 5 ஜனவரி 2014] 


=====================================================================================================

ஏதுக்கடி  குதம்பாய்...




==================================================================================================

பொக்கிஷம் :  இந்த வார பொக்கிஷம் சற்றே வித்தியாசமானது!



ஐம்பதுகளிலோ, அறுபதுகளிலோ அப்பா அப்போது பத்திரிகையில் வந்த படங்களை எடுத்து ஒட்டி, அதன் அருகில் இரண்டு வரி எழுதும் வழக்கம் இருந்திருக்கிறது என்று சமீபத்தில் வீடு மாறி, குப்பைகளை அலசியபோது தெரிந்தது.  இந்தப் படத்தில் இந்திராவுடன் இருக்கும் குழந்தைகள் யார் என்று சரியாய் யூகிக்க முடியவில்லை.  அப்பாவின் குறிப்புகள் வேறு குழப்புகின்றன! (இந்தப் படம் மட்டும் இரண்டாம் முறை வெளியிடப்படுகிறது...   அதன் தொகுப்பில் இருக்கும் மற்ற படங்களும் வெளியிடுவதால் இதையும் மறுபடி சேர்த்து விட்டேன்!)




--------------------------------------------------------------------------


குமுதத்தில் முன்பு சிரிப்புக்கு ஒரு படம் என்று வாரம் ஒரு படம் வெளியிடுவார்கள்.  இந்தப் படம் குமுதத்தில் வந்தது அல்ல.   ஆனால் சிவாஜியின் இப்படியொரு படம் நான் இப்போதுதான் பார்க்கிறேன்.



-----------------------------------------------------------------------------------------

குழந்தைகளுடன் இவ்வளவு ஃப்ரீயாக, உற்சாகமாக இருக்கும் இவர் யாரென்று நான் யூகிப்பது சரியென்றுதான் நினைக்கிறேன்!



------------------------------------------------------------------------------------------------------------

இவர் யாரென்று யூகிக்க முடியவில்லை...  எம் வி எஸ்?



--------------------------------------------------------------------------------------

எம் எஸ் வியா?  கே வி எம் மா?



அப்போது ஏதோ ஒரு பத்திரிகையில் அப்போதைய பிரபலங்களுடன் குழந்தைகளைச் சந்திக்க வைத்து படம் எடுத்து வாரா வாரம் வெளியிட்டிருக்கிறார்கள் போல...   பேப்பர் தரத்தைப் பார்த்தால் 'சிரஞ்சீவி'  பத்திரிகை போலவும் இருக்கிறது!

===================================================================================

கொரோனா படுத்தும் பாட்டில் எதுவும் ஓடவில்லை.  நாடு முழுவதும், உலகம் முழுவதும் பதட்டம்.  ஆனால் மக்களோ நிலைமையின் விபரீதம் அறியாமல் ஊர் சுற்றுவது பார்க்க வேதனையாக இருக்கிறது.  அவர்களின் அர்த்தமற்ற வீரம், சாகசம் மற்றவர்களுக்கு துன்பம் என்று அறியாதிருக்கிறார்கள்.  நேற்று அண்ணாசாலையில் ஒரு போக்குவரத்து ஆய்வாளர் கைகூப்பி மக்களை 'கால்களில் பணிந்து கேட்கிறேன், சொல்கிறேன்' என்று கெஞ்சி, ஒரு கட்டத்தில் குரல் உடைந்து அழுவது பார்க்கக் கண் கலங்குகிறது.




==============================================================================================

திரையுலகின் பெரிய ஆளுமைகளில் ஒருவராக இருந்த நடிகர், இயக்குநர் விசுவின் மறைவு இந்தக் கொரோனா பாதிப்புக்கு நடுவே அமுங்கிப் போனதும் சோகம்.  இவரை ரசிக்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது.  கொரோனா பிரச்னை இருந்திரா விட்டால் ஊடகங்கள் இவரை வைத்து இரண்டுநாள் ஒட்டி இருக்கும்.   ஆனால் அவ்வப்போது காட்டப்படும் சிறிய செய்தியாகிப் போனார்.  எந்த தொலைக்காட்சியும் அவர் பூத உடலைக் கூட காட்டவில்லை என்று நினைக்கிறேன்.  மணல் கயிறு படத்தில் காது கேளாதவராக வரும் எம் ஆர் ராஜாமணி, அதே படத்தில் நடித்திருக்கும் கிஷ்மு மற்றும் குரியகோஸ் ரங்கா இவரது சகோதரர்கள்.  இவர்களில் கிஷ்மு சில ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டார்.




=========================================================================================

158 கருத்துகள்:

  1. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு..

    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. >>> தணியாத தொண்டுள்ளம் நாட்டின் தேவை..<<<

    மூவா வரிகள்...

    இன்றைய தேவையும் அது தான்....

    பதிலளிநீக்கு
  3. இருந்தாலும் அப்போதெல்லாம் ஒன்றைச் சொல்வார்கள்...

    வைரம் யாரையும் நிம்மதியாக இருக்க விடாது என்று...

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் ஶ்ரீராம். விசு அவர்களின் மறைவு பற்றி ,யூ ட்யூபில் தான் பார்த்தேன். வைரம் என்று அவரைத்தான் சொல்கிறீர்களோ என்று பார்ததேன்.

    பதிலளிநீக்கு
  5. வைரம் பற்றிய விவரங்கள் மலைக்க வைக்கின்றன. எத்தனை ஏமாற்று வேலைகள்.வைரத்தின் மேலான மோகம் குறைந்ததாகவே தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களிடம் வைர நகை கிடையாது அம்மா. அதன்மேல் மோகமில்லை!

      நீக்கு
  6. பையனோடு உட்கார்தது இருக்கும் நடிகை ராஜசுலோசனா.

    பதிலளிநீக்கு
  7. மகள் கிசுகிசு மீட்ட சிரிக்கும் சிவாஜி படம் அருமை. அடுத்த படத்தில் இருக்கும் இந்தி நடிகை யாரென்று தெரியவில்லை. குழந்தைகள் பட ஸ்டில்லாக இருக்குமோ. இசை கற்றுக் கொடுப்பது நகைச்சுவை நடிகர் சாரங்கபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      அந்தப்படத்தை பார்த்ததும் நடிகர் சாரங்கபாணி என நானும் நினைத்தேன். நீங்களும் அதையே சொல்லி விட்டீர்கள். நன்றிமா...

      நீக்கு
    2. நீங்கள் சொன்னதும் அடையாளம் தெரிகிறது வல்லிம்மா...

      நீக்கு
  8. வைரம் என்பதும் இரும்பு என்பதும் பூமியில் கிடைத்த உலோகமே ஆனால் மனிதன்தான் இவைகளுக்கு மதிப்பு போடுகிறான் அதையொரு கல் என்று நினைத்தால் கல்தான்

    வைரத்தைவிட இரும்பு மனிதர்களின் வாழ்வுக்கு பெரும் உதவியாக இருக்கிறது ஆனால் மதிப்பு இல்லை

    எல்லாம் மனிதனின் மனக்கோலம் ஓபிஎஸ் கிண்ணத்தில் வைத்தும் சாப்பிடும் மிக்சருக்கு இணையாகாது இந்த வைரம்

    பத்து தினங்கள் பட்டினியாய் போட்டு பசி நேரத்தில் வைரத்தையும், மிக்சரையும் கொடுத்தால் மிக்சரையே தேர்வு செய்வான் மனிதன்.

    வெகுகாலத்துக்கு முன்பு படித்த நூல் "பனி மனிதன்" அதில் வைரம் இமயமலையில் கொட்டிக் கிடப்பதாக சித்தரித்து எழுதி இருப்பார் ஆசிரியர் யாரும் அதை மதிக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
      சிலை என்றால் வெறும் சிலை தான்
      உண்டென்றால் அது உண்டு
      இல்லை என்றால் அது இல்லை!

      நீக்கு
    2. வைரத்தின் மீது ஏனோ இந்தக் கோபம் கில்லர் ஜி?!!

      நீக்கு
    3. //அதையொரு கல் என்று நினைத்தால் கல்தான்// - கில்லர்ஜி... உங்கள் பின்னூட்டத்தில் அர்த்தம் இருக்கிறது. வெறும் கார்பன் கல்லை இவ்வளவு மதிப்பு கொடுத்து உயரத்தில் வைக்க வேண்டுமா?

      அலுமினியம் கண்டுபிடிக்கப்பட்டபோது அது வெள்ளியைவிட விலை உயர்ந்ததாக இருந்தது. அப்புறம்தான் அதன் ஒரிஜினல் மதிப்பு புரிய ஆரம்பித்தது. இப்போ அது ஏழைகளின் எவர்சில்வர்.

      ஒரு பொருளின் மதிப்பு, நாம் கொடுக்கும் மதிப்புதான். அது சரியாக இருக்கணும்னு அவசியமில்லை. மாமனார் கொடுத்த நகையைக் காட்டிலும், நம் அப்பா, இறப்பதற்கு முன்பு நமக்கு சாதாரண காகிதத்தில் எழுதிய கடிதம் விலை உயர்ந்ததாக இருக்கும் (பொதுவா... ஹா ஹா).

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. தமிழ்ப்புத்தாண்டுத் தகவல் சுவாரஸ்யம்.நிறையத் தகவல்கள்.பிறகு வந்த உங்கள் கவிதையும் தான்.அரசியல் வேண்டாம் என்றாலும் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    வைரம் பற்றிய தகவல்கள் பிரமிக்க வைக்கிறது. இந்தக் கல் அதிர்ஷ்டத்தின் நிலைபாடையே தடுமாற வைக்கும் என்ற அளவுதான் கேள்வி பட்டுள்ளேன்.

    கிருஷ்ணர் காலத்திலிருந்து இந்த கதை தொடருகிறதா எனவும் நினைக்கிறேன். ஜாம்வானிடமிருந்து அவர் திருடி வைத்துக் கொண்டிருந்த சியாமந்தமணி என்ற விலைமதிப்பற்ற கல்லை பெற முயற்சித்து போரிட்டு கிருஷ்ணர் இறுதியில் வெற்றியடைந்தது அந்த கல்லுடனும், அவர் ஜெயிப்புக்கு பரிசாக கிடைத்த அவர் பெண் ஜாம்பவதியுடனும் திரும்பினார் என்றொரு வரலாறு உண்டல்லவா? அதன் தொடர்ச்சி தான் அந்த கல் இடம் மாறி பலரிடம் இருப்பதாக கேள்விபட்டுள்ளேன். அதுதான் கோஹினூர் வைரம் என்பதாகவும் கேள்வி பட்டுள்ளேன். தெரியவில்லை...
    இன்னொரு முறை தங்கள் பதிவை படித்து மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

    /வைரம் என்றொரு மொழி மாற்றப் படம் - ஹிந்தியிலிருந்து - தமிழில் வந்தது./

    இதைப் படித்தவுடன் எனக்கு முதலில் சிவாஜி நடித்த படம் "வைரம்" நினைவுக்கு வந்து விட்டது. இன்று என்ன கிழமை "வியாழனா, வெள்ளியா"? என்ற சந்தேகமும் வந்து விட்டது. ஹா. ஹா. ஹா.

    வைரம் உயிரை நிமிடத்தில் எடுக்கும் காதலனுக்கு நிகர் என்ற செய்தியும் வைரத்தை பார்த்தாலே ஒரு பயத்தை தோற்றுவிக்கும். இப்போது "கொரோனா" அந்த இடத்திலிருந்து பெயர் பெற்று வருகிறது.

    கவிதை அருமை. வீடும், நாடும் ஒன்றுதான் என்பது போல் இருக்கும் கவிதை ரசித்தேன். "குதம்பாய்" என்றால் என்ன அர்த்தம்? செல்லமாக அழைப்பதா?

    நல்ல நடிகர் விசு அவர்கள். அவரின் மறைவு பற்றி நானும் படித்தேன். கஸ்டமாக இருந்தது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கமலா, சித்தர் பாடல்களில் குதம்பாய் என்று விளித்துப் பாடல்கள் வரும்.

      நீக்கு
    2. குதம்பை என்பது பெண்களின் காதணி. குதம்பாய் என்று பெண்ணை விளிக்கிறார்.

      நீக்கு
    3. விளக்கமான தகவலுக்கு நன்றி சகோதரி.

      நீக்கு
    4. //இன்று என்ன கிழமை "வியாழனா, வெள்ளியா"? என்ற சந்தேகமும் வந்து விட்டது. // - நீங்க வேற கமலா ஹரிஹரன் மேடம்... காலையில் படித்துவிட்டு பின்னூட்டங்களைப் பார்த்தால் கேஜிஜி சார் மறுமொழி. இன்று புதனா, வியாழனா என்ற சந்தேகமே எனக்கு வந்துவிட்டது.

      நீக்கு
    5. /காலையில் படித்துவிட்டு பின்னூட்டங்களைப் பார்த்தால் கேஜிஜி சார் மறுமொழி. இன்று புதனா, வியாழனா என்ற சந்தேகமே எனக்கு வந்துவிட்டது./

      ஹா.ஹா.ஹா. அது சரி..! நீங்கள் எனக்கும் முன்னாடியே பிறந்து விட்டீர்கள் போலும்.( நாள் கணக்கில்தான் சொல்கிறேன்.ஹா.ஹா ஹா.)

      நீக்கு
    6. கமலா அக்கா...   ஜாம்பவான் வரலாறு தெரிந்த கதை என்றாலும் இங்கு அதை சரியாக நினைவு கூர்ந்தது சிறப்பு.   சிவாஜி நடித்த படம் வைரநெஞ்சம்.  பத்மப்ரியாவின் முதல் தமிழ்ப்படம் அது. (முதலில் ஹேமமாலினி நடிப்ப்பதாக இருந்ததாம்)

      நீக்கு
    7. குதம்பாய் க்கு விளக்கம் சொல்லி விட்டார்கள்.  ஸோ, அதனை விட்டு விடுவோம்.  புதனோ வியாழனோ...   பதில் வருகிறதே...   இல்லையா?  கொஞ்ச நாளைக்கு ரொம்பவே டைட்டாக இருக்கும்போல தெரிகிறது.  அத்தியாவசியப்பணி என்பதால் பணிக்கு செல்லாமல் இருக்க முடியாது.  சொந்த வாகனம் கிடையாது.  ஆட்டோவை அனுமதிக்க மறுக்கிறார்கள்.  நீண்ட நாட்கள் அலுவலகத்திலேயே தங்கவும் முடியாது.  தமிழ்நாட்டின் நிலை ரொம்ப மோசமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.  வெளியில் சொல்லாமல் வைத்திருப்பதாய் கிசுகிசுக்கிறார்கள்.  

      நீக்கு
    8. வணக்கம் சகோதரரே

      இவ்வளவு இக்கட்டிலும் தாங்கள் பணிக்கு செல்வது மிகவும் கடினந்தான். உங்களின் நிலைமை புரிகிறது. நீங்கள் இப்போது ஜாக்கிரதையாக வெளியே சென்று வர பிரார்த்தனை செய்கிறேன். ஒவ்வொரு நாட்களும் ஒரு பிரம்ம பிரயத்தனத்தில் நகர்கிறது. இங்கும் தினமும் வரும் பால் சப்ளை இல்லை. வீட்டிலுள்ள சிறு குழந்தைகளுக்கு பால் தர இயலவில்லை. ஆன்லைன் வர்த்தகங்கள் சட்டென நின்று போனதில், மளிகை சாமான்கள், குழந்தைகளுக்கு வேண்டிய பொருட்கள் என பலதும் பற்றாக்குறை. கடைகள் சில திறந்திருப்பினும் வெளியே போக பயங்கள். கொரோனா இதையெல்லாம் புரிந்து கொண்டு உலக நாடுகளை விட்டு நிரந்தரமாக சீக்கிரம் விலக தினமும் பிராத்தனைகள் செய்கிறோம். வேறு வழி தெரியவில்லை..!

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    9. /தமிழ்நாட்டின் நிலை ரொம்ப மோசமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.// - இங்கு 'மதம்', 'இனம்' பெயரால் மக்களை (பாதிக்கப்பட்டவர்களை) அடையாளம் கண்டு வெளியில் சொல்லுவதும், அவர்களைத் தனிமைப்படுத்துவதும் கடினமாக இருக்கும் (அரசியல் கலந்துள்ளதால்). வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இங்கு நோயைப் பரப்புவதும், தனிமைப்படுத்திக்கொள்ள உடன்படாததும், அதிலும் ஏர்போர்ட் நெருங்குவதற்கு முன்னால் பாராசிட்டமால் சாப்பிட்டு, ஜுரம் இருப்பதைக் குறைத்துக்காட்டுவதும் என்று ஏகப்பட்ட திருவிளையாடல்கள். என்னைப் பொறுத்தவரையில் அரசு, எச்சரித்துள்ளது, ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. உதவி செய்யத் தயாராக உள்ளது. அதையும் மீறி மக்கள் பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட மக்களே பொறுப்பாளிகள்.

      நீக்கு
    10. /சிவாஜி நடித்த படம் வைரநெஞ்சம். பத்மப்ரியாவின் முதல் தமிழ்ப்படம் அது. (முதலில் ஹேமமாலினி நடிப்ப்பதாக இருந்ததாம்)/

      ஓ.. அப்படியா? தகவலுக்கு நன்றி சிவாஜி நடித்த படம் வைர நெஞ்சமா? ஹேமமாலினியும், பத்மபிரியாவும் சாயலில் ஒன்றாகத்தான் இருப்பார்கள்.

      நான் வைரம் என்றதும்,"நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்தேன்." என சிவாஜி ஜெயலலிதா பாடும் பாட்டு நினைவுக்கு வந்தது. அதில் வைரக்கடத்தலை பற்றி பாட்டு முழுமைக்கும் வரும். பிறகு அந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் "ராஜா" என அறிந்தேன். எப்படியோ வைரத்தில் சிவாஜி வந்து விட்டார். ஹா ஹா ஹா.
      நன்றி.

      நீக்கு
    11. நன்றி கமலா அக்கா...

      குழந்தைகள் இருக்கு வீட்டில் ரொம்ப சிரமம்தான்.  வெளியில் செல்லும் ஆள் ஒரே ஆளாக இருக்க வேண்டும்.  அவர் அவ்வப்போது சென்று கிடைக்கும் பொருளை வாங்கி வந்துவிட வேண்டும்.   வெளியில் கொண்டு செல்ல என்று ஒரே பையையே உபயோகிக்க வேண்டும்.  உள்ளே வந்ததும் அந்தப் பை உட்பட அனைத்தையும் சுத்தம் செய்துவிட வேண்டும்.

      நீக்கு
    12. ஆமாம் நெல்லை...  நானும் படித்தேன்.  யாரோ ஒருத்தன் எனக்கு வந்து விட்டது...   இன்னும் நாலு பேருக்கு வரட்டுமே என்றுதான் பரப்பினேன் என்று சொன்னதைக் காட்டியதாக ஒரு நண்பர் சொன்னார்.  உண்மையோ, பொய்யோ...  ஆனால் மாஸ்க் விலக்கி, எச்சிலைத் தொட்டு மின்வண்டியின் கைப்பையில் தடவும் ஒரு இளைஞன் வீடியோவை வாட்ஸாப்பில் பார்த்தேன்.

      நீக்கு
    13. ஆம்..  ராஜா படத்தில் அந்தப் பாடல்.   அதுவும் ஹிந்திப்படத்திலிருந்து காப்பிதான்.  ஹிந்தியில் தேவ் ஆனந்த், ஹேமமாலினி!  ராஜா படத்திலும் எஸ் பி பி பாடல் உண்டு..  "இரண்டில் ஒன்று..  நீ என்னிடம் சொல்லு.."

      நீக்கு
  12. // குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. சித்தர் ஒருவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைத்து பாடியிருப்பதால் அவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள்.// நன்றி : Quora.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்தரைத் தேடி ஓடும்படி ஆகிவிட்டதே நிலைமை!
      ஒருவேளை, 2013-ல் பட்டினத்தார் ஆகப் பார்த்தாரா ஸ்ரீராம்? ‘பாஸ்’-ன் சத்தம் கேட்டு பயந்து வீட்டுக்குள் ஓடிவந்துவிட்டாரோ.. ஹா! ஹா!

      நீக்கு
    2. அவ்வப்போது படிக்கும் ஏதாவது ஒரு இன்ஸ்பிரேஷனை  வைத்து எழுதுவதுதான் ஏகாந்தன் ஸார்...   பாஸ் என்னை என்ன செய்ய முடியும்?  இருங்கள் பாஸ் பக்கத்தில் இருக்கிறாரா என்று பார்த்துக் கொள்கிறேன்!

      நீக்கு
  13. /வைரத்தை வயிரம் என்றுதான் சொல்லவேண்டும்!/ மய்ய மொழியில் வய்ரம் என்று சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைரம் - வயிரம் - வய்ரம் - வய்ரோம் - வைய்றோம் - என்றாகி விடப் போகின்றது...

      நீக்கு
    2. // மய்ய மொழியில் வய்ரம் என்று சொல்லலாமா? //


      ஹா..  ஹா..  ஹா...    லாமே!

      நீக்கு
  14. சுவையான கதம்பம். பொக்கிஷம் - முதல் படம் சென்ற வாரமும் வந்ததோ?

    வயிரம் - ஸ்வாரஸ்யம்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்..   முதல் படம் முதல் வாரமும் வந்தது என்று நானே பதிவிலேயே சொல்லி இருக்கிறேனே...   நன்றி.

      நீக்கு
  15. ஜேக்கப் வயிரம் பற்றிய தகவலும், பொக்கிஷப் படங்களும் சிறப்பு. ஆனால் அந்தப் படங்களில் இருக்கும் திரை பிரபலங்களை கண்டு பிடிக்க வயசு போறவில்லை.வைரம் என்னும் படத்தில் ஜெய்சங்கரும், ஜெயலலிதாவும் நடித்ததாக ஞாபகம். அதில் ஒரு டூயட் பாடல் கூட  எஸ்.பி.பி.யோடு இணைந்து ஜெயலலிதா பாடியிருப்பார் என்று நினைக்கிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...   "இது மாங்கனி போல் தேகம்"  எனும் பாடல்...  ஹிந்திப் பாடல் ஒன்றின் அபப்ட்டமான காப்பி!

      நீக்கு
  16. காலம் சென்ற விசுவின் சகோதரர்கள் ராஜாமணியும், கிஷ்முவும்தான். சூர்யகோஸ் ரங்கா அவருடைய சகோதரியின் கணவர்.இப்படிக்கு சினிமா கிசுகிசு எழுத்தாளர்  என்னும் பட்டத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாத  பா.வெ. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா - சினிமா கிசு கிசு வாசகர்.

      நீக்கு
    2. குரியகோஸ் ரங்காவை, சூர்யகோஸ் ரங்கா என்று சிவகுமார் ஃபேமிலிக்கு மாற்றிய பானுமதி வெங்கடேச்வரன் அவர்களை 'சினிமா கிசுகிசு எழுத்தாளர்' என்று எப்படி ஏற்றுக்கொள்வது? ஹா ஹா (ஒரு நாடகத்தில் குரியகோஸ் என்ற பாத்திரத்தில் நடித்ததனால் அவர் பெயர் குரியகோஸ் ரங்கா)

      நீக்கு
    3. அது தெரியாது நெல்லை.  ஆனால் விசு கார்த்திக்கை வைத்து எடுத்த ஒரு படத்தில் நடித்த சந்திரசேகருக்கு குரியகோஸ் என்று பெயர்.

      நீக்கு
    4. இதற்குப் பெயர் கிசு கிசு இல்லை. வெறும் தகவல் அவ்வளவு தான்.
      கிசு கிசு என்பது வேறே. குமுதத்தால் இலக்கணம் வகுக்கப்பட்ட கலை அது.

      நீக்கு
  17. நண்பர்களே, ஒரு முக்கிய வேண்டுகோள். என் முதல் பெண் அரிஜோனா மருத்துவ பல்கலைக் கழகத்தில் போன ஜூன் முதல் இங்கு MBBS முடித்து விட்டு M.D. இடம் கிடைத்து, மேல் படிப்புக்கு சென்றாள். அங்கு வகுப்பறை கல்வி இல்லாமல், M.D. படிப்பவர்கள் மருத்துவர்களாகவே பணி புர்வார்கள். ஆயின், இன்றைய சூழலில் அவள் பல்கலைக் கழகத்தில் ஒரு 200 கொரோனா நோயாளிகள் சேர்க்கப் பட்டிருப்பதால், எல்லா மருத்துவர்களும் முன்னின்று வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தன்னால் முடிந்ததை என் பெண்ணும் செய்து கொண்டிருக்கின்றாள். இங்கு போல் இல்லாமல் அங்கு medical protocol மிகவும் சீறாகப் பின் பற்ற படும். எனவே, சாப்பிடுவது, நீர் குடிப்பது போன்றவையே மிகவும் கடினமாக இருக்கின்றன. maskயை எடுப்பதற்குள் அடுத்த emergency case வந்து விடுகின்றதாம். எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தாலும், முடிவில் நாங்கள் இருவரும் அவளுடைய பெற்றோர்தானே. தானாடா விட்டாலும் தன் சதையாடும் என்பதற்கேற்ப இருவரும் பயந்து போய் இறைவனை பிரார்த்தப் படி இருக்கின்றோம். நீங்கள் யாவரும் என் நண்பர்கள். எனவே, கேட்கின்றேன். யாவரும் அவளுக்காகவும் அவளது டாக்டர் நண்பர்களுக்காகவும் மனமொன்றி பிரார்த்திப்பீர்களாக. இந்த கொரோனா இந்த உலகை விட்டே வெகு சீக்கிரம் ஓடி விட வேண்டும் என்று யாவரும் வேண்டிக் கொள்ளுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      இன்றைய சூழலில் தன்னலம் கருதாமல் நோயாளிகளின் தேவைகளுக்கு உழைக்கும் மருத்துவர்களின் நலத்திற்கு நாம் அனைவரும் பிராத்தனைகள் செய்வோம். தங்கள் மகளுடைய சேவை மிகப் பெரிது.ஆனாலும், அவரை கவனமாக இருக்கச் சொல்லும் பாசமுள்ள உங்கள் மனதின் கலக்கமும் புரிகிறது. அவரின், மற்றும் அவரைச் சார்ந்த மருத்துவ நண்பர்கள் உடல், மன நலத்திற்காக பிரார்த்திப்போம். இந்த வைரஸும் வெகு விரைவில் தன் செயல் இழந்து போக இறைவனை மனதாற அனைவருமாக கூட்டாக சேர்ந்து பிரார்த்திப்போம்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. நிச்சயம் பிரார்த்தனை செய்வோம்.

      நீக்கு
    3. கமலா மற்ரும் கௌதமன் இருவருக்கும் மிக்க நன்றி. Man is a social animal. நம்மை சுற்றி உள்ளவர்கள் நமக்கு தெம்பு கொடுக்கும்போது வரும் சுய தைரியம் தனி. மிக்க மிக்க நன்றி.

      நீக்கு
    4. //மருத்துவ நண்பர்கள் உடல், மன நலத்திற்காக பிரார்த்திப்போம். இந்த வைரஸும் வெகு விரைவில் தன் செயல் இழந்து போக இறைவனை மனதாற அனைவருமாக கூட்டாக சேர்ந்து பிரார்த்திப்போம்.//

      நாள் தோறும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறோம். ரமா உங்கள் மகளுக்கும் பிரார்த்தனை செய்கிறோம்.
      அவர்கள் சேவைகள் மகத்தான சேவை.
      இறைவன் காப்பார்.

      நீக்கு
    5. ரொம்ப நன்றி கோமதி. பாராட்டிற்கும் பிரார்த்தனைக்கும் வந்தனங்கள்.

      நீக்கு
    6. உங்கள் மகளுக்காகவும், இக்கட்டான இந்நேரத்தில் நேரம் காலம் பார்க்காது சேவை செய்யும் மனிதர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை எப்போதும் உண்டு.

      நீக்கு
    7. உங்கள் மகள் மட்டுமல்லாது, மருத்துவத்துறையில், காவல்துறை, தண்ணீர் என்று அனைத்து அத்தியாவசிய பணிகளிலும் இருப்பவர்களையும், கூடவே நிலைமையின் விபரீதம் புரியாது சுற்றி வரும் மக்களையும் இறைவன் காக்க பிரார்த்திப்போம்.

      நீக்கு
    8. ஏகாந்தன் சார் மற்றும் என் அன்பு நண்பர் ஸ்ரீராம் இருவருக்கும் என் நன்றிகள். இதற்குத்தான் இனிய நண்பர்கள் வேண்டும் என்பது. எனக்கு யானை பலம் வந்து விட்டது. நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையும் பிறந்து விட்டது.

      நீக்கு
    9. //அவளுக்காகவும் அவளது டாக்டர் நண்பர்களுக்காகவும் மனமொன்றி பிரார்த்திப்பீர்களாக.// - இறைவன் பணியைச் செய்பவர்களுக்கு அவனிடமே வேண்டத் தேவையில்லை. அவர்களது நலன், இறைவனது பொறுப்பல்லவா? கவலை வேண்டாம் ரமா ஸ்ரீநிவாசன்.

      நீக்கு
  18. வைரம் குறித்து அறிந்து கொள்ளக் கூட வசதி இருக்கவேண்டும் எனும் கொள்கையுடைய நான் இந்தப் பதிவை இரசித்துப் படித்தேன்..சொல்லிச் சென்றவிதம் அப்படி...டமாரச் சப்தத்தில் மெல்லிசை அடங்கிப் போதல் சகஜமே.அப்படியே விசு அவர்களின் மரணமும்...

    பதிலளிநீக்கு
  19. காலையிலேயே வியாழன் கதம்பம் படித்தேன். காலையிலேயே கருத்திட்டால் அதுக்கு கேஜிஜி சார்தான் பதில் தருவார்கள், மதியத்துக்கு மேல் ஸ்ரீராம் எட்டிப்பார்ப்பார் என்று கெளளி சொன்னதால் காத்திருந்தேன். ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதியத்துக்கு மேல் வர முயற்சித்தாலும் மறுபடியும் பிஸியாகி இப்போதுதான் மறுபடி வரமுடிந்தது நெல்லை...  ஸாரி...

      நீக்கு
    2. இது சும்மா கேஜிஜி சாரை வம்புக்கு இழுக்கப் போட்ட பின்னூட்டம். நீங்க ரொம்ப பிஸியாகிவிட்டதால், (அவசர வேலைகளில்) அவர் மறுமொழி கொடுத்திருப்பார்.

      நீக்கு
    3. //கெளளி//

      யாரந்த கௌரின்னு நான் கேக்கல்லை எனக்கு வாட்சப் மெசேஜில் கேட்டு சொல்ல சொல்லி பிஞ்சு எழுத்தாணி சொன்னாங்க :)

      நீக்கு
    4. கவுளி-பல்லி..... அதிருக்கட்டும்... ஆண்களுக்கு பெண்கள் பெயர் நினைவில் இருக்கும் (மனதில் ஊசலாடிக்கொண்டிருக்கும்). இந்த அதிராவுக்கு என்ன.. பெண் பெயர் நினைவுக்கு வருகிறது?

      லீவு விட்டாலும் இணையத்துக்கு வருவது குறைந்துவிட்டதா? ஒருவேளை வாங்கிக் குவித்த பொருட்களை வைத்து ஏதேனும் இனிப்புவகையைச் செய்து, அது போணி ஆகாததால், தானே மெதுவாகத் தின்று தீர்த்துக்கொண்டிருக்கிறாரோ?

      நீக்கு
    5. //ஏதேனும் இனிப்புவகையைச் செய்து, அது போணி ஆகாததால், தானே மெதுவாகத் தின்று தீர்த்துக்கொண்டிருக்கிறாரோ?//

      ROFL :))))))))))))))))

      நீக்கு
  20. வைரம் வாங்குவதற்கே ரொம்ப யோசனையா இருக்கும். இது சரியா வருமா, கெடுதல் வைரம் ஆகிவிடுமா (அதாவது நல்லதில்லா வைரம் அத்துடன் பிரச்சனைகளைக் கொண்டுவரும்) என்று. பொதுவா வைரம் வாங்குகிறோம் என்றால், அதனை வீட்டில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சரியா வருதா என்று பார்த்துப் பிறகு அதனைக் கட்டித் தருவார்கள் (அதாவது மோதிரமாகவோ, காதணியாகவோ தங்கத்துடன் சேர்த்துச் செய்வதை வைரம் கட்டுதல் என்பார்கள்). நானும் அப்படிப் பார்த்து அருமையான வைரத்தோடு வாங்கியிருக்கிறேன்.

    அப்புறம் அந்த ஊரில் ஒரு புதிய கடை வந்தது. அதில், போலி வைரம் (செயற்கை வைரம்) கொண்டு செய்த மோதிரங்கள், காதணிகள் போன்றவை, சுமார் 600 ரூபாய் விலையில் கிடைத்தன. அவை கேரண்டியானவை. வாங்க எனக்கு ஆசை. ஆனால் மனதில், இப்படிப் போலி வைரங்களை அணிந்து அதில் என்ன மகிழ்ச்சி வந்துவிடும் என்று தோன்றி வாங்கவில்லை.

    வைரங்கள் விலை மதிப்பில்லாது இருந்த போதும், அதனை விலை மதிப்பிடுவது மிகக் கடினம். அதனால்தான் தங்கமே அளவுகோலானது.

    ஒரு புத்தகத்தில் படித்தேன். கேபிஎஸ் அவர்களுக்கு சன்மானமாக 4 பெரிய வைரக் கற்கள் கொடுக்கப்பட்டனவாம். அவர் இறந்த பிறகு அவரது சொத்தை உறவினர் நால்வருக்குப் பிரிக்கும்போதுதான் இதனைக் கண்டார்கள். பிறகு அதனைச் சோதித்ததில் அத்தனையும் போலிக் கற்கள் என்று தெரிந்தனவாம். எவன், அவரை ஏமாற்றினானோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைரத்தைப் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.  கேபிஎஸ் தகவலும் புதிது.  பாவம் அவர் இருக்கும் வரை தான் நல்ல நான்கு வைரக்கர்களுக்கு சொந்தக்காரர் என்ற பெருமையுடன் இருந்திருப்பார்.

      நீக்கு
    2. கேபிஎஸ் அவர்களைப் பற்றி, கலைஞானம் அவர்கள் அவருடைய புத்தகத்தில் ஒரு சில அத்யாயங்கள் எழுதியிருந்தார். கொஞ்சம் கடுமையாக, கோடு போட்டுக்கொண்டு வாழ்பவர்களுக்கு நெருங்கிய சொந்தம் என்று யாருமே கடைசி காலத்தில் இருக்க மாட்டார்கள். அவருடைய உறவினர்கள் கேபிஎஸ் அவர்களுக்கு மன நிம்மதியை வழங்கவில்லை. செய்வினை வைத்தார்களாம். மன நிம்மதியைத் தொலைத்ததால், கேபிஎஸ் அவர்கள், பித்துக்குளி அவர்களை வீட்டுக்கு ஒரு நாள் வரவழைத்து முருகன் மீதான பாடல்களைப் பாடுமாறு கேட்டுக்கொண்டாராம். அவர்களும் சில மணி நேரங்கள் பாடிவிட்டு, தங்கள் கேசட்டுகளையும் கொடுத்துச் சென்றனராம். பிறகு சில நாட்களில் கேபிஎஸ் அவர்கள் மறைந்தாராம் (தலையை நிமிர்த்தி வைத்துக்கொள்ள முடியாமல் எப்போதும் தலை கீழேயே தொங்குவதுபோல் அவருக்கு கடைசி நாட்களில் இருந்ததாம், செய்வினையால்).. இன்னும் நிறைய எழுதியிருந்தார்.

      அதில் சுவாரசியமான ஒன்று, அந்தக் காலத்து நாடகத்தில், ஆண், பெண் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பாடுவார்கள். எஸ் ஜி கிட்டப்பா பாடலில் வல்லவர். கே பி எஸ்ஸும் மிக வல்லவர். இருவரும் மேடை ஏறும் நாடகங்களில் சில சமயம் மணிக்கணக்காகப் பாடுவார்களாம் (இலங்கையில் அப்படி நிறைய நாடகங்கள் நடத்தினார்களாம்). கேபிஎஸ் அவர்கள் கலைஞானத்திடம் சொன்னது, "ஐயர் என்னைப் பாட்டால் தோற்கடிப்பது கடினம் என்று திருமணம் செய்துகொண்டுவிட்டார்' என நகைச்சுவையாகச் சொல்லுவாராம்.

      நீக்கு
    3. செய்வினை எல்லாம் நம்புகிறீர்களா நெல்லை?  என் உறவு வட்டத்திலும் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் எனக்கு பெரிய நம்பிக்கை வந்ததில்லை அதில்.

      நீக்கு
    4. கலைஞானம் எழுதியிருந்தார். அப்புறம் கேரளாவிலிருந்து ஒரு மாந்திரீகரைக் கூப்பிட்டுப் பார்த்ததில், அவர் கேபிஎஸ் வீட்டு முகப்பில் ஒரு செய்வினையை (பூமிக்குள் இருந்து) எடுத்துக் காண்பித்தாராம். இன்னும் இருக்கிறது என்றாராம். அப்போதே கேபிஎஸ் ஸுக்கான நேரம் வந்துவிட்டதால் மாந்திரீகர் பணி முடிவுறாமலேயே அவரை அனுப்ப நேர்ந்துவிட்டது.

      செய்வினை என்பதை நம்புகிறேன் (நிறைய இந்த சப்ஜெக்டைப் படித்திருப்பதால்). ஆனால் அது ஆபத்தான பாதை. அதை பிறருக்கு முயற்சித்தவர்கள், அதனாலேயே தன் முடிவையும் கோரமாக எட்டுவார்கள் எனத்தான் படித்திருக்கிறேன்.

      நீக்கு
    5. இதைப்பற்றி அனுபவங்களையே, தகவல்களையோ கட்டுரை ஆக்கலாமா?  தெரிந்தவர்கள் எழுதி அனுப்பினால் தக்க நேரத்தில் வெளியிடலாம்.

      நீக்கு
    6. மாந்த்ரீகம் ஒரு கலை. நல்லதுக்குப் பயன்படலாம். காசு சம்பாதிப்பதற்காக அதனைக் கெட்டசெயல்களுக்கு சிலர் பயன்படுத்துகிறார்கள். அதன் பலன் அவர்களுக்கே வெடிவைத்துவிடும். ஆபத்தான பாதை.
      இதுபற்றியும், அமானுஷ்ய அனுபவங்கள், ஜோதிடம் பலித்த சமயங்கள் என அனுபவங்களை வரவழைக்கலாம். நமது புலிகளிடம் சரக்கு இருக்கும்! வாசிக்க நிறையக் கிடைக்கும்.

      நீக்கு
    7. ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ஏகாந்தன் ஸார்.. நம்மைத் தவிர யாராவது இந்தக் கோரிக்கையைப் படித்தார்களா என்று தெரியவில்லை.

      நீக்கு
  21. வைரத்தில் தோஷம் உண்டு என்பது உண்மைதான். என் உறவினர், தன் வாழ்வில் அடுத்தடுத்து துக்கம் நிகழ்ந்ததற்கு தான் வாங்கிய பெரிய நவரத்ன மோதிரத்தில் உள்ள வைரம்தான் காரணம் என்பதைக் கண்டு, அந்த வைரத்தை எடுத்துவிட்டு தட்டைக்கல் ஒன்றைப் பொருத்திக்கொண்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பாஸ் வீட்டில் வாங்கிய வைரத்தால் அவர்களுக்கு நல்லது விளையவில்லை என்பதோடு வைரமும் தங்கவில்லை!

      நீக்கு
  22. தமிழ்ப்புத்தாண்டு குழப்பம் எப்போதும் புதிது புதிதாக வரும். ஆனால் பொதுவா ஏப்ரல் 14 தான் தமிழ்ப்புத்தாண்டு. அதனை ஒட்டித்தான் பல மாநிலங்களிலும் புத்தாண்டு வரும்.

    அரசியல் காரணத்துக்காக கூச்ச நாச்சமில்லாமல் புத்தாண்டையே மாற்ற பலர் முனைந்து தோற்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..    நேற்று கூட புதன் பின்னூட்டங்களில் புத்தாண்டுக்கு குழப்பம் ப்பற்றிய பிரஸ்தாபம் வந்திருந்தது என்று நினைவு.   அதுவும் நீங்கள்தான் ஏதோ சொல்லி இருந்தீர்களோ...

      நீக்கு
  23. விசுவின் பூத உடலைக் காண்பித்து இரண்டு நாட்கள் தொலைக்காட்சி சேனல் ஓட்டாமல் இருந்ததும் நல்லதுதான். நம் மனதில் அந்த சம்சாரம் அது மின்சாரம் விசுவின் குரலும் முகமும் மட்டுமே எஞ்சியிருக்கும். அல்லது, அரட்டை அரங்கம் விசுவின் குரலும் ஆளுமையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  மனதில் நிற்கும்படியான தரமான படங்களை நமக்களித்தவர் விசு.

      நீக்கு
    2. ஜனரஞ்சகம், பாப்புலாரிட்டி என்றால் மலிவான காமெடி, அபத்த வசனங்கள், கோரக்காட்சிகள் என்கிற சினிமா மசாலா நிலையிலிருந்து வேறுபட்டு, தரமான சிந்தனைதூண்டும் நகைச்சுவை, வசனங்கள், அழகான குடும்பக் காட்சிகளை அளித்த ஆளுமை விசு.

      நீக்கு
  24. வைரம் பற்றிய செய்திகள் நன்றாக இருக்கிறது.
    வரைம் பார்த்து வாங்க வேண்டும். வைரம் நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும்.நெல்லை சொல்வது போல் வீட்டில் வைத்து பார்த்து விட்டு முன்பு வாங்குவார்கள். இப்போது அப்படி அனுமதி உண்டா தெரியவில்லை. என் மாமியார் அவர்கள் வைர மூக்குத்தியை எனக்கு கொடுத்தார்கள். நான் இன்னும் அணியவில்லை. எங்கள் வீட்டில் நான் மட்டும் தான் மூக்குகுத்தி இருக்கிறேன், மற்ற மருமகள் யாரும் மூக்கு குத்தவில்லை அதனால் எனக்கு கொடுத்தார்கள் அத்தை.
    கவிதை நன்றாக இருக்கிறது.நமக்கு எதற்கு அரசியல்?
    நல்லாட்சி வேண்டும் என்று மட்டும் சொல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா..   சிலர் இந்த ராசிக்கு பயந்துதான் வைரமே வாங்குவதில்லை!  மற்றவைகளை படித்துப் பாராட்டியதற்கும் நன்றி.

      நீக்கு
  25. சிவாஜியும் அவர் மகளும் போல! அவர் மகள் சாந்திக்கு 15 வயதில் திருமணம் ஆகி விட்டது . அவர் குழந்தையாக கூட இருக்கும். மகள் அல்லது பேத்தி, மகிழ்வாய் இருக்கிறார் அதுதான்.

    இந்தி சிரிப்பு நடிகை அவர் பேர் தெரியவில்லை

    இன்னொரு படம் ராஜசுலோசனா

    இன்னொருவர் சாரங்கபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆக, அது சிவாஜியின் மகள்தானா?  நான் யாரோ என்று நினைத்தேன்! மற்ற விடைகளை வல்லிம்மா, கமலா அக்காவும் சொல்லி இருந்தார்கள்.

      நீக்கு
  26. //'கால்களில் பணிந்து கேட்கிறேன், சொல்கிறேன்' என்று கெஞ்சி, ஒரு கட்டத்தில் குரல் உடைந்து அழுவது பார்க்கக் கண் கலங்குகிறது.
    //

    நானும் பார்த்தேன் இன்று . அவர் அப்படி சொன்னதும் ஒருவர் காவலர் காலில் விழுந்து வணங்கினார். கைகுலுக்க போனார் காவலர் சடாரனென்று பின்புறம் போனார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.    ஆனால் மக்கள் அதற்கெல்லாம் மசியாமல் இன்றும் ஊர் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

      நீக்கு
    2. மதகுருமார்கள் அழைத்தார்களென்று நூற்றுக்கணக்கான பேர் மும்பையிலும், கல்கத்தாவிலும் பொதுவெளியில், தடையை மீறி, தொழுகை செய்ய நின்றுகொண்டிருந்த கோலத்தை ‘இண்டியா டிவி’ சேனல் சற்றுமுன் ஒளிபரப்பியது. தேசம் என்கிற, மற்றவர்களின் நலம் என்கிற சிந்தனைகள் சிலரில் இல்லவே இல்லை. அரசியல் ஆதாயமே மரணகட்டத்தின்போதும்.. துக்கம்.

      நீக்கு
  27. //மணல் கயிறு படத்தில் காது கேளாதவராக வரும் எம் ஆர் ராஜாமணி, அதே படத்தில் நடித்திருக்கும் கிஷ்மு மற்றும் குரியகோஸ் ரங்கா இவரது சகோதரர்கள். இவர்களில் கிஷ்மு சில ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டார்.//

    சூரியகோஸ் ரங்கா அவர் தம்பியா? நான் அவரை விசு மச்சினர் என்று யாரோ சொல்லி கேள்வி பட்டேன்.

    விசு அவர் படங்கள் மூலம் வாழ்வார் எப்போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அவர் விசுவின் மச்சினர் என்று பா வெ அக்கா சொல்லி இருக்கிறார்கள்.  அவர் சொன்னால் அது சரியாய்தான் இருக்கும்.

      நீக்கு
  28. ஸ்ரீராம் வைரம் பற்றிய தகவல்கள் எல்லாம் அருமை. அதுவும் ஜேக்கப் தகவல்கள். இன்னும் கட்டுரையில் இடையில் உள்ள லிங்க்ஸ் முழுவதும் வாசிக்கலை. வைரம் பற்றி என் பிறந்த வீட்டில் லக் இல்லை என்று என் அம்மா வழிப்பாட்டி யாரையும் போட சம்மதித்ததில்லை. வாங்கவும் மாட்டார். எங்களுக்கு நகை எல்லாம் விட படிப்புதான் முக்கியம் என்று படிக்க வைத்தவர். அடுத்த கருத்தில் சொல்கிறேன்..

    நெட் படுத்தல். கணவருக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கவும் ஆன்லைனில் கல்லூரியி நிர்வாகம், சக ஆசிரியர்கள், பிற டிப்பார்ட்மென்ட் ஹெச் ஓடிஸ் எல்லோருடனும் கலந்துரையாடல் செய்யவும்...

    அதனால் எனக்குக் கிடைக்கும் அவகாசத்தில் நெட் வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்குக் கிடைக்கும் அவகாசத்தில் நெட் வந்தால்// - எங்க வரப்போகுது. உங்களுக்கு வேணும்னா ஒரு ஐடியா தர்றேன். நல்ல லஞ்ச், இனிப்போட அதிலும் கசகசா பாயசத்தோட கணவருக்குக் கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு பிறகு அக்கடா என்று இரண்டு மூன்று மணி நேரம் தூங்குவார். அப்போ நெட்டுக்கு வரலாம்.

      நீக்கு
    2. இப்போ ஒருத்தர் பாருங்க கசகசா /சப்ஜா /ரெண்டையும் குழப்பி ஒரு கேள்வி கேப்பாங்க ரெடியா இருங்க நெல்லைத்தமிழன் :))

      நீக்கு
    3. வாங்க கீதா ரெங்கன்...   உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா நெல்லை...   நல்ல ஐடியா..


      வாங்க ஏஞ்சல்...    வரும்போதே "அவரை" வாரிக்கொண்டே வருகிறீர்கள்!

      நீக்கு
    5. எப்பவும் அலெர்ட்டா இருக்கனும் சான்ஸ் கிடைக்கும்போது வாரனும் இல்லைன்னா அவ்ளோதான் இதெல்லாம் கோல்டன் opportunities :))))) 

      நீக்கு
  29. இப்போதுதான் தமிழ்ப் புத்தாண்டு எப்போது கொண்டாடுவது என்று முடிவுக்கு வந்திருக்கிறோம். இதில் ஸ்ரீராமுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? யுகாதியை கொண்டாடினோமா, போளியை சாப்பிட்டோமோ என்று இல்லாமல் எதையோ கிளறுகிறாரே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானா?  நானா?   நானா கிளறுகிறேன்?  அவ்வப்போது யாராவது எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.  அதில் ஒன்றை முன்னர் பகிர்ந்ததை இப்போது எடுத்துக் போட்டிருக்கிறேன்!  அவ்வளவுதான்!  ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
    2. நானா கிளறுகிறேன்
      கிளறச் சொன்னான் கிளறுகிறேன்..
      நானா...!
      -என்று பாடாமலிருந்தால் சரி!

      நீக்கு
  30. உங்கள் மகளுக்காக மட்டுமல்ல, அவரோடு பணியாற்றும் மற்றவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம் ரமா. Don't worry. God bless!

    பதிலளிநீக்கு
  31. என் நெருங்கிய உறவினர் பெண் பிறந்த வீட்டில் வைரத்திற்கும் அவர்களுக்கும் ஆகாது என்று சொல்லிக் கொண்டதுண்டு. அவள் பாட்டி வைரத்தோடு போட மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். அதனாலேயே பல வரன்கள் போயின. அவளுக்கும் ஒரே சந்தோஷமாக இருந்தது. ஆஹா எம் ஏ சேர்ந்துவிடலாம் என்று. அப்படியே அழுது புரண்டு ஆர்பாட்டம் செய்து எம் ஏ சேர்ந்துவிட்டாள். பாட்டி போன பிறகு அம்மாவும் அப்பாவும் ரொம்பவே அப்பாவிகள். பொருளாதாரத்திலும் வீக். முதலில் வைரத்தோடு போட ரொம்ப சிரமம் என்றுதான் சொன்னார்கள். வந்தவர்கள் டிமான்ட் வேறு. அப்பெண்ணுக்குக் கடுப்பு. அவளுக்கோ நகையிலேயே நாட்டமில்லாதவள். இப்படி எல்லாம் கல்யாணமா என்றும் சொல்லுவாள். பின்னர் ஒரு வரன் அமைந்திட எல்லாம் ஓகே என்றாகிட சிம்பிளாக வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்ள அச்சமயம் அந்த மாமியார் பெண்ணின் அம்மா அப்பாவிடம் மற்ற மருமகள்கள் ஃபோட்டோ காட்டி அவர்கள் எல்லாம் போட்டிருக்கிறார்கள் என்று சொல்லி அதனால் இவளுக்கும் போட வேண்டும் என்று மறைமுக டிமான்ட் சொல்லிட வேறு வழியில்லாமல் அப்போது விலை 12 ஆயிரம் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுப் பணம் புரட்டிப் போட்டார்கள். பெண்ணுக்குக் கடுப்பு இப்படியும் அம்மா அப்பா கஷ்டப்பட்டு கல்யாணம் அவசியமா என்று. கல்யாணத்தன்று மட்டுமே அதனைப் போட்டிருந்தாள் அதன் இன் அவள் அதைப் போடவே இல்லை.

    பானுக்கா வைர நெக்லஸ் என்று ஒரு கதை எழுதியிருந்தார் அதை வாசித்ததும் நான் இந்த வைரத்தோட்டினால் வேறொரு கதை ஒன்று எழுதிடத் தொடங்கி வழக்கம் போல பாதியில் இருந்ததை ஹிஹிஹிஹி அப்போது முடிக்க நினைத்து மறந்திட இப்போது மீண்டும் உங்கள் வைரப் பதிவு அதை நினைவூட்டி விட்டது. முடிக்க முடியுதா என்று பார்ப்போம். முடித்தால் இங்குதானே வரப் போதுக்து கே வா போ க விற்கு ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      வரட்டும்.. வரட்டும்.. தங்களது வைரம் பதித்த அக்கதை வரும் நாளுக்காக இங்கு அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. அடடா...   வைரம் பற்றிய தகவல்களில் பாணுக்காவின் கதையைச் சொல்ல விட்டு விட்டேனே...   உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி கீதா... உங்கள் படைப்பையும் சீக்கிரம் அனுப்புங்கள்.

      நீக்கு
    3. விகடனின் ‘முத்திரைக் கதைகள்’ போல எங்கள் ப்ளாகின் ‘வைரக் கதைகள்’..

      நீக்கு
  32. வைரம் அதிர்ஷ்டமில்லாக் கரிக்கட்டைதான் போலும்... இதைப் படிப்பதற்குள் மூன்றுமுறை 'close app' என ஆகி, நின்று விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   படிக்கும் ராசியே இல்லையா?    நன்றி பாரதி.

      நீக்கு
  33. கொரோனா வைரஸ் அந்தக் காவலர் வீடியோ வாட்சப்பில் வந்ததே ....அந்தக் காவலரைப் பார்த்து மனம் மிகவும் வேதனை அடைந்தேன் கண்களில் நீர் வந்தது. பாவம் ஸ்ரீராம். கோவிடியட்ஸ் மக்கள்....இவர்களுக்கு எல்லாம் மயிலே மயிலே இறகு போடு என்பதை விட தண்டனை அவசியம்.

    மக்கள் ஒத்துழைக்காத வரை கஷ்டம்தான் என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலும் உண்மை.   இன்று அலுவலகத்தில் இதெல்லாம் மோடி செய்யும் மோசடி என்று பேசிக்கொண்டனர் சில மக்கள்!

      நீக்கு
  34. ஸ்ரீராம் உங்கள் கவிதை சூப்பர். சரி குதம்பாய் என்றால் என்ன? பெண்ணே??!!

    விஐபிஸ் குழந்தைகள் படங்கள் எல்லாம் நல்லாருக்கு. ஸ்வாரஸ்யம். அது எம் எஸ் வி போலத்தான் இருக்கு என் கண்ணிற்கு.

    விசு திரையுலகில் ஆளுமை படைத்த மனிதர். அவரது வசனங்கள் நல்லாருக்கும். அர்த்தமுள்ளதாக இருக்கும். சில நச்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குதம்பாய்க்கு மேலே விளக்கம் சொல்லப் பட்டிருக்கிறதே கீதா, பார்க்கவில்லையா?  அது எம் எஸ் வி இல்லை, சாரங்கபாணியாம்...  மிஸ்ஸியம்மாவில் ஜெமினியின் நணபராக வருவாரே... வேதாள உலகம் படத்திலும் டி ஆர் மகாலிங்கத்தின் நண்பராக வருவார்.

      நீக்கு
  35. ரமா உங்கள் பெண்ணுக்கு கண்டிப்பாகப் பிரார்த்திக்கிறோம்...நல்லதே நடக்கும் ரமா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாசிடிவ் vibesக்கு மிக்க நன்றி

      நீக்கு
    2. நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்.  எங்கள் பிரார்த்தனையும் ரமாஸ்ரீ.

      நீக்கு
  36. ஸ்ரீராம் தொட்டுவிட்ட குதம்பைச்சித்தர் மனிதனுக்கு எளிதாகப் புரியும்படி எவ்வளவோ சொல்லியிருக்கிறாரே:

    அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
    பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
    பிண்டத்துள் பார்ப்பாயடி.

    ஆவித் துணையாகும் ஆராவமுதத்தைச்
    சேவித்துக் கொள்வாயடி குதம்பாய்
    சேவித்துக் கொள்வாயடி.
    ....



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரியனை (அல்லது இறைவனை ஒளி வடிவில்) தியானத்தின் போது, உன் உடம்பினுள்ளே (நெற்றியின் மையத்தில்?) காண்பாய். அந்த ஆரா அமுதத்தினை ஒளி வடிவில் தரிசித்துக்கொள்வாய் என்று சொல்கிறார் எனத் தோன்றுகிறது.

      நீக்கு
    2. நான் அந்த பாணியை மட்டும் சுவீகரித்து ஒன்று எழுதி பார்த்தேன் ஏகாந்தன் ஸார்!

      நீக்கு
    3. குதம்பையை உங்கள் புண்ணியத்தில் மாலையில் படித்தேன். அவரைப் படிக்கையில் நமக்கும் நாலுவரி மனதில் வந்துவிடுகிறது..அப்படி ஒரு ரிதம். உண்மை!

      நீக்கு
  37. வைரம் விவரங்கள் படித்து அறிந்தேன் :) தங்கத்தையே அணிய விருப்பமில்லை  வைரம் நோ சான்ஸ் :)புத்தாண்டு சித்திரை 14 மனசில் பதிஞ்சது அப்படியே நிக்குது யார் மாற்றினாலும் எனக்கு சித்திரை 14 தான் தமிழ் புத்தாண்டு :)இந்த வருஷம் baisaki  ப்ரொஸெஷன் கேன்சல்ட் இங்கே ஹாஹா அரசியலை அரசியலே பார்த்துக்கட்டும் னு சொல்ற கவிதை நல்லா இருக்கு :)ஜிமிக்கி கம்மல்தான் குதம்பானு புரிஞ்சிட்டேன் :)
    கருப்பு வெள்ளை படங்கள் பொக்கிஷங்கள் .அந்த குழந்தைகள் இப்படங்களை பார்த்தா ஆச்சர்யப்பட்டுபோவாங்க .விசு சார் நான் மிகவும் மதிக்கும் ஒரு திரையுலக பிரமுகர் .அரட்டை அரங்கத்தை விரும்பி பார்க்க வைத்தவர் .அன்னாருக்கு அஞ்சலிகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...   என் அதிருஷ்டம் என் பாஸுக்கு தங்கத்தின் மீதும் விருப்பமில்லை.  வைரத்தின் மீதும் விருப்பமில்லை.  அவருக்கு நான் தங்கம்.  எனக்கு அவர் தங்கம்.  ஹிஹிஹிஹி...  

      ஆமாம்..  அந்தக் குழந்தைகள் இப்போது வயதானவர்களாகியிருப்பார்கள்.  படத்தைப் பார்த்தல் அவர்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும்!

      நீக்கு
    2. //அவருக்கு நான் தங்கம். எனக்கு அவர் தங்கம். ஹிஹிஹிஹி... ///


      @ @ மியாவ் நோட் திஸ் பிஞ்சு கவிஞை :)

      நீக்கு
    3. இப்படிதான்... அப்பப்போ ஐஸ் வச்சுக்கணும்!

      நீக்கு
    4. //@ @ மியாவ் நோட் திஸ் பிஞ்சு கவிஞை :)//
      நான் என்ன எனக்காகவோ வைரம் கேட்கிறேன்ன்..:)) எல்லாம் அந்த வள்ளியின் நேர்த்திக்கடனை அடைக்கத்தானே.

      ஆனா கனடாவில் வைர மோதிரம் அளவு கொடுக்க வெளிக்கிட்டு நாள் போதாமல் விட்டு விட்டு வந்தாச்சு.. இப்போ ஒன்று ராசி பார்த்து இன்னொரு இடத்தில சொல்லி.. அதுக்குள் கொரொனா.. எல்லாம் போச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    5. அடடே...   ஒரு வைரமே வைரம் வாங்குமா?!!

      நீக்கு
    6. ஸ்ரீராம்.26 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:26
      அடடே... ஒரு வைரமே வைரம் வாங்குமா?!!//

      https://image.shutterstock.com/image-photo/surprised-young-female-model-long-260nw-794523025.jpg


      நீக்கு
    7. //..இப்போ ஒன்று ராசி பார்த்து இன்னொரு இடத்தில சொல்லி.. அதுக்குள் கொரொனா.. எல்லாம் போச்ச்..

      வைரம் கைக்கு வருவதற்கு முன்னாலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறதே..!

      நீக்கு
  38. உலகமெங்கும் ஊரடங்கு என்றதும் எங்கள் புளொக் வரவும் பயத்தில இருந்திட்டேன்:)..

    //வைரத்துக்கு ராசி பார்த்து வாங்கவேண்டும் என்பார்கள். //

    அது உண்மைதான், களவெடுத்த வைரத்தை எல்லாம் போடக்கூடாது கழுத்தை அறுத்துப் போடும்:)).. ராசிப்பொருத்தம் அல்லது நம்பர் பொருத்தம் பார்த்துத்தான் வாங்கோணும்.

    வைரத்திலேயே இன்று வைரமாக முடிஞ்சு போச்சு வியாழன் போஸ்ட்...

    பழைய படங்கள் அழகு.. பொக்கிசம்.

    விசு அவர்களுக்கு பிரார்த்தனை செய்வதை விட வேறென்ன பண்ண முடியும், எப்படி வாழ்ந்த மனிதர், பாருங்கோ கொரோனா நேரம் பார்த்து போய் விட்டமையால, மிக அமைதியாக அதுவும் அமெரிக்காவில் இருக்கும் பிள்ளைகளும் பார்க்க முடியாமலேயே அடக்கமாகி விட்டார்ர்.. எல்லாம் விதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அதிரா...  விசு மறைவு அமுங்கிதான் விட்டது.   இருப்பது போல அதுவும் நல்லதற்கே..

      நீக்கு
  39. வைர விஷயம் சுஜாதா கையில் சிக்கியிருந்தால் எவ்வளவு சுவாரஸ்யப்படுத்தியிருப்பார் என்ற நினைப்பு மனசில் ஓடியது. இந்த மாதிரியான செய்திகளை வரிக்கு வரி அப்படியே சொல்லக் கூடாது. அறிவியல் தெளிவுக்குத் தான் தெரிந்து கொள்வதெல்லாம்.
    அதையே reproduce - திருப்பி பிரதி எடுக்க வேண்டுமானால் நம் வரிகளில் கைவரிசையைக் காட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்ய ஜீவி ஸார்...   சுஜாதாவின் திறமை நமக்கு வருமா?  ஏதோ நம்மால் முடிந்த அளவு..!  இதோ..  இப்போது கில்லர்ஜி எழுதிய பதிவு வாசுத்துச் சிரித்துவிட்டு வருகிறேன்.  சாதாரண ஒரு விஷயத்தை வெகு சுவாரஸ்யமாக, நகைச்சுவையாக எழுதி இருக்கிறார் மனிதர்!

      நீக்கு
  40. வைரத்தைப் பற்றி வைரமுத்துவின் பாடல் ஏதாவது நினைவுக்கு வருகிறதா, ஸ்ரீராம்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம்......   சட்டென நினைவு வரவில்லை ஜீவி ஸார்...

      நீக்கு
  41. விசு என்றாலே 'சம்சாரம் அது மின்சாரம்' தான். 'கம்முன்னா கம்மு கம்முனாட்டி கோ' -- வசனத்திற்கு உயிர் கொடுத்த ஆச்சியாரும் நினைவில் நிற்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவரும் ஒவ்வொரு படத்தைச் சொல்வார்கள்.  சம்சாரம் அது மின்சாரம் எல்லோரும் சொல்லும் படமாக இருக்கும்.   அவர் எடுத்த படங்கள் எல்லாமே தரமானவை, ரசிக்கத்தக்கவை. நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!